Sunday, July 17, 2011

இன்றைய செய்திகள்.

இலங்கையுடன், நாம் பெறுமதிமிக்க உறவைக் கொண்டுள்ளோம் : பாகிஸ்தானிய ஜனாதிபதி.

தமது நாடு இலங்கையுடன் பெறுமதிமிக்க வரலாற்று உறவைக் கொண்டிருப்பதாக பாகிஸ்தானிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நேற்று பாகிஸ்தானிய ஜனாதிபதியை சந்தித்த போது இந்த கருத்து வெளியிடப்பட்டது.
சர்தாரி இலங்கை வந்திருந்த போது இலங்கைக்கு சீமெந்து, சீனி மற்றும் கால்நடை வளர்ப்புத்துறையில் உதவியளிக்க பாகிஸ்தான் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.குறித்த விடயங்கள் தொடர்பாகவும் நேற்றை சந்திப்பின் போது இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கலந்துரையாடினார்.
விடுதலைப் புலிகளால் முழ்கடிக்கப்பட்ட கடற்கலங்களின் சிதைவுகளை ஏலத்தில் விடும் இலங்கை அரசு!
கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின்போது காங்கேசன்துறை துறைமுகத்தில் தாக்கியழிக்கப்பட்ட கடற்கலங்களின் சிதைவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக துறைமுகம் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்தது.
இந்த சிதைவுகள் அகற்றப்பட்டபின் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி வேலைகள் அடுத்த மாதம் தொடங்கும் என அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆறு கப்பல்களின் சிதைவுகளை அகற்றும் வேலை ஒரு இந்திய கம்பனியிடம் கொடுக்கப்பட்டுள்ளது அவ்வட்டாரங்கள் கூறின.
இந்த கப்பல் சிதைவுகள் அகற்றப்பட்ட பின்னர் அவை ஏலத்தில் விடப்படும் என அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார். துறைமுக புனரமைப்பு பூர்த்தியடைந்தபின் வடக்குக்கான பொருட்களை குறைந்த செலவில் கப்பல் மூலம் அனுப்பக்கூடியதாக இருக்கும் என அந்த அதிகாரி கூறினார்.
இலங்கையில் அமைதி உருவாவதை விரும்பாத இந்தியா.

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு அமைதியான ஒரு தீர்வை எட்டும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் 2007ம் ஆண்டு தமிழ்நாடு சிவில் சமூக அமைப்பை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியதாக புதிய தகவல் கிளம்பியுள்ளது.
சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த இரகசிய விடயம் குறித்த செய்தியை சர்வதேச செய்தித் தளமொன்று வெளியிட்டுள்ளது.
எனினும் அவ்வாறானதொரு அமைதியான தீர்வுக்கு வருவதை இந்திய அரசாங்கம் எதிர்த்ததாக தமிழ்நாடு சிவில் சமூக அமைப்பின் ஏற்பாட்டாளராக செயற்பட்ட முன்னாள் நிர்வாக அதிகாரியும் சமூக ஆர்வளருமான எம்.ஜீ.தேவசகாயம் தெரிவித்துள்ளார்.
தான் ஏற்பாட்டாளராக செயற்பட்ட குறித்த சிவில் சமூகக் குழுவில் ஓய்வுபெற்ற சிவில் சேவையாளர்கள், சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் எனப்பலர் உள்ளடங்கியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சிவில் சமூகக் குழுவின் முதல் அமர்வு ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் ஒருவர் தலைமையில் சென்னையில் 2007ம் ஆண்டு மே மாதம் 28ம் திகதி இடம்பெற்றதாகவும் இனப்பிரச்சனைக்கான ஒரே தீர்வு அரசியல் தீர்வு என அக்கூட்டத்தில் ஏகமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் எம்.ஜீ.தேவசகாயம் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த விடயம் குறித்து 2007ம் ஆண்டு ஜூலை 17ம் திகதி ஜனாதிபதி உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகளை தமது சிவில் சமூக அமைப்பு சந்தித்து கலந்துரையாடியதாகவும் அவர் காலங்கடந்து கூறியுள்ளார்.
பொதுநலவாய அமைப்பின் அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற உடன்பாடு கையெழுத்து! 

பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகள் அனைத்துலக குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மிக ஆழமான ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் வழங்க வேண்டும் என்ற புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துடன் பொதுநலவாய அமைப்பு இவ்வாறானதொரு உடன்பாட்டை செய்துள்ளது.
அனைத்துலக குற்றவியல் சட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ள நாடுகளுக்கிடையில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்குடன் இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் சட்டத்துறை அமைச்சர்களின் சந்திப்பில் 54 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த சட்டத்துறை அமைச்சர்கள், பிரதம நீதியரசர்கள், மூத்த அதிகாரிகள் முன்னிலையில் இந்தப் புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மீதான சித்திரவதைகள், துன்புறுத்தல்கள் மிகப்பரந்த அளவில் மேற்கொள்ளப்படுமிடத்து அவற்றை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பளிக்கின்ற முதலாவது பாதுகாப்பு எல்லையாக அந்தந்த நாடுகளின் நீதிசார் அதிகாரங்களே முதல்நிலை வகிக்கின்றன.
இங்கு அனைத்துலக குற்றவியல் நீதிமன்று என்பது ஒரு பாதுகாப்பு வலையாகும். இறுதித் தீர்வை எட்டுகின்ற ஒரு இடமே அனைத்துலக குற்றவியல் நீதிமன்றமாகும்“ என்று புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்ட பின்னர் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் தலைமை நீதியரசர் சொங் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அனைத்துலக ரீதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நீதியைப் பெற்றுக்கொடுத்தல், மனிதப் படுகொலைகளைத் தடுத்தல், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள், யுத்தக் குற்றங்கள் மற்றும் ஏனைய குற்றங்கள் நடைபெறாது தடுப்பதை உறுதிப்படுத்தல் என்பன அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் பிரதான கடமைகள் என்று பொதுநலவாய அமைப்பின் பொதுச்செயலாளர் கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளார்.
“பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளாகி நாம் அனைத்துலக குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மிக ஆழமான ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் வழங்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளோம் என்பதை புரிந்துணர்வு உடன்படிக்கை குறித்துக் காட்டுகின்றது.
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்திற்கும் , அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் தலைமை நீதியரசருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ளப்பட்டு கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்பாடானது உரோமச் சட்டத்திற்கேற்பவே நடைமுறைப்படுத்தப்படும்.
இந்த சட்டத்துறை அமைச்சர்களின் மாநாட்டில் ரவூப் ஹக்கீமும் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தீவிரவாதி இலியாஸ் காஷ்மீரி உயிரோடு இருப்பதாக தகவல்.
இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடந்த தாக்குதல்களில் முக்கிய தொடர்புடைய அல்கொய்தா தீவிரவாத கமாண்டர் முகமது இலியாஸ் காஷ்மீரி.
2008ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதல், பாகிஸ்தானின் கராச்சி கடற்படை தளத்தில் கடந்த மே மாதம் 22ம் திகதி நடந்த பயங்கர தாக்குதல், பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகத்தில் நடந்த குண்டுவெடிப்பு ஆகியவற்றில் காஷ்மீரிக்கு முக்கிய பங்கு உண்டு.
ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகளால் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த இவர் கடந்த மாதம் பாகிஸ்தானின் தெற்கு வசிரிஸ்தான் பகுதியில் அமெரிக்க ஆளிலில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாயின. ஆனால் இலியாஸ் இறப்பை பாகிஸ்தான், அமெரிக்கா உறுதி செய்யவில்லை.
இந்நிலையில் விமான தாக்குதலில் இலியாஸ் சாகவில்லை என்று ஆசிய செய்திகளை வெளியிடும் டான் என்ற பாகிஸ்தான் நாட்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் இன்னும் செயல்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
கறுப்பு பட்டியிலில் இருந்து 14 தலிபான்களின் பெயர் நீக்கம்.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் கறுப்பு பட்டியலில் இருந்த 14 தலிபான் தீவிரவாத தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன.
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து இந்த தலிபான் தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தடை கடந்த 1999ம் ஆண்டு தலிபான்கள் மீது விதிக்கப்பட்டது. அப்போது தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி பொறுப்பில் இருந்தார்கள்.
இதையடுத்து 2001ம் ஆண்டு அமெரிக்காவில் உலக வர்த்தக மைய கட்டிடம் தாக்கப்பட்டதை தொடர்ந்து தலிபான் தலைவர்கள் மீதான தடை நீட்டிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்த உயர் மட்ட கொமிட்டியும் அமைக்கப்பட்டு உள்ளது.இந்த உயர் அமைதிக்குழுவின் தலைவராக ரப்பானி உள்ளார். இவர் ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஆவார். உயர் அமைதி பேச்சுவார்த்தை குழுவில் 4 தலிபான் தலைவர்களும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் உயர் அமைதிக் கவுன்சில் மேற்கொள்ளும் அமைதி ஸ்திரத்தன்மை மறுமலர்ச்சி குறித்த நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கிறது என ஐ.நா.வுக்கான ஜேர்மனி தூதர் பீட்டர் விடிக் கூறினார். இவர் ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலின் தலைவராகவும் உள்ளார்.நேற்று எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து ஐ.நா பாதுகாப்புக் கவுன்சில் தடைபட்டியலில் இன்னும் 123 தலிபான்கள் பெயர்கள் உள்ளன. இவர்களுக்கு பயணத்தடை மற்றும் சொத்து முடக்கம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
லிபியாவிற்கு 12 போர் விமானங்கள்: இங்கிலாந்து அனுப்பியது.
லிபயாவில் அதிபர் கடாபிக்கு எதிராக நேட்டோ படைகள் முகாமிட்டுள்ள நிலையில் இங்கிலாந்து மேலும் 12 போர் விமானங்களை நேட்டோ படைக்கு ஆதரவாக அனுப்பியுள்ளது.
லிபியாவில் அதிபர் கடாபி ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி செய்து வருகி்ன்றனர். இவர்களில் சிலர் ஆயுதம் ஏந்தி‌ போராடி வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் ஆன்ட்ரூஸ் ராஸ்மெளசான் லிபியாவிற்கு மேலும் விமானப்படைகள் தேவை என வலியுறுத்தினார்.இதைத் தொடர்ந்து இங்கிலாந்து கூடுதலாக 12 போர் விமானங்களை லிபியாவிற்கு அனுப்பி வைத்து. இதனை இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஆலிஸ்டர்பர்ன், பி.பி.சி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.
ஜப்பான் அணு உலையில் திடீர் பிரச்சனை: அவசரமாக மூடப்பட்டது.
ஜப்பான் ஓகி அணு மின் நிலையத்தில் தொழில்நுட்ப பிரச்சனை ஏற்பட்டது. இந்த பிரச்சனையை தொடர்ந்து ஓகி அணு மின் நிலையம் மூடப்பட்டது.
ஜப்பானில் 54 அணு மின் நிலையங்கள் உள்ளன. இந்த அணு மின் நிலையங்களில் தற்போது 18 அணு மின் நிலையங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. ஓகி அணு மின் நிலையம் தலைநகர் டோக்கியோவுக்கு மேற்கே 350 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்து உள்ளது.
இந்த அணு மின் நிலையம் 1.18 மெட்ரிக் கிலோ வாட் மின் உற்பத்தி திறன் கொண்டது ஆகும். தற்போது மூடப்பட்டு உள்ள ஓகி அணு மின் நிலையம் மீண்டும் எப்போது இயக்கப்படும் என தெரியவில்லை.இந்த அணு மின் நிலையத்தை கான்சாய் எலெக்ட்ரிக் பவர் நிறுவனம் நடத்தி வருகிறது. ஓகி அணு மின் நிலையத்தில் உள்ள 1ஆம் நம்பர் அணு உலையில் போரிக் ஆசிட் கலனில் அழுத்தம் குறைந்ததை தொடர்ந்து மூடப்பட்டது.
இந்த அணு உலையில் அழுத்த நிலை மீண்டும் இயல்பு நிலைக்கு வந்த போதும் அணு உலை செயல்படுத்தப்படவில்லை. ஓகி அணு மின் நிலையத்தில் கதிர்வீச்சு ஏதும் பரவவில்லை.கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி புகுஷிமா அணு மின் நிலையத்தில் அணு உலை பாதித்து கதிர் வீச்சு பரவியது. நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக அந்த அணு மின் நிலையம் பாதிக்கப்பட்டு இருந்தது.
முர்டோக் நிறுவனத்தின் இரண்டு உயர் அதிகாரிகள் பதவி ராஜினாமா.
நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகையின் உரிமையாளர்  முர்டோக்கின் மேலும் சில நிறுவனங்களான ‌டவ்‌‌ஜோன்ஸ், நியூஸ் கொர்ப்பரேசன் ஆகியவற்றின் தலைமை நிர்வாகிகள் இரண்டு பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் செயல்பட்டு வந்த நியூஸ் கொர்ப்பரேசன் செய்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ரீப்பிகாபுரூக்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தினை முர்டோக்கிடம் அளித்துவிட்டதாக தெரிவித்தார்.இதே போன்று அமெரிக்காவின் புகழ்பெற்ற டவ்ஜோன்ஸ் எனும் பத்திரிகை நிறுவனத்தின் தலைவர்லெஸ்ஹின்டன் தனதுபதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
முர்டோக்கின் மிகவும் நம்பகத்தன்மை மிக்க இவர்கள் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்திருப்பது முர்டோக்கிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.தொலைபேசி தகவல்களை அத்து மீறி வெளியிட்டதால் முர்டோக் தொடர்ந்து பலரிடமும் மன்னிப்பு கோரி வரும் பரிதாப நிலை ஏற்பட்டு உள்ளது. ஏறக்குறைய 4 ஆயிரம் தொலைபேசி தகவல்கள் திருடப்பட்டு உள்ளதை பிரிட்டிஷ் பொலிசார் கண்டறிந்து உள்ளனர்.
முர்டோக் பத்திரகை மேற்கொண்ட அத்து மீறலுக்கு பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் உள்பட பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து அந்த பத்திரிகை மூடப்பட்டு உள்ளது.முர்டோக் பத்திரிகை குழுவிற்கு பிரிட்டனில் சன், சண்டே டைம்ஸ், டைம்ஸ் ஆகிய பத்திரிகைகளும் அமெரிக்காவில் வால்ஸ்றீட் ஜர்னல், பொக்ஸ் நியூஸ் ஆகிய செய்தி நிறுவனங்களும் உள்ளன.
மலிவான விலையில் எலெக்ட்ரிக் கார்: மூனிச் பல்கலைகழகம் தயாரிப்பு.
மூனிச் தொழில்நுட்ப பல்கலைகழகம் மலிவான விலை கொண்ட மியூட் எலெக்ட்ரிக் கார் ஒன்றை உருவாக்கி உள்ளது. இந்த கார் மற்ற எலெக்ட்ரிக் கார்களை போன்று இருக்காது என கூறப்படுகிறது.
இந்த புதிய காரை புரொட்டோடைப்புடன் ஆய்வாளர்கள் சோதனை செய்துள்ளனர். தனது சாதனைகளை பற்றி மனம் திறக்காத இந்த கார் 3.5 மீற்றர் நீளம் கொண்டது.ஆனால் சாதாரண பெட்ரோல் கார்கள் 8 ஆயிரத்து 831 யூரோ மதிப்பில் பெற முடியும். மூனிச் பல்கலைகழக ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ள கார் மிக குறைந்த எடை கொண்டதாக உள்ளது. இந்த கார் 400 கிலோ எடை உள்ளது.

எலெக்ட்ரிக் கார் என்றதும் வாடிக்கையாளர்கள் அதன் விலையை எண்ணி மலைத்து போகிறார்கள். தற்போதைய மார்க்கெட்டில் எலெக்ட்ரிக் கார் 23 ஆயிரத்து 10 யூரோ மதிப்பில் துவங்குகிறது.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு எடை மிக குறைவாக இருக்க வேண்டும். மூனிச் பல்கலைகழக நிபுணர்கள் உருவாக்கிய கார் ஒருமுறை மின்சாரம் சார்ஜ் செய்த நிலையில் 100 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லலாம். அந்த காரை அதிகபட்சமாக 120 கிலோ மீற்றர் வேகத்தில் செலுத்த முடியும்.
இந்த புதிய மியூட் காரை உருவாக்குவதில் மூனிச் பல்கலைகழகத்தின் 200 மாணவர்களும் 20 கல்வியாளர்களும் ஈடுபட்டனர். வருகிற செப்டம்பர் மாதம் பிராங்க்பர்ட்டில் சர்வதேச மோட்டார் கண்காட்சி நடைபெறகிறது. அந்த கண்காட்சியில் இந்த எலெக்ட்ரிக் கார் பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF