Saturday, August 27, 2011

இன்றைய செய்திகள்.

இலங்கையில் அவசரகால சட்டம் நீக்கம் அமெரிக்கா வரவேற்பு.

நாட்டில் அவசரகாலச் சட்டம் முற்றாக நீக்கப்பட்டுள்ளமையை வரவேற்பதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில்,
நாட்டில் அவசரகாலச் சட்டம் முற்றாக நீக்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட அறிவிப்பை வரவேற்கின்றோம்.
இலங்கை மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்புவதில் இதுவொரு முக்கிய கட்டமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் எனக்கு எதிராக மட்டுமே வழக்குத் தொடரப்பட்டுள்ளது!– சரத் பொன்சேகா.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் எனக்கு எதிராக மட்டுமே வழக்குத் தொடரப்பட்டுள்ளது என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி எனக்கு எதிராக மட்டுமே வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மெய்யான நோக்கில் அவரகாலச் சட்டம் நீக்கப்படவில்லை எனவும், சர்வதேச நாடுகளின் அழுத்தங்களை பொறுத்துக்கொள்ள முடியாமலேயே அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தோள்பட்டையில் ஏற்பட்ட உபாதைக்காக தனியார் மருத்துவ மனையொன்றில் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக சென்றிருந்த போது ஊடகவியலார்களுக்கு சரத் பொன்சேகா இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
ஆளும்கட்சி வெற்றிபெற்ற பிரதேசங்களின் அபிவிருத்திக்கே கூடுதல் நிதி ஒதுக்கீடு!- பசில் யாழ். கூட்டத்தில் அறிவிப்பு.

வேலணை, நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, யாழ். மாநகரசபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களை அபிவிருத்தி செய்வதற்கே கூடுதல் நிதியையும் அபிவிருத்தித் திட்டங்களையும் வழங்க வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் இவ்வாறு கேட்டதைத் தொடர்ந்து அந்தப் பகுதிகளுக்கே அபிவிருத்திச் செயல்திட்டங்களில் முன்னுரிமை கொடுக்கும்படி ஜனாதிபதியும் கூறி உள்ளார் என்று தெரிவித்தார் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச.
மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் நேற்றுக் காலை 11.30 மணியளவில் அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில் யாழ். பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்ததாவது:
நாம் தேர்தல் காலத்தில் ஆரம்பித்த சகல அபிவிருத்தி வேலைகளையும் செய்து முடிப்போம். வடக்கு அபிவிருத்திக்கு என 5,000 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி விரைவில் செலவிடப்பட உள்ளது.
குடாநாட்டில் பல வீதிகள் மோசமான நிலையில் இருப்பதை நான் நேரில் கண்டுள்ளேன். அவை விரைவில் திருத்தப்படும் என்றார்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரச அதிபர் இமெல்டா சுகுமார், வடமாகாண பிரதம செயலாளர் ஆ.சிவசுவாமி, பிரதிப் பிரதம செயலாளர் இ.இளங்கோவன், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஷ் மற்றும் வடமாகாணச் செயலாளர்கள், திட்டப் பணிப்பாளர்கள், பொறியியலாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பயங்கரவாத தடைச் சட்டமும் நீக்கப்பட வேண்டும் - அனுரகுமார திசாநாயக்க.


அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதனைப் போன்றே பயங்கரவாதத் தடைச் சட்டமும் நீக்கப்பட வேண்டுமென ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதிக்கு பாரியளவில் எதேச்சாத்திகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அதிகார துஸ்பிரயோகங்கள் இடம்பெறக் கூடும் எனவும், இதனால் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் நோக்கில் பிரதமர், நாடாளுமன்றில் பொய்யுரைத்து வந்துள்ளதாக அனுரகுமார திசாநயாக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
மாதந்தோறும் அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் நோக்கில் போலியான காரணிகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண மர்மமனிதன் விவகாரம்! அரசுக்கோ, படைகளுக்கோ தொடர்பில்லை!- பிரதி பொலிஸ் மாஅதிபர்.

கிழக்கு மாகாணத்தில் நிலவுகின்ற மர்ம மனிதன் விவகாரங்களில் அரசுக்கோ அல்லது அரச படைகளுக்கோ எவ்வித தொடர்பும் இல்லை என்று கிழக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜகத் அபேஸ்ரீ குணவர்த்தன தெரிவித்தார். 
மட்டக்களப்பு மாவட்டத்தில் மர்ம மனிதன் தொடர்பாக நிலவும் பீதியைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை ஓட்டமாவடி முஹைதீன் ஜூம்மா பள்ளிவாசலில் ஜூம்மாத் தொழுகையின் பின் வாழைச்சேனை பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மர்ம மனிதன் என்ற போர்வையில் சட்டவிரேதமான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கட்டாயம் பொலிஸாரின் உதவியுடன் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள்ளோம்.
மக்களின் நலன் கருதி பாதுகாப்பு வழங்குவதற்காகவே நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினர் மக்களுக்கு தீங்கு விளைவிப்பதற்கு உறுதுணையாக ஒருபோதும் இருக்க மாட்டார்கள் என்று மக்கள் திடமாக நம்ப வேண்டும்.
நேற்று முதல் நாட்டில் அமுலில் இருந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. இருந்தும் சட்டத்தை கையில் எடுக்கும் பொருப்பு யாருக்கும் வழங்கப்படவில்லை. குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அதாவது இராணுவம் மற்றும் பொலிஸாராக இருந்தாலும் கூட நீதி மன்றமே அவர்களுக்கு தண்டனையை வழங்கும்.
மர்ம மனிதன் தொடர்பாக யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. மக்களின் நன்மை கருதி பொலிஸார் இரவு நேர ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்' என்றும் கூறினார்.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ரவீந்திர கரவிட்ட, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயவீர மற்றும் இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 
படையினரும், பொலிஸாரும் நினைத்த மாதிரி எவரையும் கைது செய்ய முடியாது : சிங்கள ஊடகம்.

சிறிலங்காவில் அவசரகால நிலை நீக்கத்தையடுத்து இனிவரும் காலங்களில் இராணுவத்தினரும், பொலிஸாரும் நினைத்த மாதிரி எவரையும் கைது செய்ய முடியாது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நீண்ட காலமாக அமுல்படுத்தப்பட்டு வந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதனைத் தொடர்ந்து, இராணுவத்தினரோ அல்லது பொலிஸாரோ எவரையும் விரும்பியவாறு கைது செய்ய முடியாது என சட்டத்தரணி புஞ்சி ஹேவா தெரிவித்துள்ளார்.
இனிவரும் காலங்களில் நாட்டின் சாதாரண பொதுமக்களை இராணுவத்தினர் கைது செய்ய முடியாது.  அத்துடன் எவரையேனும் கைது செய்ய வேண்டுமாயின் பொலிஸார் போதியளவு சாட்சியங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அதேவேளை, பொலிஸாரால் கைது செய்யப்படும் நபர்கள் 24 மணித்தியாலத்திற்குள் நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும், கைது செய்யப்பட்ட நபர்களை நீண்ட காலத்திற்கு தடுத்து வைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் நடத்தும் போராட்டங்களின் போது பொலிஸார் தலையீடு செய்ய முடியும் என்ற போதிலும், எவரையும் கைது செய்ய முடியாது.
கடந்த 30 ஆண்டுகளாக அவசரகாலச் சட்டத்திற்கு பழக்கப்பட்ட இராணுவத்தினருக்கும், பொலிஸாருக்கும் சாதாரண சட்டங்கள் பற்றி விளக்கம் அளிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
மீண்டும் இலங்கை - இந்திய ஒப்பந்தம் செய்து கொள்ளப்படலாம் : பேராசிரியர் சானக ஜயசேகர.

மீண்டும் இலங்கை - இந்திய ஒப்பந்தம் செய்து கொள்ளப்படலாம் என அவுஸ்திரேலியாவின் சிட்னி மெக்யூரி பல்கலைக்கழகத்தின் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வு தொடர்பான பேராசிரியர் சானக ஜயசேகர தெரிவித்துள்ளார்.
1977 - 1987ம் ஆண்டு காலப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை போன்றதொரு காலம் மீண்டும் உருவாகியுள்ளது.
மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு தமிழகத்தின் ஆதரவு மிகவும் அவசியமானது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதான மக்களின் நன்மதிப்பு குறைவடைந்து செல்கின்ற நிலையில், பாரதீய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றது.
எதிர்வம் 2014ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் குறித்த இரண்டு பிரதான கட்சிகளும் தமிழக மாநில ஆட்சியாளர்களின் ஆதரவினை கோர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழக ஆட்சியாளர்கள் மத்திய அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா அரசாங்கம் இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து பிரயோகிக்கும் அழுத்தங்கள் மத்திய அரசாங்கத்தினை பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவைப் போன்றே தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஜெயலலிதா அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
சர்வதேச நாடுகளின் மனித உரிமை மீறல் தொடர்பான அழுத்தங்களும், தமிழக அரசாங்கத்தின் அழுத்தங்களும் இந்திய மத்திய அரசாங்கத்தின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும்.
எனவே, எதிர்வரும் காலங்களில் மற்றுமொரு இந்திய இலங்கை ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா தொடர்பான ஆயிரத்துக்கும் அதிகமான இரகசிய ஆவணங்களை அம்பலப்படுத்தியது விக்கிலீக்ஸ்.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கும், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கும் இடையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான இரகசியத் தகவல் ஆவணங்களை விக்கிலீக்ஸ் நேற்றிரவு வெளியிட்டுள்ளது.
1986ம் ஆண்டு தொடக்கம் 2010 ஜனவரி வரையிலான காலப் பகுதியில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு பரிமாறிக் கொள்ளப்பட்ட 1646 ஆவணங்களையே விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
இவற்றில் விடுதலைப் புலிகள் தொடர்பாக ஆவணங்களும், சிறிலங்கா அரசு வெளிநாடுகளுடன் கொண்டுள்ள இரகசியத் தொடர்புகள் தொடர்பான ஆவணங்களும் அடங்கியுள்ளன.
சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கத் தூதரகத்தினால் பரிமாற்றப்பட்ட ஆவணங்கள் சிலவற்றை விக்கிலீக்ஸ் ஏற்கனவே வெளியிட்டிருந்தது.
இந்தநிலையில் சிறிலங்கா தொடர்பான ஆயிரத்துக்கும் அதிகமான ஆவணங்கள் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளதானது கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம்: சீனா லஞ்சம் கொடுத்தே பெற்றது - விக்கிலீக்ஸ்
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தைத்தைப் பெறுவதற்கு சிறிலங்கா அதிகாரிகளுக்கு சீனா பெருந்தொகைப் பணத்தை லஞ்சமாக வழங்கியதாக அமெரிக்கா நம்புவதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்றிரவு வெளியிடப்பட்ட சிறிலங்கா தொடர்பான 1646 ஆவணங்களில் ஒன்றிலேயே, இதுபற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டைத் துறைமுக ஒப்பந்தத்தை சீன நிறுவனங்கள் பெறுவதற்கு லஞ்சமும், அரசியல் செல்வாக்குமே காரணமாக அமைந்தது என்றும் அமெரிக்கத் தூதரகம் அனுப்பிய இரகசிய ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் அம்பாந்தோட்டைத் துறைமுகம் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெகு தொலைவில் இருப்பதாகவும், அதற்கருகில் கைத்தொழில், வர்த்தக கட்டமைப்புகள் ஏதும் இல்லை என்றும் விக்கிலீக்ஸ் வெளியிட்ட இரகசிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு ஏற்றுமதி இறக்குமதியாளர்களுக்கு இந்தத் துறைமுகத்தினால் எந்தப் பயனும் கிடைக்காது என்றும், அம்பாந்தோட்டையில் அமைக்கப்படும் அனைத்துலக விமான நிலையமும் கூட வாடகை விமானங்களை தரையிறக்கவே பயன்படும் என்றும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
சிலியில் மக்கள் போராட்டம்: 210 பேர் கைது.
தென் அமெரிக்க நாடான சிலியில் அரசின் கல்விக்கொள்கை, பொருளாதார மாற்றம் மற்றும் தொழிலாளர் கொள்கைளை கண்டித்து நேற்று தேசம் முழுவதும் 6 லட்சத்து 10 ஆயிரம் பேர் வீதியில் திரண்டு போராட்டம் நடத்தினர்.
தேசிய அளவில் நடந்த ஸ்டிரைக்கில் போராட்டகாரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே நடந்த மோதலில் 26 பேர் காயம் அடைந்தனர்.
போராட்டக்காரர்கள் பல லட்சம் பேர் திரண்டாலும் அரசு தரப்பில் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டது. தேசிய அளவில் நடந்த போராட்டத்தில் 210 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
இதில் தலைநகர் சான்டியாகோவில் அதிகபட்சமாக 140 பேரை பொலிசார் கைது செய்தனர். பெரும் அளவில் போராட்டம் அமைதியாகவே நடந்தது.
நாடு முழுவதும் 51 இடங்களில் எதிர்ப்பு பேரணி நடந்தது. இதில் 8 இடங்களில் வன்முறை ஏற்பட்டது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிரிய அதிபரை கேலி சித்திரமாக வரைந்த அலி பெர்ஷாத் மீது கொடூர தாக்குதல்.
சிரியாவின் புகழ்பெற்ற காட்டூனிஸ்ட் அலி பெர்ஷாத்(60). தற்போது இங்கு அதிபர் ஆஷாத்துக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.
எனவே அவருக்கு எதிராக கேலி சித்திரங்களை வரைந்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு லிபியா அதிபர் கடாபியின் ஆட்சி வீழ்ந்தது.
அவருடன் ஒப்பிட்டு சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்தை கார்ட்டூன் வரைந்து இருந்தார். இது ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கு கடும் ஆத்திரத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்தியது.
இதற்கிடையே இரவு முழுவதும் டமாஸ்கஸ்சில் உள்ள தனது அலுவலகத்தில் பணிபுரிந்த கார்டூனிஸ்ட் அலிபெர்ஷாத் நேற்று அதிகாலை 4 மணியளவில் தனது காரில் வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது ஜீப்பில் துப்பாக்கியுடன் முகத்தை துணியால் மறைத்தபடி 4 மர்ம மனிதர்கள் அவரது காரை வழி மறித்தனர். பின்னர் அவரை தங்களது ஜீப்பில் ஏற்றி கடத்தி சென்றனர். விமானநிலையம் செல்லும் ரோட்டில் ஆள் இல்லாத இடத்தில் இறங்கி அவரை கடுமையாக அடித்து உதைத்து தாக்கினர்.
அத்துடன் அவர்கள் ஆத்திரம் அடங்கவில்லை. கார்ட்டூன் வரையும் அவரது 2 கைகளையும் முறித்தனர். எனவே வலியால் அலறிய அவரை அப்படியே விட்டு சென்றனர். இது சாதாரண மிரட்டல் மட்டும்தான். இனியும் தொடர்ந்து அதிபர் குறித்து கேலி செய்து கார்ட்டூன் வரைந்தால் தலையை துண்டித்து கொலை செய்வோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
8 ஆயிரம் மீற்றர் உயர மலை உச்சிகளை கடந்து ஆஸ்திரிய நாட்டுப் பெண் சாதனை.
ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த 40 வயது மலை ஏறும் வீராங்கனை ஜெர் லிண்டே பிரன்னர் இமாலய மலையின் உயரமான 14 உச்சிகளை எட்டிய பெண் என்ற சாதனையை படைத்து உள்ளார்.
அவர் 8 ஆயிரம் மீற்றர் உயர மலை உச்சிகளை கொண்ட 14 பகுதிகளை கடந்து இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். அவர் மலை ஏறும் போது பிராண வாயு கலனான ஆக்சிஜனை எடுத்துச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இமாலய மலையின் உயரமான மலை உச்சிகளில் ஒன்றான கே உச்சியை அவர் அடைந்த போது இந்த சாதனையை நிறைவு செய்தார். அவர் நிலவுக்கு மேலாக உள்ளார் என அவரது கணவர் பெருமிதத்துடன் கூறினார்.
ஜெர்லின்டே மருத்துவதாதியாக பணியாற்றுகிறார். இமாலயத்தின் 14 உச்சிகளை எட்டிய 3 பெண்களில் ஒருவராக உள்ளார். இதர 2 பெண்கள் ஆக்சிஜன் உதவியுடன் இந்த உச்சியை எட்டினர்.
ஆனால் ஆக்சிஜன் இல்லாமல் 14 இமாலய மலை உச்சிகளிலும் ஏறிய உலகின் ஒரே பெண் என்ற பெருமை ஜெர்லின்டேவுக்கு கிடைத்துள்ளது. அவர் கடைசியாக ஏறிய மலை உச்சியின் உயரம் 8611 மீற்றராகும்.
ஜப்பான் பிரதமர் நேட்டோ கான் பதவி விலகுகிறார்.
கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட சுனாமி பாதிப்புக்களுக்கான புனரமைப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு ஜப்பான் பிரதமர் நேட்டோ கான் மீது கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர் பதவி விலகுவார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ள நிலையில் தான் பதவி விலகபோவதாக பிரதமர் கான் தனது கட்சியின் தலைமைக்கு தெரிவித்து உள்ளார். இதனால் ஜப்பான் 5 ஆண்டுகளில் 6வது முறையாக பிரதமரை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
அவரது ஜப்பான் ஜனநாயக கட்சி அடுத்த பிரதமருக்கு உரியவரை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த கட்சியில் பிரபலமாக இருப்பவர் தற்போதைய வெளியுறவு மந்திரியான ஸீஜீ மேஹரா. ஆனாலும் கட்சிதலைமை இக்கிரோ ஒஸாவாவின் ஆதரவு மேஹராவுக்கு இல்லை என்று தெரிகிறது.
ஆகஸ்ட் 29ம் திகதி புதிய தலைவரை தேர்வு செய்ய வாக்குபதிவு நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறுபவர் புதிய பிரதமரா பொறுப்பேற்பார். அடுத்தடுத்து வரும் அரசுகள் தீவிரமான கொள்கை பிரச்னையால் தடுமாறுகின்றன.
ஆளும் கட்சிக்குள் விரிசல், நாடாளுமன்றத்தில் பிரிவினை போன்றவை காரணமாக ஜப்பான் அரசு தடுமாறுகிறது.
லிபியாவில் வன்முறை தாக்குதல்களை நடத்த வேண்டாம்: ஐ.நா அவசர வேண்டுகோள்.
லிபியாவில் வன்முறைகளோ தாக்குதலோ மேற்கொள்ள வேண்டாம் என அனைத்து தரப்பினரையும் ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக் கொண்டுள்ளது. 
லிபியாவில் கடாபியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ள நிலையில் எதிர்தரப்பினரோ அல்லது வேறு எவருமோ வன்முறையில் ஈடுபட வேண்டாம் என ஐ.நா வலியுறுத்தியுள்ளது.
சொந்த நாட்டு மக்களின் மீது தாக்குதல் நடத்திய கடாபி ராணுவ கொடூரத்தை கண்டிக்கும் வகையில் ஐ.நா லிபியாவின் சொத்துக்களை முடக்கி இருந்தது. தற்போது 150 கோடி டொலர் சொத்துக்களை விடுவிக்க ஐக்கிய நாடுகள் சபை ஒப்புக்கொண்டுள்ளது.
கடந்த 6 மாதமாக போரால் உருக்குலைந்து போன லிபியாவின் மக்களுக்கு மனித நேய உதவிகள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. இதனால் முடக்கி வைத்து இருந்த லிபியா சொத்துக்களை ஐ.நா உடனடியாக விடுவிக்கிறது.
லிபியா தலைநகர் திரிபோலியில் அரசு ஆதரவு தரப்பினருக்கும் புரட்சியாளர்களுக்கும் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இருப்பினும் தலைநகர் புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அவர்களுக்கு ஆதரவாக நேட்டோ படைகள் உள்ளன.
யூரோ நாணயத்தின் மீது சீனாவுக்கு நம்பிக்கை இருக்கிறது: சர்கோசி.
ஐரோப்பாவின் யூரோ நாணயத்தின் மீது சீன ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறது என பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி தெரிவித்தார். 
சீனாவில் சிறிய நேரம் இருந்த போது சர்கோசி அந்த நாட்டு ஜனாதிபதியுடன் பேசிய பின்னர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐரோப்பிய மண்டலத்தின் தற்போதைய நிலைமை குறித்து சீன ஜனாதிபதி கவலைப்படவில்லை. அவர் யூரோ மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார் என சர்கோசி சீன தலைவரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உலக அன்னிய செலாவணி சேமிப்பில் ஐரோப்பிய மதிப்பிலான சொத்துக்களில் சீனா முதலீடு செய்துள்ளது. இரு நாட்டு ஜனாதிபதிகளும் உலக சந்தையை தடுமாறச் செய்துள்ள கடன் பிரச்சனைக்கு தீர்வு காண உரிய ஒத்துழைப்பு மேற்கொள்ள முடிவு செய்தனர்.
உலக பொருளாதாரத்தை நிலைகுலைய செய்யும் கடன் பிரச்சனைக்கு தீர்வு காண சீனாவின் பங்கு மிக முக்கியமானது என சர்கோசி தெரிவித்தார். உலக பொருளாதாரத்தில் 2வது பெரிய நாடு என்ற அந்தஸ்து சீனாவுக்கு உள்ளது. அந்த நாட்டின் ஒத்துழைப்பு மிக முக்கியம் எனவும் சர்கோசி குறிப்பிட்டார்.
பிரிட்டனுக்கு இடம் பெயர்ந்து வருவோரின் எண்ணிக்கையை குறைக்க அரசு முடிவு.
பிரிட்டனில் இருந்து வெளியேறுவோர் எண்ணிக்கையை காட்டிலும் கடந்த ஆண்டு இடம் பெயர்ந்து வருவோர் எண்ணிக்கை 21 சதவீதம் அதிரித்துள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் 2 லட்சத்து 39 ஆயிரம் பேர் பிரிட்டன் வந்துள்ளனர். கடந்த 2009ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு இடம் பெயர்ந்து வந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 98 ஆயிரம் ஆகும்.
2015ஆம் ஆண்டு காலகட்டத்தில் பிரிட்டனுக்கு இடம் பெயர்ந்து வருவோர் எண்ணிக்கையை சில ஆயிரங்களாக குறைக்க வேண்டும் என அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. பிரிட்டனுக்கு அதிக அளவில் நபர்கள் வரும் தகவலை தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
இடம் பெயர்ந்து வருவோர் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையாக ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத இதர நாடுகளில் இருந்து வரும் நாடுகளின் தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.
தேசிய புள்ளியியல் அலுவலக நிலவரப்படி கடந்த 2020ஆம் ஆண்டு நீண்ட கால குடியேற்ற நபர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 75 ஆயிரமாக இருந்தது. முந்தைய ஆண்டில் அந்த எண்ணிக்கை 5 லட்சத்து 67 ஆயிரமாக இருந்தது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் நீண்டகால குடியேற்றத்திற்கு வந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 37 ஆயிரத்தில் இருந்து 3 லட்சத்து 36 ஆயிரமாக குறைந்தது. கடந்த 6 ஆண்டுகளில் மிக குறைவான நீண்ட கால குடியேற்றம் இதுவாகும்.
அமெரிக்காவை மிரட்டும் ஐரின் சூறாவளி: மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்.
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஓரிரு நாளில் ஐரின் சூறாவளி தாக்கும் என அமெரிக்க தேசிய சூறாவளி மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அட்லாண்டிக் சீசனில் உருவாகியுள்ள முதல் சூறாவளியான ஐரின் கரீபியன் தீவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்றைய நிலவரப்படி பஹாமஸ் தலைநகர் நசாவுக்கு கிழக்கு வடகிழக்கில் 65 மைல் தொலைவில்(நியூயார்க்கிலிருந்து 1000 கி.மீ) மையம் கொண்டிருந்தது. இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன்படி ஓரிரு நாளில் அமெரிக்காவை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக கிழக்கு கடற்கரை பகுதியில் மணிக்கு 185 கி.மீ வேகத்தில் சூறைக் காற்றுடன் கன மழை பெய்யும் என்றும், கடலில் ராட்சத அலைகள் உருவாகும் என்றும் சூறாவளி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே வடக்கு கரோலினா மற்றும் நியூயோர்க் கடற்கரை பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஐரோப்பிய வங்கியின் நடவடிக்கைக்கு ஜேர்மனி ஜனாதிபதி கடும் கண்டனம்.
கடனில் தவிக்கும் இத்தாலி மற்றும் ஸ்பெயின் உரிமை பங்கு பத்திரங்களை ஐரோப்பிய மத்திய வங்கிகள் மீண்டும் வாங்கத் துவங்கி உள்ளது.
இந்த நடவடிக்கையை ஜேர்மனி ஜனாதிபதி கிறிஸ்டியன் வுல்ப் கடுமையாக விமர்சித்தார். நிதி பரிவர்த்தனையில் மிகவும் பலவீனமாக இருக்கும் நாடுகளின் கடன் பத்திரங்களை ஐரோப்பிய வங்கி வாங்குவது பிரச்னையை வாங்குவது போல உள்ளது என்று ஜேர்மனி ஜனாதிபதி கிறிஸ்டியன் வுல்ப் கடுமையாக விமர்சித்தார்.
இந்த மாதம் ஐரோப்பிய மத்திய வங்கி இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளின் பத்திரங்களை வாங்க துவங்கி உள்ளது. சந்தை நெருக்கடியில் இருந்து அவை மீள வேண்டும் என்ற முயற்சியில் அதன் பத்திரங்களை வாங்குகிறது. இதற்கு ஜேர்மனி ஜனாதிபதி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வுல்ப் அதிபர் ஏங்கலா மார்கெலின் கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர் ஆவார். ஐரோப்பிய மத்திய வங்கி உடனடியாக தான் ஒப்புக்கொண்ட அடிப்படை கொள்கைகளுக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதிநவீன போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குகிறது அமெரிக்கா.
அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகளை இந்தியாவுக்கு சப்ளை செய்ய அமெரிக்க ராணுவ தலைமையகம் முன்வந்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ராபர்ட் ஸ்கெர் கூறியதாவது: கடந்த 1990ம் ஆண்டுகளில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ராணுவ ரீதியான வர்த்தகம் ஏதும் இல்லை. ஆனால் தற்போது 27 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இந்தியாவுடன் ராணுவ தளவாடங்கள் சப்ளைக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரியில் சி-130ஜெ என்ற நான்கு இன்ஜின்கள் பொருத்தப்பட்ட ஜம்போ போர் விமானங்கள் அமெரிக்க படையில் சேர்க்கப்பட்டன. இந்த அதிநவீன தொழில் நுட்பம் வாய்ந்த போர் விமானங்கள் தற்போது இந்தியாவுக்கு சப்ளை செய்யப்பட உள்ளன.
அமெரிக்க ராணுவத்தில் சேர்க்கப்பட்ட உடனேயே எந்த ஒரு ஆயுதங்களையும், விமானங்களையும் அமெரிக்கா இதுவரை எந்த நாடுகளுக்கும் உடனடியாக விற்றது கிடையாது. இந்த விதத்தில் இந்தியாவுக்கு சி-130 ஜெ விமானங்கள் சப்ளை செய்யப்படுவது ஆச்சரியம் அளிக்கிறது.
இந்த ராணுவ வர்த்தகத்தின் மூலம் இந்தியா ராணுவத்தில் முன்னேறிய நாடாக விளங்குவதுடன் இந்திய ராணுவ அதிகாரிகள் அமெரிக்காவில் போர் பயிற்சி பெறும் வாய்ப்பையும் பெறுகின்றனர்.
அதே போல இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிக்க அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் இந்தியாவுக்கும் செல்வர். இந்திய கடற்படை வீரர்கள் விர்ஜினியாவில் ஒன்பது மாத கால பயிற்சி பெற்றுள்ளனர். எம்777 என்ற இலகுரக பீரங்கிகளையும், இந்தியாவுக்கு சப்ளை செய்யவும் ராணுவ தலைமையகம் திட்டமிட்டுள்ளது.
1.2 கோடி அகதிகளுக்கு உதவுங்கள்: உலக நாடுகளுக்கு ஐ.நா அழைப்பு.
சொந்த நாடு என்று சொல்லிக்கொள்ள ஏதுமின்றி உலகெங்கிலும் வாடும் சுமார் 1.2 கோடி அகதிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என்று உலக நாடுகளுக்கு அகதிகளுக்கான ஐ.நா ஆணையகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அகதிகள் பாதுகாப்புக்கான ஐ.நா துணை ஆணையர் எரிகா பெல்லர் நிருபர்களிடம் கூறியதாவது: தோராயமான மதிப்பீட்டின்படி உலகெங்கிலும் சுமார் 1.2 கோடி பேர் சொந்த நாடு எதுவுமின்றி அகதிகளாக தவிக்கின்றனர். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகக்கூட இருக்கலாம்.
தனக்கு சொந்த நாடு எதுவும் இல்லை என்று யாரும் சொல்லக்கூடாது என்பதற்காக இதற்கு தீர்வு காணும் வகையில் சர்வதேச ஒப்பந்தம் உள்ளது. உலக நாடுகள் சம்மதித்து அதை ஏற்று அமல்படுத்த வேண்டும் என்பதை புரிய வைக்கவே சிறப்பு முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
அகதிகளாக இருப்பவர்கள் நம்மோடு தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறது. பள்ளிகளுக்கு செல்லவோ, வங்கிகளில் கணக்கு தொடங்கவோ அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதுபோன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதால் அவர்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களாக இருக்கிறார்கள்.
எனவே எப்படியாவது நாமும் வாழ்ந்தாக வேண்டும் என்பதற்காக அவர்கள் சட்டத்துக்கு புறம்பான வழிகளைத் தேர்ந்தெடுத்து வாழ்கிறார்கள். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. எனவே எல்லா நாடுகளும் இதற்கு வழி கண்டாகவேண்டும்.
உதாரணமாக சொல்லப்போனால் இராக்கில் குர்து இனத்தவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுகிறது. வெளிநாடுகளில் சுமார் 2 லட்சம் பிரேசில் நாட்டவர்கள் உள்ளனர். 2007ம் ஆண்டு சட்டப்படி வெளிநாடுகளில் பிறந்த பிரேசில் நாட்டவர்களுக்கு குடியுரிமை தர வழி இல்லை. இதற்கெல்லாம் தீர்வு கண்டாகவேண்டும் என்றார் பெல்லர்.
ரூ.45 ஆயிரம் கோடி தங்கத்தை காலி செய்த கடாபி: ரிசர்வ் வங்கி தலைவர் தகவல்.
தலைமறைவாக உள்ள லிபிய தலைவர் கடாபி 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை காலி செய்து விட்டார் என அந்நாட்டு ரிசர்வ் வங்கி தலைவர் தெரிவித்துள்ளார்.
லிபிய தலைவராக பல ஆண்டுகளாக நீடித்து வந்த கடாபியை பதவி விலகும்படி கோரி கிளர்ச்சியாளர்கள் கடந்த பிப்ரவரி முதல் போராடி வருகின்றனர்.
போராட்டக்காரர்களை ஒடுக்க கடாபி ராணுவம் விமானத் தாக்குதலை நடத்தியதால் கிளர்ச்சியாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நேட்டோ படைகள் கடாபி ராணுவத்துக்கு எதிரான தாக்குதலை நடத்தி வருகின்றன.
திரிபோலியை தவிர்த்து மற்ற பகுதிகள் கிளர்ச்சியாளர்கள் வசம் வந்துள்ளன. திரிபோலியை கைப்பற்ற நடந்த சண்டையில் 400 பேர் பலியாகியுள்ளனர். கடாபியின் மாளிகையை முற்றுகையிட்டு தாக்குதல் நடந்ததால் தற்போது கடாபி தலைமறைவாகியுள்ளார். அவரைப் பிடித்துத் தருவோருக்கு 8 கோடி ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
லிபிய ரிசர்வ் வங்கியின் தலைவர் பர்கா பெங்தாரா கூறியதாவது: லிபியாவில் 8 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு தங்கத்தின் இருப்பு உள்ளது. திரிபோலியில் மட்டும் 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தங்கம் கையிருப்பு இருந்தது. இதை கடாபி காலி செய்துள்ளார்.
இந்தத் தங்கத்தை அவர் தனது கூலிப் படையினர் மூலம் அமெரிக்க டொலராகவோ, யுரோ நாணயமாகவோ மாற்றியிருக்கலாம். இந்தப் பணத்தை அவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளச் செலவிடலாம் அல்லது தற்கொலைப் படைத் தாக்குதலுக்குப் பயன்படுத்தலாம்.
இதற்கிடையில் பாகிஸ்தானில் உள்ள லிபிய தூதரகத்தில் லிபியாவின் தேசியக் கொடி இறக்கப்பட்டு கிளர்ச்சியாளர்களின் கொடி நேற்று ஏற்றப்பட்டது. இது குறித்து இஸ்லாமாபாத்தில் உள்ள லிபிய தூதர் குறிப்பிடுகையில்,"லிபியாவில் ஆட்சி மாற்றத்தை ஐ.நா மற்றும் உலக நாடுகள் ஆதரித்துள்ளன" என்றார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF