Friday, July 29, 2011

இன்றைய செய்திகள்.

இலங்கை விடயத்தை வைத்து பிரபல்யமடைய சனல்-4 முயற்சி! கோத்தபாய குற்றச்சாட்டு.

சனல்-4  ஊடக அமைப்பானது கீழ்த்தரமான ஊடக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும், அந்த நிறுவனம் இலங்கை விவகாரத்தை வைத்து பிரபல்யமடைய முயற்சிப்பதாகவும்  இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் உள்ள சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள புதிய காணொளி தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே கோத்தபாய மேற்கண்டவாறு விமர்சித்துள்ளார்.
மேலும் புதிய காணொளியில் கருத்து தெரிவித்த வீரர்கள் அவர்களின் கருத்து உண்மையானது எனில், அக்கருத்தினை தேசிய நீதிமன்றத்தின் முன்போ, சர்வதேச நீதிமன்றத்தின் முன்போ முன் வைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சனல்-4 இராணுவ வீரர்கள் எனக் கூறி சாட்சிப்படுத்தியவர்கள் குறித்து எதுவித தகவல்களையும அறிவிக்காமை, உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தாது போலியான தகவல்களை வழங்குவதற்கு சமன் என கூறியுள்ள பாதுகாப்பு செயலாளர், அது நீதிக்கு புறம்பானது எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை விடயத்தை வைத்துக் கொண்டு சனல்-4 ஊடகம் பிரபல்யமடைய முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையின் முதல் முறையாக நகர முதல்வராக பௌத்த பிக்கு.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக பௌத்த பிக்கு ஒருவர், நகர சபையின் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய நகர சபையின் முதல்வராக ஜாதிக ஹெல உறுமயவின் ஞானப்பிரபா என்ற பௌத்த பிக்கு பதவியேற்கவுள்ளார்.
அவர், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலில் ஞானப்பிரபா அதிக விருப்பு வாக்குகளை பெற்றார்.
ஜாதிக ஹெல உறுமய, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியாகும்.
உயர்தர பரீட்சார்த்திகளுக்கு இலவச பஸ் பயணம்! அரசின் கூற்று பொய்யானது!– தனியார் பஸ் உரிமையாளர்கள்.

எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை மட்ட மாணவர்களுக்கு இலவச பயணம் என்ற அரசாங்கத்தின் அறிவித்தலை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் நிராகரித்துள்ளது.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களுக்கு தகவல் தந்த கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன, தனியார் பஸ்களில் குறித்த மாணவர்களுக்கு இலவசமாக பயணம் செய்யமுடியும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதன்போது பரீட்சாத்திகள் தமது பரீட்சை அடையாள அட்டையை மாத்திரம் பஸ் நடத்துநனரிடம் காண்பிக்கவேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
எனினும் அரசாங்கத்துக்கும் தமக்கும் இது தொடர்பில் எவ்வித உடன்பாடுகளும் இல்லை என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த உயர்தரப் பரீட்சையின் போது மேல்மாகாண மாணவர்களுக்கு மாத்திரம் இந்த சலுகை வழங்கப்பட்டது.
இதன்போது பொதுமக்களான பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகினர் என்றும் கெமுனு விஜயரட்ன தெரிவித்தார். 
வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் தீர்வு கிடையாது! திஸ்ஸ அத்தநாயக்க.

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் தீர்வு கிடையாது. வேட்டி மற்றும் சேலைகளை கொடுத்து அம்மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைத்தபோதிலும் முறையான பதிலடியை தமிழ் மக்கள் வழங்கியுள்ளனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இராணுவத்தையும் அரச அதிகாரிகளையும் மிகவும் மோசமான முறையில் கடந்த தேர்தலில் அரசாங்கம் பயன்படுத்திய போதிலும் அரசாங்கத்தால் 90 வீதமான வெற்றியை அடைய முடியவில்லை.
பொலிஸ் மற்றும் தேர்தல் திணைக்களம் சுயாதீன தன்மையை இழந்துள்ளது. எனவே ஒற்றுமையுடன் போராடி தற்போதைய மோசடி அரசை விரட்டியடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
அவர்  தொடர்ந்தும் கூறுகையில்,
அரசாங்கம் வழமையான முறையில் மோசடிகளின் ஊடாக தேர்தலில் வெற்றி கண்டுள்ளது. குறிப்பாக வடக்கையும் கைப்பற்றி மோசடி ஆட்சிக்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ள அரசாங்கம் முயற்சித்த போதிலும் அதில் தோல்வி கண்டு ஆளும் தரப்பின் மூக்கு உடைபட்டுள்ளது.
எவ்வாறாயினும் வடக்கு வாழ் மக்களின் பல்தரப்பட்ட பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் ஒரு தீர்வும் கிடையாது. ஏமாற்று வேலைகளின் ஊடாக காலத்தை கடத்தி விடலாம் என்று எண்ணிய போதிலும் அதிலும் அரசு ஏமாற்றம் கண்டுள்ளது.
தற்போது கட்டாயமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு உருவாகியுள்ளது. கடந்த வடக்கு உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் இதனையே உணர்த்தியுள்ளன.
அரசின் மோசடி செயற்பாடுகளை தொடர்வதற்கு தென்பகுதியில் பொது மக்கள் வாக்களித்ததாக அமைந்துவிடாது. பல அச்சுறுத்தல்களுக்கும் சவால்களுக்கும் மத்தியிலும் பொது மக்கள் ஐ.தே.க. வை ஆதரித்து இருந்தனர். எனவே மேலும் வலுவான முறையில் ஒன்றிணைந்து மோசடி ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். என்றார்.
போதைப் பொருள் வர்த்தகரிடம் லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி பணி இடைநிறுத்தம்.

போதைப் பொருள் வர்த்தகர் ஒருவரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்ட பொலிஸ் அதிகாரியின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஹங்வெல்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபரிடமிருந்து குறித்த பொலிஸ் அதிகாரி 35 லட்ச ரூபா கப்பமாக பெற்றுக் கொண்டுள்ளார் என நுகேகொடை பொலிஸ் வலயத்திற்கு உட்பட்ட சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட விசாரணைகளின் பின்னர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரிக்கு எதிராக வேறும் சில குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையில் மாற்றம் ஏற்படுமா? கரு. தலைவர் சஜித் ஜனாதிபதி வேட்பாளர்?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படுத்தும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் இன்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு மற்றுமொரு இணைப் பிரதித் தலைவரான கரு ஜயசூரியவிடம் தாம் கோரியதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கட்சியின் மாற்றுக்கொள்கையாளர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கரு ஜயசூரிய ஏற்றுக் கொண்டுள்ளார்.
கட்சியின் இணைப் பிரதித் தலைவராக கடமையாற்றிய போதிலும், தீர்மானங்களை நிறைவேற்றும் அதிகாரம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
மறுசீரமைப்புக்கள் ஏற்படுத்தாவிட்டால் கட்சி இயற்கை மரணமடைவதனை தடுக்க முடியாது.
கட்சி அடைந்து வரும் தொடர் தோல்விகளிருந்து மீள வேண்டுமாயின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என சஜித் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, எனினும் நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ போட்டியிடவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர்களாக ரோசி சேனாநாயக்க, தலதா அத்துகோரள, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இதேவேளை, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க ஆகியோர் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கான உதவிகளை ரத்து செய்யும் தீர்மானம் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை – பிளேக்.

உதவிகளை ரத்து செய்யும் தீர்மானம் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான உதவிகளை ரத்து செய்யும் யோசனைத் திட்டம் தொடர்பில் சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புலி ஆதரவு அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர் ஒருவரினால் இந்த யோசனைத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்படும் வரையில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்பட மாட்டாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏழு வயது சிறுவனை சங்கிலியால் கட்டி வைத்திருந்த பெண் புத்தளத்தில் கைது.

ஏழு வயதுச் சிறுவன் ஒருவனை சங்கிலியால் கட்டி பூட்டுப்போட்டு வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் பெண் ஒருவரை புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாலாவி கரம்பை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார்.
பாடசாலை செல்லும் வயதுடைய சிறுவன் ஒருவனை சங்கிலியால் கட்டிப் போட்டுள்ளதாக பொலிஸ் அவசர சேவைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் புத்தளம் பொலிஸாருக்கு உடனடியாக வழங்கபட்டதையடுத்து உடன் செயற்பட்ட புத்தளம் பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று சிறுவனை மீட்டுள்ளதுடன், குறித்த பெண்ணையும் கைது செய்துள்ளனர்.
குறித்த சிறுவன் தனது சகோதரியின் மகன் எனவும், அச்சிறுவன் பாடசாலை செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து தனது வீட்டுக்கு வந்து மறைந்திருப்பதாகவும், இதனால் அச்சிறுவனைப் பயமுறுத்தவே தான் இவ்வாறு செய்ததாகவும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண்ணும், சிறுவனும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த புத்தளம் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். 
அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்ட பாகிஸ்தானை தடுத்து நிறுத்திய அமெரிக்கா, பிரிட்டன்.
கடந்த 1970களில் பாகிஸ்தான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது அதை தடுக்கும் முயற்சியில் அமெரிக்காவும், பிரிட்டனும் ஈடுபட்டன என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆவண காப்பகத்திலிருந்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக கடந்த 1970ம் ஆண்டுகளில் பாகிஸ்தான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது அதை தடுப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கடந்த 1978 - 81 வரையிலான காலகட்டத்தில் ஆணு ஆயுதம் தயாரிப்பதற்கான முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு இருந்தது.
பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சாஸ்மா என்ற இடத்தில் அணு உலை அமைக்கும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஈடுபட்டது. இதற்கு தேவையான செறிவூட்டப்பட்ட யூரேனியம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அணுசக்தி அளிக்கும் நாடுகளிடமிருந்து பெறுவதற்கு பாகிஸ்தான் முயற்சித்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த அமெரிக்காவும், பிரிட்டனும் இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டன. அணுசக்தி தொடர்பான வசதிகளை அளிக்கும் நாடுகளுக்கு அமெரிக்காவும், பிரிட்டனும், உத்தரவுகளை பிறப்பித்தன.
பாகிஸ்தானுக்கு அணுசக்தி தொடர்பான உதவிகளை அளிக்கக்கூடாது என்ற உத்தரவும் அதில் முக்கியமானது. இதையடுத்து சாஸ்மாவில் அணு உலை அமைப்பதற்கான உதவிகளைச் செய்ய முன்வந்த பிரான்ஸ் அரசு தன் திட்டத்தை கைவிட்டது.
இது பாகிஸ்தான் ஆட்சியாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. பாகிஸ்தானின் அணு ஆயுத முயற்சிக்கு பிரிட்டனும், அமெரிக்காவும் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்தாலும் இந்த முயற்சி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
அதே நேரத்தில் பாகிஸ்தான் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சியில் ஈடுபடுவது குறித்து இந்திய உளவு அமைப்புகள் நன்கு தெரிந்து வைத்திருந்தன. தன்னை விட இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கு முன்பே அணு ஆயுதம் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை பாகிஸ்தான் பெற்று விடும் என்பதை இந்திய உளவு அமைப்புகள் தெரிந்து வைத்திருந்தன.
 ஆனாலும் அமெரிக்காவும், பிரிட்டனும் இந்தியாவை பொருட்படுத்தவில்லை என்பதும், அமெரிக்க ஆவணங்களின் மூலம் தற்போது தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஆவணங்களில் பாகிஸ்தான் அணு ஆயுத விஞ்ஞானி ஏ.க்யூ.கான் பற்றிய எந்த தகவலும் இடம் பெறவில்லை.
பட்டினியால் தினமும் 250 குழந்தைகள் மடியும் அவலம்.
ஆப்ரிக்க நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியின் காரணமாக தினமும் 250 குழந்தைகள் பட்டினியால் இறக்கின்றன என தெரியவந்துள்ளது.
சோமாலியாவில் பல ஆண்டுகளாக பட்டினி பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஐ.நா சபை தெற்கு சோமாலியா பகுதியை "பஞ்சத்துக்கு இலக்கான பகுதி" என அறிவித்துள்ளது.
இப்பகுதியில் ஒவ்வொரு ஆறு நிமிடத்துக்கும் ஒரு குழந்தை பலியாகி வருகிறது. சோமாலியா மட்டுமல்லாமல் எத்தியோப்பியா, கென்யா ஆகிய ஆப்ரிக்க நாடுகளில் உள்ள மக்கள நீண்ட காலமாக வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்.
இங்கு உணவுப் பொருட்களுக்கான விலைவாசியும் கடுமையாக உயர்ந்துவிட்டது. அன்றாட உணவுக்கு கூட குழந்தைகள் கஷ்டப்படும்போது கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மற்ற அடிப்படை வசதிகள் எந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.
சோமாலியா, கென்யா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் 20 லட்சம் பேர் உள்ளனர். இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சரியான ஊட்டச்சத்து இன்றி ஆபத்தான நிலையில் வாழ்கின்றன.
இங்கு குற்றங்கள் அதிகரிக்க ஏழ்மையும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இதனால் இந்நாடுகளில் ஏழ்மையும், ஏற்றத் தாழ்வுகளும் நிறைந்து உள்ளன. வறுமை இருக்கும் வரை வன்முறையையும், குற்றங்களையும் தவிர்க்க முடியாது.
இந்த ஆபத்தில் இருந்து குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு யுனிசெப் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி பல்வேறு முகாம்கள் மூலம் குழந்தைகளுக்கு தேவையான பால், குடிநீர், சுகாதாரம் போன்ற வசதிகளை வழங்கி உயிர்க்கொல்லி நோய்கள் பரவாமல் காப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பசியால் வாடும் குழந்தைகளின் பேரிடரை துடைப்பதற்கு உதவுமாறு யுனிசெப் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிரியாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலி.
சிரிய தலைநகர் டமஸ்கஸிற்கு அருகிலுள்ள கனாகர் நகரில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படையினர் பீரங்கிகள் மூலம் முன்னேறுவதை தடுக்க உள்ளூர்வாசிகள் தெருக்களில் டயர்களை எரித்து தடை ஏற்படுத்தியதாகவும் இதன் போது இடம்பெற்ற மோதலில் பலர் காயமடைந்துள்ளதுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிரியாவில் கடந்த மார்ச் மாதம் அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல் அஸாத்திற்கு எதிராக மக்கள் போராட ஆரம்பித்தனர்.
அங்கு கடந்த 4 மாதங்களாக நிலவும் பதற்ற நிலை காரணமாக 1400 பொது மக்களும் 350 பாதுகாப்பு படையினரும் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நோர்வேயில் மர்ம மனிதன் நடமாட்டம்: அதிர்ச்சியில் மக்கள்.
அமைதிக்கு பெயர் பெற்ற நோர்வே நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இரட்டை தாக்குதல் நடந்தது.
தலைநகர் ஓஸ்லோவில் நடந்த குண்டு வெடிப்பிலும், ஒரு தீவிரவாதி துப்பாக்கியால் சுட்டத்திலும் 83 பேர் பலியானார்கள்.
இதையடுத்து நாடு முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு மீண்டும் வெடிகுண்டு பீதியால் பரபரப்பு ஏற்பட்டது. ஓஸ்லோ மத்திய ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு பஸ் புறப்பட தயாரானது. அதில் 20 பயணிகள் இருந்தனர்.
பஸ் கிளம்ப தயாரானதும் பஸ்சில் இருந்த மர்ம மனிதன் தான் கொண்டு வந்த சூட்கேஸை பஸ்சில் வைத்து விட்டு வேகமாக இறங்கினான். கறுப்பு நிறத்தில் உடையும், வெள்ளை நிறத்தில் தொப்பியும் அணிந்திருந்த அவன் வேகமாக நடையை கட்டினான்.
இதை ரகசிய கமெராவில் பார்த்து விட்ட அதிகாரிகள் அந்த பஸ்சின் டிரைவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பஸ்சில் இருந்து பயணிகள் இறக்கி விடப்பட்டனர். ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளும் வெளியேற்றப்பட்டனர். தற்காலிகமாக ரெயில் நிலையமும் மூடப்பட்டது. ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. பஸ்சில் இருந்து கைப்பற்றப்பட்ட சூட்கேஸ் மிகவும் பாதுகாப்பாக இறக்கப்பட்டது. அதன் உள்ளே ரோபோட் ஒன்று இருந்தது. வெடிகுண்டு எதுவும் இல்லை.
இதையடுத்து அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து ரெயில் நிலையத்திலும் சோதனை போடப்பட்டது. பஸ்சில் சூட்கேசை விட்டுச் சென்ற மர்ம ஆசாமி யார்? எதற்காக அதை விட்டுச் சென்றான்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
சிக்னல் பிரச்சனையால் விபத்து நேரிட்டது: ரயில்வே அமைச்சகம்.
சீனாவில் அதிவேகத்தில் இயங்கும் புல்லட் ரயில் விபத்து சிக்னல் பிரச்சனை காரணமாக ஏற்பட்டுள்ளது என ஷாங்காய் ரயில்வே கூறி உள்ளது.
கடந்த 5 நாட்களுக்கு முன்னர் 23ஆம் திகதி வென்சே என்ற இடத்தில் அதிவேக புல்லட் ரயில்கள் மோதியதில் 39 பேர் உயிரிழந்தனர்.
சிக்னல் பிரச்சனையால் ஏற்பட்ட இந்த விபத்து நடந்த இடத்தை சீன பிரதமர் வென்ஜியா பவ் பார்வையிட சென்றார். இந்த விபத்துக்கு காரணமான நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.
அதிவேக புல்லட் ரயில் சீன அரசின் முன்னோடித் திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என பிரதமர் வென்ஜியா பவ் உறுதியளித்து இருந்தார்.
புல்லட் ரயில் மோதல் காரணமாக மக்கள் இடையே மிகுந்த கோபம் ஏற்பட்டது. இந்த நிலையில் பிரதமர் விபத்து நடந்த இடத்திற்கு வந்து நிவாரண நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளார்.
அதிவேக புல்லட் ரயில்கள் மோதிக் கொண்டதில் 4 ரயில் பெட்டிகள் 20 – 30 மீற்றர் பள்ளத்தில் உருண்டு விழுந்தன. இந்த விபத்தில் 200 பேர் காயம் அடைந்தனர். விபத்து குறித்து ரயில்வே அமைச்சகத்தை சீன பத்திரிக்கைகள் விமர்சித்து உள்ளன.
மறைந்து கிடந்த மெக்சிகோ ரகசிய கல்லறையில் 18 உடல்கள் கண்டுபிடிப்பு.
மெக்சிகோவின் வடக்கு தொழில் நகரமான மான்ட்ரேவில் மறைந்து இருந்த ரகசிய கல்லறையில் 18 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
மான்ட்ரேவின் வெளியே 20 கிலோ மீற்றர் தொலைவில் இந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. உடல்கள் மோசமான நிலையில் அழுகிக் கிடந்தன.
மெக்சிகோவின் பாதுகாப்பு பகுதி என அழைக்கப்பட்ட மான்டரேவில் சமீபகாலமாக வன்முறை அதிகரித்து வருகிறது.
மான்ட்ரேவுக்கு அருகாமையில் உள்ள தமுலிபாஸ் மாநிலத்தில் வளைகுடா போதை மருந்துக் கும்பலுக்கும், ஜெடாஸ் கும்பலுக்கும் மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலின் உச்சக் கட்டமாக மான்ட்ரே தொழிற்சாலை நகரமும் பாதிக்கப்பட்டு உள்ளது.
மெக்சிகோவில் போதை மருந்து கடத்தல் கும்பல்களால் நடந்த தாக்குதல்களில் 41 ஆயிரம் பேர் இறந்து உள்ளனர். 2006ஆம் ஆண்டு மெக்சிகோ ஜனாதிபதி பெலிப்பி கால்ட்ரன் ராணுவ நடவடிக்கை எடுத்தார். இந்த நடவடிக்கைக்கு பின்னர் வன்முறைத் தாக்குதல்களில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன.
பிலிப்பைன்சில் புயலுடன் கூடிய பலத்த மழை: 27 பேர் பலி.
பிலிப்பைன்ஸ் நாட்டில் பலத்த புயல் மழை பெய்து வருகிறது. புயல் வெள்ளத்திற்கு மொத்தம் 27 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு வீடுகளுக்குள் புகுந்தது. அங்கிருந்து 6 லட்சத்து 4 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
புயல், மழைக்கு நாட்டின் வடக்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. நிலச்சரிவு ஏற்பட்டதால் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்து விட்டன. நாக்டென் என்று பெயரிடப்பட்டுள்ள புயலுக்கு இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மீனவர்கள்.

அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி அவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்று புயலில் சிக்கிக் கொண்டனர். மேலும் 31 பேரை காணவில்லை. மாயமனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. தொடர்ந்து மழை நீடிப்பதால் மீட்பு பணிகளும் நிவாரணப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
புயல் காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பகுதியில் உள்ள லூசோன் விமான நிலையத்துக்கு வரும் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
134 நாட்களாக உணவின்றி உயிர் வாழ்ந்த தங்க நிற மீன்கள்.
நியூசிலாந்தில் 2 தங்க நிற மீன்கள் உணவின்றி 134 நாட்கள் உயிருடன் இருந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நியூசிலாந்து கிரைஸ்ட்சர்ச்சில் உள்ளது குவாண்டம் சார்டர்ட் அக்கௌண்டன்ட்ஸ் அலுவலகம். அதன் வரவேற்பு அறையில் 100 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் ஒரு மீன் தொட்டியில் ஷாகி, டாப்னி என்று பெயரிடப்பட்ட 2 தங்க நிற மீன்கள் உள்ளன.
அண்மையில் நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு 181 பேர் பலியாகினர். அந்த நிலநடுக்கத்திற்கு பிறகு இந்த மாதம் தான் குவாண்டம் சார்டர்ட் அக்கௌண்டன்ட்ஸ் ஊழியர்கள் பணிக்குத் திரும்பினர்.
அலுவலகத்திற்குள் நுழைந்தவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து விட்டனர். காரணம் கடந்த 134 நாட்களாக யாருமே அலுவலகம் வராத நிலையில் உணவின்றி அந்த 2 தங்க நிற மீன்கள் உயிருடன் உள்ளன.
இது குறித்து கலிபோர்னியாவின் மாண்டரே பே அக்வாரியத்தின் மேற்பார்வையாளர் பால் கிளார்க்சன் கூறுகையில்,"அந்த மீன் தொட்டியில் இருந்த பக்டீரியா தண்ணீரை சுத்தமாக வைத்திருந்திருக்கக்கூடும். மீன்கள் அந்த தொட்டியில் வளர்ந்த நீர்ப்பாசியை உண்டு உயிர் வாழ்ந்திருக்கும். ஆனால் அதே தொட்டியில் இருந்த மேலும் 3 தங்க நிற மீன்கள் இருந்த அறிகுறியே இல்லை" என்றார்.
வெற்றிகரமாக விண்வெளியை சென்றடைந்த சீனாவின் செயற்கைகோள்.
சீனா புதன்கிழமை புதிய செயற்கைக்கோளை செலுத்தியது. இது விண்வெளியை வெற்றிகரமாகச் சென்றடைந்தது.
பூமியில் உள்ள பொருள்கள் மற்றும் வாகனங்கள் இருக்கும் இடத்தை அறியும் ஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியை இப்போது அமெரிக்காவிடமிருந்து சீனா பெற்று வருகிறது. இந்நிலையில் தமக்கென சொந்தமாக ஜிபிஎஸ் தொழில்நுட்ப முறையை உருவாக்க அந்நாடு முயற்சித்து வருகிறது.
இதைக் கருத்தில் கொண்டு 2000ம் ஆண்டில் இருந்து பல செயற்கைக்கோளை சீனா விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இதன் ஒருபகுதியாகவே இப்போது புதிய செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது.
சீனாவின் தென்மேற்கு பகுதியின் சிஜுவான் மாகாணத்தில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது. மார்ச்- 3ஏ என்ற ராக்கெட் செயற்கைக்கோளை சுமந்து கொண்டு விண்ணை நோக்கி பாய்ந்ததும் அந்நாட்டு விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
போராட்டக்காரர்களுக்கு பிரிட்டன் அரசு அங்கீகாரம்: லிபியா கடும் கண்டனம்.
லிபிய போராட்டக்காரர்கள் ஒரே அரசின் அங்கீகாரம் பெற்றவர்கள் என பிரிட்டன் கூறியுள்ளது. பிரிட்டனின் இந்த நடவடிக்கைக்கு லிபியா கடாபி நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடாபியின் நிர்வாகத்தில் துணை வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள காலித் காலிம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"பிரிட்டனின் நடவடிக்கை பொறுப்பற்ற செயல். பிரிட்டன் முடிவை நீதிமன்றம் மூலம் மாற்றுவேன்" என்றார்.
பிரிட்டனில் கடாபியின் 8 தூதர்கள் வெளியேறுவதற்கு பிரிட்டன் உத்தரவிட்டது. இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து லிபியாவின் கடாபி நிர்வாகம் கடும் எரிச்சல் அடைந்துள்ளது.
லிபியாவில் போராட்டக்காரர்களின் தலைமையகமாக தேசிய மாற்றக் கவுன்சில் உள்ளது. இந்த கவுன்சில் எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான மகமூத் அல் நகுவை லண்டனில் லிபியாவின் புதிய தூதராக நியமித்து உள்ளது.
கடாபி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் 33 ஆண்டுகள் நாட்டை விட்டு வெளியே இருக்க வேண்டி இருந்தது என மகமூத் கூறியுள்ளார்.
பந்தயத்திற்காக தனது தோழியை கொடூரமாக கொலை செய்த 16 வயது மாணவன்.

காலை சிற்றுண்டி பந்தயத்திற்காக தனது தோழியை 16 வயது மாணவன் மிக கொடூரமாக கொலை செய்தான்.
பிரிட்டனின் வேல்ஸ் பிரிட்கென்ட் பகுதிக்கு அருகாமையில் உள்ள அபெர்கின் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி ரெபக்கா. இந்த மாணவியை அவரது 16 வயது நண்பன் ஜோஸ்வா டேவிஸ் கொடூரமாக கொலை செய்தார்.
தனது நண்பனிடம் காலை சிற்றுண்டி பெற மேற்கொண்ட பந்தயத்திற்காக மாணவி ரெபக்கா கொலை செய்யப்பட்டார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த கொடூரக் கொலை நடந்தது.
மாணவி ரெபக்காவுடன் ஜோஸ்வா டேவிஸ் பழகுவதை மாணவியின் தாயார் சோனியா வரவேற்கவே செய்தார். டேவிஸ் கல்வி அறிவில் சிறந்தவராகவும், கிறிஸ்துவ மத நம்பிக்கை உள்ள குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதாலும் ரெபக்கா டேவிஸ் வருகையை வரவேற்றார்.
ரெபாக்காவும், டேவிசும் கடந்த 2005ம் ஆண்டு முதல் பழகி வந்தனர். 11 வயதில் ரெபக்காவிற்கு டேவிட்சுடன் பழக்கம் ஏற்பட்டது.
டேவிஸ் பார்க்க மிக அமைதியாக இருப்பார். டேவிசுக்கு வன்முறை படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே அவரது உளவியல் நிலையை கண்டறிய சோதனை செய்யப்படுகிறது. அதன் பின்னரே கிரவுன் கோர்ட் டேவிசுக்கு தண்டனையை அறிவிக்கிறது.
ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட விளாடிமிர் புடின் விருப்பம்.
அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் ரஷ்யா அதிபர் பதவிக்கு விளாடிமிர் புடின் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யா அதிபராக கடந்த 2000- 2008ம் ஆண்டு வரை அதிபராக இரு முறை பதவிவகித்தார் விளாடிமிர் புடின்(56). தற்போது ரஷ்யாவின் பிரதமராக உள்ளார்.
ரஷ்யாவின் செல்வாக்குமிக்க அரசியல்வாதியாக விளாடிமிர் புடின் உள்ளார். இவர் கடந்த 2008ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தனது நம்பிக்கைக்குரிய டிமெட்ரிமித்வதேவை அதிபராக பதவியில் அமர்த்தினார்.
ரஷ்யா அரசியலமைப்பு சட்டத்தின் படி நாட்டில் ஒருவர் இரு முறை மட்டுமே அதிபர் பதவி வகிக்க முடியும். அந்த ‌வகையில் ஏற்கனவே 2000-2004, 2004-2008 ஆகிய இரு முறை அதிபராக பதவி வகித்தார்.
கடந்த 2008ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிடாமல் டிமெட்ரிமித்வதேவை அதிபர் வேட்பாளராக நிறுத்தி அவரையே அதிபராக்கினார்.
இந்நிலையில் ரஷ்யா அதிபர் தேர்தல் 2012ம் ஆண்டு நடக்கவுள்ளது. இத்தேர்தலில் மீண்டும் அதிபர் வேட்பாளராக விளாடிமிர்புடின் போட்டியிடவுள்ளதாக அவரது அரசியல் ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.
ரஷ்ய அரசியல் சீர்திருத்தத்தின்படி அதிபரின் பதவிகாலம் தற்போது ஆறு ஆண்டுகளாக நீடிக்கப்பட்டுள்ளதால் எனவே அடுத்த ஆண்டு(2012) நடக்கவுள்ள தேர்தலில் புடின் வென்றால் 2018ம் ஆண்டு வரை அதிபராக பதவியிலிருப்பார் என மாஸ்கோவின் கிரம்ளின் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பியர் அல்லாத நபர்களுக்கு இனி பிரான்சில் வேலைவாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை: சர்கோசி.
சட்ட குடியமர்வு நடவடிக்கைகளில் பிரான்ஸ் அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை புகுத்தி உள்ளது.
இந்த நடவடிக்கையால் ஐரோப்பியர் அல்லாத வெளிநாட்டவர்களுக்கான வேலை எண்ணிக்கை ரத்து செய்யப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் கிளாடே கூறுகையில்,"பணி சார்ந்த குடியேற்ற நிகழ்வுகளை ரத்து செய்ய விரும்புவதாகவும், இடம் பெயர்ந்தவர்களிடம் ஒருங்கிணைப்பு இல்லை" எனவும் தெரிவித்தார்.
ஐரோப்பியர் அல்லாத இதர நாட்டவர்களின் வேலைவாய்ப்புகள் 50 சதவீதம் குறைக்கப்பட்டு விட்டது. குடியேற்ற நபர்களுக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்பு பட்டியலில் இருந்து தொழில்நுட்ப மற்றும் கட்டுமான துறைகள் நீக்கப்பட்டு உள்ளன.
அரசின் இந்த நடவடிக்கைக்கு தொழிற்சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தேர்தல் அச்சுறுத்தல் காரணமாக ஜனாதிபதி இத்தகைய முடிவை எடுத்துள்ளார் என தொழிலதிபர்கள் கருதுகிறார்கள்.
அமெரிக்காவிடம் இருந்து கனடா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்: ஹார்ப்பர்.
அமெரிக்காவில் கடன் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இந்த கடன் பிரச்சனை வராமல் தடுக்க அமெரிக்க நிலையில் இருந்து கனடா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு 14 லட்சம் கோடி டொலர் கடன் பிரச்சனை உள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் மிகவும் சிக்கலானது. அவர்கள் கடன் பிரச்சனைக்கு இன்னும் தீர்வு காண முடியவில்லை. இது ஆச்சரியம் அளிக்கவில்லை என ஹார்ப்பர் கூறியுள்ளார்.
வரவிருக்கும் ஆண்டுகளில் ஒட்டாவா சீரான நிதிநிலை அறிக்கைகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தும் என்றும் ஹார்ப்பர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் கடன் உச்சவரம்பு கெடு முடிய இன்னும் ஒரு வார காலமே உள்ளது. இருப்பினும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உறுதியான முடிவு எட்டப்படவில்லை.
கடன் பிரச்சனையை அமெரிக்கா தவிர்க்க முடியாவிட்டால் கனடாவிலும் தாக்கம் இருக்கும் என வணிக வட்ட மேஜை மாநாட்டில் நிதித்துறை அமைச்சர் பிளாகர்டி எச்சரித்து உள்ளார்.
அமெரிக்க நிதி நெருக்கடியால் வட்டிவிகிதம் உயரும். கனடா போன்ற நாடுகளுக்கு கிடைக்கும் அளவும் குறையும் என ஒண்டோரியாவில் பர்லிங்டனில் பிளாகர்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நோர்வே பயங்கரவாதியின் வீட்டிலிருந்த வெடிகுண்டுகள் மீட்பு.
நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் நிகழ்த்தப்பட்ட இரட்டைத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியின் பண்ணை வீட்டில் பல வெடிகுண்டுகளை பொலிசார் மீட்டு செயலிழக்கச் செய்துள்ளனர்.
கடந்த வாரம் ஓஸ்லோவில் நிகழ்ந்த மிக மோசமான குண்டுவெடிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த துப்பாக்கி தாக்குதலில் 76 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்துக்குக் காரணமான ஆண்டர்ஸ் பெரிங் பிரீவிக்கை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த பண்ணை வீட்டில் சோதனை நடத்திய போது அங்கு வெடிக்காமலிருந்த வெடிகுண்டுகளை பொலிசார் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்தனர். ஆனால் எவ்வளவு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன என்ற விவரத்தை பொலிசார் தெரிவிக்கவில்லை.
இவை அனைத்தையும் வேறிடத்துக்கு எடுத்துச் சென்று வெடிக்கச் செய்வதைவிடே அந்த வீட்டிலேயே தகுந்த பாதுகாப்புடன் வெடிக்கச் செய்ததாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் டிரைன் டைங்லாண்ட் தெரிவித்தார்.
பொலிஸ் விசாரணையின் போது இந்த தாக்குதல் சம்பவத்தை வெகு நாள்களுக்கு முன்பே திட்டமிட்டதாக ஆண்டர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக ஓஸ்லோவின் தெற்குப் பகுதியில் ஒரு பண்ணை வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு காய்கறிகள் பயிரிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் காய்கறி தோட்டத்துக்கு தேவையான ரசாயன உரங்களை வாங்கி அதை வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கடந்த மே மாதத்திலிருந்து இதுவரை 6 டன் உரம் வாங்கியுள்ளதாக உர நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூடு சம்பவங்களை தான் மேற்கொண்டதாக திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது ஒப்புக் கொண்டார். அவரை 2 மாதம் சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இஸ்லாமியர்களின் ஊடுருவலிலிருந்து நோர்வேயையும், ஐரோப்பிய நாடுகளையும் தான் காப்பாற்றியதாக நீதிமன்றத்தில் ஆண்டர்ஸ் தெரிவித்தார்.
அல்கொய்தா இயக்கத்தில் அமெரிக்க மற்றும் கனடிய இளைஞர்கள்.
அல்கொய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பிடம் 40 அமெரிக்கர்கள் பயிற்சி பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் அனைவரும் சோமாலியாவுக்கு சென்றுள்ளதாக வாஷிங்டனில் உள்ள உள்நாட்டு பாதுகாப்பு குழுவின் தலைவர் பீட்டர் கிங் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் உள்ள குடியரசுக் கட்சி பிரதிநிதியான பீட்டர் கிங் தனகு குழு மேற்கொண்ட சுயமான விசாரணை முடிவுகளை செவ்வாய்கிழமை வெளியிட்டார்.
அமெரிக்காவில் அடிப்படைவாத இஸ்லாமியர்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விசாரணை அறிக்கையின் மூன்றாவது தொகுப்பை அவர் வெளியிட்டார். அதில் 40 அமெரிக்கர்கள் பயங்கரவாத அமைப்புகளிடம் பயிற்சி பெற சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
ஆனால் பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகள் இதை உறுதி செய்யவில்லை. சோமாலிய கடற்கொள்ளை படையான அல்-ஷாகேப்பில் மிக அதிக எண்ணிக்கையில் அமெரிக்கர்கள் சேர்ந்துள்ளது கவலையளிக்கும் விஷயமாகும். ஆனால் 21 அமெரிக்கர்கள் சோமாலியாவுக்கு பயணம் மேற்கொண்டது தெரியவந்துள்ளது.
எத்தியோப்பிய வீரர்களை வெளியேற்றுவதற்காக இவர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இவர்களில் சில இளைஞர்கள் இறந்துவிட்டதாகவும் தெரிகிறது.
கடந்த சில ஆண்டுகளாக அல்-ஷாகேப் தீவிரவாத இயக்கம் மிகப் பெருமளவில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இக்குழுக்கள் மேற்கத்திய எதிர்ப்பு பயங்கரவாத அமைப்புகளுடன் இணைந்துள்ளன.
இஸ்லாமிய பழமைவாத அமைப்புகளால் 20 இளைஞர்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டதாகக் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. டொரண்டோவைச் சேர்ந்த சில சோமாலிய இளைஞர்கள் இப்போது இந்த இயக்கத்தில் சேர்ந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக கனடா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அல்-ஷாகேப் அமைப்பு இஸ்லாமிய பழமைவாதிகளால் பயங்கரவாத அமைப்பாக மிகுந்த வலுவுடன் விரிவுபடுத்தப்படுகிறது. இதில் அமெரிக்காவில் வாழும் இஸ்லாமியர்கள் சேர்ந்து வருகின்றனர். இது அமெரிக்காவுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று தெரிகிறது.
அல்-ஷாகேப் அமைப்பு இப்போது சோமாலியாவுக்கு மட்டும் அச்சுறுத்தலாக இருக்காது. இந்த அமைப்பில் அமெரிக்க ஜிகாதிக்கள் அதிக அளவில் சேர்ந்துள்ளனர். இந்த இயக்கம் யேமனில் செயல்படும் அல்கொய்தாவுடன் தொடர்புடையது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவில் கடத்தப்பட இருந்து 89 குழந்தைகள் பத்திரமாக மீட்பு.
சீனாவில் கடத்தப்பட இருந்த 89 குழந்தைகளை பொலிசார் மீட்டனர். இதில் ஆட்கடத்தல் தொழிலில் ஈடுபட்ட இரு கும்பல்களைச் சேர்ந்த 369 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தைத் திட்டம் அமலில் உள்ள சீனாவில் ஆட்கடத்தல் தொழில் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த பெப்பிரவரியில் ஆட்கடத்தல் தடுப்புப் படை உருவாக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இம்மாதம் பொலிசார் நடத்திய திடீர் சோதனையில் வியட்நாமில் இருந்து சீனாவின் குவாங்ஷி மற்றும் குவாங்டாங் மாகாணங்களில் விற்பதற்காகக் கடத்தி வரப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டன.
குழந்தைகளைக் கடத்தியவர்களில் பெரும்பாலோர் வியட்நாம் நாட்டவர். அதேபோல் மற்றொரு நடவடிக்கையிலும் குழந்தைகள் மீட்கப்பட்டன.
மொத்தமாக இரு நடவடிக்கைகளிலும் 89 குழந்தைகள் மீட்கப்பட்டன. இக்குழந்தைகள் அனைத்தும் 10 நாளில் இருந்து எட்டு மாதம் வரையிலான வயதுடையவை.
இந்த இருசம்பவத்திலும் ஆட்கடத்தல் தொழிலில் ஈடுபட்ட இரு கும்பல்களைச் சேர்ந்த 369 பேர் கைது செய்யப்பட்டனர்.
தலிபான்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் காந்தஹர் நகர மேயர் பலி.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தற்‌கொலைப்படை தாக்குதலில் மாநகராட்சி மேயர் ஒருவர் கொல்லப்பட்டார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள தெற்கு மாகாணங்களில் மிகப்பெரிய நகரங்களுள் காந்தஹர் நகரமும் ஒன்று இந்நகரி்ன் மேயராக குலாம் ‌ஹைதர் ஹமீதி(65) உள்ளார்.
இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவராக இருந்த போதிலும் அதிபர் ஹமீத் கர்சாயின் நம்பிக்கைக்குரிய நெருங்கிய உதவியாளர் ஆவார். இந்நிலையில் நேற்று காந்தஹர் பகுதிகளில் சட்டவிரோதமாக அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த பகுதிகளை பார்வையிட சென்றார்.
அப்பகுதிகளில் கட்டப்பட்டிருந்த கட்டடங்களை இடித்து தள்ளும்படி மாநகராட்சி உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சம்பவ பகுதிகளை பார்வையிட்டு கொண்டிருந்த போது தலிபான்கள் திடீரென மேயர் ஹமீதி ‌மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் மேயர் குலாம் ஹெய்தர் ஹமீதி பலியானார்.
மேலும் இரு குழந்தைகள் இந்த தாக்குதலில் பலியானதாக காந்தஹர் நகர ‌காவல்துறை தலைவர் அப்துல் ரஸாக் செய்தியாளர்களிடம் கூறினார். ஆப்கானிஸ்தானில் கடந்த இருவாரங்களுக்கு முன்புதான் அமெரிக்கப்படைகள் விலக்கிக் கொள்ள முடிவு செய்தது.
அன்றிலிருந்து அதிபர் கர்சாயின் சகோதரர் அகமது கர்சாய்(ஜூலை 12) மற்றும் கர்சாயின் அந்தரங்க ஆலோசகர் முகமது கான்(ஜூலை 17) என இரு முக்கிய தலைவர்கள் தற்கொலைப்படை தாக்குதலுக்கு பலியாயினர்.
தற்போது காந்தஹர் மேயர் கொல்லப்பட்டுள்ளார். இரண்டு வாரங்களில் மூன்று தலைவர்கள் பலியானது கர்சாயின் அரசியல் நடவடிக்கைக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF