Wednesday, May 25, 2011

இன்றைய செய்திகள்.


யாழில் பெற்றோலிய வளம் பற்றி ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழு திடீர் விஜயம்!

வடபகுதியிலுள்ள உள்ள பெற்றோலிய வளம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கென 5 பேர் கொண்ட நிபுணர் குழவினர் யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் விஜயம் செய்துள்ளனர். பெற்றோலிய வளத்தை எடுப்பது தொடர்பான சாத்தியப்பாடுகள் தொடர்பாகவும் தம்மோடு இவர்கள் கலந்துரையாடியதாக யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

வடபகுதியில் பெற்றோலிய வளம் தொடர்பான படலம் ஒன்று உள்ளதென்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் இவ்வாறு கடல்சார்ந்து காணப்படும் இவ்வளத்தை பாவிப்பதோ அல்லது எடுப்பதால் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமா என்பது தொடர்பாக ஆராய்வதற்கே இவர்கள் விஜயம் செய்துள்ளனர் என்று தெரியவருகின்றது.
மேஜர் ஜெனரல் ஒருவரை கட்டளையிடும் பணிகளிலிருந்து நீக்கினேன் - சரத் பொன்சேகா.

பயங்கரவாதத் தாக்குதல்களின் போது கண்ணீர் வடித்த மேஜர் ஜெனரல் தர அதிகாரி  ஒருவரை தாம் கட்டளையிடும் பணிகளிலிருந்து நீக்கியதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.போர் வெற்றியின் போது வெட்டப்பட்ட கேக்கின் அளவு குறைவடைவதனைப் போன்று படைவீரர்கள் நாட்டுக்கு ஆற்றிய அளப்பரிய சேவை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடும் குறைவடைந்துள்ளன.
நீதிமன்ற விசாரணைகளில் கலந்து கொண்ட போது அவர் இதனகை குறிப்பிட்டுள்ளார்.இராணுவத்தினர் பின்னடைவுகளை எதிர்நோக்கிய போது கோழைத்தனமாக கண்ணீர் வடித்த இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவரை கட்டளையிடும் பணிகளிலிருந்து தாம் நீக்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கடந்த வருடம் ஜனவரி மாதம், குறித்த மேஜர் ஜெனரலே தம்மை கைது செய்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்கப்பூரில் திருட்டுத்தனமாக தங்கியிருந்த 48 இலங்கையர் கைது.
சிங்கப்பூரில் திருட்டுத்தனமாக தங்கியிருந்த 48 இலங்கையர் நேற்று முன்தினம் சிங்கப்பூர் குடிவரவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிங்கப்பூரில் செயற்படும் அனைத்து தங்குவிடுதிகளையும் நேற்று முன் தினம் குடிவரவுத்திணைக்கள அதிகாரிகள் சோதனையிட்ட போதே சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 48 இலங்கையரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது  செய்யப்பட்டவர்கள் 15-70 வரையான வயதுப் பருவங்களைக் கொண்டவர்கள் என்றும் தற்போது அவர்கள் அனைவரும் சிங்கப்பூர் பொலிசார் வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் கிடைத்துள்ளன.அத்துடன் கடந்த வாரமும் சிங்கப்பூரில் 52 வரையான சட்டவிரோதப் புகலிடக் கோரிக்கையாளர்கள் அந்நாட்டுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிபுணர்குழு அறிக்கை தொடர்பில் இலங்கைக்குச் சீனா முழுமையாக ஆதரவு!
ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இலங்கைக்கு முழு ஆதரவும் வழங்கப்படுவதை சீனா உறுதிப்படுத்தியுள்ளது.தங்களுடைய பிரச்சினைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளும் தகுதியும் வல்லமையும் இலங்கை அரசுக்கும் மக்களுக்கும் இருக்கின்றது என்று சீனா முழுமையாக நம்புகின்றது என அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜங்ஜிச்சி தெரிவித்தார்.
இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை பீஜ்ஜிங் சென்ற வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், சீன வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இக் கலந்துரையாடலின்போது ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை குறித்தும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்தும் பீரிஸ் சீன வெளிவிவகார அமைச்சருக்கு விளக்கினார் என்று கொழும்பில் வெளிவிவகார அமைச்சுஅதிகாரிகள் தெரிவித்தனர்.இத்தகைய சூழலில் எல்லாப் பிரச்சினைகளையும் இலங்கை அரசும் மக்களும் தமக்குள்ளேயே தீர்த்துக் கொள்ளும் ஆற்றலும் வலுவும் கொண்டிருக்கிறார்கள் என்று சீனா முழுமையாக நம்புவதாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜங் ஜிச்சி தெரிவித்துள்ளார் என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
தேசிய நல்லிணக்கம் மற்றும் மீள்கட்டுமானம் என்ற இலக்குகளை இலங்கை அடைவதற்கு சீனா என்றும் துணை நிற்கும் என்றும் ஜங் ஜிச்சி தெரிவித்தார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சீனாவுக்கு வருகை தருவதற்கான அழைப்பு ஒன்றையும் அமைச்சர் பீரிஸிடம் அவர் விடுத்தார்.நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இந்தியாவுக்கு அமைச்சர் பீரிஸ் மேற்கொண்ட பயணம் வெற்றியளிக்காத நிலையில், அவரது சீனப் பயணம் சாதகமாக அமைந்துள்ளது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
கொழும்பில் நடைபெறவுள்ள இராணுவ மாநாட்டில் 25 வெளிநாட்டு ஊடகவியலாளர்கள்?
எதிர்வரும் 31ம் திகதி முதல் ஜூன் மாதம் 2ம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ள போர் ஒழிப்பு தொடர்பான இராணுவ மாநாட்டில் செய்தி சேகரிப்பதற்காக சுமார்   25 வெளிநாட்டு  ஊடகவியலாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உலகப் பயங்கரவாதம், தீவிரவாத அமைப்புக்கள், அரசியல் மற்றும் இராணுவத் தீர்மானங்கள், தேசத்தை கட்டியெழுப்புதல், புனர்வாழ்வு உள்ளிட்ட சில தலைப்புக்களில் கருத்தரங்கில் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்படவுள்ளன.இலங்கை வன்னிப் பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரின்போது, மனிதாபிமான மீட்புப் பணிகள் தொடர்பில் மறைப்பதற்கு எதுவுமில்லை என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
போரின் போது மனித உரிமை மீறப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட தருஸ்மன் குழுவினரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு இந்த மாநாட்டின் போது உரிய பதில் அளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 42 நாடுகளைச் சேர்ந்த 300 பேர் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் தீவிரவாதி காசாப்பிற்காக ரூபா 11 கோடி தரவேண்டும்: இந்திய & திபெத் எல்லை பாதுகாப்பு படை.

மும்பை தாக்குதலில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு பாதுகாப்பு வழங்கியதற்காக மகாராஷ்டிர அரசு ரூபா.  10.87 கோடி தரவேண்டும் என்று இந்திய & திபெத் எல்லை பாதுகாப்பு படை கடிதம் அனுப்பி உள்ளது. 


கடந்த 2008 நவம்பரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் 166 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளில் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். அவனுக்கு தனி நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. பாதுகாப்பு கருதி இந்த வழக்கு விசாரணை ஆர்தர் ரோடு சிறையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. 


கசாப்பின் பாதுகாப்புக்கு இந்திய & திபெத் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 200 கமாண்டோ வீரர்கள் நவீன ஆயுதங்ளுடன் நிறுத்தப்பட்டனர். மும்பை தாக்குதல் வழக்கு முடிந்த பிறகும், இந்திய&திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், கசாப்பின் பாதுகாப்பு பணியில் நீடிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. 


இந்நிலையில், டெல்லியில் இருந்து இந்திய&திபெத் எல்லை பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரல் ஆர்.கே.பாட்டியா, மகாராஷ்டிர அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘கடந்த 2009 மார்ச் 28ம் தேதி முதல், 2010 செப்டம்பர் 30ம் தேதி வரை, கசாப்புக்கு பாதுகாப்பு அளித்த வகையில் இந்திய & திபெத் எல்லை பாதுகாப்பு படைக்கு ஏற்பட்ட செலவுத் தொகையான ரூ.10.87 கோடியை செலுத்த வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.இதனால் மகாராஷ்டிர அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘மும்பையில் தாக்குதல் நடந்தது மகாஷ்டிர மாநிலம் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்னை அல்ல. இது தேசிய பாதுகாப்பு பிரச்னை. இதுகுறித்து இந்திய & திபெத் எல்லை பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரலுக்கு விரைவில் பதில் கடிதம் எழுதப¢படும்’’ என்று தெரிவித்தனர்.

குவியல் குவியலாக மண்டை ஓடுகள்: அரசுக்கெதிராக புரட்சி செய்தவர்களா?

கர்நாடகாவில் தார்வாட் மாவட்டத்தில், பூமிக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட மண்டையோடுகள், 638 ஆண்டுகள் பழமையானவை என்பது தெரியவந்துள்ளது. கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் அன்னிகேரி என்ற இடம் உள்ளது. கடந்தாண்டு, இங்கு கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 


இதற்காக, அங்கு பள்ளம் தோண்டப்பட்டபோது, ஒரு இடத்தில், சில மண்டையோடுகள் புதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பாக, மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 


இதைத் தொடர்ந்து, அந்த பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. மத்திய தொல்பொருள் துறையினர், வரலாற்று துறை ஆய்வாளர்கள் ஆகியோர், அங்கு வந்து, ஆய்வில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் மேலும் பல இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டன. இதில், 400 முதல் 450 வரையிலான மண்டையோடுகள் அங்கு, கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மண்டையோடுகள், எத்தனை ஆண்டுகளுக்கு முந்தியவை, எப்படி இங்கு புதைக்கப்பட்டன, என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. 


புவனேஸ்வரில் உள்ள இயற்பியல் ஆய்வு மையத்தில், இதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அன்னிகேரில் இருந்து எடுக்கப்பட்ட சில மண்டையோடுகள், அங்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த மண்டையோடுகள், பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டன. சமீபத்தில், இது தொடர்பாக, கர்நாடகா மாநில அரசிடம், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 


அதில்,"இந்த மண்டையோடுகள், 638 ஆண்டுகள் பழமையானவை என, தெரியவந்துள்ளது. இருந்தாலும், இவை, யாருடைய மண்டையோடுகள் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை'என, கூறப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து, இந்த மண்டையோடுகள் பற்றிய விவரங்களை உறுதி செய்வதற்காக, ஆமதாபாத்தில் உள்ள மத்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறை ஆய்வு மையத்துக்கு, இதன் மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 


வரலாற்று பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது: இந்த மண்டையோடுகள், 14 அல்லது, 15ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம். இந்த மண்டையோடுகளுக்கு சொந்தமான உடல்களின் எலும்புகள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, பெரிய அளவில் படுகொலை நடத்தப்பட்டு, தலைகள் துண்டிக்கப்பட்டு, உடல்கள் சிதைக்கப்பட்டிருக்கலாம். ஆட்சிக்கு எதிரான புரட்சியில் ஈடுபட்டவர்கள் கொல்லப்பட்டு, அவர்களின் தலை துண்டிக்கப்பட்டு இருக்கலாம். அல்லது போரின்போது கொல்லப்பட்டவர்களுக்கு சொந்தமான மண்டையோடுகளாக, இவை இருக்கலாம். இவ்வாறு வரலாற்று பேராசிரியர்கள் கூறுகின்றனர்.
எகிப்து கலவரம் தொடர்பாக முபாரக்கிடம் விசாரணை.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் எகிப்து ஜனாதிபதியாக இருந்த ஹோஸ்னி முபாரக் பதவியை விட்டு விலகினார். அவர் மீது ஊழல் மற்றும் போராட்டக்காரர்களை கொல்வதற்கு சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் உள்ளன.ஹோஸ்னி முபாரக் 30 ஆண்டுகள் எகிப்தில் சர்வாதிகார ஆட்சி நடத்தி நாட்டை சீர்குலைத்துள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கிரிமினல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படும் என நாட்டின் தலைமை விசாரணைத் தலைவர் தெரிவித்தார்.
எகிப்தில் நீண்ட காலம் ராணுவ ஆட்சி நடந்துள்ளது. முபாரக் பதவியில் இருந்து விலகினாலும் நாட்டில் புதிய மாற்ற நடவடிக்கை மிக மந்தமான நிலையில் உள்ளது. இந்த நிலை நீடித்தால் 2வது புரட்சி வெடிக்கும் என எகிப்து மக்கள் எச்சரித்துள்ளனர்.இந்த நிலையில் முபாரக் மீது கிரிமினல் நீதிமன்ற விசாரணை நடைபெறும் என விசாரணைத் தலைவரின் செய்தித் தொடர்பாளர் அடேல் எல் சயீத் கூறினார். முபாரக் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
எகிப்தில் முபாரக்கிற்கு எதிராக 18 நாள் எதிர்ப்பு போராட்டம் நடந்தது. இதனைத் தொடர்ந்து முபாரக் பதவி விலகினார். இந்தப் போராட்டத்தின் போது 800க்கும் மேற்பட்ட மக்களை முபாரக் ராணுவம் கொன்றது.முபாரக் விலகிய பின்னர் அரசு நிர்வாகம் பிப்ரவரி 11ஆம் திகதி பதவியேற்றது. 83 வயது முபாரக் நீதி முன்பாக நிறுத்த வேண்டும் என மக்கள் வீதிகளில் திரண்டு குரல் எழுப்பி வருகிறார்கள்.
பாகிஸ்தானில் பொலிஸ் நிலையம் மீது கார்குண்டு தாக்குதல்: 4 பேர் பலி.
வடமேற்கு பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள பொலிஸ் நிலையத்தை தற்கொலைப்படை கார்குண்டு தாக்கியதில் 4 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் காயம் அடைந்தார்கள்.
இந்த பயங்கர குண்டு வெடிப்பு காரணமாக கட்டிடம் தரைமட்டமாக நொறுங்கியது என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குண்டு வெடிப்பில் பலியானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். உயிர் பிழைத்தவர்கள் இடிபாடுகளில் தவித்தார்கள்.கார் குண்டு தகர்த்த பொலிஸ் கட்டிடம் பாகிஸ்தான் ராணுவ முகாம் அருகிலும் அமெரிக்க தூதரகம் அருகிலும் அமைந்துள்ளது. அல்கொய்தா தலைவர் பின்லேடனின் கொலைக்கு பின்னர் பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
வடமேற்கு பாகிஸ்தானில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டார்கள். அந்த தாக்குதல் துணை நிலை ராணுவ வீரர்கள் பயிற்சி பெறும் இடத்தில் நடந்தது.கடந்த வாரம் பாகிஸ்தான் தலிபான்கள் அமெரிக்க தூதரக அதிகாரி காரில் சென்ற போது பெஷாவரில் தீவிரவாதிகள் தாக்கினார்கள். அந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 10 பேர் காயம் அடைந்தனர்.
பொலிஸ் குற்றவியல் விசாரணை நடத்தும் அலுவலகத்தை தற்போது தீவிரவாதிகள் தாக்கி உள்ளனர். கார் குண்டு வெடித்ததில் 3 அடுக்கு மாடிக்கட்டிடம் நொறுங்கியது என பெஷாவரில் உள்ள தலைமை பொலிஸ் அதிகாரி லியாகத் அலிகான் கூறினார்.அமெரிக்காவின் ஆள் இல்லாத போர் விமானங்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறும் வரை தாக்குதல் தொடரும் என தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.
உலக பாதுகாப்புக்கு அமெரிக்கா-பிரிட்டன் உறவு முக்கியம்: ஒபாமா வலியுறுத்தல்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா 3 நாள் அரச பயணமாக பிரிட்டன் வந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை அவரும் அவரது மனைவி மிச்சேல் ஒபாமாவும் பிரிட்டனுக்கு வருகை தந்துள்ளனர்.அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் பிரிட்டன் பிரதமர் டேவிட் காமரோனும் புதன்கிழமை காலை முக்கிய பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். இந்த பேச்சு வார்த்தையின் போது அவர்கள் லிபியா மற்றும் ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்பட்டுள்ள ராணுவ நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கிறார்கள்.
மத்திய கிழக்கு நாடுகளின் அமைதி பேச்சு உலக பொருளாதார சீரமைப்பு மற்றும் பரவிவரும் பயங்கரவாதம் ஆகியவை குறித்தும் அவர்கள் விவாதிக்கிறார்கள். இந்த பேச்சுவார்த்தையின் போது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உறவு உலக பாதுகாப்புக்கு மிக முக்கியம் என்பதை ஒபாமா வலியுறுத்துகிறார்.புதன்கிழமை நாள் நிகழ்ச்சி நிரலில் மிக முக்கியமானதாக வரலாற்று சிறப்பு மிக்க தளமான வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் ஒபாமா உரை நிகழ்த்துகிறார். 2வது உலகப்போருக்கு பின்னர் உலகம் பெரும் மாற்றம் கண்டுள்ளது.
இருப்பினும் உலக பாதுகாப்புக்கு பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் உறவு அதி முக்கியமானது என அவர் எம்.பி.க்களிடமும் பிரிட்டனின் கணவான்களிடமும் அவர் தெளிவுபடுத்துவார் என கூறப்படுகிறது.ஈராக்கில் போர் முடிந்து அமைதி நிலை ஏற்பட்டுள்ளதால் நமது துருப்புகள் நாடு திரும்புகின்றன. அதேபோன்று ஆப்கானிஸ்தானில் சொந்த நாட்டு துருப்புகள் பாதுகாப்பு கட்டுப்பாட்டை மேற்கொள்வதால் நமது படைகள் திரும்புகின்றன.
இந்த மே மாதம் 2ஆம் திகதி அல்கொய்தா தீவிரவாதத்தலைவர் பின்லேடன் கொல்லப்பட்டார். இதனால் அல்கொய்தா பலவீனம் அடைந்துள்ளது என்றும் ஒபாமா தனது உரையில் குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை லண்டனில் ஒபாமாவிற்கு வரவேற்பு அளிக்க லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். பக்கிங்காம் அரண்மனைக்கு ஒபாமா பலத்த பாதுகாப்புடன் சென்றார்.அவருக்கு அளிக்கப்பட்ட விருந்தில் அமெரிக்கா-பிரிட்டன் உறவு குறித்து ராணி புகழ்ந்துரைத்தார்.
ஜேர்மனி தேர்தலில் அதிபர் மார்க்கெல் கட்சிக்கு பின்னடைவு.
ஜேர்மனியில் உள்ள பிரமனில் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் கிரீன் கட்சிக்கு சாதகமாக உள்ளன.அந்த கட்சி அதிபர் ஏங்கலா மார்கெலின் கிறிஸ்டியன் டெமாக்ரேட்ஸ் கட்சியை 3வது இடத்திற்கு தள்ளி உள்ளது. மக்கள் வாக்களித்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட முடிவில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
தேர்தலில் சோசியல் டெமாக்ரேட்ஸ் அணியினரும், கிரீன் கட்சியினரும் முன்னணியில் உள்ளனர். ஏங்கலா மார்கெலின் கிறிஸ்டியன் டெமாக்கிரேட்ஸ் கட்சியினர்(சி.டி.யு) 3வது இடத்தில் உள்ளனர்.இது குறித்து கிரீன் பெடரல் கட்சி தலைவர் கிளாடியா ரோத் கூறுகையில்,"ஜேர்மன் பெடரல் தேர்தலில் முதன்முறையாக அதிபரின் சி.டி.யு கட்சியை விட முன்னணி பெற்றுள்ளோம்" என்றார்.
சோசியல் டெமாக்ரேட்ஸ் கட்சியினர் கடந்த 66 ஆண்டுகளாக பிரமனில் ஆட்சி செய்துள்ளனர். அவர்கள் தற்போதைய தேர்தலில் 38 சதவீத வாக்குகளை பெற்றுள்ளனர். கிரீன் கட்சிக்கு 23 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது.மார்கெலின் சி.டி.யு கட்சிக்கு 4 சதவீத வாக்குகள் கடந்த தேர்தலை விட குறைந்துள்ளன. கடந்த தேர்தலில் 2007ஆம் ஆண்டில் 25.5 சதவீத வாக்குகள் கிடைத்தன. தற்போதைய தேர்தலில் மார்கெல் கட்சிக்கு 21.5 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.
சி.டி.யு கட்சி பிரமனில் கடந்த 52 ஆண்டு தேர்தல் வரலாற்றில் மோசமான தோல்வியை தற்போது சந்தித்துள்ளது. சி.டி.யு கட்சியின் பொதுச்செயலாளர் ஹெர்மான் குரேகே கூறுகையில்,"வாக்காளர்களின் தீர்ப்பு வேதனை அளிப்பதாக உள்ளது" என்றார்.மார்கிரேட் கூட்டணி கட்சியான ப்ரீ டெமாக்கிரேட் கட்சி வெறும் 3 சதவீத வாக்குளை மட்டுமே பெற்றுள்ளது.
ஏர்பிரான்ஸ் விமான விபத்திற்கு விமான ஓட்டியின் தவறான முடிவே காரணம்.
ஏர்பிரான்ஸ் விமான விபத்திற்கு அதனை ஓட்டிய விமான ஓட்டியின் தவறே காரணம் என்று தகவல் சேகரிக்கும் கறுப்பு பெட்டிகளில் தெரியவந்துள்ளது.
ஏர்பிரான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த 2009ஆம் ஆண்டு பிரேசில் தலைநகர் ரியோடி ஜெனிரோவில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு வந்தது. இந்த விமானம் அட்லாண்டிக் கடல் பகுதிக்கு மேல் வந்த போது திடீரென நிலை குலைந்து விபத்துக்குள்ளானது.விமானத்தில் இருந்த 228 பேரும் கடலில் மூழ்கி பலியானார்கள். இந்த விபத்திற்கு என்ன காரணம் என்பதை கண்டறிய விமானத்தின் முக்கிய தகவல்களை சேகரிக்கும் கறுப்பு பெட்டியை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது.
பிரான்ஸ் குழுவினரின் 4வது தேடுதல் பணியின் போது அந்த கறுப்பு பெட்டி சிக்கியது. அந்த கறுப்பு பெட்டியில் மண் படிந்திருந்த போதும் அதில் உள்ள தகவல்கள் அழியாமல் உள்ளன. இந்த பெட்டியை ஆய்வு செய்த போது விபத்திற்கு விமான ஓட்டிகளே காரணம் என தெரியவந்துள்ளது.விமான ஓட்டிகள் விதிமுறைகளை பின்பற்றாமல் செலுத்தியதால் விமானம் கடலில் நொறுங்கி விழுந்துள்ளது என வால்ஸ்டீறரீட் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் திகதி ஏர்பஸ் ஏ330 விமானம் ரியோடி ஜெனிரோவில் இருந்து பாரிசுக்கு மோசமான வானிலையில் பயணித்துள்ளது. கடுமையான குளிர் காற்றும் வீசியது. இதன் காரணமாக தவறான வேகத்தில் விமான ஓட்டிகள் விமானத்தை இயக்கியுள்ளனர்.விமானத்தில் இருந்த 3 விமான ஓட்டிகளும் பல்வேறு குழப்பமான நிலையில் விமானத்தை ஓட்டியதால் என்ஜின் கட்டுப்பாட்டை இழந்தது. கடந்த 2003ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை இந்த வகை விமானம் இதே போன்ற 32 தொழில்நுட்ப பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மசூதிகளுக்குள் பயங்கரவாதிகள் செல்வதற்கு தடை.
பாகிஸ்தானில் உள்ள மசூதிகளுக்குள் செல்ல பயங்கரவாதிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களது நடவடிக்கைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.பாகிஸ்தானில் தலிபான்கள், அல்கொய்தா, தப்ளீகி ஜமாத் மற்றும் பல்வேறு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அல்கொய்தா இயக்கத் தலைவர் பின்லேடன் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அங்கு பயங்கரவாதிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் நடந்த 2 மனித வெடிகுண்டு தற்கொலைப்படை தாக்குதலில் 90க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பழிவாங்க இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பயங்கரவாதிகள் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகளை தீவிரமாக ஒடுக்கி வருகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு அமைப்புகள், ராணுவப் பகுதிகளில் உள்ள மசூதிகளுக்கு தப்ளீகி ஜமாத் செல்ல பாகிஸ்தான் அரசு தடை கொண்டு வருகிறது.இதனால் பயங்கரவாதிகள் ராணுவ அமைப்புகளை வேவு பார்க்க முடியாது என்றும், மக்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முடியாது என்றும் பாகிஸ்தான் அரசு கருதுகிறது. சமீபத்தில் பாகிஸ்தான் விமானப்படையைச் சேர்ந்த இளைய அதிகாரிகள் சிலரை ராணுவத்தினர் கைது செய்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் ஒரு ஆண்டு விடுமுறை எடுத்து கொண்டு பயங்கரவாதிகளின் பல்வேறு முகாம்களில் பயிற்சி பெற்றது தெரியவந்தது. இதையடுத்து ராணுவத்துக்கும், பயங்கரவாதிகளுக்கும் உள்ள தொடர்பை துண்டிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிரியா மீது பொருளாதார தடை: கனடா அறிவித்தது.
சிரிய அரசு மீதும், சிரிய ஜனாதிபதி மீதும் கனடா பொருளாதார தடைவிதித்துள்ளது. இதனை கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் பெய்ர்ட் தெரிவித்தார்.சிரிய அரசு நிர்வாகத்தினர் மீது பொருளாதார தடை, பயணம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. சிரியாவில் அமைதிப் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் சிரிய அரசு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலை ஒடுக்குவதற்காக பொருளாதார தடைகள் விதிக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
சிரியா நாட்டைச் சார்ந்த குறிப்பிட்டத் தலைவர்கள் கனடாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று கனடாவில் இருந்து சிரியாவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.பொருளாதாரத் தடையை தொடர்ந்து கனடா-சிரியா இருநாட்டு நல்லுறவு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களும் நிறுத்தப்பட்டு உள்ளன. ஆயுதங்கள், அணு சக்தி மற்றும் இதர நிலைப்பாட்டு பொருட்கள், தொழில்நுட்ப பொருட்கள் ஆகியவற்றை சிரியாவுக்கு ஏற்றுமதி செய்யவும் கனடா தடைவிதித்துள்ளது.
தடை நடவடிக்கை உடனடியாக செயல்பாட்டுக்கு வருவதாக அமைச்சர் பெய்ர்ட் குறிப்பிட்டார். கடந்த மார்ச் மாதம் சிரியாவில் அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தில் மக்களை ஒடுக்குவதற்கு சிரிய அரசு நிர்வாகம் சர்வதேச அமைதி நடவடிக்கையை மீறி செயல்பட்டு வருகிறது.சிரிய அரசு ராணுவத் தாக்குதலில் பல நூறு மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அதே போன்று ஏராளமானவர்கள் காயம் அடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்களையும் சிரியா கைது செய்துள்ளது என கனேடிய அமைச்சர் பெய்ர்ட் குறிப்பிட்டார்.
அதிபரின் வருகையையொட்டி ஈரான் எண்ணெய் உலையில் வெடிகுண்டுத் தாக்குதல்.
ஈரான் அதிபர் அகமதி நிஜாத் வருகையின் போது அந்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
ஈரானின் தென்மேற்குப் பகுதியில் உள்ளது ஆபாதான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம். இங்கு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்துடன் புதிய ஆலையைத் திறப்பதற்கு செவ்வாய்க்கிழமை அதிபர் மகமூத் அகம திநிஜாத் வந்தார்.அவர் நிகழ்ச்சிக்கு வருகை தந்த சமயத்தில் ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. வெடியைத் தொடர்ந்து அங்கு தீ பரவியது. ஆபாதான் நகரமே புகை மண்டலமாக காட்சியளித்தது.
ஆயினும் அதிபர் அகமது நிஜாத் தனது நிகழ்ச்சிகளில் எந்த மாற்றமும் செய்யாமல் புதிய ஆலை தொடக்க நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொண்டார். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக ஒரு செய்தி நிறுவனம் தெரிவித்தது. பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் உயிரிழப்பு எதுவுமில்லை என்று மற்றொரு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெஹர் செய்தி நிறுவனத்தின்படி சுத்திகரிப்பு ஆலையில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த வாயுக் கசிவினால் இந்த வெடி விபத்து ஏற்பட்டது. விஷத்தன்மையுள்ள அந்த வாயு ஆலைக்குள் பரவியதால் பல தொழிலாளிகளை அது மயக்கம் அடையச் செய்தது. ஆனால் யார் உயிருக்கும் ஆபத்தில்லை என அது தெரிவித்தது.
கடந்த ஆண்டு ஈரானில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் பல வெடி விபத்துகள் நடந்தன. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரானின் வடகிழக்குப் பகுதியிலுள்ள ஆலையில் நடந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.உலகில் எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் இரண்டாவது இடத்தில் ஈரான் உள்ளது. நாளொன்றுக்கு ஐந்தரை லட்சம் லிட்டர் பெட்ரோல் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆபாதானில் அமைந்துள்ள புதிய ஆலையின் மூலம் 40 லட்சம் லிட்டர் பெட்ரோல் கூடுதலாக உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
நேட்டோ விமானப்படைத் தாக்குதல்கள் தீவிரம்.
லிபிய தலைநகர் திரிபோலியில் நேட்டோ விமானப்படை தாக்குதல் நடத்தியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கினறன.குண்டுவீச்சு சத்தம் பல கிலோ மீற்றர் தூரத்துக்குக் கேட்டதாகவும், கடுமையான குண்டு மழை பொழிந்ததாகவும் அப்பகுயிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிபர் கடாபியை பணியவைக்கும் முயற்சியில் பிரான்சும், பிரிட்டனும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஹெலிகாப்டர் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும் 150 பேர் காயமடைந்ததாகவும் லிபிய செய்தித் தொடர்பாளர் மூஸா இப்ரஹிம் தெரிவித்தார்.லிபிய ராணுவ வீரர்கள் உள்ள பகுதியில் நடத்த வேண்டிய தாக்குதல் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் நடத்தப்பட்டதால் இழப்பு அதிகமாக இருந்ததாக அவர் மேலும் கூறினார்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற இந்த வான்வழி தாக்குதலில் சக்தி வாய்ந்த குண்டுகள் வீசப்பட்டதாக அங்குள்ள ஏ.எப்.பி செய்தியாளர் தெரிவிக்கிறார். அதிபரின் வீடுஅமைந்துள்ள பாபல்-அஸிஸ்யா பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் 15 பயங்கர குண்டுகள் வீசப்பட்டதாகவும், அதன் சத்தம் அருகிலுள்ள பகுதிகளில் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராணுவ நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நேட்டோ மறுத்துள்ளது. இருப்பினும் பயங்கர ஆயுதங்கள் வைத்திருக்கும் பகுதிகளை அழிப்பதற்காக இந்த விமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக நேட்டோ கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் சார்லஸ் புச்சார்டின் தெரிவித்தார்.லிபியாவில் உள்ள அப்பாவி மக்களைக் காப்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. லிபியாவின் தேசிய மறு சீரமைப்புக் குழுவில் அமெரிக்க பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின் நிலைப்பாட்டை உறுதி செய்வதுபோல ஐரோப்பிய யூனியனுக்கான வெளியுறவுக் கொள்கையை வகுக்கும் பிரிவின் தலைவர் கேத்தரீன் அஸ்தோன் கூறினார். பெங்காசியில் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதி அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளதோடு, அரசு எதிர்ப்பாளர்களுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் அஸ்தோன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கடற்படைத் தாக்குதலில் ராணுவத்திற்கும் தொடர்பு.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள கடற்படை தளத்தில் ஆறு பயங்கரவாதிகள் நுழைந்தது குறித்து பாகிஸ்தான் பத்திரிகைகள் அந்நாட்டு ராணுவத்தை ஏளனம் செய்துள்ளன.அதோடு இச்சம்பவம் ராணுவத்தின் துணையோடு தான் நடந்திருக்க வேண்டும் என்றும் குற்றம் சாட்டியுள்ளன. பாகிஸ்தான் கராச்சி நகரில் உள்ள பி.என்.எஸ் மெஹ்ரான் கடற்படை தளத்தில் 22ம் திகதி இரவு 10.30 மணியளவில் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
முதலில் 20 பேர் வந்திருக்கக் கூடும் என்று கருதப்பட்டது. ஆனால் அதன் பின் வெளியான தகவல்களின்படி நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருவர் தப்பியோடி விட்டனர். இச்சம்பவம் குறித்து பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளில் கூறப்பட்டிருப்பதாவது: அரசியல் பேச்சோ அமைச்சரவைக் கூட்டமோ இதுபோன்ற பிரச்னைகளைத் தீர்க்க முடியாது.
இது மிகப் பெரிய தோல்வி. இதன் மூலம் நமக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் இருக்கிறது என்பது வெளிப்பட்டு விட்டது. இப்பிரச்னையைத் தீர்க்க வலிமையான தலைமை வேண்டும். இச்சம்பவம் பாதுகாப்பில் உள்ள பலவீனத்தைக் காட்டுகிறது.தலிபான் பயங்கரவாதிகளுக்குக் கடற்படை தளத்தில் இருந்து உளவுத் தகவல்கள் கிடைத்திருக்க வேண்டும். ஏற்கனவே நடந்த பல தாக்குதல்களில் பாதுகாப்பு வீரர்களுக்குத் தொடர்பு இருந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் இக்கருத்தை நிராகரிக்க முடியாது. இவ்வாறு பாகிஸ்தான் பத்திரிகைகளில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் தலிபான் செய்தித் தொடர்பாளர் எசனுல்லா எசன் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில்,"கராச்சியில் உள்ள எங்களது நண்பர்கள் சிலர் இச்சம்பவத்திற்கு உதவி செய்தனர். ஆனால் கடற்படை தளத்தில் எங்களுக்கு நண்பர்கள் உள்ளனரா என்பதை நான் சொல்ல மாட்டேன்" என்று கூறியிருந்தார். இதன் அடிப்படையில் தான் பாகிஸ்தான் பத்திரிகைகள் இவ்வாறு எழுதியுள்ளன.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் நேற்று அளித்த பேட்டியில்,"நான்கு பேர் கொல்லப்பட்டனர். இருவர் தப்பியோடி விட்டனர்" என்று கூறியிருந்தார். கடற்படை தலைவர் அட்மிரல் நோமன் பஷீரும் அதை வழிமொழிந்திருந்தார். ஆனால் அவர்கள் சொன்னதற்கு மாறாக பாகிஸ்தான் கடற்படை நேற்று அளித்த புகாரில் 10ல் இருந்து 12 பயங்கரவாதிகள் தாக்கியதாகக் குறிப்பிட்டுள்ளது.கடற்படை செய்தித் தொடர்பாளர் இர்பால் உல் ஹக் அளித்த பேட்டியில்,"12ல் இருந்து 15 பேர் வந்திருக்கலாம்" என்றார். பாகிஸ்தான் பத்திரிகைகள் ஆறு பேர் வந்தனர் என்று கூறின. இதனால் எத்தனை பயங்கரவாதிகள் வந்து தாக்கினர் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கறுப்பு பட்டியலில் சிரியா ஐனாதிபதி பஷார் அல் அசாத்: ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை.
சிரியா ஜனாதிபதி பஷார் அல் அசாத்தை ஐரோப்பிய ஒன்றியம் கறுப்பு பட்டியலில் வைக்க திங்கட்கிழமை முடிவு செய்தது.அசாத் மீது முதன் முறையாக ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளும் நடவடிக்கை மூலம் அசாத்தின் சொத்தக்களை முடக்குதல், பயணம் செய்ய தடை ஆகியவை மேற்கொள்ளபடபட்டுள்ளது. நீண்ட நாட்களாக அசாத் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டிய ஐரோப்பிய ஒன்றியம் இந்த முடிவை எடுத்தள்ளது.சிரியாவில் அசாத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு அசாத் ராணுவத்தை ஏவி படுகொலைகளை மேற்கொண்டார். இந்த கொடூர செயல்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க அசாத் மீது நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பினர் நாடுகளின் அயல் துறை அமைச்சர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி பேச்சு வார்த்தை விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினர். ஈரான் மற்றும் லிபியாவில் விதிக்கப்பட்டுள்ள தடைகள் வலிமை படுத்த ஆதரவு தெரிவித்தும் ஏமன் தலைவர் ஆட்சி மாற்றத்தற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாததற்கு விமர்சனம் செய்தனர்.
அதே போன்று பக்ரைனில் ஆட்சி சீரமைப்பு மெற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள். கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மத்திய கிழக்கு கொள்கை நிலையிலும் ஆப்கானிஸ்தான் கொள்கை நிலையிலும் மாற்றம் கொண்டு வந்தார். இதனை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் அதி சீக்கிர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து மததிய கிழக்கு நாடுகளின் நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா நிலைபாட்டை விவாதித்தனர்.
லிபியாவில் பிரான்ஸ் அதிரடி தாக்குதல் ஹெலிகொப்டர்கள்.
லிபியா ராணுவத்தை ஒடுக்குவதற்கும், சர்வாதிகாரி கர்னல் மோமர் கடாபியை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காகவும், நேட்டோ கூட்டுப்படைகள் லிபியாவில் முகாமிட்டுள்ளன.இந்த கூட்டுப்படை தாக்குதலில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளின் துருப்புகள் உள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் 15 ம் திகதி லிபியாவில் கர்னல் கடாபிக்கு எதிராக புரட்சிப் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தின் போது எதிர்பாளர்களை ஒடுக்குவதற்காக லிபியா ராணுவம் வான் வழித்தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலின் போது கொத்துக்குண்டுகளையும் வீசியது.
இந்த பயங்கர குண்டு வீச்சில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். அப்பாவி மக்களை பாதுகாக்க வான்வழியே விமானங்கள் பறக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது. இந்தடை உத்தரவை நிறைவேற்ற மேற்கத்திய படைகள் லிபியாவில் ராணுவ முகாம்களை மட்டும் தாக்கி வருகின்றன.
லிபியாவில் தனது தாக்குதலை தீவிரப்படுத்த பிரான்ஸ் அதிரடி ஹெலிகொப்டர்களை அனுப்பி உள்ளது. இது குறித்து பிரான்ஸ் அதிகாரிகள் திங்கட்கிழமை கூறுகையில், நேட்டோ கூட்டுப்படைகள் லிபியாவில் ஹெலிகொப்டர் தாக்குதலை மேற்கொள்கின்றன என்றார்.
லிபியாவில் பிரான்ஸ் ஹெலிகொப்டர் பயன்படுத்தப்படுவதை பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் அலைன் ஜூபேவும் உறுதிப்படுத்தினார். பிரஸ்லஸ் நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை கூறினார். ஹெலிகொப்டர்கள் லிபியா போர் இலக்குகளை மிக விரைவாக அடையாளம் கண்டு நிமிட நேரத்தில் தாக்குதலை நடத்த முடியும் இதனால் லிபியா ராணுவம் மேலும் பயங்கர நெருக்கடிக்கு ஆளாகும்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF