Sunday, August 28, 2011

இன்றைய செய்திகள்.

30 வருட யுத்தத்தை வென்றதைவிட சர்வதேச சமூகத்துடனான யுத்தம் சவாலானது : வெளிவிவகார அமைச்சு.

முப்பது வருடகால யுத்தத்தை வென்றதைவிட சர்வதேச சமூகத்துடனான யுத்தம் இலங்கைக்கு பெரும் சவாலானது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம நேற்று கூறினார்.
மில்லியன் கணக்கான மக்கள், பில்லியன் கணக்கான வளங்கள், பெரிய அரசுகள், பாரிய சர்வதேச ஊடக நிறுவனங்கள் ஆகியனவற்றை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் இது மிக கடினமானது என அவர் கூறினார்.
இலங்கை போன்ற சிறிய நாட்டுக்கு இது பெரும் சவால் எனக்கூறிய வெளிவிவகார செயலர் அமுனுகம, யுத்தக் குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் புகழை  நிலைநிறுத்துவதற்காக இணையம், அச்சு வெளியீடுகள், கலைகள் மற்றும் ஏனைய சாதனங்களைப் பயன்படுத்தி சர்வதேச சமூகத்திற்கு தகவல்களை பரப்புமாறு மக்களை கோருவதாகவும் கூறினார்.
ஜே.எவ். ரஞ்சித் பெரேரா எழுதிய 'வெல்லப்பட முடியாத யுத்தத்தை வெல்லுதல்' எனும் பொருளில் தலைப்பிடப்பட்ட நூலின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கையின் யுத்தகாலம் குறித்த ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகளை வைத்திருப்பதற்கு மின்னஞ்சல், பேஸ் புக் போன்ற சமூக வலைத்தளங்கள், யூரியூப், புத்தங்கள் மற்றும் ஏனைய பிரசுரங்கள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரினார்.
இந்தியாவிற்கு யாத்திரை மேற்கொண்ட மூன்று இலங்கையர்களைக் காணவில்லை.

இந்தியாவிற்கு யாத்திரை மேற்கொண்ட மூன்று இலங்கையர்களைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
நான்கு நாட்களுக்கு முன்னர் குறித்த நபர்கள் காணாமல் போயுள்ளதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
மூன்று வெவ்வேறு யாத்திரை குழுகக்ளைச் சேர்ந்த மூவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
தெனியா, அல்பிட்டி மற்றும் எட்டியாந்தோட்டை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்களைக் கண்டு பிடிப்பதற்காக இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
தங்க பதக்கம் வென்ற வீராங்கனைக்கு வரவேற்பு கொடுக்காத விளையாட்டுத்துறை அமைச்சு.

சிங்கப்பூரில் இடம்பெற்ற திறந்த நிலை 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் வென்றுக் கொடுத்த வீராங்கனைக்கு எவ்வித வரவேற்பும் வழங்கப்படவில்லை.
தம்புள்ளையை சேர்ந்த உபமாலி ரத்னகுமாரி என்ற வீராங்கனைக்கே இந்த நிலை ஏற்பட்டது.
இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சு இந்த வீராங்கனையை வரவேற்க கட்டுநாயக்க விமானத்தளத்திற்கு எவரையும் அனுப்பவில்லை.
இதனையடுத்து குறித்த வீராங்கனை, கடடுநாயக்கவில் இருந்து இலங்கை போக்குவரத்து பஸ்ஸில் கொழும்பு கோட்டைக்கு வந்து பின்னர் தமது ஊரான தம்புள்ளைக்கும் பஸ்ஸிலேயே சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த வீராங்கனை இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சுக்கு நாடு திரும்புவது குறிதது உரியமுறையில் அறிவிக்கவில்லை என்று விளையாட்டு;த்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அவசரகாலச் சட்டத்தை நீக்குவதன் மூலம் நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியாது : மங்கள.

அவசரகாலச் சட்டத்தை நீக்குவதன் மூலம் நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தேரிவித்துள்ளார்.
அவசரகாலச் சட்டத்தை நீக்குவது தொடர்பில் ஜனாதிபதி விடுத்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமையப் பெற்றுள்ளது.
மாத்தறையில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவசரகாலச் சட்ட நீக்கமானது நீண்ட போராட்டத்தின் முதல் கட்டமாக கருதப்பட வேண்டும்.
அவசரகாலச் சட்டத்தைப் போன்றே 18ம் திருத்தச் சட்ட மூலத்தையும் ரத்து செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் ஏனைய அனைத்து பிரச்சினைகளை விடவும் ஜனநாயகம் தொடர்பான பிரச்சினை முதன்மையானது என அவர் தெரிவித்துள்ளார்.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதன் மூலம் 6000 பேரை விடுதலை செய்ய முடியும் : வாசுதேவ நாணயக்கார.

அவசரகாலச் சடடம் நீக்கப்பட்டதன் மூலம் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் ஆறாயிரம் பேரை விடுதலை செய்ய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மக்களின் உரிமைகளான சுவரொட்டி ஒட்டுதல், போராட்டம் நடத்துதல், ஆர்ப்பாட்டங்களை நடத்துதல் போன்ற நடவடிக்கைகளை எதிர்காலத்தில் தடுக்க முடியாது.
அவசரகாலச் சட்டம் என்பது சாதாரண சட்டத்தை ரத்து செய்வதாகும்.
அவசரகாலச் சட்டத்தில் சரத்துக்களை இணைக்கவும் நீக்கவும் முடியும் இது தொடர்பில் மக்களுக்கு போதிய விளக்கம் இருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டமானது வரையறைக்கு உட்பட்டதுடன் நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இதன்படி, அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆறாயிரம் பேரை விடுதலை செய்வதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
2042ம் ஆண்டில் வயதானோர் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்.
சீனாவில் வயதானவர்களின் எண்ணிக்கை வரும் 2042ம் ஆண்டில் மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா, ஜப்பான் போன்ற பொருளாதார வளம் மிகுந்த நாடுகளில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
இதனால் வருங்காலங்களில் மனித வளம் குறைந்து வளர்ச்சி தடைபடும் என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சீனாவில் வரும் 2042ம் ஆண்டில் வயதானவர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள்தொகையில் 30 சதவீதமாக இருக்கும் என்று அரசு அதிகாரப்பூர்வமாக புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சீன தேசிய வயதானவர்கள் நல கமிஷன் சமீபத்தில் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அடுத்த 5 ஆண்டுகளில் மொத்த மக்கள்தொகையில் 16.7 சதவீதம் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது 2042ம் ஆண்டில் 30 சதவீதமாக இருக்கும்.
தற்போது மொத்த மக்கள்தொகையில் வயதானவர்கள் எண்ணிக்கை 17 கோடியே 80 லட்சமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளுக்கு செல்லாமல் ஊர் சுற்றி திரியும் மாணவர்களின் விசாக்கள் ரத்து.
அவுஸ்திரேலியாவில் கல்லூரிகளுக்கு செல்லாத இந்திய மாணவர்கள் 72 பேரின் விசாக்களை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் 4 லட்சத்து 70 ஆயிரம் வெளிநாட்டு மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். இதில் அதிகம் பேர் இந்திய மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கல்லூரிகளுக்கு செல்லாமல் ஊர் சுற்றி திரியும் மாணவர்களை அவுஸ்திரேலிய அரசு கண்டுபிடித்து அவர்களது விசாக்களை ரத்து செய்து வருகிறது. இதற்காக நாடு முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 9 ஆயிரம் மாணவர்கள் கல்லூரிகளுக்கு சரிவர செல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 159 மாணவர்கள் அதிக அளவில் கல்லூரிகளுக்கு செல்லாமல் இருப்பது தெரியவந்தது. அவர்கள் அனைவரின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டன.
இதில் 72 பேர் இந்திய மாணவர்கள். இவர்கள் அனைவரும் அவர்களது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
அமெரிக்காவில் புயல் அபாய எச்சரிக்கை: விமான போக்குவரத்து ரத்து.
அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள தென்மேற்கு அட்லாண்டிக் கடலில் பகாமாஸ் பகுதியில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. அதற்கு ஐரீன் என பெயரிடப்பட்டுள்ளது.
இது இன்றோ அல்லது நாளையோ கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வாஷிங்டனில் இருந்து பூஸ்டன் வரை பலத்த காற்றுடன் மழை கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நியூயோர்க், வாஷிங்டன், வெர்ஜீனியா, மேரிலாண்ட் உள்ளிட்ட நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியான விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படும் வாஷிங்டன், நியூயோர்க் உள்ளிட்ட நகரங்களுக்கு வந்து செல்லும் 7 ஆயிரம் விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. அங்குள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
ஏனெனில் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால் கணணி உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்கள் வேலை செய்யவில்லை. ஐரீன் புயல் ஆபத்து காரணமாக நியூயோர்க் நகரில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் மேன்காட்டன், புரூக்ளின் மற்றும் குயீன்ஸ் பகுதிகளில் தங்கியிருந்தவர்கள். மேலும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள், மருந்து, மாத்திரைகள், தண்ணீர், பேட்டரிகள், பிளாஷ் விளக்குகள் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.
நைஜீரியாவில் ஐ.நா சபைக் கட்டிடம் மீது தாக்குதல்: 18 பேர் பலி.
நைஜீரியாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கட்டடத்தில் இன்று பாரிய குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் கட்டடத்தின் ஒரு பகுதி முற்றாகச் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 18 பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நா பணியாளர்களில் 400 பேர் இந்த அலுவலகத்தில் பணியாற்றியதாகக் கூறப்படுகின்றது. இதற்கருகிலேயே அமெரிக்கத் தூதரகமும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சேதவிபரங்கள் இன்னும் சரியாக தெரியவில்லை எனவும் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஏ.டி.எம் சென்டர்களில் புது வித திருட்டில் சிக்கித் தவிக்கும் சவுதி அரேபியா.
ஏ.டி.எம் சென்டர்களில் பதிந்த தொகையை விட குறைவான பணம் வந்தாலும், முழுப் பணமும் எடுத்துக் கொண்டதாக வங்கி கணக்கில் காட்டுவதால் செய்வது அறியாமல் சவுதி அரேபியா மக்கள் தவித்து வருகின்றனர். 
நுகர்வோருக்கு 24 மணிநேரமும் பணம் எடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது ஏ.டி.எம் முறை. ஏ.டி.எம் சென்டர்களில் நுகர்வோரின் கார்டு மூலம் தேவைப்படும் தொகையை உடனுக்கு உடன் எடுத்து கொள்ளலாம். அதனால் பணம் எடுக்கும் நேரமும் குறைந்தது.
இந்த முறை கொண்டு வரப்பட்ட போது, பணம் எடுக்கும் போது பல குளறுபடிகள் ஏற்பட்டன. ஆனால் சம்பந்தப்பட்ட வங்கிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து குழப்பங்கள் களையப்பட்டன. இந்நிலையில் தற்போது சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் வசிக்கும் மக்களுக்கு தற்போது புதுவித குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ரியாத்தில் உள்ள சில வங்கிகளின் ஏ.டி.எம் சென்டர்களில் பணம் எடுக்க பதியும் தொகையை விட குறைந்த பணமே கிடைப்பதாக பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஏ.டி.எம் சென்டரில் பணம் இழந்த ஒருவர் கூறுகையில்,"ஏ.டி.எம் சென்டர்களில் பணம் எடுக்க பதிவு செய்யும் மதிப்பை விட குறைவான பணமே வருகிறது. ஆனால் வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்ட தொகையே கழித்து கொள்ளப்படுகிறது" என வருத்தத்துடன் தெரிவித்தார்.
எடுத்துகாட்டாக 3 ஆயிரம் ரூபாய் எடுக்க பதிவு செய்தால் ஆயிரம் ரூபாய் மட்டுமே வருகிறது. ஆனால் 3 ஆயிரம் எடுத்து கொண்டதாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இதுகுறித்து வங்கி நிர்வாகத்திற்கு புகார் அனுப்பினேன். ஆனால் 10 நாட்களுக்கு பின் வங்கியின் ஏ.டி.எம் இயந்திரம் சரியாக இயங்குவதாகவும், எனது கணக்கு சரியாக வரவு வைத்திருப்பதால் புகார் நிராகரிக்கப்படுவதாக பதில் வந்தது என்றார்.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத சில வங்கி அதிகாரிகள் கூறுகையில், ஏ.டி.எம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணி சில ஒப்பந்த நிறுவனங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. பணம் நிரப்பும் பணியில் ஈடுபடும் சில பணியாளர்கள் 500 ரூபாய் நோட்டுகள் வைக்கும் இடத்தில் அதற்கு பதிலாக 100 நோட்டுகளை வைத்து விடுகின்றனர்.
இதை இயந்திரத்தால் கண்டுபிடிக்க முடியாததால் அவை 500 ரூபாய் வரிசையில் வைக்கப்பட்டுள்ள 100 ரூபாய் நோட்டுகளை 500 ரூபாய் என்ற கணக்கில் நுகர்வோருக்கு வழங்கிவிட்டு வங்கி கணக்கிலும் 500 ரூபாயை வரவு வைக்க உத்தரவு கொடுத்துவிடுகிறது.
இதனால் நுகர்வோருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டாலும் அதை நிரூபிக்க முடியாமல் உள்ளது. பணம் எடுத்தவுடன் வரும் கணக்கு துண்டு சீட்டிலும் அப்படியே பதிவாகிறது.
இதனால் நுகர்வோர் ஏமாற்றப்படுவது தெரியாமல் வங்கி ஊழியர்களும், தங்களை வங்கி ஊழியர்கள் ஏமாற்றிவிட்டதாக நுகர்வோரும் மாறி மாறி குற்றப்படுத்தும் சம்பவங்கள் நடக்கிறது, என்றார்.
ஏ.டி.எம் சென்டர்களி்ல் இருந்து வெளியே வரும் நடந்த திருட்டு சம்பவங்களை அடுத்து தற்போது இந்த கண்டுபிடிக்க முடியாத புதுவகை திருட்டில் சிக்கியுள்ள சவுதி அரேபியா மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
எல்லையில் அதி நவீன ஏவுகணைகளை குவிக்கும் சீனா: அமெரிக்கா தகவல்.
இந்திய எல்லையில் சீனா அதி நவீன ஏவுகணைகளை குவித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தனது இராணுவத்தை பலப்படுத்தும் நடவடிக்கையாக சீனா இந்திய எல்லையில் அதிநவீன அணு ஏவுகணைகளை குவித்து வருகிறது.
இந்திய-சீன எல்லையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக சீனா பெரும் நிதியை செலவிட்டு வருகிறது. இங்கு மேலும் பல சாலைகள், ரயில் தண்டவாளங்களை அமைத்து வருகிறது.
இதனால் இந்திய எல்லையோரம் உள்ள பகுதியை மேம்படுத்தினாலும், இந்த வசதிகள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும் தான் செய்யப்படுகின்றன.
பாகிஸ்தானுடன் சீனா ஒட்டி உறவாடி வருவது இந்தியாவுக்கு பெரும் கவலையை அளித்துள்ளது. மேலும் சீனா இந்திய பெருங்கடல், மத்திய ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் காலடி எடுத்து வைப்பதும் இந்தியாவின் கவலையை அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் சீனாவில் இருந்து அதிநவீன ஆயுதங்களை வாங்கி வருகிறது. இந்தியா, சீனா இடையே பேச்சுவார்த்தை மேம்பட்டாலும், எல்லையோர பிரச்சனை எரிச்சலூட்டுவதாகத் தான் உள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு நடந்த பேச்சுவார்த்தை மூலம் சீனா இந்தியாவுடனான உறவை மேம்படுத்தியுள்ளது. 2010ம் ஆண்டு இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே 60 பில்லியன் டொலர் வர்த்தகம் நடந்துள்ளது.
எல்லைப் பிரச்சனை தொடர்பாக இந்த இரண்டு நாடுகளும் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. கடந்த 2010ம் ஆண்டு டெல்லி சென்ற சீன பிரதமர் வென் ஜியாபோ இந்தியா-சீனா இடையே உள்ள உறவை மேம்படுத்தத் முயற்சி மேற்கொண்டார்.
இரு நாடுகளுக்கிடையேயான உறவில் உள்ள சிக்கல் நீடிக்கத் தான் செய்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்து துணை பிரதமர் மீது முட்டை வீசிய மாணவர் கைது.
இங்கிலாந்து துணை பிரதமர் நிக் கிளெக்கை கிளாஸ்கோ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீல நிற பெயிண்ட் நிரப்பிய முட்டையைக் கொண்டு தாக்கினார். இதையடுத்து அந்த மாணவர் கைது செய்யப்பட்டார்.
இங்கிலாந்து துணை பிரதமர் நிக் கிளெக் கிளாஸ்கோவில் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தார். அப்போது ஒருவர் நீல நிற பெயிண்ட் நிரப்பிய முட்டையை கிளெக்கின் முகத்தில் வீசினார். அது உடைந்து அவரது முகம், உடைகள் எல்லாம் பெயிண்டாகிவிட்டது.
இது குறித்து துணை பிரதமர் கூறியதாவது: எனக்கு 10 வயதுக்கு கீழ் 3 குழந்தைகள் உள்ளனர். இது போன்று முகம், உடலில் பெயிண்ட் கறை படிவது பழக்கமாகிவிட்டது என்றார் நகைச்சுவையாக.
நிக் கிளெக் லிபரல் டெமோகிராட் கட்சியின் தலைவர். கன்சர்வேட்டிவ்ஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க முக்கிய காரணமானவர். இது பிடிக்காமல் தான் அந்த மாணவர் முட்டையால் அடித்துள்ளார்.
கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் படிப்பவர் ஸ்டூவர்ட் ராட்ஜர்(22). அவர் யுகே அன்கட் என்னும் புரட்சி அமைப்பைச் சேர்ந்தவர். அவர் கடந்த 2 ஆண்டுகளாக லிபரல் டெமோகிராட் கட்சியில் தான் இருந்துள்ளார். கன்சர்வேட்டிவ்ஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தது பிடிக்காமல் ரோட்ஜர் கடந்த மே மாதம் கட்சியில் இருந்து வெளியேறினார்.
இந்த கூட்டணிக்கு காரணமாக இருந்த நிக் மீது தனது வெறுப்பை காட்டவே முட்டையால் அடித்துள்ளார். இதற்காக அவரை பொலிசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில்,"நிக் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த வேலையில் இதெல்லாம் நடக்கத் தான் செய்யும். அதனால் அதை பெரிதுபடுத்த முடியாது" என்று நிக் கூறியதாக அவர் தெரிவித்தார்.
துணை பிரதமர் மீது பெயிண்ட் கறை பட்டதும் அதைத் துடைக்க மக்கள் விரைந்தனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கடாபியின் மாளிகை முழுவதும் சுரங்க பாதைகள்: புரட்சியாளர்கள் அதிர்ச்சி.
லிபிய அதிபர் மும்மர் கடாபியின் மாளிகை முழுவதும் சுரங்க வழிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை லண்டனிலிருந்து வெளியாகும் "தி டெலிகிராப்" நாளேடு வெளியிட்டுள்ளது.
அதிபரின் பாப் அல்-அஸிஸியா அரண்மனையின் கீழே சுரங்க வழிகள் வெட்டப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நகரின் பிரதான பகுதிகளை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
1986ம் ஆண்டு மேற்கு பெர்லினில் உள்ள இரவு விடுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் லிபியாவுக்கு பங்கு உண்டு என்பதற்காக அமெரிக்க படைகள் லிபிய அதிபர் கடாபியின் மாளிகை மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
அப்போதிலிருந்து இத்தகைய அதிரடி தாக்குதலைச் சமாளிக்க இதுபோன்ற சுரங்கப் பாதைகளை கடாபி அமைத்திருக்கலாம் என்று "டெலிகிராஃப்" தெரிவித்துள்ளது.
சுரங்கப் பாதை முழுவதும் கான்கிரீட் கலவையால் பூசப்பட்டுள்ளது. இதன் வழியாக கோல்ப் மைதானத்தில் பயன்படுத்தப்படும் சிறிய ரக கார் செல்லும் அளவுக்கு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
தனது மாளிகை முழுவதும் உள்ள சுரங்கப் பாதைகளைப் பற்றிய அனைத்து விவரமும் அடங்கிய வரைபடமும் கடாபியிடம் இருக்குமாம். திரிபோலியில் உள்ள அபு சலீம் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டிற்குச் செல்லும் பாதையும் இதில் உள்ளது.
தலைநகரை முற்றுகையிட்ட எதிர்ப்புப் படையினர் கடாபியைப் பிடிக்க முயற்சித்தனர். அப்போதுதான் மாளிகையின் அடியில் சுரங்க வழிகள் இருப்பது பற்றிய தகவல் அவர்களுக்குக் கிடைத்தது. இதில் ஒரு சில வழிகள் மூலம் அவர்கள் தேடினர். ஆனால் கடாபி அவர்கள்கையில் சிக்கவில்லை.
சுரங்க வழிகளில் ஆங்காங்கே சில கோல்ப் மைதான கார்கள் கைவிடப்பட்ட நிலையில் இருந்ததாக எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கார்களை கடாபி மற்றும் அவரது குடும்பத்தினர் பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் கூறினர். இந்த கார்கள் மூலம் எவ்வித இடையூறுமின்றி நகரை சுற்றிவர கடாபி குடும்பத்தினர் பயன்படுத்தியுள்ளனர்.
இந்த சுரங்கப் பாதைகள் இரண்டு பேர் தாராளமாக நடந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்ததோடு வலுவான இரும்புக் கதவுகளைக் கொண்டிருந்தன. இந்த சுரங்கவழிகள் எதிர்ப்புப் படையினருக்கு மிகுந்த ஆச்சரியம் அளிப்பதாக இருந்ததாக "டெலிகிராப்" செய்தி தெரிவிக்கிறது. சில சுரங்க வழிகள் மாளிகைக்குள்ளும், சில சுரங்க வழிகள் முதன் முதலில் கடாபி எதிர்ப்பாளர்கள் திரண்ட பகுதியை ஒட்டியும் உள்ளன.
இவை தவிர நகரின் பல பகுதிகளில் நவீன வசதிகளைக் கொண்ட பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவை குண்டு வீச்சுகளை தாக்குப் பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன.
இதனுள்ளே தொலைபேசி உள்ளது. ராணுவத்துக்குக் கட்டளையிடுவதற்கு கடாபி இதைப் பயன்படுத்தியிருக்கலாம். சில பதுங்கு குழிகளில் ஆவணங்கள், பெட்டிகள் ஆகியன உள்ளன.
சிலவற்றில் விஷ வாயுவிலிருந்து தப்பிக்க உதவும் முகக் கவசங்கள் உள்ளிட்டவை இருந்தன. ரசாயன வாயு தாக்குதல் மற்றும் அணுக் கதிர்வீச்சு தாக்குதலிலிருந்து தப்பிக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டிருந்தன.
எதிர்ப்பாளர்கள் சுரங்கப் பாதை வழியாக தேடுதல் நடத்திய போது சில பகுதிகள் விழுந்து பெயர்ந்தபடி இருந்தன. இதனால் அவர்களால் முன்னேறிச் செல்ல முடியவில்லை. கூட்டுப் படையினர் நடத்திய தாக்குதலில் இந்த சுரங்கப் பாதைகள் இடிந்திருக்கலாம் என தெரிகிறது.
சில சுரங்க வழிகள் துறைமுகத்துக்கும், சில விமான நிலையத்துக்கும் செல்லும் வகையில் வடிவமைத்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதில் ஒரு சுரங்க வழி மட்டும் அரண்மனையை ஒட்டி அமைந்துள்ள ரிக்ஸஸ் ஹொட்டலுக்குச் சென்றது.
எந்த நோக்கத்திற்காக கடாபி இந்த சுரங்க வழிகளை உருவாக்கினாரோ அது அவருக்கு உதவியாக அமைந்துள்ளது. எப்படியிருப்பினும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு இந்த சுரங்க வழிகள் வரலாற்றில் இடம்பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இதேபோலத்தான் வியத்நாமின் சர்வாதிகாரி ஹோ சி மின்-னின் வீழ்ச்சிக்குப் பிறகு அவர் கட்டிய சுரங்கப் பாதை இப்போதும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதைப் போல கடாபி சுரங்க வழிகளும் எதிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கக்கூடும் என்று "டெலிகிராப்" செய்தி வெளியிட்டுள்ளது.
மெக்சிகோவில் சூதாட்ட விடுதி எரிப்பு: 53 பேர் பலி.
வட அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் சூதாட்ட விடுதி ஒன்றை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதில் விடுதியின் ஊழியர்கள் உள்பட 53 பேர் கொல்லப்பட்டனர்.
மெக்ஸிகோவின் வடக்கு பகுதி நகரான மாண்டெரியில் இத்தாக்குதல் நடந்துள்ளது. இத்தாக்குதலுக்கு போதை கடத்தல் கும்பலே காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சூதாட்ட விடுதிகளுக்கு சென்று அங்கு உள்ளவர்களிடம் மிரட்டி பணம் பறிப்பது, தர மறுத்தால் விடுதியை தீயிட்டு கொளுத்துவது போன்ற கொடிய செயல்களில் போதை பொருள் கடத்தல் கும்பல் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
போதை கடத்தல் கும்பல்கள் மீது மெக்ஸிகோ அதிபர் பெலிப் கால்டரான் கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியதிலிருந்தே இதுபோன்ற தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
சூதாட்ட விடுதி எரிக்கப்பட்டது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என்று அவர் வர்ணித்துள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF