Monday, July 18, 2011

இன்றைய செய்திகள்.

பணம் சம்பாதிப்பதில் அதிக ஆர்வம் காட்டும் அரசாங்கம் : ரணில் குற்றச்சாட்டு.

தற்போது ஆட்சியில் உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் பணத்தை சம்பாதித்துக் கொள்வதில் கூடுதல் நாட்டம் காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அக்குரனை பிரதேச்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பென்றில் தெரிவித்துள்ளார்.
தற்போது புதிய வகையிலான தேசப்பற்றாளர்கள் உருவாகியுள்ளதாகவும் அவர்களுக்கு தேசத்தின் மீதான பற்று இல்லையெனவும் பணத்தின் மீதே அதிக பற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசப்பற்றுக்காக உரக்கக் குரல் கொடுக்கும் பலர் மெய்யாகவே தேசத்தின் மீது பற்றுடையவர்கள் அல்ல எனவும், சுயநலவாத அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் பணத்தில் சிறிய தொகுதியை மக்கள் நலனுக்காக ஒதுக்கி ஏனைய பெரும் பகுதியை சொந்த தேவைக்காகப் பயன்படுத்தும் கலாச்சாரம் உருவாகியுள்ளது என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.
பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்களை தடுப்பதற்கு புதிய சட்டம் அறிமுகம்.

பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்களை கட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
சட்டவிரோத செயற்பாடுகளின் மூலம் ஈட்டப்படும் கறுப்புப் பணத்தை, சட்டரீதியான பணமாக மாற்றும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
பயங்கரவாத நிதி தொடர்பான 2005ம் ஆண்டு 25ம் இலக்க சட்டம் மற்றும் நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான 2006ம் ஆண்டு 5ம் இலக்க சட்டம் ஆகியன திருத்தப்பட உள்ளன.
விரைவில் இந்த சட்டத் திருத்தங்கள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவொன்று செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கறுப்புச் சந்தை பணப் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு தற்போது காணப்படும் சட்டத்தில் சில குறைகள் காணப்படுவதாகவும் அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தும் திட்டமில்லை : சுசில் பிரேமஜயந்த.

அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தும் திட்டம் கிடையாது என பெற்றோலிய வள அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் மற்றம் ஏற்படுத்துவதற்கோ அல்லது அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் ஏற்படுத்துவதற்கோ உத்தேசிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சில ஊடகங்களில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை மாற்றம் தொடர்பில் எந்தவொரு ஊடகத்திற்கும் தாம் தகவல்களை வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தள்ளார்.
இதேவேளை, ஞாயிறுக் கிழமை சிங்கள ஊடகங்களில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் அபிவிருத்தி பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத அமைச்சர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
மஹிந்த அரசுக்கு எதிராக திசை திரும்பும் அமெரிக்கா.

சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக இருந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இப்போது சிறிலங்காவுக்கு எதிராகத் திரும்பியுள்ளது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிர்ச்சியடைந்துள்ளது.
ஒரு காலத்தில் ஆதரவாக இருந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு சிறிலங்கா அரசுக்கு எதிராகத் திரும்பினர் என்று தெரியாமல் சிறிலங்கா வெளிவகார அமைச்சு குழப்பமடைந்துள்ளது.
இவர்களில், குடியரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் றொபேட் அடெனோல்ற் 2004இல் சுனாமிக்குப் பின்னர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தவர்.
குடியரசுக் கட்சியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினராக பிராங் வூல்பீ விடுதலைப் புலிகளை மிகமோசமாக எதிர்த்து வந்தவர் என்பதுடன் சிறிலங்காவுக்கு அமெரிக்காகவின் ஆயுத உதவிகள் கிடைப்பதற்கும் காரணமாக இருந்தவர்.
மேலும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜோய் பிற்ஸ், ஹெல்லி பேர்கெலி, சூமைரிக், ஜோன் கோஸ்ரெலோ, ஸ்கொட் கரெற், இலியானா றொய்ஸ்-லெரினென், பில் யூங், ஜிம் மோறன், டனா றொபாக்கர் மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னர சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்கி வந்தனர்.
இவர்கள் அனைவரும் தற்போது சிறிலங்காவுக்கு எதிராகத் திரும்பியுள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்காவுக்கு எதிராகத் திரும்பியுள்ளது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிர்ச்சியடைந்துள்ளதுடன் இதற்கான காரணங்கள் என்ன என்று ஆராயும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே அமெரிக்காவில் சிறிலங்காவுக்கு ஆதரவான பரப்புரைகளை மேற்கொள்வதற்கு பல மில்லியன் டொலர்களைக் கொடுத்து பொதுமக்கள் உறவுக்கான நிலையம் ஒன்றுடன் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டிருந்தது.
சிறிலங்கா அரசின் இந்த பரப்புரைகளும் பிசுபிசுத்துப் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக சனல்4 காணொலி தொடர்பாக, சிறிலங்கா அரசு பணிக்கு அமர்த்திய பொதுமக்கள் உறவு நிலையம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் மேற்கொண்ட பரப்புரைகளும் எடுபடவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
எங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுகிறது: சீனா கடும் கண்டனம்.
சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதா என்று கூறி அமெரிக்க நாட்டின் தூதரை அழைத்து சீனா கடும் கண்டனம் தெரிவித்தது.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். வெள்ளை மாளிகையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பு சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து சீனாவில் உள்ள அமெரிக்கத் தூதரக உயர் அதிகாரியை ஞாயிற்றுக்கிழமை அழைத்து சீனா தனது கண்டனத்தைத் தெரிவித்தது. சீனாவின் வெளியுறவு துணை அமைச்சர் சூ தியாங்க், பெய்ஜிங்கிலுள்ள அமெரிக்கத் தூதரக வெளியுறவுத்துறை பொறுப்பாளர் ராபர்ட் எஸ். வாங்க்கை அழைத்து கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.
சீன நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மா ஸ்ஹாஓக்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தலாய் லாமாவை ஒபாமா சந்தித்திருப்பது சீன நாட்டு உள் விவகாரத்தில் தலையிடுவது ஆகும். மேலும் இது சீனா-அமெரிக்க நாடுகளுக்கு இடையே உள்ள உறவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இது சீன மக்களின் உணர்ச்சிப்பூர்மான பிரச்னை. அதில் அமெரிக்கா தலையிட்டுள்ளது. இதை சீன மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சீன உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்க உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தலாய் லாமாவுடன் ஒபாமா சந்தித்தை சீனா மிகவும் முக்கியப் பிரச்னையாக எடுத்துக் கொண்டுள்ளது. சீனாவின் இந்த எதிர்ப்பை அமெரிக்கா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதி செயல்பட வேண்டும்.
திபெத் குறித்த தனது நிலையை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். திபெத் விவகாரம் முற்றிலும் சீனாவின் உள்நாட்டு விவகாரமாகும். இதில் மற்ற நாடுகள் தலையிடுவதை சீனா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.
ஆன்மிகத்தின் பெயரால் அவர் நாட்டை பிரிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். சீன விவகாரம் குறித்து எந்த நாடு தலாய் லாமாவுடன் பேச்சு நடத்தினாலும் அந்த நாட்டை சீனா கடுமையாக எதிர்க்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல வாஷிங்டனில் உள்ள சீனத்தூதர் ஸஹாங்க் யசையும் அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்து சீனாவின் எதிர்ப்பைத் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்த பிறகு தலாய் லாமா கூறியதாவது: ஒபாமா மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் தலைவராவார். இதனால் இயற்கையாகவே மனித நேயம், மனித உரிமைகள், மத சுதந்திரம் ஆகியவை காக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் உள்ளது. இந்த சந்திப்பு திபெத்தியர்கள் அவர்களது மத வழிபாட்டையும், சுதந்திரத்தையும் காக்க வேண்டும் என்பதற்கு பலமான ஆதரவாக அமைந்துள்ளது என்றார்.
தலாய் லாமாவுடனான சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சீனாவின் ஒரு அங்கம் திபெத் ஆகும். இது அமெரிக்காவின் கொள்கையாகும். திபெத் சுதந்திரம் அடைய வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்காது.
அதே நேரத்தில் திபெத்தியர்கள் உரிமையுடன் அவர்களது கடமைகளைச் செய்ய வழி காணப்படவேண்டும். இதற்கு இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி கைது.
பிரபல பத்திரிகை அதிபர் முர்டோக்கின் நியூஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியான ரெபக்கா ப்ரூக்ஸ் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டார்.
பிரிட்டனில் இருந்து வெளிவந்த 168 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகை கடந்த சில மாதங்களில் தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் சிக்கியது.
இதையடுத்து பத்திரிகையை நிறுத்தி விடுவதாக அதன் அதிபர் ரூபர்ட் முர்டோக் அறிவித்தார். அதன்படி சமீபத்தில் பத்திரிகை நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரம் பிரிட்டன் பாராளுமன்றத்தில் சூடுபிடித்தது. எதிர்க்கட்சித் தலைவர் மிலிபேண்ட் இவ்விவகாரத்தில் தீவிர விசாரணை கோரினார்.
"பிரிட்டிஷ் ஸ்கை ப்ராட்காஸ்ட்டிங்" என்ற அரசு செய்தி நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் ஏலத்தில் ரூபர்ட் முர்டோக் பங்கேற்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார். இதனால் முர்டோக் ஏலத்தில் பங்கேற்பதில் இருந்து பின்வாங்கினார்.
இந்நிலையில் நியூஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ரெபக்கா ப்ரூக்சைக் காப்பாற்றவே நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகை இழுத்து மூடப்பட்டதாக செய்திகள் வெளியாயின. ரூபர்ட் முர்டோக் அதை மறுத்தார்.
தொடர்ந்து நியூஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் தலைமை நிர்வாகி பொறுப்பில் இருந்து ப்ரூக்ஸ் சமீபத்தில் கழட்டி விடப்பட்டார். தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் பிரிட்டன் பொலிசார் ஏற்கனவே ஒன்பது பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ப்ரூக்சையும் லண்டன் போலீசார் கைது செய்தனர். பொலிசாருக்குப் பணம் கொடுத்து முக்கிய பிரபலங்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ப்ரூக்ஸ் கைது செய்யப்பட்டது குறித்து லண்டன் பொலிசாரோ, நியூஸ் இன்டர்நேஷனல் நிறுவனமோ உறுதி செய்யவில்லை. ப்ரூக்சின் கைதால் ரூபர்ட் முர்டோக்கிற்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.
எனது சொந்த மண்ணை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டேன்: கடாபி.
லிபிய அதிபர் கடாபி நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை கடுமையாக வலுத்த போதிலும் அவர் அங்கிருந்து வெளியேற மறுத்து வருகிறார்.
தனது ஆதரவாளர்களிடையே பேசிய கடாபி ஒருபோதும் நாட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருவதோடு ஏராளமான உயிர்ச் சேதமும் ஏற்பட்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை மட்டும் அங்கு 13 முறை குண்டுச் சத்தம் கேட்டது. எய்ன்ஜரா மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களையும், தஜுரா என்ற பகுதியில் உள்ள ராணுவப் படைகளின் முகாம்களையும் புரட்சியாளர்கள் சூறையாடியதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
தலைநகரின் மேற்குப் பகுதியில் உள்ள ஜவியா பகுதியில் தனது ஆதரவாளர்களிடையே கடாபி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: நான் இங்கிருந்து வெளியேற வேண்டும் என்று கூறுகிறார்கள்.
நான் ஒருபோதும் இங்கிருந்து வெளியேற மாட்டேன். எனக்காக நிறைய தியாகங்களை செய்துள்ள என் மூதாதையர்கள் மற்றும் மக்கள் வாழும் இந்த மண்ணைவிட்டு ஒருபோதும் வெளியேற மாட்டேன்.
என்னுடைய மக்களுக்காக என்னையே தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன். இத்தாலி மற்றும் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து லிபியாவை மீட்க என்னுடைய மூதாதையர்கள் ரத்தம் சிந்திய இந்த மண்ணில் இருந்து வெளியேற மாட்டேன் என்றார்.
முன்னதாக சனிக்கிழமை அரசுப் படையினர் வீசிய குண்டு மற்றும் கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். 70 பேர் காயமடைந்தனர். அவர்களில் மேலும் இருவர் ஞாயிற்றுக்கிழமை இறந்ததால் பலியானோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.
அரசுப் படையினர் லிபியாவின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியிலிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளதாக அங்குள்ள புரட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் அஜ்தபியா மருத்துவமனை மருத்துவர் அகமது தினாரி கூறுகையில்,"காயமடைந்தவர்கள் அனைவரும் கண்ணிவெடி தாக்குதலில் தான் சிக்கியுள்ளனர்" என்றார்.
இதுவரை 250 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. பன்னாட்டு படைகளும், போராட்டக்காரர்களும் சேர்ந்து சனிக்கிழமை பிரேகாவில் இருந்த அரசுப் படைக்கு சொந்தமான ஒரு ராணுவ டாங்கி, ஆயுதம் நிரப்பிய 5 வாகனங்கள், ராக்கெட் லாஞ்சர் ஆகியவற்றை தாக்கி அழித்துள்ளனர்.
திரிபோலியின் கிழக்குப் பகுதியில் பன்னாட்டு படைகள் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 ரேடார்கள், ஏவுகணை, ஆயுதங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றின.
பன்னாட்டு படைகளும் புரட்சியாளர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி போராடி வருகிறது. லிபியாவில் உள்ள கடாபி எதிர்ப்பாளர்களை அமெரிக்கா அங்கீகரித்துள்ளது. இது அதிபர் கடாபிக்கு மிகப் பெரிய பின்னடைவாகும்.
ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற்றம்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஏற்கனவே அறிவித்தபடி ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க கூட்டுப் படைகள் நேற்று முதல் வெளியேறத் துவங்கி விட்டன.
முதற்கட்டமாக பாமியான் பகுதி பாதுகாப்பை ஆப்கன் படையினரிடம் நேட்டோ ஒப்படைத்தது. ஆப்கனில் இருந்து இந்தாண்டு ஜூலை முதல் அமெரிக்க தலைமையிலான கூட்டணிப் படைகள் வெளியேறும்.
2014க்குள் ஒட்டுமொத்த படைகளும் வாபஸ் பெறப்படும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் அவரது அறிவிப்புக்குப் பின் ஆப்கனில் பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வந்தது.
இதனால் அமெரிக்கப் படைகள் வெளியேறுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனாலும் தான் சொன்னபடி படைகள் வெளியேறும் என ஒபாமா அறிவித்தார்.
அதன்படி நேற்று ஆப்கனின் பாமியான் பகுதி பாதுகாப்பை ஆப்கன் பாதுகாப்புப் படையினரிடம் நேட்டோ ஒப்படைத்தது. இதற்கான விழா பாமியானில் நடந்தது.
பாதுகாப்புக் கருதி இடம், நேரம் ஆகியவை அறிவிக்கப்படவில்லை. நேரடி ஒளிபரப்பும் அனுமதிக்கப்படவில்லை. காபூல், ஹெல்மாண்டு, பன்ஜ்ஷிர் ஆகிய மாகாணங்கள், லஷ்கர் கா, மஜார் இ ஷரீப், ஹெராட் ஆகிய நகரங்களின் பாதுகாப்பும் விரைவில் ஆப்கன் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
பிரிட்டன் மக்களிடம் மன்னிப்பு கோரினார் முர்டோக்.
பெரும் ஊடக நிறுவனங்களுக்குச் சொந்தக்காரரான முர்டோக் பிரிட்டனில் அவரது பத்திரிகையான நியூஸ் ஆப் தி வேர்ல்ட் புரிந்துள்ள தவறுகளுக்காக பிரிட்டிஷ் மக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
தம்மால் இழைக்கப்பட்ட தவறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மன்னிப்பு கோரிக் கொள்வதாக இன்றைய செய்தி நாளிதழ்களில் "வீ ஆர் சொர்ரி" என்ற தலைப்பில் தனது கையொப்பத்துடன் வெளியான தொடர் அறிவிப்புகள் மூலம் ரூப்பர்ட் முர்டோக் வருத்தம் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் அதிகம் விற்பனையாகும் செய்திப் பத்திரிகையான அவரது நியூஸ் ஆப் தி வேர்ல்ட் ஆயிரக்கணக்கான மக்களின் தொலைபேசித் தகவல்களை சட்ட விரோதமாக ஒட்டுக்கேட்டுள்ளதாக தெரியவந்துள்ளதன் பின்னணியில் அவர் இந்த மன்னிப்புக் கேட்கும் படலத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அரச குடும்பத்தைச் சார்ந்தவர்கள், பிரபல நட்சத்திரங்கள், சினிமா நடிகர், நடிகைகள் என்ற அளவோடு மட்டுமன்றி ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களில் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் படைவீரர்களின் குடும்பங்கள், கடத்திக் கொலைச் செய்யப்பட்ட பள்ளிச் சிறுமி போன்ற பல விதமானவர்களின் தகவல்களை நியூஸ் ஆப் தி வேர்ல்ட் பத்திரிக்கை திருடியது.
ரூப்பர்ட் முர்டோக் தனது கடிதத்தில் கைத்தொலைபேசிகளின் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளைத் தீர்க்க மேலதிக நடவடிக்கைகளை நியூஸ் இன்டர்நேஷனல் எடுக்கும் என்று அறிவித்துள்ளார்.
இதற்கிடையே பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் செலவின ஊழல் விவகாரங்களை வெளிக்கொணர்ந்ததற்காக பழிவாங்கும் விதமாக இங்குள்ள அரசியல்வாதிகளின் போக்கு அமைந்துள்ளதாக பைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகை எச்சரித்துள்ளது.
சோமாலியாவில் கடும் வறட்சி: இஸ்லாமிய பகுதியில் ஐ.நா உதவி.
அல்கொய்தா தொடர்புடைய தீவிரவாதிகள் நிர்வகிக்கும் சோமாலியா பகுதியில் ஐ.நா தனது முதல் நிவாரண உதவியை துவக்கி உள்ளது.
ஆப்பிரிக்கா பகுதிகளில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதில் சோமாலியாவில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
யுனிசெப் அமைப்பு உணவு மற்றும் மருந்துகளை ஊட்டச்சத்து இல்லாத பாய்டோ குழந்தைகளுக்கு விமானம் மூலம் அனுப்புகிறது. தலைநகர் மொகாதிஷீவுக்கு வடமேற்கே 200 கிலோமீற்றர் தொலைவில் இந்த பாய்டோ நகரம் உள்ளது.
சோமாலியாவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை அல்சகாபாப் தீவிரவாத பிரிவினர் நிர்வகித்து வருகின்றனர். ஐ.நா நிவாரண உதவிகளுக்கு தடை ஏற்படுத்த மாட்டோம் என உறுதியளித்துள்ளனர். இந்த தகவலை சோமாலியாவில் உள்ள யுனிசெப் பிரதிநிதி ரோசானே சோர்ல்டன் தெரிவித்தார்.
அல்சகாபாப் தீவிரவாதப் பிரிவினர் தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவை ஆட்சி செய்து வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பிராந்தியத்தில் அயல்நாட்டு ஏஜென்சிகள் உதவிகளுக்கு அல்சகாப் தடை விதித்து இருந்தது.
அயல்நாட்டு உதவி முகமைகள் முஸ்லிம்களுக்கு எதிரானவை என அப்போது அல்சகாப் தெரிவித்து இருந்தது.
புற்று நோயாளி என்ற பெயரில் மக்களிடம் நிதி மோசடி.
கனடாவில் புற்று நோயாளி என்ற பெயரில் மக்களிடம் நிதி மோசடி செய்துள்ள நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவரால் ஒரு மில்லியன் டொலருக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இவரது பெயர் டக்ளஸ் கிளார்க்(64). இவர் தனக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எனவே எனக்கு தங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள் என்று மக்களிடம் கேட்டுள்ளுள்ளதாக தெரிகிறது.
இவருக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் இவருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இந்த நபர் ராணுவ சீருடையை அணிந்து கொண்டு மக்களை ஏமாற்றியுள்ளார்.
இவ்வாறு மக்களை ஏமாற்றி பெற்ற பணத்தை கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
புற்றுநோய் சிகிச்சைக்காக சாவேஸ் மீண்டும் கியூபா பயணம்.
புற்றுநோய் சிகிச்சை செய்து கொண்ட வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ் மீண்டும் கியூபாவுக்கு சிகிச்சை பெற செல்கிறார்.
இதற்காக தனது சில அதிகாரத்தை துணை ஜனாதிபதியிடமும், நிதித்துறை அமைச்சரிடமும் பகிர்ந்து அளித்தார்.
ஜனாதிபதியின் அனைத்து அதிகாரத்தையும் அவர் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனை சாவேஸ் ஏற்கவில்லை.
தலைநகரத்தில் விமானத்தில் ஏறிய சாவேஸ் கூறியதாவது: நல்ல துடிப்புடன் இந்த சிகிச்சையை எதிர்கொள்கிறேன். நாளை எனக்கு கீமோதெரபி சிகிச்சை நடைபெறுகிறது. இது இறப்பதற்கான நேரம் அல்ல. வாழ்வதற்கான நேரம் என்றார்.
முன்னதாக கியூபா நாடாளுமன்றம் சாவேஸ் கியூபா சென்று சிகிச்சை பெறுவதற்கு அனுமதி அளித்தது. சாவேஸ் பதவி ஏற்று 12 ஆண்டுகள் ஆன நிலையில் முதன் முறையாக தனது அதிகாரத்தை பகிர்ந்து அளித்துள்ளார். இதனை அவரே குறிப்பிட்டார்.
ஜுலை 4ம் திகதி புற்றுநோய் சிகிச்சைக்கு பின்னர் நாடு திரும்ப சாவேஸ் மருத்துவர்கள் ஆலோசனைப்படி பணிகளை குறைத்துக் கொண்டார். உள்நாட்டில் சிகிச்சை எடுக்காமல் மீண்டும் சாவேஸ் கியூபாவுக்கு பயணம் மேற்கொண்டு இருப்பது சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
2012ம் ஆண்டி இறுதியில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலிலும் சாவேஸ் போட்டியிட விரும்புகிறார். 12 ஆண்டுகளில் ஏழை மக்கள் மேம்பாட்டுக்காக பல சமூக திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். இருப்பினும் பணவீக்கம், வீட்டு விலை அதிகரிப்பு மற்றும் மின்பற்றாக்குறை ஆகியவை வெனிசுலாவில் பெரும் பிரச்சனைகளாக உள்ளன.
அலாஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கம்: மக்கள் பீதி.
கனடா அருகே அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் உள்ளது. இங்கு பசிபிக் கடலில் உள்ள அலேடியன் தீவுகள் அருகே கடலோர பகுதியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதை தொடர்ந்து பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
இந்த நிலநடுக்கம் அலேடியன் தீவில் பூமிக்கு அடியில் 48 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அது 6.1 ரிக்டர் அளவில் பதி வானதாகவும் அறிவித்தது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட காயம் மற்றும் சேத விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. கடந்த 3 வாரத்துக்கு முன்பு இதே பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து அம்சிட்கா பாஸ் முதல் டச் துறைமுகம் வரை கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் அது விலக்கி கொள்ளப்பட்டது.
ஒபாமா - தலாய் லாமா சந்திப்பு: சீனா கடும் அதிருப்தி.
அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் திபெத் மதத் தலைவர் தலாய் லாமா இருவரும் நேரில் சந்திப்பதற்கு சீனா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திபெத் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் சீனாவின் இறையாண்மை மற்றும் தேசிய ஒற்றுமை சார்ந்தவை.
இது தொடர்பாக எந்த வெளிநாட்டு அதிகாரியும் தலாய் லாமாவுடன் சந்தித்து பேசுவதை சீனா வன்மையாகக் கண்டிக்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா, தலாய் லாமாவை நேரில் சந்திப்பதால் சீன - அமெரிக்க உறவில் விரிசல் ஏற்படும். இதைப் புரிந்து கொண்டு வெள்ளை மாளிகை அலுவலகம் இந்த சந்திப்பை ரத்து செய்ய வேண்டும்.
இதுகுறித்து பீஜிங்கில் உள்ள சீன வெளியுறவு அமைச்சகம் மற்றும் வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம் ஆகியவற்றின் மூலம் அமெரிக்க அரசுக்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் தலாய் லாமா இடையிலான சந்திப்பு வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் இல்லாமல் பிரத்யேக அறை ஒன்றில் நேற்று நடந்தது.
கடந்த ஆண்டில் இதேபோல் ஒபாமாவும், தலாய் லாமாவும் நேரில் சந்தித்து திபெத் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து தைவானுக்கு ஆயுத சப்ளை செய்யப் போவதாக அமெரிக்கா அறிவித்தது.
இதனால் அதிருப்தி அடைந்த சீன அரசு அமெரிக்காவுடனான ராணுவத் தொடர்புகள் அனைத்தையும் முறித்துக் கொண்டது. சமீபத்தில் தான் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு இரு நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகளும் பல்வேறு சந்திப்புகள் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கன் ஜனாதிபதியின் சகோதரர் சுட்டுக் கொலை: அமெரிக்க வீரர்களுக்கு பிரச்சனை.
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாயின் தம்பி கொலை செய்யப்பட்டதால் தெற்கு ஆப்கானிஸ்தானில் பதட்ட நிலை ஏற்பட்டு உள்ளது.
இதனால் ஹெல்மான்ட் பகுதியில் அமெரிக்க கடற்படை வீரர்கள் தெற்கு ஆப்கானிஸ்தானில் அமைதியை கொண்டு வர கடுமையாக போராடுகிறார்கள்.
சான்கின் பகுதியில் தலிபான்கள் ஆதிக்கம் உள்ளது. மலை மற்றும் கடுமையான காடு பகுதி உள்ள அந்த பகுதியில் 2006ஆம் ஆண்டு முதல் 2010ஆண்டு வரை 100 பிரிட்டன் வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பிரிட்டன் வீரர்கள் உயிரிந்த எண்ணிக்கையில் 3ல் ஒரு பங்கு வீரர்கள் சான்கின் மாவட்ட பகுதியிலேயே உயிரிழந்துள்ளனர். பிரிட்டன் வீரர்கள் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு அமெரிக்க கடல் சார் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாயின் சகோதரர் அகமது வாலி கர்சாய் கொல்லப்பட்டார். அவரது சொந்த பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
வாலி கர்சாய் மாகாண கவுன்சிலின் தலைவராக இருந்தார். அவரது பாதுகாப்பு பணிகள் குறிப்பிடத்தக்க வகையில் இருந்தது. அவரது மறைவுக்கு பின்னர் கூட்டுப்படைகளுக்கு குறிப்பாக அமெரிக்க துருப்புகளுக்கு பெரும் சிரமத்தை தந்துள்ளது.
ஆப்கனில் முன்கூட்டியே படை விலகலால் எஞ்சிய வீரர்களுக்கு ஆபத்து: எம்.பி.க்கள் கவலை.
ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் முகாமிட்டு உள்ளன. இந்த படை துருப்புகளில் பிரிட்டன் ராணுவ வீரர்களும் உள்ளனர்.
வருகிற 2014ஆம் ஆண்டு கால கட்டத்தில் அனைத்து பிரிட்டன் துருப்புகளும் நாடு திரும்ப திட்டமிடப்பட்டு உள்ளது. முன்னதாக அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 500 வீரர்கள் நாடு திரும்புவார்கள் என பிரதமர் டேவிட் கமரூன் கூறியிருந்தார்.
இதன் மூலம் ஆப்கானிஸ்தானில் பிரிட்டன் வீரர்கள் எண்ணிக்கை 9 ஆயிரமாக குறையும். பிரிட்டன் வீரர்களை குறைப்பதால் ஆப்கானிஸ்தானில் உள்ள இதர பிரிட்டன் துருப்புகள் பலவீனம்
அடைந்துவிடும். இதனால் ஆபத்து ஏற்படும் என பிரிட்டன் எம்.பி.க்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.
வருகிற 2014ஆம் ஆண்டு காலத்தில் முழு பாதுகாப்பு பொறுப்பையும் ஆப்கானிஸ்தான் வசம் ஒப்படைத்து விட்டு நேட்டோ படைகள் நாடு திரும்ப திட்டமிட்டு உள்ளன.
ஆப்கானிஸ்தானில் உள்ள பிரிட்டன் வீரர்களுக்கு அனைத்து உதவிகளும் அளிக்கப்பட வேண்டும். அதே போன்று உரிய கருவிகள், வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் நடவடிக்கைகளால் ஆப்கானிஸ்தானில் உள்ள பிரிட்டன் வீரர்கள் தங்கள் உயிருக்காக போராடும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது என்றும் குற்றம் சாட்டினர்.
நாஜி படை பாதுகாவலர் மீது சுமத்தப்பட்டுள்ள புதிய குற்றச்சாட்டுக்கள்.
சோபிபார் நாஜி முகாமில் 28 ஆயிரம் யூதர்களை கொன்ற வழக்கில் ஜான் டெமன்ஜன்ஜக்கிற்கு இந்த ஆண்டு தண்டனை அளிக்கப்பட்டது.
இதே போன்ற கொலை குற்றச்சாட்டு விசாரணை தற்போது ஜேர்மனியில் அவர் மீது நடைபெற உள்ளது. ஜான் டெம்ஜன்ஜக் நாஜி படை போர் குற்றவாளி ஆவார். அவர் பவாரியா அரசியல் கைதிகள் முகாமிலும் பாதுகாவலராக இருந்துள்ளார். இது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.
91 வயது ஜான் டெம்ஜன்ஜக் உக்ரைனில் பிறந்தவர். கடந்த மே மாதம் அவருக்கு நீதிமன்றத்தில் 5 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. போலந்தில் உள்ள சோபிபார் முகாமில் 28 ஆயிரம் யூதர்களை நாஜி படைகள் கொடூரமாக கொலை செய்த முகாமில் டெம்ஜன்ஜக் காவலராக இருந்தார்.
அதற்காக அந்த சிறை தண்டனை அளிக்கப்பட்டது. அதே போன்ற கொலை குற்றச்சாட்டு விசாரணை டெம்ஜன்ஜக் பவாரியாவின் பிளாசன்பர்க்கில் உள்ள முகாமில் காவலராக இருந்தது தொடர்பாக நடத்தப்பட உள்ளது.
பிளாசன்பர்க்கில் 1943ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 1944ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 4 ஆயிரத்து 974 நபர்களை நாஜி படை கொன்று குவித்தது. இந்த படுகொலைகள் தொடர்பாக அலெக்ஸ் என் என்பவர் மீதும் குற்றச்சாட்டு உள்ளது.
இரண்டாம் உலக போருக்கு பின்னர் டெம்ஜன்ஜக் அமெரிக்கா குடிமகன் ஆனார். போர் குற்றங்களுக்காக 1986ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டார். 1988ஆம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர் அந்த தண்டனை திரும்ப பெறப்பட்டது. 2009ஆம் ஆண்டு மூனிச் விசாரணைக்காக அவர் ஜேர்மனி வந்தார். அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. அவரது வயோதிகம் காரணமாக அந்த தண்டனை ரத்து செய்யப்பட்டது.
காபோன் நாட்டு ஜனாதிபதியுடன் உறவு கூடாது: பிரான்ஸ் பிரதமருக்கு எச்சரிக்கை.
மேற்கு மத்திய ஆப்பிரிக்காவில் காபோன் நாடு உள்ளது. இந்த நாட்டின் ஜனாதிபதியாக அலி போங்கோ ஒண்டிம்பா உள்ளார். அவர் தனது தந்தை மறைவுக்கு பின்னர் 2009ஆம் ஆண்டு பதவிக்கு வந்தார்.
மிகவும் சர்ச்சைக்குரிய தேர்தலில் அவர் பதவியை பிடித்தார். அவர் பதவியை விட்டு விலக வேண்டும் என காபோன் தொண்டு நிறுவனங்களும் தொழிற்சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று அந்த அமைப்புகள் பிரான்ஸ் பிரதமர் பிரான்கய்ஸ் பிலானை சந்தித்தன. அப்போது அவர்கள் காபோன் ஜனாதிபதி போங்கோவுடன் உள்ள பிரான்ஸ் உறவை துண்டித்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.
மத்திய ஆப்பிரிக்காவில் பிரான்சின் ராணுவ மற்றும் பொருளாதார கூட்டாளியாக காபோன் உள்ளது. பிரான்ஸ் மனித உரிமை நாடு. கடந்த 1789ஆம் ஆண்டு புரட்சிக்கு பின்னர் அந்த நாடு மனித உரிமை நாடாக திகழ்கிறது.
அந்த நாடு காபோன் நாட்டு ஜனாதிபதிக்கு அளிக்கும் ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும். போங்கோவுடன் உறவை துண்டித்துக் கொள்ள வேண்டும் என தொண்டு நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன.
காபோன் நாட்டில் ஓமர் போங்கோ 42 ஆண்டுகள் ஆட்சி செய்து மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பின்னர் 2009ஆம் ஆண்டு அவரது மகன் அலி போங்கோ பதவியில் நீடித்து வருகிறார்.
காபோன் நாட்டில் ஊழல் தலை விரித்தாடுகிறது. மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்று சர்தேச மனித உரிமை அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
போங்கோவை பிரான்ஸ் பிரதமர் சந்திக்க இருந்த நிலையில் தொண்டு நிறுவனங்கள் எதிர்ப்பை கடுமையாக தெரிவித்து உள்ளன.
எங்கள் நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம்: அமெரிக்காவுக்கு சிரியா கடும் கண்டனம்.
சிரியா நாட்டின் அதிபராக நீடிக்கும் தகுதியை பஷர் அல் அசாத் இழந்துவிட்டார் என்ற அமெரிக்காவின் விமர்சனத்துக்கு சிரியா அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள அமெரிக்க மற்றும் பிரான்ஸ் தூதரகங்களின் மீது கடந்த மூன்று நாட்களுக்கு முன் அதிபர் அசாத் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதைக் கண்டித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன்,"சிரிய அதிபராக நீடிக்கும் தகுதியை அசாத் இழந்துவிட்டார்" என்றார். அமெரிக்க அதிபர் ஒபாமாவும் சிரியா அதிபராக நீடிக்கும் தகுதியை அசாத் இழந்து விட்டார்.
நாட்டில் சீர்திருத்தம் கொண்டு வர ஒன்றன் பின் ஒன்றாக பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும் அதை அசாத் நழுவ விட்டு வருகிறார் என்று விமர்சித்தார்.
வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜே கார்னேயும்,"சிரியா மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராகி வருகின்றனர். ஆட்சி மாற்றத்தை அந்நாட்டு மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.
இந்த விமர்சனங்களுக்குப் பதில் அளித்துள்ள சிரியா கூறியதாவது: எங்கள் நாட்டு உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது மாபெரும் குற்றம். அமெரிக்காவோ அல்லது வேறு நாடுகளோ சிரியாவின் தலைமையை முடிவு செய்யும் நிலையில் இல்லை.
சிரியா எப்படி இருக்க வேண்டும் என்பது நாட்டு மக்களின் விருப்பம். அமெரிக்காவின் பேச்சு உள்நாட்டில் கோபத்தை உண்டாக்கி பதட்டத்தை தொடரச் செய்வதாக உள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளது.
தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரத்தால் அதிகாரிகள் தொடர் ராஜினாமா: தனிமையில் முர்டோக்.
பிரிட்டனில் தொலைபேசி ஒட்டு கேட்பு குற்றச்சாட்டின் கீழ் நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிக்கை இழுத்து மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல அதிகாரிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர்.
அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிகையின் வெளியீட்டாளர் லெஸ் ஹிண்டன் ராஜினாமா செய்துள்ளார். ஹிண்டனும், முர்டோக்கும் 52 ஆண்டுகள் இணைந்து பணியாற்றியவர்கள் என்பதால் ஹிண்டனின் ராஜினாமா முர்டோக்கை தனிமைப்படுத்தியுள்ளது.
பத்திரிகை உலக சாம்ராஜ்யத்தின் தந்தை என்றழைக்கப்படும் ரூபர்ட் முர்டோக்கின் நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகை பிரிட்டனில் தொலைபேசி ஒட்டு கேட்பு குற்றச்சாட்டையடுத்து மூடப்பட்டது. இந்நிலையில் பிரிட்டன் நாட்டின் செயற்கைகோள் ஒளிபரப்பின் முழு அதிகாரத்தையும் தன் பிரிட்டிஷ் ஸ்கை பிராட்காஸ்டிங்கின் கீழ் கொண்டு வர முர்டோக் முயற்சித்து வந்தார்.
தொலைபேசி ஒட்டு கேட்பு குற்றச்சாட்டால் சாட்டிலைட் உரிமத்தை அவருக்கு வழங்கக் கூடாது என பிரிட்டன் பாராளுமன்றத்தில் கட்சிப் பேதமின்றி எதிர்த்து ஓட்டளிக்கப்பட்டது.
இந்த எதிர்ப்பை அடுத்து இதற்கான விண்ணப்பத்தை தானாக முன் வந்து முர்டோக் வாபஸ் பெற்றார். மேலும் தொலைபேசி ஒட்டு கேட்பு குற்றச்சாட்டில் முர்டோக், அவரது மகன் ஜேம்ஸ் முர்டோக்கை விசாரிக்க பிரிட்டன் எம்.பி.க்கள் அனுப்பிய சம்மனை முர்டோக் ஏற்று வரும் புதன் கிழமை பாராளுமன்ற தேர்வு கமிட்டி முன் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார்.
இத்துடன் நியூஸ் இன்டர்நேஷனல் செயல் அதிகாரி ரெபெக்கா புரூக்சையும் விசாரிக்க சம்மன் அனுப்புவது குறித்து பிரிட்டன் எம்.பி.க்கள் ஆலோசித்து வருகின்றனர்.
இந்நிலையில் புரூக்சை தொடர்ந்து அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிகையின் வெளியீட்டாளர் லெஸ் ஹிண்டனும் பதவியை ராஜினாமா செய்தார்.
பிரிட்டனில் 13 வயது மில்லி டவ்லர் கொலை தொடர்பான வாய்ஸ்மெயில் ஒட்டு கேட்பு குற்றச்சாட்டையடுத்து அவரது வீட்டிற்குச் சென்ற முர்டோக் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார். அனைத்து பிரிட்டன் பத்திரிகைகளிலும் மன்னிப்பு தொடர்பான விளம்பரம் வெளியிட முர்டோக் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்டதில் பலியானவர்களின் தொலைபேசி தகவல்களை வாங்குவதற்கு நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகையாளர்கள் முயற்சித்ததும், மேலும் ஒயர்டேப் சட்டத்தை மீறி அமெரிக்காவில் தொலைபேசி ஒட்டு கேட்பில் நியூஸ் ஆப் த வேர்ல்டு பத்திரிகையாளர்கள் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
பிரிட்டனில் எழுந்த சர்ச்சையையடுத்து அந்நாட்டில் வெளியாகி வரும் தி சன், தி டைம்ஸ், சன்டே டைம்ஸ் ஆகிய பத்திரிகைகளை மூடுவதற்கு முர்டோக் முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறையில் இருந்து 59 கைதிகள் தப்பி ஓட்டம்: 7 பேர் சுட்டுக் கொலை.
மெக்சிகோ நாட்டின் சிறையில் இருந்து தப்ப முயற்சித்த கைதிகளில் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 59 பேர் தப்பிச் சென்றனர்.
மெக்சிகோவின் வடக்கில் நியூவோ லாரெடோவில் உள்ள சிறையில் போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்ட கைதிகள் உட்பட மொத்தம் 1,200 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
அடிக்கடி கைதிகள் தப்பிச் செல்லும் இச்சிறையில் இருந்து நேற்று முன்தினம் தப்ப முயற்சித்த கைதிகளில் ஏழு பேர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருந்தாலும் 59 பேர் தப்பிச் சென்றனர்.
அமெரிக்காவின் எல்லையையொட்டி இப்பகுதி அமைந்து இருப்பதால் மெக்சிகோ நாட்டில் இருந்து போதைப் பொருட்கள் அமெரிக்காவிற்குள் கடத்திச் செல்லப்படுகிறது.
அப்படி கடத்திச் செல்லும் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் பொலிசாருக்கும், கொள்ளையர்களுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடக்கும்.
சிறையில் இருந்து அடிக்கடி கைதிகள் தப்பிச் செல்வது வழக்கமாக உள்ளது. இதுவரை இச்சிறையில் இருந்து 400 கைதிகள் தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடாபிக்கு எதிரான போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா அங்கீகாரம்.
லிபியாவில் கடாபி எதிர்ப்பாளர்களை அமெரிக்கா அங்கீகரித்துள்ளது. இது அதிபர் கடாபிக்கு மிகப் பெரிய பின்னடைவாகும்.
அத்துடன் அமெரிக்க வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள 3,000 கோடி டொலர் அரசியல் மாற்றத்துக்கான தேசிய(டி.என்.சி) குழுவுக்குக் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆட்சி மாற்றத்துக்கான தேசிய கவுன்சிலை அமெரிக்கா அங்கீகரிப்பதாக வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அறிவித்தார். இந்தக் குழுவுக்கு தூதரக அங்கீகாரமும் அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
லிபிய அதிபர் கடாபிக்கு எதிராக புரட்சி வெடித்த போது அந்நாட்டுக்கு அமெரிக்கா அளிக்கவிருந்த 3,000 கோடி டொலர் நிதி உதவி நிறுத்தி வைக்கப்பட்டது. அமெரிக்க வங்கிகளில் முடக்கிவைக்கப்பட்டுள்ள இத்தொகை தேசிய கவுன்சிலுக்குக் கிடைக்கும். தேசிய கவுன்சில் செயல்பட நிதி தேவை என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளது.
இந்த நிதி உதவியோடு கூடுதல் தொகை அவர்களுக்குத் தேவைப்படும் என்பதை வெளியுறவு அமைச்சகம் உணர்ந்துள்ளதாக துறையின் செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் தெரிவித்தார்.
இந்த நிதி உதவி மூலம் அவர்கள் உடனடி நிதித் தேவையை மேற்கொள்ள முடியும். அத்துடன் அங்கீகாரம் அளிக்கப்பட்டதன் மூலம் கூடுதலாக நிதி உதவி கிடைக்கவும், முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகளிலிருந்து நிதி கிடைக்கவும் வழி ஏற்படும் என்று டோனர் மேலும் தெரிவித்தார்.
ஜனநாயக ரீதியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதை கடாபிக்கு உணர்த்தவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதை அவரும் உணர்ந்து அதற்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
கடாபியின் ஆட்சி அகல வேண்டும் என்றும், அது சட்ட ரீதியில் செல்லத்தக்கதல்ல என்றும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 30 நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன. அத்துடன் தேசிய கவுன்சிலை அங்கீகரித்துள்ளன.
இதனிடையே தேசிய கவுன்சிலுக்கு அமெரிக்க தூதரை நியமிக்க வேண்டும் என்று அதிபர் ஒபாமாவை நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார். அதேபோல வாஷிங்டன், நியூயோர்க்கில் இந்தக் கவுன்சிலுக்கு தூதரக அங்கீகாரம் மற்றும் உரிமைகளை அளிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
லிபியாவின் ஆட்சி மாற்றத்துக்கான தேசியக் கவுன்சிலை ஒபாமா அரசு அங்கீகரித்துள்ளதை குடியரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் மெக்கைன், லிண்ட்ஸ் கிரஹாம், மார்கோ ருபியோ ஆகியோரும் சுயேட்சை உறுப்பினர் ஜோ லிபர்மேனும் வரவேற்றுள்ளனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மூலம் கடாபி அரசை பதவியிலிருந்து நீக்கி ஜனநாயக வழியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு அதற்கு அங்கீகாரமும் அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கை நடைமுறை சாத்தியமான அங்கீகாரம் அளிப்பதற்கான வழிமுறையாகும். இதன் மூலம் டி.என்.சி.க்கு கூடுதல் நிதி கிடைக்க வழியேற்பட்டுள்ளது. இது அமெரிக்க அரசு விடுத்துள்ள வெறும் அறிக்கை மட்டுமல்ல. இதன் மூலம் லிபியா குறித்து அமெரிக்க நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் சர்வதேச அளவில் ஏற்படும் விளைவுகள், எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்னைகள் ஆகியவற்றுக்கு முன்னோட்டமாக இந்த அறிவிப்பு அமைந்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதிபர் கடாபிக்கு எதிராக போராடிவரும் போராட்டக்குழுவைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்ததாக லிபிய மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
லிபியாவின் கிழக்குப் பகுதியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் இவர்கள் உயிரிழந்தனர். அரசுப் படையினர் வீசிய குண்டு மற்றும் நிலக் கண்ணி வெடிகளில் சிக்கி இவர்கள் இறந்தனர். எதிர்ப்புப் படையினர் நான்கு ராணுவ வீரர்களை சிறைப்பிடித்துள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF