Wednesday, December 28, 2011

NEWS OF THE DAY!

மஹாராஜா ஊடக நிறுவனம் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை.
மஹாராஜா ஊடக நிறுவனம் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தா தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் சிரச தொலைக்காட்சி செயற்பட்டதாக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தார். தமது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்திருந்தனர்.
சிறிகொத்தா தாக்குதல் சம்பவத்திற்கும் மஹாராஜா ஊடக நிறுவனத்திற்கும் இடையில் ஏதேனும் தொடர்பு காணப்படுகின்றதா என்பது குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜெனிவாவில் அடுத்த ஆண்டு சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர மேற்குநாடுகள் முயற்சி!– கொழும்பு ஊடகம்.
ஜெனிவாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேவையின் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான- கடுந்தொனியிலான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரும் முயற்சியில் மேற்கு நாடுகள் இறங்கியிருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.கடுமையான சொற்களில் அமைந்த இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மேற்கு நாடுகள், இதுபற்றி முன்னணி ஆசிய நாடுகளுடன் இராஜதந்திர ரீதியிலான ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளன.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் காணப்படும் மயக்க நிலை குறித்தும் மேற்கு நாடுகள் இராஜத்தந்திர ரீதியில் கலந்துரையாடியுள்ளன.
ஜெனிவாவில் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சியில் அனைத்துலக அரசசார்பற்ற நிறுவனங்களும், மேற்கு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், 2012ம் ஆண்டு சிறிலங்காவுக்கு “தீயணைப்பு'' ஆண்டாகவே அமையும் என்று கொழும்பிலுள்ள இராஜதந்திரி ஒருவர் கூறியுள்ளார்.
ஆணைக்குழு அறிக்கையில் சிங்களவர் குறித்து சுட்டிக்காட்டப்படவில்லை: அமைச்சர் சம்பிக்க ரணவக்க.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சிங்களவர்கள் தொடர்பில் எந்தவொரு விடயமும் சுட்டிக்காட்டப்படாமை பாரிய குறைபாடாகும் என ஹெல உருமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் தமிழ், சிங்களம், முஸ்லிம்கள் என 9878 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பாக ஆணைக்குழு அறிக்கையில் எவ்வித பரிந்துரையும் இணைக்கப்படவில்லை எனவும் ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி.யினர் ஆயுதங்களை வைத்திருப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள நல்லிணக்க ஆணைக்குழு, எதற்காக ஆயுதம் ஏந்தினார் என்பது குறித்தோ அல்லது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஏற்பட்ட அசாதாரண நிலைமைகள் குறித்தோ நல்லிணக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்தில் தீ விபத்து.
கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாகவும் இத்தீ விபத்தினால்  ஏற்பட்டுள்ள சேதங்கள் பற்றி இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும்  தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு வீரர்கள்  தெரிவித்துள்ளனர்.


மேல்மாகாண ஆளுனர் அலவி மௌலானாவின் கருத்துக்கு காத்தான்குடி முஸ்லிம் நிறுவனங்கள் கண்டனம்.
கிழக்கு மாகாணத்தில் வகாபிச இயக்கம் உள்ளதாகவும் அவ்வியக்கத்திற்கு அரபு நாடுகள் உதவி வழங்குவதாகவும் ஆயுதப்பயிற்சி வழங்குவதாகவும் மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா தெரிவித்தமைக்கு காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.சம்மேளனத்தின்  தலைவர் எம்.ஐ. சுபையிர், செயலாளர் அஸ்ஷேய்க் ஏ.எம். அன்சார் நவமி ஆகியோர் கையெழுத்திட்டு இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 
மேலும் அவ்வறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இந்நாட்டில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்கள் சம்பந்தமாக அவர்களுடைய இருப்பு நிலைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதத்தில் பல்வேறு சிங்கள மற்றும் தமிழ் கடும்போக்காளர்கள் அவ்வப்போது முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் விதத்தில் பல்வேறு அறிக்கைகளை விடுவதை நாம் அண்மைக்காலமாக அவதானித்து வருகின்றோம்.  குறிப்பாக கிழக்கு வாழ் முஸ்லிம்களை மையப்படுத்தியதாக பல்வேறு பொய்யான, அபாண்டமான, ஆதாரமற்ற கருத்துக்களைத் வெளியிட்டு  முஸ்லிம்களின் இருப்பு நிலைக்கு அச்சுறுத்தல் விடுப்பதை நாம் அவதானிக்கின்றோம்.
அரசியலை வயிற்றுப்பிழைப்புக்காக பயன்படுத்தும் சில அரசியல்வாதிகள் தங்களது எஜமானார்களைத் திருப்திப்படுத்தும் வகையில் பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுவதால் பாரிய சிக்கல்களை இந்த முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்றது. அரபு நாடுகளில் இருக்கின்ற போராட்டக்குழுக்களோடு கிழக்கு வாழ்  முஸ்லிம்களைத் தொடர்புபடுத்தி அவர்கள் அடிப்படைவாதிகள் என்றும் வஹாபிகள் என்றும் கூறி அவர்களது தூய இஸ்லாமிய வாழ்வை கொச்சைப்படுத்துகின்ற நடவடிக்கைகளை எமது சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கின்றது.  எமது நாட்டின் கிழக்கு மாகாணத்தில் வகாபிச இயக்கம் உள்ளதாகவும் அவ்வியக்கத்திற்கு அரபு நாடுகள் உதவி வழங்குவதாகவும் ஆயுதப்பயிற்சி வழங்குவதாகவும் மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா அறிக்கை விட்டுள்ளார்.
வகாபிச இயக்கம் என்ற ஓர் இயக்கம் கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல உலகில் எங்குமே இல்லை. அரபு நாடுகளோடு எமது நாடு சிநேகபூர்வமான உறவினைப் பேணிவரும் இக்கால கட்டத்தில் அலவி மௌலானா இவ்வறிக்கையை விட்டிருப்பதானது இலங்கையின் அரபு நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
1991 - 10 - 27ஆம் திகதி கொழும்பு கோட்டைப் பள்ளியில் நடைபெற்ற அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மத்திய குழு கூட்டத்தில் 'இலங்கையில் இஸ்லாமியப் பிரசாரப் பணியில் ஈடுபட்டுவரும் தஃவா இயக்கங்களான (மார்க்கப் பிரசார அமைப்புகள்) தப்லீக் ஜமா-அத், தௌஹீத்  ஜமா-அத், ஜமா-அதே இஸ்லாமி ஆகிய மூன்று இயக்கங்களின் இறுதி இலட்சியம் ஒன்றாக இருப்பினும் அவை கையாளும் பிரசார முறைகளைப் பொறுத்தே வேறுபாடுகள் காணப்படுகின்றன. எனவே, இந்த ஜமா-அத்துகளில் எதுவும் வழிகெட்டது என்றோ சுன்னத் வல் ஜமா-அத் அகீதாவுக்கு மாற்றமானவை என்றோ கூறமுடியாது. மூன்று ஜமா-அத்துகளும் நேர்வழியில் உள்ளவைதான் என்பது ஜம்இய்யாவின் நிலைப்பாடாகும் என தெளிவாக பத்வா வெளியிட்டுள்ளது.
இலங்கையில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களில் இம்மூன்று தஃவா இயக்கங்களினதும் செல்வாக்குகள் கூடிக்குறைந்த அளவுகளில் மக்களால் பின்பற்றப்படுகின்றன. சில பிரதேசங்களில் தப்லீக் ஜமா-அத்தின் செல்வாக்கு கூடுதலாகவும் சில பிரதேசங்களில் தௌஹீத் ஜமா-அத்தின் செல்வாக்கு கூடுதலாகவும் இன்னும் சில பிரதேசங்களில் ஜமா-அத்தே இஸ்லாமியின் செல்வாக்கு கூடுதலாகவும் காணப்படுகின்றது. இதுதான் இன்றுள்ள யதார்த்தம்.இந்த இயக்கங்களின் வருகையின் பின்னால் இஸ்லாத்தில் சடங்கு சம்பிரதாயமாகப் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகள், மௌட்டீக கலாசாரம் என்பன குறைந்து கொண்டே வருகின்றன. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிலரே இவ்வாறான உண்மைக்குப் புறம்பான அறிக்கைகளை விட்டு, பொய்க்கருத்துக்களைத் தெரிவித்தும் வருகின்றனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையினூடாக 7 கோடி ரூபா வருமானம்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்ட நாள் முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் பயணித்த வாகனங்களினால் ஏழு கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட வருமானம் கிடைத்துள்ளதாக, துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் ஆர்.டப்ளியூ.ஆர்.பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
நத்தார் தினத்தில் மாத்திரம் 12 ஆயிரம் வாகனங்கள் அதிவேக வீதியைப் பயன்படுத்தியுள்ளதாகவும் இதனூடாக 24 இலட்சம் ரூபா வருமானம் ஈட்டப்பட்டதாகவும் துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், இந்நெடுஞ்சாலையினூடாக இதுவரையில் இரண்டு இலட்சம் வாகனங்கள் பயணித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
பரீட்சை பெறுபேறு குழறுபடி! இலங்கையின் உயர்கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும்!- வலுக்கும் கோரிக்கைகள்.
இலங்கையின் உயர்கல்வி அமைச்சர் எஸ் பி திஸாநாயக்க பதவி விலகவேண்டும் என்று கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன. ஏற்கனவே இலங்கை ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன.
இந்தநிலையில் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுஜீவ சேரசிங்க மற்றும் கபீர் காசிம் ஆகியோரும் உயர்கல்வி அமைச்சர் பதவிவிலகவேண்டும் என்று கோரியுள்ளனர்.
நேற்று முன்தினம் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளின் முடிவுகளில் குழறுபடிகள் ஏற்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் வெளியிடப்பட்ட முடிவுகளின் மாவட்ட மற்றும் தேசிய தரங்கள் நேற்று ரத்துச்செய்யப்பட்டன. இதற்காக தொழில்நுட்ப பிரச்சினை காணமாக காட்டப்பட்டது. பின்னர் திருத்தப்பட்ட மாவட்ட மட்ட மற்றும் தேசியமட்ட தரங்கள் பிரசுரிக்கப்பட்டதாக இலங்கையின் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில் குறித்த பிழைகளுக்கு பொறுப்பேற்று உயர்கல்வி அமைச்சர் பதவி விலகவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.இலங்கையின் அதிகாரிகள் மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். எனினும் நடந்தது சிறு பிழை என்று அது திருத்தப்பட்டு விட்டதாகவும் அமைச்சர் எஸ் பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவசரமாக பரீட்சை பெறுபேறு வெளியிட்டால் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்த நேரிடும் - சஞ்சீவ பண்டார

அவசர அவசரமாக மீண்டும் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டால் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்த நேரிடும் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார்.
பெறுபேறு தொடர்பில் எழுந்துள்ள குழப்ப நிலைமைகள் விசாரணை செய்யப்பட்டு அதன் பின்னர் பெறுபேறுகள் வெளியிடப்பட வேண்டும்.
அவசரமாக பெறுபேறுகள் வெளியிடப்பட்டால் பல்கலைக்கழக மாணவர்கள், உயர்தர மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் இணைந்து வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.தகுதியற்றவர்கள் உயர் பதவிகளை வகிப்பதனால் இவ்வாறான நிலைமைகள் ஏற்படுகின்றன.
நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின், மாவட்ட மற்றும் தேசிய நிலைகள் தொடர்பில் மட்டுமன்றி பேறுபேறுகளிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, நேற்றிரவு திருத்தி அமைக்கப்பட்ட பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, உயர்கல்வி மற்றும் கல்வி அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதில் ஏற்பட்ட குழப்ப நிலைமைகளுக்கு கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர்கள் பொறுப்பு சொல்ல வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பரீட்சை பெறுபேறு குழப்பம் மாணவர் சமூகத்தின் எதிர்காலத்தையே பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை இலங்கையின் பரீட்சை திணைக்களம் இவ்வாறான நெருக்கடியை சந்தித்த முதல் சந்தர்ப்பம் இதுவென குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவில் பிரபல சமூக ஆர்வலருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை.
சீனாவின் பிரபல ஜனநாயக உரிமைப் போராளி சென் ஷி என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்புக்கு ஐ.நா மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.சீனாவில் மனித உரிமை மற்றும் ஜனநாயகப் போராளிகள், ஆர்வலர்கள் மீது அரசு ஏதாவது ஒரு குற்றம் சுமத்தி நீண்ட நாள் சிறைத்தண்டனை வழங்கி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறது.
இதுபோன்ற மனித உரிமை மீறல்களுக்காக அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளும், ஐ.நா உட்பட பல அமைப்புகளும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன. எனினும் சீனா தனது நடவடிக்கைகளைக் கைவிடவில்லை.மனித உரிமைப் போராளியும், கடந்த 1989ம் ஆண்டில் நடந்த தியானன்மென் போராட்டத்தில் பங்கேற்றவருமான சென் வெய்(42), கடந்த பிப்ரவரி மாதம் 21ம் திகதி காவல்துறையினரால் விசாரணைக்காக கடத்திச் செல்லப்பட்டார்.
அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. அதேநாள் இரவு காவல்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் அவர் அரசுக்கு எதிராக மக்களை சதி செய்யத் தூண்டி விடும் வகையில் கட்டுரைகளை எழுதி பத்திரிக்கைகளில் பிரசுரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.அவர் மீதான வழக்கு தொடர்ந்தது. கடந்த 23ம் தேதி வெளியிடப்பட்ட தீர்ப்பில் அதே காரணத்திற்காக அவருக்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
இந்நிலையில் தியானன்மென் சதுக்கப் போராட்டத்தில் பங்கேற்றவரும், ஜனநாயக உரிமைப் போராளியுமான சென் ஷியையும் இப்போது சீனா சிறையில் தள்ளியுள்ளது. இவர் மீதும் சென் வெய் மீது சுமத்திய அதே குற்றத்தை சீனா சுமத்தியுள்ளது.குய்யாங் நகரின் நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில் ஷிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமை ஆணையத் தலைவர் நவிபிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில், இது மிகக் கொடிய தண்டனை. கடந்த இரு ஆண்டுகளை விட தற்போது சீனாவில் கருத்துச் சுதந்திரத்தின் கழுத்து நெரிக்கப்படுகிறது. இதுபோன்ற ஆர்வலர்களை சீன அதிகாரிகள் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.அரபு நாடுகளில் ஏற்பட்டுள்ள புரட்சியைப் போல சீனாவிலும் நடந்து விடக் கூடாது என்பதற்காக அந்நாட்டு அரசு மனித உரிமை, ஜனநாயகம், சமத்துவம் என்ற பெயரில் கருத்துக்களை வெளியிடும் பிரபல போராளிகளையும், ஆர்வலர்களையும் கடுமையாகத் தண்டித்து வருகிறது.
அமெரிக்கா - பாகிஸ்தான் உறவில் மேலும் விரிசல்.
அமெரிக்கா, பாகிஸ்தான் இடையேயான உறவு சீர்குலையத் தொடங்கியுள்ளதை அடுத்து பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானுடனான தனது உறவை அளவோடு வைத்துக் கொள்ள அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
இந்தாண்டில் அமெரிக்கா, பாகிஸ்தான் இடையிலான உறவுகள் பல்வேறு காரணங்களால் சீர்குலையத் தொடங்கின. கடந்த நவம்பர் மாதம் 26ம் திகதி நிகழ்ந்த நேட்டோ தாக்குதல் சீர்குலைவின் வேகத்தை மேலும் அதிகரித்தது. இந்நிலையில் பாகிஸ்தான் உடனான தனது உறவை அமெரிக்கா மறு பரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இருந்து வெளியாகும் தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதாவது: பாகிஸ்தான் உடனான அமெரிக்காவின் விரிவான பாதுகாப்பு உறவு முடிந்து விட்டது.அதனால் பயங்கரவாதத்திற்கு எதிரான பாகிஸ்தான் உடனான உறவை இனி அளவோடு வைத்துக் கொள்ள அமெரிக்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இதனால் பயங்கரவாதிகள் மீதான தாக்குதல் ஆப்கானில் நேட்டோவுக்கான பொருட்கள் விநியோகம் உள்ளிட்டவை பாதிக்கப்படும் என்பதையும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்த அளவான உறவால் இனி பாகிஸ்தான் பகுதியில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் குறையும். ஆப்கானில் நேட்டோவுக்கான பொருள் விநியோகம் குறையும்.அதேபோல் பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் நிதியுதவியும் குறைக்கப்படும். பாகிஸ்தானும், அமெரிக்கா உடனான தனது உறவை மறுபரிசீலனை செய்வோம் எனக் கூறியுள்ளது.
இருதரப்பிலான இராணுவ ஒத்துழைப்பு, உளவுத் தகவல்கள் பரிமாற்றம் உள்ளிட்டவை குறித்து விரைவில் சில ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்.இதற்கிடையில் ஆப்கானில் உள்ள நேட்டோவுக்கான உணவு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விநியோகம் நிறுத்தப்பட்டு நேற்றுடன் ஒரு மாதம் முடிவடைந்து விட்டது.
லண்டனில் பாதாள ரயில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பாதாள ரயில் போக்குவரத்து ஊழியர்கள் சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இங்கிலாந்தில் பாதாள ரயில் போக்குவரத்து நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கிறது. இதனை அந்நாட்டு மக்கள் பெரிதும் நம்பியிருக்கின்றனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதாலும், விடுமுறை என்பதாலும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதாள ரயிலில் பயணித்தனர்.
இதற்காக அரசு ரயில்வே ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்தது. ஆனால் இன்னமும் வழங்காதை கண்டித்து சம்பள உயர்வு கோரியும் நேற்று ஏ.எஸ்.எல்.எப் எனப்படும் ரயில்வே ஊழியர்கள் 24 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.இதனால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பெரும்பாலான பொதுமக்கள் பேருந்துகளிலும், கார்களிலும் பயணித்தனர்.
வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு அனுமதியளிக்க சவூதி அரேபியா முடிவு.
சவூதி அரேபியா தனது உள்நாட்டு விமான போக்குவரத்திற்கு வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு அனுமதியளிக்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு பொது விமானப் போக்குவரத்து துணை ஆணையத்தின் தலைவரும், ஜி.ஏ.சி.ஏ இராணுவ மற்றும் விமான ப‌ோக்குவரத்து துறை அமைச்சருமான ஃபைக் அல்-அப்துல்லா வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் தற்போது உள்நாட்டு விமான சேவை அதிகரித்து வருகிறது.இதனை சவூதி ‌அரேபியா விமானச்சேவை மையம், தேசிய விமான போக்குவரத்து மையம் ஆகியவை சேவை செய்து வருகின்றன. நாள் ஒன்று 27 மில்லியன் மக்கள் உள்நாட்டு விமான சேவை மற்றும் சர்‌வதேச சேவையினை பயன்படுத்துகின்றனர்.
இது தற்போது பெருகி வருவதால் சவூதி விமான போக்குவரத்து சந்தையில் இதன் மதிப்பு அதிகரித்துள்ளது. இதனை சமாளிக்க தற்போது உள்நாட்டு விமான போக்குவரத்தினை மேற்கொள்ள, வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது என ஜி.ஏ.சி.ஏ முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அடுத்த ஆண்டு ஜனவரி மூன்றாம் வாரம்(ஜனவரி 23-ம் திகதி) டெண்டர் கோரப்பட்டு  டெண்டர் மூலம் தெரிவான வெளிநாட்டு விமான நிறுவனங்களைச் சேர்ந்த நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அந்த விமான நிறுவனங்களுக்கு உரிய உரிமம் வழங்கப்படும்.இவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் சவூதி அரேபியாவின் எந்த விமான நிலையங்களிலும் தங்களது உள்நாட்டு விமான சேவையினை தொடங்கலாம். சேவையின் தரத்தினை பொறுத்து அவர்களுக்கு சர்வதேச விமான சேவையினையும் வழங்க அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இராணுவத் தலைமை தளபதி, ஐஎஸ்ஐ தலைவர் பதவி நீக்கம்: கிலானி மறுப்பு.
பாகிஸ்தான் இராணுவத் தலைமை தளபதி கயானி மற்றும் ஐஎஸ்ஐ தலைவர் அகமது சுஜா பாஷா ஆகியோரை பதவியிலிருந்து நீக்க அரசு முயற்சிப்பதாக கூறப்படுவதை பிரதமர் கிலானி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.அவர்கள் மீது அதிருப்தியிருந்தால் முன்னதாக அவர்களுக்கு பணி நீட்டிப்பை எனது அரசு வழங்கியிருக்காது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் இராணுவப் புரட்சி ஏற்படவுள்ளதாகவும், அதைத் தடுக்க அமெரிக்கா உதவ வேண்டும் என்றும் ரகசிய கடிதம் அனுப்பப்பட்ட விவகாரம் வெளியானது. இதைத் தொடர்ந்து இராணுவத்துக்கும், அரசுக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை எனக் கூறப்படுகிறது.
மேலும் இந்த ரகசிய கடித விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை கயானியும், பாஷாவும் அணுகிய விவகாரமும் அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.இந்த நிலையில் இராணுவத் தளபதியும், உளவுத் தலைவரும் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்று சில பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் கிலானி செய்தியாளர்களிடம் கூறியதாவது, அவர்கள் இருவரையும் அரசு பதவி நீக்கம் செய்ய முயற்சிப்பதாக கூறுவது தவறானது. சில சந்தர்ப்பவாதிகள் இதுபோன்ற வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். முட்டாள்கள் மட்டுமே இவ்வாறு கூறுவர்.கயானி மற்றும் பாஷா மீது எனக்கு அதிருப்தி இருந்திருந்தால், பணி நீட்டிப்பு வழங்கியிருக்க மாட்டேன். அவர்களது செயல்பாடு எனக்கு திருப்தியளிக்கிறது.அரசுக்கும், இராணுவத்துக்கும் இடையே எந்தவிதமான பிரச்னையுமில்லை. அதுபோன்ற நெருக்கடி இருந்தால் எப்படி அரசை நடத்த முடியும்.
கயானி ஜனநாயகத்தின் ஆதரவாளர். தற்போது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில் அவர்களை எப்படி பதவியில் இருந்து நீக்க முடியும்.இராணுவத் தலைமையுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன் என்றார் பிரதமர் கிலானி.கடந்த 2010ம் ஆண்டில் இராணுவத் தலைமை தளபதி ஜெனரல் அஷ்பக் பர்வேஸ் கயானிக்கு 3 ஆண்டுகளும், ஐஎஸ்ஐ தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது சுஜா பாஷாவுக்கு ஓராண்டும் அரசு பணி நீட்டிப்பு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 22ம் திகதி நாடாளுமன்றத்தில் பேசும் போது, ஒரு நாட்டுக்குள் மற்றொறு நாடு செயல்படுவதை அனுமதிக்க முடியாது என்றீர்களே. அந்தக் கருத்து இராணுவத் தலைமைக்கு எதிராகக் கூறப்பட்டதா என்று கிலானியிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.இதற்கு பதிலளித்த பிரதமர் கிலானி, அந்தக் கருத்து பாதுகாப்புத் துறை செயலாளர் காலித் நயீம் லோதி குறித்து நான் கூறியது என்றார்.
அமெரிக்காவில் உறவினர்கள் 6 பேரை சுட்டுக் கொன்று இளைஞர் தற்கொலை.
அமெரிக்காவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உறவினர்கள் 6 பேரை சுட்டுக் கொன்று விட்டு தன்னையும் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் ஒருவர்.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள லிங்கன் வைன்யார்டு பகுதியில் இச்சம்பவம் நடந்தது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது இத்துயர சம்பவம் நிகழ்துள்ளது. சம்பவம் நடந்த வீட்டில் இரு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒரே குடும்பத்தின் 3 தலைமுறையினரும் இச்சம்பவத்தில் மாண்டது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.
வட கொரிய ஜனாதிபதியின் மகனுக்கு கூடுதல் அதிகாரங்கள்.
கடந்த வாரம் காலமான வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங்கின் அடுத்த வாரிசாக அவரது மூன்றாவது மகன் கிம் ஜோங் உன் நியமிக்கப்பட்டுள்ளார்.இவருக்கு அரசியலிலும், இராணுவத்திலும் அதிக அதிகாரம் அளிக்கும் பொருட்டு உயர் அதிகார அமைப்பின் தலைவராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை கிம் ஜோங் உன்-ஐ அநாட்டு பத்திரிகைகள் உயர் தலைவர் என குறிப்பிட்டுள்ளன. 12 லட்சம் இராணுவ வீரர்களைக் கொண்ட வட கொரிய இராணுவம் தனது முழு ஆதரவை புதிய தலைவருக்கு அளிக்க முன்வந்தது.
இதற்கான உறுதிமொழியை அனைத்து இராணுவத்தினரும் எடுத்துக் கொண்டனர். வட கொரியாவில் தொழிலாளர் கட்சி, வட கொரிய மக்கள் இராணுவம், தேசிய பாதுகாப்பு அமைப்பு என்ற மூன்று முக்கிய அமைப்புகள் உள்ளன. இந்த மூன்று அமைப்பின் தலைவராக கிம் ஜோங் இருந்தார்.கடந்த ஆண்டு தனது மூன்றாவது மகனான கிம் ஜோங் உன்-ஐ அடுத்த தலைவராக தெரிவு செய்தார். இப்போது வட கொரியாவின் மூன்றாவது தலைமுறை ஜனாதிபதி கிடைத்துள்ளார்.
ரஷ்யாவில் புடினுக்கு எதிரான ஆர்வலருக்கு சிறைத்தண்டனை.
ரஷ்யாவில் பிரதமர் விளாடிமிர் புடினுக்கு எதிராகப் போராடி வரும் பிரபல ஆர்வலருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 10 நாள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.ரஷ்யாவில் கடந்த 4ம் திகதி நடந்த நாடாளுமன்ற தேர்தலில் புடினின் ஆளும் ஐக்கிய ரஷ்ய கட்சி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கோபம் கொண்ட மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டங்களில் நாட்டின் பிரபல மனித உரிமை மற்றும் ஜனநாயக ஆர்வலர்கள் பங்கேற்று வருகின்றனர். இவர்களில் ஒருவரான செர்கெய் உடல்ஸ்டோவ் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றதற்காக ஏற்கனவே 15 நாள் சிறைத்தண்டனை பெற்றார்.இந்நிலையில் மாஸ்கோ நீதிமன்றம் ஒன்று அவர் அக்டோபரில் பெற்ற சிறைத்தண்டனையை சரியான முறையில் நிறைவு செய்யவில்லை என்பதால் 10 நாள் சிறைத்தண்டனை அளித்து நேற்று தீர்ப்பு வழங்கியது.
சிறையில் இருக்கும் உடல்ஸ்டோவ் ஏற்கனவே தனக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து சிறையில் உண்ணா நோன்பு மேற்கொண்டார். இந்நிலையில் தனக்கு மேலும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் அதையும் எதிர்த்து உண்ணா நோன்பு இருக்கப் போவதாக எச்சரித்திருந்தார்.இதற்கிடையில் சோவியத் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி மிக்கெயில் கோர்பச்சேவ் நேற்று அளித்த பேட்டியில், பிரதமர் புடின் பதவி விலக வேண்டும். ஏற்கனவே அவர் இரு முறை ஜனாதிபதியாகவும், ஒரு முறை பிரதமராகவும் இருந்து விட்டார். அதுபோதும். இல்லையெனில் அதிகார வர்க்கத்தைச் சுற்றி ஒரு தனிக் குழுக்கள் உருவாகிவிடும் என்றார்.
பிலிப்பைன்சில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 1500ஐத் தொட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 1500ஐத் தொட்டது.தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தொடர்ந்து இறந்தவர்களின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ககயான் டி ஓரோ பகுதியில் 891 பேரும், லலிகன் நகரத்தில் 451 பேரும் எஞ்சியவர்கள் அருகில் உள்ள நகரங்களிலும் பலியாகியுள்ளனர்.இந்த வெள்ளத்தில் பலியான அனைவரின் உடல்கள் மீட்கப்படும் வரை தேடும் பணி தொடரும் என தலைமை அதிகாரி கூறினார்.
ஜனாதிபதி பதவி விலக வேண்டாம்: ஜேர்மன் மக்கள் கருத்து.
ஜேர்மன் ஜனாதிபதி கிறிஸ்டியன் உல்ப் தனது நண்பரின் மனைவியிடமிருந்து கடனாகப் பெற்ற பெருந்தொகையை வெளியே சொல்லாமல் மறைத்து விட்டார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது எழுந்தது.இதன் காரணமாக அவர் பதவி விலக வேண்டுமென்று அரசியல் அறிஞர்கள் விமர்சித்ததை மக்கள் ஏற்கவில்லை.
பில்டு என்ற செய்தித்தாள் அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பில், ஜனாதிபதி மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை மோசம் போனாலும் இதற்காக இவர் ஜனாதிபதி பதவியை விட்டு இறங்க வேண்டியதில்லை என்று மக்கள் தெரிவித்தனர்.இந்தக் கருத்துக் கணிப்பில் 50 சதவீதம் பேர் உல்ப் தனது பதவியைப் பயன்படுத்தி தனது நண்பர்களுக்கு உதவினார் என்றும், 48 சதவீதம் பேர் இவர் மீது பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை என்றும், 73 சதவீதம் பேர் இதற்காக இவர் பதவி விலக வேண்டாம் என்றும் கூறினர்.கடந்த சில வாரங்களாக உல்ப் மீது கடும் கண்டனக்குரல் எழுப்பப்பட்டது. அவருக்கு ஆதரவாகச் சிலரும் எதிராகச் சிலரும் இரு பிரிவாகி வாதித்தனர்.
கடந்த வாரம் இன்னொரு குற்றச்சாட்டும் இந்த விவாதங்களுக்கு வலுச் சேர்த்தது. இவருடைய புத்தகத்தின் விற்பனைக்கும், விளம்பரத்திற்கும் ஒரு தொழிலதிபர் உதவினார் என்பது தான் அந்தக் குற்றச்சாட்டு.தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு உல்ப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுவிட்டார். இதனால் மக்கள் இந்தப் பிரச்னைகளை பெரிதாக்கவில்லை. மேலும் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் போன்ற பெரிய அரசியல் புள்ளிகளின் ஆதரவும் உல்புக்குத் தொடர்ந்து கிடைத்து வருகிறது.
பிரெஞ்சு விமான நிலைய பணியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
பிரான்ஸ் நாட்டில் விமான நிலையங்களில் காவல் பணியில் ஈடுபட்டவர்கள் 11 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இவர்களின் முக்கியத் தொழிற் சங்கங்கள் தற்பொழுது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒரு முடிவுக்கு வந்துள்ளது.காவல் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் தங்களது மாதச் சம்பளத்தில் 200 யூரோ உயர்த்திக் கேட்டனர். ஆனால் முதலாளிகள் இவர்களுக்கு ஆண்டுதோறும் ஊக்கத்தொகை அளிப்பதாக உறுதி கொடுத்தனர்.
இதற்கிடையில் பிரான்சின் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி இராணுவ வீரர் மற்றும் காவல் துறையினரை விமான நிலையங்களில் காவல் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்தார். இதனால் கிறிஸ்துமஸ் விடுமுறைக் காலத்து விமானப் போக்குவரத்துகள் தடையின்றி நடைபெற்றன.வேலை நிறுத்தத்தால் பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை. சில விமானங்கள் மட்டும் சற்று கால தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.
பிரிட்டனில் எதிர்வரும் 2012ஆம் ஆண்டில் நிதிநெருக்கடி ஏற்படும்: ஆய்வுக்கழகம் எச்சரிக்கை.
எதிர்வரும் 2012ஆம் ஆண்டில் பிரிட்டனின் பொருளாதாரச் சூழ்நிலை மிகவும் மந்தமாகவே இருக்கும், நிதி நெருக்கடி நிலை தோன்றக்கூடும் என்று ஆய்வுக்கழகம் எச்சரித்துள்ளது.யூரோ மண்டல நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பல நாடுகள் தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த பலவிதமான கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்தன.இந்தக் கட்டுப்பாடுகளை பிரிட்டனில் அறிமுகம் செய்தால் இங்கு பொருளாதார வளர்ச்சி அதிகரிக்காது, குறையத்தான் செய்யும். இத்தகவலை புத்தாண்டுச் செய்தியாக ஆய்வுக்கழகத்தின் தலைமை பொருளியலாளர் டோனி டால்ஃபின் தெரிவித்தார்.
யூரோ மண்டல நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை நாடுகள் எடுத்து வருகின்றன. இதனால் விளைச்சலும் உற்பத்தியும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் இன்னொரு பொருளாதார நிதி நெருக்கடி யூரோ மண்டலம் முழுவதும் பரவியுள்ளது. இந்த நிதிநெருக்கடி மறுபடியும் ஏற்படும் போது இதிலிருந்து மீள்வதற்கு சில வழிகளே காணப்படுகின்றன.
இந்தத் தருணத்தில் நமக்குக் கிடைக்கும் ஒரே நல்ல செய்தி என்னவென்றால் உலகளவில் காணப்படும் பணவீக்க அழுத்தத்தால் இங்கிலாந்து வங்கியும் தான் எதிர்பார்த்த 2 சதவீத பணவீக்க விகிதத்தை எதிர்வரும் 2012 ஆம் ஆண்டின் இறுதியில் அடைய முடியும் என்பது தான்.அதற்கு முன்னதாக பிரிட்டனில் உற்பத்தி பெருகும், விலைவாசி குறையும் என்றெல்லாம் சொல்வதற்கு எவ்விதச் சான்றாதாரமும் இல்லை என்று டால்ஃபின் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
சிரியாவில் சிறை வைக்கப்பட்டிருந்த பத்திரிக்கையாளர் கனடா திரும்பினார்.
கனடாவைச் சேர்ந்த டாரதி பர்வீஸ் என்ற பெண் பத்திரிக்கையாளர் சிரியாவில் மூன்று நாளும், ஈரானில் பதினாறு நாளும் சிறையில் இருந்தார்.டாரதி பர்வீஸ் சிரியாவில் இராணுவத்தினர் நடத்தும் வன்முறைகள் குறித்து செய்தி சேகரிக்க அந்த நாட்டுக்குச் சென்றார்.
அங்கு அவரை கை விலங்கு போட்டு மூன்று நாட்கள் காவலில் வைத்தனர். சுகாதாரமற்ற அழுக்குப் பிடித்த அந்த அறை அவருக்கு அருவருப்பாக இருந்தது. தேவையில்லாத வசைமொழிகளை விசாரணையில் பயன்படுத்தியதும் இவருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.
இவரை அடித்துத் துன்புறுத்தவில்லை என்றாலும் அருகிலிருந்த அறைகளில் ஆண் கைதிகளை மூர்க்கக்த்தனமாக அடித்து உதைத்தனர். அவர்களின் கதறலும் கண்ணீரும் பர்வீசின் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.பின்பு பர்வீஸை அவரது தாயகமான ஈரானுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 16 நாட்கள் சிறை வைக்கப்பட்டார். அந்தச் சிறை சிரியாவின் சிறையை விட சற்று நல்ல முறையில் இருந்தது.
மனிதர்கள் படும் கொடுமையையும் மனித இனத்தின் மாண்பையும் புரிந்து கொள்ள இந்த அனுபவம் உதவியதாக இருந்தது என பர்வீஸ் தெரிவித்தார்.பர்வீஸ் விடுதலையானவுடன் கத்தாரில் உள்ள தோஹாவுக்கு அனுப்பப்பட்டார். அங்கு தான் அல் ஜஸீராவின் தலைமையகம் இருக்கிறது. அங்கு சென்று சேர்ந்த 24 மணி நேரத்தில் அவர் தன் சிறை அனுபவங்களை வார்த்தைகளில் வெடித்து தன் பத்திரிகையில் வெளியிட்டார்.
போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: விளாடிமிர் புடின்.
ரஷ்யாவில் பிரதமர் விளாடிமிர் புடினுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்களுடன் பேச்சவார்த்தை நடத்த புடின் தயாராக உள்ளதாக ரஷ்ய முன்னாள் நிதியமைச்சர் அலெக்சி குட்ரின் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 4ம் திகதி நடைபெற உள்ள  ஜனாதிபதி தேர்தலை சந்திக்க அவர் தைரியமாக உள்ளார்.
இந்த தேர்தல் அமைதியாக நடைபெற தேவையான நடவடிக்கை எடுக்கவும் தயாராக உள்ளார்.போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என புடினிடம் நான் கூறினேன். அவருடன் பேசிய பிறகு இந்த பேச்சுவார்த்தை சாத்தியம் தான் என்பதை நான் உணர்ந்துள்ளேன் என கூறினார்.
சிரியாவில் தொடரும் மக்களுக்கு எதிரான வன்முறை.
சிரியாவில் ஜனாதிபதிக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் மீதான இராணுவ வன்முறை தொடர்கிறது.
அரபு புரட்சியின் தொடர்ச்சியாக சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்திற்கு எதிராக கடந்த 10 மாதங்களாக மக்கள் போராடி வருகின்றனர். மக்களை அடக்க இராணுவத்தைக் களமிறக்கியுள்ளார் ஜனாதிபதி அசாத்.இதற்கிடையில் சிரியாவில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க அரபு கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு வருவதற்கு சிரியா சம்மதம் தெரிவித்திருந்தது.
முதற்கட்டமாக ஒன்பது பேர் கொண்ட குழு ஒன்று சிரியாவில் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று 50 பேர் கொண்ட மற்றொரு குழு சிரியா வந்திறங்கியது.மொத்தம் 200 பேர் கொண்ட அரபு கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவினர் தாங்கள் விருப்பப்பட்ட இடத்திற்கு, விரும்பிய நேரத்தில் செல்லலாம் என்பது சிரியா - அரபு லீக் இடையிலான ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனை.
இதற்கிடையில் நேற்று ஹோம்ஸ் மாவட்டத்தின் பாபா அமர் பகுதியில் ஜனாதிபதிக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டத்தின் மீது இராணுவம் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாயினர்.கடந்த 10 மாத காலப் போராட்டத்தில் இதுவரை சிரிய இராணுவத்தால் 5,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா குற்றம் சாட்டியுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF