Monday, December 12, 2011

இன்றைய செய்திகள்.

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் - வர்த்தகர்கள் எச்சரிக்கை.
இலங்கையில் நாணயப் பெறுமதி குறைக்கப்பட்டதன் காரணமாக எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என்று எதிரிப்பார்க்கப்படுகிறது. வர்த்தகத்துறையினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். அரிசி, கோதுமை மா, சீனி, பருப்பு, முட்டை போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கும் என்று கொழும்பு பழைய சோனகத்தெருவின் வர்த்தக சம்மேளன தலைவர் கே. பழனியாண்டி தெரிவித்துள்ளார்.
கிறிஸ்மஸ் மற்றும் புதுவருடக் காலங்களில் வரவுசெலவுத்திட்டத்துக்கு முன்னுள்ள விலைகளே நடைமுறையில் இருக்கும். புதிய பொருட்கள் சந்தைக்கு வந்தவுடன் எதிர்வரும் ஜனவரிக்கு பின்னர் இந்த பொருட்கள் விலையேற்றம் ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பால்மாவை சந்தையில் கட்டுப்படுத்தப்பட்ட விலைக்கே விற்பனை செய்ய நுகர்வோர்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும் நாணய மதிப்பிறக்கம் காரணமாக இறக்குமதிகளுக்கு அதிக செலவீனங்கள் ஏற்படுகின்றன. இதனைக் கருத்திற்கொள்ளும் போது தற்போதைய விலையில் பால்மாவை சந்தையில் விற்பனை செய்வது சாத்தியமற்றது என்று வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்றுமதியை அதிகரிக்கவும் இறக்குமதியை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் 3 வீத நாணய மதிப்பிறக்கத்தை கடந்த வரவுசெலவுத்திட்டத்தில் அறிமுகப்படுத்தியது.
நாணய மதிப்பிறக்கத்தின் முன்னர் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி 110.90 சதமாக இருந்தது. நாணய மதிப்பிறக்கத்தின் பின்னர் அது 113 ரூபா 90 சதமாக அதிகரித்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.
தமிழ் மொழியில் கடமையாற்றக் கூடிய 350 பொலிஸார் இணைப்பு.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடமையில் ஈடுபடுத்தும் நோக்கில் புதிய உத்தியோகத்தர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதாக தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழியில் கடமையாற்றக் கூடிய சுமார் 350 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிக்காக இவ்வாறு 350 பேர் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம்கள் குறித்த வெற்றிடங்களுக்காக விண்ணப்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அடிப்படைத் தகுதியாக தமிழ் மொழியறிவு கருதப்படும்.
வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தமது தாய்மொழியில் கருமமாற்றுவதனை உறுதி செய்யும் நோக்கில் அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் கரு ஜயசூரியவிற்கு வழங்கப்பட வேண்டும்!
எதிர்க்கட்சியின் தலைமைப் பொறுப்பும் கரு ஜயசூரியவிற்கு வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் கிளர்ச்சிக்குழுவினரான சஜித் பிரேமதாஸ தலைமையிலான குழுவினர்  கோரிக்கை விடுத்துள்ளனர்.
கட்சித் தலைமைக்கான வாக்கெடுப்பில் கரு ஜயசூரிய வெற்றியீட்டும் பட்சத்தில் எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பையும் அவருக்கு வழங்க வேண்டுமென கிளர்ச்சிக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.
கட்சித் தலைமைப் பொறுப்பை கரு ஜயசூரியவிற்கு வழங்கி எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பை ரணிலிடமே விட்டு விடுவது என்று கிளர்ச்சிக்குழுவினர் தீர்மானித்திருந்தனர்.
எனினும், ரணில் விக்ரமசிங்க ஒருதலைப்பட்சமான தீர்மானங்களை எடுப்பதனால்தான் தமது தீர்மானத்தை மாற்றிக்கொண்டதாக பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான குழுவினர் அறிவித்துள்ளனர்.
ரணில் இருக்கும் வரையில் அரசாங்கத்தை அசைக்க முடியாது – ரஞ்சித் மத்தும பண்டார
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க பதவி வகிக்கும் வரையில் அரசாங்கத்தை அசைக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர் மைத்திரி குணரட்ன தெரிவித்துள்ளார்.
கரு ஜயசூரிய 17 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டமை குறித்து சிலர் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவி வகிக்கும் காலத்தில் 63 உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்துள்ளனர்.
எனவே கட்சித் தலைமையிலிருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட வேண்டும் எனவும், சிரேஸ்ட தலைவர்களில் ஒருவராக ரணில் தொடர்ந்தும் கட்சிக்காக சேவையாற்ற முடியும் எனவும் மைத்திரி குணரட்ன தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ரணிலைப் பாதுகாக்க அனைத்து வழிகளிலும் போராடப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை தலைமைத்துவத்திலிருந்து நீக்குவதற்கு சிலர் சதித் திட்டங்களை தீட்டி வருகின்றனர். எனினும், இந்த சதித் திட்டங்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்படும்.
தேவை ஏற்படின் சதிகாரர்களுக்கு எதிராக போட்டியிட்டு கட்சியையும், ரணில் விக்ரமசிங்கவையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியை இல்லாமல் செய்ய காலத்துக்கு காலம் இவ்வாறான சக்திகள் தலைதூக்குவதாகவும் அவை கடந்த காலங்களைப் போன்றே இந்தமுறையும் முறியடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான கார் இறக்குமதிகள் 2012ஆண்டிலிருந்து அம்பாந்தோட்டை துறைமுகத்தில் மேற்கொள்ளப்படும்.
இலங்கைக்கு கார்களை இறக்குமதி செய்பவர்கள் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்தே தமது வாகனங்களை பெற்றுக்கொள்ளமுடியும்
இதற்கான அனுமதியை இலங்கையின் துறைமுக அதிகாரசபை வழங்கவுள்ளது.
எனினும் இந்த திட்டத்தை பல வாகன இறக்குமதி நிறுவனங்கள் எதிர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் அதிக வேலைப்பளு காரணமாக, கார் இறக்குமதிகள் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்படும் என்று இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த நடைமுறை குறித்து தமக்கு இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டுடன் மிக நெருங்கிய உறவுகளைப் பேணிவந்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா - விக்கிலீக்ஸ்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க பிரான்ஸ் ஆதரவாளராகத் திகழ்ந்தார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம், அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்திற்கு 2003ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. எனினும் சந்திரிகா, அமெரிக்காவிற்கு எதிரான கொள்கைகளைப் பின்பற்றவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க அமெரிக்காவுடன் பேணியளவிற்கு சந்திரிகா மிக நெருக்கமான உறவுகளைப் பேணவில்லை என அப்போதைய தூதுவர் ஆஷ்லி வில்ஸ் தெரிவித்துள்ளார்.
சந்திரிகா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி கூட்டமைப்பில், கடும்போக்குடைய ஜே.வி.பி கட்சி அங்கம் வகித்தமை அமெரிக்காவுடன் நெருங்கிப் பழகுவதனை தடுத்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈராக் விவகாரம், காலநிலை மாற்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், வடக்கு கிழக்கு விவகாரம் போன்ற விடயங்களில் சந்திரிகாவின் நிலைப்பாடு அமெரிக்காவிற்கு முழுமையான சாதகத் தன்மையை வெளிப்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரிகாவின் பெற்றோரும் அணிசேரா நாடுகளின் கொண்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்ததனால், இவரும் முழுமையாக அமெரிக்க ஆதரவு கொள்கைகளை பின்பற்றியதாகக் கருத முடியாது, பெற்றோரின் கொள்கைகளும் இதற்கு ஏதுவாக அமைந்திருக்கலாம் என ஆஷ்லி வில்ஸ் தெரிவித்துள்ளார்.
கட்டார் பிரதமர் நாளை இலங்கை விஜயம்.
கட்டார் பிரதமர் ஷெய்க் ஹமாட் அல்தானி உள்ளிட்ட குழுவினர், நாளை திங்கட்கிழமை (12.12.2011) இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
கட்டார் தூதுக்குழுவினரை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பிரதமர் டி.எம். ஜயரட்ன ஆகியோர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை வரும் கட்டார் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜக்ஷ் ஆகியோரை உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேலும் வலுப்பெறச் செய்யும் வகையில் இவ்விஜயம் அமையும் என நம்பப்படுகிறது.
இலங்கைக்கு போர்த்தளபாட ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு ரஸ்யா வகுக்கும் வியூகம்.
மலேஷியாவின் பிரபல சுற்றுலாத் தலமான லங்காவியில் கடந்த 6ம் திகதி தொடக்கம் 10 ம் திகதி வரை லிமா 2011 என்ற பெயரில் ஆயுத தளபாடக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. 40 நாடுகள் பங்கேற்ற இந்தக் கண்காட்சியில் ரஷ்யாவின் அரசுசார் ஆயுத ஏற்றுமதி நிறுவனமான Rosoboron export  இன் பிரதித் தலைவர் விக்ரர் கொமர்டின், உரையாற்றியிருந்தார்.
Rosoboron export  நிறுவனம் உலகிலுள்ள மிகப்பெரிய ஆயுத தளபாட ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்று. ஆண்டு தோறும் 1500 ஏற்றுமதி உடன்பாடுகளில் கையெழுத்திடுகின்ற அளவுக்கு இதன் வர்த்தகம் நடக்கிறது.
இந்த ரஷ்ய அரசு நிறுவனம் இலங்கையில் போர்த்தளபாடங்களை பராமரிக்கும் நிலையங்களை திறக்கப் போவதாக ஆயுதக் கண்காட்சியின் போது தகவல் வெளியிட்டார் Rosoboron export நிறுவனத்தின் பிரதித் தலைவர் விக்ரர் கொமர்டின்.
விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் தான் ரஷ்யா இந்த முடிவுக்கு வந்துள்ளது.
இலங்கைக்கு ஆயுத தளபாடங்களை ஏற்றுமதி செய்யும் இரண்டு பிரதான நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று.
எப்போதுமே இலங்கை விவகாரத்தில் முன்னுக்கு நிற்கும் சீனாதான் இலங்கையின் பிரதான ஆயுத விநியோக நாடாக இருந்து வருகிறது. அதற்கடுத்த இடம் ரஷ்யாவுக்குத் தான்.
கடந்த ஆண்டில் கூட இலங்கைக்கு 300 பில்லியன் டொலரைக் கடனாக வழங்க ரஷ்யா இணங்கியது. அதை தமது போர்த்தளபாடக் கொள்வனவுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ரஷ்யா கூறிவிட்டது.
இந்தக் கடனைப் பயன்படுத்தியே, ரஷ்யாவிடமிருந்து 14 எம்.ஐ 171 ரக ஹெலிகளை இலங்கை வாங்கப் போகிறது.
முழுமையாக ஆயுதம் தரித்த 37 படையினரை அல்லது 26 பயணிகளை அல்லது ஸ்ரெச்சர்களில் 12 நோயாளர்களை உட்சுமையாக 4000 கிலோ, வெளிச்சுமையாக 4000 கிலோ என மொத்தம் 8000 கிலோ எடையுள்ள பொதிகளுடன் பயணம் செய்யக் கூடியது இந்த எம்.ஐ 171 ஹெலி.
இலங்கை விமானப்படை 14 ஹெலிகளை ஒரே தடவையில் வாங்குவது இதுவே முதற்தடவை.
போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த காலத்தில் கூட விமானப்படை ஒரே தடவையில் இந்தளவு ஹெலிகளை வாங்கியதில்லை. போர் முடிந்த பின்னர் தான் இவற்றை வாங்கப் போகிறது.
இவற்றை உள்நாட்டு விமான போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப் போவதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால், அந்தளவுக்கு விமானப்படையின் உள்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்துக்கு கிராக்கி இருப்பதாகத் தெரியவில்லை.
இப்போதைய சூழலில் படையினரின் தேவைக்காக என்று எதை வாங்கினாலும் அது விமர்சனங்களை ஏற்படுத்தும். போர் இப்போதும் இல்லை இனிமேலும் ஏற்பட விடமாட்டோம் என்றால் எதற்கு இந்தளவு படைத் தளபாடங்கள் என்று கேள்விகள் எழும்.
எனவே, உள்நாட்டு போக்குவரத்துக்கு என்று கூறிவிட்டால் சுலபமாகத் தப்பிக்க முடியும். இது தான் நடக்கிறது போலும்.
இப்படி பெருந்தொகையான படைத் தளபாடங்களை இலங்கை வாங்குவதால் தான் ரஷ்யா, இங்கு படைத் தளபாடப் பராமரிப்பு நிலையங்களை அமைக்கத் திட்டமிடுகிறது. 1971 கிளர்ச்சியின் போது முதன் முறையாக ரஷ்யாவிடம் இருந்து மிக் 5 போர் விமானங்கள் கிடைத்தன.
பின்னர் அவை பயன்பாட்டில் இருந்து ஒதுக்கப்பட்டுப் போக, ஜே.ஆரின் தலைமையிலான ஐ.தே.க. அரசாங்கம் முற்றாகவே மேற்குலக நாடுகளின் படைத் தளபாடங்களையே வாங்கியது.
அமெரிக்காவின் பெல் ஹெலிகள், இத்தாலியின் சியா மாசெற்றி குண்டுவீச்சு விமானங்கள், இஸ்ரேலின் போர்ப் படகுகள் என்று இலங்கையின் கவனம் மேற்கின் பக்கமே இருந்தது.
இரண்டாவது கட்ட ஈழப்போர் காலத்தில் 1991, 92 ல் தான் இலங்கையின் கவனம் கிழக்கு ஐரோப்பா நோக்கித் திரும்பியது. கம்யூனிஸ்ட் நாடுகளில் மறுசீரமைப்பு என்ற புயல்வீசி ஓய்ந்த நேரம் அது.
அந்தப் புயலினால், அமெரிக்காவுடன் முட்டி மோதிக் கொண்டிருந்த சோவியத் ஒன்றியம் உடைந்து துண்டு துண்டாகிப் போனது. அதன் தலைமையில் இருந்த வோர்ஸோ ஒப்பந்த நாடுகள் பலவும் ஒன்றில் பிளவுபட்டோ அல்லது உதவிகளின்றி பஞ்சத்திலோ பரிதவித்தன.
சோவியத்தில் இருந்து உடைந்துபோன பெரும்பாலான நாடுகள் பொருளாதார ரீதியாகப் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டன.
அப்படிப்பட்ட சூழலில் ரஷ்யா, கஸகஸ்தான், உக்ரைன் போன்ற முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளும், செக்கோஸுலோவாக்கியாவும் (இப்போது செக் , ஸ்லோவாக் என இரு நாடுகளாகி விட்டன)  இலங்கைக்கு நவீன ஆயுத தளபாடங்களை குறைந்த விலைக்கு விற்க முன்வந்தன.
ரஷ்யாவில் இருந்து முதன்முறையாக 4 எம்.ஐ17 ஹெலிகளும், இரண்டு காலாட்படை சண்டை வாகனங்களும், 19 துருப்புக்காவி கவசவாகனங்களும் இலங்கைக்கு விற்கப்பட்டன.
அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து இப்போது, இலஙகைக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து இலங்கை இராணுவமும் விமானப்படையும் தான் அதிகளவு போர்த் தளபாடங்களை வாங்கியுள்ளன. இராணுவத்திடமுள்ள கனரக போர்த் தளபாடங்களில் கணிசமானவை ரஷ்யத் தயாரிப்பானவை.
ரஷ்யாவிடம் கொள்வனவு செய்யப்பட்ட 140 ற்கும் அதிகமான 55 டாங்கிகள், 300 வரையிலான பி.எம்.பி காலாற்படைச் சண்டை வாகனங்கள், 45 பி..ஆர்.80 துருப்புக்காவிகள், இதைவிட பி..ஆர்.152 துருப்புக்காவிகள், கவசமீட்பு வாகனங்கள் மற்றும் பாலம் அமைக்கும் வாகனங்கள், 5 பி.எம்.21 ரக 122.4மி.மீ, பல்குழல் பீரங்கிகள், ட்ரக்னோவ் சினைப்பர்கள் போன்றவற்றை இலங்கை இராணுவம் பயன்படுத்தி வருகிறது.
விமானப்படையிடம் 9 மிக் 27 மற்றும் மிக்23 போர் விமானங்கள், 14 எம்.ஐ24 தாக்குதல் ஹெலிகள், 13 எம்.ஐ17 ஹெலிகள் உள்ளன. இவற்றில் பெரும்பகுதி விற்பனைக்குப் பிந்திய சேவைத் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்டவை.
குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் இவை மறுசீரமைப்பு செய்வதற்கோ, அல்லது திருத்தங்கள் செய்வதற்கோ ரஷ்யாவுக்கே கப்பல் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.
இவ்வாறு ரஷ்யாவுக்குக் கொண்டு சென்று திருத்திக் கொண்டு வந்து கொடுப்பதற்கு அதிக செலவு ஏற்படுகிறது. அதைவிட பல்வேறு சிரமங்களும், காலவிரயமும் ஏற்படுகிறது.
இதனால் தான், இலங்கையிலேயே இவற்றைப் பராமரிப்பதற்கான நிலையங்களை ஏற்படுத்த ரஷ்யா முன்வந்துள்ளது. போர் முடிவுக்கு வந்துவிட்ட சூழலில் போர்த் தளபாடங்கள் அதிகம் தேவைப்படாது.
இப்படியான நிலையில் ரஷ்யா போர்த் தளபாடப் பராமரிப்பு நிலையங்களை அமைக்க முடிவு செய்துள்ளது கேள்விகளை எழுப்பவே வைத்துள்ளது.
ஏற்கெனவே சீனா, இந்தியா போன்ற நாடுகள் இலங்கையில் முதலீடுகளை செய்ய கடும் போட்டியில் இறங்கியுள்ளன.
இன்னொரு பக்கத்தில் அமெரிக்காவும் தனது படையினரைக் கொண்டு வைத்தியசாலைகளைப் புனரமைக்கும் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது.
இந்தநிலையில் ரஷ்யா அமைக்க முனையும் போர்த்தளபாட பராமரிப்பு நிலையங்கள் இலங்கைக்கு போராயுதங்களை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நோக்கம் கொண்டதாகவே தெரிகிறது.
இத்தகைய வசதிகளை வழங்குவதன் மூலம் ரஷ்யா தனது போர்த்தளபாட ஏற்றுமதியை தெற்காசியாவில் விரிவுபடுத்த திட்டமிடுகிறது என்றே அர்த்தம்.
ஐ.நா.வில் இலங்கை மீது எத்தகைய நெருக்கடிகள் பிரயோகிக்கப்பட்டாலும், காப்பாற்றுவதற்கு எல்லா நடவடிக்கைகளையும் ரஷ்யா எடுக்கும் என்று உறுதியளித்துள்ளது.  இதற்கான ஒரு பிரதி உபகாரமாக ரஷ்யா எதிர்பார்ப்பது இந்த வர்த்தக நலன்களைத் தான்.
ரஷ்யாவின் வர்த்தக நலன் இலங்கைக்கு சாதகமானதாக அமைய வேண்டும் என்று கட்டாயமில்லை. ஆனால். ரஷ்யாவினதும் சீனாவினதும் தயவில் இப்போதைக்கு காலத்தைக் கடத்த வேண்டியுள்ள இலங்கை அரசு, இதுபோன்ற விடயங்களில் முரண்டுபிடிக்க முடியாது.
இலங்கை, இந்தியா, மாலைதீவுக்கான பயணிகள் கப்பல் சேவை.
இலங்கை, மாலைதீவு, இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையொன்றை ஆரம்பிப்பதற்கான ஆரம்பத்திட்ட அறிக்கையொன்று இலங்கையிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதன் பிரகாரம் இலங்கையின் இணக்கப்பாடு கோரப்பட்டுள்ளதாக வர்த்தகக் கப்பல் பணிப்பாளர் சாந்த வீர்க்கோன் குறிப்பிட்டார்.
தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்புக்கான அமைப்பான சார்க் அமைப்பின் வழிகாட்டலின் கீழ், இந்த பயணிகள் கப்பல் சேவையை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த முறை சார்க் மாநாட்டின்போது மேற்கொள்ளப்பட்ட தீரமானத்தின் பிரகாரம், இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வர்த்தகக் கப்பல் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்தியாவின் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையில் முன்னெடுக்கப்படுகின்ற பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையை, சம்பந்தப்பட்ட நிறுவனம் இடைநிறுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
இந்த சேவையின் மூலம் போதிய இலாபம் கிடைக்காமை காரணமாக சம்பந்தப்பட்ட நிறுவனம் இந்தத் தீர்மானத்தை எடுத்திருந்தது.
இருபதுக்கு – 20 மென்பந்து கிரிக்கெட் போட்டியில் அமைச்சர்கள் அணித் தலைவராக ஜனாதிபதி மகிந்த.
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11.12.2011) கொழும்பில் நடைபெறவுள்ளது.
இருபதுக்கு – 20 மென்பந்து கிரிக்கெட் போட்டியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அமைச்சர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிக்கு ஜனாதிபதியே தலைவராக விளையாடவுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிக்கு கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜயசூரிய தலைமை வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்ற அமைச்சர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உற்சாகம் வழங்கும் வகையில் இந்த போட்டி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தாநந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
போட்டியில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர். எனினும், ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் போட்டியில் பங்கேற்கமாட்டார்கள் என்வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப்போட்டி பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இது நேரடியாகவும் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வருடந்தோறும் நடத்தப்படவுள்ள இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு சபாநாயகர் கிண்ணம் பரிசளிக்கப்படவுள்ளது.
ஒன்றரை ஏக்கர் நிலத்தில் கஞ்சா பயிர் செய்கை பண்ணிய இருவர் கைது.
ஆயித்தியமலை - திக்கந்த பிரதேசத்தில் கஞ்சா பயிர் செய்கையில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்கள் இருவரை ஆயித்தியமலைப் பொலிஸார் இன்று ஞயிற்றுக்கிழமை (11.12.2011) காலை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 66 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இருவரால் செய்கை பண்ணப்பட்ட ஒன்றரை ஏக்கர் நிலத்தில் செய்கை பண்ணப்பட்ட கஞ்சா பயிரை ஆயித்தியமலை சாஸ்த்ரவெலி முகாம் விசேட அதிரடிப்படையினர் அழித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் கிண்ணத்திற்கான கிரிக்கெட் போட்டியில் சனத் ஜயசூரிய தலைமையிலான எம்.பிக்கள் குழு வெற்றி.
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக இடம்பெற்ற இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி 71 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
சபாநாயகர் கிண்ணத்திற்காக நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் சனத் ஜயசூரிய தலைமையிலான நாடளுமன்ற உறுப்பினர்கள் அணி வெற்றியீட்டியுள்ளது.டொரிங்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களைப் பெற்றது.
சுசில் பிரேமஜயந்த தலைமையிலான அமைச்சர்கள் அணி  20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 105 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.
இலங்கை இராணுவ வரலாற்றுப் புத்தகத்தில் இருந்து சரத் பொன்சேகா அகற்றப்பட்டுள்ளார்.
முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் பெயர் இலங்கை இராணுவ வரலாற்றில் இருந்தும் அகற்றப்பட்டுள்ளதாகவும், அவர் இனிவரும் காலத்தில் முன்னாள் இராணுவத்தளபதி என்ற பதவி நிலைக்குள் உள்ளடங்கமாட்டார் என இராணுவப் பேச்சாளார் பிரிகேடியர் நிஹால் ஹப்பு ஆராச்சி தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போரின்போது சரத் பொன்சேகா மேற்கொண்ட நடவடிக்கைகளும் கருத்திற்கொள்ளப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து இது நடைமுறைக்கு வந்துள்ளதாக பேச்சாளார் தெரிவித்துள்ளார்.
இதன்படி இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதிகளாக
1952 ஆம் ஆண்டில் இருந்த பிரிகேடியர் சின்கிலேயர்,
1955 இல் இருந்த பிரிகேடியர் எப்.எஸ்.ரெய்ட்,
1959 இல் இருந்த மேஜர் ஜெனரல் ஏ.எம் முத்துகுமாரு,
2000 ஆம் ஆண்டில் இருந்த லெப்டினன்ட் ஜெனரல் வீரசூரிய,
2004 ஆம் ஆண்டில் இருந்த லெப்டினனட் ஜெனரல் லயனல் பலகல்ல,
2005 ஆம் ஆண்டில் இருந்த ஜெனரல் கொட்டேகொட
ஆகியோரின் பெயர்களே இனிவரும் காலங்களில் நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் தனியார் ஊடகங்கள் சரத் பொன்சேகாவை முன்னாள் இராணுவத்தளபதி என்று அழைக்கின்றபோதும் அவற்றுக்கு அதனை மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவித்தல் எதனையும் விடுக்கப் போவதில்லை என்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தமது தந்தையின் விடுதலைக்காக அமெரிக்க அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் 25 ஆயிரம் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சரத் பொன்சேகாவின் மகள் அபர்ணா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 23 ஆம் தி;கதிக்கு முன்னர் இந்த கையொப்பங்கள் அமெரிக்க அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும் என்றும் அபர்ணா குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான் அணு உலையில் அணுக் கதிர் கசிவு: பீதியில் மக்கள்.
ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. அதில் சுமார் 20 ஆயிரம் பேர் பலியாகினர்.
மேலும் புகுஷிமா என்ற இடத்தில் உள்ள அணு மின் நிலையத்தில் 3 அணு உலைகள் வெடித்து சிதறின. இதனால் அதில் இருந்து கதிர்வீச்சு வெளியாகி காற்று, குடிநீர், அரிசி, பால், பழங்கள் மற்றும் காய்கறிகளிலும் பரவியது.
எனவே அதை சுற்றி 20 கிலோ மீற்றர் தூரத்தில் குடியிருந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். வெடித்து சிதறிய அணு உலையை குளிர்வித்து அவற்றை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அதற்குள் இன்னொரு அணு உலையில் இருந்து கதிர்வீச்சு கசிந்துள்ளது. அந்த அணு உலை தெற்கு கியூசு மாகாணத்தில் சேகா பகுதியில் ஜெங்காய் என்ற இடத்தில் உள்ளது. அங்குள்ள அணு உலைகளை குளிர்விக்கும் குளிர்ப்பான்களில் இருந்து வெளியேறிய 1.8 டன் தண்ணீரில் கதிர்வீச்சு பாதித்துள்ளது.
இந்த தகவலை ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இந்த கதிர் வீச்சு சுற்றுச்சூழலை பாதிக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் ஜெங்காய் பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
தலிபான்கள் - பாகிஸ்தான் அரசு பேச்சுவார்த்தை.
தாரிக்-இ-தலிபான் என்ற பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு, பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.
இது அமெரிக்கா, பாகிஸ்தான் உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என தெரிகிறது.
கடந்த 2007ல் உருவாக்கப்பட்ட தாரிக்-இ-தலிபான் அல்லது பாகிஸ்தானி தலிபான் பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போர் நடத்தப்படும் என அறிவித்தது.

இந்நிலையில் நேற்று(10.12.2011) அந்த அமைப்பின் துணைத் தளபதி மவுல்வி பக்கீர் முகமது அளித்த பேட்டியில், பஜாவுர் பழங்குடியினப் பகுதியில் வசிக்கும் தலிபான்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது வெற்றி பெற்றால் பிற பழங்குடியினப் பகுதி தலிபான்கள் பேச்சு நடத்த முன்வருவர் என தெரிவித்துள்ளார்.
இந்தப் பேச்சில் தெற்கு வஜீரிஸ்தான் பகுதியில் அமைதி நிலவ வேண்டும், சிறையில் உள்ள தலிபான்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடுகள்: புடினுக்கு எதிராக பிரம்மாண்ட பேரணி.
ரஷ்யாவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றது எனக் கூறி நேற்று(10.12.2011) தலைநகர் மாஸ்கோவில் 15 ஆயிரம் பேர் கலந்து கொண்ட மாபெரும் பேரணி நடந்தது.
ரஷ்யாவில் கடந்த 4ம் திகதி நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடுகள், மோசடிகள் நிகழ்ந்தன.
பல வாக்குச்சாவடிகளில் கள்ள வாக்குகள் போடப்பட்டன. மொத்தத்தில் பிரதமர் விளாடிமிர் புடினின் ஆளும் ஐக்கிய ரஷ்ய கட்சிக்கு ஆதரவாக இத்தேர்தல் நடத்தப்பட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
ரஷ்யாவின் ஒரே தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கோலோஸ் மற்றும் ஐரோப்பாவின், ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஆகியவை தேர்தல் மோசடி குறித்து ஆதாரங்களை வெளியிட்டன.
அமெரிக்கா தேர்தல் மோசடி குறித்து கவலை தெரிவித்தது. கடந்த வாரத்தில் தொடர்ந்து இரு நாட்கள் தொடர் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன. இதில் 800 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று திட்டமிட்டபடி தலைநகர் மாஸ்கோவில் உள்ள நாடாளுமன்றத்தின் கிரெம்ளின் கட்டிடம் முன்பு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பாதுகாப்புக்காக 50 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
நாட்டின் பல நகரங்களிலிருந்தும் நேற்று காலை முதல் ஆயிரக்கணக்கானோர் மாஸ்கோவில் குவியத் துவங்கினர். இதனால் அனுமதியளிக்கப்பட்ட ஒரே ஒரு இடத்தைத் தவிர பிற இடங்களிலும் கூட்டம் சேர துவங்கியது.
காவல்துறையினர் அனுமதியளிக்கப்படாத இடங்களில் இருந்த கூட்டத்தை கலைக்க முயன்றனர். ஆனால் பல இடங்களிலும் கணக்கு வழக்கின்றி மக்கள் வந்து கொண்டே இருந்ததால் காவல்துறையினரால் போதிய நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நேற்று 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் உரால்ஸ், சைபீரியா உட்பட பல பகுதிகளிலும் நேற்று ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்து கொண்ட பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
அடுத்தாண்டில் நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் புடின் போட்டியிட உள்ளார். ஆனால் தேர்தல் மோசடி குறித்த இந்த ஆர்ப்பாட்டங்கள் அவருக்கு மேலும் நெருக்கடி அளிக்கும் வகையில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நான் நலமாக இருக்கிறேன்: ஸர்தாரி.
நான் நலமாக இருக்கிறேன், விரைவில் நாடு திரும்புகிறேன் என பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி ஸர்தாரி தெரிவித்துள்ளார்.
நாளை அவர் நாடு திரும்பப் போவதாக பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மாரடைப்பு காரணமாக துபாய்க்கு ஸர்தாரி திடீர் பயணம் மேற்கொண்டது உலக அரங்கில் பாகிஸ்தான் அரசியல் மீதான சந்தேகத்தை மீண்டும் கிளப்பியது.
அவரது மூளையில் ரத்தக் கசிவு இருப்பதாகவும், அவருக்கு முகப் பக்கவாதம் ஏற்பட்டிருப்பதாகவும் நேற்று முன்தினம்(08.12.2011) தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் பாகிஸ்தானில் இயங்கி வரும் ஜியோ சேனலின் ஹமீத் மிர் என்ற பத்திரிகையாளர் ஸர்தாரியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
மிர்ரிடம் பேசிய ஸர்தாரி, நான் நலமாக இருக்கிறேன். விரைவில் நாடு திரும்புகிறேன் என கூறியுள்ளார். கடந்த ஐந்து நாட்களில் நேற்று தான் சர்தாரி பத்திரிகையாளர் ஒருவரிடம் பேசியுள்ளார்.
எனினும் இத்தகவல் அவரது பயணம் குறித்த சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்கான ஓர் உத்தி எனவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்த வாரம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மெமோகேட் விவகாரம் குறித்து ஸர்தாரி விளக்கம் அளிக்க வேண்டியிருப்பதால், நாளை அவர் நாடு திரும்பலாம் எனவும், அதன் பின் மீண்டும் அவர் லண்டன் சென்று விடுவார் எனவும் பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் எக்ஸ்பிரஸ் டிரிபியூன் என்ற பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.
ஜப்பான், மெக்சிகோவில் நிலநடுக்கம்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் 1,300 கி.மீ தொலைவில் உள்ள கொகிஷிமா என்ற இடத்தில் இன்று(11.11.2011) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் ஏதுமில்லை. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை என அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த நிலநடுக்கம் ரிக்டர்(Richter) அளவுகோளில் 5.8 ஆக பதிவானது.

மெக்சிகோ: மெக்சிகோவின் மேற்கு பகுதியில் உள்ள குரேரியோ மாநிலத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 6.7 ஆக பதிவாகியுள்ளது.
இதனால் கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தில் 11 வயது சிறுவன் உட்பட 2 பேர் பலியானார்கள்.
ஏமன் நாட்டில் இடைக்கால அரசு பதவியேற்பு.
ஏமன் நாட்டில் இடைக்கால அரசு நேற்று(10.12.2011) பதவியேற்றது. இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் ஜனாதிபதியின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் மோதல் தொடர்கிறது.
ஏமன் ஜனாதிபதி அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த ஒன்பது மாதங்களாகப் போராடி வந்தனர்.
வளைகுடா நாடுகள் கூட்டுறவுக் கவுன்சில் தயாரித்த ஒப்பந்தத்தில், கடந்த மூன்று வாரங்களுக்கு முன் சலே கையெழுத்திட்டார்.
அந்த ஒப்பந்தத்தின் படி இதுவரை இராணுவம் நிகழ்த்திய படுகொலைகள் மற்றும் சலே நிகழ்த்திய ஊழல்களுக்கு எதிராக அவர் மீது வழக்கு தொடரப்பட மாட்டாது.
இந்த நிபந்தனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரு வாரங்களாக நாட்டின் பல பகுதிகளில பழங்குடியினர் மற்றும் சலேவின் எதிர்ப்பாளர்கள் ஒன்று திரண்டு சலே ஆதரவாளர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு நேற்று பதவியேற்றது. இதில் துணை ஜனாதிபதி அப்துர் அபு மன்சூர் ஹாடி பங்கேற்றார். 34 அமைச்சர்களைக் கொண்ட இந்த அரசு மூன்று மாதங்களுக்கு பதவியில் இருக்கும்.
அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நடக்கும். அதன் பின் நாட்டில் ஒரு நிலையான அரசியல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து சண்டையிட்டு வரும் பழங்குடியினர் தெற்கு பகுதியில் பிரிவினை கோருவோர், வடபகுதியில் கிளர்ச்சி செய்து வரும் ஷியா முஸ்லிம்கள், அல்கொய்தா ஆகியோரை புதிய அரசு சமாளிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
இதற்கிடையில் நேற்று முன்தினம் இரு தரப்புக்கும் நிகழ்ந்த சண்டையில் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்து நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் சண்டை மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் விமான தளத்தை விட்டு முழுவதுமாக வெளியேறிய அமெரிக்கா.
பாகிஸ்தானின் ஷாம்சி விமான தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் 5 ஆளில்லா உளவு விமானங்கள் ஆப்கானிஸ்தானுக்கு மாற்றப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள ஷாம்சி விமான தளத்தை பயங்கரவாதிகளுக்கு எதிரான போருக்கு அமெரிக்கா பயன்படுத்தி வந்தது.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் 24 பேர் உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து ஷாம்சி விமான தளத்திலிருந்து டிசம்பர் 11ம் திகதிக்குள் வெளியேறிவிடுமாறு அமெரிக்காவிடம் பாகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.
இதையடுத்து அங்கிருந்து அமெரிக்க விமானங்கள் ஆப்கானிஸ்தானுக்கு முழுவதுமாக மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விமான நிலையத்தை பாகிஸ்தானிடமிருந்து குத்தகைக்கு எடுத்துள்ள ஐக்கிய அரபு அமீரகம் விமான நிலைய கட்டுப்பாட்டை ஞாயிற்றுக்கிழமை எடுத்துக் கொள்ளும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
காங்கோ தேர்தல்: தன்னைத் தானே ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்.
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் கடந்த நவம்பர் மாதம் 28ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சி வேட்பாளரான ஜோசப் கபிலா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் எடின்னி ஷிசேகேடி தன்னைத் தானே ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்டுள்ளார்.
இந்தத் தேர்தலில் 2001-லிருந்து ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் ஜோசப் கபிலா 49 சதவிகித வாக்குகள் பெற்றதாகவும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எடின்னி ஷிசேகேடி 32.3 சதவிகித வாக்குகள் பெற்றதாகவும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
இந்த முடிவை நிராகரித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடின்னி ஷிசேகேடி, தன்னைத் தானே ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்டுள்ளார். தேர்தலில் மூன்றாமிடம் பிடித்த விட்டல் காமர்ஹி, ஷிசேகேடியை ஆதரிக்கிறார்.
இதுகுறித்து எடின்னி ஷிசேகேடி கூறுகையில், இந்த முடிவு மக்களை கோபமூட்டியுள்ளது. இதை நான் நிராகரிக்கிறேன். இப்போதிலிருந்து நானே ஜனாதிபதியாக பதவியேற்கிறேன். என்னைத் தொடர்ந்து ஊக்குவித்து வரும் சர்வதேச சமூகத்திடம், இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கூறுமாறும், காங்கோ மக்களின் ரத்தம் மீண்டும் சிந்தப்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
தேர்தல் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதான எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன.
பூனைக்கு கிடைத்த சொகுசு வாழ்க்கை.
இத்தாலியைச் சேர்ந்த பெண் மரியா அசுந்தா(94). இவர் ஒரு கோடீசுவரரை திருமணம் செய்தார். அவர்களுக்கு குழந்தை இல்லை.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் சுற்றித்திரிந்த ஒரு கறுப்பு பூனையை பார்த்த அவருக்கு அதன் மீது அளவற்ற அன்பும் பாசமும் ஏற்பட்டது.
அந்த பூனையும் அவர் மீது பாசமழை பொழிந்தது. அந்த பூனையை தனது வீட்டிற்கு கொண்டு வந்து குழந்தை போன்று வளர்த்தார்.
அந்த பூனைக்கு “டொம்மாசோ” என செல்லமாக பெயர் வைத்தார். இந்த நிலையில் மரியாவுக்கு திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டது.
இதனால் பயந்து போன அவர் ரோம், மிலன் ஆகிய நகரங்களில் உள்ள தனது வீடுகள் மற்றும் கலாப்ரியா என்ற இடத்தில் உள்ள நிலங்களை பூனை டொம்மாசோவின் பெயரில் எழுதி வைத்தார்.
மேலும் ரொக்கப்பணம், பங்கு பத்திரங்கள் போன்றவற்றையும் பூனையின் பெயருக்கு வழங்கினார். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.60 கோடி(இந்திய ரூபாய்).
இந்த சொத்துக்களை வைத்துக் கொண்டு பூனையை சிறந்த முறையில் பராமரிக்கும்படி பல மிருக நல அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் அவர் விதித்த நிபந்தனைகளை ஏற்க எந்த அமைப்பும் முன்வரவில்லை. எனவே அவர் ஸ்டெபானியா என்ற மருத்துவ தாதியை பணிக்கு அமர்த்தி கவனித்து வந்தார்.
மேலும் பூனையை பராமரிக்கும் பொறுப்பையும் அவருக்கு வழங்கினார். இதற்கிடையே கடந்த 2 வாரத்துக்கு முன்பு அவர் மரணம் அடைந்தார்.
கனடா படைகளுக்கு பாராட்டு விழா.
கனடாவிலிருந்து லிபியாவிற்கு சென்று அந்நாட்டைக் கடாபியிடம் இருந்து மீட்டுக்கொடுத்த படைகளுக்கு கனடாவில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
நேட்டோ படையில் ஈடுபட்ட கனடாவின் போர் விமானங்கள் அனைத்தும் கனடா திரும்பி விட்டதைக் கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நேட்டோ பணியில் இறந்து போன லேப்டிணைட் ஜெனரல் சார்லஸ் பூச்சார்டும் நினைவு கூரப்பட்டார். இந்தப் பணிக்காக 1500 போர் விமானங்களும், அவற்றோடு துணை விமானங்களும் கனடாவிலிருந்து லிபியாவுக்கு அனுப்பப்பட்டன.
போர் செயலில் ஈடுபட்டு நாடு திரும்பும் இத்தகைய படைகளுக்கு இதுபோன்ற அநாவசியமாகச் செலவு தேவையில்லை என்று அரசின் இச்செயலைச் சிலர் விமர்சித்துள்ளனர்.
யூரோ கடன் நெருக்கடி குறித்து பிரதமர் எடுத்த முடிவு சரியானதே: கருத்துக் கணிப்பில் தகவல்.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் யூரோ நெருக்கடித் தீர்வுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கு பிரிட்டிஷ் மக்கள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
மெயில் என்ற பத்திரிக்கை அண்மையில் நடத்திய ஆய்வில் 62 சதவிகித மக்கள் கமரூனின் இந்த முடிவை ஆதரித்திருப்பது தெரியவந்துள்ளது. 19 சதவிகித பேர் மட்டுமே அவர் செய்தது தவறு என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.
66 சதவிகித மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டனுக்குள்ள தொடர்பு குறித்து தேசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று விரும்புகின்றனர். கமரூனின் கன்சர்வேட்டிவ் கட்சியினரும் இதனை ஆதரிக்கின்றனர்.
இந்த யூரோ நெருக்கடியால் ஐரோப்பிய ஒன்றியம் சிதறிவிடும் என்று 48 சதவிகிதம் பேரும், சிதறாது என்று 29 சதவிகிதம் பேரும் தெரிவித்தனர்.
தலைவர்களின் திறமையான செயல்பாடு குறித்து கருத்துக் கேட்கப்பட்டதில் 51 சதவிகிதம் பேர் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூனுக்கும், 44 சதவிகிதம் பேர் ஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெலுக்கும், 35 சதவிகிதம் பேர் பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கும் ஆதரவாக வாக்களித்தனர்.
மொத்தம் 1020 பேரிடம் இணையத்தளம் மூலமாக இந்தக் கருத்துக்கணிப்பு நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மெக்ரப் நாட்டில் இரு பிரெஞ்சு நபர்கள் கடத்தல்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இருவரை AQIM என்ற தீவிரவாத இயக்கத்தினர் கடந்த நவம்பர் மாதம் 24ம் திகதி கடத்திச் சென்று விட்டனர்.
இவர்களது ஒளிப்படத்தை நேற்று(10.12.2011) இந்த அமைப்பினர் வெளியிட்டனர். இதில் செர்ஜி லாசரெவிக் மற்றும் பிலிப்பி வெர்டோன் என்ற இந்த இரண்டு பிரெஞ்சுக்காரர்களோடு முகமூடியணிந்து ஆயுத மேந்திய தீவிரவாதிகள் மூவர் காட்சியளிக்கின்றனர்.
இவர்கள் இருவரும் பிரான்சின் துப்பறியும் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் ஆவர். பிரான்ஸ் நாடு சாகேல் நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் மீது தொடர்ந்து அடக்குமுறை செலுத்துவதால் ஆட்கடத்தல் நடந்துள்ளது.
பிரெஞ்சுக்காரர்களான லாசரெவிக் மற்றும் வெர்டோனை நைஜர் நாட்டின் எல்லையிலிருக்கும் ஹோம்பேரி நகரின் ஹோட்டலிருந்து துப்பாக்கி முனையில் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய ஒப்பந்தத்தில் பிரிட்டன் இணைய வேண்டும்: ஜேர்மனி.
யூரோ நெருக்கடி பிரச்சனைக்கான தீர்வு காணும் முயற்சிகளில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் இணைய வேண்டும் என ஜேர்மன் வெளிவிவகாரத்துறை அமைச்சர் குய்டோ வெஸ்டர்வெலே தெரிவித்தார்.
புதிய ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் ஒப்புதல் அளித்து விட்டன. ஸ்வீடன், செக் குடியரசு, ஹங்கேரி ஆகிய மூன்று நாடுகளும் தங்கள் பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெற்றுத்தான் முடிவெடுக்க முடியும் என்று கூறிவிட்டன.
ஆனால் பிரிட்டன் இதை உறுதியாக ஏற்க மறுத்துவிட்டது. புதிய ஒப்பந்த விதிகளில் சில மாற்றங்களைச் செய்தால் மட்டுமே தாம் இணைய முடியும் என்பதை பிரிட்டன் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
இந்நிலையில் ஜேர்மனியின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் குய்டோ வெஸ்டர்வேலே கூறுகையில், பிரிட்டனை இந்த ஒப்பந்தத்தில் இணைக்க என்னென்ன முயற்சிகள் எடுக்க வேண்டுமோ அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF