Monday, August 15, 2011

அமெரிக்க நிதிச் சிக்கல்: பொருளாதார வீழ்ச்சியின் பின்னணி ஒரு அலசல்


உலகின் மிகப் பெரிய பொருளாதார வல்லரசாகத் திகழ்ந்த அமெரிக்கா அரசுக்கு வாங்கிய கடனை திரும்பத் தரும் தகுதி குறைந்துள்ளது என்று ஸ்டாண்டர்ட் அண்டு புவர் எனும் பொருளாதார மதிப்பீட்டு அமைப்பு அறிவித்ததையடுத்து, உலகின் பங்குச் சந்தைகளில், பிரளயம் ஏற்பட்டுப் புரட்டிப் போட்டது போல் கடும் சரிவு ஏற்பட்டது.நிறுவனங்களில் இருந்து நாடுகள் வரை, அவற்றின் கடன் பெறும் அல்லது திருப்பிக் கட்டும் திறன் பற்றி ஒரு பொருளாதார மதிப்பீட்டு நிறுவனம் தரும் திறன் சான்று, அமெரிக்கா போன்றதொரு பொருளாதார வல்லரசைத் திணறச் செய்யுமா? என்கிற வினாவிற்கு விடை தேட வேண்டுமெனில், அதற்கு அந்நாட்டு பொருளாதார நிலையை சற்று ஆழமாகவே நோக்க வேண்டியதாகிறது.

அமெரிக்க ஐக்கிய குடியரசின் இன்றைய கடன் என்பது 14.58 டிரில்லியனாக உள்ளது(ஒரு டிரில்லியன் = 1,000 பில்லியன் = 1 பில்லியன் = 1000 மில்லியன் ). இதற்கு மேலும் கடன் வாங்கித்தான் அந்நாட்டு அரசு சில நலத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை வந்தபோது, கடன் வரம்பை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை அந்நாட்டு காங்கிரஸில் (நாடாளுமன்றத்தில்) எழுந்தது. கடும் போராட்டத்திற்குப் பிறகு அந்தக் கோரிக்கை நிறைவேறியது. தனது செலவீனங்களுக்காக மீண்டும் சந்தைக்குச் சென்று 2 டிரில்லியன் வரை கடன் பெறுவதற்கு அமெரிக்க அரசின் கருவூலம் கடன் பத்திரங்களை விற்க இருந்த நிலையில்தான், ஸ்டாண்டர்ட் அண்டு புவர் அமெரிக்க அரசு மீதான கடன் மதிப்புத் திறனை ஏஏஏ-யில் இருந்து ஏஏ+ ஆக குறைத்தது. 

கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் நாடுகள், வங்கிகள், நிதியமைப்புகள் ஆகியன, தங்களுடைய நிதிக்கு ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதும் அமெரிக்க கருவூல கடன் பத்திரங்களில் முதலீடு செய்தால், தேவைப்படும்போது வட்டியுடன் திரும்பப் பெற முடியுமா என்ற ஐயத்தை கிளறிவிட்டதே, அமெரிக்கா இந்த அளவிற்கு பதறக் காரணமாக அமைந்தது. இந்த அறிவிப்பு வந்தவுடனேயே, பெரும் முதலீட்டு நிறுவனங்கள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கின. இதுவே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு வித்திட்டது. 

அமெரிக்காவிற்கு இந்த நிலை எப்படி ஏற்பட்டது? 
2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட சப் பிரைம் கிரைஸிஸ் என்றழைக்கப்பட்ட குறைந்த வட்டிக் கடன்கள் திரும்பச் செலுத்தப்படாத காரணத்தினால் உருவான நிதிச் சிக்கல், அந்நாட்டின் நிதி நிறுவனங்களையும், காப்பீடு நிறுவனங்களையும் போண்டியாக்கியது. பெரும் நிதி நிறுவனங்களாகத் திகழ்ந்த வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் ஆகியவற்றை தூக்கி நிறுத்த முற்பட்ட அமெரிக்க அரசு, அவைகளுக்கு வட்டியில்லாக் கடனாக ஒரு டிரில்லியன் டாலர்களை வழங்கியது. அதனைப் பெற்றுக் கொண்ட நிதி நிறுவனங்களும், வங்கிகளும் தங்களின் கட்ட வேண்டிய கடன் பத்திரங்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டன. அந்த கடன் பத்திரங்களை அமெரிக்க கருவூலமே வாங்கியது. எவ்வளவிற்குத் தெரியுமா? 1.75 டிரில்லயன் டாலர்களுக்கு! ஆக, ஒட்டுமொத்தமாக 2.75 டிரில்லியன் டாலர் வட்டியில்லாக் கடனாகவும், நட்டத்தில் போன சொத்துக்களையும் அமெரிக்க கருவூலம் முதலீடு செய்து வாங்கியது. இதனைத்தான் ஊக்க நிதியுதவி என்று கூறப்பட்டது.

வட்டியில்லாமல் கொடுத்த கடனைப் பெற்றுக்கொண்ட போண்டியான வங்கிகளும், நிதி நிறுவனங்களும், காப்பீடு நிறுவனங்களும், அந்தக் கடனைக் கொண்டு, தாங்கள் கட்டித் தீர்க்க வேண்டிய கடனை கட்டிவிட்டு, மீதமுள்ள பணத்தை அமெரிக்க அரசின் கருவூல கடன் பத்திரங்களிலேயே முதலீடு செய்தன! அதாவது, அமெரிக்க அரசு தங்களுக்கு அளித்த வட்டியில்லாக் கடனை பெற்று, தங்கள் கடன் சுமையைக் குறைத்துக்கொண்ட அந்த நிறுவனங்கள், மீதமிருந்த தொகையை அமெரிக்க அரசும் கருவூல கடன் பத்திரங்களிலேயே 2 முதல் 3 % வட்டிக்கு முதலீடு செய்தன. இதனை அமெரிக்க அரசால் தடுக்க முடியவில்லை. காரணம் அங்குள்ள சட்டங்கள் அப்படி! கடனைக் கொடுத்தாய், அதற்காக கேள்வி கேட்காதே, நாங்கள் எங்கு வேண்டுமானாலும் முதலீடு செய்வேன் என்றன. 

கடன் பத்திரங்களில் செய்ய முதலீட்டை திரும்பப் பெறுங்கள் என்றது, அதற்கு ஒரு கட்டணத்தை அமெரிக்க கருவூலம் வழங்க ஒப்புக்கொண்டதையடுத்து, பத்திரங்களை மீண்டும் அரசுக்கே விற்றன! இதனால் ஒரு பக்கம் வட்டி வருவாய், மறுபக்கம் தனியாக கட்டணம் வேறு என்று வசூலித்தன. நிதி நிறுவனங்கள் தங்களு்டைய நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளுக்கு அளித்துவரும் மாத ஊதியத்தை குறைக்க வேண்டும் என்று மக்களிடையே கூக்குரல் எழுந்தது. ஆனால் ‘நீ அளித்த கடனை திருப்பி செலுத்தி விட்டேன். என்னை நீ கேள்வி கேட்காதே என்றன வங்கிகள். அதுமட்டுமல்ல, அமெரிக்க கருவூலத்தில் முதலீடு செய்ததனால் கிடைத்த வருவாயைக் கொண்டு பொதுமக்களுக்கு - தொழில் உள்ளிட்ட முதலீடுகளுக்கு - கடன் தரவீர்கள் அல்லவா என்று அமெரிக்க அரசு கேட்டதற்கு, அதிக வருவாயைத் தரும் பங்குகளில்தான் முதலீடு செய்வோம் என்றன நிதி நிறுவனங்கள்! இங்கும் தடையாக நின்றது அமெரிக்க அரசு நிறைவேற்றி கடைபிடித்து வரும் சட்ட முறைகள்தான். கட்டுப்பாடற்ற சந்தைப் பொருளாதாரத்தில் எந்த நிறுவனத்தின் செயல்முறையையும் அரசு கட்டுப்படுத்தக் கூடாது என்பது விதி. எனவே எங்கள் மீது எந்த விதிமுறையும் திணிக்காதே என்றன நிதி நிறுவனங்கள்.

ஆக, வீட்டுக் கடன் சிக்கலால் திவாலான வங்கிகளையும், நிறுவனங்களையும் அமெரிக்க அரசு காப்பாற்றிவிட்டது. ஆனால், அவைகள் நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்த ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றுமாறு செய்ய முடியவில்லை. அமெரிக்க அரசு செய்த ஊக்க நிதியுதவியால் அதற்கு 2.75 டிரில்லியன் கடன் சுமை ஏற்பட்டது. ஆனால் திவாலான வங்கிகள் முன்னெப்போதும் காணாத இலாபத்தை பெற்றன. இலாபத்தை அவைகள் பங்குச் சந்தையில் முதலீடு செய்ததால் பங்குச் சந்தைக் குறியீடுகள் செயற்கையாக உயர்த்தப்பட்டன. கடன் மீதான வட்டி விகிதம் வரலாறு காணாத அளவிற்கு குறைந்தது. ஆனால், அமெரிக்க அரசு செய்த ஊக்க நிதியுதவியால் அந்நாட்டுப் பொருளாதாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது, மக்களின் வாங்கும் சக்தி குறைந்தது. இதனால் அரசு செலவீனம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. அதற்கான நிதித் தேவைக்கு அந்த சந்தையில் கடன் பத்திரங்களை விற்று நிதி ஆதாரத்தை தொடர்ந்து திரட்டி வந்தது. இந்த நிலையில்தான் இதற்கு மேலும் கடன் பட முடியாது, வாங்கினால் திருப்பிக் கட்ட முடியாது என்ற நிலை ஏற்பட்டது. அதுவே இன்றைய நிதிச் சிக்கலிற்கு அடிப்படையானது.

இதே நிலை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் நிலவுகிறது. கிரீஸ் கடன் சுமையால் நொருங்கிப் போயுள்ளது. அதன் தாக்கம் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. கடனை திருப்பிச் செலுத்த வரி விதித்தல் தவிர வேறு வழியில்லை என்ற நிலை. அதனால்தான், அமெரிக்க அதிபர் ஒபாமா, நாட்டின் பெரும் பணக்காரர்களின் வருவாய் மீதான வரியை அதிகரிக்கப் போவதாகவும், அதே நேரத்தில் அரசின் திட்டச் செலவுகளை குறைக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார். அமெரிக்கா கடைபிடித்து வரும் திறந்த நிலை, சந்தைச் சார்பு பொருளாதாரத்தால் அந்நாட்டில் வருவாய் பகிர்வு எப்படியுள்ளது என்பது குறித்த விவரம் தலையை சுற்ற வைக்கிறது. 2008ஆம் ஆண்டு திரட்டப்பட்ட அந்த புள்ளி விவரப்படி, அந்நாட்டின் மக்கள் தொகையில் உயர் மட்டத்திலுள்ள 1 விழுக்காடு மக்களின் தனி நபர் ஆண்டு வருவாய் சராசரியாக 11 இலட்சம் டாலர்களாக உள்ளது. அடுத்த 9 விழுக்காடு மக்களின் தனி நபர் வருவாய் 1,64,000 டாலர்களாக உள்ளது. மீதமுள்ள 90 விழுக்காட்டு மக்களின் சராசரி தனி நபர் வருவாய் 31 ஆயிரம் டாலர்கள் மட்டுமே. அதிலும் 10 விழுக்காட்டினரை பிழந்தெடுத்துவிட்டு, மீதமுள்ள அடித்தட்டு மக்களின் தனி நபர் ஆண்டு வருவாயைப் பார்த்தால் 19,000 டாலர்கள் மட்டுமே. அமெரிக்க ஐக்கிய குடியரசின் வறுமைக் கோடு என்பது ஆண்டிற்கு 18,000 டாலர்கள் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்க குடிமக்களில் 80 விழுக்காட்டினர், வறுமைக் கோட்டிற்கு சற்றே மேலாக உள்ளனர். 

மக்கள் தொகையில் கீழ் மட்டத்திலுள்ள 80 விழுக்காட்டினரின் வருவாய் 1950இல் இருந்து 1980 வரை 75 விழுக்காடு உயர்ந்துள்ளது. ஆனால் 1980 முதல் 2008ஆம் ஆண்டு வரையிலான 28 ஆண்டுகளில் அவர்களின் தனி நபர் சராசரி வருவாய் 1 விழுக்காடு மட்டுமே அதிகரித்துள்ளது.ஆனால் இதே காலகட்டத்தில் அந்நாட்டு மக்கள் தொகையில் உயர் வருவாய் பெறுவோர் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.001 விழுக்காட்டினரின் வருவாய் 1950இல் இருந்து 80 வரை 80 விழுக்காடு உயர்ந்துள்ளது, 1980 முதல் 2008 வரையிலான கால கட்டத்தில் அவர்களின் வருவாய் 403 விழுக்காடு உயர்ந்துள்ளது! இதே காலகட்டத்தில், பெரும் நிறுவனங்கள் செலுத்திய வரி 1950இல் மொத்த வரி வருவாயில் 25% ஆக இருந்தது. 2008இல் அது மொத்த வரி வருவாயில் விழுக்காடாக குறைந்துள்ளது. இதே காலத்தில் ஊதியம் பெறும் பணியாளர்களின் வருவான வரி பிடித்தம் மொத்த வரி வருவாயில் 9 விழுக்காடு இருந்தது, 43 விழுக்காடாக உயர்ந்துள்ளது! அமெரிக்க அதிபர்களாக வந்த ஒவ்வொருவரும் பெரு நிறுவனங்களின் வருமான வரி விகிதத்தை தொடர்ந்து குறைத்து வந்துள்ளனர்! 

அந்நாட்டின் தொழில் உற்பத்தி துறை 58% வேலை வாய்ப்பைத் தந்துள்ளது, அது தற்போது 18% ஆக குறைந்துள்ளது. இதனால் அந்நாட்டு பெரும்பான்மை குடிமக்களின் வீட்டு வருவாய் (House hold income) பெருமளவிற்கு குறைந்துள்ளது. இது அவர்களின் வாங்கும் சக்தியைக் குறைத்துவிட்டது. அமெரிக்க, ஐரோப்பிய சந்தையை எதிர்பார்த்து இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் செழித்த ஏற்றுமதிகள் இதனால் பாதிக்கப்படுகின்றன. இதனால்தான், அமெரிக்கா, ஐரோப்பிய பொருளாதாரங்கள் பின்னடைவைச் சந்திக்கும்போது அது இந்தியா உள்ளிட்ட மூன்றாவது உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதிக்கின்றன. எனவேதான் பங்குச் சந்தைகளில் நேற்று அப்படியொரு வீழ்ச்சி ஏற்பட்டது. 

இப்படிப்பட்ட நிலை ஏற்படுவதற்கான முக்கிய காரணிகள் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவது, 1. நாட்டு மக்களிடையே நிலவும் கடுமையான வருவாய் ஏற்றத் தாழ்வு, 2. வேலை வாய்ப்பை உருவாக்கும் உற்பத்தித் துறையில் முதலீடு குறைவதும், அதிக வருவாய் தரும் நிச்சயமற்ற பங்குச் சந்தை உள்ளிட்ட முதலீடுகளும், வரி விதிப்பில் உள்ள முரண்களும் 3. சுதந்திரமான சந்தை பொருளாதாரப் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்காது என்பதுதான் என்கின்றனர்.அமெரிக்காவிலும், இதர மேற்கத்திய நாடுகளிலும் ஏற்பட்டுள்ள இந்த சிக்கலை இந்தியா போன்றதொரு மக்கள் வளம் நிறைந்த, பொருளாதார அடிப்படை பலமாக உள்ள நாடு ஆழமாக நோக்க வேண்டும். அந்நிய நிறுவன முதலீடுகள், அந்நிய நேரடி முதலீடுகள் ஆகியவற்றை மட்டுமே நம்பி பொருளாதார ‘வளர்ச்சி’யை உறுதி செய்ய முற்பட்டால் அது இந்த நாட்டை தாங்க முடியாத வீழ்ச்சிக்கே வழி வகுக்கும்.

உலக பொருளாதார நெருக்கடி- ஒரு பார்வை .
அமெரிக்காவைச் சார்ந்து தான் உலக நாடுகளின் பொருளாதாரம் பிணைக்கப்பட்டிருக்கிறது. பரிவர்த்தனைகள் அனைத்தும் அமெரிக்க கரன்சியான, “டாலரில்” தான் நடக்கிறது. இதனால், அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உலகளவிலும் எதிரொலித்தது.கடந்த 2008ல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், 2001க்கு செல்ல வேண்டும். அங்கிருந்து தான் இந்த கதை ஆரம்பிக்கிறது.

“டாட் காம் பபுள்” நெருக்கடி: கடந்த 1990களில், இணையதள நிறுவனங்கள் துவங்க ஆரம்பித்தன. இணையதளங்கள் மிக விரைவில் அமோகமாக வளர்ச்சி பெறும் என்று எண்ணிய பலர், அவற்றின் பெயரில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தனர். இணையதளத்துக்கு கொஞ்சம் கூட தொடர்பில்லாத நிறுவனங்கள் கூட தங்கள் பெயருக்கு பின்னால், “டாட் காம்” சேர்த்தால் அவர்களுக்கு அமோக வசூல் தான் என்ற நிலைமை.கடந்த 2000, மார்ச் மாதம் இந்த பங்குகளில் பெருத்த அடி விழுந்தது. இதன் காரணமாக, இணையதள தொழில் என்பதன் மாயை வெளியுலகுக்குத் தெரிய வந்தது. இது தான் பொருளாதார நெருக்கடியின் ஆரம்பம்.அமெரிக்காவில் 60ல் இருந்து 70 சதவீதம் பேர், பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தனர். அவர்கள் இந்தப் பங்குகளை வாங்கியிருந்தனர். இவை சரிய ஆரம்பித்த பின் பெரிய நஷ்டம் ஏற்பட்டது.இதையடுத்து, 9/11 என்று குறிப்பிடப்படும் இரட்டை கோபுர தகர்ப்பு நடந்தது. 1987ல் இருந்து 2006 வரை அமெரிக்காவின் மத்திய ரிசர்வ் வங்கியான, “பெடரல் ரிசர்வ்” வங்கியின் தலைவராக இருந்த ஆலன் கிரீன்ஸ்பான், பங்குச் சந்தை சரிவையடுத்து, பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் நடவடிக்கையாக, வங்கிகளின் வட்டி விகிதத்தை 1.25 சதவீதமாகக் குறைத்தார். அதற்கு முன் 4 அல்லது 5 சதவீதம் இருந்தது.

வாரி வழங்கப்பட்ட வீட்டுக் கடன் : “டாட் காம் பபுள்” நெருக்கடி காலகட்டத்திலேயே மிகக் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் கொடுக்க ஆரம்பித்தனர். இப்போது மேலும் வட்டி விகிதம் குறைந்தவுடன், அமெரிக்காவில் நடுத்தர வர்க்கத்தினர் எல்லாரும் வீட்டுக் கடன் வாங்க ஆரம்பித்தனர். கடனை திருப்பிக் கொடுக்கும் தகுதி வாங்குபவருக்கு இருக்கிறதா என்பதை ஆராயாமல், கேட்டவர்களுக்கு எல்லாம் கடன் கொடுக்க ஆரம்பித்தது அமெரிக்கா. தகுதி பார்க்காமல் கொடுக்கப்பட்டதால் இந்தக் கடன், “சப் ப்ரைம்” கடன் என்றழைக்கப்படுகிறது. இந்தக் கடனை வாங்கி வீடு வாங்குபவர்கள், ஆறு மாதத்துக்கு வட்டி கட்டிய பின் வீட்டை விற்றனர். அதில் வரும் லாபத்தில் மீண்டும் கொஞ்சம் வட்டி கட்டினர். அதன் பின், அவர்கள் வங்கி பக்கம் எட்டிப் பார்க்க மாட்டார்கள். இப்படி கடன் வாங்கியவர்களில் பெரும்பாலானோர் வட்டி கட்டாமல் தப்பிக்க ஆரம்பித்தனர்.இன்னொரு திட்டமும் முன்வைக்கப்பட்டது. முதல் ஒரு சில ஆண்டுகளுக்கு வட்டி கட்டாமல், வீடு வாங்கும் திட்டம் அது. இந்த வட்டி கட்டாத ஆண்டுகளுக்கான வட்டியை பின்பு கட்டப்படும் மாதத் தவணையில் சேர்த்து கழித்து விடுவர்.இந்தக் கடனுக்கு குறைந்த அளவில் வட்டி வசூலித்தனர். கடன் தொகைக்கும், வாங்கியவர்கள் திருப்பியளிக்கும் தொகைக்கும் 1 அல்லது 1.5 சதவீதம் மட்டுமே வித்தியாசம் இருந்தது. இதன் மூலம் பொருளாதாரம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஓரளவு அதில் உண்மையும் இருந்தது. ஆனால், பெரும்பான்மையான வீட்டுக் கடன்கள் வராக் கடன்களாகிவிட்டன.

“சப் ப்ரைம்” நெருக்கடி: கடன் அளிக்கும் போதே, அவற்றை அமெரிக்க வங்கிகள் “கடன் பத்திரங்களாக’ மாற்றி உலக சந்தையில் விற்று விட்டன. வங்கிகளின் தாராள போக்கினால் பொருளாதாரத்தில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டது. 30 கோடி மக்களில் 25 கோடி பேருக்கு வீடு, கார்கள் இருக்கின்றன. எவ்வளவு தான் வாங்குவர்?கடனுக்கான வட்டி விகிதம் ஏற ஆரம்பித்தது. மாதத் தவணை கட்ட இயலவில்லை. “வீடு வேண்டாம்” என்ற மனநிலைக்கு மக்கள் திரும்பினர். அதேநேரம், வீட்டு விலையும் சரியத் துவங்கியது. அன்றைய நிலையில், தேவையை விட கூடுதலாக ஆளில்லாமல் ஒரு கோடி வீடுகள் இருந்தன என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.ஐம்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டை, இரண்டு கோடிக்கு விற்று, 50 லட்சத்தை கட்டிவிட்டு, மீதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்து பணம் பெருக்கலாம் என்பது அவர்களின் திட்டம். அப்படியும் கொஞ்ச காலம் நடந்தது.ஆனால், வங்கிகள், பங்குச் சந்தைகளோடு பிணைக்கப்பட்டிருந்தன. பங்குச் சந்தையில் ஏற்பட்ட நெருக்கடி, வங்கிகளில் எதிரொலித்தது. வங்கியில் “கரன்சி” இல்லை; மாறாக, பத்திரம் தான் இருந்தது. கடன் கொடுக்கும் திறனை இழந்து வங்கி திவாலானது. நாட்டில் பணப்புழக்கம் குறைந்தது. இதைத் தான், “சப் ப்ரைம்” நெருக்கடி என்றனர்.

சமச்சீரற்ற நிலை : அமெரிக்காவின் “செக்யூரிட்டைசேஷன்” என்ற விதிப்படி தான் வங்கிகள் தாம் வைத்திருந்த கடன் பத்திரங்களை, “ரேட்டிங் ஏஜன்சி” மூலம் மதிப்பிட்டு அவற்றை உலகச் சந்தையில் விற்றன. இந்தக் கடன் பத்திரங்களை சீனா, ஜப்பான் போன்ற நாடுகளும் வாங்கின.அமெரிக்க வங்கிகள் தமது கடன் பத்திரங்களை கைமாற்றி விட்டன. மிச்சமிருந்த பத்திரங்களை அரசு பணம் கொடுத்து சரிக்கட்டியது.இந்தியப் பொருளாதார நிபுணரும், மத்திய ரிசர்வ் வங்கியின் அப்போதைய தலைவருமான ஒய்.வி.ரெட்டியின் ஆலோசனையின் பேரில் இந்தியா மட்டும் அந்தக் கடன் பத்திரங்களை வாங்கவில்லை. இதற்கிடையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க, அமெரிக்கா கரன்சியை அச்சடிக்க ஆரம்பித்தது. இதனால், டாலர் புழக்கம் அதிகரித்தது. அதன் விளைவாக யூரோ, யென், யுவான் போன்ற பிற நாடுகளின் கரன்சி புழக்கமும் அதிகரித்தது. இந்த அதிகரிப்பால் பணவீக்கம் ஏற்பட்டது. பணவீக்கம் உயர்ந்ததால் விலைவாசி அதிகரித்தது.அமெரிக்கா அடிப்படை உற்பத்தியில் ஈடுபடாமல், உயர் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், தயாரிப்புகளில் மட்டும் ஈடுபட்டது. தற்போதும் அதுதான் நிலைமை. அடிப்படை உற்பத்திப் பொருட்களை சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விடுகிறது. ஒரு பக்கம், அமெரிக்கா நுகர்கிறது. இன்னொரு பக்கம், மற்ற நாடுகள் உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கு அனுப்புகின்றன. இதை “உலக சமச்சீரற்ற நிலை” என்கின்றனர் நிபுணர்கள். இதில், ஒரு பக்கம் அடி விழுந்தாலும் மற்றொரு பக்கமும் அதன் தாக்கம் இருக்கும்.

அமெரிக்க நுகர்வு கலாசாரம் : இந்தப் பிரச்னைக்கெல்லாம் அடிப்படை காரணம், அமெரிக்காவின் நுகர்வு தான். ஏன் அமெரிக்கா நுகர்வுக் கலாசாரத்துக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறது? “வீட்டில் சும்மா இருக்க வேண்டாம், ஷாப்பிங் செல்லுங்கள். அதன் மூலம் உங்கள் கையில் இருக்கும் காசு சந்தைக்கு வந்து அப்படியே ஒரு சுழற்சியில் ஈடுபடும். இதுதான் பொருளாதாரத்தை வளர்க்கும்” என்பது தான் அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கை.இந்த கொள்கை உருப்பெறுவதற்கு எது காரணமாக இருந்தது? கலாசாரம். ஒரு நாட்டின் கலாசாரம் தான் அதன் சகல விஷயங்களுக்கும் அடிப்படை. ஆசிய நாடுகளுக்கும், மேற்கத்திய அமெரிக்க நாடுகளுக்கும் இடையில் ஒரு பெரிய வித்தியாசம் இந்தக் கலாசாரம் தான்.அமெரிக்காவில், பெண்கள் பொருளாதார ரீதியில் சுயசார்பு பெற்ற பின், “குடும்பம்’”என்ற அமைப்பு சிதைந்தது. குடும்பம் இல்லாததால் அதைக் காக்க வேண்டும் என்ற கடமையும் இல்லாமல் போனது.அதனால் ஏற்பட்ட பெரிய பாதிப்பு, தனிநபர் சேமிப்பு குறைந்தது தான். சம்பாதிப்பது எல்லாம், செலவழிப்பதற்காகத் தான் என்ற கொள்கை உருவானது. இதை அந்நாட்டுப் பொருளாதார நிபுணர்களும் அரசும் வரவேற்றனர்.பெற்றோர், குழந்தைளைக் காக்க வேண்டிய குடும்பத் தலைவனின் கடமை, அரசு தலை மேல் விழுந்தது.

சேமிப்பின் அவசியம் : தனிநபர்கள் சம்பாதித்ததை எல்லாம் ஷாப்பிங்கில் ஆரம்பித்து எல்லாவற்றிலும் செலவழிக்க ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் இது பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வந்தது என்றாலும், அதையடுத்து ஒரு பெரிய நெருக்கடியையும் கொண்டு வந்து விட்டது.சீனா, இந்தியா, கொரியா, ஜப்பான், இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகள் இதற்கு நேர்மாறானவை. குடும்பம் என்ற அமைப்பு இவற்றில் இன்றும் இருப்பதால், சேமிப்பு சரியான நிலையில் உள்ளது.அமெரிக்காவில் சேமிப்பு பூஜ்யம் என்றால், சீனாவில் சேமிப்பு 35 சதவீதமாகவும், இந்தியாவில் 25ல் இருந்து 30 சதவீதமாகவும் உள்ளது. குடும்பத்தை மையமாக வைத்து தான் பொருளாதாரம் உள்ளது. இதுதான் பொருளாதார அடிப்படை கட்டமைப்பு. சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இது தான் பொருளாதாரத்தின் அடிப்படை. அமெரிக்காவில் இது நேர்விரோதம்.இது பற்றி, பிரான்சிஸ் புக்கியாமா என்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர், தான் எழுதிய, “ட்ரஸ்ட்” என்ற நூலில், “எல்லா நாட்டுக்கும் அமெரிக்கப் பொருளாதார மாதிரி ஒத்து வராது. அந்தந்த நாட்டுக் கலாசாரத்தின் அடிப்படையில் தான் அவற்றின் பொருளாதாரம் அமைய வேண்டும்” என்பதை வலியுறுத்தியுள்ளார். பொருளாதாரம் என்பது கலாசாரத்தை மையமாகக் கொண்டது என்பதை இப்போது இந்த நெருக்கடிக்குப் பின், பல பொருளாதார நிபுணர்களும் ஒத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஐரோப்பிய நெருக்கடி : ஐரோப்பாவில், கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் அயர்லாந்து நாடுகளில் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல், அந்நாடுகளின் தவறான உள்நாட்டுப் பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ளது.இதனால், ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த நாடுகளும் பாதிக்கப்படத் தான் செய்யும். ஏனெனில், ஐரோப்பிய யூனியனில் இப்போது “யூரோ” கரன்சி புழங்குவதால், கிரீஸ், அயர்லாந்து நெருக்கடியால், கரன்சி மதிப்பில் பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு, ஜெர்மனி போன்ற நாடுகளையும் பாதிக்கும்.இதன் விளைவாக, யூரோ கரன்சி கூட்டணியில் இருந்து ஜெர்மனி, பிரிட்டன் போன்றவை விலகலாம். ஜெர்மனி தனது பழைய கரன்சியான “மார்க்”குக்குத் திரும்பலாம் அல்லது கிரீஸ் போன்ற நாடுகள் யூரோவை விட்டு விட்டு தங்களது பழைய கரன்சிக்குத் திரும்பலாம். மொத்தத்தில் “யூரோ” கரன்சியில் பிளவு ஏற்படவே வாய்ப்புகள் அதிகம்.ஒரு முன்னெச்சரிக்கை கடந்த 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஒரு முன்னறிவிப்பு தான். முழு நெருக்கடி இனிமேல் தான் ஏற்படப் போகிறது. அது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். ஒரே நேரத்தில் டாலரும், யூரோவும் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில் ஏதாவது ஒன்று முழுமையாக விழும் போது, அந்த பயங்கர நெருக்கடி தோன்றும்.இது பற்றி நாம் மிகச் சரியாக ஆரூடம் கூற முடியாது என்றாலும், இன்னொரு பயங்கர நெருக்கடி காத்திருக்கிறது என்று மட்டும் கூற முடியும். இந்த நெருக்கடி அமெரிக்கா, பிரிட்டனை கடுமையாகத் தாக்கும். அதில் இருந்து அந்நாடுகள் மீள்வது மிகக் கடினம். 

அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏன்? அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு நிபுணர்கள் சில முக்கியமான காரணங்களை முன்வைக்கின்றனர். அவை:
* தவறான பொருளாதாரக் கொள்கை. சேமிப்பை விட, முதலீடு மற்றும் செலவழிப்புக்கு அதிக ஊக்கமளித்தது அந்தக் கொள்கை. அங்கு ஒருவர், தன் வாழ்க்கையையே கடனில் கழிக்க வேண்டிய அவல நிலை இதனால் ஏற்பட்டது. தற்போது ஒவ்வொரு அமெரிக்கனின் தலையிலும் 39லட்சத்து 94ஆயிரம் ரூபாய் (36,314 டாலர்) கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது.
* சந்தையை விட உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தியதால், உற்பத்திப் பொருட்களின் தேக்கம். சந்தையின் ஸ்திரத்தன்மையை சரியாகப் புரிந்து கொள்ளாதது.
*இணையதள நிறுவனங்கள், பங்குச் சந்தையில் செய்த மோசடியால் ஏற்பட்ட “டாட் காம் பபுள் நெருக்கடி!”, அமெரிக்காவில் வங்கிகள், கடன் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் முதலீட்டுச் சந்தையிலும் புகுந்ததால், அவற்றோடு, பங்குச் சந்தை, நிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் என சங்கிலித் தொடராக முதலீட்டுச் சந்தை நீண்டது. ஒன்றில் அடி விழுந்ததால் மற்ற அனைத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.
*”சப் ப்ரைம்”நெருக்கடியால் வங்கிகளில் ஏற்பட்ட வீழ்ச்சி, பங்குச் சந்தை, நிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என அடுத்தடுத்து அமெரிக்க நிறுவனங்களை வீழ்ச்சியடைய வைத்தது.
* கடந்த 2008-09ல் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் இயங்கிய ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு, கிரைஸ்லர் ஆகிய மூன்று கார் உற்பத்தி நிறுவனங்களின் தயாரிப்புகள் விலை போகாமல் முடங்கின. இதனால், பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.அமெரிக்க பொருளாதார நெருக்கடியால், அங்கு கடந்த மூன்றாண்டுகளில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை 10 சதவீதத்தையும் தாண்டியது. இந்தாண்டில் தான் அது 9 சதவீதத்திற்கும் குறைவாக ஆகியுள்ளது.

வேறு காரணங்கள்:உலகளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு நிபுணர்கள் வேறு சில காரணங்களை கூறினர், அவை:

* வளர்ந்த நாடுகள் தங்களது எரிபொருள் தேவைக்காக, உணவுப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் “உயிரி எரிபொருள்” (பயோ ப்யூவல்) உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட்டன. இதனால், வளர்ந்து வரும் நாடுகள், மூன்றாம் உலக நாடுகளில் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலைவாசி உயர்ந்தது.
*உலகம் முழுவதும் கணக்கு வழக்கின்றி பெருகிக் கொண்டிருக்கும் மக்கள் தொகை. இவர்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு.
* கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட காலநிலை மாற்றம். வறட்சி, வெள்ளம், சூறாவளி, மாறி வரும் மழை போன்றவற்றால் எதிர்பார்த்த உற்பத்தி இல்லை.
*உற்பத்தி நாடுகளின் ஸ்திரமற்ற அரசியல் மற்றும் பொருளாதாரம்.

நிதிக் கொள்கை : உள்நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, பணவீக்கம், உலகப் பொருளாதார நிலவரம் இவற்றை அனுசரித்து, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மத்திய ரிசர்வ் வங்கி, நிதிக் கொள்கையை வகுக்கும். காலாண்டு தோறும் வகுக்கப்படும் இதில், வங்கிகளின் வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படும்.அமெரிக்க பெடரல் ரிசர்வ், தன் நிதிக் கொள்கையில், அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியது. பங்குச் சந்தை வீழ்ச்சியை சரிக்கட்ட வட்டி விகிதத்தை ஒன்றரை சதவீதமாகக் குறைத்தது.வட்டி குறைந்தால், வங்கிகளில் கடன் வாங்குவோர் அதிகரிப்பர். அதனால், பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பது தான் பெடரல் ரிசர்வ்-ன் கணிப்பு. ஆனால், அது நேர்மாறாகிப் போனது.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF