Tuesday, July 5, 2011

இன்றைய செய்திகள்.

அரசின் முட்டாள் தனத்துக்கு வரம்புகள் இல்லை : விக்கிரமபாகு கருணாரட்ன.

அரசின் முட்டாள் தனத்துக்கு வரம்புகளோ எல்லைகளோ இல்லை என நவசமசமாஜக் கட்சி பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.இலங்கையின் ஆளும்கட்சியின் தலைமைத்துவம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தெரிவுக் குழுவின் முன் அரசு தனது வடக்கு கிழக்கு பிரச்சினைக்கான தீர்வு திட்டத்தினை முன்வைக்கும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகம் சுசீல் பிரேமஜயந்த தெரிவித்தார்.ஆனால் குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவை தமிழ் தேசிய கூட்டமைப்பு புறக்கணித்தது.
இந்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அரசுடனான பலகட்ட பேச்சுவார்த்தைகள் வீண் என்ற தீர்மானத்துக்கு வந்ததினையும் நவசமசமாஜக் கட்சி பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது பாராளுமன்ற தெரிவுக்குழுவானது உறுதியான தீர்மானத்தை முன் வைக்காது எனவும் அது காலத்தினை இழுத்தடிப்பதற்கான ஒரு விடயம் என்று கூறியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை இந்தியாவிற்கு எதிராக செயற்படக் கூடிய அபாயம் : ஜெயலலிதா.
இலங்கை, இந்தியாவிற்கு எதிராக செயற்படக் கூடிய அபாயம் நிலவி வருவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இலங்கை அரசாங்கம் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியாவிற்கு எதிராக செயற்படக் கூடிய ஆபத்து காணப்படுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானைப் போன்றே சீனாவும் பல வழிகளில் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக திகழ்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நேபாளம் மற்றும் இலங்கையுடன் குறித்த இரண்டு நாடுகளும் இணைந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிக்குமாறு மத்திய அரசாங்கத்தை தொடர்ச்சியாக தாம் வலியுறுத்தப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.பொருளாதாரத் தடை விதித்தல் மற்றும் கச்சதீவை மீளப் பெற்றுக் கொள்ளல் ஆகிய தீர்மானங்கள் ஏற்கனவே இலங்கைக்கு எதிராக தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுத் திட்டத்திற்கு ஆதரவளிக்கப்படும் : ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு யோசனைத் திட்டத்திற்கு ஆதரவளிக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.யோசனைக்கு ஆதரவளிப்பதாக கட்சி உத்தியோகப்பற்றற்ற ரீதியில் இணக்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படுவதனால் குறித்த யோசனைக்கு ஆதரவளிக்க முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் ஆளும் கட்சியினால் இந்த யோசனை முன்வைக்கப்பட உள்ளது.குறித்த யோசனைத் திட்டம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் பயண கட்டணங்கள் குறைப்பு.
கொழும்பிலிருந்து பல பாகங்களுக்கு செல்லும் விமான சேவை கட்டணங்களில் போட்டித்தன்மையுடன் கூடிய நெகிழ்வான குறைப்பினை ஏற்படுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் அறிவித்துள்ளது.இதன்படி மாணவர் விசாவில் இலண்டன், கோலாலம்பூர் மற்றும் பங்களூருக்கு ஒருவழிப் பாதை விமானச்சீட்டுக்கு விசேட கட்டணமும், மத்திய கிழக்கு நாடுகளான டோகா, டுபாய் மற்றும் சவுதி அரேபிய நாடுகளுக்கு பணிக்காக செல்பவர்களுக்கு விசேட கட்டணமும், யாத்திரிகளாக இந்தியா, ஜித்தா மற்றும் தாய்லாந்துக்கு செல்பவர்களுக்கு விசேட கட்டணமும் அறவிடப்படும் எனத் தெரிவிக்ப்பட்டுள்ளது.இதன்படி இவர்களுக்கு 15 தொடக்கம் 20 சதவீதம் வரை கழிவு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த குடும்பத்திற்கு எதிராக லண்டனில் வழக்கு தாக்கல்.

வன்னியில் நடந்து முடிந்த இறுதி யுத்தத்தில் பல ஆயிரம் மக்கள் பரிதாபமாக படுகொலை செய்யபட்டும், போர்க்குற்றகளில் ஈடுபட்ட இலங்கை அரசின் அட்டூழிங்களை வெளிக் கொண்டு வந்திருக்கும் சனல் 4 தொலைக்காட்சியின்...
..ஆதாரங்கள் ஐ.நா. சபையால் ஏற்று கொள்ளபட்ட நிலையில் நேரடி கண் முன்னாள் கண்ட சாட்சிகளாக உள்ளவர்களையும் பிரதானமாக வைத்து ஐனாதிபதி மகிந்தா குடும்பம் மற்றும் அவர்களுடன் இயங்கும் முக்கிய இராணுவ தளபதிகள் ஒன்பது பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யபட உள்ளது. இதற்கான நகர்வுகளில் மக்கள் நலன் விரும்பிகள் சட்டவாளர்கள் ஈடுபட்டுள்ளனர் .குறித்த வழக்கினை வெற்றிகரமாக நடத்தும் முகமாக முக்கிய பரிஸ்டர்கள் பல கூட்டு சந்திப்புகள் ஈடுபட்டுவருகின்றனர்.


இவர்களுடன் ஆசிய மனித உரிமை மையம், மனித உரிமை மையம் போன்ற பிற தனியார் தொண்டு நிருவனங்களும் அதன் உறுப்பினர்களும் உள்ளடக்கம் பெற்றுள்ளனர் என தெரிவிக்கபடுகின்றது .
இவ் வழக்கு முன்னெடுக்கபட்டால் இலங்கை அரசு சர்வதேசத்தின் பிடியில் இருந்து மீண்டு எழ முடியாத சூழல் உருவாகுவதுடன் தமிழர்கள் அழிக்கபட்ட வரலாற்று துன்பியலுடன் தமிழர்களிற்கான தனி அதிகார பகிர்வு கிடைக்கும் என திடமாக நம்பபடுகின்றது.
இராணுவத்தளவாடங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் பாதுகாப்பு அமைச்சு ஆர்வம்.
இலங்கையின் தொழில்நுட்ப மற்றும் இயந்திரவியல் வல்லுனர்களைக் கொண்டு இராணுவத்தளவாடங்களை உற்பத்தி செய்து அயல்நாடுகளுக்கு  விற்பனை செய்வதில் பாதுகாப்பு அமைச்சு ஆர்வம் காட்டி வருகின்றது.அதன் ஒரு கட்டமாக தற்போதைக்கு மொரட்டுவைப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்துடன் இணைந்து ஆளில்லா உளவு விமானங்கள் மற்றும் கண்ணிவெடியகற்றல் கருவிகளை உற்பத்தி செய்வதற்கான செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இராணுவ மற்றும் விமானப்படை பொறியியல் பிரிவு மற்றும் பல்கலைக்கழக பொறியியல் நிபுணர்களின் நேரடி மற்றும் தொழில்நுட்ப அறிவினைக் கொண்டு பிரஸ்தாப செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன் முதற்கட்டமாக தற்போதைக்கு ஆளில்லா உளவு விமானமொன்று தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அவ்வாறான இன்னும் பல விமானங்களைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மேலும் இராணுவத்தினரின் பயன்பாட்டில்  இருக்கும் யுனிகோன் கவச வாகனங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பது தொடர்பிலும் பாதுகாப்பு அமைச்சின் கவனம் திரும்பியுள்ளது. அவ்வாறு தயாரிக்கப்படும் இராணுவத் தளவாடங்களை சார்க் வலய நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கும் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குகின்றது: ஜெனரல் சரத் பொன்சேகா.
கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குவதற்கான சமிக்ஞைகள் தென்படுவதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார்.இன்று காலை கொழும்பு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக சிறைச்சாலைக் காவலர்களால் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட வேளையிலேயே ஊடகவியலாளர்களிடம் அவர் மேற்கண்ட கருத்தை வெளியிட்டிருந்தார்.
நாட்டினுள் பயங்கரவாதம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கழிய முன்பே மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகள் தலைதூக்குவதற்கான சமிக்ஞைகள் வெளிப்படையாகவே தென்படத் தொடங்கியுள்ளன.அண்மையில் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு மற்றும் வங்கிக் கொள்ளை சம்பவங்களை அதன் ஒரு கட்டமாக நாம் கருத வேண்டியுள்ளது என்றும் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அதே நேரம் வெள்ளைக் கொடி வழக்கின் பிரதிவாதிகள் தரப்பு சாட்சிகளிடம் மேற்கொள்ளப்பட்ட குறுக்கு விசாரணைகள் இன்றுடன் முடிவடைந்துள்ளன.இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய மற்றும் பேராசிரியர் ஆஷ்லி ஹல்பே ஆகியோர் பிரதிவாதி தரப்பில் சாட்சியமளிக்க நீதிமன்றத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பாதள உலக குழுத் தலைவர் நெலுவ பிரியந்த, அதிரடிப்படை பிரிவினரால் சுட்டுக் கொலை.
சுமார் 25 கொலைகளுடன் தொடர்புபட்ட பாதள உலக குழுத் தலைவர்களில் ஒருவரான நெலுவ பிரியந்த நேற்றிரவு சூரியவெவ பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படை பிரிவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.நேற்றுக்காலை கைது செய்யப்பட்ட நெலுவ பிரியந்த, விசாரணைகளை அடுத்து ஆயுதம் பதுக்கி வைக்கப்பட்டதாக அவர் கூறிய இடமான சூரியகந்த மோர்னிங்கந்த என்ற இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.அங்கு சென்ற போது அங்கு மறைத்து வைக்கப்பட்ட ஆயுதம் ஒன்றினால் விசேட அதிரடிப் படையினரை சுடுவதற்கு அவர் முயன்றுள்ளார்.
இதனையடுத்து விசேட அதிரடிப்படையினர் நடத்திய சூட்டுச் சம்பவத்தில் காயமுற்ற அவர், சூரியவெவ வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.நெழுவ பிரியந்த பல கொலை வழக்குகளுடன், போதை பொருட் கடத்தல்களுடன் சம்பத்தப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் மாகாண சபை கொலை வழக்குடன் இவர் சம்பந்தப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எகிப்தில் கொடூரம்: கியாஸ் பைப் லைன் தகர்ப்பு.
எகிப்தில் மக்கள் புரட்சி ஏற்பட்டு அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகினார். ராணுவத்திடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது. வரும் செப்டம்பரில் அங்கு பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என ராணுவ அரசு கூறியுள்ளது.
நாட்டின் நிர்வாக பணிகளை சீர்திருத்தும் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கை எடுப்பதில் ராணுவ அரசு தீவிரம் காட்டவில்லை என எகிப்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கெய்ரோ நகரில் உள்ள தஹ்ரிர் சதுக்கத்தில் இன்னும் போராட்டம் நீடிக்கிறது.இந்நிலையில் எகிப்தில் இருந்து இஸ்ரேல் மற்றும் ஜோர்டன் நாடுகளுக்கு செல்லும் எரிபொருள் பைப் லைனை போராட்டக்காரர்கள் நேற்று குண்டு வைத்து தகர்த்தனர்.
சினாய் தீபகற்ப பகுதியில் உள்ள பிர் அல் அப்த் என்ற இடத்தில் கார் குண்டு மூலம் இந்த அசம்பாவிதம் நிகழ்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பைப் லைன் தகர்க்கப்பட்டதால் அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு மீட்பு படையினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்தசம்பவம் காரணமாக இஸ்ரேல், ஜோர்டன் நாடுகளுக்கு எரிபொருள் சப்ளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வுதி அரேபியாவிற்கு கார்களை ஏற்றுமதி செய்ய வேண்டாம்: ஜப்பான் நிறுவனங்களுக்கு பெண்கள் வேண்டுகோள்.
சவுதி அரேபியாவில் கார் ஓட்டுவது தொடர்பாக அந்நாட்டு பெண்கள் டிவிட்டர், பேஸ்புக் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.மேலும் பெண்களை கார் ஓட்ட அனுமதிக்கும் வரை சவுதி அரேபியாவுக்கு கார் ஏற்றுமதி செய்ய வேண்டாம் என்று ஜப்பான் நாட்டின் சுபரு கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெண்கள் கைத்தொலைபேசி மூலம் குறுந்தகவல்கள் அனுப்பி வருகின்றனர்.
உலக நாடுகளில் சவுதி அரேபியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் பெண்கள் கார் ஓட்டுவதற்குத் தடை இல்லை. சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அந்நாட்டு இஸ்லாமிய மதகுருக்களின் வாய்மொழி தடை உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது.பெண்கள் கார் ஓட்ட அந்நாட்டு மன்னர்களில் சிலர் அனுமதித்த போதும் இஸ்லாமிய மதகுருக்களின் வாய்மொழி உத்தரவால் கார் ஓட்டும் பெண்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளாக கார் ஓட்டும் உரிமைக்காக போராடி வந்தாலும் நடப்பாண்டில் பெண்கள் அதிகளவில் அக்கறை செலுத்தி இதற்காக போராடி வருகின்றனர். இவர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அரபு நாடுகளில் சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஓரளவிற்கு அதில் வெற்றி பெற்று வருகின்றனர். அரபு நாட்டு மக்கள் டிவிட்டர், பேஸ்புக் வாயிலாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இதே முறையை சவுதி அரேபிய பெண்களும் தற்போது பயன்படுத்த களத்தில் இறங்கியுள்ளனர். மேலும் யூடியூப் டாட் காம் பயன்படுத்தி கார் ஓட்டும் பொட்டோக்களை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இத்துடன் நின்று விடாமல் பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்கும் வரை ஜப்பான் நாட்டிற்கு கார் ஏற்றுமதி செய்ய வேண்டாம் என்று அந்நாட்டின் சுபரு கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு சவுதி பெண்கள் கைத்தொலைபேசி மூலம் குறுந்தகவல்கள் அனுப்பி வருகின்றனர்.அரபு நாடுகளில் மக்களின் கிளர்ச்சியை அடுத்து நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் பேஸ்புக் பயன்படுத்தும் பெண்கள் சதவீதம் 32 முதல் 33.5 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக துபாய் அரசு பள்ளி ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அரபு நாடுகளில் பேஸ்புக் பயன்படுத்தும் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகளவில் பேஸ்புக் பயன்படுத்தும் பெண்களின் சதவீதம் 61 சதவீதமாக உள்ளது.சவுதியில் பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமை மறுக்கப்பட்ட போதும் அந்நாட்டு பல்கலைக்கழகங்களில் படிப்பவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள். மேலும் சமீபத்தில் உலகிலேயே பெண்களுக்கான பெரிய பல்கலைக்கழகம் ரியாத்தில் திறக்கப்பட்டது. ஆனால் வேலைவாய்ப்பு என்று வரும் போது நிலைமை தலைகீழாக உள்ளது.
கடந்த 2009ம் ஆண்டில் சவுதியில் பெண்களில் 17 சதவீதம் பேர் மட்டுமே பணியாற்றி வந்தனர். ஐக்கிய அரபு எமிரேட்டில் 42 சதவீத பெண்களும், கத்தாரில் 50 சதவீதப் பெண்களும் பணிபுரிந்து வருகின்றனர்.பெண்கள் அதிகளவில் வேலையில் இல்லாத போதும் அந்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகளவில் நிலவி வருகிறது. அந்நாட்டைச் சேர்ந்தவர்களை விட வெளிநாட்டினர் தான் அதிகளவில் தொழிலாளர்களாக, டிரைவர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
அந்நாட்டில் பெண்கள் தனியாக வர்த்தகத்தில் ஈடுபட முடியாது. இவர்கள் சார்பில் வர்த்தகத்தை நிர்வகிக்க ஆண் காப்பாளர்களை நிர்வகிக்க வேண்டும். இதுபோன்ற காரணங்களால் பெண்கள் வர்த்தகத்தில் நீடிக்க முடியாமல் இறுதியில் கைவிட்டு விடுகின்றனர். இது அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் தடையாக இருந்து வருகிறது.இதனால் சவுதி பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய ஆர்வம் செலுத்தி வருகின்றனர். துபாயில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவதால் அங்கு வர்த்தகத்தில் ஈடுபட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேற்கு சசக்ஸ் பகுதியில் நடுவானில் விமானங்கள் இன்று மோதின.
இங்கிலாந்தின் மேற்கு சசக்ஸ் விமான நிலையம் அருகே நடுவானில் இரு விமானங்கள் இன்று காலை மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஒரு விமான ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வானில் மற்றொரு விமானத்தின் மீது மோதியதும் பெரும் விபத்தை தவிர்க்க மரணம் அடைந்த விமான ஓட்டுநர் பிரைட்டன் அருகே உள்ள ஸோரகம் விமான நிலைய பகுதியல் உள்ள பொழுதுபோக்கு மைதானத்தில் விமானத்தை தரை இறக்க முயன்றார்.குடியிருப்பு பகுதியில் விமானம் நொறுங்கி பெரும் உயிரிழப்புகள் ஏற்படக் கூடாது என்பதற்காக அவர் இவ்வாறு தரை இறங்கினார். இருப்பினும் அவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் சிக்கிய 2வது விமானம் டைமண்ட் டிஎ40 பத்திரமாக தரை இறங்கியது. அதில் இருந்த 2 ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்து இருந்தார்கள். அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.விபத்தில் மரணம் அடைந்த விமான ஓட்டுநரின் வயது 63. அவர் உள்ளூர் பகுதியை சேர்ந்தவர். நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார். விமானம் நொறுங்கிய போது ரெக்ரியேஷன் மைதானத்தில் மக்கள் இருந்த போதும் யாருக்கும் ஆபத்து ஏற்படவில்லலை. விபத்தை தொடர்ந்து பிரைட்டன் சாலைப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
முன்விரோதம் காரணமாக 50க்கும் மேற்பட்ட பந்தய புறாக்கள் படுகொலை.
பழி வாங்கும் நடவடிக்கையாக 50க்கும் மேற்பட்ட பந்தய புறாக்கள் எடின்பர்க் பகுதியில் கொடூரமாக கொல்லப்பட்டன.ஆசையாக வளர்த்த புறாக்கள் அனைத்தும் ஒரே நாளில் கொல்லப்பட்டு இருப்பதை பார்த்து உரிமையாளர் பிரையன் ஓ நீல் கண்ணீர் விட்டு அழுதார். அவர் நீண்ட நேரம் பேச முடியாமல் வேதனையுடன் காணப்பட்டார்.ஒரே நேரத்தில் பெருமளவு பந்தய புறாக்கள் கொடூரக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நேற்று இரவு ஸ்காட்லாந்து பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.
புறாக்கள் உரிமையாளர் ஆன 70 வயது பிரையன் கூறுகையில்,"பறவைகள் தப்பி செல்ல முடியாத வகையில் மிக மோசமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டு உள்ளன. பந்தய புறாக்களின் கழுத்து பகுதி மற்றும் இறக்கைகளில் கம்பியால் அடித்து கொன்று உள்ளனர். மிக மோசமாக காயம் அடைந்த புறாக்கள் பின்னர் துடி துடித்து இறந்து உள்ளன" என்றார்.
தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த கொடூர நிகழ்வு நடந்து உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்த பாதகமான செயலை செய்த நபர் யார் என்பது எனக்கு தெரியும். அவர் இதே நடவடிக்கையில் ஈடுபட்டு 3 மாத சிறை தண்டனையும் அனுபவித்தவர் ஆவார் என்றும் பிரையன் கூறினார்.பொலிஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,"புறாக்களை கொன்றது மிகவும் கொடூரமான செயல்" என தெரிவித்தார். எஞ்சிய ஒன்றிரண்டு புறாக்களை உரிமையாளர் பிரையன் ஏக்கத்துடன் பார்த்த வண்ணம் உள்ளார்.
தனது 6 வயது சிறுவனை சுட்டுக் கொன்ற அண்ணன்.
அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தில் மோர்கன் கவுண்டி நகரை சேர்ந்தவன் ஆண்ட்ரூ(11). சம்பவத்தன்று அவன் தனது 6 வயது தம்பியுடன் வீட்டில் தனியாக இருந்தான்.இந்த நிலையில் அவனது தம்பி துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தான். அவனது தலையில் குண்டு பாய்ந்து இருந்தது.இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே பொலிசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இந்த கொலை சம்பவம் நடந்த போது இவர்கள் 2 பேர் மட்டுமே வீட்டில் இருந்தனர். பெற்றோர் இல்லை. எனவே சிறுவனை கொலை செய்தது அண்ணன் ஆண்ட்ரூ தான் என கருதி பொலிசார் அவனை கைது செய்தனர்.தற்போது அவன் சிறுவர் சீர்திருத்த ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கிறான். அதே நேரத்தில் சிறுவன் தற்செயலாக சுட்டதில் உடலில் குண்டு பாய்ந்து இருக்கலாம். இது ஒரு விபத்து என்றும் ஒரு தரப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.
அதிவேக புல்லட் ரயில் பயணத்தை கண்டித்து இத்தாலியில் கலவரம்.
இத்தாலி-பிரான்ஸ் இடையே பாரீஸ் மற்றும் பிலன் நகரை இணைக்கும் வகையில் அதிவேக புல்லட் ரெயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் கடந்த 2001ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன.இதற்கு இத்தாலியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இருந்தும் அதையும் மீறி வடக்கு இத்தாலியில் துரின்பகுதியில் சியோமோன்ட் என்ற இடத்தில் சுரங்கபாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.நேற்று அங்கு பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போது அப்பகுதியை சேர்ந்த சுமார் 1 லட்சம் பேர் அங்கு திரண்டனர். பணி நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் பேரணி நடத்தினார்கள். அப்போது பேரணியில் திடீரென கலவரம் வெடித்தது.
உடனே அதில் பங்கேற்ற பொதுமக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பொலிசார் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர். நிலைமை மோசமடைந்ததால் கலவரக்காரர்கள் மீது பொலிசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். மேலும் தடியடி நடத்தினார்கள்.
இச்சம்பவத்தில் 200 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 188 பேர் பொலிசாரும் அதிகாரிகளும் அடங்குவர். இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கலவரத்துக்கு முகமூடி அணிந்து பேரணியில் கலந்து கொண்ட தீவிரவாதிகள் காரணம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் இத்தாலி மற்றும் அண்டை நாடுகளை சேர்ந்தவர்கள். அவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதற்கிடையே கலவரத்துக்கு இத்தாலி அதிபர் ஜியோர்ஜியோ நபோலி டானோவும், பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனியும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஒபாமா சுட்டுக் கொலை: ஆதரவாளர்கள் அதிர்ச்சி.
அமெரிக்கா அதிபர் ஒபாமா சுடப்பட்டதாக பொக்ஸ் தொலைக்காட்சியின் டுவிட்டர் இணையதளத்தில் தகவல் பரவியதால் அதை படித்த அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.அமெரி்க்காவின் முன்னணி தொலைக்காட்சியான "பொக்ஸ் நியூஸ்" பயன்படுத்தி வரும் டுவிட்டர் இணையதளப் பக்கத்தில்,"ஜூலை 4 மிகவும் வருத்தமான தினம். அதிபர் ஒபாமா இறந்துவிட்டார். அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்" என்று கூறப்பட்டிருந்தது.பின்னர் ஜான் பைடன் என்பவர் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை படித்தவர்களில் பலர் அதை உண்மை என்று நம்பி தங்கள் அனுதாபக் கருத்தையும் பதிவு செய்தனர். இன்னும் சிலரோ புதிய அதிபருக்கு வாழ்த்து தெரிவித்து எழுதினர்.
ஜூலை 4 அமெரிக்காவின் தேசிய தினம் என்பது குறிப்பிடத்தக்கது. யாரோ சில விஷமிகள் "பொக்ஸ் நியூஸ்" தொலைக்காட்சியின் டுவிட்டர் இணையப் பக்கத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து ஒபாமா குறித்து தவறான தகவலை வெளியிட்டுள்ளனர்.இதனிடையே ஒபாமா பற்றிய தகவலை வெளியிட்டதற்கு பொறுப்பு ஏற்பதாக "த ஸ்கிரிப்ட் கிட்டீஸ்" என்ற இணையதளக் குழுவினர் தெரிவித்துள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.மே 2011ல் பொக்ஸ் பொழுதுபோக்கு குழுமத்தின் "பொக்ஸ்.காம்" இணையதளத்தை மென்பொருள் விஷமிகள் ஏற்கெனவே சேதப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோலர் கோஸ்டரில் சிக்கித் தவித்த ஒன்பது பேர் பத்திரமாக மீட்பு.
ஸ்காட்லாந்தில் ஹாமில்டன் அருகே உள்ளது ஸ்டிராத்கிளைய்டு கன்ட்ரி பார்க். இங்கு பல்வேறு பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்கள் உள்ளது.இதில் உடலையும், மனதையும் படபடக்க வைக்கும் ரோலர் கோஸ்டர் விளையாட்டும் ஒன்று. மணிக்கு 40 மைல் வேகத்தில் 40 அடி உயரத்தில் மேலும் கீழுமாக வளைந்து நெளிந்து செல்லும்.திகில் விளையாட்டில் துணிச்சல் மிக்கவர்கள் அமர்ந்து சென்று த்ரில் அனுபவத்தை ரசிப்பார்கள். நேற்று இந்த த்ரில் அனுபவத்தை ரசிக்க சென்றவர்கள் 9 பேருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
தடதடவென்ற சத்தத்துடன் புறப்பட்ட ரோலர் கோஸ்டர் 40 அடி உயரத்தில் திடீரென்று சிக்கிக் கொண்டு நின்றுவிட்டது. அதில் உட்கார்ந்த சிறுவன் உள்பட 9 பேர் நடுங்கி விட்டனர்.எவ்வளவு முயன்றும் அதை இயக்க முடியாததால் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் பறந்தது. அவர்கள் விரைந்து வந்து வேகமாக செயலில் இறங்கினார்கள்.ரோலர் கோஸ்டரின் பக்கவாட்டில் உள்ள இரும்பு கம்பங்களை பிடித்து ஏறிச்சென்று எல்லோரையும் பத்திரமாக மீட்டனர். அதன் பிறகே ரோலர் கோஸ்டரில் பயணம் செய்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
பபிள் விட்டு சாதனை படைத்த நபர்.
சோப்பு நுரை மூலம் பபிள் விட்டு சாதனை படைக்கும் சாம்சம், தனது 7வது கின்னஸ் சாதனையை தற்போது முறியடித்துள்ளார்.சோப்பு நுரையை கொண்டு பபிள் விடுவது குழந்தைகளின் பொழுதுபோக்கு. ஆனால் இதனை தொழிலாகவே செய்து வெற்றியும் பெற்று சாதனை படைத்து வருகிறார் சாம்சம் என்ற சாம் ஹீத்(39). 22 வருடங்களாக இந்த தொழிலை செய்து வரும் சாம்சம் இந்த முறையும் தனது கின்னஸ் சாதனையை தானே முறியடித்துள்ளார்.
பெரிய பபிள் அதற்குள் சிறியதாய் ஏராளமான பபிள்கள் என இந்த முறையும் சாதனையுடன் புதுமையும் படைத்துள்ளார். ஒன்றல்ல இரண்டல்ல பெரிய பபிளுக்குள் 56 சிறிய பபிள்கள்.கடந்த 2006ம் ஆண்டு 49 பபிள்கள் என்று இருந்த இவரது சாதனை தற்போது இவராலேயே முறியடிக்கப்பட்டுள்ளது.இது குறித்து சாம் கூறியதாவது: வித்தியாசமாக ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்பது எனது ஆசை. பபிள் விடுவது எனக்கு பிடித்தமான ஒன்று. இதிலேயே சாதனை படைக்கலாம் என்ற யோசனை தோன்றியது.தொடர்ந்து பயிற்சி செய்தேன். எனக்கு பலமுறை வெற்றியும் கிட்டி உள்ளது. பபிள் விட தயாரிக்கப்படும் கலவை தான் இதில் மிகவும் முக்கியம். காற்றின் திசையை அறிந்து கொண்டு அதற்கேற்ப பபிள் விடவேண்டும்.
இக்கலையை பயிற்றுவிக்கவும் மேம்படுத்தவும் தனியாக பப்ளிங்க் என்ற நிறுவனம் ஒன்றைத் துவங்கினேன். இதில் தயாராகும் கலவைகள் மற்றும் உபகரணங்களைக் கொண்டு தனிமனிதர்களும் இதில் சாதனையாளர்களாக முடியும்.இதில் சாதனை படைக்க பயிற்சி மட்டுமே தேவை. இத்துறையில் மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் சோப்பு கலவையின் ரகசியத்தை மட்டும் சொல்லமாட்டேன்.
தனது 5 உடல் உறுப்புகளை தானமாக அளித்த 12 வயது சிறுமி.
காரிஸ் மே டார்லிங்கிற்கு 12 வயது தான் ஆகிறது. சிறுவயதில் இவள் தனது உடல் உறுப்புகளை 5 பேருக்கு தானமாக வழங்கியுள்ளாள்.சிறுமி காரிஸ் கடந்த ஏப்ரல் மாதம் ஸ்ரெப்டோகாகஸ் என்ற பக்டீரிய நுண் உயிரி தொற்று காரணமாக இறந்தார். அவருக்கு மருத்துவர்கள் உரிய ஆண்டிபயாடிக் மருந்துகளை அளித்த போதும் பலன் கிடைக்கவில்லை. நோய்த் தொற்று காரணமாக சிறுமி காரிஸ் மேவுக்கு மூளை இறப்பு ஏற்பட்டது.மூளை செயல் இழந்து போனாலும் உடல் உறுப்புகள் சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.சிறுமியின் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கணையம் ஆகியவை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உடனடியாக அளிக்கப்பட்டு அவர்கள் உயிர் பிழைத்தனர்.
"காரிசுக்கு அடுத்தவர்களுக்கு உதவ தான் விருப்பம். அவர் விருப்பத்தை போலவே தனது உடல் உறுப்புகளை தானமாக தந்து மறைந்து விட்டாள்" என தந்தை கூறினார்.சிறுமி காரிசுக்கு பாட்டு கேட்பது மிகவும் பிடிக்கும். அவர் ஒருநாள் கடுமையான காது வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை செய்த போது தான் ரத்தத்தில் தொற்று ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.அவளுக்கு பின்னர் தலைவலியும், காதில் இருந்து ரத்தமும் கொட்டியது. இதனால் அவளுக்கு மூளை இறப்பு ஏற்பட்டது. கிருமி தாக்குதலில் சிறுமிக்கு மூளை வீக்கம் ஏற்பட்டு மரணம் ஏற்பட்டது.
ஏமனில் அல்கொய்தா தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.
ஏமனில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 13 அல்கொய்தா பயங்கரவாதிகளும், 10 பாதுகாப்புப் படை வீரர்களும் உயிரிழந்தனர்.அபயான் மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்தது. இருதரப்பிலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இதனிடையே அல்கொய்தா கைப்பற்றியிருந்த ஜிஞ்ஜிபார் நகரின் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அட்லாண்டிஸ் விண்கலத்தின் இறுதி பயணத்தைக் காண தந்தை - மகன் ஆவல்.
கனடா ஒண்டோரியாவின் நியூமார்கெட் பகுதியை சேர்ந்தவர் ரேபெலேகி. இவருக்கு கடுமையான புற்றுநோய் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார்.தற்போது அதன் பாதிப்பில் இருந்து மீண்டுள்ள இவர் தனது மகன் பிரட்டுடன் நாசா விண்வெளி மையத்திற்கு விசேட பயணம் மேற்கொள்கிறார். வருகிற வெள்ளிக்கிழமை ரே தனது மகனுடன் கென்னடி விண்வெளி மையத்திற்குள் செல்கிறார்.
அங்கு அட்லாண்டிஸ் விண்கலம் தனது இறுதி விண்வெளி பயணத்தை மேற்கொள்கிறது. விண்கலத்தின் சரித்திரம் மிக்க பயணத்தை காண 10 லட்சம் மக்கள் கடற்கரை மற்றும் வீதியோரங்களில் குவிந்து இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.புற்று நோயில் இருந்து விடுபட்ட ரே தனது மகனுடன் அட்லாண்டிஸ் விண்கலத்தை மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பை பெற்று உள்ளார். கனடா நாட்டின் ஏராளமான விண்வெளி வீரர்களும் கென்னடி விண்வெளி மையத்தில் குவிகிறார்கள்.
இந்த கடைசி பயணத்தை தொடர்ந்து அட்லாண்டிஸ் விண்கலம் தனது 30 ஆண்டு சேவையை பூர்த்தி செய்து கொண்டு அருங்காட்சியகத்தில் இடம்பெறுகிறது. அமெரிக்காவின் விண்வெளி சாதனைகளை எடுத்துரைத்த இந்த விண்கலம் தனது இறுதி பயணம் மேற்கொள்வதை அமெரிக்க மக்கள் ஒரு ஏக்கத்துடன் பார்க்கிறார்கள்.அட்லாண்டிஸ் விண்கலத்தை பார்வையிட மிக குறைந்த தூரத்தில் இருந்து பார்க்கும் பார்வையாளர்களில் ஒருவர் என்ற அதிர்ஷ்டம் ஒண்டோரியா ரே மற்றும் அவரது மகனுக்கு கிடைத்து உள்ளது.
அரசை கவிழ்க்க நினைப்பவர்களை நான் சட்டப்படி தண்டிப்பேன்: கடாபி ஆவேசம்.
கடாபிக்கு எதிராக போராட்டம் நடத்தும் எதிர்ப்பாளர்கள் பிரெஞ்சு அரசு அளித்த ஆயுத சப்ளையாலும் நேட்டோ ராணுவப் படைகளின் வான் தாக்குதலாலும் உற்சாகம் பெற்று தலைநகர் திரிபோலியைக் கைப்பற்றத் தயாராகி வருகின்றனர்.அரசு எதிர்ப்பாளர்களை ஒடுக்கியது போதும் அவர்களுடன் சமரசப் பேச்சுகளைத் தொடங்குங்கள். நாட்டு மக்களை ராணுவ பலம் கொண்டு ஒடுக்க நினைக்காதீர்கள் என்று பல உலக நாடுகள் லிபிய அதிபருக்கு ஆலோசனைகள் கூறி வருகின்றன.
கடாபியை எதிர்ப்பவர்கள் முதலில் ஆயுதம் ஏந்தாமல் தான் சாத்வீகமான முறையில் கிளர்ச்சி நடத்தினார்கள். அவர்களுடைய கிளர்ச்சிக்கு நாளடைவில் மக்களிடையே ஆதரவு அதிகமாவதைக் கண்டு ஆத்திரம் அடைந்த அதிபரும் அவருடைய மகனும் ராணுவத்தைக் கொண்டு கொடூரமாக அவர்களை அடக்க முற்பட்டனர்.இந்த நிலையில் தான் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் அரசு எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு காட்டத் தொடங்கியது.
இதற்கிடையே ஐக்கிய நாடுகள் சபையிலும் லிபிய அதிபர் கடாபிக்கு எதிராகக் கருத்துகள் கூறப்பட்டு அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் கடாபி மக்களை மேலும் கொடூரமாக ஒடுக்க முற்பட்டார்.இதனால் எதிர்ப்பாளர்கள் அஞ்சி நடுங்கி கிளர்ச்சிகளை நிறுத்தி விடுவார்கள் என்று நினைத்ததற்கு மாறாக அவர்களுடைய கிளர்ச்சி வலுவடைந்தது. இந்தக் கிளர்ச்சி இப்படி வலுவடைய அமெரிக்காவும் ஒரு காரணம்.லிபியாவில் அமைதி நிலவுவதற்காக ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் அந்த நாட்டுத் தலைவர்கள் முன்னிலையில் சமரசப் பேச்சுக்கு தென்னாப்பிரிக்க அதிபர் ஜேகப் சுமோ முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
தலைநகர் திரிபோலிக்கு தென்மேற்கில் உள்ள நபுசா மலைப் பகுதியில் அரசு எதிர்ப்பாளர்கள் சிறு ஆயுதங்களுடன் பதுங்கி உள்ளனர். பிரெஞ்சு அரசு வானிலிருந்து போட்ட ஆயுதங்களை அரசு எதிர்ப்பாளர்கள் எடுத்துப் பயன்படுத்தி வருகின்றனர்.தலைநகர் திரிபோலிக்குச் செல்லும் வழியில் உள்ள நிலப்பகுதிகளை அடுத்த 48 மணி நேரத்தில் கைப்பற்றிவிட அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். அரசு எதிர்ப்பாளர்களின் சார்பில் கர்னல் அகமது உமர் பாணி செய்தியாளர்களிடம் பேசினார்.கடந்த வாரம் திரிபோலிக்கு அருகில் 80 கிலோ மீற்றர் தொலைவில் முகாமிட்டிருந்த அரசு எதிர்ப்பாளர்கள், கடாபி ஆதரவாளர்களின் கடுமையான தாக்குதலை எதிர்கொண்டார்கள்.
அரசு ஆதரவாளர்கள் ராணுவத்தின் துணையோடு எதிர்ப்பாளர்களின் நிலைகள் மீது சரமாரியாக குண்டுகளை வீசி தாக்கினர். இயந்திரத் துப்பாக்கிகளாலும் சிறு, குறு பீரங்கிகலாலும் சுட்டனர். இத் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அரசு எதிர்ப்பாளர்கள் பின் வாங்கினர்.இதைக் கேள்விப்பட்ட பிரெஞ்சு அரசு உடனே ஆயுதங்களை விமானங்களிலும் ஹெலிகாப்டர்களிலும் ஏற்றி அனுப்பிவைத்தனர். இந்த ஆயுதங்கள் வந்து சேர்ந்ததும் அரசு எதிர்ப்பாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.
அத்துடன் நேட்டோ படைகளும் கடாபியின் ஆதரவாளர்கள் தங்கியிருக்கும் இடங்களைச் சுற்றி கடுமையாக தாக்கினர். இந்தத் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அவர்கள் அங்கிருந்து ஓடினர்.
பீர் அல் கணாம் என்ற நகரில் கடாபி ஆதரவாளர்கள் மேற்கொண்டு சண்டைபோட முடியாமல் ஆயுதங்களையும் பிற சாதனங்களையும் போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.நேட்டோ வான் தாக்குதல் மூலம் லிபிய ராணுவமும் அதை ஆதரிக்கும் ஆயுதப்படைப்பிரிவினரும் தங்கியிருக்கும் இடங்களையே நாசப்படுத்தினர். அப்போது 2 கவச வாகனங்கள் முற்றிலும் நாசமாயின.
லிபிய அதிபர் கடாபியை ஆதரிப்பவர்கள் கர்யான் என்ற ஊரிலும் வலுவாக காலூன்றி இருந்தார்கள். அந்தப் பகுதி மீதும் கடந்த 4 நாள்களில் 8 முறை மிகப்பெரிய வான் தாக்குதலை நேட்டோ நடத்தியது. ராணுவ வாகனங்களுக்கு எரிபொருள்களையும் உதிரி பாகங்களையும் ஆயுதங்களையும் வெடிகுண்டுகளையும் வழங்கும் இந்த மையத்தின் மீது நேட்டோ நடத்திய அதி தீவிர வான்தாக்குதல் காரணமாக இங்கே சண்டையை நிறுத்திய அதிபரின் ஆதரவாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பி ஓடினர்.
லிபிய நாட்டின் உள்விவகாரத்தில் தலையிட பிரெஞ்சு அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது, என்னுடைய அரசைக் கவிழ்க்க நினைக்கும் அன்னிய கைக்கூலிகளை நான் சட்டப்படி தண்டிக்கிறேன், இதற்காக எங்கள் மீது தாக்குதல் நடத்த பிரெஞ்சு அரசுக்கு ஏது அதிகாரம் என்று கடாபி பொறிந்து தள்ளினார்.ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும் நாட்டு மக்கள் மீது ராணுவத்தையே ஏவி உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டு தன் நாட்டு விவகாரத்தில் மற்றவர்கள் ஏன் தலையிட வேண்டும் என்று கேட்கிறார் கடாபி.
பிற நாட்டு உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது என்பதை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் லிபியாவில் நடப்பது உள்நாட்டு விவகாரம் அல்ல, அப்பட்டமான மனித உரிமை மீறல். அதிபராக இருக்கும் கடாபி தன்னுடைய இனத்தைச் சேராத மக்களைக் கொன்று குவிக்கிறார். இப்படிச் செய்ய அவருக்கு அதிகாரம் இல்லை.இதைத்தான் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது. எனவே தான் அரசு எதிர்ப்பாளர்கள் ராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட பகுதிக்கே சென்று நாங்கள் ஆயுதங்களைப் போட்டோம், அது அவர்களுடைய தற்காப்புக்காகத்தானே தவிர, ஆட்சியைக் குலைக்க அல்ல என்கிறார் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஆலன் ஜுபி.
தாய்லாந்தின் முதல் பெண் பிரதமர்.
தாய்லாந்தில் எதிர்க்கட்சியான ப்யூதாய் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதால் இக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமரின் சகோதரியுமான யிங்லக் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட உள்ளார்.மொத்தமுள்ள 500 இடங்களில் 260 இடங்களை ப்யூதாய் கட்சி கைப்பற்றியுள்ளது. ஆளும் ஜனநாயகக் கட்சிக்கு 163 இடங்கள் கிடைத்துள்ளன.
எதிர்க்கட்சியான ப்யூதாய் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதால் முன்னாள் பிரதமர் ஷினவத்ரேவின் சகோதரியும், இக்கட்சியின் தலைவருமான யிங்லக்(44) புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட உள்ளார்.தற்போதைய பிரதமர் அபிஜித் புதிய பிரதமராகவுள்ள யிங்லக்குக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். யிங்லக் தாய்லாந்து நாட்டின் முதல் பெண் பிரதமராகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுமதியின்றி பறந்த விமானத்தால் அமெரிக்காவில் பரபரப்பு.
அமெரிக்க அதிபர் தங்கியிருந்த இடத்துக்கு அருகே அனுமதியின்றி குட்டி விமானம் ஒன்று திடீரென பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அமெரிக்க அதிபர் ஒபாமா தன் வார விடுமுறையை கழிப்பதற்காக மேரிலேண்ட் என்ற இடத்தில் தங்கியிருந்தார்.இந்தப் பகுதியை அமெரிக்க ராணுவத்தினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அதிபர் ஒபாமா தங்கியிருந்த இடத்துக்கு அருகே வான் பகுதியில் திடீரென ஒரு குட்டி விமானம் ஊடுருவி பறந்தது.
இதைத் தொடர்ந்து உஷாரடைந்த ராணுவத்தினர் அந்த விமானத்தின் விமான ஓட்டுநரை தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அது முடியவில்லை. இதையடுத்து அமெரிக்க ராணுவத்துக்குச் சொந்தமான ஜெட் விமானங்கள் அந்த விமானத்தை வழி மறித்தன.அனுமதியின்றி ஊடுருவிய விமானத்தை ஹாகர்ஸ்டவுன் என்ற இடத்தில் கட்டாயப்படுத்தி தரை இறக்கினர். இதுகுறித்து அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கூறுகையில்,"அந்த குட்டி விமானத்தை ஓட்டிய விமான ஓட்டுநர் வழிதவறி அனுமதியில்லாத பகுதிக்குள் ஊடுருவி விட்டதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்" என்றனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF