Tuesday, July 12, 2011

இன்றைய செய்திகள்.

தேர்தலுக்கான அரசின் வியூகம்? ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ யாழ். செல்கிறார்.

எதிர்வரும் 23ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தோ்தலில் ஆளும் கட்சி வெற்றிபெற வைக்கும் முனைப்புடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷ நாளை மறுதினம் யாழ்ப்பாணம் விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதியின் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி ஜந்து நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அபிவிருத்தித் திட்டம் பற்றி ஆராய்வார் என அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் தேர்தல் சூடுபிடித்த நிலையில் ஆளும் கட்சி அமைச்சர்கள் 13 பேர் தமது தேர்தல் பிரச்சாரங்களை யாழில் மேற்கொண்டுவரும் நிலையிலேயே ஜனாதிபதியின் விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்விடயம் தொடர்பாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரை தொடர்புகொண்டு கேட்ட போது யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் யாழ். மக்களையும் அரச உத்தியோகத்தர்களையும் ஜனாதிபதி சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.
இம்முறை ஜனாதிபதியின் யாழ்.விஜயத்தின் போது சிங்கள தமிழ் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் கோப்பாய் நாவலர் பாடசாலையில் கட்டப்பட்ட கட்டடத்தொகுதியையும், பருத்துத்துறையில் கட்டடம் ஒன்றையும் திறந்து வைப்பார் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
யாழ் விஜயத்தை முடித்துக்கொண்டு 20ம் திகதி கிளிநொச்சி செல்லும் ஜனாதிபதி அங்கு 325 மில்லியன் செலவில் அமைக்கப்படவிருக்கும் சர்வதேச தரத்திலான விளையாட்டரங்குக்கான அடிக்கல்லை நாட்டி வைப்பார் என விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே நேற்றுக்காலை கிளிநொச்சி அரச செயலகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்.
குமார் சங்கக்காரவின் சொற்பொழிவிற்கு பாதுகாப்புச் செயலாளர் பாராட்டு.
 இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார அண்மையில் பிரிட்டனில் ஆற்றிய சொற்பொழிவிற்கு, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பாராட்டு வெளியிட்டுள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கப் படையினர் நடத்திய போராட்டத்தை குமார் சங்கக்கார பாராட்டியுள்ளதாக, கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


போர் வெற்றி குறித்தோ அல்லது படைவீரர்கள் குறித்தோ சர்வதேச அரங்களில் எந்தவொரு விளையாட்டு வீரரும் சொற்பொழிவாற்றியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும், குமார் சங்கக்கார படைவீரர்களின் ஆற்றலை பாராட்டி சொற்பொழிவு ஆற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.2011 கொலின் கொட்ரி நினைவு சொற்பொழிவில் குமார் சங்கக்கார அண்மையில் உரையாற்றினார்.


இலங்கை கிரிக்கட் துறையில் இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகள் தொடர்பிலும் குமார் சங்கக்கார கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்தக் கருத்துக்கள் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.சங்கக்காரவின் உரை தொடர்பில் கவனம் செலுத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சர்ச்சைக்குரிய கருத்தால் தூதரக பாதுகாப்பு ஆலோசகரை அமெரிக்கா திருப்பி அழைத்தது.

இலங்கை இராணுவம் நடத்திய போர்க்கருத்தரங்கில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்த அமெரிக்கத் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் லெப். கேணல் லோறன்ஸ் ஸ்மித் நியூயோர்க்கிற்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். 
2008ம் ஆண்டு ஜூன் மாதம் சிறிலங்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்ற லேப். கேணல் லோறன்ஸ் ஸ்மித், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் கொழும்பில் பணியாற்றியவர்.
அண்மையில் சிறிலங்கா இராணுவம் நடத்திய போர்க்கருத்தரங்கில் பங்கேற்ற அவர், போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைய முன்வந்தனர் என்பதில் சந்தேகம் உள்ளதாக கூறியிருந்தார்.
இதையடுத்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் லெப். கேணல் ஸ்மித்தின் கருத்து தனிப்பட்டது என்றும் , அது அமெரிக்காவின் அதிகாரபூர்வ கருத்தல்ல என்றும் கூறியிருந்தது.
இந்த நிலையிலேயே அவர் அமெரிக்காவுக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக லெப். கேணல் பற்றிக் ஜே.ஸ்கூலர் அமெரிக்கத் தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் லெப். கேணல் பற்றிக் ஜே.ஸ்கூலரை நேற்று முன்தினம் மாலை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு பிரதி அமெரிக்கத் தூதுவர் வலேரி சி.பௌலர் அம்மையர் அறிமுகப்படுத்தி வைத்தார்.
இந்தச் சந்திப்பில் பங்கேற்ற லெப். கேணல் லோறன்ஸ் ஸ்மித் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் விடைபெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரத்தினபுரி தொடர் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் படைவீரர்கள் விளக்கமறியலில்.

இரத்தினபுரி, கஹாவத்தை தொடர் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் படைவீரர்களை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
ஒபாதகே தனஞ்சய மற்றும் ரணசிங்க ஆராச்சிகே சித்ரானந்த ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று வயோதிப பெண்களை படுகொலை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சித்ரானந்த என்ற முன்னாள் படைவீரர் 85 வயதான தனது தாயை படுகொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது,
தனஞ்சய என்ற மற்றைய படைவீரரை மனநல மருத்தவரிடம் காண்பிப்பதற்கு அனுமதி அளிக்குமாறு இரகசிய காவல்துறையினர் நீதிமன்றில் கோரியுள்ளனர்.
கஹாவத்தை பிரதேசத்தில் வயோதிப பெண்கள் தொடர்ச்சியாக படுகொலை செய்யப்பட்டு வந்த சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியிருந்தது.
இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்று அவுஸ்திரேலிய செனட்டில் நிறைவேற்றம்.

போர்க் குற்றங்களுக்கு இலங்கை அரசு பொறுப்புக் கூறவேண்டும். விசாரணைக் குழுவை நியமித்து போர்க்குற்றங்கள் பற்றிய உண்மை நிலையை ஐ.நா. தெளிவுபடுத்த வேண்டும் என்றுஅவுஸ்திரேலிய செனட்சபை வலியுறுத்தியுள்ளது.
அந்த நாட்டின் செனட்சபையின் உறுப்பினரான பொப் பிறவுண் இது தொடர்பான பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்திருந்தார்.
இந்தப் பிரேரணைக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததால் ஏகமனதாக அது நிறைவேறியது. வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பாக செனட்சபையில் பிரேரணை கொண்டு வரப்படுவதில்லை.
வழமைக்குமாறாக இந்தப் பிரேரணை கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் வெளிவிவகாரஅமைச்சர் கெவின் ரூட் கவனம் எடுக்க வேண்டும் என்று பொப் பிறவுண் கடித மூலம் அவரைக் கேட்டுள்ளார்.
ஐ.நா.வில் உள்ள தமது அரசின் சார்பிலான செயலகம் ஊடாகத்தான் இலங்கையின் போர்க்குற்ற விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் மீள் விசாரணை செய்யுமாறு கோரவிருப்பதாக கெவின் ரூட் தெரிவித்திருந்தார்.
பொது மக்களை கொலை செய்த பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்: எகிப்து பிரதமர் உத்தரவு.
எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக மக்கள் போராட்டம் நடந்தது. 17 நாட்கள் நடந்த இந்த போராட்டத்துக்கு பணிந்து முபாரக் பதவி விலகினார்.
போராட்டத்தின் போது ஏராளமான பொதுமக்கள் பொலிசார் மற்றும் ராணுவத்தினரால் கொன்று குவிக்கப்பட்டனர். தற்போது ராணுவம் வசம் ஆட்சி அதிகாரம் உள்ளது.
எஸ்சாம் ஷராப் பிரதமராக உள்ளார். இந்த நிலையில் அரசியல் சட்டத்தில் மறு சீரமைப்பு செய்ய வலியுறுத்தி கெய்ரோவில் உள்ள தாகீர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர்.
இதனால் மீண்டும் கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவானது. அதை தொடர்ந்து பிரதமர் எஸ்சார் ஷராப் தொலைக்காட்சியில் பேசினார். அப்போது போராட்டத்தின் போது பொது மக்களை கொன்று குவித்த பொலிஸ் அதிகாரிகளை பணி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் குறைந்த பட்ச கூலி நிர்ணயம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட மற்ற பிரச்சினைகளும் விரைவில் தீர்க்கப்படும் என உறுதி அளித்தார்.இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் பர்தாவுக்கு தடை: முஸ்லீம்கள் கடும் கண்டனம்.
முஸ்லீம் பெண்கள் பாரம்பரியம் மிக்க கறுப்பு நிற பர்தாவை அணிந்து வெளியில் வருகிறார்கள்.
முகத்தை மறைத்து வரும் அவர்களது நடவடிக்கைக்கு பிரான்ஸ் முதலில் எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டில் பொது இடங்களில் பர்தா அணியவும் தடைவிதித்து சட்டம் இயற்றியது.
பிரான்சை தொடர்ந்து பர்தாவுக்கு தடை போடும் சட்டம் அவுஸ்திரேலியாவில் அறிமுகம் ஆகிறது. பொலிஸ்காரர்கள் கூறும் பட்சத்தில் பர்தா அணிந்த பெண்கள் தங்கள் முகத்தை மூடி இருக்கும் துணியை நீக்கி யார் என்பதை அடையாளம் காட்ட வேண்டும்.
அப்படி மறுக்கும் பட்சத்தில் சட்டத்தை மீறும் நபர்களுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. மிக அபரிதமான அபராதமும் விதிக்கப்படும். சர்ச்சைக்குரிய இந்தச் சட்டம் அவுஸ்திரேலியாவில் அமல் ஆகிறது.
சட்டத்தை மீறுபவர்களுக்கு 3700 பவுண்ட் அல்லது 5500 அவுஸ்திரேலிய டொலர் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. முதலில் இந்த சட்டம் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்திலும் பின்னர் சிட்னியிலும் அறிமுகம் ஆகும்.
அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் சட்டம் அமலுக்கு வரும். இந்த சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக மாநில நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் மாதம் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
அவுஸ்திரேலியாவின் புதிய சட்டத்திற்கு மக்கள் சுதந்திர உரிமையாளர்களும் முஸ்லீம்களும் கடுமையாக கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் 2 கோடியே 30 லட்சம் மக்கள் உள்ளனர். இவர்களில் நான்கு லட்சம் அவுஸ்திரேலியர்கள் முஸ்லீம்கள் ஆவார்கள். இரண்டு ஆயிரத்திற்கும் குறைவான பெண்கள் தங்கள் முகத்தை மூடும் பர்தா அணிகிறார்கள்.
அல்ஜவாகிரியை பிடிக்க நிச்சயம் ஒத்துழைப்பு அளிப்போம்: பாகிஸ்தான்.
அமெரிக்காவின் புதிய ராணுவ மந்திரியாக பொறுப்பேற்றுள்ள லியோன் பனேட்டா நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தான் சென்றார்.
காபூலில் பேட்டி அளித்த அவர் அல்கொய்தா தலைவர் அஸ்மான் அல்ஜவாகிரி பாகிஸ்தானின் வடகிழக்கில் உள்ள மலைப்பகுதியில் பதுங்கியுள்ளார்.
பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு அல்கொய்தா இயக்க தலைவர்களின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அல்கொய்தாவை அழிப்பதே எங்கள் லட்சியம் என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே தீவிரவாதிகளை ஒழிப்பதில் பாகிஸ்தான் ஒத்துழைக்கவில்லை என கூறி ரூ.4 ஆயிரம் கோடி நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து அல்கொய்தா தலைவர் ஜவாகிரியை பிடிக்க முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் ஜவாகிரி பற்றிய அமெரிக்க உளவுத்துறையின் தகவல்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டால் நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும்.
அல்கொய்தா தீவிரவாதிகளின் மீது ஏற்கனவே பாகிஸ்தான் ராணுவம் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏனெனில் அவர்கள் எங்கள் நாட்டுக்கும், மக்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாத இயக்கத்தின் தலைவர்கள் பலர் வேட்டையாடப்பட்டுள்ளனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஏழை குழந்தைகளை சந்தித்த வில்லியம் - கேத்.
கனடா சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - கேத் ஜோடி அமெரிக்கா சென்றது.
சுற்றுலாத் தளங்களுக்கு மட்டும் செல்லாமல் தங்களின் அறக்கட்டளை மூலம் உதவி செய்யும் நோக்கத்தில் சில பகுதிகளை தேர்ந்தெடுத்து அவர்கள் சுற்றிப் பார்த்தனர்.
கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்கிட் ரோ என்ற பகுதிக்கு அவர்கள் சென்றனர். அங்கு ஏழைகள் பலர் வீடு இல்லாமல் தெரு ஓரங்களில் கூடாரங்கள் அமைத்து வசிக்கின்றனர்.

நிதி நெருக்கடி ஏற்பட்ட போது இங்கு வசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது. இவர்களுக்கு நிரந்தர இருப்பிடம் அமைத்து தரும் முயற்சியில் அமெரிக்க அரசு மற்றும் தொண்டு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.
ஆனாலும் தெரு ஓரத்தில் குடியிருப்பவர்கள் முற்றிலும் ஒழிந்த பாடில்லை. இப்பகுதியை வில்லியம், கேத் ஜோடி சுற்றிப் பார்த்தனர். ஸ்கிட் ரோ பகுதி குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட கலை மையத்துக்கும் சென்றனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பிரிட்டிஷ் பிலிம் அகாடமிக்கு சென்றனர். ஹாலிவுட் பிரபலங்கள் பலரை சந்தித்து பேசினர். சோனி ஸ்டுடியோவில் அமெரிக்க முன்னாள் ராணுவத்தினரின் குடும்பத்தினருக்காக நடந்த வேலைவாயப்பு நிகழ்ச்சியையும் வில்லியம் தம்பதியினர் பார்வையிட்டனர்.
பாகிஸ்தானுக்கு 80 கோடி டொலர் நிதியுதவி: அமெரிக்கா நிறுத்தியது.
தீவிரவாதிகளால் பரிதவிக்கும் பாகிஸ்தானில் அமைதி நிலையை ஏற்படுத்தவும் தீவிரவாதத்தை ஒடுக்கவும் அமெரிக்கா உதவி வருகிறது.
கடந்த மே மாதம் 2ம் திகதி அல்கொய்தா தீவிரவாத தலைவர் பின்லேடன் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு அருகே உள்ள அபோதாபாத்தில் கொல்லப்பட்டார்.
தலைநகரில் இருந்து 30 மைல் தொலைவில் பின்லேடன் பல ஆண்டுகளாக பதுங்கி இருப்பது பாகிஸ்தான் அரசுக்கு தெரியாதா என அமெரிக்க சந்தேகம் கொண்டு உள்ளது.
பின்லேடனை அமெரிக்க கமாண்டோக்கள் கொன்ற பின்னர் இருநாடுகள் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் 80 கோடி டொலர் ராணுவ உதவியை அமெரிக்க நிறுத்தி வைத்து உள்ளது.
பாகிஸ்தானுக்கு வருடத்திற்கு அமெரிக்கா அளிக்கும் நிதி உதவியில் மூன்றில் ஒரு பங்கு இதுவாகும். இதுகுறித்து அமெரிக்க ஆயுதப்படை தலைவர் பில் டாலி கூறுகையில்,"பாகிஸ்தான் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. அதன் காரணமாகவே இந்த நிதி உதவியை நிறுத்தி வைத்துள்ளோம்" என்றார்.
தீவிரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கு பாகிஸ்தான் முக்கியக் கூட்டாளியாகவும் இருந்தது என அவர் தெரிவித்தார். தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கையை பாகிஸ்தான் மேற்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா விரும்புகிறது.
தமது ராணுவ பயிற்சியாளர்களை வெளியேற்றியதாலும் ஆத்திரம் அடைந்து அமெரிக்கா தற்போது ராணுவ உதவியை நிறுத்தி வைத்து உள்ளது.
பாகிஸ்தான் அரசின் வேண்டுகோளை தொடர்ந்து பிரிட்டிஷ் ராணுவ பயிற்சியாளர்களும் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இருந்து கடந்த மாதம் வெளியேறினர்.
ரஷ்யாவின் வோல்கா ஏரியில் சுற்றுலா படகு கவிழ்ந்தது: 100 பயணிகள் மரணம்.
ரஷ்யாவின் வோல்கா ஏரியில் சுற்றுலா படகு கவிழ்ந்தது. அந்த படகில் 100க்கும் மேற்பட்ட நபர்கள் பயணம் செய்தனர். அவர்கள் மரணம் அடைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ரஷ்யாவின் உலக புகழ்பெற்ற வோல்கா ஏரியில் இரட்டை அடுக்கு கொண்ட சுற்றுலா படகு நேற்று கவிழ்ந்தது. அந்த படகில் மொத்தம் 180 பயணிகள் இருந்தனர். கடுமையான புயல் காற்று வீசியதில் அந்த படகு தண்ணீரில் தடுமாறி கவிழ்ந்தது.
படகு கவிழும் போது இரண்டு பயணிகள் மட்டுமே நேற்று உயிர் தப்பினர். இதர நபர்களை காணவில்லை. 20 அடி ஆழத்தில் படகு விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து பழைய படகுகள் நிலைமை குறித்து கேள்வி எழுந்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக 2 நிமிடத்தில் படகு தண்ணீரில் மூழ்கியது. இந்த எதிர்பாராத விபத்தில் சிக்கிய பயணிகள் எதையாவது பற்றிக்கொண்டு உயிர் பிழைக்க போராடினர். படகில் ஏராளமான பெண்களும், குழந்தைகளும் இருந்தார்கள்.
அவர்களது நிலை என்ன என்பது தெரியவில்லை. விபத்தில் சிக்கிய படகின் பெயர் பல்காரியா என்பதாகும். மழை மற்றும் பயங்கர காற்று வீசிய போது படகு விபத்தில் சிக்கியதாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கூறினர்.
விபத்து இடத்திற்கு அவசர நிலை குழுவினர் விரைந்தனர். அந்த குழுவின் ஒரு செய்தி தொடர்பாளர் கூறுகையில்,"தண்ணீரில் மூழ்கியவர்கள் உயிருடன் இருப்பது சந்தேகமாக உள்ளது" என்றார்.
படகில் உயிர் பிழைத்தவர்கள் அருகில் உள்ள காசன் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுவரை 5 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. உயிரிழப்பு எண்ணிக்கை 100க்கும் அதிகமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.


ஐந்து வயது குழந்தைக்கும் உடற்பயிற்சி அவசியம்: நிபுணர்கள் வலியுறுத்தல்.
ஐந்து வயது குழந்தைக்கும் உடற்பயிற்சி அவசியம் என பிரிட்டன் அரசு சுகாதாரத்துறை நிபுணர்கள் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
குழந்தைகள் தினமும் 3 மணி நேரம் சுறுசுறுப்பாக ஓடி ஆடி விளையாட வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். பிரிட்டனில் குழந்தைகள் போதிய பயிற்சி மேற்கொள்வது இல்லை.
இதனால் உடல் பருமன் பிரச்சினை ஏற்படுகிறது. அதே போன்று மூளை சார்ந்த செயல்பாட்டிலும் மந்த நிலை காணப்படுகிறது. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளில் உள்ள தலைமை மருத்துவ அதிகாரிகள் கூடி குழந்தைகள் உடற்பயிற்சி குறித்த புதிய முடிவுக்கு வந்துள்ளனர்.
குழந்தை பிறந்தது முதல் சுறுசுறுப்புடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். இங்கிலாந்து தலைமை மருத்துவ அதிகாரி டேம் சலி டேவிஸ் கூறுகையில்,"குழந்தைகள் சுறுசுறுப்புடன் இருப்பதை அனுமதிக்க வேண்டும்" என அறிவுறுத்தினார்.
குழந்தைகள் தரையில் படுத்து இருக்கும் போது விளையாடவும் அனுமதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தினமும் 3 மணி நேரம் தங்கள் குழந்தைகள் துடிப்புடன் இருக்க வேண்டும் என்பதை பெற்றோர் அறிவதில்லை என்றும் அவர் கூறுகிறார்.
பிரிட்டன் பள்ளிகளில் தற்போது தினமும் 2 மணி நேரம் முதல் இரண்டரை மணி நேரம் வரை குழந்தைகள் விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள். சிறு குழந்தைகள் ஓடி விளையாடுவதை தவிர்த்து நீண்ட நேரம் தொலைக்காட்சி முன்பாக அமரக்கூடாது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
இப்படி எந்த அசைவும் இல்லாமல் பல மணி நேரம் நிகழ்ச்சிகளை பார்ப்பதால் வளரும் காலத்தில் குழந்தைகளுக்கு பிரச்சினைகள் வருகின்றன என பேராசிரியர் டெரன்ஸ் ஸ்டீபன்சன் தெரிவித்தார்.
சவுதி அரேபியாவுக்கு 200 பீரங்கிகள் சப்ளை: அரசு உறுதி.
மத்திய கிழக்கு பகுதியில் ஜனநாயக போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த போராட்டம் நடைபெறும் தருணத்தில் சவுதி அரேபியாவுக்கு லியோ பார்டு பீரங்கிகளை ஜேர்மனி அரசு அனுமதித்து உள்ளது.
மத்திய கிழக்கு பகுதியில் ஜேர்மனி வன்முறையை தூண்டுகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த பீரங்கிகள் ஒப்பந்தம் மேற்கொண்டிருக்க கூடாது என்றும் அவை வலியுறுத்தின.
இதுகுறித்து ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் ஹான்ஸ் பீட்டர் பிரடெரிக் கூறுகையில்,"தீவிரவாதத்திற்கு எதிராக போராடும் நாடாக சவுதி அரேபியா உள்ளது. இந்த வரிசையில் ஜேர்மனியும் முக்கிய கூட்டாளியாகவும் உள்ளது. எனவே இந்த பீரங்கி ஒப்பந்தம் சரியானது தான்" என்று கூறினார்.
முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் வோல்கர் ருகே கூறுகையில்,"இந்த பீரங்கி ஒப்பந்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்" என்றார். அவ்வாறு செய்யாத பட்சத்தில் வரலாற்றின் தவறான பக்கத்தை மீண்டும் பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும் என எச்சரித்தார்.
சவுதி அரேபியாவுக்கு பீரங்கிகள் விற்பனை செய்வதை ஜேர்மனியின் முக்கிய எதிர்கட்சியான சோசியல் டெமாக்ரேட்ஸ் கட்சியினர் துவக்கம் முதல் கடுமையாக எதிர்த்து வருகிறது.
ஸ்டிராஸ்கான் மீதான பாலியல் வழக்கு: அரசு சதி செய்ததாக எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு.
கடந்த மே மாதம் 14ஆம் திகதி நியூயோர்க்கில் உள்ள சோபிடல் ஹோட்டல் பெண் ஊழியரிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு ஸ்டிராஸ்கான் மீது இருந்தது.
இந்த ஹோட்டல் பிரான்சின் ஏகர் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். அந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களில் அந்த ஹோட்டலின் தலைமை பாதுகாப்பு அதிகாரி பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி அரண்மனைக்கு தொலைபேசியில் பேசினார்.
இந்த பாலியல் வழக்கில் டொமினிக்கை சிக்க வைக்க பிரான்ஸ் அரசு சதி செய்துள்ளதா என முக்கிய எதிர்கட்சியான சோசலிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. வருகிற 2012ஆம் ஆண்டு பிரான்சில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் சர்கோசி மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து டொமினிக் போட்டியிட இருந்தார். முன்னாள் சர்வதேச நிதியத்தின் தலைவர் டொமினிக் ஜனாதிபதி தேர்தலில் அதிக வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தது.
இந்த நிலையில் அவர் மீது இந்த பாலியல் வழக்கு போடப்பட்டு உள்ளது. வழக்கு விசாரணை காரணமாக டொமினிக் ஸ்டிராஸ்கான் தேர்தலில் போட்டியிடுவது கேள்விக்குறியாகி விட்டது.
இந்த நிலையில் சர்கோசி எந்த வித சவாலும் இல்லாமல் மீண்டும் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு உருவாகி உள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி அரண்மனையில் இருந்தே சோபிடல் ஹோட்டல் தலைமை பாதுகாப்பு அதிகாரி ரீனே - ஜார்ஜஸ் குயரி தொலைபேசியில் பேசி உள்ளார். 
சர்கோசிக்கும் ஏகர் நிறுவனத்திற்கும் தொடர்பு உள்ளது என்ற சந்தேகமும் உள்ளது. நியூயோர்க் பொலிஸ் தலைவருக்கும் சர்கோசிக்கும் தொடர்பு இருப்பதாக பிரான்ஸ் சோசலிஸ்ட் கட்சியின் பாரிஸ் பிராந்திய துணைத்தலைவர் மிச்லே சாபன் குற்றம் சாட்டி உள்ளார். அரசியல் சூழ்ச்சியில் டொமினிக்கை வீழ்த்தி உள்ளனர் என்றும் அவர் கூறினார்.
சீனாவில் அமைக்கப்பட்ட உலகின் மிக நீளமான பாலத்தால் ஆபத்து: புதிய சர்ச்சை.
சீனாவில் குயிங்டவ் மற்றும் ஹூவாங்டவ் தீபகற்பத்தை இணைக்கும் வகையில் கடலில் கட்டப்பட்ட உலகிலேயே மிக நீளமான பாலம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.
சீனாவில் கடலில் கட்டப்பட்ட இப்பாலம் 42.5 கிலோ மீற்றர் நீளமானது. பாலத்தின் இணைப்பு பகுதிகளில் விரிசல் இருப்பதாக தற்போது சீனப் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 30ம் திகதி இப்பாலம் திறக்கப்பட்டதில் இருந்து தினமும் 18 ஆயிரம் வாகனங்கள் பாலத்தில் செல்கின்றன. 10 ஆயிரத்து 580 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இப்பாலம் நிலநடுக்கம் உட்பட பேரழிவுகளை தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
பாலத்தின் இணைப்புகளில் போடப்பட்டுள்ள போல்ட்கள், ஒயர் இணைப்பிற்காக அவ்வப்போது கழற்றப்பட்டு பின்னர் மாட்டப்படும். இதில் ஆபத்து எதுவும் இல்லை என்று இப்பாலம் கட்ட நிதியுதவி வழங்கியுள்ள உள்கட்டமைப்பு நிறுவனம் பதில் அளித்துள்ளது. இப்பாலம் கட்ட நான்கரை ஆண்டுகள் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தனி நாடாக உருவெடுக்க பாலஸ்தீனம் முயற்சி: கனடா எதிர்ப்பு.
ஐக்கிய நாடுகள் சபையில் தனி நாடு அங்கீகாரம் பெற பாலஸ்தீனம் முயற்சிக்கிறது. இந்த நடவடிக்கையை கனடா கடுமையாக எதிர்க்கிறது.
பாலஸ்தீனம் தனி நாடு அந்தஸ்தை பெறுவதில் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் விருப்பம் இல்லை. பாலஸ்தீன நிர்வாகம் மேற்கு கரையின் பெரும்பாலான பகுதியை நிர்வகித்து வருகிறது. அந்த நிர்வாகம் தனி நாடு கோரிக்கை தொடர்பாக கடந்த மாதம் பிரசாரத்தை துவக்கி உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறும் வாக்கெடுப்பில் தனி நாடு அந்தஸ்தில் வெற்றி பெற பாலஸ்தீன தலைவர்கள் ஐ.நா உறுப்பினர் நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
தனி பாலஸ்தீன நாடு அங்கீகாரம் பெறுவதற்கு கனடாவின் ஆதரவை பெற கடுமையாக வலியுறுத்துவோம் என ஒட்டாவில் உள்ள பாலஸ்தீன தூதர் தெரிவித்தார்.
கனடா அங்கீகார நடவடிக்கையில் பொதுவான நிலை கடைபிடிக்க கேட்டுக்கொள்வோம் என பாலஸ்தீனக்குழுவின் தலைவர் லிண்டா சோபே அலி கூறினார். கடந்த 1967ஆம் ஆண்டுக்கு முந்தைய இஸ்ரேலின் எல்லை நிலையை கனடா அங்கீகரிக்க வலியுறுத்துவோம் என அவர் தெரிவித்தார்.
இது குறித்து கனடா வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஜான்பெய்ர்ட் கூறுகையில்,"தமது அரசின் நீண்ட கால நிலைப்பாட்டில் மாறுதல் இல்லை" என்றார். ஐக்கிய நாடுகள் சபையில் 192 உறுப்பினர் நாடுகள் உள்ளன.
இந்த நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவை பாலஸ்தீனம் பெற்றால் தனி நாடு அந்தஸ்து பெறும். அதன் படி 128 உறுப்பினர் நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.
ஆப்கனில் கடத்தப்பட்ட நபர்கள் தலை துண்டிக்கப்பட்டு கொலை.
ஆப்கானிஸ்தானில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் கடத்தப்பட்ட கண்ணி வெடி நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஏழு பேர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பராக் மாகாணத்தில் நேட்டோ படைகளின் சார்பில் 30 பேர் கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.
முதலில் இவர்களை தலிபான்கள் கடத்திச் சென்றதாக கூறப்பட்டது. பின்னர் கடத்தியவர்கள் கொள்ளையர்கள் என தெரிந்தது. கடத்தப்பட்டவர்களில் ஏழு பேரின் தலை துண்டிக்கப்பட்ட உடல்களை பொலிசார் நேற்று கண்டெடுத்தனர்.
இவர்கள் ஆப்கன் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்களின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை. இதற்கிடையே காந்தகாரின் தெற்கு பகுதியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் நேட்டோ வீரர்கள் மூன்று பேரும், பொலிசார் மூன்று பேரும் கொல்லப்பட்டனர்.
ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: சிறிய அளவில் சுனாமியும் தாக்கியது.
ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதோடு சிறிய அளவில் சுனாமியும் தாக்கியது.
கடந்த மார்ச் 11ம் திகதி ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு அதைத் தொடர்ந்து சுனாமி தாக்கியது. இதனால் நிகழ்ந்த அழிவில் இருந்து அந்நாடு கொஞ்சம் கொஞ்மாக மீண்டும் வரும் வேளையில் நேற்று மீண்டும் அதே பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்க அதிர்வுகள் ஐவேட், மியாகி மற்றும் புகுஷிமா மாகாணங்களில் உணரப்பட்டன. ஐவேட் மாகாணத்தை ஒட்டி கடலில் சிறிய அளவில் சுனாமி அலைகள் உருவாகி தாக்கின. அதனால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
புகுஷிமா அணுமின் நிலைய ஊழியர்கள் பாதுகாப்புக் கருதி வெளியேற்றப்பட்டனர். சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் கடற்கரையோரப் பகுதிகளில் வசித்தவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF