Friday, August 19, 2011

இன்றைய செய்திகள்.

இந்தியாவின் ஒத்துழைப்பு இருந்திருந்தால் 25 ஆண்டுகளுக்கு முன் போர் முடிவுக்கு வந்திருக்கும்!- கல்கிசை நீதிமன்றத்தில் கோத்தபாய சாட்சியம்.

சிறிலங்காவுக்கு மிக நெருக்கமாக உள்ள இந்தியா மட்டுமே இராணுவ ரீதியாகத் தலையிடக் கூடிய நிலையில் இருந்ததாவும் கூறியுள்ள கோத்தபாய ராஜபக்ச, இந்தியாவின் சரியான ஒத்துழைப்பு இருந்திருந்தால் 25 ஆண்டுகளுக்கு முன்னரே போர் முடிவுக்கு வந்திருக்கும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  இந்தியாவுக்கும்
சிறிலங்காவுக்கும் இடையில் இருந்த நெருக்கமான ஒத்துழைப்பின் மூலமே நாட்டில் இருந்து தீவிரவாதத்தை முற்றாக அழிக்க முடிந்தது என்றும் கூறியுள்ளார்.  
மிக் விமானக்கொள்வனவு ஊழல் குறித்து செய்தி வெளியிட்ட சண்டேலீடர் நிறுவனத்துக்கு எதிராக, 1000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி கல்கிசை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இந்த வழக்கில் சுமார் 2 மணி நேரம் கோத்தபாய ராஜபக்ச சாட்சியமளித்திருந்தார்.
அவர் தனது சாட்சியத்தில் கூறியுள்ளதாவது: 
சிறிலங்காவில் போரின் போது என்ன நடக்கிறது என்பது பற்றி தகவல்களை இந்திய அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக வழங்கி வந்தாகவும் கூறியுள்ளார்.
1980களில் வடமராட்சியை கைப்பற்றும் நடவடிக்கையை நிறுத்துவதற்கு இந்தியாவுடனான தவறான புரிதல்களை காரணம் என்று கூறிய அவர், அப்போது இந்தியா தலையிட்டிருக்காது போயிருந்தால் 25 ஆண்டுகளுக்கு முன்னரே தீவிரவாதத்தை முற்றாக அழித்திருப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவுக்கு மிக நெருக்கமாக உள்ள இந்தியா மட்டுமே இராணுவ ரீதியாகத் தலையிடக் கூடிய நிலையில் இருந்ததாவும் கூறியுள்ள கோத்தபாய ராஜபக்ச, இந்தியாவின் சரியான ஒத்துழைப்பு இருந்திருந்தால் 25 ஆண்டுகளுக்கு முன்னரே போர் முடிவுக்கு வந்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவின் அழுத்தம் காரணமாகவே மேஜர் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, மேஜர் ஜெனரல் விஜய விமலரட்ண ஆகியோரின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்ட வடமராட்சி நடவடிக்கையை கைவிட நேரிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச போர் பற்றிய தகவல்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கு உயர்மட்டக் குழுவொன்றை நியமித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போரின் போது பத்திரிகைகளில் வெளியாகும் போர் பற்றிய ஆய்வுகளை மக்கள் நம்புகின்ற நிலை இருந்ததாகவும் கூறிய கோத்தபாய ராஜபக்ச, அவர்கள் எழுதுகின்ற கட்டுரைகளில் காயமடைந்த படையினர் பற்றிய எண்ணிக்கை எப்போதுமே மிகைப்படுத்தப்பட்டிருக்கும் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதன் காரணமாக படையினரின் உளவுரண் பாதிக்கப்பட்டதாகவும் கூறிய சிறிலங்கா பாதுகாப்புச் செயலர், போர்முனையில் என்ன நடக்கிறது, இழப்புகள் பற்றிய சரியான எண்ணிக்கை என்ன என்ற விபரங்கள் பொதுமக்களுக்குத் தேவைப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகவே பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தை தொடங்கியதாகவும், போரின் இறுதிக்கட்டத்தில் 40 மில்லியனுக்கும் அதிகமானோர் அதனைப் பார்வையிட்டதாகவும் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.
தான் பாதுகாப்பு செயலராக பொறுப்பேற்ற போது தீவிரவாதத்தை தோற்கடிக்க முடியாது என்றே வெளிநாடுகளும், பொதுமக்களும் நம்பியிருந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற பின்னர் ஆயுதப்படைகளைப் பலப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்ததாகவும், அவர் கூறியுள்ளார்.
கிராமமக்களை பாதுகாப்பதற்கு குடிமக்கள் தொண்டர்படையை பலப்படுத்தியாகவும், அதன் ஆட்பலத்தை 19,000இல் இருந்த 42,000 ஆக அதிகரித்ததாகவும் கூறிய கோத்தபாய ராஜபக்ச, அவர்களில் 5000 பேர் இறுதிக்கட்டப் போரில் பங்குபற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 120,000 ஆக இருந்த இராணுவத்தின் ஆட்பலத்தை 220,000 ஆக அதிகரிப்பதற்கான அனுமதியை சிறிலங்கா அதிபர் தனக்கு வழங்கியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாம் சிறிலங்கா படையினரின் உளவுரணை அதிகரிக்கும் திட்டங்கள் பலவற்றை வகுத்தே அவர்களை போருக்குத் தயார்படுத்தியதாகவும் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.
பாதுகாப்பு பிரிவில் என்ன நடக்கிறது என்பதை ஒவ்வொரு நாளும் எந்தநேரத்திலும் எடுத்துக் கூறுவதற்கு சிறிலங்கா அதிபர் வாய்ப்பளித்திருந்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் நடவடிக்கைப் பணிப்பாளர் தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட ஆயுதம் ஒன்றின் வெடிபொருட்கள் தீர்ந்து போய் அவற்றை பயன்பாட்டில் இருந்து ஒதுக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியதாகவும், அதுபற்றி தான் சிறிலங்கா அதிபரிடம் கூறிய போது, அவர் சீனத் தலைவருடன் தொடர்பு கொண்டு தேவையான ஆயுதங்களை கொள்வனவு செய்து கொடுத்ததாகவும் கோத்தபாய ராஜபக்ச தனது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளின் போது ஆயுதங்கள் கிடைப்பது சிரமமாக இருந்த போதே சிறிலங்கா அதிபர் அவ்வாறு ஆயுதங்களை பெற்றுக் கொடுத்ததாக கூறிய அவர், அவசர தேவையென்றின் போது தான் நேரடியாகவே பாகிஸ்தானில் இருந்து வெடிபொருட்களை வாங்கியதாகவும் கூறியுள்ளார்.
ரணில் அரசாங்கத்துடன் தொடர்புகளைப் பேணி வருகின்றார் – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஆளும் கட்சியுடன் நேரடித் தொடர்புகளைப் பேணி வருவதாக கட்சியின் இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
கட்சி உறுப்பினர்களுக்கு அஞ்சி, ரணில் அரசாங்கத்துடன் இரகசிய ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளார்.
கட்சி உறுப்பினர்களின் வேதனைகளை கட்சித் தலைவரினால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆளும் கட்சியுடன் இணைந்து கட்சியை தோற்கடிக்கும் முயற்சியில் கட்சித் தலைவர் ஈடுபட்டுள்ளார்.
தற்போதைய மத்திய செயற்குழு சட்ட ரீதியானது அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் தேர்தல்களில் கட்சி வெற்றியீட்டுவதனை இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும்.
சில தரப்பினர் தம்மை கட்சியை விட்டு விரட்டியடிக்க முயற்சிக்கின்றனர். எனினும், இவ்வாறான முயற்சிகள் வெற்றியடையாது எனவும், தம்மைக் கொலை செய்தாலும் கட்சியை விட்டு விலகப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியப் படையினர் இலங்கையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க வேண்டும்!- விமல் வீரவன்ச.

இலங்கையில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்ட இந்தியப் படையினர் இலங்கையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 
இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென அண்மையில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா வெளியிட்ட கருத்து தொடர்பிலே விமல் வீரவன்ச விமர்சனம் செய்துள்ளார்.
நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதற்கான முன்னெடுப்புக்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், அதனை இல்லாமல் செய்வதற்கு புலி ஆதரவாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.
இந்த முயற்சிகளை முறியடிப்பதற்கு ஒரு நாடு என்ற ரீதியில் ஒன்றுபட வேண்டும். வேறெப்போதும் இல்லாதவாறு இலங்கை குறித்து இந்தியாவில் பேசப்படுகின்றது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் இலங்கைக்கு எதிராக ஒவ்வொரு தீர்மானங்களை கொண்டுவர ஆயத்தமாகிறார்.
யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போது இந்தியாவில் இலங்கை குறித்து விவாதிக்கப்படவில்லை. இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறெனில், 1987 ஆம் ஆண்டில் இந்திய படையினர் இலங்கையில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டபோது நடைபெற்ற சம்பவங்கள் முதலில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என விமல் வீரவன்ச தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன காலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் முதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் மட்டும் விசாரணை நடத்தப்படக் கூடாது எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
ஜே.ஆர். ஜயவர்தனவின் பின்னர் நாட்டை ஆட்சி செய்த அனைத்து தலைவர்களும் யுத்தம் செய்த போதிலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மிகவும் சொற்ப அளவிலான மனித உரிமை மீறல் சம்பவங்களே இடம்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவிடம் இருந்து இலங்கை 14 இராணுவ ஹெலிகப்டர்கள் கொள்வனவு.

ரஸ்யாவிடம் இருந்து இலங்கை,14 இராணுவ பயன்பாட்டுக்குரிய மிக் 171 ரக ஹெலிகப்டர்களை கொள்வனவு செய்துள்ளது.
ரஸ்யாவின் ஆயுத ஏற்றுமதியாளர்கள் இந்த தகவலை நேற்று வெளியிட்டனர்.
ரஸ்யாவிடம் இருந்து இயற்கை வாயுவை கொள்வனவு செய்யப் போவதாக வெளியான தகவலை அடுத்தே இந்த ஹெலிகப்டர் கொள்வனவு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த ஹெலிகப்டர்கள் அனைத்தும் இலங்கைக்கு அனுப்பப்பட்டு விட்டதாக தெரிவித்த ரஸ்ய அரசாங்கத்தின் ஆயுத ஏற்றுமதி நிறுவன பணிப்பாளர் எனடொலி இசாய்கின், குறித்த ஹெலிகப்டர்கள், போக்குவரத்து மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்கு ஏற்றவை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த கொள்வனவு தொடர்பில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சும் விமானப்படையும் தாம் அறிந்திருக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளன.
எனினும் விமானப்படை பேச்சாளர் அன்றூ விஜேசூரிய, இலங்கை விமானப்படை பொதுமக்கள் சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டத்தை கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை போர் முடிவடைந்துள்ள நிலையில் இலங்கையின் 2011 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின்படி 50 பில்லியன் டொலர் பொருளாதாரத்தில் 215.2 பில்லியன் ரூபாய்களை பாதுகாப்பு செலவுக்காக ஒதுக்கியமை விமர்சனத்துக்குள்ளாகியது.
இலத்திரனியல் அடையாள அட்டைகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்! கெஹலிய.

தற்போது பாவனையிலுள்ள தேசிய அடையாள அட்டைகளுக்குப் பதில் இலத்திரனியல் அடையாள அட்டைகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
ஏற்கனவே அடையாள அட்டைகளை வைத்திருப்போருக்கு இலவசமாகவும் புதிதாக விண்ணப்பிப்போருக்கு சாதாரண கட்டண அடிப்படையிலும் இது வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது பாவனையிலுள்ளவற்றில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும் புதியவை நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிறிகோத்தாவிற்கு முன்பாகவுள்ள வீதி கார்பட் போடப்பட்டமைக்கு காரணம் என்ன?- ஜனாதிபதி.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகமான சிறிகோத்தாவிற்கு முன்பாகவுள்ள வீதி நேற்று ஏன் அவசரமாக கார்பட் போடப்பட்டதென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளக்கம் கோரியுள்ளார்.
இத் தகவலை ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கேள்விக்கு விளக்கமளித்த பிரதியமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவிக்கையில், சிறிகோத்தாவிற்கு அருகிலுள்ள வீதி மீண்டும் கார்பட் போடப்பட வேண்டும் என அப்பகுதி குடியிருப்பாளர்கள் விரும்பியதனாலேயே நேற்று அங்கு கார்பட் போடப்பட்டதாக கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக அரசாங்கம் செயற்படுகிறதா? அதனாலேயே, ஐ.தே.க. சீர்த்திருத்தவாதிகளினால் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவிடாது செய்வதற்காக சிறிகோத்தாவுக்கு செல்லும் வீதி மூடப்பட்டதா?"
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று பிற்பகல், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலிடம்  ஊடகவியலாளர் ஒருவர் மேற்குறித்த கேள்வி எழுப்பினார்.

அந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறியதாவது,
கட்சிக்குள் நிலவும் பிரச்சினைக்குள் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் தலையிட முடியாது. இது கட்சியின் உள்ளகப் பிரச்சினை. இருப்பினும் நாடொன்றின் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டிய கடப்பாடு ஜனநாயக நீரோட்டத்திலுள்ள அனைவருக்கும் உள்ளது.
அத்துடன், சிறிகோத்தாவிலுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக அக்கட்சியின் சீர்திருத்தவாதிகள் சத்தியாக்கிரகம் செய்யவிருந்த நிலையில் அவ்வீதி மூடப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றோம்.
சிறிகோத்தாவுக்கு அருகிலுள்ள வீதி மீண்டும் கார்பட் போடப்பட்டமையினாலேயே அவ்வீதி மூடப்பட்டதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் ரணில் தொடர்ந்தும் நீடிப்பார்! செயற்குழு கூட்டத்தில் முடிவு.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் நீடிப்பார் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மற்றும் தலைமைத்துவ பொறுப்பு தொடர்பில் தீர்மானங்களை நிறைவேற்றும் நோக்கில் இன்றைய தினம் கட்சியின் செயற்குழு கூடியது. 
செயற்குழுவில் அங்கம் வகிப்பவர்களில் 2 பேரைத் தவிர ஏனைய அனைவரும் இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் 54 பேர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனவே, கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தலைமைத்துவ மாற்றம் தொடர்பில் எதுவித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.
இதேவேளை, சிறிகோத்தாவிற்கு முன்னால் சத்தியாக்கிரக போராட்டமொன்றை நடத்துவது என மாற்றுக்குழு உறுப்பினர்கள் தீர்மானித்திருந்தனர். எனினும், கங்கொடவில நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட தீர்மானத்தை அடுத்து குறித்த போராட்டம் விஹாரமஹாதேவி பூங்காவிற்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, புதிய தலைவருடன் உங்களை சந்திப்பதாகத் தெரிவித்து மக்களை காத்திருக்குமாறு கோரி செயற்குழுக் கூட்டத்திற்கு சென்றுள்ளார்.
எனினும், செயற்குழுக் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்கவிற்கு வலுவான ஆதரவு காணப்பட்ட காரணத்தினால் தலைமைத்துவ மாற்றம் தொடர்பில் எவரும் பேசவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் சஜித் பிரேமதாசவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது கோட்பாடு வேறு நடைமுறை வேறு என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்கவின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்ய கட்சித் தலைமை தீர்மானித்ததாகவும், அதற்கு கரு ஜயசூரிய எதிர்ப்பை வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் பின்னர் ரோசி சேனாநாயக்கவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துவதற்கு கட்சி செயற்குழு தீர்மானித்துள்ளது.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜீவ சேனசிங்க மற்றும் புத்திக்க பத்திரண ஆகியோருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் விவகாரங்கள் தொடர்பில் தலைமைத்துவத்தின் அனுமதியின்றி கருத்துக்களை வெளியிடக் கூடாது என செயற்குழுவில் அறிவித்துள்ளது.
இதேவேளை, அரசாங்கத்திற்கும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் மறைமுக தொடர்பு இருப்பதாக சட்டத்தரணியும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
குவைத் நாட்டின் சிறைச்சாலைகளில் 114 இலங்கையர்கள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

குவைத் நாட்டின் சிறைச்சாலைகளில் 114 இலங்கையர்கள் தண்டனை அனுபவித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் 107 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வரும் இலங்கையர்களில் அதிகமானவர்கள் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என குவைத் நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் சீ.டி.எச்.எம் விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
தண்டனை அனுபவித்து வரும் பெண்களில் 90 வீதமானவர்கள் வீட்டுப் பணிப் பெண்களாக கடமையாற்றியவர்கள் எனவும், அநேகமானவர்கள் அறியாமை காரணமாக போதைப்பொருள் சார் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குவைத் நாட்டில் திட்டமிட்ட வகையில் சிலர் போதைப்பொருள் வர்த்தகர்கள் பழ வகைகள், உணவுப் பொருட்களை விநியோகம் செய்யும் போர்வையில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இதனை அறியாத இலங்கை வீட்டுப் பணிப் பெண்கள் போதைப்பொருட்களை எடுத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையிலிருந்து குவைத் செல்லும் பெண்களிடமும் இவ்வாறு போதைப் பொருள் அனுப்பி வைக்கப்படுகின்றது.
நண்பர்களுக்கு உறவினர்களுக்கு வழங்குமாறு விமானநிலையத்தில் கொடுக்கப்படும் எந்தப் பொதிகளையும் எடுத்துச் செல்ல வேண்டாம் என பணிப் பெண்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அறியாமை காரணமாக மேற்கொண்ட தவறுகளினால் பல பெண்கள் குவைத் நாட்டுச்  சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
நீதிமன்றம் தடை விதித்தமையினால் விகாரமகாதேவி பூங்காவிற்கு முன்பாக சஜித் அணியினர் ஆர்ப்பாட்டம்.

ஐ.தே.க. வின் தலைமையகமான சிறிகோத்தாவின் முன்னால் போராட்டம் நடத்துவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததையடுத்து சஜித் பிரேமதாஸ எம்.பி. குழுவினர் நடத்தவிருந்த சத்தியாக்கிரகப் போராட்டம் நேற்று கொழும்பு விஹாகரமாதேவி பூங்காவிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தினை மட்டும் நடாத்தினர். 
இந்த ஆர்ப்பாட்டம் நேற்று பிற்பகல் 3 .00 மணியளவில் நடைபெற்றது. இதில் எம்.பி.க்களான சஜித் பிரேமதாஸ, தயாசிறி ஜயசேகர, துனேஸ் கன்கந்த, தலதா அத்துக்கோறளை, ரோசி சேனநாயக்க, மத்தும பண்டார, புத்திக பத்திரன, சுஜீவ சேனசிங்க, ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு எதிராகவும், கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க விலகவேண்டுமெனக் கோரியும் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகோத்தாவிற்கு முன்னால் நேற்று பிற்பகல் 3 .00 மணிக்கு சத்தியாக்கிரகப் போராட்டத்தினை மேற்கொள்வதற்கு சஜித் பிரேமதாஸ எம்.பி. தலைமையிலான அணியினர் திட்டமிட்டிருந்தனர்.
இதனையடுத்து ஸ்ரீகோத்தாவிற்கு முன்பாக சட்டவிரோதமாக கூட்டம் நடத்தவோ, ஊர்வலம் நடத்தவோ போராட்டம் மேற்கொள்ளவோ, தடை விதிக்குமாறு கங்கொடவில நீதிமன்றத்தில் பொலிஸார் நேற்று காலை மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனையடுத்து இதற்கான தடை உத்தரவினை கங்கொடவில நீதிமன்றம் விதித்திருந்தது.
இதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பங்குகொள்ள வரும் எந்தவொரு கட்சி உறுப்பினர்களையும் எவரும் தடுக்கக்கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனையடுத்தே சஜித் எம்.பி. தலைமையிலான குழுவினர் தமது சத்தியாக்கிரகப் போராட்டத்தை கைவிட்டு கொழும்பு விகாரமாதேவி பூங்காவிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தினை நடத்தியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க விலகும் வரை சத்தியாக்கிரகப் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று அறிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன் கரு ஜெயசூரியவிற்கு சந்தர்ப்பத்தை வழங்கிவிட்டு வெளியேறுமாறும் வலியுறுத்தி தீப்பந்தங்களை எத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தையடுத்து பேரணியாக எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம் வரை சென்ற சஜித் அணியினர் அங்கு பேய் விரட்டும் செயற்பாட்டிலும் ஈடுபட்டனர். இதனையடுத்து வீதியின் நடுவில் அமர்ந்திருந்த அவர்கள் கட்சியை பாதுகாப்போம் எனவும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
18 ஆண்டுகளுக்கு பின் சோமாலியாவுக்கு வருகை தரும் இங்கிலாந்து அமைச்சர்கள்.
சோமாலியாவில் கடும் பஞ்சம், பட்டினி தலைவிரித்தாடும் இந்த நேரத்தில் 18 ஆண்டுகளுக்கு பின் முதன் முறையாக இங்கிலாந்து நாட்டு அமைச்சர் சோமாலியாவிற்கு வருகை தந்துள்ளார்.
ஆப்ரிக்க நாடான சோமாலியா, எத்தியோபியா ஆகிய நாடுகளில் சுமார் 12 மில்லியன் மக்கள் உணவுக்காக ஏங்கி வருவதாக ஐ.நா வெளியிட்டுள்ள ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து சோமாலியாவிற்கு 41.05 மில்லியன் டொலர் மதிப்பிலான உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களை வழங்க முடிவு செய்தது.
இதன்படி இங்கிலாந்து நாட்டின் சர்வதேச மேம்பாட்டு திட்டம் தொடர்பான அமைச்சர் ஆன்ட்ரூமிட்செல் நேற்று சோமாலியா சென்றடைந்தார். தலைநகர் மெகாதிசு நகரில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நேரில் சென்று பார்வையிட்டார்.
கடந்த 18 ஆண்டுகளாக இங்கிலாந்து நாட்டு தலைவர்கள் யாரும் சோமாலியா வருகை தந்ததில்லை. கடைசியாக கடந்த 1992ம் ஆண்டு "லின்டா பரோனஸ் சாக்கர்" என்ற பெண் அமைச்சர் சோமாலியா வருகை தந்தார்.
தற்போது சோமாலியா மக்களின் பசியை போக்க இங்கிலாந்து உதவ முன்வந்துள்ளதை தொடர்ந்து  அந்நாட்டு அமைச்சர் ஆன்ட்ரூமிட்செல் வருகை தந்துள்ளார்.
இது குறித்து ஆன்ட்ரூமிட்செல் கூறுகையில்,"சோமாலியா மக்களுக்கு சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மனிதாபிமான அடிப்படையில் மற்ற நாடுகளும் செய்து தர வேண்டும். தெற்கு சோமாலியாவில் தான் பட்டினியால் குழந்தைகள் அனாதையாக விடப்படுகின்றனர். சோமாலியா மக்களுக்கு இங்கிலாந்தின் ஆதரவு எப்போதும் உண்டு" என்றார்.
பொது இடங்களில் புகைபிடிக்க ரஷ்யாவில் தடை.
பொது இடங்களில் புகை பிடிக்கவும், விளம்பரங்களில் புகைபிடிப்பது போன்ற படங்களை அச்சிடுவதற்கும் தடை விதிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
உலகில் புகையிலைப் பொருட்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலில் ரஷ்யா முதலில் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் 4 கோடிக்கும் அதிகமானோர் புகைபிடிக்கின்றனர்.
ரஷ்ய குடிமகன் ஒருவர் தினசரி 17 சிகரெட்டுகளை புகைக்கிறார். இதனால் புகையிலைப் பொருட்கள் தொடர்பான நோய்களில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
இதையடுத்து பொது இடங்களில் புகைபிடிக்கவும், புகையிலைப் பொருட்களை பயன்படுத்தவும் தடை விதிக்க ரஷ்ய அரசு முடிவு செய்தது.
அதோடு புகையிலைப் பொருட்கள் தொடர்பான விளம்பரங்களில் கூட சிகரெட் பிடிக்கும் காட்சிகளுக்கு தடை விதிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
ரஷ்ய எம்.பி.க்கள் இந்தத் தடைகளுக்கு அமோக ஆதரவளித்துள்ளனர். அதனால்,"2013ம் ஆண்டிற்குள் நாட்டில் சிகரெட்டே இல்லாமல் ஆக்கிவிட வேண்டும்" என அரசு கெஜட் பத்திரிகை தெரிவித்துள்ளது.
போஸ்னியா இனப்படுகொலை வழக்கில் மிலாடிக்கிடம் விசாரணை ஆரம்பம்.
போஸ்னியாவின் பயங்கர செர்ப் இன ஜெனரல் ரால்கோ மிலாடிக் மீது 2 போர் குற்ற விசாரணைகள் நடைபெற உள்ளன.
அவர் போஸ்னியா முஸ்லிம்களையும், குரோட் இனத்தவர்களையும் அழிக்க முயன்றார் என்ற பயங்கர குற்றச்சாட்டு உள்ளது.
அவரிடம் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச கிரிமினல் தீர்வாயம் விசாரணை மேற்கொள்கிறது. 1995ம் ஆண்டு போஸ்னியாவில் உள்ள ஸ்ரெப்னிகாவில் நடந்த அவரது முதல் குற்ற நிகழ்வுகள் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
அதையடுத்து போஸ்னியா தலைநகரிலும் 1992ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டு வரை தீவிரவாதத்தை பரப்பியது தொடர்பான விசாரணை நடைபெறுகிறது.
இந்த இரண்டு வழக்குகளிலும் மிலாடிக் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு உள்ளது. மனித இனத்திற்கு எதிரான வன்முறைகளை மேற்கொண்ட அவர் மீதான குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்படும்.
69 வயது மிலாடிக் 15 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். அவர் மே 26ம் திகதி கைது செய்யப்பட்ட போது உடல் நலக்குறைவுடன் உள்ளதாக தெரிவித்தார்.
1990ம் ஆண்டுகளில் யுகோசுலாவியா உடைந்த போது மிலாடிக் போஸ்னியா செர்ப் படைகளுக்கு தலைமை வகித்து தாக்குதல் நடத்தினார். அப்போது 1992-95ம் ஆண்டுகளில் இரண்டு லட்சம் முஸ்லிம்கள் மற்றும் குரோட் இனத்தவர்கள் கொல்லப்பட்டனர்.
இரண்டாயிரம் ஆயிரம் அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து: இருவர் மரணம்.
பிரிட்டனின் ஐஸ்லே ஆப் வெயிட் தீவில் 2 ஆயிரம் அடி பள்ளத்தில் இருந்து விழுந்த கார் நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் மரணம் அடைந்தனர்.
தெற்கு கடலோரத்தில் 6 கிலோ மீற்றர் தொலைவில் இந்த சுற்றுலா தீவு அமைந்துள்ளது. இங்கிலீஷ் கால்வாய் பகுதியில் அமைந்துள்ள இந்த தீவுக்கு சென்ற போது விபத்தில் சிக்கியவர்கள் மரணம் அடைந்தனர்.
நேற்று இரவு 8 மணி அளவில் இந்த துயரம் ஏற்பட்டது. சாண்ட் டவுன் அருகே நடந்த இந்த விபத்தில் நீலநிறக்கார் மிக மோசமாக நொறுங்கியது. பள்ளத்தில் மிக மோசமான நிலையில் இருந்த காரில் இருந்து இருவரது உடல்களும் மீட்கப்பட்டன என்று ஹாம்ஷயர் பொலிசார் தெரிவித்தனர்.
கடற்கரை ஓரம் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் மீட்பு சேவையை அழைத்தனர். அப்போது விபத்தில் சிக்கியவர்கள் இறந்த விவரம் தெரியவந்தது.
சிரியாவில் மக்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது: துருக்கி குற்றச்சாட்டு.
சிரியாவின் துறைமுக நகரான லடாகியா மற்றும் டைர் அல் ஜோர் நகரங்களில் இருந்து சிரிய கவச வாகனங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆனால் டைர் அல் ஜோரில் சிரிய ராணுவம் தொடர்ந்து மக்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக துருக்கி குற்றம்சாட்டியுள்ளது.
சிரியாவின் துறைமுக நகரான லடாகியா மற்றும் துருக்கி எல்லையை ஒட்டியுள்ள டைர் அல் ஜோர் நகரங்களில் கடந்த ஐந்து நாட்களாக சிரிய ராணுவம் கவச வாகனங்கள் மூலம் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வந்தது.
சர்வதேச நெருக்கடி மற்றும் துருக்கியின் எச்சரிக்கையால் நேற்று அந்நகரங்களில் இருந்து கவச வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக சிரிய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
அதோடு சிரிய அரசு தொலைக்காட்சியில் கவச வாகனங்கள் வெளியேறும் காட்சிகளும் ஒளிபரப்பாயின. ஆனால் இதுகுறித்த  நேற்று துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் பேசிய அந்நாட்டு அகமது டவுடொக்லு,"டைர் அல் ஜோரில் இன்னும் சிரிய ராணுவம் தங்கி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உடனடியாக அவற்றையும் சிரியா வாபஸ் பெற வேண்டும்" என எச்சரித்தார்.
டைர் அல் ஜோர், லடாகியா நகரங்களில் இன்னும் சிரிய ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக நேரில் கண்ட மக்கள் பேட்டியளித்துள்ளனர். அதேபோல் இத்லிப் மாகாணத்தின் ஜபல் அல் ஜாவியா, டமாஸ்கசின் புறநகர் மாவட்டங்களிலும் நேற்று சிரிய ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தியது. 


கோல்சனை நியமனம் செய்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள்: பிரதமர் கமரூன்.
பிரிட்டனில் பிரபலங்களின் தொலைபேசி ரகசிய தகவல்களை திருடி நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்தரிக்கை செய்திகளை வெளியிட்டது.
இந்த பத்தரிக்கையில் பணியாற்றிய ஆண்டி கோல்சனை தனது ஆலோசகராக நியமனம் செய்ததற்கு பிரிட்டன் பிரதமர் மீண்டும் மன்னிப்பு கோரினார்.
தொலைபேசி தகவல் திருட்டு குறித்து செவ்வாய்க்கிழமை புதிய பிரச்சனை ஏற்பட்ட நிலையில் பிரதமர் மீண்டும் மன்னிப்பு கேட்டார். பொதுச்சபையில் மன்னிப்பு கேட்ட பிரதமர் செஷயர் வந்த இடத்தில் தனது தவறுக்கு மன்னிப்புக்கூறினார்.
கோல்சன் பதவியில் இருந்த காலத்தில் அவர் மீது எந்த வித புகாரும் அதிகாரிகள் தரப்பில் இருந்து வரவில்லை. அவர் தற்போது அரசுடன் இணைந்து பணியாற்றவில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார்.
தற்போதைய விவரங்கள் முன்பே எனக்கு தெரிந்து இருந்தால் கோல்சனை தேர்வு செய்து இருக்கமாட்டேன் என அவர் தெரிவித்ததார்.
தொழிலாளர் கட்சி எம்.பி கிறிஸ் பிரையண்ட் கூறுகையில்,"நியூஸ் கார்ப்பரேஷனின் பங்குதாரராக நான் இருந்திருந்தால் அதன் அதிபர் முர்டோக் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இருப்பேன்" என்றார்.
நியூஸ் இண்டர்நேஷனல் நிர்வாகம் தற்போதும் முர்டோக் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என அவர் தெரிவித்தார்.
நவீன கமெராக்களுடன் கூடிய செயற்கைகோளை செலுத்த பாகிஸ்தான் திட்டம்.
இவ்வாண்டு இறுதிக்குள் விண்ணிலிருந்து நுணுக்கமாகப் படம்பிடிக்கும் கமெரா செயற்கைக்கோள் ஒன்றைச் செலுத்த பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது என்று அந்நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் செயலர் தெரிவித்தார். 
சீன ராக்கெட் உதவியுடன் பாகிஸ்தான் ஆகஸ்ட் 11ம் திகதி தகவல் செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியது. தொலைபேசி, தொலைக்காட்சி ஒளிபரப்பு, இணையதள, தொலைமருத்துவ வசதிகளைப் பெருக்க இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும்.
இது வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து விண்ணிலிருந்து மிக நுணுக்கமாக பூமியைப் படம்பிடிக்கும் நவீன கமெரா செயற்கைக்கோளை பாகிஸ்தான் விண்ணில் செலுத்துகிறது.
அடுத்த 3 ஆண்டுகளில் மேலும் பல செயற்கைக்கோள்களைச் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானின் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு அவற்றின் மூலம் வெளிநாடுகளுக்குத் தகவல் சேகரிக்கும் சேவையை அளிக்க முடியும் என்று நிறுவனத்தின் செயலர் அர்ஷத் சிராஜ் கூறினார்.
செயற்கைக்கோள் தொழில்நுட்பம் தனிப்பெரும் தொழிலாக விரிந்துவிட்டது. படிப்படியாக பாகிஸ்தான் தனது செயற்கைக்கோள் திறனை அதிகரிக்கவும், வருவாய் ஈட்டும் விதமாக அதை விரிவாக்குவதே விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் நோக்கம் என்று அவர் கூறினார்.
பாகிஸ்தான் செலுத்தத் திட்டமிட்டுள்ள கமெரா செயற்கைக்கோள் மூலம் பெறப்படும் தகவல்கள் விவசாயத் துறையின் வானிலை ஆய்வுகளுக்குப் பயன்படுவதோடு ராணுவத்தின் உளவுப் பணிகளுக்கும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் ராணுவ தாக்குதல் நிறுத்தப்பட்டு விட்டது: ஜனாதிபதி அசாத்.
சிரியாவில் ராணுவ தாக்குதல் நிறுத்தப்பட்டு விட்டது என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூனிடம் சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத் தெரிவித்தார்.
பான் கீ மூன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் மீது ராணுவ தாக்குதல் மேற்கொள்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கூறினார். அப்போது பதிலளித்த அசாத் போராட்டக்காரர்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டு விட்டது என தெரிவித்தார்.
எதிர்ப்பு போராட்டம் நடத்துபவர்கள் மீது ராணுவ தாக்குதலை நிறுத்த அசாத்திற்கு சர்வதேச நாடுகள் நெருக்கடி அளித்து வருகின்றன. கடந்த மார்ச் மாதம் முதல் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரியா ராணுவத்தின் சமீபத்திய தாக்குதலாக லடாகியா நகரில் தாக்குதல் நடந்தது. இதில் ஏரளாமானவர்கள் இறந்தனர். அங்கு பாலஸ்தீன அகதிகள் முகாமில் இருந்த 5 ஆயிரம் பேர் உயிர் பிழைக்க முகாமை விட்டு ஒடினர்.
சிரியாவில் மனித உரிமை மீறப்படுகிறது. அங்கு பொதுமக்களுக்கு எதிராக கடுமையாக ராணுவம் பயன்படுத்தப்படுகிறது என ஐக்கிய நாடுகள் சபை அறிக்கையிலும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மக்களை கைது செய்யும் நடவடிக்கையையும் அரசு கைவிட வேண்டும் என பான் கீ மூன் கேட்டுக் கொண்டுள்ளார்.
லண்டனில் வன்முறை பாதித்த இடங்களை வேல்ஸ் இளவரசர் பார்வையிட்டார்.
லண்டனில் சமீபத்தில் வன்முறை நடந்ந இடங்களை வேல்ஸ் இளவரசரும் கார்னும், இளவரசியும் பார்வையிட்டனர். அவர்கள் முதலில் டாட்டன்ஹாம் பசுமை ஓய்வு மையத்திற்கு வந்தனர்.
வன்முறை சம்பவத்திற்கு அந்த இடம் உதவி மையாக மாற்றப்பட்டிருந்தது. வன்முறையில் பாதித்த 5 பகுதிகளை சேர்ந்த இளைஞர்களுக்கு இரு மடங்கு ஆதரவு அளிக்கப்படும் என இளவரசர் வேல்ஸ் அறிக்கட்டளை அறிவித்து இருந்தது.
அந்த அறிவிப்பை தொடர்ந்து அரச குடும்பத்தினர் வன்முறை பாதித்த பகுதிகளை பார்வையிட வந்தனர். ஆப்ரிக்க வம்சத்தை சேர்ந்த இளைஞர் மார்க் டுகன் பொலிசார் துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்தார்.
அதனை தொடர்ந்து மான்செஸ்டர், பிர்மிங்காம், ஹாக்னே, டாட்டன்ஹாம் மற்றும் குரோயடன் பகுதிகள் பாதிக்கப்பட்டன. கடந்த 1976ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசரால் வேல்ஸ் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது.
கடந்த 35 ஆண்டுகளாக இந்த அறக்கட்டளை வாய்ப்பு வசதி இல்லாத 6 லட்சம் இளைஞர்களுக்கு உதவி அளித்துள்ளது. டாட்டன்ஹாம் ஓய்வு மையம் கலவரத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு உதவிகளை அளித்து வருகிறது. உணவுகள், உடைகள், படுக்கை மற்றும் வாழ்க்கை ஆலோசனைகள் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.
ஜேர்மனியில் வாழும் அயல்நாட்டு மக்களும் வாக்களிக்க உரிமையளிக்க வேண்டும்: ஆர்வலர்கள் பிரசாரம்.
ஜேர்மனியில் வசிக்கும் அயல்நாட்டு மக்களும் தேர்தலில் வாக்களிக்க உரிமை அளிக்க வேண்டும் என வாக்களிப்புக்கு ஆதரவான ஆர்வலர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.
தலைநகர் பெர்லினில் ஜேர்மன் கடவுச்சீட்டு இல்லாத அயல் வாழ் மக்களும் வாக்களிக்க உரிமை அளிக்க வேண்டும் என குறிப்பிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
தற்போதைய நிலவரப்படி ஜேர்மனியில் உள்ள ஐரோப்பிய நாடுகளின் மக்கள் முனிசிபால் தேர்தலில் மட்டுமே வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளனர். அவர்கள் மாநில தேர்தலிலோ அல்லது தேசிய தேர்தலிலோ வாக்களிக்க முடியாத நிலை உள்ளது.
தலைநகர் பெர்லினில் தற்போது 4 லட்சத்து 60 ஆயிரம் அயல்நாடுகளின் நபர்கள் வாக்களிக்கும் வயதில் உள்ளனர். அவர்கள் நகரத்தை நிர்வகிக்கும் அரசை தீர்மானிக்க வாக்களிக்க முடியாது.
ஜேர்மனியில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் வாக்களிப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம் என ஜெடே ஸ்டேமே 2011 அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டியன் மெடஸ் கூறுகிறார்.
வருகிற செப்டம்பர் மாதம் பெர்லினில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் நிழல் வாக்குப்பதிவை இந்த அமைப்பினர் நடத்துகிறார்கள். இந்த நிழல் தேர்தலில் அயல்நாட்டை சேர்ந்த மக்கள் எத்தனை பேர் ஆர்வமாக உள்ளனர் என்பது பார்க்கப்படுகிறது.
பஞ்சத்தில் பரிதவிக்கும் ஆப்ரிக்காவுக்கு கனடா மக்கள் 2 கோடி டொலர் நன்கொடை.
கிழக்கு ஆப்ரிக்காவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவில் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இந்த வறட்சியில் அதிகம் பாதித்த நாடாக சோமாலியா உள்ளது.
அந்த நாட்டு மக்களும் ஒருவேளை சாப்பாடு கிடைத்தால் தான் உயிர் பிழைப்பார்கள் என்ற பரிதாப நிலை உள்ளது. உலக நாடுகள் ஆப்ரிக்க மக்களின் துயரத்தை போக்க உதவிகளை வழங்கி வருகின்றன.
கனடா மக்கள் பங்களிப்பாக 2 கோடி டொலரை நன்கொடையை அளித்துள்ளனர். இதனை நேற்று நாடாளுமன்ற செயலாளர் லோயிஸ் பிரௌன் கூறினார். இந்த நன்கொடை பணிகள் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பசி, பட்டினியால் வாடும் மக்களுக்கு எப்போதும் உதவிக்கரம் நீட்டுபவர்கள் கனடியர்கள் என்ற பெருமை உண்டு. ஆப்ரிக்காவின் வரலாற்றில் கனடா பெருமளவு உதவி செய்துள்ளது என்றும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார்.
வறுமையில் வாடும் மக்களுக்கு இதுவரை 85 லட்சம் டொலர் நிவாரண உதவிகள் கனடா பெடரல் அரசு தரப்பில் அளிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் ஆப்ரிக்க மக்களின் துயரத்தை நீக்க 5 கோடி டொலர் நிதி உதவி அளிப்பதாக கனடா அறிவித்து தற்போது படிப்படியாக உதவிகளை வழங்கி வருகிறது.
அமெரிக்காவின் கடன் குறியீடு ஏஏஏ நிலையில் தான் உள்ளது: பிட்ச் நிறுவனம்.
அமெரிக்காவின் உயர்தர கடன் மதிப்பீட்டுக் குறியீடான ஏஏஏயை பிட்ச் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடன் மதிப்பீட்டு நிறுவனமான "ஸ்டாண்டர்டு அண்டு புவர்" சமீபத்தில் அமெரிக்காவின் உயர்தர கடன் மதிப்பீட்டுக் குறியீட்டை ஏஏஏயில் இருந்து ஏஏ+ ஆகக் குறைத்தது. இதையடுத்து பிட்ச், மூடிஸ் போன்ற நிறுவனங்களும் அமெரிக்காவின் கடன் குறியீட்டை குறைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் பிட்ச் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவின் கடன் குறியீடு ஏஏஏ என்ற நிலையிலேயே தொடர்கிறது. அந்நாட்டின் கடன் திருப்பி அளிக்கும் திறன் குறையவில்லை.
உலக நிதித் துறையில் அதன் முக்கிய பங்களிப்பும் தொடர்கிறது. அதோடு அதன் வளமான பொருளாதாரம் தான் அதன் வருமானத்தின் அடிப்படையாக உள்ளது.
மேலும் நிதிக் கொள்கை, அன்னியச் செலாவணி இவற்றில் உள்ள நெகிழ்வுத் தன்மை எந்த அதிர்ச்சி வந்தாலும் தாங்கிப்பிடிக்கும் வகையில் உள்ளது. அதேநேரம் நிதிப் பற்றாக்குறையை குறைக்க முடியாமல் போய் மேலும் கடன் வாங்கும் நிலைக்கு அமெரிக்கா வருமானால் அப்போது அதன் கடன் குறியீட்டைக் குறைக்க வேண்டி வரும்.
அமெரிக்க உளவு விமானத்தை ஆராயவில்லை: சீனா மறுப்பு.
பாகிஸ்தானின் அபோதாபாத்தில் உள்ள ஒசாமா வீட்டில் விழுந்த அமெரிக்க உளவு விமானத்தை ஆராய்வதற்கு சீன அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் அனுமதி அளித்ததாக வெளியான செய்தியை சீனா மறுத்துள்ளது.
கடந்த 14ம் திகதி சர்வதேச பொருளாதாரப் பத்திரிகையான "பினான்சியல் டைம்ஸ்" உளவு விமானத்தை ஆராய சீன அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் அனுமதி அளித்ததாக செய்தி வெளியிட்டது.
நேற்று முன்தினம் பாகிஸ்தான் இச்செய்தியை மறுத்து அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் நேற்று சீன ராணுவ அமைச்சகம் வெளியிட்ட ஒற்றை வரி அறிக்கையில்,"அச்செய்தி ஆதாரமில்லாதது, முட்டாள் தனமானது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் அதிபர்களின் கூட்டு முயற்சி தோல்வி: ஐரோப்பிய பங்குசந்தை வீழ்ச்சி.
யூரோ நாணயத்தை பயன்படுத்தும் நாடுகளின் கடன் சுமை குறித்து நேற்று முன்தினம் ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் அதிபர்கள் அவசர ஆலோசனை நடத்தினர்.
இருவரும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் எதிர்பார்த்த அம்சங்கள் எதுவும் இல்லாததால் நேற்று ஐரோப்பிய பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டன.
யூரோ நாணயத்தை பயன்படுத்தும் 17 நாடுகளின் கூட்டமைப்பில் வலுவான பொருளாதார நாடாக உள்ள ஜேர்மனி முடிவடைந்த காலாண்டில் எதிர்பார்த்த 0.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டவில்லை. மாறாக 0.1 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்ததாக நேற்று முன்தினம் அந்நாட்டு புள்ளியியல் துறை அறிவித்தது.
அதேபோல் பிரான்ஸ் தனது கடன் மதிப்பீட்டுக் குறியீடான ஏஏஏயை இழந்து விடும் என தகவல்கள் பரவின. இச்சூழலில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள அதிபர் மாளிகையில் நேற்று முன்தினம் ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல்லும், பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியும் இரண்டு மணி நேர அவசர ஆலோசனை நடத்தினர்.
இத்தாலி நிதியமைச்சர் கிலியோ ட்ரமொன்டி, பிரபல தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் இருவரும் யூரோ பயன்படுத்தும் 17 நாடுகளுக்கும் பொதுவான ஒரு கடன் பத்திரத்தை உருவாக்குவதன் மூலம் கடன் சுமையில் திணறும் நாடுகள் அதிலிருந்து மீள முடியும் என ஆலோசனை கூறினர். அவர்களின் ஆலோசனை குறித்து இரு நாட்டு அதிபர்களும் கலந்தாலோசிப்பர் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஆலோசனை முடிந்த பின் மெர்க்கெல்லும், சர்கோசியும் இணைந்து விடுத்த அறிக்கையில் 17 நாடுகளுக்கிடையிலான ஒருங்கிணைந்த பொருளாதார நிர்வாகம் உருவானால் தான் கடன் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்று தெரிவித்தனர்.
அதோடு பொதுவான கடன் பத்திரம் தற்போதைக்கு சாத்தியமில்லை என்று கைவிரித்து விட்டனர். இவர்களின் ஆலோசனையில் எதிர்பார்த்த முடிவுகள் வெளிவராததால் நேற்று ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் சரிவு காணப்பட்டது. நாடுகளுக்கிடையிலான பணப் பரிமாற்றத்திற்கு வரி விதிக்க வேண்டும் என்ற பரிந்துரையால் வங்கிகளின் பங்குகளும் சரிந்தன.
ஜேர்மனி, பிரான்ஸ் அதிபர்கள் இருவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகள்:
1. யூரோ நாடுகளுக்கிடையிலான ஒருங்கிணைந்த பொருளாதார நிர்வாகம் மற்றும் கொள்கைகள் தேவை.
2. ஐரோப்பிய கவுன்சில் தலைவர் தலைமையில் ஆண்டுக்கு இருமுறை யூரோ நாடுகள் மாநாடு நடக்க வேண்டும்.
3. அடுத்தாண்டின் மத்தியில் இருந்து 17 நாடுகளும் தங்கள் நிதிப் பற்றாக்குறையை குறைக்கும் விதத்தில் சமச்சீர் பட்ஜெட்டுக்கான அரசியல் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
4. நாடுகளுக்கிடையிலான பணப் பரிமாற்றத்திற்கு வரி விதிக்கலாம். அந்த வரிப்பணத்தை கடன் சுமையில் தவிக்கும் நாடுகளுக்கு தவணையாக அளிக்கலாம்.
5. தற்போதைய நிலையில் 17 நாடுகளுக்குமான பொது கடன் பத்திரத்தை உருவாக்க இயலாது. ஒருங்கிணைந்த பொருளாதார நடவடிக்கையின் இறுதியிலேயே அந்த நடவடிக்கையை எடுக்க முடியும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF