Tuesday, May 24, 2011

இன்றைய செய்திகள்.


புலிகளுடனான இறுதிப்போரில் நானும் நேரடியாக களம் இறங்கினேன்! சரத் பொன்சேகா.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான நான்காம் ஈழப்போரை வெற்றி கொள்வதற்கு பெரும் பங்காற்றியது இராணுவமே என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா இன்று தெரிவித்துள்ளார். 

வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே சாட்சியமளிக்கையில் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து அங்கு சாட்சியமளிக்கையில், நான்காம் ஈழப்போரின் போது இராணுவத்தினரே பெரும்பங்காற்றினர். விமானப்படைத் தளபதியைவிட தானே அதிகம் விமானம் மூலம் நேரடியாக களத்தில் செயற்பட்டதாக தெரிவித்துள்ளார். 

செல் தாக்குதல் இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றதா என்பதை கண்டறிவதற்கு தானே நேரடியாக விமானத்தில் சென்று பார்வையிட்டதாகவும் கூறியுள்ளார். விடுதலைப்புலிகளின் 10 கப்பல்களை அழித்துள்ளதாகவும், பின் 8 கப்பல்களை அழிப்பதற்கு தகவல் வழங்கியது இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவாகும். தமிழ்ச்செல்வனை கொல்வதற்கு விமானப்படைக்கு தகவல் வழங்கியது இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரே ஆகும் என அவர் மேலும் தெரிவித்தார். 

சம்பூர் வெற்றியின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மிகப்பெரிய கேக் வெட்டியதாகவும், அதன்பின்னர் ஒவ்வொரு வெற்றியின் பின்னரும் கேக் வெட்டுவதை ஜனாதிபதி சம்பிரதாயமாக்கிய அதேவேளை போகப் போக கேக்கின் அளவும் சிறிதாகிக் கொண்டே சென்றதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்தார். தமது உயிரைத் தியாகம் செய்து பயங்கரவாதத்தை இல்லாதொழித்த இராணுவ அதிகாரிகள், இராணுவ வீரர்கள் உள்ளிட்ட அனைவர் மீதான அரசாங்கத்தின் மதிப்பு குறைந்து கொண்டு செல்வதாக அவர் மேலும் கூறினார்.
கோத்தபாயவிற்கு எந்தவிதமான போர்த் தந்திரங்களும் தெரியாது: சரத் பொன்சேகா.

இராணுவத்தின் கேணல் பதவி வரை பதவி வகித்திருந்தாலும் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எந்தவிதமான போர்த் தந்திரங்களும் தெரியாது என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சாட்சியமளிக்கையிலேயே சரத் பொன்சேகா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் இராணுவ நிபுணத்துவம் குறித்து கடும் விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.
1991ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மண்டைதீவினை விடுவிக்கும் இராணுவ நடவடிக்கையின் தலைமைப் பொறுப்பு கோத்தபாயவிடம் வழங்கப்பட்டிருந்தது. அவர் திறந்த வெளிப் பிரதேசம் மற்றும் கடற்கரை வழியாக இராணுவத்தினரை முன்னகர்த்தி விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை ஆரம்பித்தார்.ஆயினும் போரியல் உத்திகளின் பிரகாரம் பகல் வேளையில் மாத்திரமன்றி இரவு வேளைகளிலும் கூட திறந்த வெளிப் பிரதேசத்தினூடாக இராணுவத்தினரை முன்னகர்த்துவது இராணுவ நிபுணத்துவமற்றவர்களின் செயற்பாடாகவே கணிக்கப்படும். அத்துடன் தாக்குதலில் ஈடுபடும் இராணுவத்தினர் எளிதாக உயிரச்சுறுத்தலுக்கும் முகம்கொடுக்க நேரிடும்.
அவ்வாறான நிலையில் நடக்கப் போகும் விபரீதத்தை உணர்ந்த சரத் பொன்சேகா உடனடியாக மாற்று வழியொன்றின் ஊடாக இராணுவத்தை முன்னகர்த்தி மண்டைதீவை விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்டெடுத்திருந்தார்.அதன் பின் விடுதலைப் புலிகளின் போரியல் ஆற்றல் குறித்த அச்சம் காரணமாகவே இராணுவத்திலிருந்து விலகி கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்காவில் வசிக்கத் தொடங்கியிருந்தார். அக்கால கட்டத்தில் தன்னுடன் இராணுவத்தில் கடமையாற்றிய எவரையும் தொலைபேசி வழியாகக் கூட அவர் தொடர்பு கொண்டதில்லை.
அது மாத்திரமன்றி 2005ம் ஆண்டில் ஜனாதிபதித் தோ்தலின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு இராணுவத்தினரின் பங்களிப்பு மற்றும் நிதி அன்பளிப்பைப் பெற்றுத் தருமாறும் அவர் சரத் பொன்சேகாவைச் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்ததாகவும் தனது சாட்சியத்தின் போது சரத் பொன்சேகா மேலும் தெரிவித்திருந்தார்.
தனியார் ஓய்வூதியச் சட்டமூலத்திற்கு எதிராக கட்டுநாயக்காவில் மக்கள் ரயிலை மறித்து போராட்டம்.
தனியார் ஓய்வூதியச் சட்டமூலத்திற்கு எதிராக கட்டுநாயக்க – நீர்கொழும்பு ரயில் பாதையை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டக்காரர்கள் கொங்கிறீட் தூண்களை பயன்படுத்தி ரயில் பாதையை மறித்தனர். அவர்களை கலைப்பதற்காக சுமார் 350 விமானப்படையினரும் பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கொங்கிறீட் தூண்களை குறுக்கே போட்டு ரயில் பாதையை மறித்து, ரயிலை விட்டு பயணிகளை இறங்குமாறு வலியுறுத்தினர் என பொலிஸ் பேச்சாளர்  பிரசாந்த ஜயகொடி தெரிவித்தார்.எனினும் பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் எதுவும் மேற்கொள்ளவில்லை எனவும் இந்த இந்த ஆர்ப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் சற்று நேரத்திற்குமுன் பொலிஸாருடன் உடன்பாடொன்றுக்கு வந்ததாகவும்  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
பல்கலை. மாணவர் தலைமைத்துவ பயிற்சி இராணுவ மயப்படுத்தலின் ஓர் கட்டமே!- சஜித்.
நாட்டை இராணுவப் மயப்படுத்தும் முயற்சிகளின் ஓர் கட்டமாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கும் நடவடிக்கை கருதப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் பயிற்சி அளிக்கும் நடவடிக்கை ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாக நோக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இளைஞர் யுவதிகள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள பல்வேறு நிறுவனங்கள் நாட்டில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.  எனினும், அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சின ஊடாக மாணவர்களுக்கு இந்த பயிற்சியை வழங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் மூலம் அரசாங்கம் எவ்வாறு பொது விடயங்களை இராணுவப் மயப்படுத்தி வருகின்றதென்பது புலனாவதாக அவர் தெரிவித்துள்ளார்.பல்கலைக்கழக கட்டமைப்பானது அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்களை நிறைவேற்றும் கட்டமைப்பு அல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.பல்கலைக்கழகங்களின் அறிவுசார் உரிமைகளை பாதுகாப்பதற்கு அனைவரும் அணி திரள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
லசந்த விக்ரமதுங்க படுகொலைச் சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்: சஜித் பிரேமதாச.
சண்டே லீடர் பத்திரிகையின்ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலைச் சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.நாட்டில் சிவில், மனித மற்றும் அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்த வேண்டும் என தாம் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளதாகவும் சஜித் பிரேமதாச மேலும்  சுட்டிக்காட்டியுள்ளார்.


லசந்த படுகொலைச் சம்பவத்தைஇ சட்டத்திற்கு புறம்பான வகையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய படுகொலைச் சம்பவமாகும். லசந்த படுகொலைச் சம்பவத்துடன் சரத் பொன்சேகாவிற்கு தொடர்பு இருப்பதாக நான் ஒருபோதும் குறிப்பிட்டதில்லை.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முடிவுறுத்தப்பட்டுள்ளது.  எனினும் லசந்தவின் படுகொலைக்குக் காரணமானவர்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பாக். உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.க்கு லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்பு: டேவிட் ஹெட்லி.
பாகிஸ்தான் உளவுத்துறை நிறுவனமான ஐ.எஸ்.ஐ.க்கும் லஷ்கர் இ தொய்பாவுக்கும் தொடர்பு உள்ளது என மும்பை தாக்குதலில் தொடர்புள்ள அமெரிக்காவின் டேவிட் ஹெட்லி தெரிவித்தான்.மும்பை தாக்குதல் சதியில் தொடர்புடைய பயங்கரவாதிகள் ஹெட்லி, தகாவூர் ராணா ஆகியோர் அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ. ஆல் கைது செய்யப்பட்டு சிகாகோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீதான வழக்கு விசாரணை நேற்று சி‌காகோ நீதிமன்றத்தில் தொடங்கியது. வழக்கில் அரசு தரப்பு சாட்சியான ஹெட்லியின் வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஹெட்லி தெரிவித்த பல திடுக் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும் மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. - லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்துக்கு உதவியதாகவும் ஹெட்லி தெரிவித்துள்ளான். மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிக் கொடுத்ததை ஒப்புக் கொண்ட ஹெட்லி தற்போது அதில் ஐ.எஸ்.ஐ. ன் பங்கையும் அம்பலமாக்கியுள்ளான். மும்பை தாக்குதலுக்கு முன்னர் ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் இக்பால் மற்றும் சமீரை சந்தித்ததாகவும், இந்தியாவில் தாக்குதல் நடத்த தேர்வு செய்த இடங்கள் குறித்து எடுத்துரைத்ததாகவும் தெரிவித்துள்ளான்.
மும்பை தாக்குதலுக்கு முளையாக செயல்பட்டவர் என ஹபீஸ் சையத் மீது இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ள ஹெட்லி, மும்பை தாக்குதலுக்கு முன்னர் லஷ்கர் இயக்கத் தலைவர் ஹபீஸ் சையத்தை சந்தித்ததாகவும், லஷ்கர் இயக்கத்தினரிடம் இருந்து ஆயுதப் பயிற்சி பெற்றதாகவும் ஒப்புக் கொண்டுள்ளான்.
ஷபீஸ் சையத்தின் பேச்சுகளால் தான் மிகவும் கவரப்பட்டதாகவும், அதன் காரணமாகவே மும்பை தாக்குதலுக்கு உதவியதாகவும் கூறியுள்ளான். பாகிஸ்தான் மண்ணில் இருந்து சுதந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கும் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்‌கங்களுக்கு, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. நிதி உதவி, ஆயுதப் பயிற்சி ஆகியனவற்றை அளித்து வருவதாகவும். கடந்த 2008 ம் ஆண்டு நவம்பர் 26 ம் திகதி மும்பையில் நடந்த தாக்குதலுக்கும் ஐ.எஸ்.ஐ. பெரும் அளவில் உதவியதாகவும் ஹெட்லியின் வாக்குமூலம் தெரிவிக்கின்றது.
கடாபி வீடு அருகே வெடிகுண்டு வீச்சு: புகை மண்டலத்தில் திரிபோலி தவிப்பு.
லிபியா தலைநகர் திரிபோலியில் கர்னல் கடாபியின் வீடு உள்ளது. இந்த வீட்டுக்கு அருகே நேட்டோ படைகள் குண்டுகள் விசின.இந்த தாக்கதலின் போது கடாபி வீட்டுக்கு அருகே கடுமையாக புகை மண்டலம் ஏற்பட்டது. நேட்டோ படைகள் தற்போது திரிபோலியில் வான் வழித்தாக்குதலை துவங்கியுள்ளன. சில தாக்குதல்கள் கடாபி தங்கியுள்ள பாப் அல் அசிசியா வளாகம் அருகே நடத்தப்பட்டன.
பிரான்சும், பிரிட்டனும் வான்வழித்தாக்குதலை தீவிரப்படுத்த அதிரடி ஹெலிகொப்டர்களை பயன்படுத்துவதாக அறிவித்தவுடன் நெட்டோ படைகள் திரிபோலியில் தாக்தலை அதிகரித்துள்ளன. நேட்டோ படைகள் வீசிய பயங்கர வெடிகுண்டுகளால் கட்டிடங்கள் அதிர்ந்தன என்று ஹோட்டலில் தங்கி இருந்த பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.
நேட்டோ படை தாக்குதலில் 3 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும் 150 பேர் காயம் அடைந்ததாகவும் லிபியா அரசு செய்தித்தொடர்பாளர் முசா இப்ராகிம் தெரிவித்தார். பிரான்ஸ் நாளிதழான லே பிரே வெளியிட்ட செய்தியில் மே 17 ம் திகதி பிரான்ஸ் கப்பல், டோனரே மூலம் 12  ஹெலிகொப்டர்கள் கொண்டு செல்லப்பட்டதாக தெரவித்துள்ளது.லிபியாவின் கிழக்கு பகுதி போராட்டக்கார்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. நாட்டின் மேற்கு பகுதி லிபியா ராணுவ வசம் உள்ளது.. லிபியாவுக்கு பிரிட்டன் றொயல் கடற்படையின் மிகப்பெரும் போர்கப்பலான எச்எம்எஸ் மூலம் அதிரடி ஹெலிகொப்டர்கள் அனுப்பப்படுகின்றன.
ஒமரின் மரணத்தில் திணறும் பாகிஸ்தான்: மர்மம் நீடிப்பு.
தலிபான் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் கடற்படை வளாகத்தில் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.இன்னும் துப்பாக்கி சண்டை நீடித்து வருகிறது. இதற்கிடையில் தலிபான் அமைப்பு தலைவர் ஒமர் அப்துல்லா பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ஐ.எஸ் படையினர் தெரிவித்துள்ளனர்.
ஆப்கன் அரசும் உறுதி செய்துள்ளது. ஆனால் தலிபான் அமைப்பினர் ஒமர் உயிரோடு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் இதில் இன்னும் மர்மம் நீடிக்கிறது.
அமெரிக்காவில் பயங்கர சூறாவளி: 89 பேர் பலி.
அமெரிக்காவில் மிசெளரி மாகாணத்தில் உள்ள ஜோப்ளின் நகரில் ஏற்பட்ட கடும் புயல், சூறாவளிக்கு 89 பேர் பலியாகினர்.இத்தகவலை மிசெளரியைச் சேர்ந்த உள்ளூர் ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜோப்ளின் நகரத்தில் பரவலாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக ஜான் மில்லர் என்னும் பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
கட்டடங்கள், கேஸ் நிரப்பும் நிலையங்கள், வால்மார்ட் உள்ளிட்ட கடைகள், வணிக வளாகங்கள் என்று நகரம் முழுவதும் முழுமையாக சேதமடைந்துள்ளது.மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார். இதனிடையே சூறாவளி பாதிப்புகள் மேலும் தொடரலாம் என்றும் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து மிசெளரி மாகாணத்தில் ஆளுநர் ஜே நிக்ஸன் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார். சூறாவளியில் உயிரிழந்தவர்களில் இதுவரை 50 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.மேலும் இங்கு பல கட்டிடங்கள் சேதமைந்துள்ளதாகவும் இதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் ஐரோப்பிய சுற்றுப்பயணம் - இன்று லண்டன் மக்களை சந்திக்கிறார்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தனது நான்கு நாடுகள் ஐரோப்பிய சுற்றுப்பயணமாக நேற்று (மே 23) திங்கட்கிழமை  அயர்லாந்து வந்தடைந்தார்.அங்கு டப்லினில் College green எனும் இடத்தில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றியதுடன், பேரணியிலும் கலந்துகொண்டார். ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பினால் விமான போக்குவரத்து தடை படலாம் என்ற அச்சம் காரணமாக நேற்றிரவே அங்கிருந்து லண்டன் விஜயத்திற்கு புறப்பட்டார். தனது துனைவியார் மிசெலினுடன் லண்டன் வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.
இன்று மாலை புகிங்ஹாம் பேலஸில், இளவரசர் சார்லஸ்-கமிலா தம்பதியினரை அவர்கள் சந்திக்கின்றனர். பின்னர், வெஸ்ட்மினிஸ்டர் அபே, டௌவ்னிங் ஸ்ரீட் ஆகிய வாசஸ்தலங்களுக்கு சென்று அங்கு லண்டன் மக்களுடனான கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொள்ளவிருக்கிறார்கள்.
இதேவேளை நாளை பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூனை சந்திக்கும் பாரக் ஒபாமா மத்திய கிழக்கு, லிபிய பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்படுகிறது. பின்னர் பிரான்ஸில் நடைபெறும், ஜீ 8 மாநாட்டிலும் அவர் கலந்துகொள்ளவிருக்கிறார்.இதேவேளை, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமரூன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இது இங்கிலாந்து - அமெரிக்காவின் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டுறவாக கருத முடியாது. இது உலகுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பு என ஒபாமா தெரிவித்துள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF