Monday, May 16, 2011

இன்றைய செய்திகள்.


இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணாவை இன்று சந்திக்கவுள்ளார் பீரிஸ்.

இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொண்டு நேற்று புதுடில்லி  சென்றடைந்துள்ள வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்,  இன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணாவை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். புதுடில்லியில் உள்ள  ஒப்ரோய் விடுதியில் இந்தச் சந்திப்பு  இன்று மாலை இடம்பெறவுள்ளது.

ஐ.நாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கலந்துரையாடவுள்ளார். 


ஐ.நா அறிக்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ள  நிலையில், இதுதொடர்பாக இந்தியாவின் ஆலோசனைகளையும் உதவியையும் இச்சந்திப்பின்போது ஜி.எல்.பீரிஸ் கோரவுள்ளார். புதுடில்லிக்கான இந்த விஜயத்தின்போது  இந்தியாவின் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி,  உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரையும் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார். 

புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை , ஜி.எல்.பீரிஸ் சந்திக்கப் போவதாகவே செய்திகள் வெளியாகியிருந்தன.  ஆனால்  இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திப்பதற்கான நேரம் இதுவரை ஒதுக்கிக் கொடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.எனவே பிரதமருடனான இந்தச் சந்திப்பு பெரும்பாலும் இடம்பெறுவதற்கு வாய்ப்பில்லை என்று புதுடில்லி  ஊடக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

அதேவேளை வழக்கமாக வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையிலான அதிகாரபூர்வ பேச்சுக்கள் வெளிவிவகார அமைச்சின் செயலகங்களில் தான் இடம்பெறுவதுண்டு.  ஆனால் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, ஜி.எல்.பீரீஸை  ஒப்ரோய் விடுதியிலேயே சந்திக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், புதுடில்லிக்கான பயணத்தை முடித்துக் கொண்டு நாளை மாலை நாடு திரும்பவுள்ளார்.
சரத் பொன்சேகா நவலோக மருத்துவமனைக்கு இன்றும் அழைத்து வரப்பட்டுள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று காலையும் நவலோக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுள்ளார்.பொன்சேகாவின் தொண்டைப் பகுதி மற்றும் நுரையீரல் என்பவற்றில் ஏற்பட்டுள்ள நோய்களுக்கு மேலதிக சிகிச்சையளிக்க வேண்டியிருப்பதாக அவருக்குச் சிகிச்சையளிக்கும் விசேட மருத்துவ நிபுணர் குறிப்பிட்டிருந்ததன் பிரகாரமே இன்றைக்கு மீண்டும் அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளின் பூரண பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடந்த பன்னிரண்டாம் திகதி இடம்பெற்ற வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கில் சரத் பொன்சேகா சாட்சியமளித்துக் கொண்டிருக்கையில் அவருக்கு தொடர் இருமல் ஏற்பட்டதன் காரணமாக வழக்கு பிறிதொரு தினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த கால சம்பவங்களை வைத்து இளம் பராயத்தினர் மனதில் நச்சுவிதைகளை விதைக்கலாகாது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
கடந்து போன காலங்களில் நடந்த சம்பவங்களை நினைவுபடுத்தி இளம் பராயத்தினர் மனங்களில் நச்சுவிதைகளை விதைக்க முயற்சிப்பது தவறானது என்று ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.வரலாற்றில் நிகழ்ந்துபோன தவறுகளை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தி பிள்ளைகளின் மனதில் சமூகத்தின் மீதான வெறுப்புணர்வை வளர்க்கக் கூடாது என்றும் அவர் தொடர்ந்தும் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் 60ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற வைபவங்களின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தாய்நாட்டுக்கு நல்லதோர் எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் இன, மத, குல வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றிணைந்து தாய்நாட்டை வெற்றியடையச் செய்வது நம் அனைவரினதும் கடமையும் பொறுப்புமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி அதிபர் தம்பிப்பிள்ளை முத்துக்குமாரசாமிக்கு  ஜனாதிபதி விசேட நினைவுச்சின்னம் ஒன்றை வழங்கியிருந்ததுடன், பாடசாலைக்குச் சிறப்பான முறையில் சேவையாற்றியிருந்த ஏழு ஆசிரியர்களுக்கான விருதுகளையும் தன் கையால் வழங்கி வைத்திருந்தார்.அத்துடன் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கான புதிய நுழைவாயிலும் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க்கில் பான் கீ மூன் - அமைச்சர் விமல் வீரவங்ச சந்திப்பு.
நியூயோர்க்கின் ஐ.நா. அலுவலகத்தில் அமைச்சர் விமல் வீரவங்ச மற்றும் ஐ.நா. செயலாளர் நாயகம் விமல் வீரவங்ச ஆகியோர் சந்தித்துக் கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.புத்தர் பரிநிர்வாணமடைந்து 2600 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு புத்த ஜெயந்தி கொண்டாட்டங்களை உலகெங்கும் நடாத்த ஐ.நா. சபையும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அதன் பிரதான வைபவம் தாய்லாந்தில் நடைபெறுவதுடன் அதற்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு பிரதமர் டீ.எம். ஜயரத்தினவுக்குக் கிடைத்துள்ளது.
இதற்கிடையே நியூயோர்க்கில் அமைந்திருக்கும் ஐ.நா. அலுவலகத்தில் நடைபெறும் புத்த ஜெயந்தி கொண்டாட்டங்களின் பிரதம சொற்பொழிவாளராக அமைச்சர் விமல் வீரவங்ச அழைக்கப்பட்டுள்ளார். அதற்காக அவர் நேற்றிரவு இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.பிரஸ்தாப வைபவத்தில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனும் கலந்து கொள்ளவுள்ளதாக  ஐ.நா. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேற்குலக நாடுகளும் வேறு பல சக்திகளும் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சி: அமைச்சர் பசில் ராஜபக்ஷ.
நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் சில சக்திகள் முனைப்பு காட்டி வருவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் சில சக்திகள் முனைப்பு காட்டி வரும் அதே வேளை மேற்குலக நாடுகளும் வேறும் பல சக்திகளும் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பதுளையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிரஸ்தாப சூழ்ச்சித் திட்டத்தின் அண்மைய முயற்சியாக நோர்வேயில் ஜனாதிபதிக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.  அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையுடன் இந்த ஆண்டில் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் பின்னர் தாருஸ்மான் அறிக்கை தற்போது நோர்வேயில் வழக்கு என நீண்டு செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் முனைப்புக்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர்,  எவ்வாறெனினும்  நாடு மீண்டும் பிளவடைவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அரசாங்கமும் இடமளிக்காது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு: 12 பேர் பலி
பாலஸ்தீன எல்லைப் பகுதியில் சில குழுவினர் போராட்டத்தில் ஈடுட்டனர். இந்த போராட்ட நபர்கள் மீது இஸ்ரேலிய துருப்பினர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.துப்பாக்கி தாக்குதலில் 12 பேர் இறந்தனர். ஏராளமானர்கள் காயம் அடைந்தார்கள். பாலஸ்தீன ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் சிரியா வழியாக கோல்டன் ஹை பகுதியில் நுழைய முயன்றனர் என இஸ்ரேல் கூறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த வன்முறை குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெடன்யகு கூறுகையில்,"நமது எல்லைப் பகுதியையும் இறையாண்மையையும் பாதுகாக்க வேண்டிய உறுதியில் உள்ளோம். அமைதி விரைவில் திரும்பும்" என்றார்.கடந்த 1948ம் ஆண்டு இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்ட பின்னர் பல ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து பாலஸ்தீன மக்கள் எல்லைப் பகுதியில் போராடுகிறார்கள்.
இந்த நிலையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் இஸ்ரேலிய தூதரகத்திற்கு முன்பாக நடந்த எதிர்ப்பு போராட்டக் கும்பலை கலைக்க பாதுகாப்புப் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசினர். அனைத்து தரப்பினருக்கும் பொறுப்பு இருப்பதால் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாடுகள் அமைதி காக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோல்டன் ஹை பகுதியை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலிய துருப்பினர் மீது பாலஸ்தீன போராட்டக்காரர்கள் கற்களை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். மஜ்தால் ஷாம்ஸ் என்ற கிராமத்தின் அருகே போராட்டக்காரர்கள் வேலியை கடந்து செல்ல முயன்றனர்.கடந்த 1967ம் ஆண்டு நடந்த 6 நாள் போரின் போது சிரியாவின் எல்லைப் பகுதியை இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது. இஸ்ரேலின் அத்து மீறலை கண்டித்து தற்போது போராட்டங்கள் நடந்து வருகின்றன.
அல்கொய்தா இயக்கத்தின் மிரட்டல்: அமெரிக்கா முழுவதும் பலத்த பாதுகாப்பு.
பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழி வாங்க விரைவில் தாக்குதல் நடத்தப் போவதாக அல்கொய்தா தீவிரவாத இயக்கம் மிரட்டல் விடுத்தது.இதற்கிடையே பின்லேடன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சி.டி.க்கள் மற்றும் ஆவணங்கள் மூலம் அமெரிக்கா மீது மீண்டும் ஒரு பெரிய தாக்குதலுக்கு அல்கொய்தா திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது.
இரட்டை கோபுரம் தாக்குதலின் பத்தாம் ஆண்டு நினைவு நாளான செப்டம்பர் 11ந் திகதி அமெரிக்க ரயில்களில் பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் தயாராகி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. பின்லேடன் கொல்லப்பட்டு விட்டாலும் கூட, அவரது ஆதரவாளர்கள் இதற்கான முயற்சிகளில் ஈடுபடக்கூடும் என்று அமெரிக்கா கருதுகிறது.
மேலும் சிகாகோ நகரில் இதுவரை இல்லாத அளவுக்கு தாக்குதல் ஒன்றை நடத்த அல்கொய்தா வியூகம் வகுத்திருப்பது உளவுத்துறை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தலிபான் தீவிரவாதிகள் எந்த நேரத்திலும் நடத்தலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்க மக்களிடம் குறிப்பாக சிகாகோ நகர மக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ராணுவம் அறிவித்துள்ளது.தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க உள்ளூர் பொலிசாருக்கு கூடுதல் நவீன கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. சிகாகோ நகரில் அதிகபட்சமாக எல்லா தெருக்களிலும் பொலிசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நாஜி ஆதரவுப் பேரணி: பொலிசார் கலைக்க முயன்றதால் பரபரப்பு.
ஜேர்மனியின் கிரஸ்பர்க் மாவட்டம் பெர்லின் நகரில் சனிக்கிழமை நாஜி ஆதரவு படைகள் பேரணியை நடத்த முயன்றனர்.அப்போது நடந்த தாக்குதல்களில் ஏராளமான பேர் காயம் அடைந்தனர். பலர் கைது செய்யப்பட்டனர். மேற்கு கிரஸ்பர்சுகில் உள்ள மெகிரிஸ்டம் யு – பன் ரயில் நிலையத்தில் 110 நாஜி ஆதரவாளர்கள் ஊர்வலத்திற்கு திரண்டனர்.
இந்த மாவட்டத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் துருக்கி வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். நாஜிப்படை ஆதரவாளர்கள் "உண்மை தெரிந்தால் நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள்" என்ற எழுத்துப் பலகைகளுடன் வந்தனர்.
இந்த நாஜி ஆதரவு பேரணியை தடுக்க 350 பேர் திரண்டு வந்தனர் என பொலிசார் தெரிவித்தனர். இந்த நாஜி ஊர்வலத்தை நேரில் பார்வையிட்ட நபர் கூறியதாவது: 150 நாஜி ஆதரவு நபர்களின் ஊர்வலத்தை தடுக்க 3 முறை முயற்சி நடந்தது.நாஜி ஆதரவு நபர்கள் பேரணியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல் அவர்களை பாதுகாக்க வேண்டிய நிலையும் பொலிசாருக்கு ஏற்பட்டது. நாஜி ஆதரவு நபர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டது.
அப்போது வெடிகள் அலற வைக்கும் வகையில் வெடித்தன. 7 பொலிஸ் அதிகாரிகள் உள்பட பலர் காயம் அடைந்தனர். நாஜி ஆதரவு நபர்கள் ஊர்வலத்தை தொடர முடியாமல் யு – பன் ரயில்
நிலையத்திற்கு திரும்பினர். அங்கு அவர்களை பயணிகள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.ஒரு அமைப்பு மூலமாக நாஜி ஆதரவு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என ஒரு பொலிஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார். கிரஸ்பர்க் கரீன் கட்சி பிரடெரிக் ஷய்ன் கூறுகையில்,"நாஜி எதிர்ப்பு நபர்களால் குறிப்பிட்ட ஊர்வலம் வெற்றிகரமாக தடுக்கப்பட்டது" என்றார்.
லண்டனில் இந்திய மாணவர் தாக்குதல்: 3 பேர் கைது.
லண்டனில் டெர்பி பல்கலைகழகத்தில் கல்வி பயிலும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர் சவுரப்.24 வயதாகும் சவுரப் லண்டனிலிருந்து டெர்பிக்கு ரயிலில் பயணம் செய்த போது அடையாளம் தெரியாத 6 பேர் அவரை தாக்கி உள்ளனர்.
இச்சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்குள்ள தகவல் தெரிவிக்கிறது. இது குறித்து சவுரப் கூறுகையில்,"என்னை தாக்கியவர்கள் 6 பேர் அனைவரும் முகத்தை மூடியும் நன்கு குடித்து இருத்தனர்" என்றார்.இது குறித்து போக்குவரத்து பொலிசார் கூறுகையில்,"கைதான மூவரில் 26, 32 மற்றும் 27 வயதுடைவர்கள் தான். இவர்கள் பெல்பெர் நகரை சேர்ந்தவர்கள்" என தெரிவித்தார்.
ஈராக் தாக்குதலின் போது அமெரிக்காவுடன் ரகசியமாக பங்கேற்ற கனடிய படைகள்: விக்கிலீக்ஸ்.
ஈராக் நாட்டின் மீது அமெரிக்கா 2003ம் ஆண்டில் சர்ச்சைக்குரிய படையெடுப்பு தாக்குதலை நடத்தியது.இந்த படையெடுப்பை ஆதரிக்க மாட்டோம் என 2003ம் ஆண்டு மார்ச் 17ம் திகதி கனடாவின் அப்போதைய பிரதமர் ஜீன் செரிடன் பொதுச் சபையில் அறிவித்தார்.
கனடாவின் நிலைப்பாட்டுக்கு அவரது லிபரல் காகஸ் கட்சி உறுப்பினர் பலத்த ஆரவாரத்துடன் கையொலி எழுப்பின. ஆனால் அதே நாளில் கனடாவின் உயர் மட்ட அதிகாரி அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரகசிய ராணுவ உதவி அளிப்பதாக உறுதியளித்தார்.ஈராக் போரில் கனடாவின் இரட்டை நிலையை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு கனடாவையும் அமெரிக்காவையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ஈராக் போரில் கனேடிய படைகளும் பங்கேற்று இருப்பதை இந்த தகவல்கள் உணர்த்தி உள்ளன.
ஈராக் தலைநகர் பாக்தாத் மீது போர் விமானங்கள் தாக்குதலை துவங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்பாக கனடா சர்ச்சைக்குரிய போரில் பங்கேற்க போவது இல்லை என அறிவித்து வெளி உலகிற்கு சமரச நண்பனாக காட்டிக் கொண்டது.கனடா பொதுச் சபையில் அறிவிப்பு வெளியான அதே நாளில் கனேடிய உயர் அதிகாரிகள் ஒட்டாவாவில் உயர் மட்ட அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தூதர்களை சந்தித்து ஈராக் போருக்கு ரகசிய ஆதரவு தெரிவித்தனர்.
கனடாவின் ரகசிய ஆதரவு குறித்த செய்தியை அமெரிக்க தலைமையகம் வெள்ளை மாளிகைக்கு ஒட்டாவா தூதரகம் மூலம் அனுப்பியது. இந்த ரகசியத் தகவலின் முதல் தகவலை அழித்து விடுமாறு 2 நாட்களில் அமெரிக்க தூதரகம் கூறியிருந்தது.விக்கிலீக்ஸ் இணையத்தள தகவல் குறித்து லண்டனில் உள்ள கனடா தூதர் ஜேம்ஸ் ரைட் கருத்து கூற மறுத்தார். அந்த நாளில் கனடாவுக்கான அமெரிக்க தூதராக இருந்த பால் செலிசி கூறுகையில்,"விக்கிலீக்ஸ் குறிப்பிடும் நாளில் கனடா தலைநகர் ஒட்டாவாவில் இல்லை" என்றார்.
பாகிஸ்தான் உடனான உறவை துண்டிக்க வேண்டும்: அமெரிக்கா.
பாகிஸ்தான் அரசுடன் இனியும் சுமுகமான உறவை தொடர்வதா, வேண்டாமா என்பது பற்றி அமெரிக்க ஆட்சியாளர்கள் ஆலோசித்து வருகின்றனர்.பல அமெரிக்க அதிகாரிகள் பாகிஸ்தான் உடனான உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்ள வேண்டும் என்றே ஆலோசனை கூறி வருகின்றனர்.
இதுதொடர்பாக அமெரிக்காவில் இருந்து வெளிவரும் "வாஷிங்டன் போஸ்ட்" நாளிதழில் கூறப்பட்டுள்ளதாவது: அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் எங்கள் நாட்டில் இல்லை என பாகிஸ்தான் அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் அங்குள்ள அபோதாபாத் மறைவிடத்தில் பதுங்கியிருந்த ஒசாமா அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஒரு சர்வதேச பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான் அரசுடன் உள்ள அனைத்து விதமான உறவுகளையும் துண்டித்துக் கொள்ள வேண்டும் என அமெரிக்க ஆட்சியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஒபாமா நிர்வாகம் சரியான முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் முறையாக ஒத்துழைக்காத பட்சத்தில் அந்நாட்டுடனான தொழில் தொடர்புகள் துண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
இதற்கிடையில் ஐ.எஸ்.ஐ மற்றும் தலிபான் இடையிலான உறவுகள் குறித்த ஆதாரங்கள் தன் கையில் இருப்பதாகக் கூறி வரும் அமெரிக்க அதிகாரிகள், ஐ.எஸ்.ஐ மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் உயரதிகாரிகளுக்கும் தலிபான்களுக்கும் இடையில் தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானில் பிரதமருக்கு ஆதரவாக இருக்கும் மக்கள்.
ஜப்பானின் ஹமவோக்கா அணுமின் நிலையத்தை இழுத்து மூட உத்தரவிட்ட அந்நாட்டு பிரதமர் நவோட்டோ கானுக்கு மக்கள் பெருமளவில் ஆதரவு அளித்துள்ளனர்.ஜப்பானில் கடந்த மார்ச் 11ம் திகதி ஏற்பட்ட சுனாமி, நிலநடுக்கத்தை அடுத்து புகுஷிமா டச்சி அணுமின் நிலையம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து எதிர்கால அணுமின் நிலையத் திட்டங்களை அந்நாட்டு அரசு கைவிட்டது.
தலைநகர் டோக்கியோவில் இருந்து 200 கி.மீ தென்மேற்கில் அமைந்துள்ள ஹமவோக்கா அணுமின் நிலையத்தை பாதுகாப்பு கருதி இழுத்து மூடும்படி நேற்று முன்தினம் பிரதமர் நவோட்டோ கான் உத்தரவிட்டார்.இவ்வணுமின் நிலையத்தில் மொத்தம் ஐந்து அணுமின் உலைகள் உள்ளன. அவற்றில் 1970களில் கட்டப்பட்ட 1 மற்றும் 2ம் உலைகள் 2009ல் நிறுத்தப்பட்டன. 3ம் உலை பரிசோதனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இவற்றில் 4 மற்றும் 5ம் உலைகள் மட்டும் செயல்பட்டு வந்தன. 13ம் திகதி 4ம் உலை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 5வது உலையையும் பாதுகாப்பு கருதி இழுத்து மூடும்படி பிரதமர் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று அந்த உலை மூடப்பட்டது.பிரதமரின் இந்த உத்தரவு குறித்து நாட்டில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 66.2 சதவீதம் பேர் பிரதமருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 47 சதவீதம் பேர் நாடு முழுவதும் உள்ள அணுமின் உலைகளின் எண்ணிக்கையை குறைக்கும் ஆலோசனையை வரவேற்றுள்ளனர். 29.7 சதவீதம் பேர் மட்டுமே பிரதமரின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஒசாமாவின் உடலை எடுத்துச் சென்ற போர்க்கப்பலை பார்க்க அனுமதி.
ஒசாமா பின்லேடனின் உடலை கடலில் அடக்கம் செய்ய எடுத்துச் சென்ற கார்ல் வின்சன் என்ற போர்க்கப்பலை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்கக் கமாண்டோ வீரர்கள் சுட்டுக்கொன்று அவரது உடலை ஹெலிகாப்டரில் ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு சென்றனர்.அங்கிருந்து பின்லேடன் உடல் கார்ல் வின்சன் போர்க் கப்பல் மூலமே கடலுக்குள் அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் இந்த போர்க்கப்பலை பார்ப்பதற்கு பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர்.
இதை புரிந்து கொண்ட அமெரிக்கா கப்பலைப் பார்க்க அனுமதி அளித்துள்ளது. கார்ல் வின்சன் கப்பல் இப்போது பிலிப்பின்ஸின் மணிலா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.பிலிப்பின்ஸ் நாட்டு அதிபர் மூன்றாவது பெனிங்கோ அகியூனோ, அவரது அமைச்சரவை சகாக்கள், முக்கிய ராணுவ அதிகாரிகள் ஆகியோர் கார்ல் வின்சன் கப்பலை சனிக்கிழமை பார்வையிட்டனர். இதைத் தொடர்ந்து சில பத்திரிகையாளர்களும் சென்று பார்வையிட்டனர்.
கப்பலைப் பார்வையிட வருபவர்கள் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது குறித்து கப்பலுக்குள் விரிவாக ஏதும் விவாதிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பார்வையாளர்கள் கார்ல் வின்சன் கப்பலை அமைதியாகப் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.பின்லேடனின் உடலை எடுத்துச் சென்ற கப்பல் என்பதால் அதன் மீது அல்கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி கோபத்தை தீர்த்துக் கொள்ள முயலலாம் என்று அமெரிக்கா நினைக்கிறது. இதனால் அக்கப்பலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மதவாத அமைப்புக்கள் அமெரிக்காவிற்கு எதிராக கூட்டு.
ஒசாமாவை சுட்டுக் கொன்ற அமெரிக்காவை எதிர்த்துப் போராடும் வகையில் பாகிஸ்தானில் உள்ள சில மதவாத அமைப்புகள் ஒன்று சேர்ந்து புதிய கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன.அமெரிக்க அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட ரகசிய தாக்குதலில் பாகிஸ்தானில் தங்கியிருந்த ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் உள்ள பல்வேறு மதவாத அமைப்புகளும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் அங்குள்ள சில மதவாத அமைப்புகள் ஒன்று சேர்ந்து அமெரிக்காவை எதிர்க்கும் நோக்கில் புதிய கூட்டணி ஒன்றை ஏற்படுத்தியுள்ளன. "டெபா-இ-பாகிஸ்தான்" என பெயரிடப்பட்டுள்ள இப்புதிய கூட்டமைப்பு அமெரிக்காவை எதிர்க்கும் போராட்டங்களை நாடு முழுவதும் நடத்த திட்டமிட்டுள்ளது.
ஜமாத்-உல்-தவா தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த கூட்டமைப்பில் ஜமாத்-இ-இஸ்லாம், ஜாமியாத் உலேமா-இ-இஸ்லாம் அமைப்பின் இரு பிரிவுகள், ஜாமியாத் உலேமா-இ-பாகிஸ்தான் அமைப்பின் ஒரு பிரிவு, மஜ்லிஸ் அஹ்ரர், மர்காஷி ஜாமியாத் அல்-இ-ஹதித், தன்ஷீம்-இ-இஸ்லாமி மற்றும் சர்வதேச காதிம்-இ-நபுவாத் ஆகியவை உறுப்பினர்களாக இடம்பெறுகின்றன.
அமெரிக்காவுக்கு எதிரான இந்த போராட்டத்தில் தங்களுடன் இணைந்து செயல்படுமாறு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பி.எம்.எல்.என் மற்றும் முன்னாள் கிரிக்கட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் டெஹ்ரீக்-இ-இன்சாப் ஆகிய கட்சிகளுக்கும் இப்புதிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த 2001ம் ஆண்டில் அமெரிக்க இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட போது தலிபான்களை ஆதரித்து இதே மதவாத அமைப்புகள் "டெபா-இ-பாக்-ஆப்கன்" எனும் கூட்டமைப்பை ஏற்படுத்தின.அதன்பின் 2002ம் ஆண்டில் அமெரிக்க ராணுவத்தின் முன்னிலையில் ஆப்கானிஸ்தானில் நடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு பலுசிஸ்தான் மற்றும் கைபர்-பக்துன்க்வா ஆகிய இரண்டு எல்லை மாநிலங்களில் ஆட்சியை பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.
மது அருந்துவதை விட மோசமானது கணணி உபயோகிப்பது: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்.
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் வயர் இணைப்பு இல்லாத இணைய வசதிகளுடன் கூடிய கணணிகள் ஆகியவை மனித உடல்நலத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்க கூடியவை.இதனால் பள்ளிகளில் அவற்றை பயன்படுத்த உடனடியாக தடை விதிக்க வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன.
ஐரோப்பிய கூட்டமைப்பு கழகங்கள் நடத்திய ஆய்வில் இவைகளால் குழந்தைகளுக்கு பெரும் ஆபத்து விளையும் என தெரியவந்துள்ளது. இத்தகவலை டெய்லி டெலிகிராப் நாளிதழ் வெளியிட்டுள்ளது.
புகைபிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றை விட கைத்தொலைபேசிகள் மற்றும் கணணிகளால் பெரும் ஆபத்து ஏற்படக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் பள்ளிகளில் இவற்றின் பயன்பாட்டிற்கு தடைவிதிக்கவும் திட்டமிட்டுள்ளன. இருப்பினும் இதற்கு பல எம்.பி.க்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
கதிர்வீச்சு ஆபத்து அதிகரிப்பு: மக்கள் வெளியேற்றம்.
ஜப்பானில் புகுஷிமா அணு உலையில் இருந்து தொடர்ந்து ஆபத்தான கதிர்வீச்சு வெளிப்படுவதால் 20 கி.மீ தொலைவுக்கு அப்பால் வசித்து வந்த மக்களும் அங்கிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.
இத்தகவலை அந்நாட்டின் என்.எச்.கே தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக கர்ப்பிணிகள், குழந்தைகள் இருக்கும் குடும்பத்தினர் சுமார் 7,700 பேர் பாதுகாப்பான இடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிலநடுக்கம், சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பானில் அணு உலைகளை குளிரூட்ட முடியாத நிலையில் அவை வெடித்ததால் வெளியாகும் கதிர்வீச்சு 20 கி.மீ தூரத்தையும் கடந்து பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF