Sunday, August 14, 2011

இன்றைய செய்திகள்.

கே.பி.யை பிடிக்க முடியுமானால் மர்ம மனிதர்களை பிடிக்க முடியாதா? ஜே.வி.பி.தலைவர் சோமவன்ச.

மலேசியாவிற்கு சென்று கே.பியை பிடித்து வர முடியுமென்றால் உள்ளூரில் நடமாடும் மர்ம மனிதர்களை அரசாங்கத்தால் பிடிக்க முடியாதா? என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.
இலங்கையில் உக்கிரமடைந்து வரும் பல்துறை சார் பிரச்சினைகளை மூடி மறைக்கவும் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பவும் மர்ம மனிதர்களை அரசாங்கம் கைது செய்யாது உலாவ விடுகின்றது என்று குற்றம் சுமத்தினார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
தற்போது நாட்டில் பல பிரதேசங்களில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காணப்படுகின்றது. இதனால் பொது மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். பொலிஸார் கைது செய்யும் நபர்களை விட்டு விடுவதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.
எவ்வாறாயினும் இரவு நேரங்களில் பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நடமாடும் கிறீஸ் மற்றும் மர்ம மனிதர்கள் தொடர்பில் பொலிஸாரின் நடவடிக்கையும் அரசாங்கத்தின் செயற்பாடுகளும் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை.
ஏனென்றால் அரசாங்கம் தமது அதிகாரத்தையும் படை பலத்தையும் மிகவும் வெளிப்படையாக பிரயோகித்து புலிகளின் தலைவர்களில் ஒருவரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனை மலேசியாவில் வைத்து கைது செய்து இலங்கைக்கு கொண்டு வந்தது.
அதே போன்று உள்ளூரில் பல மோசடிக்காரர்களையும் பாதாளக் குழுத் தலைவர்களையும் கைது செய்து சிறையில் இட்டது.
இவ்வாறான வீரதந்திர செயல்களில் ஈடுபட்ட அரசாங்கத்திற்கு உள்ளூரில் நடமாடும் மர்ம மனிதர்களின் பிரச்சினைகளுக்கு முடிவுகாண முடியவில்லை என்றால் வேடிக்கையாகவே உள்ளது.
எனவே அரசாங்கம் உள்நாட்டில் உக்கிரம் அடைந்துவரும் இன்னோரன்ன பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியவில்லை.
சர்வதேச ரீதியிலான மனித உமை மீறல் தொடர்பான அழுத்தங்கள் மேலோங்கியுள்ளன. மேலும் ஊழல் மோசடிகள் வெளிப்பட ஆரம்பித்துள்ளன.
பொது மக்கள் அரசாங்கத்தை வெறுக்கும் நிலையில் உள்ளார்கள். ஆகவே தான் அரசாங்கம் மறுபடியும் பொது மக்களின் கவனத்தை திசைதிருப்ப மாயைகளை உலாவ விடுகின்றது.
மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல பிரதேசங்களிலும் திட்டமிட்டு உலாவும் மர்ம மனிதர்களை கைது செய்ய முடியவில்லை என்றால் நாட்டிற்கு பொலிஸ் எதற்கு? பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கமும் பொலிஸாரும் தவறிழைத்துள்ளனர் என்றார்.
கிறிஸ் பூதம் என்ற சந்தேகத்தில் கொலை செய்யப்பட்ட இருவரும் அப்பாவி வியாபாரிகள்.

கிறிஸ் பூதம் என்ற சந்தேகத்தின் பேரில் அண்மையில் அப்புத்தளை தொட்டலாகல தோட்டத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட இருவரும் அப்பாவி தமிழ் வர்த்தகர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதேச மக்களினால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்த இருவரும் பதுளை குபுக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். 29 வயதான சோமசுந்தரம் மகேந்திரன் மற்றும் 35 வயதான சில்வெஸ்டர் டயஸ் ஜோன்பீற்றர் ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் மனைவிமார் நேற்றைய தினம் தங்களது கணவர்களின் சடலங்களை அடையாளம் காட்டியுள்ளனர்.
இவர்கள் இருவரும் சிங்கள இனத்தைச் சேர்ந்த அக்கா தங்கையை திருமணம் செய்திருப்பதுடன் தரை விரிப்புப் புடவை என்று கூறப்படும் காபட் விற்பனையினை தொழிலாகக் கொண்டிருந்தவர்களாவர்.
காபட் விற்பனையில் ஈடுப்பட்ட இவ்விருவரும் தொட்டலாகல பெருந்தோட்டத்திற்கருகாமையிலுள்ள காட்டில் மழைக்குருவிகளைப் பிடிக்க சென்ற போது தொட்டலாகலை தோட்ட மக்களினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள்.
இதனையடுத்து அப்புத்தளைப் பகுதிகளிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் ஏற்பட்டிருந்த பதற்றம், பயம், பீதி, சற்று ஓய்ந்துள்ளது.
கொலை செய்தவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். அதேவேளை பதுளைப் பகுதியில் டிக்வெலை பெருந்தோட்டத்தில் இரவு மேலுமொரு மர்ம மனிதனை தோட்ட இளைஞர்கள் பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட மர்ம மனிதனின் வலது கால் முறிக்கப்பட்ட நிலையில் பொலிஸ் பாதுகாப்புடன் பதுளை அரசினர் மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இம் மர்ம மனிதனின் நிலை கவலைக்கிடமாக இருந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரையில் பதுளை மாவட்டத்தின் பெருந்தோட்டங்கள் பலவற்றில் மர்ம மனிதனால் பல பெண்கள் சீண்டப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
டிக்வெலை தோட்டத்திலிருந்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட மர்ம மனிதன் கொழும்பு பிலியந்தலையைச் சேர்ந்தவனென்று பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மிகிந்தலை ரஜமஹா விகாரையின் பிக்குவை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவு.

மிஹிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதியான  பௌத்த பிக்குவை  கைது செய்யுமாறு அனுராதபுரம் மஜிஸ்திரேட் பிரதம நீதவான் தர்ஷிகா விமலசிறி உத்தரவிட்டுள்ளார்.
சிறுமி ஒருவரை பல தடவைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குறித்த பௌத்த பிக்குவிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
13 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் நீதிமன்றில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஐ.தே.க.வின் 2 ம் நிலைத் தலைவர் பதவி சரத் பொன்சேகா'வுக்கு! சரத்-ரணில் சந்திப்பில் இணக்கம்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இரண்டாம் நிலைத் தலைவர் பதவி சரத்பொன்சேகாவுக்கு வழங்கப்படும் என்று அண்மையில் அவரைச் சந்திக்கச் சென்ற ரணில் விக்ரமசிங்க வழங்கிய  உறுதிமொழியை அடுத்து, சரத் பொன்சேகா ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து விரைவில் ராஜினாமாச் செய்யவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சரத் பொன்சேகாவுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சில் காணப்பட்ட இணக்கத்தை அடுத்தே அவர் அந்தப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியில் இரண்டாம் நிலைத் தலைவர் பதவி அவருக்கு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தினையடுத்தே அவர் இந்தத் தீர்மானத்தை மேற் கொண்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் அவசரமாக சரத் பொன்சேகாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவை முதல்வர் வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் நிறுத்துவது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அந்தக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சரத் பொன்சேகாவின் துணைவியாரான அனோமா பொன்சேகா, தன்னையோ, தனது கணவரையோ வைத்து அரசியல் லாபம் தேடிக்கொள்ள வேண்டாம் என்றும், தனது கணவரை விடுவிப்பதே தனது ஒரே குறிக்கோள் எனவும் தெரிவித்திருந்தார்.
அத்துடன், கொழும்பு மாநகரசபைக்கான தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஊடகங்களில் தம்மைப்பற்றி வெளிவரும் செய்திகளை நம்பவேண்டாம் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
பொத்துவிலில் ஊரடங்கு சட்டம் நீக்கம்! எனினும் கடைகள் யாவும் மூடப்பட்டுள்ளன.

அம்பாறை பொத்துவிலில் நேற்று மாலை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணியுடன் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும் பிரதேசத்தில், இன்றும் கடைகள் யாவும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை,  பிரதேசம் இயல்புக்கு திரும்பியுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
வன்முறைகள் எதுவும் இன்று இடம்பெறவில்லை
இந்தநிலையில் நேற்று பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பலியானவரின் ஜனஸா இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இறுதிச் சடங்குகளில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட்ட அரசியல் பிரமுகர்கள்  பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
இந்த இறுதி நிகழ்வின் போது ஏதும் அசம்பாவிதங்கள் நிகழலாம் எனவும், அதனால் அப்பிரதேசத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் பாதுகாப்பை தெரிவித்துள்ளனர்.
ஆப்ரிக்க பஞ்சத்தை தீர்க்க நன்கொடை திரட்டுவதில் ஐ.நா திணறல்.
கிழக்கு ஆப்ரிக்காவில் ஏற்பட்டுள்ள பஞ்சத்தை தீர்க்க ஐக்கிய நாடுகள் சபை நன்கொடை திரட்டி வருகிறது.
இதுவரை உலக நாடுகளிடம் இருந்து நிர்ணயிக்கப்பட்ட அளவில் 48 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது. வறட்சி நிவாரணப் பணிகளுக்கு மொத்தம் 250 கோடி டொலர் நிதி உதவியை ஐ.நா கேட்டு இருந்தது.
இந்த தொகையில் 120 கோடி டொலர் நன்கொடையாக வசூலிக்கப்பட வேண்டிய நிலையுள்ளது. நன்கொடை நாடுகளிடம் இந்த தொகையை பெற ஐ.நா நம்பிக்கை இழந்த நிலையிலும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. 
சோமாலியாவுக்கான ஐ.நா ஒருங்கிணைப்பாளர் மார்க் போடன் கூறுகையில்,"சோமாலியாவில் 30 லட்சம் மக்கள் மிகுந்த துயரமான நிலையில் உள்ளனர். அவர்களுக்கு உடனடி உதவி தேவைப்படுகிறது. 100 கோடி டொலருக்கு மேல் நன்கொடை திரட்ட வேண்டி உள்ளது" என்றார்.
சோமாலியா தலைநகர் மொகாதிஷீவுக்கு கப்பல் மற்றும் விமானம் மூலமாக நிவாரண உதவிகள் வருகின்றன. ஆனால் அந்த உணவுப்பொருட்கள், மருந்துகள் மிகவும் குறைவாகவே உள்ளன என்று மேலும் தெரிவித்தார்.
சோமாலியாவில் குழந்தைகளுக்காக செயல்படும் பெரிய மருத்துவ பிரிவு கொண்ட பனாதிர் மருத்துவமனையில் மின்வசதி, தண்ணீர் வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்தாக்குதல் நடத்தும் ஆற்றலை இழந்த கடாபியின் ராணுவப் படை: நேட்டோ தளபதி.
ஆற்றல் மிக்க ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் சூழ்நிலையில் கடாபியின் படைகள் இல்லை என்று நேட்டோ இராணுவக் கூட்டணியின் உயர் தளபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடாபியின் விசுவாசப் படை தொடர்ந்து பலவீனப்படுத்தப்பட்டு வருகிறது. அப்படையினர் மனத்தளவிலும் சோர்வுற்றுள்ளனர் என்று நேட்டோவின் இராணுவத் தளபதியான லெப்டினட் ஜெனரல் சார்லஸ் புஷார்ட் தெரிவித்தார்.
அவர்களால் ஆற்றல் மிக்க பதில் தாக்குதலை நடத்த முடியவில்லை எனவும் அவர் தெரிவித்தார். நேட்டோவின் தாக்குதலினால் கடாபியின் படையினர் பலவீனமடைந்துள்ளனர்.
இதனால் இதர ஆபிரிக்க நாடுகளிலிருந்து வெளியுணர்வு கொண்ட கூலிப்படையினரை அவர் தருவித்துள்ளார். அந்த கூலிப்படையினர் ஆண்களையும், பெண்களையும் குழந்தைகளையும் கொன்று குவித்து வருகின்றனர் என்று புஷார்ட் கூறினார்.
கடாபியின் விசுவாசப் படையினர் போரிடுவதற்கான மனவுறுதியை இழந்து விட்டதால் கூலிப்படையினரின் உதவி அவருக்குத் தேவைப்படுகிறது என்றார் புஷார்ட் கூறினார்.
முன்பு கிளர்ச்சிக்காரர்களின் முழு கட்டுப்பாட்டில் இருந்த பிரேகா, மிஸ்ரட்டா, நாபுசா ஆகிய மூன்று இடங்களில் கடாபியின் விசுவாசப் படையினர் ஆவேசப் போரில் ஈடுபட்டுள்ளனர்.
அவரின் கூலிப்படையினர் பொதுமக்களை கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜப்பானில் வீசி வரும் அனல்காற்று: 900 பேர் மருத்துவமனையில் அனுமதி.
ஜப்பானில் வீசி வரும் அனல்காற்றினால் நால்வர் பலியாகியுள்ளதோடு மேலும் 900 பேர் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜப்பானில் தொடர்ந்து மூன்றாவது நாளாக சுட்டெரிக்கும் வெயில் அடிக்கிறது. வெப்பநிலை 35 டிகிரி சென்ரிகிரேட் அளவைத் தாண்டியுள்ளது.
வெப்பம் தாளாமல் மயங்கிவிழுந்த நால்வரின் இருவர் விவசாயிகள், ஒருவர் பாதுகாவலர், ஒருவர் கட்டுமானத் தொழிலாளி என்று ஆசாஹி டெய்லி எனும் பத்திரிகை தெரிவித்தது.
கடுமையான வெப்பத்தால் உடல்நலம் குன்றிய 900க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருபது பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது.
மார்ச் மாதம் நிகழ்ந்த நிலநடுக்கத்திலும், சுனாமியிலும் சேதமுற்ற அணுமின் நிலையங்கள் இன்னும் செயல்படாத நிலையில் இருப்பதால் போதுமான அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியவில்லை. இதனால் குளிரூட்டும் சாதனங்களும் முழு அளவில் செயல்படாமல் உள்ளன.
2020 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு றொரன்ரோ அனுமதி கோராது: மேயர் திட்டவட்டம்.
2020 கோடைகால விளையாட்டுக்களை நடத்துவதற்காக றொரன்ரோ போட்டி போடாது என மாநில மேயரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நிதி நெருக்கடி காரணமாக றொரன்ரோ ஒலிம்பிக்கிற்கான கோரிக்கையை விடுக்காது என்று தெரியவருகின்றது. அண்மையில் அனுமதி கோரி சில குழுக்கள் இந்நகர மேயரை அணுகிய போதும் இது மறுக்கப்பட்டுவிட்டது.
முன்னரும் இரு தடவைகள் 1996லும், 2008லும் அனுமதிக்கு முயற்சித்த போதிலும் றொரன்ரோ அதனை அற்லான்ராவிடமும் பீஜிங்கிடமும் இழந்திருந்தது.
இம்முறை 2015 பான் அமெரிக்க விளையாட்டுக்களுக்கான ஒழுங்குகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் 2020 ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு இந்நகரின் ஆதரவை ஒலிம்பிக் ஆதரவாளர்கள் பெற விரும்பினார்கள்.
எல்லாருமே இதை விரும்பினாலும் இது சரியான நேரமல்ல எனவும் ஒலிம்பிக்கினை நடத்துவதற்கான நிதி அரசாங்கத்திடம் இல்லையென்றும் குறிப்பிட்டார் அதன் மேயர்.
2008 றொரன்ரோ ஒலிம்பிக்கில் பங்கு பற்றிய, 2015 இல் பங்குபற்றப்போகும் பொப் றிச்சாட்சன் எனும் விளையாட்டு வீரர் கூறுகையில்,"இப்பகுதியில் ஒலிம்பிற்காக அனுமதி கோரக்கூடிய நிலையில் றொரன்ரோ தான் உள்ளதெனவும் மேயரின் நிலையைத் தம்மால் விளங்கிக்கொள்ள முடிகின்றதெனினும் இதனைத் தன்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை" எனவும் குறிப்பிட்டார்.
நிதி ஒதுக்கீட்டைத் தவிர்த்துப் பார்த்தால் பான் அமெரிக்க விளையாட்டுகளுக்கான ஒழுங்குகள் நடப்பதால் ஒலிம்பிக்கை நடத்துவதற்கான அனுகூலங்கள் அதிகமாக உள்ளதெனச் சிலர் குறிப்பிட்டனர்.
2020 கோடைகால ஒலிம்பிக் விளையாட்டிற்கான அனுமதிகோரும் செயற்பாடுகள் செப்ரெம்பரில் ஆரம்பமாகின்றதென்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மேயரோ எந்த நகரம் இதற்குச் செலவழிக்கப் போகும் பல பில்லியன் டொலர்களை வைத்திருக்கின்றதா எனக் கேட்கின்றார்.
அதுமட்டுமல்லாது இவ்வளவு தொகையைச் செலவழித்துச் செய்யக்கூடியவாறு எந்த நாடும் உள்ளதா என்றும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக நாங்கள் அந்த நிலையில் இல்லை என மேயர் முடிவாக கூறியுள்ளார்.
வேலை பார்க்கும் இடங்களில் சக ஊழியர்கள் முத்தமிட்டுக் கொள்ள ஜேர்மனியில் தடை.
வேலை பார்க்கும் இடங்களில் சக ஊழியர்கள் கன்னத்தில் முத்தமிட்டுக் கொள்வதை தடை செய்ய வேண்டும் என்று ஜேர்மனியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரான்சை பொறுத்தவரை வேலை செய்யும் இடங்கள், அலுவலகங்களில் ஊழியர்களை பாராட்டவும், வாழ்த்து தெரிவிக்கவும் சக ஊழியர்கள் கன்னத்தில் முத்தமிடுவது சாதாரண விஷயம்.
இதுபோன்ற கலாசாரத்தை  ஜேர்மனியில் பரவுவதை தடை செய்ய வேண்டும். இவ்வாறு தங்கள் அன்புகளை பரிமாறிக்கொள்ள முத்தமிடுவது  ஜேர்மனியர்களுக்கு அசவுகரியமாக இருக்கும்.
அலுவலகங்களில் பாராட்டை தெரிவிக்க சக ஊழியர்கள் முத்தமிடுவதை நிறுத்தி, மரபு ரீதியாக கை குலுக்கி பாராட்டு தெரிவிப்பதை கட்டாயமாக்க வேண்டும்.
பிரான்ஸ், இத்தாலி, தென் அமெரிக்கா நாடுகளில் இருந்து வந்த இந்த கலாசாரம் வித்தியாசமான நடத்தை ஒன்றும் இல்லை. ஆண், பெண் இருபாலருக்கு இடையே ஏதோ ஒரு வகையில் தொடு உணர்வு ரீதியாக அன்பு பரிமாறப்படுகிறது என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது ஜேர்மனியில் தற்போது பெருகி வருகிறது. இருப்பினும் பெரும்பான்மையான மக்கள் முத்தமிடும் கலாசாரத்தை வெறுக்கவே செய்கின்றனர். வேலை செய்யும் இடங்களில் பாராட்டை தெரிவிக்க முத்தமிடுவதை நாங்கள் தடுக்கவோ, தடை செய்யவோ முடியாது.
இந்த கலாசாரம் மக்கள் மத்தியில் மேலும் பரவாமல் இருக்க தடுக்க முடியும். அதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெருக்களில் கூட்டம் மற்றும் கருத்தரங்கங்கள் நடத்தப்படும் என்று கினிங்ஜி சொசைட்டி தலைவர் ஹன்ஸ் மைக்கேல் கெலின் என்பவர் தெரிவித்தார்.
தென்கொரிய பாதுகாப்பு அமைச்சரை கொலை செய்ய சதித்திட்டம்.
வடகொரியா தமது பாதுகாப்பு அமைச்சரை கொலைசெய்யத் திட்டமிட்டுள்ளதாகப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் பியொங்யாங்கிற்கு எதிராகத் தனது கடுமையான கருத்துக்களைக் கூறிவரும் தென்கொரியப் பாதுகாப்பமைச்சர் கிம் குவான்-ஜின்னிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் அவர் அலுவலகத்தை விட்டு வெளியே செல்லும் போது பாதுகாப்புப் படைகள் பாதுகாப்பு வழங்கி வருகின்றன.
இதுகுறித்து தென்கொரியா கூறுகையில்,"பாதுகாப்பமைச்சர் தான் ஒரு நாட்டின் மிகமுக்கிய அதிகாரி. நாங்கள் அவரை நெருங்கி அவதானித்துப் பாதுகாப்புக் கொடுத்து வருகின்றோம். அவர் ஒன்றுகூடல் அல்லது வேறு விடயங்களுக்காக வெளியேறும் தருணங்களில் நாங்கள் அவருக்கு மேலதிகப் பாதுகாப்பு வழங்குகின்றோம்".
வடகொரிய முகவர்கள் அல்லது வடகொரியாவால் அனுப்பப்படும் வேறு வெளிநாட்டு முகவர்களிடமிருந்து ஏதாவது அச்சுறுத்தல்கள் ஏற்படுமா என இராணுவம் மற்றும் புலனாய்வுத் துறையினர் அவதானமாகவும் எதிர் நடவடிக்கைகள் எடுத்தும் வருவதாகத் தென்கொரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த டிசம்பரில் தனது பதவியை ஏற்றுக்கொண்ட முன்னாள் இராணுவ ஜெனரலான கிம் வடகொரியாவிடமிருந்து வரும் பதில்களுக்கு எதிராகக் கடுமையான போக்கைக் கடைப்பிடிப்பதாகவும் தெரியவருகின்றது. வடகொரியாவோ இவரை ஒரு "வடகொரிய எதிர்ப்புப் பைத்தியக்காரன்" என்றே அழைக்கின்றது.
சிரிய அரசுக்கு எதிராக நடவடிக்கை: உலக நாடுகளுக்கு ஹிலாரி கிளிண்டன் அழைப்பு.
சிரிய அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு உலக நாடுகள் ஒருங்கிணைய வேண்டும் என ஹிலாரி கிளிண்டன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி் ஹிலாரி கிளிண்டன் கூறியதாவது: சிரியாவுக்கு எதிராக உலக நாடுகளை அமெரிக்கா ஒருங்கிணைத்து வருகிறது.
ஒபாமா அரசாங்கம் மற்றும் இந்தியா-சீனா இந்த இரு நாடுகளும் சிரியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விரும்புகிறது.
இந்த இரு நாடுகளும் தான் அதிக அளவிலான முதலீடுகளை சிரியாவின் எரிசக்தி துறையில் செய்துள்ளன.
சிரியாவின் ஜனாதிபதி பஷாத் அலி ஆசாத் தனது அரசுக்கு எதிரான போராட்டத்தை கொடூரமான முறையில் அடக்க நினைக்கிறார்.
அமெரிக்கா எப்பொழுதுமே பொருளாதார வல்லரசு மிக்க நாடு தான்: ஒபாமா.
அமெரிக்காவின் கடன் தகுதி குறியீடு மதிப்பு குறைக்கப்பட்டிருந்தாலும், இன்றும் தாங்கள் பொருளாதார வல்லரசு தான் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.
இப்போது தான் பதவி ஏற்றதுபோல உள்ளது. ஆனால் அதற்குள் அடுத்த தேர்தலைச் சந்திக்கிறார் பாரக் ஒபாமா. 2012ம் ஆண்டு நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட இருக்கும் ஒபாமா அதற்கான பிரசாரத்தில் இறங்கிவிட்டார்.
மிச்சிகன் நகரில் ஆட்டோ தொழிலாளர்கள் மத்தியில் நேற்று அவர் பேசினார். அவர் கூறியதாவது: கடன்களை திருப்பி செலுத்த அமெரிக்காவுக்கு உள்ள திறனுக்கான மதிப்பீட்டை தரச்சான்றிதழ் வழங்கும் நிறுவனம் ஒரு புள்ளி குறைத்து விட்டது. "ஏஏஏ" என்ற தர மதிப்பீட்டில் இருந்து "ஏஏ பிளஸ்" என்ற மதிப்பீட்டை கொடுத்துள்ளது. இது நமக்கு நாமே போட்டுக்கொண்ட சூடு ஆகும்.
அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கட்சிக்கு ஆதாயம் தேடுவதற்காக நாட்டின் நலனை பலிகொடுத்து விட்டார்கள். கடனுக்கான உச்சவரம்பை உயர்த்துவதற்கு குடியரசு கட்சியினர் தொடக்கத்தில் மறுத்து விட்டனர். இதன்மூலம் அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை அவர்கள் நாசப்படுத்தி விட்டார்கள்.
இவர்களுக்கு நாட்டின் வெற்றியை விட எதிரிகளின் தோல்வி தான் முக்கியம். இந்த போக்கை அவர்கள் கைவிட வேண்டும்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுப்பேன். வேலை இல்லாத் திண்டாட்டம் இப்போது 9 சதவீதத்துக்கு மேல் உள்ளது.
இதை குறைக்க நடவடிக்கை எடுப்பேன். தொழில் வளர்ச்சியை பெருக்க நடவடிக்கை எடுப்பேன். தர சான்றிதழ் வழங்கும் கம்பெனிகளின் நம்பிக்கையை பெறுவதில் வெற்றி பெறுவேன்.
வாரா வாரம் புதிய புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவேன். அந்த திட்டங்கள் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாண்பேன். இதன்மூலம் அதிகம் பேருக்கு வேலை கொடுப்பேன்.
இப்போது நாம் சந்திக்கும் பிரச்சினைகள் எதுவும் தீர்க்க முடியாதது அல்ல. அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பொருளாதார பலம் இன்னும் உள்ளது என்பதை அனைவரும் புரிந்து வைத்து இருக்கிறார்கள்.
சீனாவில் நிலநடுக்கம்: பெரும்பாலான வீடுகள் சேதம்.
சீனாவில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 318 வீடுகள் சேதமடைந்தன. 21 பேர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
சீனாவின் வடமேற்கு மாகாணப் பகுதியான சின்சியாங் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.8 என பதிவாகியிருந்தது.
காயமடைந்தவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டின் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலநடுக்கத்தால் 147 வீடுகள் தரைமட்டமாயின. 171 வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்று அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பிரிட்டனில் அமைதி திரும்புகிறது.
வன்முறை பாதித்த லண்டன் நகரின் பெரும்பாலான பகுதிகளில் அமைதி நிலை படிப்படியாக திரும்பியுள்ளது. வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
பிரிட்டனில் ஏற்பட்ட மிக மோசமான கலவரமாக இது கருதப்படுகிறது. வன்முறையில் காயம்பட்டு கோமா நிலைக்குச் சென்ற 68 வயதான ரிச்சர்ட் மானிங்டன் போவ்ஸ், நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தார். இவருடன் சேர்த்து வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
புதன்கிழமை 3 பிரிட்டிஷ் ஆசியர்கள் உயிரிழந்தனர். வேகமாகச் சென்ற காரை மறிக்க முற்பட்ட போது கார் மோதி இவர்கள் உயிரிழந்தனர். திங்கள்கிழமை இரவு காரில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த நிலையில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது.
தொழிற்சாலை குப்பைத் தொட்டிக்கு தீ வைத்த இளைஞர்களை தடுக்க முற்பட்ட போது ரிச்சர்ட் மானிங்டனை இளைஞர்கள் தாக்கினர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் தலையிட்ட பொலிசாரும் தாக்கப்பட்டதாக புலனாய்வு தலைமை ஆய்வாளர் மெக்பர்லான் தெரிவித்தார்.
காரில் இறந்து கிடந்த நபர் குரோய்டான் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் டிரெவர் எலிஸ் பகுதியைச் சேர்ந்தவர். பர்மிங்ஹாம் நகரில் உயிரிழந்த மூன்று பிரிட்டன் ஆசியர்கள் ஹரூண் ஜஹான்(21), ஷஜாத் அலி(30), அப்துல் முசாவிர்(31) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக 16, 17 மற்றும் 26 வயது மதிக்கத்தக்க மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேற்கு மிட்லாண்ட் பொலிசார் தெரிவித்துள்ளனர். கலவரத்தைக் கட்டுப்படுத்த பொலிசாருக்கு கூடுதல் அதிகாரம் அளித்து அது தொடர்பான அறிவிப்பை பிரதமர் டேவிட் கமரூன் வியாழக்கிழமை வெளியிட்டார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF