Monday, August 22, 2011

இன்றைய செய்திகள்.

இராணுவத்தினர் ஊருக்குள் வருவதை நாம் விரும்பவில்லை! கல்முனை பிரதி பொலிஸ் அத்தியட்சகர்.

சிவில் சேவைக்கு இராணுவத்தினரின் பங்களிப்பு அவசியமில்லை. அவர்கள் அதில் தலையிடத் தேவையில்லை. இராணுவத்தினர் ஊருக்குள் வருவதை நாங்கள் விரும்பவுமில்லை. இவ்வாறு கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மெண்டிஸ் தெரிவித்தார்.
மர்ம மனிதன் பிரச்சினை தொடர்பாக துறைநீலாவணைப் பிரதேச மக்களுடன் கல்முனை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற கலந்துரையாலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கலந்துரையாடலின் போது பிரதேச மக்களால் இராணுவத்தினருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. மர்ம மனிதன் தோன்றும் போது அல்லது அவனைப் பிடிக்கும் போது சொல்லி வைத்தாற் போல் இராணுவத்தினர் வருகின்றனர்.
இதன் மர்மம் என்ன? வேறு சில இடங்களில் இராணுவத்தினரே மர்ம மனிதனை பாதுகாப்பவர்களாக இருக்கின்றனர். அவர்களில் எமக்கு நம்பிக்கையில்லையென்று தெரிவித்தனர்.
இதற்குப் பதிலளித்து உரையாற்றிய மென்டிஸ், இராணுவத்தினர் ஊருக்குள் வந்தமைக்கு உங்களில் சிலர் தான் காரணம். இனிமேல் இராணுவத்தினர் வராமல் பார்த்துக் கொள்கின்றோம். சிவில் நடவடிக்கைக்கு அவர்கள் பாத்திரமானவர்கள் அல்லர் என்றார்.
2005ம் ஆண்டில் புலிகளுக்கு பணம் வழங்கியது யார்?!- சரத் பொன்சேகா கேள்வி.

2005ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியது யார்? என வெலிக்கடை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார். 
தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள உபாதைக்கு உடற்கூற்று சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு சென்றிருந்த போது அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 200 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் வாக்களிப்பதனை தடுத்து நிறுத்தும் நோக்கில் புலிகளுக்கு இந்தப் பணம் வழங்கப்பட்டது. இந்த பணத்தைப் பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் நவீன ரக படகுகளை கொள்வனவு செய்தனர்.
இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியது யார்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுனாமி நிவாரண நிதியில் 300 மில்லியன் ரூபா களவாடி அக்காவின் கணக்கில் வைப்பிலிட்டவர் யார் என மக்கள் விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்கள் முறியடிக்கப்பட வேண்டும்!- ஜனாதிபதி.

நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலிய வாழ் இலங்கையர்களை அலரி மாளிகையில் சந்தித்த போது ஜனாதிபதி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படையற்ற பிரச்சாரங்களுக்கு பதிலளிக்கக் கூடிய வகையிலான பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டும்.
இந்த நடவடிக்கைகளின் போது வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு முக்கிய பங்கினை ஆற்றக் கூடிய வல்லமையும், பொறுப்பும் காணப்படுகின்றது.
இலங்கை தொடர்பில் சர்வதேச ரீதியில் நிலவி வரும் பாதகமான நிலைப்பாட்டை மாற்றியமைக்கும் நோக்கில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாழைச்சேனை, செங்கலடி பிரதேசங்களில் மர்ம மனிதன் பெண்கள் மீது தாக்குதல்! பதற்றம் நிலவுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாழைச்சேனை பகுதியில் துவிச்சக்கரவண்டியில் சென்ற பெண்மீது மர்ம மனிதன் தாக்குதல் நடாத்திய சம்பவம் நேற்று பிற்பகல் வேளையில் நடைபெற்றுள்ளது.
இச் சம்பவம் குறித்து  தெரியவருவதாவது:
வாழைச்சேனை, பேச்சியம்மன் கோயில் வீதியில் வசிக்கும் திருமதி. எஸ்.மோகன் அவர்கள் நேற்று பிற்பகல் 1.20 மணியளவில் தனது கணவனுக்கு மதிய உணவு கொண்டுசென்ற வேளை துவிச்சக்கரவண்டியில் வந்த ஒருவர் திடீரென இவரது கூந்தலைப் பிடித்து முகத்தில் அடித்ததுடன் நெஞ்சுப் பகுதியில் தமது கையில் இருந்த ஒரு கூரான கத்தியால் கீறியுள்ளார்.
இவர் ஓலமிட அவர் அங்கிருந்து தம்பிவிட்டார். இதனால் வாழைச்சேனை பகுதி சிறு பதற்றநிலையில் உள்ளது. வாழைச்சேனை வைத்தியசாலைக்கு சென்ற இப் பெண்மணி வைத்தியசாலையில் தங்குவதற்கு மறுத்துள்ளார்.
இதற்கு காரணம் இவ்வாறு பாதிக்கப்பட்டு வைத்தியசாலைக்கு செல்பவர்களை வைத்தியர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவராக பதிவதே காரணமாகும்.
இன்று ஞாயிற்றுக்கிழமை தாக்குதலுக்குள்ளான பெண்ணை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அவரது வீட்டுக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.
செங்கலடியிலும் மர்ம மனிதன் பெண் மீது தாக்குதல்
இதேவேளை ஈன்று பிற்பகல் வேளையில் செங்கலடி பதுளை வீதியில் செல்வி. எஸ். றிசாந்தினி என்னும் பெண் வீட்டில் இருந்த வேளை திடீரென பிரவேசித்த மர்ம மனிதன் இப்பிள்ளையை தாக்கி இவரது கையிலும், நெஞ்சிலும் தனது விரலுடன் இணைக்கப்பட்ட கூரான ஆயுதத்தால் கீறியுள்ளார்.
இவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா இருவரும் வைத்தியசாலைக்கு சென்று பாதிக்கப்பட்ட பிள்ளையை பார்வையிட்டதுடன், மேலதிக நடவடிக்கையையும் மேற்கொண்டனர்.
இவ்வேளை செங்கலடி பகுதியில் மர்ம மனிதன் என ஒருவர் பொது மக்களால் கைது செய்யப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டவேளை அங்கு மோட்டார் வாகனத்தில் வருகை தந்த இராணுவத்தினர் பொது மக்களை பலவாறு தாக்கியுள்ளனர்.
இந்நிலையை கேள்வியுற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா ஆகியோர் மாவட்ட இராணுவ பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு மக்களைத் தாக்கும் நடவடிக்கையை உடன் நிறுத்தியுள்ளனர்.
புத்தளத்தில் பொலிஸார் பொதுமக்கள் மோதல்!- பொலிஸ் உத்தியோகத்தர் பலி! 5 பொதுமக்கள் காயம்.

புத்தளத்தில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் காரணமாக பொலிஸாருக்கும், மக்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாகவும்,  அதன் காரணமாக அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மர்ம மனிதர்களின் நடமாட்டம் காரணமாக பொலிஸாருக்கும், மக்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்ற போது மர்ம மனிதர் என்ற சந்தேகத்தின் பேரில் பிரதேச மக்கள் நடத்திய தாக்குதலில் பொலிஸ்உத்தியோகத்தர் கொல்லப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் நடத்திய தாக்குதல்களில் கிராம மக்கள் சிலர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத நபர்கள் பிரதேச மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.
புத்தளத்தில் பதற்றம்! பொலிஸ்காரர் பலி   (இரண்டாம் இணைப்பு)
புத்தளத்தில் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலையடுத்து பிரதேசத்தில் பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
ஞாயிறு இரவு இடம்பெற்ற சம்பவங்களில் பொலிஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச்சூட்டில் ஐந்து பேர் காயப்பட்டிருப்பதாகவும் உள்ளூர் செய்தியாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
சம்பவங்களில் காயமடைந்த பெண்ணொருவரும் 13 வயது பிள்ளையொன்றும் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் கிறீஸ் பூதம் என்ற மர்ம மனிதர்களின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டதாக பரவிய பீதியே இந்த மோதலுக்கும் பதற்றத்துக்கும் காரணமாகியுள்ளது.
ரணிலுக்கு எதிராக பௌத்த பிக்குகள் உண்ணாவிரதப் போராட்டம்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பௌத்த பிக்குகள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
கொழும்பு கேம்பிரிட்ஜ் பிளேஸில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்திற்கு எதிரில் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சுமார் 200 பௌத்த பிக்குகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தரப்பினரால் இந்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்பதில்லை என சஜித் பிரேமதாச மற்றும் கரு ஜயசூரிய ஆகியோர் தீர்மானித்துள்ளதாக சஜித் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இறக்குமதியான பாகிஸ்தான் சீமேந்து தரமற்றது! தமது உற்பத்திதுறைக்கு பாதிப்பு என்கிறார் பாக். உயர்ஸ்தானிகர்.

தமது நாட்டு உற்பத்தி தொடர்பில் தெரிவிக்கப்பட்ட கருத்து உரிமை தொடர்பில் பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் இலங்கையின் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் விளக்கம் கோரியுள்ளார்.
இலங்கையில் சீமெந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து அண்மையில் பாகிஸ்தானில் இருந்து சீமேந்து இறக்குமதி செய்யப்பட்டது.
எனினும் இந்த சீமெந்து உலக தரத்திற்கு அமையவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து அனைத்து இறக்குமதி செய்யப்பட்ட சீமெந்து பொதிகளையும் பரிசோதனை செய்த பின்னரே சந்தைக்கு விற்பனைக்கு அனுப்ப வேண்டும் என்று நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்தது.
இந்தநிலையில் குறித்த கருத்து தமது நாட்டின் சீமெந்து உற்பத்தி துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் சீமா இலாஹி பாலோக் தெரிவித்தார்.
தமது நாட்டு உற்பத்தியை விமர்சிக்க  இலங்கையின் நுகர்வோர் அதிகாரசபைக்கு இருக்கும் உரிமை குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பின்லேடனின் குடும்பத்திற்கு பாகிஸ்தான் உரிய நஷ்ட ஈடு தரவேண்டும்: ஒசாமாவின் மைத்துனர்.
கொல்லப்பட்ட அல்கொய்தா தலைவர் பின்லேடனின் குடும்பத்தை சீரழித்ததற்காக பாகிஸ்தான் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று பின்லேடனின் மைத்துனர் தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்திய அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த மே மாதம் 2ம் திகதி அபோதாபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
அப்போது அவருக்கு பாதுகாப்பு வளையமாக இருந்த அவரது மனைவி அமால் அல் சதா(28) மற்றும் 5 குழந்தைகளை பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்தது.
இந்த 6 பேரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அமால் அல் சதாவின் சகோதரர் சகாரியா அல் சதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: எனது சகோதரி பின்லேடனின் மனைவியாக இருந்தததைத் தவிர வேறு எந்த குற்றமும் செய்யவில்லை. சராசரி பெண்களைப் போன்று தான் கணவனுடன் தங்கி குழந்தைகளை கவனித்துக் கொண்டிருந்தார்.
பின்லேடனைக் கொல்ல நடந்த துப்பாக்கிச் சூட்டில் எனது சகோதரியின் காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. அவரை சந்திக்க குடும்பத்தார் யாரும் அனுமதிக்கப்படாததால் அவர் காலில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள மறுக்கிறார்.
எனவே எந்தக் குற்றமும் செய்யாத எனது சகோதரியை பாகிஸ்தான் விடுதலை செய்ய வேண்டும். அப்பாவியான அவரை கைது செய்ததற்காக பாகிஸ்தானை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவோம். அவரையும், அவரது குடும்பத்தையும் சீரழித்தற்காக நஷ்டஈடு கேட்போம் என்றார்.
அமால் அல் சதா பின்லேடனின் 5வது மனைவி ஆவார். அவர் ஏமனைச் சேர்ந்தவர். அவருக்கு 15 வயதில் திருமணம் நடந்தது. தற்போது அவருக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.
சாகச நிகழ்ச்சியின் போது விமானம் விழுந்து விபத்து: விமானி பலி.
அமெரிக்காவில் மிஸ் சோரி மாகாணத்தில் உள்ள கன்சாஸ் நகரில் விமான சாகச நிகழ்ச்சி நடந்தது.
அப்போது விமானங்கள் விண்ணில் பறந்தும், குட்டி கரணம் அடித்தும் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.
அப்போது ஒரு விமானம் தலைகீழாக தரையில் விழுந்து நொறுங்கியது. எனவே அது கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விபத்தில் விமானி பிரயான் ஜென்சன் என்பவர் உடல் கருகி பலியானார். கன்சாஸ் விமான சாகச நிகழ்ச்சியில் இது போன்ற விபத்து நடந்ததில்லை. தற்போது தான் முதன் முறையாக நடந்துள்ளது.
ஈரானில் உளவு பார்த்த 2 அமெரிக்கர்களுக்கு 8 ஆண்டு சிறைத்தண்டனை.
ஈரானில் உளவு பார்த்த 2 அமெரிக்கர்களுக்கு 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் - ஈராக் எல்லை பகுதியில் கடந்த 2009ம் ஆண்டு சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த 3 பேரை ராணுவ வீரர்கள் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் அமெரிக்காவை சேர்ந்த ஷேன் பவுர், ஜோஷ் பேட்டல், சாரா ஷூர்டு என்பது தெரிய வந்தது. ஈராக் மலைப் பகுதிகளில் வசித்ததாகவும், தவறுதலாக ஈரான் எல்லைக்குள் வந்து விட்டதாகவும் 3 பேரும் தெரிவித்தனர். அதை ராணுவ வீரர்கள் ஏற்கவில்லை.
மூன்று பேரையும் கைது செய்து சட்டவிரோதமாக ஊடுருவ முயன்றது, உளவு பார்த்தது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் பொலிசார் வழக்குப் பதிவு செய்தனர். இவர்கள் மீதான வழக்கு 2 ஆண்டுகளாக நடந்து வந்தது.
கடந்த 2010 செப்டம்பர் மாதம் சாரா ஷூர்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். ஷேன் மற்றும் ஜோஷ் மீதான வழக்கை விசாரித்த ஈரான் உயர் நீதிமன்றம் இருவருக்கும் 8 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இவர்களை விடுவிக்க அமெரிக்க அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
தெற்கு பசிபிக் கடலில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி.
தெற்கு பசிபிக் கடலில் அவுஸ்திரேலியா அருகே வனாது என்ற நாடு உள்ளது. இது 83 தீவுகளை கொண்டது. சுமார் 2 ஆயிரம் கி.மீட்டர் பரப்பளவு உடையது.
இன்று அதிகாலை 3.55 மணியளவில் வனாது தலைநகர் போர்ட்-விலா நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதியிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின.
இதனால் தூங்கி கொண்டிருந்த மக்கள் பீதியும் அச்சமும் அடைந்தனர். தங்களது வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரம் கழித்து தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.
இந்த நிலையில் காலை 5.19 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து பல தடவை பூமி அதிர்ந்தது. இதனால் பயத்தில் உறைந்த மக்கள் விடிய விடிய ரோடுகளிலேயே தங்கி இருந்தனர்.
முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.1 ரிக்டர் அளவிலும், 2-வதாக உருவான நிலநடுக்கம் 7 ரிக்டர் அளவிலும் பதிவானதாக அமெரிக்க புவியியல் சர்வே மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் போர்ட்-விலாவை மையப்படுத்தி பூமிக்கு அடியில் 40 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வழக்கத்தைவிட கடலில் மிக உயரமான அலைகள் எழுந்தன. இதை தொடர்ந்து சுனாமி ஏற்படும் என மக்கள் பயந்தனர். ஆனால் பசிபிக் சுனாமி மையம் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை.
இந்த நிலநடுக்கம் போர்ட் விலாவிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் உணரப்பட்டது. இதனால் சில கட்டிடங்கள் இடிந்தன. பெரும்பாலான வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. மொத்தத்தில் சிறிய அளவு சேதம் மட்டுமே ஏற்பட்டதாகவும் உயிர் சேதம் எதுவும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பூகம்ப எச்சரிக்கை பகுதியில் வனாது நாடு உள்ளது. இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது உண்டு. கடந்த ஆண்டு டிசம்பர் 26ந் திகதி இங்கு 7.3 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. அப்போது சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. ஆனால் சேதம் எதுவும் இல்லை.
இஸ்ரேலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான எகிப்து மக்கள் போராட்டம்.
இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 எகிப்து பொலிசார் மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலால் எகிப்து மக்கள் இஸ்ரேல் மீது கடும் எரிச்சல் அடைந்தனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் எகிப்தில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பாக கூடி 2வது நாளாக இன்று போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களில் ஒருவர் தூதரக கட்டிடத்தின் மீது ஏறி இஸ்ரேல் தேசிய கொடியை அவிழ்த்து எறிந்தார்.
கடந்த வியாழக்கிழமை பாலஸ்தீன தீவிரவாதிகளை அழிப்பதாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 எகிப்து பொலிசார் எல்லை பகுதியில் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் வேதனை தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை முதல் பாலஸ்தீன தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது தொடர்ந்து 20 ராக்கெட்டுகளை வீசி உள்ளனர். இந்த தாக்குதல் பிரச்சனை குறித்து எகிப்து தலைநகர் கெய்ரோவை மையமாக கொண்ட அரபு லீக் இன்று முக்கிய ஆலோனை கூட்டம் நடத்துகிறது.
இஸ்ரேல் தூதரகத்தை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என எகிப்து மக்கள் போராடி வருகிறார்கள்.
தீங்கு தரும் எலிகளை ஒழித்துவிட்டோம்: கடாபி பெருமிதம்.
லிபியாவில் கர்னல் கடாபிக்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்த நிலையில் தலைநகர் திரிபோலியின் வீதிகளில் பயங்கர குண்டு வெடிப்புகளும், துப்பாக்கிச்சூடு சத்தமும் கேட்டன.
சில மாவட்டங்களில் துப்பாக்கிசூடு நடந்ததை நம்பமான தகவல்களும் உறுதிப்படுத்தின. போராட்டக்காரர்கள் நாட்டை அழிக்க துடிக்கிறார்கள், சேதம் விளைவிக்கும் எலிகளை நாங்கள் அழித்து விட்டோம் என கடாபி தெரிவித்தார்.
போராட்டக்காரர்கள் முன்னதாக சில்தான் நகரை கைப்பற்றினர். இந்த நகரம் திரிபோலிக்கு 160 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. அதே போன்று தலைநகருக்கு 30 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஜல்வயா நகரமும் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கடுமையான குண்டு வீச்சு தாக்குதல் காரணமாக எண்ணெய் வளம் மிக்க பிரகா நகரம் மீண்டும் கடாபி படைகளின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. இதனை போராட்டக்காரர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
திரிபோலியில் ஊடுருவிய துப்பாக்கி ஏந்திய நபர்கள் 30 நிமிடத்தில் தங்கள் பணியை முடித்தனர். போராட்டக்காரர்கள் கொல்லப்பட்ட பின்னர் ஓடியோ செய்தியில் கடாபி பேசுகையில் போராட்டக்காரர்களை வீரர்கள் வீழ்த்தியதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
பிரிட்டனில் சமூகம் சீரழியவில்லை: முன்னாள் பிரதமர் டோனி பிளேர் நம்பிக்கை.
பிரிட்டனில் சமூகம் சீரழியவில்லை என முன்னாள் பிரதமர் டோனி பிளேர் கூறினார். இந்த மாத துவக்கத்தில் ஏற்பட்ட வன்முறை நிகழ்வுகளுக்கு நடத்தை சீரழிவு என கூறக்கூடாது என அவர் தெரிவித்தார். 
பிரிட்டனில் சமூக சீரழிவு ஏற்பட்டு விட்டது. அதனால் வன்முறை தாக்குதல்கள் நடந்துள்ளன என சிலர் விமர்சனம் செய்தனர். இதனை டோனி பிளேர் திட்டவட்டமாக மறுத்தார்.
தற்போதைய தாக்குதலை சமூக சீரழிவு என கூறக்கூடாது. இதனால் உலக அளவில் பிரிட்டனின் புகழ் பாதிக்கப்படும் என்ற கவலை தேவை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பதவியில் இருந்து விலகிய பின்னர் அவர் உள்ளூர் அரசியலில் மிக அரிதாகவே ஈடுபட்டார். தற்போது வெளியாகி உள்ள கருத்து பிரிட்டனின் மதிப்பை குறைப்பதாக உள்ளது என அவர் உடனடியாக பதிலடி தந்துள்ளார்.
சிலரது நடத்தை நடவடிக்கையால் பிரிட்டன் சிக்கி கொண்டு இருக்கிறது என கூறக்கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். வன்முறை தாக்குதல் ஒட்டுமொத்த சமூக தாக்குதல் என கருத்தில் கொள்ளக்கூடாது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
அணு உலைகளை மூடுவதால் பொருளாதாரம் மந்தமாகி உள்ளது: பொருளாதார ஆய்வு நிறுவனம் தகவல்.
பொதுமக்கள் பாதுகாப்பு கருதி ஜேர்மனியில் உள்ள அணு மின் நிலையங்களை மூட அரசு முடிவெடுத்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி ஜப்பான் புகுஷிமாவில் ஏற்பட்ட சுனாமி பாதிப்பால் அங்குள்ள முதன்மை அணு மின் நிலையத்தில் கதிர் வீச்சு பரவி மக்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து அணு மின் நிலையங்களை முட ஏங்கலா மார்கெல் தலைமையிலான ஜேர்மனி அரசும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது ஜேர்மனியில் பொருளாதாரம் மிக மந்த நிலையில் உள்ளது.
ஐரோப்பிய நாடுகளின் நிதி பிரச்னையால் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது என அனைவரும் கருதினர். ஆனால் அணு உலைகளை மூடும் முடிவே பொருளாதார மந்த நிலைக்கு காரணம் என மூனிச்சை மையமாக கொண்ட பொருளாதார ஆராய்ச்சி நிறவனம்(ஐ.எப்.ஓ) தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் முதன்மை பொருளாதார நிபுணர்களில் ஒருவரான காய் கார்ஸ்டென்சன் கூறியதாவது: இந்த ஆண்டு எதிர்பார்த்த படியே பொருளாதார வளர்ச்சி 0.2 சதவீதத்தை எட்டியிருக்கும்.
ஆனால் ஆண்டு துவக்கத்தில் அணு உலைகளை மூடுவது தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதனால் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அணு உலைகளை மூடுவதால் எரிசக்தி செலவு அதிகரிக்கும் என நோவரிட்ஸ் போன்ற சர்வதேச மருந்து உற்பத்தி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் மற்றும் ஜூன் மாத கால கட்டத்தில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 0.1 சதவீதமே உள்ளது. இது ஜேர்மனி அரசுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
புர்கா அணியும் பெண்கள் அபராதத்தை செலுத்த 10 லட்சம் யூரோ நிதியுதவி அளித்த தொழிலதிபர்.
பொது இடங்களில் முகத்தை மறைக்கும் புர்கா ஆடையை அணிவதால் பாதுகாப்பு பிரச்னைகள் ஏற்படுகின்றன எனக் கருதிய பிரான்ஸ் அரசு முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை விதித்துள்ளது.
இதற்கு பாரம்பரிய உடை அணியும் முஸ்லிம் பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் அரசு உத்தரவை மீறி பொது இடங்களில் புர்கா அணிந்து அபராதமும் கட்டி வருகின்றனர்.
பிரான்சில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிந்து அபராதம் செலுத்துவது தொடர்வதால் முஸ்லிம் தொழிலதிபர் ராசிட் நெகாஸ் ஒரு நிதி அமைப்பை ஏற்படுத்தி உள்ளார். இந்த அமைப்பில் 10 லட்சம் யூரோக்கள் உள்ளன.
இந்த நிதி தொகுப்பு மூலம் புர்கா அணிந்து அபாரதம் அணியும் பெண்கள் அபராதம் கட்டலாம். இந்த தொழிலதிபரின் அறிவிப்பு பிரான்ஸ் அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரத்தில் முஸ்லிம் சமூகத்தினர் அவரது மத நம்பிக்கையை மிகவும் வரவேற்றுள்ளனர்.
பாரிசை மையமாக கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளரான ராசிட் பிரான்சில் மட்டும் அல்லாது உலகம் முழுவதம் புர்காவிற்கு தடை உள்ள இடங்களில் பெண்களுக்கு விதிக்கும் அபராதத்தை செலுத்தி வருகிறார்.
இவர் புதன்கிழமை புர்கா தடை உள்ள பெல்ஜியத்திற்கு சென்று முஸ்லிம் பெண்கள் புர்கா ஆடைக்கான அபராதத்தை செலுத்தி வந்தார்.
கனடாவில் பயணிகள் விமானம் நொறுங்கியது: 12 பேர் பரிதாப மரணம்.
கனடாவின் மேல் ஆர்டிக் பகுதியின் வளைகுடா பகுதியில் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்தது. இந்த பயங்கர விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் சிக்கிய விமானத்தின் கறுப்பு பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இருப்பினும் விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
இந்த விபத்து குறித்து நுனாவட் ஆர்.சி.எம்.பி பொலிசார் கூறுகையில்,"யெல்லோ நைப் பகுதியில் இருந்து ரெசலுட் பகுதிக்கு 15 பயணிகளுடன் பர்ஸ்ட் ஏர் நிறுவன வாடகை விமானம் சென்றது. அப்போது அந்த விமானம் எதிர்பாராமல் நொறுங்கியது" என தெரிவித்தனர்.
விபத்து ஏற்பட்ட போது அதனை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த விமானம் இறுதியாக கனடா நேரம் மதியம் 12.40 மணி அளவில் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. அதன் பின்னர் அதனை தொடர்பு கொள்ள முடியவில்லை.
விமான நிலையத்தில் இருந்து 8 கிலோமீற்றர் தொலைவில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 2 பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை உயிர் பிழைத்துள்ளது. அவர்கள் இசா லுயிட்டில் உள்ள பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் ஆழந்த வேதனை தெரிவித்துள்ளார்.
சாவின் விளிம்பை நோக்கி 3 லட்சம் குழந்தைகள்: கிழக்கு ஆப்ரிக்காவின் அவலம்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் 3 லட்சம் குழந்தைகள் பட்டினியால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
ஐ.நா.வின் குழந்தைகளுக்கான தலைமை நிறுவனம் யுனிசெப் இதை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
பஞ்சம் மற்றும் பட்டினியின் காரணமாக கிழக்கு ஆப்பிரிக்காவின் 3 லட்சம் குழந்தைகள் சாவின் விளிம்பில் உள்ளதாக யுனிசெப்பின் நிர்வாக இயக்குநர் அந்தோணி லேக் தெரிவித்தார்.
சோமாலியா, கென்யா, எத்தியோப்பியா, டிஜிபோடி மற்றும் எரித்திரியா ஆகிய நாடுகளில் ஏற்கெனவே 10 லட்சம் மக்கள் பட்டினியால் இறந்துள்ளனர்.
இப்பகுதியில் வாழும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் உணவுத் தேவையை எதிர் நோக்கி உள்ளனர்.
சோமாலியாவில் மட்டுமே ஏறக்குறைய 4 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இப்பகுதி மிகப்பெரிய மனிதப் பேரழிவை எதிர் கொண்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
இஸ்ரேலுடனான சண்டை நிறுத்தம் முறிவு: ஹமாஸ் இயக்கும் அறிவிப்பு.
இஸ்ரேலுடனான சண்டை நிறுத்தத்தை முறித்துக் கொள்வதாக ஹமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் இஸ்ரேலிய போர் விமானங்கள் வெள்ளிக்கிழமை குண்டு வீசித் தாக்குதல் நடத்தின.
இதில் 7 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதால் இஸ்ரேலுடனான சண்டை நிறுத்தத்தை முறித்துக் கொள்வதாக காஸா குதியில் அதிகாரத்தில் உள்ள ஹமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது.
இதைப்போலவே ஏனைய பாலஸ்தீனக் குழுக்களும் சண்டை நிறுத்தத்தை விலக்கிக் கொள்ள முன்வர வேண்டும் என்று அவ்வியக்கம் அழைப்பு விடுத்துள்ளது.
முன்னதாக எகிப்து எல்லைக்கு அருகில் இஸ்ரேலின் தெற்குக் கடற்கரைப் பகுதியான நெகாவாவில் கடந்த வியாழக்கிழமை நடந்த தாக்குதலில் 8 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதில் நடவடிக்கையாகவே இஸ்ரேல் விமானத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் இஸ்ரேலின் நடவடிக்கையை நிறுத்தக் கோரி பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் ஐ.நா.விற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு(ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல்) இரு தரப்பினரும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
மீண்டும் சரக்கு கப்பலை கடத்திச் சென்ற சோமாலிய கடற்கொள்ளையர்கள்.
ஓமன் நாட்டு துறைமுகம் அருகே 21 கப்பல் பணியாளர்களுடன் சரக்கு கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
இது குறித்து சரக்கு கப்பல் நிறுவனத்தை சேர்ந்த இயக்குனர்களி்ல் ஒருவரான சதீஷ் அக்னி ஹோத்ரி தெரிவித்திருப்பதாவது: ஓமன் நாட்டில் உள்ளசாலா துறைமுகம் அருகே மென்த்தால் சரக்குகளுடன் ஆங்கிலோ ஈஸ்டர்ன் ஷிப் மேனேஜ் மென்ட் என்ற கப்பல் சென்று கொண்டிருந்தது.
கப்பலில் இந்தியாவை சேர்ந்த பணியாளர்கள் 21 பேர் இருந்துள்ளனர். அனைத்து பணியாளர்களுடன் கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றுள்ளனர்.
தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்தையடுத்து கடல் சீற்றம் குறைந்து காணப்படும் இதனை சாதகமாக பயன்படுத்திகொண்ட கடற்கொள்ளையர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து துறைமுக ஊழியர்கள் கப்பலை விடுவிப்பது குறித்து கடற்கொள்ளையர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
எங்களை யாராலும் பிரிக்க முடியாது: சீனாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாகிஸ்தான்.
ஷின்ஜியாங் மாகாணத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் உள்ளனர் என்ற சீனாவின் குற்றச்சாட்டை அடுத்து அந்நாட்டைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது.
உய்குர் பயங்கரவாதிகளை சீனா எதிர்கொள்ள பாகிஸ்தான் எல்லா வகையிலும் உதவும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
சீனாவுக்கான பாகிஸ்தான் தூதர் மசூத் கான் இதுகுறித்து நேற்று கூறியதாவது: பாகிஸ்தானும், சீனாவும் நட்புறவில் பின்னிப் பிணைந்த நாடுகள். ஷின்ஜியாங்கில் சீனாவின் பாதுகாப்பு குலைந்தால் அது எங்களையும் பாதிக்கும்.
கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தை இரு நாடுகளும் தொடர்ந்து எதிர்க்கும். இந்த விஷயத்தில் இரு நாடுகளின் உறவும் பாறை போன்று இறுகியது. எந்த ஒரு சக்தியும், நாடும் எங்களைப் பிரிக்க முடியாது.
ஒருங்கிணைந்த எல்லை நிர்வாகம், சீனா, பாகிஸ்தான், ஆப்கன் எல்லை கடந்த பொருளாதார மண்டலங்கள் ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.
இவை தவிர காரகோரம் நெடுஞ்சாலை மேம்பாடு, தகவல் தொடர்புக்கான கண்ணாடி இழை(பைபர் ஆப்டிக்) பதிப்பு, கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவற்றைக் கொண்டு வருவதற்காக பூமிக்கடியில் குழாய் பதிப்பு, ரயில் தண்டவாளம் பதித்தல் மற்றும் வான்வழி ஏற்பாடுகள் செய்தல் ஆகிய பணிகளிலும் இணைந்து செயலாற்றி வருகிறோம்.
முக்கிய நகரங்களை கைப்பற்றிய கடாபி எதிர்ப்பாளர்கள்: தப்பி ஓட கடாபி முயற்சி.
லிபியாவில் கடாபி எதிர்ப்பாளர்கள் முக்கிய நகர்களை நேற்று கைப்பற்றினர். மேலும் கடாபி லிபியாவை விட்டு வெளியேற முயற்சி செய்வதாக எதிர்ப்பாளர்கள் பேட்டியளித்துள்ளனர்.
லிபியாவில் கடாபி ராணுவத்துக்கு எதிராக சமீபகாலமாக எதிர்ப்பாளர்கள் கை ஓங்கி வருகிறது. கடாபி ராணுவ வசம் இருந்த பல நகரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக எதிர்ப்பாளர்கள் வசம் விழுந்து வருகின்றன.
அவற்றில் தலைநகர் டிரிபோலியில் இருந்து கிழக்கில் 160 கி.மீ தொலைவில் உள்ள ஜாவியா மற்றும் மேற்கில் உள்ள ஜிலிடான் ஆகிய நகர்களை நேற்று எதிர்ப்பாளர்கள் கைப்பற்றினர்.
அதேபோல் கிழக்குப் பகுதியில் உள்ள எண்ணெய் வளம்மிக்க பிரிகா நகரையும் அவர்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து டிரிபோலியில் இருந்து 30 கி.மீ தொலைவில் எதிர்ப்பாளர்கள் நிலை கொண்டுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்பாளர்களின் இவ்வெற்றிகளை லிபிய அரசு மறுத்துள்ளது.
அதேநேரம் கடாபி தனது குடும்பத்துடன் லிபியாவில் இருந்து வெளியேற முயற்சி செய்து வருகிறார். எகிப்து, துனிஷியா, அல்ஜீரியா, மொராக்கோ ஆகிய நாடுகள் அவரை வரவேற்கத் தயாராக இருக்கின்றன என்ற எதிர்ப்பாளர்களின் பேட்டியையும் லிபிய அரசு மறுத்துள்ளது.
இதுகுறித்து லிபிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கடாபி தனது குடும்பத்துடன் டிரிபோலியில் தான் தங்கியிருக்கிறார்" என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
எதிர்ப்பாளர்கள் டிரிபோலியை நெருங்கிக் கொண்டிருப்பதால் அந்நகரில் உள்ள வெளிநாட்டவர்களை வெளியேற்றும் முயற்சிகள் துவங்கியுள்ளன. இதனால் விரைவில் எதிர்ப்பாளர்கள் டிரிபோலியைக் கைப்பற்றக் கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF