Monday, August 29, 2011

குறை சொல்தல் வேண்டாமே!



முழுக்க முழுக்க தங்கத்தால் உருவாக்கப்பட்ட தங்க தேசத்தில் வாழ நேர்ந்தால் கூட, 'சே... எங்கே பாத்தாலும் மஞ்சளா இருக்கே' என குறை சொல்லும் மக்கள் இருக்கிறார்கள் என்கிறார் லார்ட் ஜெஃப்ரி. குறை சொல்தல் சர்வதேசக் கெட்ட குணம்.

சிலர் மனிதர்களைக் குறிவைத்து குறை சொல்வார்கள். சிலர் மனிதர்கள் என்றில்லை, விலங்குகள், தெய்வங்கள், அஃறிணைப் பொருட்கள் என எல்லாவற்றையும் குறை சொல்வார்கள். நம்முடைய ஒரு நாள் வாழ்க்கையைக் கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம். காலையில் எழுந்து அலுவலகத்துக்குப் புறப்படும் அந்த சின்ன இடைவெளியிலேயே குற்றம் சொல்ல ஆரம்பிக்கிறோம். பின் அலுவலகம், போகும் வழி, வரும் வழி என எல்லா இடங்களிலும் அந்த குறை சொல்தல் தொடர்கதையாகிறது.

'குறை சொல்வதால் மனதுக்கு ஓர் இனம்புரியாத திருப்தி கிடைக்கிறது. அதனால்தான் பலரும் குறை சொல்கிறார்கள்' என்கிறது உளவியல். குறை சொல்லுதல் மனதுக்கு தற்காலிகமான ஓர் இளைப்பாறுதலைத் தருகிறது. அதேவேளையில் பலரைக் காயப்படுத்துகிறது.எதையாவது அடைய வேண்டுமென முயல்கிறோம். தொடர்ந்து அதை நோக்கிப் பயணிக்கிறோம். ஆனால் முடியவில்லை. நமது இயலாமையை ஒப்புக்கொள்ள நமது 'ஈகோ' இடம் கொடுக்காது. சட்டென பழியைத் தூக்கி இன்னொருத்தன் தலையிலே போட்டுவிட்டால் வேலை முடிந்தது!

அப்படிச் சொல்வதால் உண்மையான தோல்வியின் காரணங்கள் பிடிபடுவதே இல்லை. தோல்விக்கான காரணமே தெரியாவிடில் வெற்றிக்கான பாதையை எப்படித் தேர்வு செய்வது?குறை சொல்வது மனிதனுடைய குறைபாடு! அடுத்தவர்களை மட்டம் தட்டுவதன் மூலம் தனது உயரத்தை அதிகரிக்கச் செய்யும் முயற்சி இது. ஆழ்மனதில் உறைந்து கிடக்கும் நமது விரோதத்தின் வேர்களே இந்த குறையெனும் முட்களை விளைவிக்கின்றன.

பிடிக்காதவர்கள் மீதுதான் குறையும், குற்றமும், விமர்சனமும் போர்த்தப்படுகிறது. 'உன் மேல எனக்கு அன்பு ரொம்ப ஜாஸ்தி, அதனால எப்போதும் குறை சொல்வேன்' என்று யாரும் சொல்வதில்லை.
அடுத்தவருடைய வளர்ச்சியோ, நிம்மதியோ, புகழோ, அழகோ மனசுக்குள் விதைக்கும் பொறாமை விதைகள்தான் பெரும்பாலும் குறைகளாய் முளை விடும். தன்னிடம் இல்லாத ஒன்றின் பள்ளத்தாக்கை நிரப்ப முயலும் மனதின் விகார முயற்சிகளில் இதுவும் ஒன்று.குறை சொல்தல் பயத்தின் வேர்களிலிருந்தும் முளைப்பதுண்டு. குறிப்பாக அலுவலக சூழல்களில் தனது வேலையைத் தக்க வைத்துக் கொள்ளவும், தங்களுடைய புரமோஷன், வளர்ச்சி போன்ற விஷயங்களுக்கும் அடுத்தவர்களை அழிக்கும் விமர்சனங்கள் எழுவதுண்டு.

நம்முடைய பொறுப்புகளை விட்டுத் தட்டிக் கழிக்க விரும்பும்போதும் முன்னே வருவது இந்தக் குறை சொல்தலும், சாக்குப் போக்கும்தான்.'ஈகோ' எனும் ஆலமரத்தின் கிளைகள் இந்தக் குறை எனும் விழுதுகள். 'ஈகோ' இருக்கும் மனிதர்கள் பிறரிடமுள்ள குறைகளை பூதக்கண்ணாடி கொண்டு பார்த்துத் திரிவார்கள். இல்லாததை இருப்பது போலச் ஜோடித்து மகிழ்வார்கள். ஈகோவை விலக்க வேண்டுமென முடிவெடுத்தால் இந்த கெட்ட பழக்கம் உங்களை விட்டுப் போய்விடும்.

பிறருடைய கவனத்தை ஈர்ப்பதற்காகவும் சிலர் குற்றம் குறைகளை அள்ளி விடுவதுண்டு. பிறர் தன்னைக் கவனிக்க வேண்டும் எனும் ஆர்வம் அவர்களுக்கு. உளவியல் இதை, தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு என்கிறது.தன்னை புத்திசாலியாய்க் காட்டிக் கொள்ளவும் சிலர் குறை சொல்வதைக் கையில் எடுப்பதுண்டு. அடுத்தவர்களையோ, அவர்களுடைய செயல்களையோ விமர்சித்து, குறை சொல்லும்போது தன் தலைக்கு மேல் ஒரு ஒளி வட்டம் உருவாவது போல் கர்வம் அவர்களுக்குள் நுழையும்.

இப்படி குறை சொல்வது நமது வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டிருக்கிறது. ஒரு டிராபிக் சிக்னலில் கூட குறை சொல்லாமல் நம்மால் இருக்க முடிவதில்லை. ஹோட்டலில் வெயிட்டர் பத்து நிமிடங்கள் நமது டேபிளுக்கு வரவில்லையேல் குறையும், குற்றமும் சொல்ல வாய் துறுதுறுக்கிறது.

வாய்ப்பு வந்து வாசல் கதவைத் தட்டும்போது கூட 'சத்தமா இருக்கே' என்று குறை சொல்பவர்கள் இருக்கிறார்கள் என்கிறார் ஆஸ்கார் ஒயில்டு.

குறை சொல்வது நமது வளர்ச்சியை நாமே குழி தோண்டிப் புதைக்கும் செயல். குறை சொல்வதை விட்டு வெளியே வரவேண்டுமெனில் முதலில் நாம் குறை சொல்லும் பார்ட்டிகள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் கேளுங்கள் நீங்கள் குறை சொல்லும் பார்ட்டியா என. உண்மையான பதில் கிடைக்கும். இல்லையேல் நெருங்கிய நண்பர்களிடம் கேளுங்கள்.குறை சொல்வது உங்களுக்கு எந்த நன்மையையும் தந்து விடப் போவதில்லை. இந்தப் பழக்கத்தால் என்ன நன்மை ஏற்பட்டது என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பெரும்பாலும் உங்களுடைய நேரமும், உங்கள் நண்பர்களுடைய நேரமும் வெட்டியாய் செலவானதுதானே மிச்சம்?

உங்களை யாராவது குறை சொன்னாலோ, நேர்மையற்று விமர்சித்தாலோ நீங்கள் அதைக் கைதட்டி ரசிப்பீர்களா என்பதை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். `இல்லை' என்பதுதானே உங்கள் பதில்?

அதே மனநிலைதான் உங்களால் கிண்டலடிக்கப்படும் நபருக்கும் இருக்கும் என்பதை உணருங்கள்.பிறரை ஏற்றுக் கொள்ளும் மனம் இருந்தால் குறை சொல்தல் விலகிவிடும். பிறரை ஏற்றுக் கொள்ளும் மனம் வேண்டுமெனில் முதலில் நம்மை நாமே ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே முதலில் உங்களை உங்கள் இயல்புகளோடே ஏற்றுக் கொள்ளும் தன்னம்பிக்கையைக் கொண்டிருங்கள்.

குறை சொல்தல் உறவுகள் இடையேயான பிணைப்பை உடைத்து விடும். பல விவாகரத்துகளுக்கே இந்தக் குறை சொல்தல் காரணமாகி விடுகிறது. அன்பு உருவாகும் இடத்தில் குறை சொல்வது இருப்பதில்லை. ஆத்மார்த்தமான அன்பை உள்ளத்தில் தேக்குங்கள், அடுத்தவர்களைக் குறை சொல்லும் பழக்கம் ஓடியே போய்விடும்.

குறையைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பவர்கள் அந்த குறைகளைப் போக்கும் வழியைப் பற்றிச் சிந்திக்க மறந்து போய் விடுகிறார்கள். 'இருட்டைப் பற்றியே குற்றம் சொல்லிக்கொண்டு இருக்காமல் ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தும் வழியைப் பாருங்கள்' என்கிறார் கன்ஃபூஷியஸ்.இருப்பதை வைத்து மகிழ்வாக வாழும் மனநிலை உடையவர்கள் பெரும்பாலும் குறை சொல்வதில்லை. அவர்கள் மகிழ்வாக வாழும் வழியை யோசிப்பார்கள். எதைத் தேடுகிறோமோ அதுமட்டுமே நமக்குக் கிடைக்கும்!

கடின உழைப்பாளிகள் குறை சொல்வதில் தங்கள் நேரத்தை வீணடிப்பதில்லை. சோம்பேறிகள், கடின உழைப்பைத் தவிர்ப்பதற்காக குறை சொல்லும் பாணியைக் கையாள்கிறார்கள். குறை சொல்வது எதிர்மறை சக்தி. அதன் விளைவுகள் எதிர் மறையாகவே இருக்கும். தான் சரி என நிரூபிக்க மற்றவை எல்லாம் தவறு என மதிப்பிடும் மனநிலை மனதின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு எதிரி.குறை சொல்வதிலிருந்து வெளியே வர விரும்பினால் பாராட்டப் பழகுங்கள். ஒரு நாளைக்கு ஐந்து பேரையாவது பாராட்டுவேன் என முடிவெடுங்கள். ஒரு நபரிடமிருக்கும் குறைகளைத் தாண்டி நிறைகளைக் கண்டு பிடிப்பீர்கள்.

அதே போல, குறை சொல்லும் நண்பர் கூட்டத்திலிருந்து வெளியே வாருங்கள். குறைந்தபட்சம் குறை சொல்லும் பேச்சை ஆதரிக்காமல் இருங்கள். குறை சொல்வது உங்களுக்குப் பிடிக்காது என்பது உங்கள் நண்பர்களுக்குப் புரிந்து விடும். அது உங்களுக்கு மரியாதையையும் பெற்றுத் தரும்.எதையும் மாற்ற முடியாது என்று தெரிந்தால் கூட 'என்னய்யா வெயில் மண்டையைப் பொளக்குது, என்னய்யா மழை படுத்துது, இதென்ன ஒரே தூசு மண்டலமா இருக்கு' என எடுத்ததுக்கெல்லாம் சலித்துக் கொள்ளும் மனிதர்கள் வாழ்வின் ஆனந்த தருணங்களை இழந்து விடுகிறார்கள்.

இன்றிலிருந்து ஒரு மாதம் குறையே சொல்ல மாட்டேன், நல்ல விஷயங்களைப் பாராட்டுவேன் என முடிவெடுத்துப் பாருங்கள். இந்த போட்டியில் ஜெயித்து விட்டால் உங்களுடைய அடிப்படை இயல்பே மாறிவிடும். ஒரு வேளை தோற்று விட்டால், அந்த நாளிலிருந்து அடுத்த ஒரு மாதம் முயற்சி பண்ணுங்கள்!

குற்றம் சொல்வதை நீங்கள் நிறுத்தும் வினாடியில் உலகம் உங்கள் கண்ணுக்கு முன்பாக அழகாகத் தெரியும். உங்கள் உறவுகள் அழகாகத் தெரிவார்கள். உங்களுக்குக் கிடைத்திருக்கும் வாழ்க்கை ஆனந்தமாக மாறும். செடியில் இருக்கும் முட்களைத் தாண்டி, முட்களிடையே இருக்கும் ரோஜா கண்களில் தெரியும். வாழ்க்கை ஆனந்தமாய் மாறும்.


குறைகள் சொல்தல் இழிவாகும்
உயர்வும் இதனால் அழிவாகும்!
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF