Thursday, July 21, 2011

இன்றைய செய்திகள்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஹிலாரி கிளிண்டன் சந்திப்பு அமெரிக்காவிற்கு வருமாறு அழைப்பு.

அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று சென்னை வந்தார்.டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு அவர் சென்னை வந்தார்.
சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை இன்று ஹிலாரி கிளிண்டன் சந்தித்து பேசினார். ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது இலங்கை பிரச்சினை, தமிழ்நாட்டில் அமெரிக்க தொழில் முதலீடு பற்றி பேச்சு நடந்தது. இந்த சந்திப்பு சுமூகமாகவும், நல்லெண்ண அடிப்படையிலும், பரஸ்பர மரியாதையுடனும் இருந்தது. எதிர்காலத்தில் இதுபோன்ற பல்வேறு கலந்து உரையாடல்களுக்கு வாய்ப்பு இருக்கும் என்று ஹிலாரி நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், அவர் பேசும்போது, முதல்-அமைச்சர் ஜெயலலிதா அமெரிக்காவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அவரது வருகை, தமிழ்நாட்டின் மிகப்பெரிய சாதனைகளை அமெரிக்கர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும் என்று ஹிலாரி கிளிண்டன் கூறினார்
தமிழக முதல்வர் ஜெயலலிதா - ஹிலாரி கிளிண்டன் சந்திப்பு
இலங்கையின் அரசியல், பொருளாதார நடவடிக்கைகளில் தமிழ் மக்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருப்பதுடன், அவர்களுக்கு சம அரசியல் உரிமை வழங்கப்பட வேண்டுமென ஹிலாரி கிளிண்டன் வலியுறுத்தியுள்ளார்.
இன்று காலை சென்னை வந்தடைந்த அமெரிக்க வெளியுறவு செயலர் ஹிலாரி கிளிண்டன் நண்பகல் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். மேலும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில்,

21ம் நூற்றாண்டை வடிவமைப்பதில் இந்தியாவுக்கு முக்கிய பங்குண்டு. 21-ம் நூற்றாண்டின் வரலாற்றின் பெரும்பகுதி ஆசியாவில் இந்தியாவால் எழுதப்படும் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். 21-ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு வரையறுக்கத் தகுந்ததாக இருக்கும். இந்தியாவின் வளர்ச்சியை நாம் பெருமையுடன் பார்க்கிறோம். ஐ.நா சபையில் நிரந்தர உறுப்பினர் பதவி பெற இந்தியாவுக்கு ஆதரவளிப்போம் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா முன்னர் வலியுறுத்தியிருந்தார்.
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு குறித்தும், பொருளாதார அபிவிருத்தி குறித்தும் இந்தியாவுடன் அமெரிக்கா உறவை மேம்படுத்த விரும்புகிறது. வெவ்வேறு நாடுகளில் இருந்து நாம் வந்துள்ளோம் என்பதால் நம்மிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நாடுகளுக்கு இடையிலான உறவு இன்றிமையாதது. இந்திய - அமெரிக்க - சீன நாடுகளுக்கு இடையில் பலமான உறவு பேணப்படுவது முக்கியமானது.

இந்திய தேர்தல் ஆணையம், உலகத்தரம் வாய்ந்ததாக உள்ளது.

ஈராக் மற்றும் எகிப்தி தேர்தலை நடத்துவதற்கும் இந்தியாவின் உதவியை நாடியுள்ளோம். ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் ஜனநாயக நடவடிக்கைகளுக்கும் இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் , மியன்மாரில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கு அந்நாட்டு அரசுடன் இந்தியா ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். டர்பனில் உலகவெப்பயமாதல் நாடு வெற்றி பெற இந்தியா உதவ வேண்டும்.
தமிழக மக்கள் இந்தியாவிலேயே அதிக விழிப்புணர்வு உள்ளவர்களாகவும் கல்வி போன்றவைகளில் முன்னேறியவர்களாகவும் உள்ளனர். அரசியல் ரீதியாக மிகவும் விழிப்புணர்வு உள்ளவர்களாகவும் இருக்கின்றனர். இங்கு இந்தியாவின் மிகப்பெரிய நூலகத்தில் பேசுவதற்கு பெருமை அடைகிறேன்.

இங்கு இலங்கை மக்கள் தொடர்பான உணர்வாளர்களும் உள்ளீர்கள். இலங்கையில் தமிழ் மக்களுக்கு சமத்துவ உரிமை, சம அந்தஸ்த்து அவசியமானது. அந்நாடில் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனைத்து உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். இதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
உலக அளவில் அணு ஆயுத பரவலை தடுக்க இந்தியாவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஈரானின் அணு ஆயுதங்களை தடுக்க இந்தியா உதவ வேண்டும் என தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும்! சென்னையில் ஹிலாரி வலியுறுத்து.

இலங்கைத் தமிழர்களுக்கும், ஏனைய இனத்தவரைப் போல சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று சென்னை வந்துள்ள அமெரி்க்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் வலியுறுத்தியுள்ளார். 
நேற்று முன்தினம் டெல்லி வந்தடைந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், நேற்று அவர் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவை சந்தித்து பேசினார்.
அதன்போது, பயங்கரவாதத் தாக்குதல்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்று அவர் உறுதியளித்தார்.
இன்று புதன்கிழமை அவர் தனி விமானம் மூலம் சென்னை வந்திறங்கினார். அவர் முதலில் சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் மாணவர்களை சந்தி்த்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
நாங்கள் இந்திய மாணவர்களை மனதார வரவேற்கிறோம்.
தமிழகத்தில் தமிழர்கள் அரசியலில் ஆர்வமுடன் பங்கேற்பது பாராட்டுக்குரியது. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும் சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

கடந்த 18 ஆண்டுகளில் இந்தியா அடைந்த வளர்ச்சி மிகப் பெரியது. வாய்ப்பு தேடி அமெரிக்கர்கள் இந்தியாவைத் தேடி வரும் சூழல் வந்துள்ளது.
பருவ நிலை மாற்றம், சுற்றுச்சூழல் ஆகிய விவகாரங்களில் நாங்கள் இந்தியாவுடன் சேர்ந்து செயல்படுவோம். உலக அரங்கில் இந்தியா ஒரு சக்தி வாய்ந்த நாடாக உருவாகி வருகிறது.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரி்கக அதிபர் ஒபாமா ஆதரவாக உள்ளார். உலக அளவில் அணு ஆயுத பரவலைத் தடுக்கும் முக்கிய பங்கு இந்தியாவுக்கு உண்டு என்றார்.
விமானப்படைக்கு கைமாறியுள்ள புலிகளின் இரணைமடு விமான ஓடுபாதை.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தினால் கடந்தகாலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த கிளிநொச்சி, இரணைமடு பகுதியில் அமைந்திருந்த விமான ஓடுபாதையை தற்போது இலங்கை விமானப்படை தனது பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.
இந்நிலையில் இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்கிரம முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை முதன்முதலாக வை – 12 ரக விமானமொன்று இந்த ஓடுபாதையில் தரையிறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வன்னிப்பகுதியில் போரின்  பின்னர் விமானப்படையினரால் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட விமான ஓடு பாதை இதுவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இனப்பிரச்சினையை தீர்க்க அடுத்தவரின் ஆலோசனையை பெறத்தயாரில்லை – ஜனாதிபதி மஹிந்த.

இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக ஐரோப்பியாவின் அல்லது ஏனைய நாடுகளின் ஆலோசனைகளை பெற தாம் தயாரில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று உள்ளுராட்சி தோ்தல் பிரசாரங்களில் ஈடுபட்ட அவர், இலங்கையின் இனப்பிரச்சினையை சமாதானமான முறையில் தீர்க்க முடியும் என்றும், அதற்கான ஏற்பாடுகள் தம்மிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்படுவதாகவும், இந்தநிலையில் தமிழ் இளைஞர்கள் நாளுக்கு நாள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.
இலங்கையில் தமிழர்கள் கஸ்டப்படுவதாக கூறி போராட்டம் நடத்தும் மேற்கத்தைய நாடுகளில் உள்ளவர்கள் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள் என்று ஜனாதிபதி மேலும் குறி;ப்பிட்டார்.
இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஜனாதிபதி
இனவாத அரசியல் நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன, மத மற்றும் குல பேதங்களை களைந்து தமது அரசாங்கம் நாட்டு மக்களுக்கு சேவையாற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திபொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கு மக்களை மீளவும் பிழையான வழியில் இட்டுச் செல்வதற்கு சில தரப்பினர் பிரயத்தனம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இவ்வாறான சதித் திட்டங்களுக்கு மக்கள் இரையாகி விடக் கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சவூதி கொலையாளிக்கு மன்னிப்பு வழங்கிய இலங்கைத் தமிழ் குடும்பம்.

தமது மகளை கொலை செய்த கொலையாளிக்கு மன்னிப்பு வழங்கியுள்ள இலங்கைத் தமிழ் குடும்பம் ஒன்று 50 ஆயிரம் சவூதி ரியால்களை பெற்றுக்கொள்ள இணங்கியுள்ளது
இந்த தகவலை அரப் நியூஸ் தெரிவித்துள்ளது.
ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
36 வயதான பவானிதேவி சின்னையா என்பவர் அவரின் சவூதி அனுசரணையாளரால் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி கொல்லப்பட்டார்.
மலையகத்தின் மஸ்கெலிய பிரதேசத்தை சேர்ந்த இவர், 2008 ஆண்டு முதல் சவூதியில் பணிப்பெண்ணாக கடமையாற்றி வந்தார்.
இந்தநிலையி;ல் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பவானியின் தந்தை, கொலையாளியை மன்னித்து விட்டதாக சவூதியில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து பவானியின் சம்பள நிலுவையான 16,245 சவூதி ரியால்களை பவானியின் தந்தைக்கு வழங்க சவூதி கொலையாளியின் தந்தை இணங்கியுள்ளார்.
அத்துடன் 50 ஆயிரம் ரியால்களும் நட்டஈடாக இன்று கொழும்பில் வைத்து வழங்கப்படும் என்று ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
சகல மக்களும் சம உரிமையுடன் வாழ வேண்டும்! இன்று சாவகச்சேரியில் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி.

வடமாகாணத்திலுள்ள உயர்பாதுகாப்பு வலையங்களை விரைவில் அகற்றி அப்பகுதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் தெரிவித்தார்.
சாவகச்சேரியில் இன்றைய தினம் (19) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் வடமாகாணத்திலுள்ள உயர்பாதுகாப்பு வலயங்களை விரைவில் அகற்றுவதற்கும் அப்பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனிடையே புனர்வாழ்வு நிலையங்களில் தங்கியிருந்த முன்னாள் போராளிகள் பலர் விடுதலை செய்யப்பட்டு அவர்கள் பொது வாழ்க்கையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு பல்வேறு உதவிகளையும் வழங்கியுள்ளோம். அத்துடன் புனர்வாழ்வு நிலையங்களிலிருக்கும் ஏனைய முன்னாள் போராளிகளும் விரைவில் விடுவிக்கப்பட்டு பொதுவாழ்க்கையில் இணைக்கப்படவுள்ளனர்.
கடந்த இரண்டு வருடங்களில் இந்த மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துள்ளோம். அந்த வகையில் வடமாகாணத்தில் சுகாதார மேம்பாட்டை கருத்தில் கொண்டு பல வைத்தியசாலைகளில் நவீன வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள் நாட்டின் ஏனைய மாகாணங்களை விட வடமாகாணத்தின் அபிவிருத்தியிலே தாம் கூடிய அக்கறை கொண்டு செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
கடந்த 30 வருடங்களாக அபிவிருத்தியில் பின்னோக்கியுள்ள இம்மாகாணத்தை கட்டியெழுப்புவதற்கு அரசு தயாராகவுள்ளது. இந்த நிலையில் சிலர் தமது சுயலாபங்களுக்காகவும் அரசியல் லாபங்களுக்காகவும் மக்களாகிய உங்களை தவறான வழியில் அழைத்துச் செல்ல முற்படுகின்றனர்.
ஆனால் அப்பாவி மக்கள் பிழையானதும், தவறானதுமான வழியில் செல்லக் கூடாது என்பதுடன் வெளிநாடுகளில் எமது நாட்டைப் பற்றி தவறான பிரசாரங்களில் சிலர் ஈடுபட்டும் வருகின்றனர் என்றார்.
இந்நிலையில் இனம் மதம் மொழி பேதமின்றி எமது பிரச்சினைகளுக்கு நாமே பேசி தீர்வுகண்டு சகல மக்களுடனும் சம உரிமையுடன் வாழவேண்டும் என்பதே எமது விருப்பமெனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள் எமது பிரச்சினைகளுக்கு நாமே பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் எனவும் அதன் மூலமே எமது நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் எனவும் மேலும் தெரிவித்தார்.
அங்கிருந்த மக்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடியதுடன் சாவகச்சேரி நகரப் பகுதியில் சந்தைக் கட்டிடத்தையும் பார்வையிட்டார்.
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அழைப்பிற்கிணங்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் நடாத்தப்படுகின்ற பிரசாரக் கூட்டங்களில் பங்கெடுத்து வருகின்றார்.
இதன் பிரகாரம் நேற்று வேலணையிலும் இன்று கோப்பாய் மற்றும் சாவகச்சேரி பகுதிகளிலும் நடைபெற்ற கூட்டங்களில் பங்கெடுத்துள்ள அவர் நாளை கிளிநொச்சியில் நடைபெறவுள்ள பிரசாரக் கூட்டங்களிலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சோமாலிய நாட்டில் கடும் வறட்சி: பலி எண்ணிக்கை அதிகரிப்பு.
ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையாக வறட்சி நிலவுகிறது. குறிப்பாக சோமாலியாவில் பஞ்சம் அதிகமாக காணப்படுகிறது.
இதனால் சோமாலியா மக்கள் உயிர் பிழைக்க கென்யா, எத்தியோப்பியா அகதிகள் முகாம்களுக்கு வருகிறார்கள்.
சமீப வாரங்களாக எத்தியோப்பியா முகாமில் பல ஆயிரம் சோமாலியர்கள் புகலிடம் தேடி வந்துள்ளனர்.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அகதி முகமை பொதுசுகாதார பிரிவு தலைவர் பால் ஸ்பைகல் கூறுகையில்,"டோலோ அடோ முகாம் நிலைமை மோசமாக உள்ளது" என்றார்.
ஜுன் மாதத்தில் 10 ஆயிரம் பேருக்கு 7.4 பேர் என ஒரு நாளைக்கு மரணம் அடைவதாக ஐ.நா முகமை தெரிவித்து உள்ளது. அடிப்படைக் கோட்டுக்கு 15 மடங்கு அதிகம் மரணம் ஏற்படுகிறது.
குறிப்பாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
சோமாலியாவில் ஷெகபாப் தீவிரவாத பிரிவினர் நிவாரண உதவிகள் நடைபெற அனுமதிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை நேற்று வேண்டுகோள் விடுத்து உள்ளது.
அல்ஷெகபாப் பிரிவினர் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் மீது ஈர்ப்பு கொண்டவர்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நிவாரண உதவிக்குழுக்களை விரட்டி அடித்தனர்.
நிவாரண குழுக்கள் மேற்கத்திய உளவாளிகள் என்றும் கிறிஸ்துவமத நபர்கள் என்றும் அவர்கள் நிராகரித்தனர். தெற்கு மற்றும் மத்திய சோமாலிய பகுதி ஷெகபாப் தீவிரவாதப் பிரிவினர் வசம் உள்ளது.
இளவரசி டயானாவின் நினைவாக நிதி திட்டம்: அடுத்த ஆண்டு முடிவடையும்.
இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 1997ம் ஆண்டு கார் விபத்தில் மரணம் அடைந்தார்.
பிரிட்டன் மக்களின் அபிமானத்தை பெற்ற இந்த இளவரசியின் திடீர் மரணம் பிரிட்டன் மக்களை மட்டுமல்லாமல் உலகையே உலுக்கியது.
எப்போதும் ஒரு புன்னகையுடன் திகழும் இளவரசி டயானா மறைவைத் தொடர்ந்து அவரது பெயரில் நினைவு நிதி திரட்டப்பட்டது.
இந்த நினைவு நிதிக்கு பிரிட்டனின் ஓய்வூதியர்கள், சிறு குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் பணம் அளித்தனர். இந்த நினைவு நிதி 100 மில்லியன் பவுண்ட் அளவை எட்டியது. இந்த தொகை 350 நல்ல நிகழ்வுகளுக்காக பயன்படுத்தப்பட்டு உள்ளது.
சமூகத்தில் வறுமையில் வாடும் நலிவுற்றோருக்கு உதவும் வகையில் இந்த நினைவு நிதி பயன்படுத்தப்பட்டது.
இளவரசி டயானா நினைவு நிதியில் 13 மில்லியன் பவுண்ட் மீதம் உள்ளது. இந்த நிதியும் 2012ம் ஆண்டுடன் முடிவடையும்.
நிதி பணம் அனைத்தும் இறக்கும் தறுவாயில் உள்ளவர்கள், நலம் பேணுதல், புகலிடம் தேடுவோர், சிறை சீரமைப்பு, மனநலம் பாதித்தோருக்கு உதவுதல் மற்றும் கண்ணி வெடி தாக்குதலில் பாதிப்பு அடைந்தவர்கள் ஆகியோருக்கு டயானா நினைவு நிதி 2007ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டது.
டயானா நினைவு நிதி 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது.
பிரச்சனைகள் நிறைந்த நகரத்தை ஆப்கன் வசம் ஒப்படைக்க நேட்டோ படைகள் திட்டம்.
ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெல்மாண்ட் மாகாணத்தில் லஷ்கர் கா நகரம் உள்ளது. இந்த நகர பாதுகாப்பை நேட்டோ படையில் உள்ள பிரிட்டிஷ் வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
பதட்டம் நிறைந்த இந்த நகர பாதுகாப்பு பொறுப்பை ஆப்கானிஸ்தான் துருப்புகள் வசம் ஒப்படைக்கப்படுகிறது.
நேட்டோ ஏற்கனவே அமைதி உள்ள பமியான் மற்றும் கிழக்கு நகரமான மெகதர்லாம் பகுதியை ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படைகள் வசம் ஒப்படைத்து விட்டது.
புதிதாக ஒப்படைக்கப்படும் லஷ்கர் கா நகரம் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு துருப்புகளுக்கு பெரும் சவாலாகவே இருக்கும்.
ஆப்கானிஸ்தானில் தற்போது முகாமிட்டு உள்ள நேட்டோ படைகள் 2014ம் ஆண்டில் பாதுகாப்பு அதிகாரத்தை ஆப்கானிஸ்தானிடம் ஒப்படைக்க முடிவு செய்து உள்ளது.
அதன் துவக்க கட்டமாக ஒவ்வொரு நகர பாதுகாப்பு பொறுப்பும் தற்போது ஆப்கானிஸ்தான் வீரர்கள் வசம் ஒப்படைக்கப்படுகிறது.
நேட்டோ திட்டப்படி காபூல், பான்ஜ்ஷிர், ஹெராட் மற்றும் மசார் எ ஷரிப் ஆகிய நகர பாதுகாப்பும் படிப்படியாக ஆப்கானிஸ்தான் வீரர்கள் வசம் ஒப்படைக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் நேட்டோ கட்டுப்பாட்டில் 10 ஆயிரம் பிரிட்டிஷ் வீரர்கள் உள்ளனர்.
இவர்கள் 2014ம் ஆண்டு நாடு திரும்புகிறார்கள். இந்த வீரர்களில் பெரும்பாலானவர்கள் ஹெல்மாண்ட் மாகாணத்தில் உள்ளனர்.
அமெரிக்காவில் மக்களை வாட்டி வதைக்கும் அனல் காற்று: 13 பேர் பலி.
தற்போது அமெரிக்காவில் மன்டானா, டெக்காஸ், ஒக்லகோமா, மேற்கு விர்ஜினீயா உள்ளிட்ட 18 மாகாணங்களில் கடும் வெப்பம் நிலவுகிறது.
அங்கு 100 டிகிரி முதல் 131 டிகிரி வரை அனல் வாட்டுகிறது. இதனால் அப்பகுதியில் கடும் அனல் காற்று வீசுகிறது.
ஒக்லகாமா மாகாணம் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த 28 நாட்களாக இந்த நிலை உள்ளது. கடும் அனல் காற்று வீசுவதால் அங்குள்ள ரோடுகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வெப்பக்காற்றை தாங்க முடியாமல் பலருக்கு உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளன. பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் சிலர் அந்த மாகாணத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். இல்லினாயிஸ் மாகாணத்தில் உள்ள நாஸ்வில்லி, மின்னெசோடா ஆகிய நகரங்களிலும் அனல் காற்று அலை அலையாக வீசுகிறது. அமெரிக்காவில் வீசி வரும் அனல் காற்றுக்கு இதுவரை 13 பேர் பலியாகி உள்ளனர்.
நோய் வாய்ப்பட்டுள்ள பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காற்றில் ஈரப்பதம் குறைவதால் தான் இதுபோன்ற அனல் காற்று வீசுவதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஆண்டுதோறும் இதுபோன்ற அனல்காற்று வீசி வருகிறது. இதனால் அங்கு வருடத்துக்கு 162 பேர் பலியாகி உள்ளனர்.
பாகிஸ்தானுக்கு ஹிலாரி வழங்கிய நற்சான்றிதழ்.
பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பு அளித்து வருவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்திடம் அளித்துள்ள சான்றிதழ் ஒன்றில் இதுதொடர்பாக ஹிலாரி கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
அமெரிக்க உளவுத்துறை ஒப்பந்ததாரரான ரேமண்ட் டேவிஸ் என்பவரை பாகிஸ்தான் விடுவித்த 2 நாட்களுக்குப் பிறகு ஹிலாரி இவ்வாறு பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் அளித்துள்ளார்.
இந்த சான்றிதழ் அளித்தால்தான் பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு தொடர்பான நிதி உதவியை அமெரிக்கா அளிக்க முடியும். பாகிஸ்தானுக்கு வழங்குவதற்காக இந்த ஆண்டு 296 மில்லியன் டொலர் தரும்படி வெளியுறவுத்துறை அமெரிக்க அரசிடம் கேட்டிருந்தது.
இந்த ஆண்டு ஜனவரியில் ரேமண்ட் டேவிஸ் லாகூரில் இரட்டைக் கொலை வழக்கு ஒன்றில் லாகூர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான தூதரக உறவில் பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர் மார்ச் 16ம் திகதி விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலை செய்யப்பட்ட 2 நாட்களில் அதாவது மார்ச் 18ம் திகதி ஹிலாரி இவ்வாறு பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு நன்றாக ஒத்துழைப்பு வழங்கி வருவதாகக் கூறி சான்றிதழில் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
உலகின் மிக உயரமான சிகரம் குறித்து சீனா வெளியிட்ட கருத்தால் குழப்பம்.
உலகின் மிகவும் உயரமான சிகரம் என புகழ்பெற்ற எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரம் குறித்து சீனா வெளியிட்ட கருத்தால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து நேபாள் நாட்டு அமைச்சகம் முதன் முறையாக மீண்டும் எவரெஸ்ட் சிகரத்தி‌ன் உண்மையான உயரம் குறித்து துல்லியமாக அளவிட முடிவு செய்துள்ளது.
இமயமலை மலைத்தொடரில் அமைந்துள்ளது எவரெஸ்ட் சிகரம். இது உலகின் மிகவும் உயரமான சிகரம் என்ற பெருமையினை பெற்றுள்ளது.
கடந்த 1954ம் ஆண்டு இந்தியா தான் எவரெஸ்ட் சிகரம் 8,848 மீற்றர் உயரமுடையது என அதிகாரப்பூர்வமாக தகவல் வெளயிட்டது. இன்று வரை அந்த அளவீடு தான் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் சீனாவோ எவரெஸ்ட் சிகரம் 8,844 மீற்றர் என கூறி குழப்புகிறது.
இது குறித்து நேபாள் நாட்டின் நிலச்சீர்திருத்தம் மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கோபால் கிர் கூறியதாவது: கடந்த ஆண்டு நேபாள், சீனா இடையே எல்லைப்பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடந்த போது சீனா பிரதிநிதிகள் தான் எவரெஸ்ட் சிகரத்தின் சரியான உயரம் 8,844 என கூறினர்.
முதன்முதலாக 1856ஆம் ஆண்டு தான் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அளவீடு செய்யப்பட்டது. இது அடி அளவீட்டின் படி 29 ஆயிரத்து 29 அடி(29029 ) என அளவிடப்பட்டது.
எனினும் தற்போதைய நவீன தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட நிலையில் மீண்டும் எவரெஸ்ட் சிகரத்தினை துல்லியமாக அளவிட அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அதன் பிறகே இந்தியா கூறிய அளவு சரியானதா? சீனா கூறிய அளவீடு சரியானதா? என குழப்பத்திற்கு விடை கிடைக்கும்.
கடந்த 1953ம் ஆண்டு மே மாதம் 29ஆம் ஆண்டு முதன் முதலாக ஷெர்பா டென்சிங், எட்மாண்ட் ஹிலாரி ஆகி‌‌யோர் எவரெஸ்ட் சிகர‌த்தை அடைந்தனர். இதுவரை மொத்தம் 3 ஆயிரம் பேர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளனர்.
உலக மக்கள் தொகை 800 கோடி அளவை எட்டும்: நிபுணர்கள் தகவல்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் 600 கோடியாக இருந்த உலக மக்கள் தொகை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 700 கோடி என்ற எண்ணிக்கையை எட்டுகிறது.
ஒவ்வொரு வினாடிக்கும் 5 குழந்தைகள் பிறக்கின்றன. ஆண்டுதோறும் உலக அளவில் 780 லட்சம் மக்கள் உலக சமூகத்தில் இடம் பெற்று வருகிறார்கள்.
1800ஆம் ஆண்டு காலகட்டத்தில் 100 கோடிக்கும் குறைவாக உலக மக்கள் தொகை இருந்தது. 1960ம் ஆண்டு காலகட்டத்தில் 300 கோடியாக மக்கள் தொகை அதிகரித்தது.
1999ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி உலக மக்கள் தொகை 600 கோடியாக இருந்தது. 2025ம் ஆண்டு காலகட்டத்தில் உலக மக்கள் தொகை 800 கோடியாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டு உள்ளது.
உலகில் மிக வறுமையில் வாடும் நாடுகளில் மக்கள் தொகை எண்ணிக்கை இன்னும் 10 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும் 800 லட்சம் மக்கள் உலக மக்கள் தொகையில் அதிகரிப்பது பெரும் கவலை அளிப்பதாக உள்ளது.
முல்லா ஓமர் இறக்கவில்லை: தலிபான்களின் எச்சரிக்கை அறிவிப்பு.
தலிபான்களின் உயர் தலைவர் முல்லா ஓமர் மரணம் அடைந்ததாக வந்த தகவல் தவறு என தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் சபிபுல்லா முஜாகித் கூறினார்.
தங்களது தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் இணையதளத் தகவல்கள் திருடப்பட்டு புதன்கிழமை முல்லா ஓமர் மரணம் அடைந்தார் என தவறான தகவல் பரப்பப்பட்டு உள்ளது என அவர் கூறினார்.
முல்லா ஓமர் உலக அளவில் தேடப்படும் தீவிரவாத தலைவர் ஆவார். இவர் பாகிஸ்தான் குவெட்டா நகரில் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் அவர் ஆப்கானிஸ்தானில் இருப்பதாக பாகிஸ்தான் அரசும் தலிபான்களும் கூறுகிறார்கள்.
அமெரிக்க உளவுத்துறையினரின் சதியால் எங்களது தகவல்கள் களவாடப்பட்டு உள்ளன. குறிப்பிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்களை பழிவாங்குவோம் என தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிபுல்லா எச்சரித்தார்.
சபிபுல்லா முஜாகித் மற்றும் தலிபான் இரண்டாவது செய்தித் தொடர்பாளர் முகமது காரி யூசுப் ஆகியோரின் தொலைபேசி நம்பர்களில் முல்லா முகமது ஒமர் இறந்து விட்டார். அவரது ஆன்மா சாந்தி அடைய ஆண்டவன் ஆசிர்வதிக்கட்டும் என்ற தகவல் வந்தது.
தங்களது தொலைபேசி விடயங்களை திருடி தவறான பிரசாரத்தை நேட்டோ செய்வதாகவும் தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிபுல்லா முஜாகித் கூறினார்.
மரண தேவதை என்றழைக்கப்படும் நாஜியின் டைரி ஏலம்.
நாஜி படையில் மரண தேவதை என அழைக்கப்பட்ட போர் கிரிமினல் ஜோசப் மெங்கிலேவின்  டைரிகளை அமெரிக்க ஏல நிறுவனம் நாளை ஏலம் விடுகிறது.
இந்த டைரிகளில் பல பயங்கரமான கொடூர கொலை பற்றிய விவரங்கள் இடம் பெற்று உள்ளன.
இந்த டைரியை மெங்கிலே தனது சொந்த கையெழுத்தில் எழுதி உள்ளார். ஆஸ்விட்ச் பிர்கெனு மரண முகாமில் இந்த மரண மருத்துவர் பணியாற்றினார். இவர் நாஜி படையின் மரண தண்டனைகளை நிறைவேற்றக்கூடிய எஸ்.எஸ் என்ற பிரிவில் இருந்தார்.
இவரது டைரிகள் 3 லட்சம் டொலரில் இருந்து 4 லட்சம் டொலர் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏறக்குறைய 3 ஆயிரத்து 500 பக்கங்கள் கொண்ட மருத்துவர் மெங்கிலேவின் டைரியில் எழுதி இருக்கும் விடயங்கள் உலகை உலுக்குவதாக இருக்கலாம்.
இரண்டாம் உலகப்போரின் போது ஐரோப்பாவை விட்டு வெளியேறிய மெங்கிலே பிரேசிலில் வாழ்ந்தார். அவர் 1979ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்.
ஒட்டு மொத்த கொலைகளை விபரீதமான சிந்தனைகளில் கொலை  செய்த இந்த நபர் தனது டைரியில் சில கவிதைகளையும் எழுதி உள்ளார்.
கொலைகாரருக்கு கவிதை எழுதக்கூடிய மென்மையான மனம் இருக்குமா என்ற கேள்வி எழாமல் இல்லை. இந்த டைரியை தற்போது யார் ஏலத்திற்கு கொண்டு வந்து உள்ளார் என்ற விவரத்தை ஏல நிறுவனம் தெரிவிக்கவில்லை.
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் லத்தீன் அமெரிக்காவிற்கு தப்பி ஓடிய மெங்கிலே பிரேசிலில் ஒரு தண்ணீர் விபத்தில் 1979ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்.
காசா பகுதிக்கு சென்ற பிரான்ஸ் நிவாரண படகை இஸ்ரேல் தடுத்தி நிறுத்தியது.
பாலஸ்தீனம் காசா திட்டுப்பகுதியில் பொதுமக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் பரிதவிக்கிறார்கள். அங்கு சர்வதேச நிவாரண உதவி எதுவும் செல்லாமல் இஸ்ரேல் தடுத்து வருகிறது.
இந்த நிலையில் பிரான்சின் நிவாரண படகை இஸ்ரேல் நேற்று மடக்கியது. அந்த நிவாரண படகு தெற்கு இஸ்ரேலிய துறைமுகமான ஆஷ்டோட் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
பிரான்ஸ் படகு சட்டவிரோதமாக ஊடுருவியதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது. பிடிபட்ட பிரான்ஸ் நிவாரண படகு அல்கரமா என்ற பெயர் கொண்டதாகும்.
கடந்த ஜீன் மாதம் இறுதியில் 10 சர்வதேச நிவாரண படகுகள் காசா நோக்கி புறப்பட்டன. இந்த படகில் பிரான்ஸ் படகு மட்டுமே காசா எல்லையை நெருங்கிய நிலையில் இஸ்ரேலிய வீரர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
பிரான்ஸ் கொடியுடன் வந்த படகை இஸ்ரேலிய கடற்படை வீரர்கள் காசா கடற்கரைக்கு 40 கடல் மைல் தொலைவில் சர்வதேச தண்ணீர் பகுதியில் தடுத்து நிறுத்தினர்.
இஸ்ரேலிய வீரர்கள் கடும் எச்சரிக்கை விடுத்த போதும் காசாவை பிரான்ஸ் நிவாரண படகு நெருங்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த இஸ்ரேலிய ராணுவம் தீவிர நடவடிக்கையில் இறங்கியது.
இந்த நிலையில் காசாவில் ஹமாஸ் அமைப்பு செய்தி தொடர்பாளர் தாகர் அல்-நுனு இஸ்ரேல் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 2010ஆம் ஆண்டு மே மாதம் 6 நிவாரண கப்பல்களை இஸ்ரேல் தடுத்து நிறுத்தி உள்ளது.
அதன் மீது ஐக்கிய நாடுகள் சபை உரிய நடவடிக்கை எடுக்காததற்கும் அவர் குற்றம் சாட்டினார். நிவாரண பொருட்களை கொண்டு வந்த 9 துருக்கி ஆர்வலர்களையும் இஸ்ரேல் வீரர்கள் கொன்றனர்.
கடனில் சிக்கித் தவிக்கும் அமெரிக்கா: கவலையில் சீனா.
அமெரிக்கா தற்போது தனது பெரும் கடன் சுமையில் இருந்து மீள வழி தேடிக் கொண்டிருக்கும் நிலையில் அதன் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியான சீனா பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளது.
தற்போதைய சூழலில் சீனா தன்னைக் காத்துக் கொள்வதற்கு மிகச் சில வழிகளே இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் மொத்தக் கடன் தற்போது 14.3 டிரில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியான சீனா கடன் பத்திரங்களாக அமெரிக்காவிடம் இருந்து 1.16 டிரில்லியன் டொலர் அளவுக்கு வாங்கியுள்ளது.
2010 அக்டோபரில் இது 906 பில்லியன் டொலராக இருந்தது. சீனாவுக்கு அடுத்தபடியாக ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகியவை அமெரிக்காவிடம் இருந்து கடன் பத்திரங்கள் வாங்கியுள்ளன. பெரும் கடன் சுமையில் அமெரிக்கா மூழ்குவதை இரண்டாண்டுகளுக்கு முன்பே சீனா உணர்ந்திருந்தது.
2009 மார்ச் 12ம் திகதி உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் வென் ஜியாபோ கூறியதாவது: அமெரிக்காவுக்கு பெரிய அளவில் கடன் அளித்துள்ளோம். அதுபற்றி எங்களுக்குக் கவலை ஏற்பட்டுள்ளது. வெளிப்படையாகச் சொல்வதானால் நான் கவலையில் ஆழ்ந்துள்ளேன்.
அமெரிக்காவின் வார்த்தைகளில் சொல்வதானால், நம்பகத் தன்மையை நிலைநிறுத்துங்கள். சீனச் சொத்துக்களின் பாதுகாப்புக்கு உறுதியளியுங்கள் என்று வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
கடந்த வாரம் இதுகுறித்துப் பேசிய சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஹாங் லீ,"முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் பொறுப்பான கொள்கை முடிவுகளை அமெரிக்கா மேற்கொள்ளும் என நம்புகிறோம்" என்றார்.
சீனாவிடம் தற்போது அன்னிய செலாவணி இருப்பு 3 டிரில்லியன் டொலர். பிற நாடுகள் எதுவும் இந்தளவுக்கு அன்னிய செலாவணி இருப்பை மேற்கொள்ளவில்லை. இந்த இருப்பில் பெரும்பான்மை டொலர் வடிவில் தான் உள்ளன. இவை மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் கடன் பத்திரங்கள் மற்றும் டொலர் தொடர்பான பல்வேறு வடிவங்களில் பங்குச் சந்தை உட்பட அமெரிக்காவிலேயே முதலீடு செய்யப்படுகின்றன.
உள்நாட்டுச் சேமிப்பை ஊக்குவித்தல், சீன நாணயமான ரென்மின்பியின் மதிப்பை டொலரை விடக் குறைத்து வைத்துக் கொள்ளல் போன்றவை அக்கொள்கைகளில் குறிப்பிடத்தக்கவை.
ஆனாலும் அமெரிக்க பொருளாதார இறங்குமுகம், சீனாவின் வளர்ச்சிக்கு சிக்கலைத் தரும். சீனத் தயாரிப்புகளை அமெரிக்கா வாங்குவதைக் குறைத்தால் கூட வேலைவாய்ப்பு அளவு சீனாவில் குறையும்.
அதே சமயம் டொலர் பரிமாற்ற வர்த்தகம் என்பது உலகில் முன்னணியில் இருப்பதால் சீனா தன் நிலையை சாதகமாக்கிக் கொள்ள அமெரிக்காவிடம் சில புதிய ஏற்றுமதிக் கொள்கை அணுகுமுறையைக் கூட பின்பற்றலாம்.
தற்போது அமெரிக்காவின் சிக்கலான நிலை சீனாவையும் பெரும் சிக்கலுக்குள் தள்ளியுள்ளது. இதனால் சீனா தன்னை காத்து கொள்வதற்கு மிகக் குறைந்த வாய்ப்புகளே இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து சீன பொருளாதார நிபுணர் யாவோ வெய் கூறியதாவது: இது அமெரிக்கா, சீனாவுக்கு ஒரு எச்சரிக்கை. சீனாவுக்கு குழப்பமான சூழல். அமெரிக்க டொலரில் கடன் பத்திரங்களை வாங்குவது குறித்து சீனா மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
எதிர்காலத்தில் டொலர் பாதுகாப்பானதா என்பது பற்றி யோசிக்க வேண்டும். தனது அன்னிய செலாவணி இருப்பைக் குறைப்பது, ரென்மின்பியை உலகளவிலான நாணயமாக்குவது, அன்னிய செலாவணி இருப்பை வேறு நாணயங்களில் முதலீடு செய்வதன் மூலம் பொருளாதார தடுமாற்றத்தை சீனா தடுத்து நிறுத்த முடியும். ஆனால் அதிக தாமதம் சீனாவுக்கு அபாயமானது.
கனடிய அரசு அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை: ராணுவ வீரர்கள்.
கனடா ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட்ட உறுதி மொழியை அரசு நிறைவேற்றவில்லை என மூத்த வீரர்களும், போரில் காயம் அடைந்த வீரர்களும் தெரிவித்து உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாத பிரச்சனையை ஒடுக்குவதற்கு கனடா வீரர்கள் அங்கு முகாமிட்டு இருந்தனர். இந்த வீரர்கள் தங்கள் பணி முடிந்து இந்த மாதம் 17ஆம் திகதி நாடு திரும்பினர்.
ஏறக்குறைய 950 வீரர்கள் போர் அல்லாத பயிற்சி பணிகளுக்காக ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியான காபூலில் உள்ளனர். நாடு திரும்பிய வீரர்களில் பலர் காயம் அடைந்து இருந்தனர்.
மூத்த வீரர்களுக்கும், காயம் அடைந்த வீரர்களுக்கும் உரிய உதவி அளிக்கபப்படும் என ஸ்டீபன் ஹார்ப்பரின் பழமைவாத அரசு உறுதி அளித்து இருந்தது.
ராணுவ வீரர்களுக்கு உதவி அளிப்பதே தமது அரசின் முன்னுரிமை என்றும் பிரதமர் கூறி இருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் போரில் காயம் அடைந்த வீரர்களுக்கு 200 கோடி டொலர் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அரசு உறுதி அளித்து இருந்தது.
ஆனால் நாடு திரும்பிய வீரர்களுக்கு பழமைவாத அரசு அளித்த உறுதிப்படி நிதி உதவி அளிக்கப்படவில்லை. இது அந்த வீரர்களுக்கு மன புழுக்கத்தையும் வேதனையையும் தந்துள்ளது.
பணியில் ஈடுபட முடியாத மூத்த வீரர்கள் அல்லாத காயம் அடைந்த வீரர்களுக்கு ஆயிரம் டொலர் அதிகரிப்பு திட்டம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இரண்டாவது திட்டத்தில் பணி வாய்ப்பு காண முடியாத வீரர்களுக்கு நிதி உதவி அதிகரிப்பும், மூன்றாவது திட்டமாக வீரர்கள் செயல்பட முடியாத நிலைக்கு ஒட்டு மொத்த தொகை என மூன்று வகை திட்ட உதவிகளை கனடா அரசு அறிவித்து உள்ளது.
இந்த மூன்று வகை திட்டங்களுக்கும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு 129.9 மில்லியன் டொலர் நிதி உதவி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
சிரியா மீது பொருளாதார தடை: ஐரோப்பிய யூனியன் ஆலோசனை.
சிரியா அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கிளர்ச்சியால் ஆயிரக்கணக்கான மக்கள் துருக்கி நாட்டிற்குள் தஞ்சம் புகுந்து வருகின்றனர். மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருக்கும் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று ஏற்கனவே பிரான்சு நாடு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்நாட்டு அதிபருக்கு அளித்து வந்த பயங்கர ஆதரவை கத்தார் நாடு சமீபத்தில் வாபஸ் பெற்றதுடன் சிரியா தலைநகர் டமாஸ்கசில் இருந்த தூதரகத்தையும் மூடியது.
இதையடுத்து சிரிய நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐரோப்பிய யூனியன் ஆலோசித்து வருகிறது. 
முர்டோக் மீது மர்ம நபர் திடீர் தாக்குதல்: பாராளுமன்றத்தில் பரபரப்பு.
தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து பாராளுமன்ற கமிட்டி முன்பு ஆஜராகியிருந்த முர்டோக் மீது ஆசாமி ஒருவர் திடீர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரிட்டனில் பல்வேறு தொலைபேசி ஒட்டுக் கேட்பு குற்றச்சாட்டில் சிக்கிய நியூஸ் ஆப் தி வேர்ல்டு பத்திரிகை சமீபத்தில் மூடப்பட்டது.
இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலையாயினர். இந்நிலையில் நேற்று பிரிட்டன் பாராளுமன்ற எம்.பி.க்கள் கொண்ட தேர்வு கமிட்டி முன்பு நியூஸ் கார்ப்பரேஷன் தலைமை நிர்வாக அதிகாரி ரூபர்ட் முர்டோக், இவரது மகன் ஜேம்ஸ் முர்டோக் மற்றும் நியூஸ் இன்டர்நேஷனல் முன்னாள் தலைவர் ரெபெக்கா புரூக்ஸ் ஆஜராகி பதிலளித்தனர்.
அப்போது டுவிட்டர் இணையதள ஆர்வலர் ஒருவர் திடீரென முர்டோக்கை நோக்கி வேகமாக வந்து அவர் மீது ஷேவிங் கிரீமை எடுத்து மேல் ‌ஊற்றி தாக்கினார். இதனால் பாராளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே பாராளுமன்ற பாதுகாவலர்கள் அவனை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவன் பெயர் ஜானிமார்பில்ஸ் என்ற ஜோனாதன்(44) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
அதிபர் மாளிகை மீது ராக்கெட் குண்டு வீசித் தாக்குதல்.
கினியா நாட்டின் அதிபர் இல்லம் மீது கிளர்ச்சியாளர்கள் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில் அதிபர் மாளிகை பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டார். இதில் அதிபர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினார்.
ஆப்ரிக்க நாடான கினியா நாட்டின் அதிபராக ஆல்பா கோன்டே(73) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தான் பதவியேற்றார். ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர் இவர் தான்.
பிரான்ஸ் நாட்டிடமிருந்து கினியா 1958ம் ஆண்டு விடுதலை பெற்றது. இந்நிலையில் நேற்று தலைநகர் கொனாக்ரேவில் உள்ள அதிபர் இல்லத்தில் நேற்று மாலை கிளர்ச்சியாளர்கள் திடீரென ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த திடீர் தாக்குதலில் அதிபர் மாளிகை பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 3 பொலிசார் படுகாயமடைந்தனர். அதிபர் ஆல்பா கோன்டே காயமின்றி உயிர்தப்பினார்.
இத்தாக்குதல் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பிரதமர் முகமது சையத்போபானா பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டத்தை அவசரமாக கூட்டி விவாதித்ததாகவும் ‌தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணமான பதவி நீக்கம் செய்யப்பட்ட மாஜி ராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார். 
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF