Thursday, July 28, 2011

இன்றைய செய்திகள்.

இலங்கை மீது பொருளாதாரத் தடை! அமெரிக்காவின் தீர்மானத்தை தடுக்க பல்தேசிய நிறுவனங்கள் முனைப்பு.

இலங்கையுடனான வர்த்தக உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு பல்தேசிய நிறுவனங்கள் சில அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்க முற்படுவதாகத் தெரியவருகின்றது.
இலங்கைக்கான உதவிகளை தடைசெய்வதற்கு அமெரிக்க காங்கிரஸின் வெளிவிவகாரக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலேயே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் வகையில் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கவுள்ளதாக கொக்கா கோலா, போயிங் உட்பட 12 பல்தேசிய நிறுவனங்கள் அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹிலாரி கிளின்டனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.
இக்கடிதத்தில் இலங்கையின் பொருளாதாரம் விரைவாக வளர்ச்சியடைந்து வருவதாகவும், அவ்வகையில் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை பலப்படுத்துவது இரு நாடுகளுக்கும் நன்மையை ஏற்படுத்துமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான உதவிகளைத் தடைசெய்வதற்கு அமெரிக்கக் காங்கிரஸின் வெளிவிவகாரக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து இக்கடிதத்தில் எதுவும் நேரடியாகக் குறிப்பிடப்படாத போதிலும் அமெரிக்காவுக்கு மறைமுகமான அழுத்தம் ஒன்றைக் கொடுக்கும் முனைப்பாகவே இது கருதப்படுகின்றது.
வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக பொறுப்புக் கூறுவதற்கு சுயாதீனமான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் வரை இலங்கைக்கான உதவிகள் அனைத்தையும் நிறுத்தவேண்டும் என அமெரிக்க காங்கிரஸின் வெளிவிவகாரக் குழு தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
இலங்கைக்கான மனிதாபிமான நடவடிக்கைகள், கண்ணிவெடிகளை அகற்றுதல் மற்றும் ஜனநாயகத்தை ஸ்திரப்படுத்துதல் போன்றவற்றுக்கான உதவிகள் தவிர்ந்த இலங்கைக்கு வழங்கப்படுகின்ற ஏனைய அனைத்து உதவிகளும் நிறுத்தப்பட வேண்டும் என காங்கிரஸின் வெளிவிவகாரக் குழுவின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதித் தேர்தலின் போது எனது வாக்குகள் கொள்ளையிடப்பட்டன – சரத் பொன்சேகா.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தனது வாக்குகள் கொள்ளையிடப்பட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் 57 லட்ச வாக்குகளைப் பெற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இதில் தமது வாக்குகளும் உள்ளடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் 57 லட்ச வாக்குகளைப் பெற்றுக் கொண்ட ஆளும் கட்சி பொதுத் தேர்தலில் 47 லட்ச வாக்குகளையே பெற்றுக் கொண்டது, உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அந்த எண்ணிக்கை 30 லட்சமாக வீழ்ச்சியடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சிக்கான மக்கள் ஆதரவு குறைவடைந்து செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், எதிர்க்கட்சிகள் வலுவான நிலையில் இல்லாத காரணத்தினால் வெற்றியீட்ட முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் ஒன்றுக்கு ஒன்று ஒற்றுமையுடன் செயற்பட்டால் தேர்தலில் வெற்றியீட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவர்களின் ஆலோசனையின்படி தொடர்ச்சியாக ஏழு நாட்களுக்கு சரத் பொன்சேகா தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சிகிச்சைகளுக்காக வைத்தியசாலை சென்றிருந்த போது ஊடகங்களிடம் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். 
செலிங்கோ நிறுவன தலைவர் லலித் கொத்தலாவல 5 மில்லியன் ரூபா பிணையில் விடுதலை.

கோல்டன் கீ மோசடி வழக்கின் சந்தேக நபர்களான செலிங்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவல உட்பட ஏழு பேருக்கு பிணை வழங்க கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று அனுமதியளித்தது.
இதன் போது லலித் கொத்தலாவலயை 5 மில்லியன் ரூபா ரொக்கப் பிணையில் விடுவிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
குறித்த வழக்கின் மற்றுமொரு சந்தேக நபரும் லலித் கொத்தலாவலயின் மனைவியுமான சிசிலி கொத்தலாவல இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாததையடுத்து  அவரைக் கைதுசெய்யுமாறு நீதிபதி தீபாலி விஜயசுந்தர பிடியாணை பிறப்பித்துள்ளார்.
மட்டக்களப்பு, புதூர் வங்கியில் கொள்ளையிடப்பட்ட 12 கோடி பெறுமதியான நகைகள் மீட்பு!

மட்டக்களப்பு, புதூர் அரச வங்கி ஒன்றில் கொள்ளையிடப்பட்ட 15 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளில் 12 கோடி ரூபா பெறுமதியானவை கல்கிசைப் பகுதியிலும் மட்டக்களப்பிலும் இரகசியப் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
புதூர் அரச வங்கியொன்றில் அண்மையில் 15 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளும் 35 லட்சம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டன.
இந்த வங்கிக் கொள்ளை தொடர்பாக மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ்ப்பெண் ஒருவரைப் பொலிஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து மேற் கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் 12 கோடி ரூபா பெறுமதியான நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
கைதான பெண் கல்கிசையிலும், தெஹிவளையிலும் இரு வீடுகளை வாடகைக்குப் பெற்றிருந்தார். அந்த இரு வீடுகளிலும் 2 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டன. இதன் பின்னர் மட்டக்களப்பில் உள்ள அவரது இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கோடி பெறுமதியான 10 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், வென்னப்புவ பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட இந்த வங்கிக் கொள்ளையை மேற்கொண்ட குழுவின் தலைவன் எனக் கருதப்படும் பிரதீபன் என்பவரிடம் பெறப்பட்ட தகவல்களை அடுத்தே மேற்படி பெண் கைது செய்யப்பட்டார் என மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தப் பெண் கைது செய்யப்படுவதற்கு முன்னர் வங்கியின் அலுவலக உதவியாளர் ஒருவரின் ஒத்துழைப்புடன் கொள்ளையில் நேரடியாக பங்கேற்றதாக கருதப்படும் பிரதீபன், கண்ணன் ஆகியோர் கைதாகியிருந்தனர்.
இவர்கள் அனைவரும் மட்டக்களப்பு இரகசியப் பொலிஸ் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இவ் வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 17ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஆடம்பர ஆடைகள் தீயிட்டு அழிப்பு.
பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் உள்ள வசிரிஸ்தான் பகுதி தலிபான் தீவிரவாதிகள் கட்டுபாட்டில் உள்ளது. பழமைவாதிகளான அவர்கள் அங்கு வாழும் மக்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
அதன்படி பெண்கள் அதிநவீன ஆடைகளை அணியக் கூடாது. அதற்கான துணிகளை வாங்க கூடாது என அறிவித்து இருந்தனர். அதையும் மீறி தெற்கு வசிரிஸ்தானில் வானா என்ற இடத்தில் ஆடம்பர ஆடைகள் விற்கப்பட்டன.
அதை அறிந்த தலிபான் தீவிரவாதிகள் நேற்று வானா கடை வீதியில் திரண்டனர். அங்கிருநத கடைகளில் புகுந்து பெண்கள் அணியும் ஆடம்பர ஆடைகளை பறி முதல் செய்து அள்ளி வந்தனர். அவற்றை நடுவீதியில் குவித்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர்.
இதையும் மீறி இது போன்ற ஆடைகள் மற்றும் துணிகளை விற்கும் கடைக்காரர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தனர்.
இவை தவிர கமெராவுடன் கூடிய கைத்தொலைபேசி விற்கவும் தடை விதித்துள்ளனர். அதையும் மீறிவிற்கும் கடைக்காரருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தனர். விற்பவர்கள் மட்டுமின்றி அவற்றை வாங்குபவர்களுக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.
இந்த அறிவிப்பை 2 மாதங்களுக்கு முன்பே தலிபான் தீவிரவாதிகள் வெளியிட்டனர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் கடைக்காரர்கள் விற்றதால் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க கடன் பிரச்சனையால் உலக பொருளாதார நெருக்கடி ஏற்படும்: சர்வதேச நிதியம் எச்சரிக்கை.
உலக பொருளாதார நெருக்கடி ஏற்படாமல் தடுக்க அமெரிக்கா தனது கடன் பிரச்சனையை உடனடியாக தீர்க்க வேண்டும் என சர்வதேச நிதியம்(ஐ.எம்.எப்) எச்சரித்துள்ளது.
ஐ.எம்.எப்.பின் புதிய தலைவரான கிறிஸ்டியானே லாகர்டே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்காவின் உச்ச கடன் வரம்பான 14.3 லட்சம் கோடி டொலர் அளவை வருகிற வாரம் ஆகஸ்ட் 2ஆம் திகதிக்குள் உயர்த்த வேண்டும், இல்லையென்றால் பணமும் இல்லாமல் அமெரிக்கா நிதி நெருக்கடிக்கு ஆளாகும்.
கடன் உச்ச வரம்பை அதிகரிப்பதில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒபாமாவின் ஜனநாயக கட்சியினரும், குடியரசு கட்சியினரும் மோதிக் கொண்டு இருக்கிறார்கள்.
அமெரிக்க நிதி நெருக்கடியால் தனது ஜனாதிபதி பதவி கூட இழக்க நேரிடலாம் என ஒபாமா எச்சரித்து இருந்தார்.
கடன் உச்ச வரம்புக்கு குடியரசு கட்சி உறுப்பினர்கள் ஒப்புக் கொள்ளாத நிலையில் தன்னாட்சி அதிகாரத்தை பயன்படுத்தி சட்டம் கொண்டு வருவோம் என வெள்ளை மாளிகை நேற்று எச்சரித்து இருந்தது. ஐரோப்பிய கடன் பிரச்சனையைக் காட்டிலும் அமெரிக்க கடன் பிரச்சனை உலக நாடுகளுக்கு கவலையை அளித்துள்ளது.
பிரம்மாண்ட சுறாவிடம் இருந்து உயிர் தப்பிய நீச்சல் வீரர்.
சுறாக்களில் பிரமாண்டமானது "திமிங்கல சுறா". சுமார் 40 அடி நீளம் வரை இருக்கும். எடை சுமார் 25 டன் முதல் 35 டன் வரை இருக்கும்.
வடஅமெரிக்க நாடான மெக்சிகோவில் பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள முஜரஸ் பகுதிக்கு திமிங்கல சுறாக்கள் ஜூன், ஜூலை மாதங்களில் கூட்டம் கூட்டமாக வரும். அங்குள்ள சிறிய மீன்களை மொத்தமாக விழுங்கும். வேட்டை முடிந்த பிறகு, மீண்டும் ஆழ்கடல் பகுதிக்கு சென்றுவிடும்.
சமீபத்தில் 600க்கும் அதிகமான திமிங்கல சுறாக்கள் முஜரஸ் பகுதிக்கு வந்தன. இந்த நிகழ்வுக்காக காத்திருந்த நீச்சல் வீரர்கள், கடல்வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் பலர் முன் அனுமதி பெற்று முஜரஸ் பகுதிக்கு வந்திருந்தனர்.
சுறாக்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்கள் குறித்து விரிவான ஆய்வும் மேற்கொண்டனர். அமெரிக்காவை சேர்ந்த நீச்சல் சாகச வீரர் ஹேண்ட்லர்(49) என்பவரும் இந்த டீமில் இருந்தார். சுறாவின் வாயில் இருந்து நூலிழையில் தப்பிய அனுபவம் பற்றி அவர் விளக்குகிறார்.
ராட்சத உருவம் என்றாலும் திமிங்கல சுறாக்கள் மென்மையானவை. மெதுவாகத்தான் செல்லும். மணிக்கு 5 கி.மீ.தான் அதன் அதிகபட்ச வேகம். கொஞ்சம் பழக்கினால் நண்பன் போலவே நடந்துகொள்ளும். ஆனாலும் தண்ணீருக்கு அடியில் அதன் உருவம் நம்மை மிரள வைக்கும்.
இதுகுறித்து ஹேண்ட்லர் என்பவர் கூறியதாவது: ஆராய்ச்சிக்காக நான் நீந்திக் கொண்டிருந்த போது எதேச்சையாக திரும்பி பார்த்தேன். வாயை சுமார் 5 அடி அகலத்துக்கு திறந்து வைத்தபடி திமிங்கல சுறா நெருங்கி வந்து கொண்டிருந்தது.
நான் சற்று கவனிக்காமல் இருந்திருந்தாலும் அதன் வாய்க்குள் போயிருப்பேன். தன் உணவு தவிர வேறு பொருட்களை சுறா உள்ளே அனுமதிக்காது. உடனே வாயை மூடி என்னை வெளியேற்றியிருக்கும்.
அதன் வாய்க்குள் சின்னச் சின்னதாக 350 வரிசையில் பற்கள் இருக்கும். சுறா சற்று வாயை மூடித் திறந்தாலும் காயம் அதிகம் பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக தப்பினேன்.
இணையத்தை பார்த்து மனைவியை 100 தடவை கத்தியால் குத்திக் கொன்ற கணவர்.
லண்டன் அருகே உள்ள யார்க்ஷைர் நகரில் வசிப்பவர் ஆல்பிரடோ மெரிகோ(43). இவரது மனைவி லிண்டா(40).
இவர்களுக்கு 2008ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 வயதில் ஒரு மகன் உள்ளான்.
கணவரின் சித்ரவதை தாங்க முடியாமல் திருமணமான ஒரு வருடத்திலேயே லிண்டா கணவரை பிரிந்து அருகில் உள்ள டிரிப்பீல்டு என்னும் இடத்தில் குழந்தையுடன் தனியே வசித்து வந்தார்.
கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார். சமரசத்தை ஏற்க மனைவி மறுத்ததால் அவரை கொடூரமாக கொலை செய்ய திட்டமிட்டார். இதற்கு முன்பு நடந்த கொலைகள் பற்றிய விவரங்களை இணையத்தில் தேடினார்.
அதில் ஒருவரை கொல்வது எப்படி? என்ற தலைப்பில் 10 டாப் டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டு இருந்தன. எப்படி கொலை செய்யலாம், கொலைக்கு என்னென்ன வகையான தண்டனைகள் கிடைக்கும் என் பதையும் இணையம் மூலம் அவர் தெரிந்து கொண்டார்.
பின்னர் கொலை திட்டத்துடன் மெரிகோ நேற்று முன்தினம் மனைவி வீட்டுக்கு வந்தார். 2 வயது குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்த லிண்டோவை மெரிகோ கத்தியால் சரமாரியாக குத்தினார். 100 முறை மாறி மாறி வெறியுடன் குத்தினார். இதில் லிண்டோ துடிதுடித்து செத்தார்.
பின்னர் உடலை தனது காரில் ஏற்றிக்கொண்டு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வீசி விட்டார். பொலிசார் விசாரணை நடத்தி மெரிகோவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி முன்பு மெரிகோ மேற்கண்ட தகவல்களை வாக்குமூலமாக தெரிவித்தார்.
ஹிட்லரும், சாவேசும் ஒன்று தான்: வெனிசுலாவில் எதிர்க்கட்சிகள் ஆவேசம்.
எதிர்வரும் 2031ஆம் ஆண்டு வரை வெனிசுலாவில் ஆட்சி செய்யப் போவதாக ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் கூறிய கருத்திற்கு எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
நாஜி படைத் தளபதி சர்வாதிகாரி ஹிட்லரும், ஹியூகோ சாவேசும் ஒன்று தான் என எதிர்கட்சிகள் தெரிவித்து உள்ளனர்.
சாவேஸ் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் வெனிசுலாவில் ஜனாதிபதியாக இருந்து வருகிறார். சாவேசுக்கு சமீபத்தில் பெரிய புற்றுநோய் கட்டி ஏற்பட்டது.
இந்த கட்டி கியூபா மருத்துவமனையில் அகற்றப்பட்டது. புற்றுநோயை எதிர்த்து போராடும் நான் 2031ஆம் ஆண்டு வரை பதவியில் நீடிக்க விரும்புகிறேன் என சாவேஸ் தெரிவித்து உள்ளார்.
அவரது பேட்டி அரசு ஆதரவான கோரியோடெல், ஒரினோகோவில் வெளியாகி உள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கான வெனிசுலாவின் முன்னாள் தூதர் மிலோஸ் அல்கலே கூறுகையில்,"ஹியூகோ சாவேஸ் பதவிக்கு பின்னர் ஹியூகோ சாவேஸ் தான் வர முடியும்" என்றார்.
வெனிசுலா அரசியலமைப்பு படி சாவேஸ் அடுத்த 20 ஆண்டுகள் ஆட்சி செய்ய 2012, 2018, 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும்.
ஹியூகோ சாவேசுக்கு நாளை(வியாழக்கிழமை) 57வது பிறந்தநாள் ஆகும்.
ரமலானுக்கு முன்பாக கடாபியை பாலைவனத்துக்கு அனுப்ப வேண்டும்: நேட்டோ.
லிபியா கடாபி 42 ஆண்டுகளாக பதவியில் இருந்து வருகிறார். அவர் பதவி விலகி தனது பழைய பாதுகாப்பு காவலர்களுடன் பாலை வன விடுதியில் ஓய்வு எடுக்கலாம் என நேட்டோ தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.
கடந்த 4 மாதமாக கடாபியை ஆட்சியில் இருந்து நீக்க நேட்டோ படைகள் போராடி வருகின்றன. ரமலான் மாதம் திங்கட்கிழமை துவங்குகிறது. அதற்கு முன்பாகவே கடாபியை பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்ற நேட்டோவின் கனவு பலிக்கவில்லை.
ரமலான் மாதத்தில் லிபியாவில் அனைத்து முஸ்லிம்களும் உண்ணாவிரதம் இருப்பார்கள். இந்த மாதத்தில் நேட்டோ படையினரோ, கடாபிக்கு எதிரான போராட்டக்காரர்களோ பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ரமலான் மாதத்தில் கடாபிக்கு எந்த வித பிரச்சனையும் ஏற்படாது.
இதனால் நேட்டோ படையில் உள்ள பிரிட்டனின் பிரதமர் டேவிட் கமரூன் உள்பட மேற்கத்திய தலைவர்கள் தங்கள் அணுகுமுறை குறித்து கவலை அடைகின்றனர்.
கடாபி பதவி விலகினால் லிபியாவில் தங்கலாம் என பிரான்சும், பிரிட்டனும் உறுதியாக உள்ளன. பதவியை விட்டு விலக முடியாது என்பதில் கடாபி உறுதியாக உள்ளார்.
தென் கொரியாவில் நிலச்சரிவு: 10 பேர் பலி.
தென் கொரியாவின் வடக்கு மலை சுற்றுலா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 10 பேர் இறந்தனர். மேலும் பலரை காணவில்லை.
தென் கொரியாவின் தலைநகர் சியோனுக்கு 100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சுன்சியோன் மலைப்பகுதியில் இந்த நிலச்சரிவு நேற்று நள்ளிரவு ஏற்பட்டது.
ஹொட்டல்கள், தேநீர் அருந்தும் நிலையங்கள் நொறுங்கின. களிமண் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்கிறது. கடந்த 2 நாட்களில் கடும் மழை சுன்சியோன் பகுதியில் கொட்டி தீர்த்து உள்ளது. இந்த மழைப் பொழிவால் மணல் அரிப்பு ஏற்பட்டு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.
விபத்தில் இறந்த 10 பேரும் கல்லூரி மாணவர்கள். அவர்கள் தன்னார்வ தொண்டு பணிக்காக ஹொட்டலில் தங்கி இருந்த போது இந்த துயரம் நிகழ்ந்துள்ளது.
பயங்கர ரயில் சத்தத்தைப் போல நிலச்சரிவு ஏற்பட்ட போது சத்தம் வந்தது. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இன்றும் கன மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
மன அழுத்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள முபாரக்.
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் மன அழுத்தம் பிரச்சனையில் தவிக்கிறார். இதனால் திட உணவு வகைகளை சாப்பிட மறுக்கிறார் என சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை தலைவர் தெரிவித்தார்.
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் மீது ஊழல் மற்றும் போராட்டக்காரர்களை கொன்று குவித்த குற்றச்சாட்டு உள்ளது. இந்த கிரிமினல் குற்றங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டு ஷரம் அல் ஷேக் நகரில் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.
மன அழுத்தப் பிரச்சனை காரணமாக முபாரக் உடல் எடை குறைந்து உள்ளது. கிரிமினல் விசாரணையை தவிர்ப்பதற்காக முபாரக் நடத்தும் நாடகம் இது என விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
முபாரக் தற்போது எடுத்துக் கொள்ளும் உணவு அளவு அவர் உயிர் வாழ உதவி செய்யாது என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தின் போது முபாரக் ஆட்சியில் இருந்த ராணுவம் 840 போராட்டக்காரர்களை கொன்று குவித்தது.
போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து அவர் பெப்பிரவரி மாதம் பதவி இழந்தார். போராட்டக்காரர்களை படுகொலை செய்தது தொடர்பாக முபாரக் மீது அடுத்த வாரம் விசாரணை நடைபெற உள்ளது.
சோமாலியாவை அடுத்து கென்யாவிலும் பட்டினியால் மக்கள் பலியாகும் அவலம்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒரு கோடியே 16 லட்சம் மக்கள் ஒரு வேளை உணவுக்காக போராடுகிறார்கள்.
கென்யாவில் 35 லட்சம் மக்கள் ஐ.நா நிவாரண உதவியை எதிர்பார்த்து உள்ளனர். தெற்கு சோமாலியாவில் தீவிரவாத அமைப்பினர் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் பட்டினி நிலை தீவிரமாக உள்ளது.
கென்யாவில் வடகிழக்கு பகுதி மாவட்டங்களில் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. இந்த பகுதிகளில் செப்டம்பர் மாதங்களில் வறட்சி பிரச்சனை தீவிரமாகும் என கென்யாவுக்கான ஐ.நா மனித நேய ஒருங்கிணைப்பாளர் நேற்று கூறினார்.
கென்யாவில் தற்போது 24 லட்சம் மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் கென்யாவில் தேசிய பேரிடராக இந்த வறட்சி அறிவிக்கப்பட்டது.
ஐ.நா உலக உணவுத் திட்டம் கூறுகையில்,"தற்போது 17 லட்சம் கென்ய மக்களுக்கு உதவி அளிக்கப்படுகிறது. மேலும் 8 லட்சம் மக்களுக்கு உதவி அளிக்க வேண்டும் என அரசு நிர்ணயித்து உள்ளது" என்றார்.
கென்யாவின் வறட்சி நிவாரண உதவிக்கு 60.50 கோடி டொலர் உதவி தேவை என ஐ.நா மனித நேய அலுவலகம் வேண்டுகோள் விடுத்தது. தற்போது 52 சதவீதம் அளிக்கப்பட்டுள்ளது. ஐ.நா அவசர நிதிநிலை நேற்று ஒரு கோடியே 35 லட்சம் டொலர் விடுக்கப்பட்டது.
பிரான்சின் அவசர நிதி நிலை அறிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: சர்கோசி கடிதம்.
அவசர நிலை கடன் நடவடிக்கைகளில் வெற்றி எட்ட பிரான்ஸ் நிதிநிலைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் செனட்டர்களுக்கும் சர்கோசி கடிதம் எழுதி உள்ளார்.
பொது கணக்கு மற்றும் பொருளாதார விவகாரத்தில் பிரான்ஸ் முன்மாதிரியாக திகழ வேண்டும். நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஐரோப்பிய கூட்டாளி நாடுகளுக்கு நாம் உதவ வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
நாடாளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்களுக்கும் அவர் நேற்று கடிதம் எழுதி பிரான்ஸ் நிதிநிலைக்கு அனைத்து தரப்பு உறுப்பினர்களின் ஆதரவைக் கோரி உள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் கிறீஸ் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது. கடனில் தவிக்கும் கிறீசுக்கு உதவிக்கரம் நீட்டுவது தொடர்பாக சர்கோசியும், ஜேர்மனி அதிபர் ஏங்கலா மார்கெலும் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவு எடுத்தனர்.
கிறீஸ் நாடு திவால் ஆகாமல் இருக்கவும் ஐரோப்பிய நாடுகளின் நாணயமான யூரோ மதிப்பை ஸ்திரப்படுத்துவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் முக்கிய எதிர்க்கட்சியான சோசலிஸ்ட் கட்சியினர் கடுமையான நிதி நிலை அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் சர்கோசி கடிதம் எழுதி உள்ளார்.
மலை சாலை பகுதியில் உயிருக்கு போராடிய பெண் 20 மணி நேரம் கழித்து மீட்பு.
பிரிட்டன் மலை சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து பயங்கர மலை பள்ளத்தில் தவித்த பெண் லின் வென்டன்(56) உயிருடன் மீட்கப்பட்டார். 20 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அவர் மீட்கப்பட்டார்.
திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு மலைச் சாலையில் அவர் காரை ஓட்டிச் சென்றார். அப்போது பனி பாதையை மறைத்து இருந்ததால் அவரது கார் சாலையை விட்டு விலகி மலைப்பள்ளத்தில் உருளத் துவங்கியது.
லின் 3 ஆயிரம் அடி பள்ளத்திற்கு மேல் கடுமையான காயங்களுடன் போராடிக் கொண்டு இருந்தார். அவரது கார் 100 அடி பள்ளத்தில் தொங்கிக் கொண்டு இருந்தது.
லின் முகத்தில் மரண பயம் தொற்றிக் கொண்டு இருந்தது. நேற்று காலை 09:30 மணிக்கு விடுமுறை ஜாகிங் செல்லும் பெண் ஸ்டாபோர்டு இந்த விபத்தை கண்டுபிடித்தார்.
அவர் உடனடியாக கார்ன் வால் பகுதியில் நியூகுவே அருகே செயின்ட் ஏக்னஸ் மலைப் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்து குறித்து எச்சரிக்கைத் தந்தார்.
லின்னை மீட்பதற்கு தீயணைப்புத்துறையினர், கடலோர காவல் படையினர், பொலிசார் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் 20 மணி நேரம் போராடினர். லின் மீட்கப்பட்டதும் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஜேர்மனியில் இ.கோலி பக்டீரியா பாதிப்பு நீங்கியது.
மனித உயிர்களுக்கு அபாயம் விளைவிக்கும் இ.கோலி பக்டீரியா நுண்ணுயிரி காய்கறிகளில் பரவி இருந்தது. இந்த காய்கறிகளை சாப்பிட்டதால் ஜேர்மனி, சுவீடன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் பலர் பாதிக்கப்பட்டனர்.
ஜேர்மனியில் இ.கோலி பக்டீரியா பாதிப்பால் 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். தற்போது இ.கோலி பக்டீரியா பிரச்சனை முற்றிலும் நீங்கி உள்ளது என பெடரல் சுகாதார ஆய்வு நிறுவனமான ரொபர்ட் கோச் இன்ஸ்டியூட்(ஆர்.கே.ஐ) அறிவித்துள்ளது.
ஆர்.கே.ஐ ஜேர்மனியின் தேசிய நோய் கட்டுப்பாட்டு நிறுவனம் ஆகும். இ.கோலி பக்டீரியா பாதிப்பு வடக்கு ஜேர்மனியிலேயே அதிகம் இருந்தது. ஐரோப்பா நாடுகளிலும் இதன் தாக்குதல் இருந்தது. தீவிரமான நச்சு பக்டீரியாவால் 4 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். 52 பேர் உயிரிழந்தனர்.
எகிப்து நாட்டில் இருந்து வந்த சமையல் வாசனை பொருட்களாக கருதப்படும் வெந்தய விதையில் இருந்து தான் இந்த இ.கோலி பக்டீரியா பரவியது. இ.கோலி பக்டீரியா ஜேர்மனியில் பரவ ஸ்பெயினில் இருந்து வந்த வெள்ளிரிக்காய் காரணமாக இருக்கலாம் என முதலில் சந்தேகப்பட்டது.
ஆர்.கே.ஐ இன்ஸ்டிடியூட்டில் தலைவர் ரீய்ன் ஹார்டு பர்கர் கூறுகையில்,"ஜேர்மனியின் மிகப் பெரிய இ.கோலி பாதிப்பு இதுவாகும்" என்றார்.
கனடாவில் பொருளாதார வீழ்ச்சி: மக்கள் நம்பிக்கை இழப்பு.
கனடாவில் இந்த ஜுலை மாதத்தில் பொருளாதார சரிவு அதிகமாக ஏற்பட்டு உள்ளது. இந்த பொருளாதார வீழ்ச்சியால் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.
இதனால் கையில் இருக்கும் டொலர்களை தாராளமாக செலவழிக்க அஞ்சுகிறார்கள். பொருளாதார வீழ்ச்சி காரணமாக வேலை இழப்பு அபாயம் உள்ளதாகவும் மக்களிடையே அச்சம் உள்ளது.
இதனால் சந்தைகளில் அவர்கள் வாங்கும் வேகமும் குறைந்து உள்ளது என கனடாவின் கான்பரன்ஸ் வாரியம் தெரிவித்து உள்ளது.
பொருளாதார ஆய்வு நிபுணர்கள் அமைப்பு மேலும் கூறியதாவது: மூன்றாவது மாதமாக நுகர்வோர் நம்பிக்கை தொடர்ந்து சரிந்துள்ளது என்றும் எச்சரித்து உள்ளது. நுகர்வோர் தங்களது வேலை குறித்த எதிர்கால நிச்சயமற்ற தன்மையில் தவித்து வருகிறார்கள்.
கனடாவில் கியூபெக் அட்லாண்டிக் கனடா மாகாணப் பகுதிகளில் மக்களிடம் பொருளாதாரம் வளர்ச்சி குறித்த நம்பிக்கை அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் ஒண்டோரியா மேற்கு கனடா பகுதிகளில் மக்களிடம் பொருளாதார வீழ்ச்சி எண்ணம் ஏற்பட்டு உள்ளது.
சில நுகர்வோர் கடந்த 6 மாதத்திற்கு முந்திய நிதி நிலையைக் காட்டிலும் தற்போது தங்களது நிதி நிலை திருப்தியில்லை என தெரிவித்து உள்ளனர். 2008ம் ஆண்டு உலக பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் கனடாவில் இந்த நிலை நீடிக்கிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF