Wednesday, August 17, 2011

இன்றைய செய்திகள்.

அஸாத் சாலி நாட்டிலிருந்து வெளியேற நீதிமன்றம் தடை உத்தரவு.

கொழும்பு மாநகர சபையின் ன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி வெளிநாடு செல்வதைத் தடுக்குமாறு குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளருக்கு கொழும்பு கோட்டை நீதிவான் நேற்று திங்கட்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார். 
தனக்கு பதவி உயர்வைப் பெற்றுத்தருவதாகக் கூறி ஆறு இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டு விட்டு அஸாத் சாலி மோசடி செய்துவிட்டார் என சுகாதார அமைச்சின் ஊழியர் ஒருவர் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிவில் செய்த முறைப்பாடு தொடர்பாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ் விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் மற்றொரு சந்தேக நபரான பாத்திமா ரிஸானா என்ற பெண்ணும் வெளிநாடு செல்வதைத் தடுக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த இரு சந்தேக நபர்கள் தொடர்பாக இதேபோன்று 8 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர். 
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பிரேமதாச அணியினர் நாளை ஆர்ப்பாட்டம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு சஜித் பிரேமதாச அணியினர் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிய வருகின்றது.
 ஐ.தே.க.வின் சிறிகொத்தா தலைமையகத்திற்கு அருகில் நாளை புதன்கிழமை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐ.தே.க.வின் விசேட செயற்குழுக் கூட்டம் நாளை சிறிகொத்தாவில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் பாரிய நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருக்கும் கட்சி தலைமைத்துவம் தொடர்பாக ரணில் விக்ரமசிங்க சரியான தீர்வைப் பெற்றுத் தரத் தவறுவாராயின் அதற்கு எதிராக சாகும் வரையும் உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவிருப்பதாக அக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.
கட்சி தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க வெளியேறும் வரையும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் காணப்பட்ட இணக்கப்பாட்டுக்கு ஏற்ப கட்சித் தலைவராக கரு ஜயசூரியாவை நியமிப்பதற்கு மாகாண சபை உறுப்பினர்கள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். எதிர்வரும் நாட்களில் அந்த யோசனைக்கு மக்கள் பிரதிநிதிகள் சக லரும் அங்கீகாரம் வழங்குவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியின் தலைமையை கட்சியின் செயற்குழு இணக்கப்பாட்டின் ஊடாகவே மாற்ற முடியும். அதனால் டிசெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் கட்சி மாநாடு வரை பொறுத்திருப்பது அவசியம் என்றும் கூறப்படுகிறது.
இரண்டாம் இணைப்பு
மேலும், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போது நிலவிவரும் தலைமைத்துவப் போட்டி இந்த வாரம் நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பூதாகரமாக உருவெடுக்கும் என அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சஜித் பிரேமதாச தரப்பு இந்தக் கூட்டத்தில் கரு ஜயசூரியவை கட்சியின் தலைவராக நியமிக்க வேண்டும் என்று பிரேரணை ஒன்றைக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளது.
இது செயற்குழுவில் பெரும் சர்ச்சையைப் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தில் கடந்த வாரம் சஜித் பிரேமதாச தரப்பு கரு ஜயசூரியவை கட்சித் தலைவராக்க வேண்டும் என்ற பிரேரணையை நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையை மாற்றுவதற்கு எதிர்வரும் டிசெம்பர் வரை பொறுத்திருக்கும்படி ரணில் விக்கிரமசிங்க இந்தச் சந்தர்ப்பத்தில் தெரிவித்திருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தின் பின்னர் எதிர்வரும் புதன்கிழமை முதன் முறையாக கட்சியின் செயற்குழு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தருஸ்மன் அறிக்கை மூலம் டொலர்களை பெற்றவர்களின் கட்டுக்கதைதான் கிறீஸ் பூதம்! பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித.

புலி பதுங்குவது பாய என்கின்றனர். அவ்வாறு எந்தப் புலிகளும் இல்லை. மிருகக்காட்சிச்சாலையில் இருக்கின்ற புலிகள் மட்டுமே இருக்கின்றன. சனல் -4, தருஸ்மன் அறிக்கை மூலம் டொலர்களைப் பெற்று பக்கட்டுக்களை நிரப்பியவர்களின் கட்டுக்கதையே இந்தக் கிறிஸ் பேய் வதந்தியென சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தார்.
மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்ற பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளிட்டோர் மத்தியில் கிறிஸ் மனிதன் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் இங்கு உரையாற்றிய அவர்,
சிங்களவனாக ஒரு பொலிஸ் அதிகாரியாக இல்லாமல் நல்ல நண்பனாக உறவினனாக உரையாற்ற விரும்புகிறேன். சில அடிப்படைவாதிகள், விசமிகள் சமூக விரோதிகள், நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்ல நினைப்பவர்கள், இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் இந்தக் கூட்டம் நடைபெறுவது அறிந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூட்டத்துக்குச் செல்ல வேண்டாம் என மிரட்டியுள்ளனர்.
ஆகவே இதன் அடிப்படை என்னவென்றால், புலிச்சின்னம் போட்ட கடிதங்களை அனுப்பியுள்ளனர். புலிகள் இங்கு இல்லை. புலிகள் ஒழிக்கப்பட்டு விட்டனர். என்ன நடந்தது. எங்கே இருந்து உங்களுக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. எல்லாம் எங்களுக்குத் தெரியும். அனைத்தும் பெயர் விபரங்களுடன் உள்ளன.
தமிழ் விடுதலை, தமிழர்கள் விடுதலை இயக்கம் என்று ஒன்று இல்லை. அரசாங்கம் என்று மட்டுமே ஒன்று உள்ளது. அதே போன்று சிங்களவர் விடுதலை, முஸ்லிம்கள் விடுதலை, முஸ்லிம்களின் விடுதலை என்றும் ஒன்றும் இல்லை.
அப்பட்டமான பொய்ப்பிரச்சாரங்களுக்கு உட்பட வேண்டாம். குட்டக்குட்ட குனிபவனும் மடையன், குட்டுபவனும் மடையன். என்பது போல் இவ்வாறான கதைகளை எழுப்பி பிரிவினையை உருவாக்கப் பார்க்கின்றனர். சிங்கள மக்கள் இனவாதத்தைக் கிளப்பும் வகையில், புதிதாக கிறிஸ் பேய் என்ற கட்டுக் கதையைக் கிழப்பியுள்ளனர். இதனைச் செய்வது பாதுகாப்புப் படைகளிலுள்ள சிங்களக் காடையர்கள் என்று சிலர் சொல்கின்றனர்.
இவர்களுடன் சேர்ந்து கும்மாளமிடும், மக்கள் பிரதிநிதிகளும் அவமானப்படுத்துகின்ற கருத்துக்களையே தெரிவிக்கின்றனர். தமிழ், முஸ்லிம் மக்களின் மத்தியில் இனவாதத்தினைப் பரப்ப சிங்கள இனவாதச் சூத்திரதாரிகள் முயல்கின்றனர்.
புலி பதுங்குவது பாய என்கின்றனர். அவ்வாறு எந்தப் புலிகளும் இல்லை. மிருகக்காட்சிச் சாலையில் இருக்கின்ற புலிகள் மட்டுமே இருக்கின்றன. விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தில் பிரபாகரன், அவரது குடும்பம், அவர்களது ஆதரவாளர்கள், அனைவரும் அழிக்கப்பட்டு விட்டனர். யுத்தம் செய்து பெற முடியாததை சனல் -4, தருஸ்மன் அறிக்கை மூலம் அழுத்தம் கொடுத்து சாதிக்க முயல்கின்றனர்.
எந்த ஒரு மனிதனும் தனது பிள்ளைகளை படிக்கச் செய்து சமுதாயத்தில், நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதையே யோசிப்பர். எங்களது ஆயுதங்கள் மௌனமாக இருக்கின்றது. இங்கு ஒன்றாக இருக்கும் தமிழ், முஸ்லிம் மக்களிடையே பிரிவினை ஏற்படுத்த முனையும் சிங்கள அடிப்படைவாதிகளுக்கு எமது ஆயுதமே பேசும். இப்போது எந்தப் பயங்கரவாதமும் இல்லை.
அடிப்படைவாதிகள், மக்களை அச்சுறுத்த சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது, ஒரு சிலர் ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருக்கின்றனர். அவர்களும் ஆயுதங்களைக் கையளிக்க காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆயுதங்களை வைத்திருப்போர் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்காமல் இருப்பதற்காக இவ்வாறான சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருவது நமக்குத் தெரியும்.
வெளிநாடுகளில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் எவரும் பயப்படத் தேவையில்லை. தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் எனத் தெரிவித்துள்ளனர். இதனை இலங்கைத் தேசம் என மாற்றுங்கள். அரசில் இன மத பேத வேறுபாடுகள், சிங்கள, தமிழ் என்ற வேறுபாடுகள் கிடையாது. மானிட மனித நேயத்தை மட்டுமே நாங்கள் கொண்டுள்ளோம்.
வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு பகுதிகளிலும், மனித நேயத்துடனேயே வாழ்கின்றோம். கிறிஸ் பேய் என்பதை கண்டது யார். அது இராட்சத உருவமா? அதனைப் புகைப்படம் பிடித்தவர்கள் யார். இது ஹகாவத்தையிலேயே முதலில் ஆரம்பமானது. பல கொலைகள் நடந்தது. இது தொடர்பில், பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் வேளையில் சில தடங்கல்கள் காரணமாக விசாரணை சற்றுப் பிந்தியது.
இந்தச் சம்பவத்தின் போது கொல்லப்பட்டவர்கள், வயோதிபர்கள். இவர்களைக் கொன்றது. பேய் என அர்த்தம் கற்பிக்கப்பட்டது. மூன்று நான்கு மாதங்களின் பின்னர் மக்களின் பொறுமை எல்லை கடந்தது. மக்கள் கிளர்ந்தெழுந்தனர். ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன. அவர்களது கோபம் நியாயமானது.
கடந்த 30 வருட கால யுத்தம் காரணமாக பல்வேறு நெருக்கடிகள், வேதனைகளிலும் வாழ்ந்த மக்கள் கிழக்கு மாகாணம் இவ்வாறான ஒரு பிரதேசமாக இருந்ததன் காரணமாக அந்த மக்களின் பிரச்சினை எங்களுக்கு நன்றாக விளங்கும். முன்னர் ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் உள்ளான மக்கள் என்ற வகையில் உங்களின் உணர்வுகளை நான் உணர்கின்றேன்.
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் போது பொலிஸார் சட்டம் ஒழுங்கை கையாள முடியாத நிலை ஏற்படும் போது உங்களுக்கு வெறுப்பு ஏற்படுவது உண்மை. இதன் அடிப்படையிலேயே ஹகாவத்தையில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள், பொலிசாருக்கெதிராக கூக்குரலிட்டனர்.
கல்குடாவிலிருந்து மட்டக்களப்புக்கு நான் வரும்போது செங்கலடி பிரதேசத்தில் ரயர் எரிவதைக் கண்டேன். புதிய காபட் வீதியில் அந்த ரயர்களைப் போட்டு எரிப்பதனால், அந்த வீதி பழுதடைந்து விடும். இதனால் யாருக்கு நட்டம் ஏற்படுகிறது. உங்களுக்குத்தான். இது தொடர்பில் இருவரைக் கைது செய்து கொண்டு வந்தோம்.
ஹகாவத்தை சம்பவத்தில் நான் ஊவா மாகாண பொலிஸ் அத்தியட்சகராகக் கடமையாற்றினேன். பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர், இரத்தினபுரியில் நிலைமை மோசமாக இருக்கிறது சென்று பாருங்கள் என்று கூறினர். நான் இரத்தினபுரிக்குச் செல்லவில்லை. நேரடியாக ஹகாவத்தைக்குச் சென்றேன். அங்கு சென்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர படையினருடன் இணைந்து முயற்சித்தேன்.
நான்கு நாட்களில் ஒழுங்கான விசாரணைகளைச் செய்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தேன். இது பொலிசாரால் மட்டும் முடியாத காரியம். அங்கு ரயர்கள் எரித்த மக்களின் ஒத்துழைப்புடனேயே கண்டுபிடித்தோம். மக்களை அழைத்து விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டோம். ஒத்துழைப்பு வழங்கினார்கள் கண்டுபிடித்தோம். சந்தேக நபர்களைக் கைது செய்து கொலையாளியின் அடிப்படையைப் பார்த்தோம். சாதாரண மக்களின் கோபதாபங்களின் அடிப்படையில் நடந்த கொலைகள். இதில் எந்தப் பேயும் சம்பந்தப்படவில்லை.
ஒரு கொலை நடந்தால் அந்த வீட்டையும் அழுதவர்களையும் மட்டும் பார்க்காமல் கொலையின் மறுபக்கம் கொலையாளியின் பக்கம், எல்லாம் பார்க்கப்பட வேண்டும். பொலிஸ் அதனையே செய்கின்றது. விடுதலைப்புலிகளின் பயங்கரவாதமும் இதனை ஒத்ததுதான். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கல்வி மான்கள், புத்திஜீவிகள், இதையொத்தவர்களே.
அந்தக்காலத்தில் யுத்தத்தில் ஈடுபட்டவர்கள், கைது செய்யப்பட்ட போது அவர்கள் துன்புறுத்தப்படவில்லை. தாக்கப்படவில்லை. நல்ல நிலையிலேயே இருந்தனர். அவ்வாறானவர்களில் ஒருவர், இன்று கிழக்கு மாகாணத்தை ஆட்சி செய்கின்றார். முன்னர் தலைவராக இருந்த ஒருவர் அரசாங்கத் தரப்பில் பிரதி அமைச்சராக இருக்கின்றார். இதே போன்று மாகாண சபை பிரதேச சபை உறுப்பினர்களாகவும் அவர்கள் இருக்கின்றனர்.
இதனை மனச்சாட்சியுள்ள எவரும் மறுக்க மாட்டார்கள். இது எங்கள் நாடு இங்கு பத்து ஆட்சியில்லை. மக்களால் தெரிவ செய்யப்பட்ட ஜனாதிபதி ஒருவருடைய தலைமையின் கீழ் ஜனநாயக ஆட்சி நடக்கின்றது. அமைச்சர்கள் அதிகாரத்தைக் கையில் எடுத்து மக்களைத் துன்புறுத்தினால் அவர்கள் மக்கள் பிரதிநிதியாக இருக்க அருகதையற்றவர்கள்.
பாதுகாப்புப் படையினர் பேச்சுவார்த்தை ஒன்றுக்குச் சென்றபோது விடுதலைப்புலிகள் அதனைப் பயன்படுத்தி ஆயுதச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
1983ம் ஆண்டு நடைபெற்ற 13 கொலைகள் பல்வேறு மாற்றங்களையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்தியிருந்தது. அன்று கொழும்புக்கு வந்த 13 சடலங்களைக் கண்டவுடன் எங்களுக்குள் இருந்த சில காடையர்கள், குழப்பக்காரர்கள் அப்பாவித் தமிழ் மக்களின் கடைகளை உடைத்தார்கள். எரித்தார்கள். அப்பாவித் தமிழர்களைக் கொன்றார்கள். இது கசப்பான உண்மை.
ஒருகாலத்தில் இந்து சமுத்திரத்தின் முத்து எனப் போற்றப்பட்ட இலங்கை இந்த நடவடிக்கைகளின் காரணமாக இரத்த ஆற்றில் மூழ்கியது. உலகமே ஒன்று திரண்டு இலங்கைக்கு கறுப்புப் புள்ளி குற்றியது. இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்கள் கொல்லப்படுகின்றனார்கள், நசுக்கப்படுகிறார்கள் என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டது. இதனை உலகமே நம்பியது. இது ஒரு சிலரின் நடவடிக்கையால் விளைந்தது.
இதனைத் தொடரந்து இந்நிலையை மாற்றுவதற்காக சிறப்புத் திட்டங்கள் தீட்டப்பட்டு இவ்வாறான அடிப்படைவாதிகள் விசமிகள், சமூக விரோதிகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டனர். மட்டக்களப்பிலும் யுத்த காலத்தின் போது மக்கள் பெரும் பீதியின் மத்தியிலேயே வாழ்ந்து வந்தனர். வெளியில் சென்றால் திரும்பி வருவது நிச்சயமில்லாமல் இருந்தது.
அதே போல் அரந்தலாவையில் 23 பிக்குமார் கொல்லப்பட்டமை, தலதா மாளிகை மீது குண்டு வைக்கப்பட்டமை, இலங்கையின் பொருளாதார முக்கியத்துவம் மிக்க மத்திய வங்கி மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வேளையில் சிங்கள மக்கள் கொதித்தெழுந்து தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தால் எவ்வாறான நிலை உருவாகியிருக்கும் என கேள்வி எழுப்பினார்.
வீணான வதந்திகளை நம்பி, பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையில் இருக்கின்ற உறவினைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் வியாபாரம், வர்த்தகம் செழிக்க வேண்டும் வீதிகள் புனரமைக்கப்பட வேண்டும், ஆசியாவில் ஆச்சரியம் மிக்க நாடாக மாற்ற வேண்டும். இது எமது எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்யவேண்டியதாகும்.
இந்தப்பயணம் மனிதாபிமானப் பயணமாகும். இது சீராக அமைய வேண்டுமானால் பொலிஸ் சேவை அவசியம் தேவை. இந்த நாடு அபிவிருத்திப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில், சனல் -4 தருஸ்மன் அறிக்கை போன்றவைகளால் டொலர்களைப் பெற்றுக் கொண்ட கொந்துராத்துக்காரர்களும் ஒப்பந்தக்காரர்களுமே அபிவிருத்திப் பாதைகளைத் தடைசெய்து தமது பக்கட்டுக்களை நிரப்புவதற்காக இவ்வாறான கண்டுபிடிப்புகளான கிறிஸ் பேய் கதைகளைக் கூறித் திரிகின்றனர்.
வடமேல் மாகாணத்தை ஒழுங்குபடுத்தி வரும் வேளையில், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்றுவரும், சம்பவங்களை கண்காணிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் ஆகியோர் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் உள்ள கிறிஸ் பேய என்ற வதந்தியை அழிப்பதற்கு அதற்குரிய நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்துக்கென சிறப்புத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. மாவட்டத்திலுள் 12 பொலிஸ் நிலையங்கள் ஊடாக இவற்றிற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நஷீட் இன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை பகல் 11.00 மணியளவில் இலங்கை வந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி முஹம்மட் நஸீட்டை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார்.
இவ்விஜயத்தின்போது மாலைதீவு ஜனாதிபதி தங்கியிருக்கும் இரண்டு நாட்களில் அரசியல் பிரமுகர்களையும் சந்தித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார் என தெரியவருகின்றது.
கட்சி விதிகளை மீறிச் செயற்படுவோர் கட்சியிலிருந்து நீக்கப்படுவர் – திஸ்ஸ அத்தநாயக்க எச்சரிக்கை.

கட்சி விதிகளை மீறிச் செயற்படுவோர் கட்சியிலிருந்து நீக்கப்படுவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கட்சி நிர்வாகத்தின் அனுமதியின்றி எந்தவிதமான நடவடிக்கைகளையும் கட்சி உறுப்பினர்கள் மேற்கொள்ளக் கூடாது.
இவ்வாறு கட்சி விதிகளை மீறிச் செயற்படுவோரை கட்சியை விட்டு நீக்க நேரிடும்.
நாச வேலைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கட்சி செயற்குழுவிற்கு பூரண அதிகாரம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாளைய தினம் நடைபெறவுள்ள செயற்குழுக் கூட்டம் யாப்பிற்கு புறம்பானது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நாளை செயற்குழுக் கூட்டம் நடைபெறும் சந்தர்ப்பத்தில் சத்தியாக் கிரகப் போராட்டமொன்றை நடாத்த ஐக்கிய தேசியக் கட்சியின் மாற்றுக் குழு உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு ரணில் விக்ரமசிங்க தடை ஏற்படுத்த மாட்டார் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அழைப்பு விடுத்துள்ளார்.
ஐ.தே.க. தலைமைப் பதவி நெருக்கடி! மஹாராசா ஊடக நிறுவனம் மீது ரணில் குற்றச்சாட்டு.

ரணில் விக்ரமசிங்க இலங்கையின் பிரதான எதி்ர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உட்பூசல்கள் பூதாகரமாகியுள்ளன. கட்சிக்குள் மறுசீரமைப்பு வேண்டுமெனக் கோரி தம்மை மாற்று அணியினராக அடையாளப்படுத்தும் குழுவினர், நாளை புதன்கிழமை சத்தியாகிரகம் நடத்துமளவுக்கு நிலமை மோசமாகியுள்ளது.
தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்துள்ள தமது கட்சிக்கு மூத்த தலைவர்களில் ஒருவரான கரு ஜயசூரியவை புதிய தலைவராக அறிவிக்க வேண்டுமென சஜீத் பிரேமதாஸ அணியினர் கோரிவருகின்ற நிலையில், அதற்கு தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்றும் மசிந்து கொடுப்பதாகத் தெரியவில்லை.
இதனிடையே, கட்சியின் செயற்குழுவை நாளை கூட்ட ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டிருக்கும் நிலையில், செயற்குழுவுக்கு உள்ள தகைமையை கேள்விக்குட்படுத்தி மறுசீரமைப்பை கோரும் அணியினர் கட்சித் தலைமையகமான சிறிகோத்தவில் சத்தியாகிரக போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
ஆனால், நாளைய தமது கூட்டத்தை குழப்பும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட முனைவதாகவும் சத்தியாகிரகத்தில் ஈடுபடுவோர் ஐக்கிய தேசியக் கட்சியினராக இருக்க மாட்டார்கள் என்றும் ஊடகங்களுக்கு அறிவித்த ரணில் விக்ரமசிங்க, மறுசீரமைப்பைக் கோருவோரின் சத்தியாகிரக விளம்பர அறிவிப்பை ஒளிபரப்பியமைக்காக அங்குள்ள ஊடக நிறுவனமான மஹாராஜா ஊடக வலையமைப்பையும் கடுமையாக சாடியுள்ளார்.
மஹாராஜா நிறுவனம் தம்முடன் பகைமை பாராட்டுவதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் இரண்டு தேசிய பட்டியல் நாடாளுமன்ற ஆசனங்களை தங்களுக்கு தர வேண்டுமென்று மஹாராஜா நிறுவனம் கோரியிருந்ததாகவும் அதனை கட்சி நிராகரித்து விட்டதாலேயே தாம் பழிவாங்கப்படுவதாகவும் ரணில் குற்றஞ்சாட்டினார்.
ஆனால் ரணில் விக்ரமசிங்கவின் இந்தக் குற்றச்சாட்டை மஹாராஜா ஊடக நிறுவனம் நிராகரித்துள்ளது.
தொடர்ந்தும் தோல்வியடைந்து வருகின்ற ஒருவருக்கு தானாகவே பித்துப் பிடித்துப் போகும் என்று மட்டுமே தம்மால் கூறமுடியும் என்று மஹாராஜா நிறுவனத்தின் பேச்சாளர்களில் ஒருவரான சுரங்க சேனாநாயக்க பிபிசியிடம் தெரிவித்தார்.
அமெரிக்கா - தென்கொரியா கூட்டு ராணுவப் பயிற்சி.
அமெரிக்காவும் தென்கொரியாவும் கூட்டு ராணுவப் பயிற்சியை சியோலில் இன்று துவக்கின.
கொம்யூனிஸ்ட் நாடான வடகொரியாவுடன் பதட்டம் அதிகரித்த நிலையில் தென் கொரியா தற்காப்பு நடவடிக்கையாக இந்த பயிற்சியைத் துவக்கி உள்ளது. இந்த ராணுவ பயிற்சியில் தென்கொரியா, அமெரிக்கா மற்றும் இதர 7 நாடுகளைச் சேர்ந்த 5 லட்சத்து 50 ஆயிரம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த ஐ.நா கூட்டு ராணுவப் படைப்பிரிவு பயிற்சி குறித்து வடகொரியாவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 1950-53ம் ஆண்டுகளில் கொரியா போர் முடிவடைந்தது. இருப்பினும் அமைதி ஒப்பந்தம் முறைப்படி எட்டப்படவில்லை.
அப்போது நடைபெற்ற போர் நிறுத்தம் காரணமாக உலகின் அதிக பாதுகாப்பு உள்ள எல்லை இரண்டாக உடைந்தது. 2006ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை வடகொரியா அணுகுண்டு சோதனைகளை நடத்தி உள்ளது.
முறையான இடைவெளி இல்லாமல் ஆயுத தாக்குதல் மற்றும் கடல் மோதல்களையும் மேற்கொண்டு உள்ளது. கடந்த வாரம் கடல்சார் எல்லையில் வடகொரியா துப்பாக்கி வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.
கட்டாயப்படுத்தி தாய் வேலை வாங்குவதாக பொலிசிடம் புகார் செய்த சிறுவன்.
ஓய்வே இல்லாமல் வீட்டு வேலைகளை தருகிறார்கள் என 11 வயது ஜேர்மனி சிறுவன் பொலிசாருக்கு தொலைபேசியின் மூலம் புகார் செய்தான்.
தனது தாயார் வீட்டை கழுவி சுத்தம் செய்ய கூறிய போது கட்டாயப்படுத்தி வேலை வாங்கும் தொழிலாளராக வீட்டில் வேலை வாங்குகிறார்கள் என அந்த சிறுவன் புகார் செய்தான்.
பள்ளிக்கூட நாட்களிலும் வீட்டு வேலை வாங்குவதாக பொலிசில் புகார் செய்யப் போவதாக சிறுவன் மிரட்டி வந்தான் என அவனது தாயார் பொலிசாரிடம் தெரிவித்தார்.
புகார் செய்த சிறுவனிடம் எந்தவிதமான பணிகளை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டான் என்ற விவரத்தை பொலிசார் கேட்டறிந்தனர். வீட்டையும் மாடிப்பகுதியையும் சுத்தம் செய்ய தாய் கட்டாயப்படுத்தினார் என அந்த சிறுவன் தெரிவித்தான்.
சிறுவன் வீட்டில் இருக்கும் போது நாள் முழுவதும் விளையாடுகிறான். வீட்டில் கிடக்கும் குப்பைகளை எடுக்க கூறிய போது அவன் பொலிசாரை அழைத்து உள்ளான் என அவனது தாயார் தெரிவித்தார்.
பசியால் வாடும் ஆப்ரிக்க மக்களுக்கு அனுப்பப்படும் உணவுப்பொருட்கள் கொள்ளை: விசாரணைக்கு ஐ.நா உத்தரவு.
ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள சோமாலியாவில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் சாப்பிட உணவு இன்றி அங்கு வாழ்பவர்களில் பாதி பேர் அதாவது 4 1/2 லட்சம் மக்கள் அவதிப்படுகின்றனர்.
5 வயதுக்குட்பட்ட சுமார் 29 ஆயிரம் குழந்தைகள் உணவின்றி உயிரிழந்துள்ளனர். பல குழந்தைகள் எலும்பு கூடுகளாக நடமாடி வருகின்றனர்.
எனவே சோமாலியா அரசு நிவாரண முகாம்களை அமைத்துள்ளது. அந்த முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு ஐ.நா சபையின் உலக உணவு திட்ட குழுமம் மூலம் உலக நாடுகள் உணவு பொருட்களை அனுப்பி வைக்கின்றன.
ஆனால் அவற்றை ஒரு கும்பல் கொள்ளையடித்து வருகிறது. அந்த பொருட்களை மிக அதிக விலைக்கு விற்று பணம் சம்பாதித்து வருகின்றது.
இதனால் முகாம்களில் தங்கியிருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவு பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து ஐ.நா சபையின் உலக உணவு திட்ட குழுமத்திடம் புகார் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 2 மாதங்களாக இந்த உணவு கொள்ளை நடப்பது உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து உணவு பொருட்கள் கொள்ளை குறித்த விரிவான விசாரணைக்கு ஐ.நா சபை உத்தரவிட்டுள்ளது.
முபாரக்கிடம் நடத்தப்படும் விசாரணையை நேரடியாக ஒளிபரப்ப தடை.
எகிப்து முன்னாள் அதிபர் முபாரக்குக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அதனால் பதவி விலகிய அவர் தற்போது ராணுவ ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கொன்று குவிக்க ராணுவத்துக்கு உத்தர விட்டது மற்றும் லஞ்ச ஊழல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதற்காக தலைநகர் கெய்ரோவில் ராணுவ சிறப்பு கோர்ட்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் மீதான வழக்கு விசாரணை கோர்ட்டில் தொடங்கியது.
நேற்று நடைபெற்ற விசாரணையில் ஆஜராக ஆஸ்பத்திரியில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அவர் கொண்டு வரப்பட்டார். அவருடன் அவரது மகன்கள் அலா, கமால் ஆகியோரும் கொண்டு வரப்பட்டனர்.
பின்னர் விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட முபாரக் பாதுகாப்புக்காக ஒரு கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் இருந்தார். கோர்ட்டில் நடைபெறும் வழக்கு விசாரணையை தொலைக்காட்சிகள் படம் எடுத்து நேரடியாக ஒளிபரப்ப அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அதை பார்க்க கெய்ரோவில் உள்ள தக்ரீர் மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி நின்று பார்த்தனர்.
இதனால் தேவையற்ற பதட்டம் நிலவியது. எனவே வழக்கு விசாரணையை நேரடியாக ஒளிபரப்ப கூடாது என எதிர்ப்பு கிளம்பியது. அதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையை தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப நீதிபதி ரீபாத் தடை விதித்தார். தொலைக்காட்சி கமெராக்களை விசாரணை நடைபெறும் அறையில் இருந்து அகற்ற உத்தரவிட்டார்.
முபாரக் ஆஜர்படுத்தப்பட்ட போது கோர்ட்டு வெளியே அவரது ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கோஷங்களை எழுப்பியபடி ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
வேட்பாளர் தேர்தலில் மிச்லே வெற்றி: அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அதிர்ச்சி.
அமெரிக்காவில் 2012ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நடப்பு ஜனாதிபதியான பராக் ஒபாமா ஜனநாய கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியிடுகிறார். குடியரசு கட்சியில் ஜனாதிபதி வேட்பாளர் ஆக 3 பேர் போட்டி போடுகிறார்கள். அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான டெக்சாஸ் கவர்னர் ரிக்கி பெர்ரி, மிச்லேபாச்மன் மற்றும் நியூஜெர்சி கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி ஆகியோர் போட்டி போடுகிறார்கள்.
இதனால் குடியரசு கட்சியில் யாரை வேட்பாளராக தேர்வு செய்வது என்பது தொடர்பான கட்சி உறுப்பினர்கள் கருத்து கோரும் தேர்தல் தற்போது நடைபெறுகிறது. இந்த கருத்து தேர்தலின் முதல் கட்டமாக லோவா மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மிச்லேபாச்மன் வெற்றி பெற்றார்.
அவரது வெற்றி ஜனாதிபதி ஒபாமா அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. கன்சர்வேடிவ் குடும்பத்தை சேர்ந்த அவருக்கு குறிப்பிட்ட மக்களின் வாக்குகள் பெருமளவு கிடைக்கும் என்பதால் ஒபாமாவுக்கு கடும் சவால் எழுந்துள்ளது. 55 வயது மிச்லே பாச்மன் கடந்த வாரம் வரை அதிகம் அறியப்படாதவராக இருந்தார்.
தற்போது நடக்கும் குடியரசு தேனீர் விருந்து நிகழ்ச்சிகளில் மிச்லேபாச்மன் போஸ்டரே உயர்த்தி பிடிக்கப்படுகிறது. தீவிர வலதுசாரி அமைப்பை சேர்ந்த மிச்லேவக்கு இன ரீதியான வாக்குகள் அதிகம் கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
தற்போது மிச்லே நடத்தும் பேரணிகளுக்கு வரும் ஆதரவாளர்களின் எண்ணிக்கையும் பல ஆயிரமாக உயர்ந்துள்ளது.
சிரியாவில் பாலஸ்தீன அகதிகள் முகாமில் வெடிகுண்டு தாக்குதல்: அகதிகள் மரணம்.
சிரியாவில் உள்ள லடாகியா துறைமுக பகுதியில் பாலஸ்தீன அகதிகள் முகாம் உள்ளது. இங்கு சிரிய ராணுவம் கடுமையாக குண்டுகளை வீசி தாக்கி வருகிறது.
இந்த தாக்குதலில் பல அகதிகள் உயிரிழந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். சிரியா நடத்திய இந்த தாக்குதலுக்கு அரபு நாடுகளும் உலக நாடுகளும் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளன.
பாலஸ்தீன அகதிகள் முகாமில் தாக்குதல் நடத்தியதற்கு சிரியாவை பாலஸ்தீன அரசு நிர்வாகம் கடுமையாக எச்சரித்தது. குண்டு மழைகள் தொடர்ந்து பெய்ததை தொடர்ந்து பல ஆயிரம் பாலஸ்தீன அகதிகள் தெற்கு லடாகியாவில் உள்ள ரமேல் அகதிகள் முகாமில் இருந்து தப்பி ஓடினர்.
சிரியா ராணுவம் நடத்திய வெடிகுண்டு தாக்குதலை அமெரிக்கா உறுதிப்படுத்தவில்லை. சிரியாவின் தாக்குதல் நடவடிக்கைக்கு அரபு நாடுகளின் சார்பில் ஜோர்டன் எச்சரிக்கை விடுத்தது.
போராட்டக்காரர்களை கொன்று மனித உரிமைகளை மீறும் சிரியாவின் ஜனாதிபதி பஷார் அல் அசாத் பதவியில் நீடிக்கும் உரிமை இல்லாதவர் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்தார்.
ஒபாமாவின் தேர்தல் பிரசாரம்: பஸ்சில் சென்று மக்களை சந்தித்தார்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு(2012) டிசம்பர் மாதத்தில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஒபாமா 2வது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.
கடந்த மே மாதம் 2ந் திகதி பாகிஸ்தான் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த அல்கொய்தா தலைவர் பின்லேடன் அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அதை தொடர்ந்து அமெரிக்க மக்களிடம் அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்தது. எனவே 2வது முறையும் வெற்றி பெற்று மீண்டும் அதிபர் ஆவார் என்ற கருத்து நிலவியது. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவின் பொருளாதார நிலையில் சரிவு ஏற்பட்டுள்ளது மற்றும் வேலைஇல்லா திண்டாட்டமும் நிலவுகிறது.
இதனால் ஒபாமா ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தியாக உள்ளனர். எனவே வேலை இல்லாதிண்டாட்டத்தை போக்கவும், பொருளாதாரத்தை சீரமைக்கவும் அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதை தொடர்ந்து சமீபத்தில் பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் ஒபாமாவின் நடவடிக்கைக்கு ஆதரவாக 39 சதவீதம் பேரும், எதிராக 54 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இது குடியரசு கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. எனவே மக்களை நேரில் சந்தித்து தான் எடுத்துள்ள சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்க ஒபாமா முடிவு செய்தார். அதற்காக அவர் புதுவிதமாக பஸ்சில் சென்று மக்களை சந்தித்து தனது நடவடிக்கைகள் குறித்து விளக்க திட்டமிட்டிருந்தார்.
அமெரிக்காவின் ஓட்டு வங்கியாக கருதப்படும் மின்னசோட்டா, லோவா, இல்லினாய்ஸ் ஆகிய புறநகர் மாகாணங்களில் தனது பிரசாரத்தை மேற்கொள்கிறார். இப்பிரசாரம் 3 நாட்கள் நடக்கிறது.
முதல் நாளான நேற்று மின்னெ சோட்டாவில் மக்களை சந்தித்து பேசினார். இதன் மூலம் தனது செல்வாக்கு உயரும் என கருதுகிறார். ஒபாமாவின் இந்த மக்கள் சந்திப்பு தேர்தல் பிரசாரமாக கருதப்படுகிறது.
எரிந்த காரில் 2 சிறுமிகளின் உடல்கள்: பொலிசார் விசாரணை.
ஜேர்மனியின் பான்டன்பர்க்கில் எரிந்த காரில் 2 சிறுமிகளின் உடல்கள் காணப்பட்டன. அவர்களது உடல்கள் பிரேதப்பரிசோனை மேற்கொள்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அவர்களது மரணம் குறித்து பொலிசார் விசாரணையை துவக்கினர். கருகிய நிலையில் இறந்து கிடந்த ஒரு சிறுமியின் பெயர் சோபி(9), மற்றொரு சிறுமியன் பெயர் மரிலின் மேரி(10).
இந்த சகோதரிகள் டென்மார்க் நகரமான ஹட்சன்ட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த சிறுமிகளின் மரணத்திற்கு அவர்களது டென்மார்க் பள்ளியில் நினைவு பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
இவர்களது தந்தை பீட்டர் ஆவார். அவர் கடுமையான தீக்காயங்களுடன் பெர்லின் மார்சன் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் தனது மனைவியையும் 2 குழந்தைகளையும் பிரிந்து இருந்தார்.
இருப்பினும் தந்தையை காண அந்த சிறுமிகள் வருவதுண்டு. அவர்கள் தந்தையை காண வந்த நேரத்தில் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். பீட்டர் எதற்காக ஜேர்மனிக்கு பயணம் மேற்கொண்டார்.
அவர்கள் பயணித்த கார் எதிர்பாராத விபத்தில் எரிந்ததா அல்லது திட்டமிட்டே எரிக்கப்பட்டதா என்பது குறித்து பொலிசார் விசாரணையை துவக்கினர்.
ஐரோப்பிய கடன் பிரச்சனை: சர்கோசி - ஏங்கலா மார்கெல் முக்கிய பேச்சுவார்த்தை.
கிறீஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் கடன் பிரச்சனையில் தள்ளாடுகின்றன. இந்த நாடுகளின் கடனை சரி செய்வதற்கு ஐரோப்பா தரப்பில் கடன் பத்திரம் வெளியிடலாமா என்பது குறித்து கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் ஜேர்மனி அதிபர் ஏங்கலா மார்கெல் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள். சர்ச்சைக்குரிய ஐரோப்பிய கடன் பத்திரம்
வெளியிடுவது குறித்து இருதலைவர்களும் நிச்சயம் விவாதிக்கப்போவது இல்லை என இரு அரசுகளின் செய்தித்தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.
இந்த அறிவிப்பின் காரணமாக ஸ்பெயின் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்தது. ஜேர்மனி பங்கு சந்தை அதிகரித்தது. பிரிட்டன் மற்றம் பிரான்ஸ் சந்தைகள் குறிப்பிடத்தக்க அளவு முன்னேறின.
ஐரோப்பிய கடன் பத்திரங்கள் மூலம் சொந்த நாடுகளின் கடன் சுமையும் அதிகரித்து விடும். கடனில் தவிக்கும் நாடுகளில் சீரமைப்பும் மேற்கொள்ள முடியாது என இருதலைவர்களும் முடிவுக்கு வந்துள்ளனர்.
சர்கோசியும் ஏங்கலாவும் இன்று விவாதிக்கும் முக்கிய ஆலோசனை விவரங்களை ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ஹெர்மான் வான் ரோம்பியிடம் தெரிவிக்கிறார்கள்.
16 துப்பாக்கிகள் வைத்திருந்த நபர் கனடா எல்லையில் கைது.
அல்பெர்டாவை சேர்ந்த நபர் ஒருவர் 16 துப்பாக்கிகளுடன் எல்லையில் வந்த போது கனடா ஆர்.சி.எம்.பி பொலிஸ் அதிகாரிகள் கைது செய்தனர்.
அந்த நபர் அமெரிக்காவில் இருந்து எல்லையை கடக்க முயற்சி செய்த போது கைது செய்யப்பட்டார். 48 வயது உள்ள அந்த நபர் அட்லாண்டா கார்வே பகுதி வழியாக கனடாவில் ஊடுருவ முயன்ற போது பிடிபட்டார்.
கடந்த 9ஆம் திகதி பொலிசார் அவர் பயணித்த டிரக்கை சோதனை செய்த போது துப்பாக்கிகளை அதிக அளவில் பதுக்கி இருப்பது தெரியவந்தது. அவர் வைத்து இருந்த ஆயுதங்களில் 9 கை துப்பாக்கிகளாகவும், 7 நீண்ட குழல் துப்பாக்கிகளாகவும் இருந்தன.
அதனுடன் துப்பாக்கி குண்டுகளை வைக்க கூடிய பட்டையும் சைலன்சரும் இருந்தன. பல்வேறு குற்றங்களுக்காக அந்த நபருக்கு 11 ஆயிரத்து 500 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.
பல்வேறு நிபந்தனைகளுடன் அவர் விடுவிக்கப்பட்டார். அவரது கனடிய கடவுச்சீட்டு மற்றும் யு.எஸ் நிரந்தர குடியிருப்பு அட்டைகள் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. லெத் பிரிட்ஜ் கோர்ட்டில் இந்த மாதம் 19ஆம் திகதி ஆஜர்படுத்தப்படுகிறார்.
ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 75 பேர் பலி.
ஈராக்கின் தலைநகர் பாக்தாத் உட்பட பல்வேறு நகரங்களில் நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்பு மற்றும் தற்கொலைத் தாக்குதல்களில் 75 பேர் பலியாகினர்.
பாக்தாத்தின் தெற்கில் 150 கி.மீ தொலைவில் உள்ள குத் நகரில் நேற்று நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 34 பேர் பலியாகினர்.
இதையடுத்து நஜாப், பக்குவுபா, பாக்தாத், கர்பாலா, கிர்குக், திக்ரித், ரமாடி ஆகிய நகரங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. ஒட்டு மொத்தத் தாக்குதல்களில் 75 பேர் பலியாகினர்.
இத்தாக்குதல்களில் கார் வெடிகுண்டுகள், சாலையோர குண்டுகள், தற்கொலைத் தாக்குதல்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. தியாலா மாகாணத்தில் மட்டும் ஏழு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
மிக அதிகபட்சமாக குத் நகரில் பலி நிகழ்ந்துள்ளது. ஈராக்கில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தங்கியுள்ள அமெரிக்கப் படையினர் இந்தாண்டின் இறுதிக்குள் முழுமையாக வெளியேறுவர் என முன்பே அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்திருந்தார்.
ஆனால் ஈராக்கின் பாதுகாப்பு குறித்து சந்தேகித்த அந்நாட்டு தலைவர்கள் 2012ம் ஆண்டு வரை அங்கு ஒரு சிறுபடைப் பிரிவாவது தங்கியிருக்க வேண்டும் என சமீபத்தில் தான் முடிவெடுத்தனர்.
ஈராக்கில் தொடரும் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்புப் பணியில் மேலும் திறன் பெறவும் இந்த அமெரிக்கப் படை ஈராக் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும். இதையடுத்து நிகழ்ந்துள்ள திட்டமிட்ட மிகப் பெரிய தாக்குதல்கள் இவை. இத்தாக்குதல்களுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
அமெரிக்காவின் ரகசிய உளவு விமானத்தை ஆராய சீனாவுக்கு அனுமதியளித்த பாகிஸ்தான்.
அபோதாபாத்தில் உள்ள ஒசாமா பின்லேடனின் வீட்டில் விழுந்த அமெரிக்க ரகசிய உளவு விமானத்தை ஆராய்வதற்கு சீன அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது.
இதனால் பாகிஸ்தான் - அமெரிக்க உறவில் மேலும் விரிசல்கள் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் ஒசாமா பின்லேடன் வசித்த வீட்டில் அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலின் போது அமெரிக்க உளவு விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி அந்த வீட்டின் வளாகத்தினுள் விழுந்தது.
உளவு விமானங்களைக் கண்காணிக்கும் பாகிஸ்தான் ரேடாரில் சிக்காதபடி இந்த உளவு விமானத்தின் உடல் பகுதியில் சில ரசாயனங்கள் பூசப்பட்டிருக்கும். அதனால் தாக்குதல் முடிந்த பின் விமானத்தின் அருகில் யாரையும் செல்லவிடக் கூடாது என அமெரிக்கா பாகிஸ்தானிடம் கோரியிருந்தது.
ஆனால் அமெரிக்கா தன்னிடம் சொல்லாமலேயே பின்லேடன் கதையை முடித்து விட்ட கோபத்தில் இருந்த பாகிஸ்தான் விமானத்தை ஆராய்வதற்கு சீனாவை அழைப்போம் என முன்பே கோடிட்டுக் காட்டியிருந்தது.
சமீபத்தில் உளவு விமானத்தை நேரில் ஆராய்ந்த சீன அதிகாரிகள் அதன் உடல் பகுதியில் இருந்து சில மாதிரிகளை சேகரித்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதை பாகிஸ்தான் உளவுத்துறை மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அஷ்பாக் கயானி ஆகியோர் மறுத்துள்ளனர். எனினும் இத்தகவல் உண்மை தான் என்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தி விட்டதாக சி.ஐ.ஏ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சமீப காலமாக இருதரப்பு உறவிலும் ஏற்பட்ட விரிசலால் சீனா பக்கம் பாகிஸ்தான் சாய்ந்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை அமெரிக்கா உடனான உறவில் மேலும் விரிசலை உருவாக்கலாம்.
போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் லிபியாவின் முக்கிய நகரங்கள்.
லிபிய அரசுப் படைகள் வசமிருந்த முக்கிய இரு நகரங்களை அரசு எதிர்ப்புப் படையினர் திங்கள்கிழமை கைப்பற்றியுள்ளனர்.
லிபிய அதிபர் கடாபியின் அரசுப் படைகளுக்கும், அரசு எதிர்ப்புப் படைகளுக்கும் அந்நாட்டில் தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது. இதில் லிபியாவின் தலைநகரான திரிபோலியைக் கைப்பற்ற இரு பிரிவினருக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திரிபோலியின் மேற்கில் உள்ள சோர்மான் மற்றும் வடக்கில் உள்ள கர்யான் ஆகிய நகரங்கள் அரசு எதிர்ப்பு படையினர் வசம் வந்துள்ளன. 10 மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற சண்டையின் இறுதியில் இரு நகரங்களையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இதனால் திரிபோலியின் முக்கிய இணைப்பு நகரான துனிஷியா முற்றிலுமாக அடைக்கப்பட்டு விட்டதாக அரசு எதிர்ப்பு படைகளின் மேற்குப் பகுதி செய்தித் தொடர்பாளர் அப்துல்சலாம் ஆத்மன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சண்டையின் போது 40-க்கும் அதிகமான கூலிப்படையினரை பிடித்து வைத்துள்ளோம் என்று மேலும் அவர் கூறினார்.
அரசு எதிர்ப்பு படையினர் இரு நகரங்களை கைப்பற்றிய போதிலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஜவாயியாவைக் அவர்களால் கைப்பற்ற இயலவில்லை. அரசுப் படையினரை எதிர்த்து முன்னேறவும் முடியவில்லை.
இதனால் கைப்பற்றப்பட்ட நகரங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இளைய சமுதாயத்திற்கான புதிய கொள்கைகள் வகுக்கப்படும்: பிரதமர் கமரூன்.
சோம்பேறித் தனம், பொறுப்பற்ற தன்மை, சுயநலம் ஆகியவற்றின் பிடியில் சிக்கியுள்ள பிரிட்டன் இளைய சமுதாயத்தை மீட்க சில வாரங்களில் புதிய கொள்கைகள் வகுக்கப்படும் என கமரூன் அறிவித்துள்ளார்.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் சமீபத்தில் உருவான கலவரம் நான்கே நாட்களில் நாடு முழுவதும் பரவியது. இச்சம்பவங்களில் இதுவரை இளைஞர்கள், இளம்பெண்கள் உட்பட 1,700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவங்களில் நடந்த திருட்டுகள், கொலைகள், கொள்ளைகள், பாலியல் வன்முறைகள் குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அதேநேரம் ஏழை, பணக்காரர் வித்தியாசமே இந்த கலவரங்களுக்குக் காரணம் என வலியுறுத்தும் சமூக நிபுணர்கள், கைது செய்யப்பட்டோருக்கு சிறைத் தண்டனை அளிக்கும் பட்சத்தில் அவர்கள் சமூகத்துக்கு மேலும் கேடு செய்வோராக மாறவே வாய்ப்புகள் அதிகம் எனவும் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கமரூன் கூறியதாவது: இந்தக் கலவரங்கள் நமக்கு ஓர் எச்சரிக்கை மணி. பிரிட்டனின் தற்போதைய இளைய சமுதாயம் சோம்பேறித் தனம், பொறுப்பற்ற தன்மை, சுயநலம் ஆகியவற்றின் பிடியில் சிக்கியுள்ளது.
நடந்த முடிந்த கலவரங்கள் பணத்திற்காக நடக்கவில்லை. கலவரக்காரர்களில் பெரும்பான்மையோர் தகப்பன் இல்லாத சூழலில் வளர்ந்தவர்கள் அல்லது முன்னுதாரணமான ஆண் ஆளுமையைத் தெரிவு செய்து வளராதவர்கள்.
ஏன் இவர்கள் இவ்வளவு மோசமாக நடந்து கொண்டனர்? அவர்களை வீட்டில் கவனிக்க ஆள் இல்லாமல் இருந்திருக்கலாம். அதனால் அவர்கள் தங்கள் மீதான கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம். இந்த மோசமான குணங்களில் இருந்து அவர்களை மீட்டு ஒழுக்கம் உள்ளவர்களாக ஆக்க சில நடவடிக்கைகள் தேவை.
அமைச்சரவையின் இரு மூத்த அமைச்சர்கள் இன்னும் சில வாரங்களில் இளைய சமுதாயத்தின் ஒழுக்க நெறிகளுக்கான புதிய கொள்கைகளை வகுப்பர். அவற்றில் 16 வயதில் உள்ள அனைவருக்கும் தேசிய மக்கள் சேவை பயிற்சி அளிக்கப்படும்.
இதன் மூலம் அவர்களுக்குப் போதுமான உடற்பயிற்சியும், சமூகத்தில் கலந்து பழகுவதற்கான பயிற்சியும், மக்களுக்கு உதவிகள் செய்வதற்கான பயிற்சியும் அளிக்கப்படும். இது மட்டுமின்றி கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படும் 1,20,000 குடும்பங்களின் குறைகள் விரைவில் பூர்த்தி செய்யப்படும்.
இதன் மூலம் அக்குடும்பங்களின் இளைய தலைமுறையினர் கல்வியில் நாட்டம் செலுத்த வழி வகுக்கப்படும். அரசியல்வாதிகள் ஒழுக்கம் பற்றிய கருத்துகளை வெளிப்படுத்துவதில் அதீத எச்சரிக்கையுடன் இருக்கின்றனர்.
தங்கள் பெயர் கெட்டு விடுமோ என்றோ அல்லது நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர் நம்மை எதிர்ப்பரே என்று பயந்தோ எது சரி எது தவறு என்று வெளிப்படையாகச் சொல்வதற்குத் தயங்குகின்றனர்.
புதிய மனித உரிமைகள் மசோதா விரைவில் கொண்டு வரப்படும். அதன் மூலம் மனித உரிமைகளை தங்கள் வசதிக்கேற்ப திரிக்கும் போக்கு தடுத்து நிறுத்தப்படும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF