Monday, August 15, 2011

இன்றைய செய்திகள்.

வெளிநாட்டு அமைச்சின் பிழையான வழிநடத்தல்! அமெரிக்கா மீதான குற்றச்சாட்டு வாபஸ் பெறப்பட்டது.

இலங்கையின் வான்பரப்புக்குள் அமெரிக்க வானூர்திகள் அத்துமீறி பிரவேசித்த தகவல் தொடர்பில் இலங்கையின் வெளியுறவு அமைச்சு ஜனாதிபதிக்கு பிழையான வழிநடத்தலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அமெரிக்கா போர் விமானங்கள் இலங்கையின் வான்பரப்புக்குள் பிரவேசித்த செய்தியை இலங்கையின் விமானப்படை தரப்பு மற்றும் பொதுவானூர்தி அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டனர்.
இந்தநிலையில் விடயம் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி எல் பீரிஸ், அமெரிக்கா உதவி தூதுவர் வலரி புளவரை தமது அமைச்சுக்கு அழைத்து, இலங்கையின் உத்தியோகபூர்வ கருத்தை வெளியிடடுள்ளார்.
இதனை தாம் அமெரிக்க அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கூறிய வலரி கடந்த செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க அரசாங்கத்தின் பதிலை வழங்கியுள்ளார். அதில் தமது விமானங்கள் இலங்கையின் வான்பரப்பில் அத்துமீறவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்தின் பொதுவானூர்தி போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன, செய்திதாளில் வெளியான அமரிக்க விமானங்கள் தொடர்பான செய்தி பிழையானது என்று குறிப்பிட்டார்.
நட்பு நாடுகளுடனான உறவை பாதிக்கும் வகையில் இந்த செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் அந்த செய்தியை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் விமானப்படையின் பேச்சாளர் உறுதி செய்தமை மற்றும் பொதுவானூர்தி சேவைகள் அதிகாரி உறுதி செய்தமை போன்ற செயற்பாடுகள் தொடர்பில் ஜெயரத்ன எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
எனவே கிடைத்த தகவல்களின்படி ஜனாதிபதி சீன விஜயத்தை மேற்கொள்ளும் நிலையில் அமெரிக்காவுடன் பிரச்சினையை ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது என்ற அடிப்படையிலேயே அமெரிக்க விமானங்கள் அத்துமீறல் குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் திரும்பப்பெற்றுக் கொண்டதாக தெரியவருகிறது.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா இலங்கையின் போர்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கொண்டு வரவுள்ள பிரேரணையும் இதற்கு காரணமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கையின் முழுமையான பதில் தேவை – ஐக்கிய நாடுகள் சபை.

போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கையின் முழுமையான பதிலை எதிர்ப்பார்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 
இலங்கையின் போர்க்குற்றங்களை உறுதிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அது தொடர்பில் பரிந்துரைகளையும் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கருத்துரைத்த இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ், நிபுணர் குழு அறிக்கைக்கு ஒருபகுதி பதிலை இலங்கை அரசாங்கம் வழங்கிவிட்டதாக தெரிவித்திருந்தார்.
எனினும் நிபுணர் குழு அறிக்கைக்கான முழுப்பதிலையும் ஐக்கிய நாடுகள் சபை எதிர்ப்பார்ப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க தலைமைத்துவ பிரச்சினை மேலும் உக்கிரம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ பிரச்சினை நாளுக்கு நாள் மேலும் உக்கிரமடைந்து செல்கின்றது.
எதிர்வரும் வாரத்திற்குள் உரிய தீர்வு எடுக்கப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் என சஜித் தரப்பினர், கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் அறிவித்துள்ளனர்.
கட்சியின் யாப்பு விதிகளுக்கு அமைவாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
கட்சியையும் கட்சி ஆதரவாளர்களையும் பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறு கடுமையான தீர்மானங்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் கூட்டம் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் தலைமைத்துவ பிரச்சினை தொடர்பில் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பழைய இரும்புகளை ஏற்றி வந்த லொறியில் வெடிப்பொருட்கள்! 8 லொறிகள் ஓமந்தையில் தடுத்துவைப்பு.

வடக்கிலிருந்து பழைய இரும்புகளை ஏற்றிக்கொண்டு வந்த எட்டு லொறிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஓமந்தை சோதனைச் சாவடியில் படையிரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
ஒரு லொறியில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது வெடிப்பொருட்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து இரும்பு ஏற்றி வந்த எட்டு லொறிகளும் ஓமந்தை சோதனைச் சாவடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் கூறினர்.
இந்த லொறியில் பயணம் செய்தவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவக்கைகளை ஓமந்தைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் பழைய இரும்புகள் சேகரிக்கப்பட்டு லொறிகள் மூலம் தென்பகுதிக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
காங்கேசன்துறை துறைமுகத்தில் கடலில் மூழ்கிய கப்பல்கள் வெளியே எடுக்கப்பட்டு அதன் பழைய இரும்புகளும் தென்பகுதிக்கு கொண்டு செல்லப்படுகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையைப் பொறுத்த அளவில் பழைய இரும்புகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளதினால், வடக்கே யுத்த காலத்தில் துருப்பிடித்த பழைய இரும்புகள் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு கட்டிடத் தேவைக்குரிய புதிய கம்பிகளை செய்வதற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அக்கரப்பத்தனையில் மக்களால் பிடிக்கப்பட்ட மர்ம மனிதன் பொலிஸில் ஒப்படைப்பு!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹல்டோரி தோட்டப்பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நபரொருவரை தோட்ட மக்கள் பிடித்து அக்கரப்பத்தனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அக்கரப்பத்தனைப் பிரதேசத்திற்குப் புதியவராக கருதப்பட்ட இந்த மர்ம நபர் ஹல்டோரி தோட்ட குடியிருப்புப் பகுதிக்குள் இன்று அதிகாலை 2 மணிளவில் புகுந்துள்ளார்.
இவரின் நடமாட்டத்தினை அவதானித்த தோட்டத்தின் விழிப்புக் குழுவினர் அந்த மர்ம நபரைப் பிடித்து மரமொன்றில் கட்டியதன் பின்பு தோட்ட மக்களும் விழிப்புக் குழுவினரும் அக்கரப்பத்தனைப் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
அதன் பின்பு அந்த இடத்திற்கு வருகைதந்த பொலிஸார் மரத்தில் கட்டிய நிலையிலிருந்த சந்தேக நபரை அவிழ்த்து விட்டதன் பின்பு அவர் தப்பிச்சென்றுள்ளார்.
உடனடியாக இதனை அவதானித்த பொது மக்கள் அந்த நபரை மீண்டும் பிடித்துக்கொண்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தற்போது குறிப்பிட்ட சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டனர்.
சுமார் 55 வயது மதிக்கத்தக்க இந்த நபர் கண்டி ஹதரஹெலிய பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும் அவரின் பெயர் குணரத்ன என்றும் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வருகின்றது.
உடம்பில் அழுக்குப்படிந்த நிலையிலிருந்த குறிப்பிட்ட சந்தேக நபர் அக்கரப்பத்தனைப் பிரதேசத்துக்கு வந்தமைக்கான காரணத்தை இதுவரை கூறவில்லை.
அக்கரப்பத்தனைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த நபரை உடனடியாக நுவரெலியா நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அக்கரப்பத்தனைப் பிரதேசத்தில் பொலிஸ் மற்றும் இராணுவத்தின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சட்டத்தை கையிலெடுப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை! குழப்பம் ஏற்பட்டால் மீண்டும் யுத்தகால நிலைமை!– படையினர் எச்சரிக்கை.

சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு குழப்பங்கள் விளைவிப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள கிழக்கு மாகாண இராணுவத்தளபதி பொனிபஸ் பெரேரா, கிறீஸ் மனிதன் என்பது எல்லாம் வங்கிக் கொள்ளையர்களும் கொள்ளையர்களும்,மரம் கடத்துவோரும் கிளப்பி விட்டுள்ள புரளி எனவும் தெரிவித்தார். 
கிறீஸ் மனிதன் தொடர்பாக ஆராயும் உயர்மட்டக் கூட்டமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் நடைபெற்றது.
இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் விஜே குணவர்தன, மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி பிரிகேடியர் மஹிந்த முதலிகே, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மட்டக்களப்பு மாவட்ட 234 படைப்பிரிவின் கட்டளைத் தளபதி சுகந்த திலகரட்ன உட்பட இராணுவ, பொலிஸ் உயர் அதிகாரிகள், மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் பிரதேச செயலாளர்கள், சமய பிரமுகர்கள், பள்ளிவாசல்கள், இந்து ஆலயங்கள், கிறிஸ்தவ தேவாலயங்களின் நிர்வாகிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் தற்போது சர்ச்சையையும் பீதியையும் எற்படுத்தியுள்ள கிறீஸ் மனிதன் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா,
மக்கள் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். இன்று இடம்பெற்று வரும் சம்பவங்கள் படையினருக்கு சேறு பூசும் சம்பவங்களாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்களையும் ,கொள்ளைகளில் ஈடுபட்டு வருபவர்களையும், மரங்களை கடத்தி விற்றவர்களையும் படையினர், பொலிஸார் பிடித்து வருவதால் அதனால் ஆத்திரமுற்றவர்களே இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாங்கள் வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்டவர்களை கைதுசெய்துள்ளோம். அத்துடன் அதன் பின்னர் இங்கு 15 மேற்பட்ட ரி56 ரக துப்பாக்கிகளை மீட்டுள்ளோம்.
இது தொடர்பில் பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டும். மீண்டும் கலவரங்களையும் தாக்குதல்களையும் மேற்கொள்ள முனைந்தால் மீண்டும் இந்த மாவட்டத்தில் முன்னர் நிலவிய நிலையே ஏற்படும்.
மீற்றருக்கு ஒரு சோதனைச்சாவடி ஏற்படுத்தப்படும், சுற்றிவளைப்புகள் இடம்பெறும். அரை மணித்தியாலத்திற்குள் செல்லும் பயணங்கள் இரண்டு மணித்தியாலமாகும். இதனை நீங்கள் விரும்பினால் எதனையும் செய்யலாம்.
இரண்டு அப்பாவி இளைஞர்கள் வியாபாரத்துக்கு சென்றபோது அப்பகுதி மக்களின் மதியில்லாத காரணத்தினால் கொலைசெய்யப்பட்டனர்.
இதேபோன்று பொத்துவில் பிரதேசத்திலும் பிரச்சினை வந்தது. யானை கணக்கெடுப்புக்கு சென்றவர்கள் வெளியே வந்தனர். அவர்களையும் பிடித்து அடித்தனர். அவ்வாறு செய்யமுடியுமா?.

அதனை தடுக்கச்சென்ற பொலிஸாருக்கு அடித்தார்கள். வாகனங்களுக்கு நெருப்பு வைக்கப் பார்த்தார்கள். அதன்பிறகே நாங்கள் படையினரை அனுப்பினோம். நீங்கள் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும். அவர்கள் கிரிஸ் மனிதர்கள் அல்ல, வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள்.
இந்தநிலையில் பொத்துவில் நிலைமையை அவதானிப்பதற்காக இரண்டு தாங்கிகளையும் எடுத்துக்கொண்டு சென்றபோது, காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்கு முன்பா ரயர்கள் எரிகின்றன. பைத்தியக்காரர்கள். நான் அந்த ரயர்களை அப்புறப்படுத்தி விட்டே சென்றேன்.
இந்த சமாதானம் கிடைத்த பின்னர் ஒரு நீண்ட அபிவிருத்தியில் செல்கின்ற ஒரு மாகாணம் இந்த கிழக்கு மாகாணம்.
இந்த நாட்டில் பயங்கரவாதம் தோற்றகடிக்கப்பட்ட பின்னர் எமது யுத்த தாங்கிகளையும் கவச வாகனங்களையும் மூடிவைத்துள்ளோம். இயந்திரத் துப்பாக்கிகளை அறைகளில் பூட்டிவைத்துள்ளோம். எமது வீதித் தடைகள் எல்லாவற்றையும் அப்புறப்படுத்தியுள்ளோம். வீதியில் காபட் போட்டுள்ளோம்..
முன்னர் புனானையில் இருந்து இங்கு வருவதற்கு எனக்கு இரண்டு மணித்தியாலம் எடுக்கும். ஆனால் தற்போது வெலிக்கந்தையில் இருந்து இங்கு வருவதற்கு எனக்கு 40 நிமிடமே எடுக்கின்றது.
எனவே தற்போது உங்களுக்கு அந்தக் காலத்துக்கு செல்ல விருப்பமா? இது தொடர்பில் பாதுகாப்பு செயலாளருடன் நீண்ட ஒரு விடயமாக எடுத்துக் கலந்துரையாடியுள்ளேன்.
கிழக்கு மாகாணத்திலே ஏதாவது இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் கிழக்கு மாகாணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீதித் தடைகளை ஏற்படுத்துவேன். மட்டக்களப்பில் இருந்து களுவாஞ்சிக்குடிக்கு செல்வதற்கு சுமார் ஒரு மணித்தியாலத்துக்கு மேல் நேரம் எடுக்கும்.
உங்கள் வாழ்நாளில் அதிக காலத்தை ரோட்டில் கழிக்கவேண்டிவரும். சுற்றிவளைப்பு, சோதனை நடவடிக்கைகள், வீதித் தடைகள் ஏற்படுவது உங்களுக்கு விருப்பமா?
வீட்டுக்கு வந்து படையினர் தேடுதல்களை மேற்கொள்வது உங்களுக்கு விருப்பமா?அது விருப்பமானால் ரோட்டில் போட்டு ரயர்களை எரியுங்கள் பரவாயில்லை.
இதுகளுக்கெல்லாம் சரியான ஊசி மருந்து எங்களிடம் உள்ளது. ஒரு மாதத்துக்கும் ஊசிமருந்து கொடுக்கலாம், ஒரு கிழமைக்கும் ஊசிமருந்து கொடுக்கலாம், ஒரு நாளைக்கும் ஊசிமருந்து கொடுக்கலாம்.
இதேவேளை இக்கூட்டத்தில் கிழக்கில் ஏற்பட்டுள்ள கிறீஸ் மனிதன் தொடர்பில் கிராமங்கள் தோறும் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையை தணிக்க விழிப்புக் குழுக்களை அமைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன், இதன் பின்னணி குறித்தும் பல்வேறு கேள்விகள் தொடுக்கப்பட்டன.
அத்துடன் தற்போது தோன்றியுள்ள நிலைமையினை கட்டுப்படுத்த இரவு வேளைகளில் படையினரை சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்துவது என்றும் அவர்களுடன் விழிப்புக் குழுவை சேர்ந்தவர்களையும் ஈடுபடுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் இந்த விழிப்புக் குழுவை அமைப்பது தொடர்பில் அந்ததந்த பிரதேசங்களில் உள்ள பிரதேச செயலாளர்கள், பொலிஸ் மற்றும் படைப் பொறுப்பதிகாரிகள், பொது அமைப்புக்கள், மதப்பெரியார்களை அழைத்து கலந்துரையாடல்களை நடத்த பணிப்புகள் வழங்கப்பட்டன.
தற்போதைக்கு இலங்கை அமைச்சரவையில் மாற்றமில்லை?

இலங்கையின் அமைச்சரவையில் தற்போதைக்கு மாற்றம் எதுவும் கிடையாது என அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில அமைச்சுக்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட இருந்த போதிலும், தற்போதைக்கு மாற்றங்களை மேற்கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
இந்தத் தருணத்தில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்துவது பொருத்தமாகாது என தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.
எனினும், இந்த ஆண்டில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்படக் கூடிய சாத்தியம் கிடையாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் தரமற்ற சீமெந்து இறக்குமதி! கட்டிட நிர்மாணத்துக்கு ஆபத்து.

இலங்கையில் தரமற்ற பெற்றோலை இறக்குமதி செய்து அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சேதமடைய செய்யப்பட்டமை போல தற்போது  தரமற்ற சீமெந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இலங்கையின் தேசிய கூட்டுறவு சபையின் அங்கீகாரத்தை பெற்றே தரமில்லாத இந்த சீமெந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் சீமெந்தில் மற்றும் ஒரு மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியை இலங்கையின் சுங்கத்துறையினர் வெளிப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக இலங்கையின் நிர்மாணத்துறையி;ல் பாரிய பிரச்சினை ஏற்படும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
தேசியக் கூட்டுறவு சபை என்பது இலங்கையின் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் நுகர்வோர் கூட்டுறவுத்துறை அமைச்சின் அதிகாரத்திற்குட்பட்ட ஒரு சபையாகும்.
தேசியக் கூட்டுறவு சபையினால் இறக்குமதி செய்யப்பட்ட சீமெந்தில் 14 ஆயிரம் பொதி சீமெந்துகள் பரீட்சிக்கப்பட்டு அவை தரமற்றவை என்று தெரிவிக்கப்படடுள்ளன. எனினும் மொத்தம் 180 ஆயிரம் சீமெந்து பொதிகள் குறித்த கூட்டுறவு சபையினால் இறக்குமதி செய்யப்படடுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தரமற்ற சீமெந்து தற்போது சந்தைக்கு விடப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் கடும் சீமெந்து தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் முகமாகவே இந்த சீமெந்து தொகுதி இறக்குமதி செய்யபப்ட்டது.
போரை வென்றெடுத்த அரசாங்கத்தினால் ஏன் கிறிஸ் பூதத்தை ஒழிக்க முடியவில்லை – ஜே.வி.பி.

உலகின் எந்தவொரு போரை வெற்றி கொள்ளக் கூடிய இராணுவப் படை பலம் காணப்படுவதாக பெருமிதம் பேசும் அரசாங்கத்தினால் ஏன் கிறிஸ் பூதத்தை ஒழிக்க முடியவில்லை என ஜே.வி.பி. வினா தொடுத்துள்ளது.
அரசாங்கம் ஏதேனும் சர்ச்சையில் சிக்கும் சகல சந்தர்ப்பங்களிலும் மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.
எதுவும் இல்லையென்றால் அமைச்சர்கள் நபர்களை மரத்தில் கட்டியோ அல்லது அரசாங்க காணிகளின் வேலையை அகற்றியோ தலைப்புச் செய்தியாக அவற்றை மாற்றி விடுகின்றனர்.
கிறிஸ் பூதம் தொடர்பில் மக்களின் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
அரசாங்கமும் கிறிஸ் பூதத்தைப் போன்று செயற்படுகின்றது, பிரச்சினைக்கு தீர்வு வழங்காது வழுக்கிச் செல்கின்றது.
போரை வெற்றிக் கொண்ட அரசாங்கத்தினால் கிறிஸ் பூசி மக்களை அச்சுறுத்தும் மனிதனைக் கூட பிடிக்க முடியவில்லை என சுனில் ஹந்துனெத்தி குறிப்பிட்டுள்ளார்.
இரகசிய பொலிஸார் என்ற போர்வையில் வீட்டுக்குள் புகுந்த நபர்கள் நகைகள், பணம் கொள்ளை.

இரகசிய பொலிஸார் என்ற போர்வையில் வீட்டுக்குள் புகுந்த நபர்கள் சொத்துக்களை கொள்ளையிட்டுள்ளனர். மாத்தறையில் உள்ள வீடொன்றில் 150 பவுண் நகையும், நான்கு லட்ச ரூபாவும் கொள்ளையிடப்பட்டுள்ளது. 
இரகசிய பொலிஸார் என்ற போர்வையில் குறித்த வீட்டுக்குள் பிரவேசித்த நபர்கள் இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நான்கு பேரைக் கொண்ட சந்தேக நபர்கள் இவ்வாறு தம்மை இரகசிய பெலிஸார் என அடையாளப்படுத்திக் கொண்டு வீட்டுக்குள் புகுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீட்டில் இருந்த மோட்டார் காரிலேயே குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சவுதியில் வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இலங்கையர் மூவர் பலி.

சவுதி அரேபியாவில் உள்ள மக்கா – மதீனா பிரதான வீதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர்களான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  மூன்று பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கல்முனை அலியார் வீதியை சேர்ந்த 44 வயதான தம்பிலெவ்வை போடியார் முகம்மட் மசூத், 40 வயதான றகுமத் ஜாஹி மற்றும் 10 வயதான லாபீர் மசூத் ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இக்குடும்பத்தினர் கடந்த 20 வருடங்களான சவுதி அரேபியாவின் றியாத் நகரில் பணியாற்றுபவர்களாவர்.
இவர்களின் நல்லடக்கம் சவுதி அரேபியாவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
“தமிழர்கள் அழுக்கானவர்கள்”: தமிழர்களை அவமதித்த அமெரிக்க துணை தூதர் மன்னிப்பு கேட்க வேண்டும்!- முதல்வர் ஜெயலலிதா.

எனது சருமம், தமிழர்களைப் போல அழுக்காகவும், கறுப்பாகவும் ஆகி விட்டது' என்று மவுரீன் சாவ் பேசியுள்ளார். இனவெறி கொண்ட இந்தப் பேச்சு, மிகவும் கண்டனத்துக்குரியது. இத்தகைய கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்குமாறு மவுரீன் சாவை வற்புறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அமெரிக்க தூதரகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனிபர் மெக்இன்டைருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், அமெரிக்க துணை தூதர் மவுரீன் சாவ், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியது, பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது.
அதில், `நான் டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு ரயிலில் சென்றேன். இந்த பயண நேரம் 24 மணி நேரம்தான். ஆனால், 72 மணி நேரம் ஆகியும், அந்த ரெயில் ஒரிசா போய்ச் சேரவில்லை.
அதனால், எனது சருமம், தமிழர்களைப் போல அழுக்காகவும், கறுப்பாகவும் ஆகி விட்டது' என்று மவுரீன் சாவ் பேசியுள்ளார்.
இன வெறி கொண்ட இந்த பேச்சு, மிகவும் கண்டனத்துக்கு உரியது. இந்த கருத்து, ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கக் கூடியது என்று தங்களுக்கே தெரியும்.
எனவே, இந்த கருத்துகளை வாபஸ் பெற்றுக்கொண்டு, தமிழர்களைப் பற்றி இத்தகைய கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்குமாறு மவுரீன் சாவை தாங்கள் வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
கிறீஸ் பூதம் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினர் விசாரணை?

கிறீஸ் பூதம் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் கிறீஸ் பூதம் தொடர்பான பதற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குற்றச் செயலின் பின்னணியில் இயங்குவது யார் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிறீஸ் பூதம் என்ற சந்தேகத்தின் பேரில் பொதுமக்கள் நடத்திய தாக்குதல்களில் சிலர் உயிரிழந்துள்ளதுடன், பலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திடீரென முளைத்துள்ள கிறீஸ் பூதப் பிரச்சினையின் பின்னணியில் அரசியல் சக்திகளா அல்லது வேறும் தரப்பினரான செயற்படுகின்றனர் என்பது தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமைய விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டன் கலவரத்தில் ஈடுபட்டதால் ஒலிம்பிக் தூதுவராகும் வாய்ப்பை இழந்த சிறுமி.
இங்கிலாந்து நாட்டில் கடந்த பல வருடங்களில் இல்லாத அளவிற்கு லண்டன் மாநகரம் உள்பட பல்வேறு இடங்களில் பயங்கரமான வன்முறை ஏற்பட்டது.
இதில் பல கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீக்கரையாக்கப்பட்டன. மேலும் கலவரக்காரர்கள் தாங்கள் சூறையாடிய கடைகளிலிருந்து பொருட்களை அள்ளிச்சென்றனர்.
இது தொடர்பாக 500 பேரை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தினர். இந்த கலவரத்தில் செல்சி ஐவ்ஸ்(வயது 18) என்ற சிறுமியும் ஈடுபட்டுள்ளார்.
கலகத்தில் ஈடுபடுதல், திருடுதல் மற்றும் பொலிசார் கார் மீது செங்கற்களை வீசுதல் ஆகிய செயல்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்த செயல்களனைத்தும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. எனவே இவருக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என தெரிகிறது.
இதில் விஷயம் என்னவென்றால் அடுத்த வருடம் நடைபெறும் 2012 ஒலிம்பிக் போட்டி விளையாட்டுகளுக்கான தூதுவராக இந்த சிறுமி நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் மாதந்தோறும் சராசரியாக 8 வங்கிகள் மூடப்படுகிறது.
உலகளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலையின் எதிரொலியாக அமெரிக்காவில் சராசரியாக மாதந்தோறும் 8 வங்கிகளுக்கு மேல் மூடப்பட்டு வருகின்றன.
நடப்பு ஆண்டில் இதுவரை 64 அமெரிக்க வங்கிகள் மூடப்பட்டுள்ளன. இந்த மாதம் மட்டும் இதுவரை 3 வங்கிகள் மூடப்பட்டுள்ளன.
பெடரல் டிபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்(எப்.டி.ஐ.சி) என்னும் நிறுவனம் சுமார் 8000 அமெரிக்க வங்கிகளில் முதலீடு செய்துள்ளது.
இந்நிறுவனத்தின் பங்குகள் சரிவடைந்ததை அடுத்த அமெரிக்காவின் பெரும்பாலான வங்கிகள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் நிலை உருவாகி உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டு அதிகபட்சமாக 157 அமெரிக்க வங்கிகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பின்லேடனுடன் தொடர்புடைய அல்கொய்தா தலைவர் விடுதலை.
அமெரிக்கா சிறப்புப்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட அல்கொய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடனுடன் தொடர்பு வைத்து இருந்த அல்கொய்தா தலைவரை பிரிட்டன் ஜாமீனில் விடுதலை செய்தது.
தனது தீவிரவாத எண்ணத்தை மாற்றிக் கொண்டு உள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து அவர் பிரிட்டன் சிறையில் இருந்து விடுதலை பெற்றார். எம் 15 உளவுத்துறை தகவல்படி பிரிட்டன் சிறையில் இருந்த அல்கொய்தா தலைவர் பின்லேடனுடன் ஆப்கானிஸ்தான் தீவிரவாதப் பயிற்சி முகாமில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார்.
கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து அல்கொய்தா தலைவர் யு என அடையாளம் காட்டப்பட்டு உள்ளார். 1999ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டனுக்கு அவர் வந்தார். அவர் 2001ம் பிரிட்டன் சிறையில் வைக்கப்பட்டு இருந்தார்.
அல்கொய்தா தீவிரவாதத் தலைவரை விடுவித்து இருப்பது பைத்தியக்காரத்தனமானது என பிரிட்டன் எம்.பி ஒருவர் கருத்து தெரிவித்தார். தீவிரவாதி விடுதலையாகி இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது என ஒரு தீவிரவாத நிபுணர் தெரிவித்தார்.
பிரிட்டன் தீவிரவாத நபர்களிடமும், சர்வதேச தீவிரவாத நபர்களிடமும் தொடர்பு உள்ளவராக இவர் இருந்துள்ளார். பிரான்ஸ் ஸ்ட்ராஸ் போர்கி கதீட்ரல் குண்டு வெடிப்பு சதிக்கும், லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலைய குண்டு சதிக்கும் இவர் காரணமாக உள்ளார்.
பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகள்: சோமாலியாவில் அவலம்.
கிழக்கு ஆப்ரிக்காவில் கடுமையான வறட்சி தொடரும் நிலையில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை கைவிடிக்கூடிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
கென்யாவில் வடகிழக்குப் பகுதியில் உள்ள தாதாப்பில் 4 லட்சம் அகதிகள் தங்கும் முகாம் உள்ளது.
90 ஆயிரம் பேர் மட்டுமே தங்கும் வசதி கொண்ட முகாமில் 4 லட்சம் பேர் குவிந்துள்ளதால் பெற்றோர், குழந்தைகள் பிரிந்து செல்லக்கூடிய அவலம் உள்ளது.
பெற்றோர்கள் எங்கள் குழந்தைகளை காப்பாற்றுங்கள் என கண்ணீர் மல்க கூறுகின்றனர். தினமும் தாதாப் முகாமுக்கு 1300 பேர் வருகிறார்கள். இவர்களில் 800 பேர் குழந்தைகள் ஆவார்கள். நிவாரண முகாம்களில் குழந்தைகளை பெற்றோர் ஏன் பிரிக்கின்றனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தாதாப் முகாம் சோமாலியா எல்லைப் பகுதியில் இருந்து 50 மைல் தொலைவில் அமைந்துள்ளது. பெற்றோர் கைவிடும் குழந்தைகளுக்கு நிவாரண உதவிகளை சில அறக்கட்டளை அமைப்புகள் வழங்குகின்றன.
சோமாலியாவில் பல ஆயிரம் குழந்தைகளை பாதுகாக்கவும் அதிகாரிகளின் கொடை தேவைப்படுகிறது.
முதல் அரசியல் பயணத்தை மேற்கொள்கிறார் ஆங் சான் சூகி.
மியான்மர் எதிர்க்கட்சி தலைவரான ஆங் சான் சூகி இன்று தனது முதல் அரசியல் பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
ஏழு ஆண்டுகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஆங் சான் சூகி இன்று தனது ஆதரவாளர்களை சந்திக்க முதன் முறையாக செல்ல உள்ளார்.
கடந்த முறை தனது ஆதரவாளர்களை சந்திக்க கிராமப்புறங்களுக்கு சென்ற போது ஏற்பட்ட தாக்குதல் மற்றும் கலவரத்திற்கு பின் ஆங் சான் சூகி நீண்ட வீட்டுக் காவலில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று ஒருநாள் சுற்றுபயணம் மேற்கொள்ளும் ஆங் சான் சூகி மியான்மரின் வடக்கு பகுதி முக்கிய நகரமான யாங்கோன் பகுதிக்கு செல்ல உள்ளார்.
வன்முறையை ஒடுக்க அமெரிக்க பொலிஸ் அதிகாரி ஆலோசனை: பிரிட்டன் பொலிஸ் அதிருப்தி.
பிரிட்டனில் 5 நாட்கள் நீடித்த வன்முறை பிரச்சனைகளை ஒடுக்குவது தொடர்பாக பிரதமர் அமெரிக்காவின் முன்னாள் பொலிஸ் தலைவர் உதவியை எதிர்பார்த்தார்.
நியூயோர்க்கின் முன்னாள் பொலிஸ் தலைவரை ஆலோசனைக்கு அழைத்து இருப்பது பிரிட்டன் பொலிஸ் அதிகாரிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து பொலிஸ் அதிகாரிகளின் சங்க தலைவரான சர் ஹியூ ஓர்டே கூறுகையில்,"400 நபர்களை கொண்ட படைப்பிரிவு வலிமைமிக்கதாக இருக்கும் என கருத முடியாது. அவர்களிடம் நாம் ஆலோசனை பெற வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை" என அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அமெரிக்கா வன்முறைக்கும், பிரிட்டன் வன்முறைக்கும் வேறுபாடு உள்ளது. இந்த நிலையில் அமெரிக்க முன்னாள் பொலிஸ் அதிகாரியை அழைப்பது சரியல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
பிரிட்டன் பொலிசாரின் அணுகுமுறை மிகச்சிறந்தாக கருதுகிறோம். நாம் ஐரோப்பிய நடைமுறையை பின்பற்ற வேண்டும். அமெரிக்க நடைமுறையை பார்க்க கூடாது என்றும் பிரிட்டன் உள்துறை அமைச்சர் கவனத்திற்கு தெரிவிக்க விரும்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
பெர்லின் சுவர் கட்டப்பட்ட 50வது ஆண்டு நினைவு நிகழ்ச்சி கடைபிடிப்பு. 
கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்மனியின் மக்களை பிரித்த பெர்லின் சுவர் கட்டப்பட்ட 50ஆம் ஆண்டு நாள் நினைவு நிகழ்ச்சி தலைநகர் பெர்லினில் கடைபிடிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பிரிவினை ஏற்பட்ட போது மரணம் அடைந்தவர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கிழக்கு ஜேர்மனியில் வளர்ந்த அதிபர் ஏங்கலா மார்கெல் மற்றும் ஜனாதிபதி கிறிஸ்டியன் வுல்ப் மற்றும் பெர்லின் மேயர் கிளாஸ் வோவெரய்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து சுவர் எழுப்பப்பட்டு 30 ஆண்டுகள் நீடித்த இடத்தில் தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்தது. இந்த நினைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிபர் ஏங்கலா மார்கெல் கூறுகையில்,"எனக்கு 7 வயது இருக்கும் போது எனது குடும்பத்தினரையும் பெர்லின் சுவர் பிரித்த கொடூரம் நிகழ்ந்தது" என வேதனையுடன் நினைவு கூர்ந்தார்.
கடந்த 1961ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி கிழக்கு ஜேர்மனி நிர்வாகம் எல்லைகளை மூட துவங்கியது. சாலைகள் துண்டிக்கப்பட்டன. மேற்கு ஜேர்மனியை இணைக்கும் ரயில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டன. 160 கிலோ மீற்றர் தூரத்திற்கு அந்த தடுப்பு சுவர் பெர்லினில் எழும்பியது.
சோவியத் கொம்யூனிஸ்டுகள் நிர்வாகம் செய்த கிழக்கு பகுதிக்கும் ஐரோப்பிய ஜனநாயகத்திற்கம் பெரும் பிளவை ஏற்படுத்தும் விதமாக பெர்லின் சுவர் வந்தது. அந்த சுவர் 1989ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் திகதி இடிக்கப்பட்டது. ரத்தம் இல்லாத புரட்சியின் மூலம் மக்கள் இரு ஜேர்மனியிலும் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
சிரியா மீதான பொருளாதாரத் தடை நீட்டிப்பு.
சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் அசாத் ஆட்சியை அகற்ற போராட்டம் நடத்தும் பொதுமக்களுக்கு எதிராக ராணுவத் தாக்குதல் கொடூரமாக தொடர்கிறது.
இதனால் சிரியா மீதான பொருளாதாரத் தடையை நீட்டிப்பதாக கனடா அறிவித்தது. சிரியாவில் அசாத் அரசாங்கம் ஆட்சி செய்யும் உரிமையில் இல்லாததால் மே மாதம் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை நீட்டிக்கப்படுகிறது என கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் பெயர்ட் அறிவித்தார்.
இந்த தடையின் ஒரு பகுதியாக அசாத் அரசு நிர்வாகத்தில் உள்ளவர்கள் பயணம் செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் கனடாவில் உள்ள அவர்களது சொத்துக்களும் முடக்கப்படுகின்றன.
சிரிய நாட்டிற்கு ஏற்றுமதியோ அல்லது அந்த நாட்டில் இருந்து வரும் பொருட்களை இறக்குமதி செய்யவோ கனடாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிரிய டெல் மற்றும் கமர்சியல் வங்கிக்கு கனடா தடை விதித்துள்ளது என ஜான் பெயர்ட் மெக்சிகோவில் இருந்து வீடியோ கான்பரன்சிங் முறையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சிரிய ராணுவத்திற்கான பொருட்களை ஏற்றுமதி செய்யவும் கனடா தடை விதித்துள்ளது.
மிகவும் ஆபத்தான நிலையில் பொருளாதாரம்: உலக வங்கி தலைவர் எச்சரிக்கை.
உலக பொருளாதாரத்தில் காணப்படும் ஸ்திரத்தன்மையற்ற போக்கால் பல ஆபத்தான கட்டங்களை எதிர்நோக்கும் அபாயம் இருக்கிறது என்று உலக வங்கி தலைவர் ராபர்ட் ஸோயலிக் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதாரத்தின் ரேட்டிங்கை கடந்த வாரம் ஸ்டான்டர்டு அன்ட் புவர் நிறுவனம் குறைத்து அறிவித்தது. இதன் எதிரொலியால் சர்வதேச பங்கு சந்தைகளில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது.
போதாக்குறைக்கு ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பொருளாதார நிலையிலும் சரிவு ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதனால் அடுத்த பொருளாதார சரிவை உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ளன.
இந்த நிலையில் உலக வங்கியின் தலைவர் ராபர்ட் ஸோயலிக் அவுஸ்திரேலியாவின் பிரபல செய்தித்தாள் வீக்ண்டுக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: தற்போது நாம் புதிய பொருளாதார சரிவின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம். ஆனால் இது கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார சரிவு போன்று இருக்காது.
கடந்த சில வாரங்களாக அவுஸ்திரேலியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் பொருளாதாரம் ஓரளவுக்கு வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளன. ஆனால் வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம் தொடர்ந்து ஆபத்தான கட்டத்தை எதிர்நோக்கியுள்ளன.
வளர்ந்த நாடுகள் பொருளாதார கொள்கைகளை சீர்படுத்தினால் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்ப முடியும்.
பிரான்ஸ் பொருளாதாரத்தில் பூஜ்ய சதவீத வளர்ச்சி: சர்கோசிக்கு அதிகரிக்கும் நெருக்கடி.
பிரான்சில் இந்த 2011ஆம் ஆண்டில் 2வது கால் இறுதியில் பூஜ்ய சதவீத வளர்ச்சி காணப்படுகிறது. இது பிரான்ஸ் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் கவலையை அளித்துள்ளது.
வளர்ச்சி இல்லாத இந்த நிலை ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. பிரான்சின் நிதிச்சந்தையில் உள்ள பதட்டத்தை தணிக்க சர்கோசி தீவிரமாக முயன்று வருகிறார்.
அவர் கடன் குறைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் பிரான்சின் உள்நாட்டு உற்பத்தி பொருளாதார வளர்ச்சி பூஜ்ய சதவீதத்தில் இருந்தது.
இந்த ஆண்டின் முதல் கால் இறுதி ஆண்டில் 0.9 சதவீத வளர்ச்சி இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் இது சிறந்ததாக இருந்தது. 2வது கால் இறுதி ஆண்டில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 0.3 சதவீதம் இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் மதிப்பிட்டு இருந்தனர்.
வீட்டு உபயோக பயன்பாடு குறைந்ததால் பொருளாதார வளர்ச்சி பூஜ்ய நிலையை எட்டியது. முதல் கால் இறுதி ஆண்டில் இருந்து 0.7 சதவீதம் வீட்டு உபயோகம் குறைந்தது. இதன் காரணமாக பிரான்ஸ் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டது.
ஜப்பான் அணு உலையை சுற்றி கூடாரம் அமைக்கும் பணி துவக்கம்.
ஜப்பானில் கடந்த மார்ச் 11ந் திகதி நிலநடுக்கமும், சுனாமியும் ஏற்பட்டது. அதில் 20 ஆயிரம் பேர் பலியானார்கள்.
புகுஷிமாவில் உள்ள டச்சி அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அதில் இருந்து கதிர்வீச்சு பரவியது. எனவே அப்பகுதியில் தங்கி இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
மேலும் கதிர்வீச்சு கசிவை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தும் அப்பணி இன்னும் முழுமை அடையவில்லை. எனவே கதிர்வீச்சை வெளிப்படுத்தும் புகுஷிமா அணு உலையை சுற்றி கூடாரமும் அமைக்கப்படுகிறது.
இது காற்றுப்புகாத பாலியஸ்டரால் உருவாக்கப்படுகிறது. அது 54 மீற்றர் உயரமும், 47 மீற்றர் நீளமாகவும் இருக்கும். அந்த கூடாரம் மெட்டல் பிரேமினால் தாங்கிப் பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. அதற்கான பணி அடுத்த வாரம் தொடங்கும்.
வருகிற செப்டம்பர் இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்கத்தில் முதல் அணு உலையில் இந்த கூடாரம் அமைக்கப்படுகிறது. அது வெற்றிகரமாக முடிந்தால் இது போன்று மற்ற அணு உலைகளிலும் கூடாரம் அமைக்கப்பட உள்ளது.
சிரியாவில் கலவரம்: பொதுமக்கள் 10 பேர் பலி.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த 4 மாதங்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கலவரம் வெடித்துள்ளது.
அதை ஒடுக்க அதிபர் ஆசாத் ராணுவத்தை ஏவி விட்டுள்ளார். இதை தொடர்ந்து போராடும் மக்களை ராணுவம் கொன்று குவித்து வருகிறது.
இதுவரை சுமார் 2000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இருந்தும் கலவரம் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமையான நேற்று தொழுகை முடிந்ததும் ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். பேரணியாக சென்று அதிபருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
ஹமா, டெர் அல், ஷோர் ஆகிய நகரங்களில் டாங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. டமாங்கல், அலெப்போ, இட்லிப், லடா கியா, பானியாஸ், டாரா உள்ளிட்ட இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் நேற்று மட்டும் 10 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்துக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டின் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் அறிக்கை விடுத்துள்ளார். அதில் இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளும், ரஷியா உள்ளிட்ட ஐரோப்பிய ஆசிய நாடுகளும் சிரியாவுக்கு எதிரான பொருளாதார தடை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். மக்களை கொன்று குவிப்பதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் அமெரிக்கர் அடையாளம் தெரியாத கும்பலால் கடத்தல்.
பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகருக்கருகில் அமெரிக்கர் ஒருவர் சனிக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்றால் கடத்தப்பட்டார்.
அவர் பழங்குடியின பகுதியில் வளர்ச்சி திட்டப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்படத்தக்கது.
ஜாசன் வார்னர்(65) என்ற அமெரிக்கர் பாகிஸ்தானில் ஐந்து வருடங்களாக வசித்து வருகிறார். ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பழங்குடியின பகுதிகளில் வளர்ச்சி திட்டப் பணிகளில் வேலை செய்து வந்தார்.
அவர் வசித்து வந்த வீட்டில் சனிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் நுழைந்த 8 பேரடங்கிய அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவரை இழுத்துச் சென்றது.
ரமலான் மாதத்திற்குரிய காலை உணவை தயாரித்துக் கொண்டிருந்த அவரின் பாதுகாவலர்கள் தாக்கப்பட்டனர். மூத்த காவல்துறை அதிகாரிகளும், லாகூர் காவல்துறை உயரதிகாரியும் மற்றும் உளவு நிறுவன அதிகாரிகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
லாகூர் நகரம் முழுவதும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் தேடும்பணி நடைபெற்று வருகின்றன.
அவர் ஏன் கடத்தப்பட்டார் என்பது உடனடியாக தெரியவரவில்லை. இது போன்ற கடத்தல் பாகிஸ்தானில் அடிக்கடி நடைபெறுவது தான் என்ற போதிலும், வெளிநாட்டினர் கடத்தப்படுவது அரிதான சம்பவமாகும்.
ஆமணக்கு விதையிலிருந்து நச்சு குண்டுகள்: அல்கொய்தா இயக்கத்தின் புதிய திட்டம்.
அல்கொய்தாவின் ஏமன் பிரிவு தீவிரவாதிகள் புதிய வகை நச்சுக் குண்டுகளைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை அமெரிக்க அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஏமனில் செயல்படும் அல்கொய்தா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆமணக்கு விதையிலிருந்து நச்சுக் குண்டுகளைத் தயாரிக்கும் உத்தியில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க தீவிரவாத எதிர்ப்புப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"ரிசின்" எனப்படும் இந்த நச்சுப் பொருளை சிறிய அளவிலான வெடிகுண்டுகளில் பயன்படுத்தவும் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ரிசின் கலந்த நச்சுக் குண்டுகளிலிருந்து வெளிவரும் வாயுவை முகர்ந்தாலோ அல்லது இரத்தத்தில் கலந்தாலோ மரணம் சம்பவிக்கும் என்று தெரிகிறது.
இந்த நச்சுக் குண்டுகளை தயாரிப்பதற்காகவே அல்கொய்தாவின் ஏமன் பிரிவினர் கடந்த ஒரு வருடமாக ஆமணக்கு விதை உற்பத்தியில் ஈடுபட்டு வந்ததாகத் தெரியவந்துள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட விதைகளை ரிசின் நச்சுப் பொருளைத் தயாரிக்கும் முகவர்கள் உள்ள ஷப்வா மாகாணத்துக்கு தீவிரவாதிகள் எடுத்துச் செல்ல முயன்றதாகவும், இப்பகுதி தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
உற்பத்தி செய்யப்பட்ட குண்டுகளை பொதுமக்கள் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், விமான நிலையங்கள் மற்றும் சுரங்க நடைபாதைகளில் வெடிக்கத் திட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
எனினும் இத்தகைய தாக்குதல்கள் விரைவில் நிகழ வாய்ப்பில்லை என்று தெரிவித்த அதிகாரிகள் வறண்ட, வெப்பமான சூழ்நிலையில் ரிசின் நச்சுப்பொருள் கலக்கப்பட்ட குண்டுகளை வெடிக்க வைக்கும் தொழில்நுட்பத்தை அல்கொய்தா இயக்கத்தினர் இன்னும் பெறவில்லை என்று தெரிவித்தனர்.
அல்கொய்தாவினரின் இந்தத் திட்டம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கடந்த ஆண்டே தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும், இது குறித்த தகவல்கள் உடனுக்குடன் அவருக்கு அளிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த அச்சுறுத்தலை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக 2009ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதும் மற்றும் அச்சு இயந்திரங்களில் பயன்படும் மைப்பெட்டகங்களிலும் வெடிபொருட்களை நிரப்பி தாக்குதல் நடத்த அல்கொய்தாவினர் செய்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற தாக்குதல்கள் 2001 செப்டம்பரில் நிகழ்ந்த தாக்குதலைப் போல பெரிய அளவில் இருக்காது என்றாலும், மக்கள் மனதில் உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இதுபோன்ற அச்சுறுத்தலை ஒதுக்குவதற்கில்லை என்று தெரிவித்த அவர்கள் புலனாய்வுத் துறையினர் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். ஏமனில் உள்ள அல்கொய்தா அமைப்பினர், அறிவியல் அறிவு பெற்றவர்கள் ரிசின் போன்ற நச்சுப் பொருளை உருவாக்கி அமெரிக்காவுக்கு எதிராக பயன்படுத்த முன்வர வேண்டும் என்று தங்களது இணையதள செய்தித்தாளில் கடந்த வருடம் வெளிப்படையாகவே அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF