Thursday, July 14, 2011

இன்றைய செய்திகள்.

கிரிக்கெட் விளையாட்டுத்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது : ரணில் விக்ரமசிங்க குற்றச்சாட்டு.

கிரிக்கெட் விளையாட்டுத்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்  விளையாட்டை மேம்படுத்தவதற்கு நாடாளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டுத்துறை சார் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பணத்திற்காக சில தரப்பினர் விளையாட்டுத்துறையை சீர் குலைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு காண வேண்டிய கட்டாய நிலைக்குள் இலங்கை : இந்தியா.

இனப்பிரச்சினைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு ஒன்றைக்காண வேண்டிய கட்டாய நிலைக்குள் இலங்கை அரசு தள்ளப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தின் பிரதித் தூதுவர் மிஸ்ரா யாழ். சமாதானத்துக்கும் நல்லெண்ணத்துக்குமான பிரஜைகள் குழுவை யாழ். ஆயர் இல்லத்தில் நேற்று மாலை சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கை அரசு நிரந்தரத் தீர்வு ஒன்றை காண வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு நியாயமானதும் நீதியானதுமான அரசியல் தீர்வு கிடைக்க இந்தியா தனது முழுப் பங்கையும் வழங்கும் என மிஸ்ரா கூறியுள்ளார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக இந்தியாவின் மிக மூத்த இராஜதந்திரியான பார்த்தசாரதி முதல் இன்றைய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வரை பலரும் வந்து போகின்றனர். உடன்படிக்கைகளையும் கூட்டறிக்கைகளையும் வெளியிடுகின்றனர். அவையெல்லாம் எழுத்திலும் ஊடகங்களிலும் மட்டுமே காணப்படுகின்றன. எவையுமே செயல் உருப்பெறவில்லை. இந்த நிலையில் இந்தியா இப்போதாவது தனது உணர்வுபூர்வமான பங்களிப்பை வழங்கி நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என சமாதானத்துக்கான பிரஜைகள் குழுவினர் கோரிக்கை ஒன்றை முன்வைத்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட பிரதித் தூதுவர், 'கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும். அவற்றை மறப்போம். 1987ஆம்ஆண்டு முதல் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தவறுகளாலும் ஒரு சாராரது விருப்பம் இன்மையினாலும் அவை வெற்றி பெறவில்லை. இவை நடந்து முடிந்தவை. இன்று நிலை அப்படியல்ல.நிரந்தரமான தீர்வுத் திட்டம் ஒன்றைக் காணவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுக்களை நடத்துகின்றன. இந்தப் பேச்சுக்கள் நம்பகத் தன்மை உடையதாகக் காணப்படுகின்றன. மனம் விட்டுப் பேசுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசு நாடாளுமன்ற தெரிவுக்குழு யோசனை ஒன்றையும் முன்வைத்துள்ள போதும் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற கட்டாயம் அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வு என்பது வடக்கு, கிழக்கு மக்களுக்கு கண்துடைப்பாக அமையாது, இலங்கையில் உள்ள எல்லாத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உணர்வு பூர்வமானதும் நியாயமானதுமான தீர்வாக அமையவேண்டும். இதற்கு இந்தியா முழுப் பங்களிப்பையும் வழங்கும் எனவும் பிரதித் தூதுவர் கூறியுள்ளார்.
சென்னை செல்லும் ஹிலாரி; இலங்கை குறித்து பேசுவாரா?

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் எதிர்வரும் 19ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
தமிழ் நாட்டுக்கும் செல்லவுள்ள அவர் தமிழ்நாட்டில் தங்கியிருக்கும்போது அரசாங்கத்துடன் இலங்கை உட்பட வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பான கலந்துரையாடல்களை நடத்தமாட்டாரென இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
இவரது விஜயம் அரசு ரீதியாக அமையாதென நிகழ்ச்சி நிரலில் தெரிவிக்கப்படுகிறது. சிவில் சமூக மற்றும் அபிவிருத்தி விவகாரம் தொடர்பான கொள்கையாளர்களையும் அரசசார்பற்ற அமைப்புக்களையும் அமெரிக்கக் கம்பனிகளின் பிரதிநிதிகளையும் வர்த்தக குழுவினரையும் சந்தித்து அவர் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
'வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பான அனைத்து கலந்துரையாடல்களும் புதுடில்லியில் நடைபெறும். வெளிநாட்டு அமைச்சர்களுடனான சந்திப்பில் அயல் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும்' இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுடில்லிக்கும் வோஷிங்டனுக்கும் இடையில் இலங்கை விவகாரம் குறித்த வழமையான கலந்துரையாடல் நடைபெறும். தமிழ் அகதிகளை தாயகத்திற்கு திருப்பியனுப்புதல், தமிழ் சிறுபான்மையாளர்களின் தேவைகள் மதிக்கப்பட வேண்டும் ஆகிய விடயங்களில் இரு நாடுகளும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளனவென அந்த வட்டாரம் கூறியது. ஆனால்  இலங்கைக்கு எதிரான யுத்தக்குற்றச்சாட்டுக்கள் குறித்து சென்னையில்  கலந்துரையாடப்படமாட்டாதென மேற்படி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
இந்திய விஜயத்தையடுத்து ஹிலாரி கிளின்டன் கிறீஸிற்கு சென்ற பின்னர் மீண்டும் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார். சென்னைக்கு விஜயம் செய்யும் முதலாவது அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் அவர் இந்தோனேஷியாவுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
தனது தீர்ப்பினை புறக்கணித்தமையால் நாடு இன்று நிதி முரண்பாட்டுக்கு உள்ளாகியுள்ளது : சரத் என் சில்வா.

ஹெட்ஜிங் உடன்படிக்கை தொடர்பில் தாம் வழங்கிய தீர்ப்பை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று அந்த பிரச்சினை நாட்டுக்கு பாகத்தை ஏற்படுத்தியிருக்காது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
ஹெட்ஜி;ங் உடன்படிக்கை செய்யப்பட்டபோது அதனை உடனடியாக ரத்துச் செய்யுமாறு தாம் தீர்ப்பளித்தாக சரத் என் சி;ல்வா தெரிவித்துள்ளார்.
ஹெட்ஜிங் உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டால் அது நாட்டின் நிதியமைப்புடன் முரண்படும் என்று தாம் தீர்ப்பளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி பெற்றோல் லீற்றர் ஒன்று 100 ரூபாவாக குறைக்கப்பட வேண்டும் என்று தாம் உத்தரவிட்ட போதும் அரசாங்கம் 2 ரூபாவை மாத்திரம் குறைதததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது தீர்ப்பை அரசாங்கம் புறக்கணித்தமை காரணமாக இன்று அதற்கான தண்டனையை நாடு அனுபவிக்க வேண்டியுள்ளதாக சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
தமது தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் தனியார் வங்கிகள் வழக்கை தொடர வாய்ப்பு ஏற்பட்டிருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹெட்ஜிங் உடன்படிக்கை தொடர்பில் அரசாங்க உரிமையான இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனியார் வங்கியான Standard Chartered வங்கிக்கு 162 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டும் என்று லண்டன் நீதிமன்றம் நேற்று முன்தினம் வழங்கிய தீர்ப்பு தொடர்பிலேயே சரத் என் சில்வா இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
அரசாங்கத்தில் இணைந்து கொண்ட சிலர் பிரிவினைவாதத்தை தூண்டுகின்றனர் : எல்லே குணவன்ச.

அரசாங்கத்தில் இணைந்து கொண்ட சிலர் பிரிவினைவாதத்தை தூண்டுவதாக தேசாபிமானி அமைப்பின் அழைப்பாளர் எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தை உருவாக்குதவற்கு தேசப்பற்றுடைய அமைப்புக்கள் அர்ப்பணிப்புடன் பாடுபட்டதாகவும், சிலர் இறுதி நேரத்தில் அரசாங்கத்தில் இணைந்து கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில்  இணைந்து கொண்ட சிலர், கடந்த காலத்தில் நோர்வேயுடன் இணைந்து பிரிவினைவாதத்தை தூண்டியவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நபர்கள் 13ம் திருத்தச் சட்ட மூலத்தை அமுல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி வருவதாகவும், இந்த நடவடிக்கை அருவறுக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்ட மூலத்தை அமுல்படுத்துவதற்கு எந்த வகையிலும் சந்தர்ப்பம் அளிக்கப்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாகாணசபை முறைமை ஊடாக ஊர் சுற்றித் திரிந்த சிலருக்கு பிராடோ ரக வாகனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதனைத் தவிர, இந்த முறைமையினால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் கிட்டவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் மிதக்கும் ஹொட்டல்களை அமைக்க ரஷ்யா முடிவு.
ரஷ்யாவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சமீபகாலமாக அதிகரித்து வருவதையடுத்து அங்கு ஹொட்டல்களில் அறை கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
இதனையடுத்து ரஷ்யா அதிரடி நடவடிக்கையில் களமிறங்கியுள்ளது. ஹொட்டல் அறைகள் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் மிதக்கும் ஹொட்டல்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக மோஸ்க்வா நதியின் கரைகளில் பயன்படுத்தப்படாமல் உள்ள படகுகளை பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மூலம் பழைய படகுகள் பயன்படுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இந்த மிதக்கும் ஹொட்டல்கள் துணைபுரியும் என்று நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் முதலை.
உப்பு நீரில் வசிக்கும் முதலை தண்ணீரில் இருக்கும் போது ஒரு யானையின் பலம் அதற்கு வந்து விடும். அதே முதலை தரைக்கு வந்து விட்டால் போதும். அதன் பலம் அதற்கே தெரியாது.
சாதாரண மிருகத்தை போல பரிதாபமாகவே இருக்கும். ப்ரூடஸ் என்ற பயங்கர முதலை அவுஸ்திரேலியாவின் அடிலைடு ஆற்றுப்பகுதியில் ஜாலியாக ரவுண்ட் அடிக்கிறது.
இந்த ப்ரூடஸ் முதலை 5.5 மீற்றர் நீளம் கொண்டது. இந்த முதலை சுற்றுலாப்படகு அடிலைடு ஆற்றில் வருவதை பார்த்ததும் உயரம் தாண்டும் வீரரை போல தலை உடல் அனைத்தையும் தூக்கிக் கொண்டு தண்ணீருக்கு மேல் பறக்கிறது.
இந்த முதலைக்கு சுற்றுலாப் பயணிகள் சாப்பிட ஏதாவது கொடுக்கிறார்கள். அந்த பழக்கத் தோஷத்தில் முதலை குதித்து கொண்டே இருக்கிறது. பயணிகள் எறியும் இறைச்சித் துண்டுகளை முதலை கவ்வி பிடித்து தண்ணீருக்குள் மறைகிறது.
முதலை படகுக்குள் பாய்ந்து விடாமல் தடுக்க வழிகாட்டியும் வருகிறார்கள். ப்ரூடஸ் முதலை இறைச்சி துண்டு சாப்பிடுவதை சிட்னியின் காதரினா பிரிட்ஜ் போர்டு அழகாக படம் பிடித்துள்ளார்.
அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகும் பெண்களின் பட்டியல்: இந்தியா முதலிடம்.
உலக அளவில் மன அழுத்த பிரச்சனை நெருக்கடிகளுக்கு ஆளாகும் பெண்கள் விவரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வு முடிவை நீல்சன் நிறுவனம் வெளியிட்டது. இந்த 2011ம் ஆண்டு பெப்பிரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 21 நாடுகளின் 6500 பெண்களிடம் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின் போது 87 சதவீத பெண்கள் தங்களுக்கு ஓய்வே இல்லை எனவும், எப்போதும் டென்ஷனாகவே உள்ளது எனவும் தெரிவித்து உள்ளனர்.
இந்தியப் பெண்கள் மன நெருக்கடி பிரச்சனையில் முதலிடத்தை பெறுகின்றனர். இவர்களையடுத்து மெக்சிகோ, ரஷ்யர்கள் உள்ளனர்.
அதன் விவரங்கள் பின்வருமாறு:
1. இந்தியா(87) .
2. மெக்சிகோ(70).
3. ரஷ்யா(69).
4. பிரேசில்(67).
5. ஸ்பெயின்(66).
6. பிரான்ஸ்(65).
7. தென் ஆப்பிரிக்கா(64), இத்தாலி(64).
8. நைஜீரியா(58).
9. துருக்கி(56). 
10. பிரிட்டன்(55).
மலேசிய பிரதமர் பதவி விலக வேண்டும்: பேஸ்புக்கில் மக்கள் வலியுறுத்தல்.
மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் பதவி விலக வேண்டும் என்று பேஸ்புக் மனு புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் சீரமைப்பு கோரி நடந்த பேரணியின் போது பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த போராட்டம் நடைபெற்ற சில தினங்களில் பேஸ்புக்கில் மலேசிய பிரதமர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமாகி உள்ளது.
ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் மலேசிய பிரதமர் பதவி விலக கோரும் மனுவை ஆதரித்து உள்ளனர். சனிக்கிழமை தலைநகர் கோலாலம்பூரில் பெரும் எதிர்ப்பு போராட்டம் நடந்தது. அன்றைய தினம் 1600 பேரை பொலிசார் கைது செய்தார்கள்.
தேர்தல் சீரமைப்பு குறித்து பெர்லிக் அமைப்பு நடத்திய எதிர்ப்பு பேரணியை எதிர்க்கட்சிகளும் ஆதரித்தன. கடந்த 4 ஆண்டுகளில் நடந்த பேரணிகளில் மிகப்பெரும் பேரணியாக இது இருந்தது.
இந்த எதிர்ப்பு பேரணியால் பிரதமர் நஜிப்புக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்ப்பு பேரணியை தொடர்ந்து பேஸ்புக்கில் பிரதமர் பதவி விலக கோரும் கோரிக்கை மனுவை ஒரு லட்சம் பேருக்கு மேல் ஆதரித்தனர்.
சந்திரனுக்கு மனிதர்களை அனுப்ப சீனா திட்டம்.
விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை விட சீனா பின் தங்கியுள்ளது. எனவே அந்த துறையில் அமெரிக்கா அளவுக்கு முன்னேற சீனா மிகவும் ஆர்வமாக உள்ளது.
அதற்கு முன்னோட்டமாக சந்திரனில் ஆய்வு மேற்கொள்வதில் தீவிரமாக உள்ளது. முதல்கட்டமாக சீனா தனக்கென்று விண்வெளியில் தனியாக ஒரு ஆய்வு மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.
அதற்கான பொருட்கள் மற்றும் கருவிகளை ராக்கெட் மூலம் கொண்டு செல்லும் பணி இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. வருகிற 2013ம் ஆண்டில் சந்திரனில் சீனா தனது ஆராய்ச்சியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருகிற 2020ம் ஆண்டில் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி அங்கு நேரடியாக ஆய்வு நடத்த சீனா முடிவு செய்துள்ளது. அதற்காக சீன அரசு நிதியும் ஒதுக்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் எல்லை துருப்புகள் விலக்கிக் கொள்ளப்படும்: பாகிஸ்தான் எச்சரிக்கை.
அமெரிக்கா அளித்து வரும் ராணுவ நிதி தற்போது பாகிஸ்தானுக்கு நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் கோபம் அடைந்த பாகிஸ்தான் ஆப்கன் எல்லைப் பகுதியில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளப் போவதாக எச்சரித்து உள்ளது.
பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒடுக்க ஆண்டுதோறும் 200 கோடி டொலர் நிதி உதவியை அமெரிக்கா அளித்து வருகிறது. ஆனால் தற்போது அமெரிக்க 80 கோடி டொலர் நிதியுதவியை நிறுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு அருகாமையில் உள்ள பழங்குடியினர் பகுதியில் ராணுவத்தை நிறுத்துவதற்கும் 30 கோடி டொலர் தொகை பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டது.
பாகிஸ்தான் பழங்குடியினர் பகுதியில் அல்கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க ஒரு லட்சத்து 47 ஆயிரம் வீரர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர்.
அமெரிக்க ராணுவ நிதி இல்லாத நிலையில் மலை எல்லைப் பகுதியில் 1100 சோதனை சாவடிகளை நடத்த முடியாது என பாகிஸ்தான் பாதுகாப்பு துறை அமைச்சர் சௌத்ரி முகமது முக்தர் தெரிவித்து உள்ளார்.
முர்டோக் ஒரு கிரிமினல்: முன்னாள் பிரதமர் பிரௌன் கடும் தாக்கு.
எனது குடும்ப விவகாரங்கள், அந்தரங்க விடயங்களை தனது பத்திரிகையில் வெளியிட்டு எனக்கு மன வேதனையை ஏற்படுத்திய முர்டோக் ஒரு கிரிமினல் என முன்னாள் இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரௌன் கூறியுள்ளார்.
இது குறித்து லாஸ்ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த 2006ம் ஆண்டு நான் நிதியமைச்சராக இருந்த போது எனது மகனின் உடல் நிலை குறித்தும் அவனுக்கு வந்து மர்ம நோய் குறித்து பொய்யான தகவலை அந்த பத்திரிகை வெளியிட்டது.
இது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் மனவேதனையை ஏற்படுத்தியது. பல்வேறு கிரிமினல்களுடன் தொடர்பு கொண்டு தான் முர்டோக் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
தற்போது தொலைபேசி ஒட்டு கேட்பு சம்பவத்தால் மக்கள் செல்வாக்கை இழந்த நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகையின் உரிமையாளர் ரூபர்ட் முர்டோக் ஒரு கிரிமினல் என்று கூறினார்.
ஜப்பானில் இறைச்சியில் கதிரியக்க பாதிப்பு.
ஜப்பான் புகுஷிமா மாகாணப் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 11ம் திகதி அணு மின் நிலையத்தில் கதிர்வீச்சு ஏற்பட்டது.
இந்த கதிர்வீச்சு கீரை, காய்கறி மற்றும் பால் ஆகியவற்றில் பரவியது. எனவே சில நாட்களுக்கு இதனை பயன்படுத்த வேண்டும் என புகுஷிமா நிர்வாகம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
விபத்து நடந்து 5 மாதம் ஆன போதும் சீசியம் கதிர்வீச்சு தாக்கம் ஏற்பட்ட 6 பசுவின் இறைச்சி டோக்கியோ சந்தையில் விற்பனையாகி உள்ளது. இந்த இறைச்சியும் மக்கள் சாப்பிட்டு உள்ளனர்.
இதுகுறித்து நுகர்வோர் விவகாரம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் கோஷி ஹோசோனோ கூறுகையில்,"சீசியம் கதிர்வீச்சு பாதிப்பு உள்ள உணவு வகையை தொடர்ந்து சாப்பிடுவது மனித உடலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது" என்றார்.
கதிர்வீச்சு பரவிய இறைச்சி கடந்த மாதம் விநியோகிக்கப்பட்டு உள்ளது. அந்த இறைச்சி பெரும்பாலானவர்களால் உட்கொள்ளப்பட்டு இருக்கும் என நிர்வாகம் கூறியது.
டோக்யோ மெட்ரோ பாலிடன் அரசு நிர்வாகம் கூறுகையில்,"குறிப்பிட்ட நிறுவனம் மூலம் இந்த நிகழ்வுக்கு முன்பாக 11 பசுக்கள் டோக்யோவுக்கு தரப்பட்டிருந்தது. அதிலும் கதிர்வீச்சு தாக்கம் இருந்தது" என தெரிவித்தது.
லிபிய அதிபர் கடாபி பதவி விலகுகிறார்: பிரான்ஸ் அமைச்சர் தகவல்.
லிபியாவில் கர்னல் மோமர் கடாபி ஆட்சிக்கு எதிராக கடந்த 5 மாதமாக போராட்டம் நடைபெறுகிறது. அங்கு பெங்காசியை மையாக கொண்ட போராட்டக்காரர்களின் தாக்குதலும் தீவிரமாகி உள்ளது.
பொது மக்களை பாதுகாக்க லிபியா சென்று உள்ள நேட்டோ படைகள் தலைநகர் திரிபோலியிலும் தாக்குதல் நடத்துகிறது. குறிப்பாக கடாபி இருப்பிடத்தில் இந்த தாக்குதல் நடைபெறுகிறது. ராணுவ மையங்களிலும் தாக்குதல் நடைபெறுகிறது.
மேற்கத்திய படைகளின் தாக்குதலை எதிர்த்து வந்த கடாபி தற்போது பதவி விலக தயாராகி உள்ளார். இதுகுறித்து அவரது அதிகாரிகள் பிரான்சின் தூதரக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் அலய்ன் ஜூபே கூறினார்.
லிபியா தூதர்கள் துருக்கி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் பேசி வருகிறார்கள் என அவர் தெரிவித்தார்.
பிரான்ஸ் பிரதமர் பிரான்கய்ஸ் பிலான் நாடாளுமன்ற கொமிஷனில் கூறுகையில்,"லிபியாவில் அரசியல் தீர்வு மிக முக்கியமானதாக உள்ளது. அங்கு உரிய அமைப்பு ஏற்பட இந்த நடவடிக்கை தேவைப்படுகிறது" என தெரிவித்தார்.
லிபியா பிரதமர் பகாதி அல் மகமூதி கூறுகையில்,"நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம். ஆனால் உடனடியாக குண்டு வீசுவதை நிறுத்த வேண்டும்" என்றார்.
தண்ணீருக்காக ஏங்கும் மக்கள்: கென்ய அகதிகள் முகாமின் அவலம்.
கென்யாவில் உள்ள தாதாப்பில் லட்சக்கணக்கான அகதிகள் உள்ள முகாமுக்கு நேற்று தண்ணீர் லொறி வந்தது. இந்த தண்ணீர் லொறியை பார்த்ததும் முகாமில் பட்டினியால் தவிக்கும் மக்களுக்கு புன்னகை எட்டிபார்த்தது.
சிறு குழந்தைகள் கூட தண்ணீரை பார்த்ததும் பெரிய புதையலை கண்டது போல அணி வகுத்து நின்றன. சிறுமியின் முதுகில் இருந்த ஒரு வயது குழந்தைக்கு கூட தண்ணீர் தட்டுப்பாடு புரிந்து இருக்கிறது.
கென்யாவில் உலகில் அதிக அளவில் அகதிகள் தங்கும் முகாமாக தாதாப் பகுதி அமைந்து உள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்போது வறட்சி ஏற்பட்டு உள்ளது.
இதனால் அந்த பகுதிகளை சேர்ந்த 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் அகதிகளாக முகாமில் குவிந்து உள்ளனர். புதிய அகதிகளாக வருபவர்கள் நிவாரண உதவிகளை ஏற்கனவே உள்ளவர்களிடம் பரிதாபமாக கேட்டு பெறுவதை பார்க்க முடிந்தது.
இந்த பகுதியில் உள்ளவர்கள் உணவுக்கு பரிதவிப்பதை போல தண்ணீர் குடிக்க பல மைல் தூரம் தினமும் நடக்க வேண்டி உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த அகதிகள் முகாம் அமைக்கப்பட்டது.
முகாம் துவங்கிய போது நல்ல வசதிகளுடன் இருந்த முகாம் தற்போது லட்சக்கணக்கில் அகதிகள் வருகையால் திணறி உள்ளது. கிடைக்கும் தார்பாயின் மூலம் சிறிய கூடாரங்கள் அமைத்து மக்கள் அதில் தங்கி இருக்கின்றனர்.
கனடாவில் அதிக செலவு பிடிக்கும் நகரங்கள்: டொறண்டொ முதலிடம்.
அதிக செலவு பிடிக்கும் நகரங்களில் கனடாவின் வான்கூவர் நகரத்தை டொறண்டோ மிஞ்சியது. கனடாவில் கூடுதல் செலவு ஆகும் நகரங்களில் முதல் நகரமாக டொறண்டோ உருவெடுத்து உள்ளது.
மெர்சர் ஆலோசனை நிறுவனம் ஆண்டு தோறும் உலகின் அதிக செலவின நகரங்களை பட்டியலிட்டு வருகிறது. குடியிருப்பு, போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு செலவினங்கள் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது டொறண்டோவில் வீட்டு வாடகை கடுமையான அளவில் உயர்ந்து இருப்பது தெரியவந்தது.
இதன் காரணமாக அந்த நகரில் அதிக செலவினம் ஆவதும் தெரியவந்தது. உலக அளவில் அதிக செலவு பிடிக்கும் நாடுகள் வரிசையில் டொறண்டோவுக்கு 59வது இடம் கிடைத்து உள்ளது.
கடந்த ஆண்டு இந்த நகரம் 76வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு உலக நகரங்களில் அதிக செலவு ஆகும் நகரங்களில் 78வது இடத்தில் இருந்த வான்கூவர் தற்போது 65வது இடத்தை பெற்று உள்ளது.
இந்த இரு கனடா நகரங்களை தொடர்ந்து மொன்றியல், கால்கரி ஆகிய நகரங்கள் 79 மற்றும் 96வது இடங்களை பெற்று உள்ளன. இந்த புதிய ஆய்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.
அந்த ஆய்வின்படி கனடாவில் மிக குறைந்த செலவினம் ஆகும் நகரமாக தலைநகர் ஒட்டாவா உள்ளது தெரியவந்தது.
 உளவு தகவல் தருவதில் கட்டுப்பாடு: அமெரிக்காவுடன் ஜேர்மனி மோதல்.
ஜேர்மனி இளைஞரை அமெரிக்காவின் விமானம் தாக்கி கொன்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து அமெரிக்காவின் உளவுத்துறை நிறுவனத்திற்கு தகவல்களை பகிர்வதில் ஜேர்மனி உளவுத்துறை கட்டுப்பாடு மேற்கொண்டு உள்ளது.
பாகிஸ்தான் எல்லை பகுதியில் ஆப்கானிஸ்தானின் வஜிரிஸ்தானில் கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் திகதி அமெரிக்காவின் ஆள் போர் விமானம் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் துருக்கி ஜேர்மனியரான 20 வயது பன்யாமின் உள்பட சந்தேகத்துக்குரிய இஸ்லாமிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அமெரிக்க விமான தாக்குதலில் ஜேர்மனி இளைஞர் கொல்லப்பட்டதை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஜேர்மனி இடையே உளவு தகவல் பகிர்வதில் மோதல் ஏற்பட்டு உள்ளது.
சி.ஐ.ஏ.வுக்கு உளவு தகவல் தருவதில் ஜேர்மனி கட்டுப்பாடுகளை மேற்கொண்டு உள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு முதல் தீவிரவாத சந்தேக நபர்கள் குறித்து ஜேர்மனி எல்லாவித தகவல்களையும் அளித்து வந்தது.
அந்த இளைஞர் கொல்லப்பட்ட பின்னர் இந்த உளவு தகவல் தருவதில் ஜேர்மனி சுணக்கம் காட்டி உள்ளது. அமெரிக்கா ராணுவம் கொன்ற இளைஞர் உஸ்பெகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி பெற்று உள்ளார். தீவிரவாதிகளுடனும் மிக நெருக்கமாக இருந்துள்ளார் என கூறப்படுகிறது.
அந்த இளைஞர் கொல்லப்படுவதற்கு முன் சில வாரங்கள் முன்பாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பகுதியில் இருந்தார் என்றும் கூறப்படுகிறது. கொல்லப்பட்ட இளைஞருக்கு கைது வாரண்ட் ஏதும் இல்லை. இந்த நிலையில் அவர் கொல்லப்பட்டு இருப்பது ஜேர்மனிக்கு அமெரிக்கா மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படும்: எகிப்து பிரதமர்.
எகிப்து அமைச்சரவை ஒரு வார காலத்தில் மாற்றி அமைக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் எஸ்ஸாம் ஷராப் அறிவித்துள்ளார்.
எகிப்து முன்னாள் அதிபர் முபாரக்கிற்கு எதிரான கிளர்ச்சியின் போது 900 அப்பாவி மக்களை கொன்ற பொலிசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், உள்துறை அமைச்சரை பதவி நீக்கக் கோரியும் கிளர்ச்சியாளர்கள் தலைநகர் கெய்ரோ மற்றும் சூயஸ் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இக்குற்றச்சாட்டின் கீழ் அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் மீதான விசாரணையை துரிதப்படுத்தும்படி பிரதமர் ஷராப் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இன்னும் ஒரு வார காலத்தில் அமைச்சரவை மாற்றி அமைக்க இருப்பதாக பிரதமர் ஷராப் அறிவித்துள்ளார்.
அப்படி மாற்றி அமைக்கப்பட்டால் முபாரக் வீழ்ச்சிக்குப் பின்னர் செய்யப்படும் நான்காவது அமைச்சரவை மாற்றமாக இது அமையும். இதற்கிடையே அப்பாவி மக்களை கொன்ற பொலிஸ் அதிகாரிகளை சுட்டுக் கொல்லும்படி எகிப்து பாதுகாப்புப் படைக்கு பிரதமர் ஷரப் உத்தரவிட்டு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை பாதுகாப்புப் படை மறுத்துள்ளது.
ஆப்கன் அதிபரின் சகோதரர் சுட்டுக் கொலை: தலிபான்கள் பொறுப்பேற்பு.
ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் சகோதரரும், கந்தகார் மாகாண கவர்னருமான அகமத் வாலி கர்சாய் நேற்று அவரது பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது கொலைக்குத் தலிபான் பொறுப்பேற்றுள்ளது. ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாயின் சகோதரர் அகமத் வாலி கர்சாய். இவர் ஆப்கன் அரசியலில் செல்வாக்கு மிக்கவராக இருந்தார்.
ஆப்கன் நாட்டில் ஓபியம் போதைப் பொருளை பல ஆண்டுகளாக வாலி கர்சாய் கடத்தி வந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு உண்டு. போதைப் பொருள் கடத்தலில் வாலி கர்சாய் ஈடுபட்டிருப்பதாகவும், அவரிடம் இருந்து அதிகாரங்களை பறிக்கும்படி ஹமீத் கர்சாய்க்கு அமெரிக்கா உத்தரவிட்டதாகவும் கடந்த 2008ம் ஆண்டில் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து சி.ஐ.ஏ.யின் கட்டளைப்படி ஆப்கனின் துணை ராணுவத்தை இயக்க அமெரிக்காவிடம் இருந்து வாலி கர்சாய் பணம் பெற்றதாக டைம்ஸ் பத்திரிக்கையில் செய்தி வெளியானது.
இந்நிலையில் நேற்று அகமது வாலியை அவரது வீட்டில் வைத்து அவரது பாதுகாவலர் சர்தார் முகம்மது சுட்டுக் கொன்றார் என்று கந்தகார் மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் ஜல்மாய் அயுபி தெரிவித்தார்.
வீட்டிற்கு வந்திருந்த உறவினர்களை வரவேற்ற போது இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் வாலி கர்சாயை அவரது வீட்டிற்கு வந்திருந்த உறவினர் ஒருவர் தான் சுட்டுக் கொன்றார் என்று ஆப்கன் புலனாய்வு அமைப்பான தேசிய பாதுகாப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
வாலி கர்சாயுடன் அவரது உறவினர்கள் சிலரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக பெயர் வெளியிட விரும்பாத அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வாலி கர்சாய் கொலைக்கு தலிபான் பொறுப்பேற்றுள்ளது. தலிபான் செய்தித் தொடர்பாளர் யூசுப் அஹ்மதி வெளியிட்ட அறிக்கையில்,"இது தங்களின் சாதனைகளில் ஒன்று" என குறிப்பிட்டுள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF