Monday, December 5, 2011

இன்றைய செய்திகள்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறப்போவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பு.
இனப்பிரச்சினைத் தீர்வுக்காக இலங்கை அரசாங்கம் அமைக்கவுள்ள அனைத்துக்கட்சி நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்கப்போவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் இலங்கையின் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் இதனை அறிவித்துள்ளார்.
தேசிய இனப்பிரச்சினையில் முஸ்லிம்கள் மூன்றாம் தரப்பாக கருதப்பட்டு அவர்களுடன் பேச்சு நடத்தப்படவேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பதாக ஹக்கீம் தெரிவித்துள்ளார்.இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்றுக்குறிப்பிட்டுள்ள அவர் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் நாடாளுமன்றத்தெரிவுக்குழுவில் பங்கேற்க முன்வரவேண்டும் என்று கேட்டுள்ளார்.
இந்தநிலையில் அரசாங்கத்தின் நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைப்புக்கு அரசாங்கக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதன் பங்காளிக்கட்சி உறுப்பினர்கள் மாத்திரமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மற்றும் ஜே வி பி என்பன அதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏழு நாட்களுக்குள் எட்டு விபத்துக்கள் - 30 நாய்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
காலியிலிருந்து கொழும்புக்கு வந்த கார் ஒன்றே 30ஆவது கிலோ மீற்றர் கம்பமொன்றில் மோதுண்டு விபத்துக்குள் ளாகியுள்ளது என்றும் காயமடைந்தவர்கள் இருவரும் ஆண்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை தெற்கு அதிவேக வீதி ஒழுங்குகளை மீறிய மூவருக்கெதிராக நேற்று வழக்குத் தாக்கல் செய்யப்பட் டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனதிபதியினால் கடந்த மாதம் 27 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட அதிவேக வீதியில் ஏழு நாட்களுக்குள் எட்டு விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.மேற்படி வீதியில் இதுவரை 30 நாய்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
விமர்சனங்களை பொருட்படுத்தப் போவதில்லை!- ஜனாதிபதி.
ஆளும் அரசாங்கமானது, பொது மக்களின் விருப்பத்திற்கு எதிரான பாதையில், ஒருபோதும் செல்லாது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், அரசாங்கம் தவறான பாதையில் செல்லுமானால், சரியான பாதையைக் காட்டுவதற்கான உரிமை மாநாயக்கர்களுக்கு உண்டு எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறே, மாநாயக்கர்களும் செயல்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.அம்பலாந்தோட்டையில் நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.2005 ம் ஆண்டு அரசாங்கத்தைப் பொறுப்பேற்கும் போது, பல சவால்களுக்கு தாம் முகம் கொடுத்திருந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எனினும், அனைத்து சவால்களும், தற்போது வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், எந்த ஒரு அரசாங்கமும் பல்வேறு விமர்சனங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.இவ்வாறான நிலையில், தமக்கு இந்த பதவில் இருந்து இதைவிட சிறந்த பதவிக்கு செல்ல முடியாது என குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசியலில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் குற்றச்சாட்டுகள் தமக்கு பழக்கப்பட்ட ஒன்று எனவும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இதனை தாம் பொருட்படுத்தப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.இதனிடையே சில வெளிநாட்டு தலைவர்களுக்கு நிகழ்ந்தவையே தமக்கு நிகழும் என்று சிலர் அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது இதனைத் தெரிவித்தார்.
இலங்கையில் சூதாட்ட நிலையங்கள் அதிகரிப்பு- ரணில்.
இலங்கையில் சூதாட்ட நிலையங்கள் அதிகரித்துக் கொண்டு செல்வதாக எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் போது மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே சூதாட்ட நிலையங்கள் காணப்பட்டதாகவும் தற்போது பௌத்த விரைகளுக்கு பதிலாக சூதாட்டநிலையங்கள் அதிகளவில் திறக்கப்படுவதாகவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
ஆனால், தற்போதைய அரசாங்கம் எதுவித கட்டுப்பாடுகளும் இன்றி பாரிய அளவில் சூதாட்ட நிலையங்களை நடாத்தி வருவதாகவும் இதன் காரணமாக குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாகவும் ரணில் தெரிவித்துள்ளார்.இறக்குவான, விகாரை ஒன்றில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இக்கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.
கரு ஜயசூரிய ஐ.தே.கட்சியின் கட்சித் தலைமைக்குப் போட்டியிட இணக்கம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்காக, கட்சியின் இணைப் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய போட்டியிடுவதாக இணக்கம் தெரிவித்துள்ளார்.கட்சித் தலைமைப் பதவிக்காக போட்டியிடுமாறு கட்சியின் மற்றுமொரு இணைப் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட கட்சியின் பலர் கரு ஜயசூரியவிடம் கோரியிருந்தனர்.
சஜித் பிரேமதாஸ எழுத்து மூலமாக இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை கட்சித் தலைமைத்துவம் உள்ளிட்ட முக்கிய பொறுப்புக்களுக்கான தேர்தல்கள் குறித்து செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தங்ககட்டிகள் கடத்த முற்பட்ட கணவன்-மனைவி கைது.
இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு தங்கக் கட்டிகளை கொண்டு செல்ல முற்பட்ட கணவன்-மனைவியை கட்டுநாயக்க சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் மேற்படி இருவர் மீதும் சந்தேகம் கொண்ட விமான நிலையச் சுங்க அதிகாரிகள் அவர்களுடைய கைப்பையைச் சோதனையிட்ட போது அதில் 29 இலட்சம் ரூபா பெறுமதியான 63.5 கிராம் நிறையுடைய தங்கக் கட்டிகளை வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விருவரும் கண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இருவரையும் விசாரணைக்குட்படுத்தியதன் பின்னர் குறித்த தங்கக் கட்டிகளை அரசுடைமை ஆக்கியதுடன் இருவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபா வீதம் தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளது.
சரத்பொன்சேகாவை விடுதலைசெய்யுமாறு அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை! அமெரிக்கா தெரிவிப்பு.
இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யவில்லை எனவும் சரத்பொன்சேகாவை விடுதலைசெய்யுமாறு அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா விடுதலை தொடர்பில் அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகிப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் அமெரிக்கத் தூதரக அதிகாரி நடத்திய சந்திப்பின்போது சரத்பொன்சேகாவை விடுதலைசெய்யுமாறு கோரப்பட்டிருந்ததாகவும் அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற சந்திப்பு சரத்பொன்சேகாவை விடுதலை செய்வதற்காக அல்ல என குறிப்பிட்டுள்ளதுடன் பல்வேறு விடயங்கள் பற்றி பேசப்பட்டதாகவும், அவை தொடர்பில் கருத்து வெளியிடமுடியாது எனவும் அமெரிக்கத் தூதரக அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
சவூதியில் வர்த்தகரைக் கொலை செய்தமைக்கு இலங்கையருக்கு மரண தண்டனை.
சவூதி அரேபியாவில் ஜித்தா நகரில் நான்கு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பாக இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த மூன்று பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஜித்தா பொது நீதி மன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழாம் இத்தீர்ப்பினை அளித்துள்ளது.
மேலும்,கொலையில் சம்பந்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் எட்டுப்பேருக்கு கசையடிகளும் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.கயான், இஸ்க் மற்றும் பர்ஷான் ஆகிய மூவருக்கு சிரச்சேதம் செய்யப்படவுள்ளதுடன் அஷ்ரப், குமார், ரஜீஸ் , ரங்கீத், முஹமட் ஆகியொருக்கு 5வருட சிறைத்தண்டனையும் 1000 கசையடிகளும் வழங்க நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், நௌரா என்ற பெண்ணுக்கு 4 வருட சிறைத்தண்டனையும் 400 கசையடிகளும், ராஜீயா, அஜீஸ் ஆகிய இருவருக்கும் 6மாதகால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.வர்த்தகர் ஒருவரை அவரது வீட்டில் வைத்து கட்டி இரும்புக் பொருள் ஒன்றினால் அடித்துக் கொன்றுள்ளதுடன் கொள்ளையிலும் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.இவர்கள் அனைவரும் கொலையில் சம்பந்தப்பட்டதை ஒப்புக் கொண்டதன் பின்னரே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான குற்றச்சாட்டில் இருந்து பெயரை நீக்கிக்கொள்ள புத்திக மறுப்பு.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் இருந்து தமது பெயரை நீக்கிக்கொள்ள மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண மறுப்புத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் ஒழுங்கை மீறியதாக குற்றம் சுமத்தி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, தென்மாகாண சபை ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் மைத்ரி குணரட்ன 20 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை அண்மையில் கட்சியின் செயலாளார் திஸ்ஸ அத்தநாயகவிடம் கையளித்திருந்தார்.
இதில், தற்போது கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள புத்திக பத்திரன மீது ரணில் விக்கிரமசிங்க பாலியல் ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தினார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் புத்திக பத்திரன தமது பெயரை நீக்க இணங்கியுள்ளதாக அண்மையில் ஐக்கிய தேசியக்கட்சியின் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்திருந்தார். எனினும் இதனை மறுத்துள்ள புத்திக பத்திரண தாம் குறித்த குற்றச்சாட்டில் இருந்து தமது பெயரை நீக்கிக்கொள்ள உடன்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மன்னாரில் எரிபொருள் ஆய்வில் மற்றுமொரு இந்திய நிறுவனம்.
மன்னார் கடற்பரப்பில் இந்தியாவின் மற்றுமொரு எரிபொருள் நிறுவனம் எரிவாயு ஆய்வில் ஈடுபடவுள்ளதாகவும் இதற்காக இந்திய இயற்கை வாயு நிறுவனமான ONGC இன் அதிகாரிகள் எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அதிகாரிகளுடன் நடத்தப்படும் பேச்சுக்கள் வெற்றியளிக்குமாயின், அந்த நிறுவனமும் மன்னாரில் எரிபொருள் ஆய்வில் ஈடுபடும் என்று எரிபொருள்துறை அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மன்னார் கடற்பரப்பில் இந்திய நிறுவனமான கொன்ஸ் (Cairns) லங்கா நிறுவனம் எரிபொருள் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில் மன்னார் எரிபொருள் ஆய்வுக்காக ரஸ்ய Gazprom நிறுவனத்துடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் வெற்றியளித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதன்படி அந்த நிறுவனத்தின் நிதியாள்கை அதிகாரி ஒருவர் இலங்கை வரவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமாயின் கட்சிக்குள் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் – தயாசிறி எம்.பி.
நாட்டில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமாயின் கட்சிக்குள் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டுமென்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் செயற்குழு முழுமையாக இயங்கவில்லை என்றும் செயற்குழுவிற்கான பிரதிநிதிகள் உரிய முறையில் நியமிக்கப்படவில்லை.எனவே கட்சிக்குள் நிலவி வரும் முரண்பாடுகள் துரித கதியில் களையப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் பல்வேறு அரசியல் எதிரிகளுடன் போராட்டம் நடத்துவதனை விடுத்து ஒரு பொது எதிரியுடன் போராட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.கட்சியில் நிலவி வரும் முரண்பாடுகள் களையப்பட்டால் மட்டுமே அரசாங்கத்திற்கு எதிராக வெற்றிகரமான போராட்டங்களை முன்னெடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.கட்சியின் செயற்குழு பதவி வெற்றிடப் பிரச்சினைக்கு தலைவர் ரணில் விக்ரமசிங்க உடனடியாக தீர்வு வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அரை சம்பளம் வழங்கப்படும் - அமைச்சர் மஹிந்தாநந்த.
இலங்கையின் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்த வாரம் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தாநந்த அலுத்கமகே உறுதி அளித்துள்ளார்.
இதன்படி, கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த 8 மாதங்களாக வழங்கப்படாமல் இருந்தமைகுறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வீரர்களின் சம்பள தொகையில் அரைவாசித்தொகை முதல் கட்டமாக வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட் வீரர்களுக்காக 347 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்படவேண்டியிருப்பதை அவர் ஏற்றுக்கொண்ட அமைச்சர், இதற்காக சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் 6.4 மில்லியன் டொலர்களை வழங்க உறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கோப் ஆணைக்குழுவின் அறிக்கையின்படி ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையில் 3.1 பில்லியன் ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரூபாவின் மதிப்பு குறைப்பால் பொதுமக்கள் மீது 81 பில்லியன் ரூபா கடன் சுமை – ஐ.தே.க குற்றச்சாட்டு.
இலங்கையில் ரூபாவின் மதிப்பு 3 ரூபாய்களினால் குறைக்கப்பட்டமையை அடுத்து பொதுமக்கள் மீதான படுகடன் அதிகரித்துள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.இதன்படி, பொதுமக்கள் மீது மேலும் 81 பில்லியன் ரூபாய்கள் சுமை ஏற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இலங்கை பொதுமக்கள் மீதான கடன்தொகை ரூபாயின் மதிப்பு கடந்த வரவுசெலவுத்திட்டத்தில் குறைக்கப்பட்ட பின்னர் 5200 பில்லியன் ரூபாய்களாக அதிகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் மக்கள் நலன் கருதாது சர்வதேச நாணய நிதியத்தின் விருப்பத்திற்கு ஏற்பவே இந்த நாணய மதிப்பிறக்கத்தை மேற்கொண்டுள்ளதாகவும் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரூபாயின் மதிப்பிறக்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளபோதிலும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் அமைச்சர் திஸ்ஸ விதாரண ஆகியோரே இத்தீர்மானத்துக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகும் பிரிட்டிஷ் தூதரகங்கள்.
பஹ்ரைனின் தலைநகரான மனாமாவில் பிரிட்டிஷ் தூதரகம் அருகே பயங்கர வெடிகுண்டு ஒன்று இன்று(4.12.2011) வெடித்தது.எனினும் இந்த குண்டுவெடிப்பால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. நூற்றுக்கணக்கான ஷியைட் முஸ்லீம்கள் மத ஊர்வலத்தில் பங்கேற்றிருந்த போது இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் காவல்துறையின் முன்னாள் உதவி ஆணையரான ஜான் யேட்ஸ், பஹ்ரைன் உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்புப் படைகளுக்கு உதவுவதற்காக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹிட்லரால் உருவாக்கப்பட்ட அரங்கம் இடிக்கப்பட்டது.
சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரால் 1935ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட Deutschlandhalle என்ற விளையாட்டு அரங்கம் பழுதுபட்டதால் நேற்று(4.12.2011) இரவு இடிக்கப்பட்டது.அவருடைய பெருமையை பறைசாற்றும் இந்த அரங்கம் 2013ம் ஆண்டு ஒரு புதிய கருத்தரங்க மற்றும் கண்காட்சி அரங்காக உருமாறப் போகின்றது.
ஜேர்மனியின் இந்த அரங்கத்தை இடித்த போது 200 மீற்றர் சுற்றளவில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.அடால்ப் ஹிட்லர் 1935ம் ஆண்டு நவம்பர் 29ம் திகதி இந்த அரங்கத்தை திறந்து வைத்தார். 1936ம் ஆண்டு இங்கு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த பிறகு பொதுக்கூட்டம், மாநாடு போன்றவை நடத்த இந்த அரங்கம் பயன்பட்டது.
இந்த விளையாட்டு அரங்கத்தை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓர்ட்மனும், பிரிட்ஸ் வீமரும்(Franz Ohrtmann and Fritz Wiemer) இணைந்து வடிவமைத்தனர். 117 மீட்டர் நீளமும், 83 மீட்டர் அகலமும் கொண்ட இந்த அரங்கம் 16000 பார்வையாளர்கள் அமரும்படி வசதி கொண்டது.1943ல் நடந்த உலகப்போரில் இந்த அரங்கம் பெரும் சேதத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
தீவிரவாதத்தை ஆதரித்த பாகிஸ்தான் நபருக்கு சிறைத்தண்டனை.
தீவிரவாதத்தை ஆதரித்த பாகிஸ்தான் இளைஞருக்கு 15 வருட சிறைத்தண்டனை அளித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜுபைர் அகமது என்ற இளைஞர் வாஷிங்டன் புறநகர்ப் பகுதியில் வசித்து வருபவர். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இவர், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர். பாகிஸ்தானிலுள்ள அந்த இயக்கத்தின் உறுப்பினர் தல்ஹா சையதுவின் கட்டளைப்படி தீவிரவாதக் கருத்துக்களைப் பரப்பி வந்தார்.அந்த வகையில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை ஆதரித்து உரை நிகழ்த்தும் காணொளி பிரசாரம் ஒன்றை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஜிகாத் எனும் புனிதப்போரில் கலந்து கொள்ளும்படி இஸ்லாமிய இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த வர்ஜினியா மாகாண காவல்துறையினர் அவரை அம்மாகாண நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஜுபைர் குற்றத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு 15 வருட சிறைத்தண்டனையும், ரூ.1 கோடியே 28 லட்சம்(இந்திய ரூபாய் மதிப்பு படி) அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அரசு சட்டத்தரணி நீல் எச். மேக்பிரைடு, லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத இயக்கங்கள் தீவிரவாதக் கருத்துக்களைப் பரப்ப இணையத்தளத்தை மிகத் திறமையாகப் பயன்படுத்துகின்றன. இதன் மூலம் தனிப்பட்ட நபர்களை இயக்கங்களுக்கு தேர்ந்தெடுத்து தீவிரவாதச் செயலுக்குப் பயன்படுத்துகின்றன.இவற்றைக் கண்டுபிடித்து தொடர்புடைய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தீவிரவாத இயக்கங்களுக்கு எந்த வகையில் உதவினாலும், உதவி செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
அமெரிக்கா அடிபணிந்தது பாகிஸ்தானுக்கு.
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நேட்டோ படையினர் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவத்தினர் 24 பேர் பலியானார்கள்.
இதனையடுத்து தங்களுக்கு சொந்தமான ஷம்சி விமான தளத்தை விட்டு 15 நாளில் வெளியேற வேண்டும் என அமெரிக்காவிடம் பாகிஸ்தான் உறுதியாக கூறியது.மேலும் விமான தளத்திற்கு செல்லும் அனைத்து வழிகளையும் பாகிஸ்தான் அடைத்தது. இதனை தொடர்ந்து அமெரிக்கா ஷம்சி விமான தளத்தை விட்டு வெளியேற தொடங்கியுள்ளது.
இதற்காக அமெரிக்காவுக்கு சொந்தமான விமானம் ஒன்று பாகிஸ்தான் வந்துள்ளது. விமான தளத்தில் பணிபுரிந்த அமெரிக்கர்கள் பாதுகாப்புடன் விமானத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.விமான தளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஏமன் ஜனாதிபதி சலே பதவி விலகினார்.
ஏமன் நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த அலி அப்துல்லா சலேவின்(Ali Abdullah Saleh) ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிசுடு தாக்குதல் நடத்தினர். அதற்கு ஐ.நா.சபையும் உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்ததுடன் ஜனாதிபதி சலே பதவி விலக வலியுறுத்தினர்.அதற்கு சம்மதித்த சலே பதவி விலகவில்லை. இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினரின் சொத்துக்கள் மற்றும் பணம் முடக்கப்படும் என ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பும், அரபு நாடுகளும் மிரட்டல் விடுத்தன.
அதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் 23ந் திகதி சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த விழாவின் போது, பதவி விலக சம்மதித்து ஒப்பந்தத்தில் சலே கையெழுத்திட்டார்.அப்போது சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா அரபு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தூதர்களும் உடன் இருந்தனர்.
இதையடுத்து கடந்த ஒருவாரத்துக்கு முன்பு ஜனாதிபதி பதவியில் இருந்து சலே விலகினார். தனது ஆட்சி அதிகாரத்தை துணை ஜனாதிபதி அபேத் ரப்போ மன்சூர் ஹாதியிடம் ஒப்படைத்தார்.ஏமன் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடக்க இருக்கிறது. அதுவரை ஹாதி இடைக்கால ஜனாதிபதியாக இருப்பார். ஆனால் ராணுவமும், நாட்டின் பாதுகாப்பு குறித்த அதிகாரமும், சலேவின் பொறுப்பில் தான் உள்ளது. இதற்கு ஏமன் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெயரளவுக்குதான் சலே அதிபர் பதவியில் இருந்து விலகியுள்ளார். ஹாதியின் பின்னால் இருந்து கொண்டு ஆட்சி அதிகாரம் செலுத்துகிறார். எனவே அவர் முழுமையாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அங்கு தொடர்ந்து போராட்டம் நீடிக்கிறது.
கனடாவில் 400,000 டொலர் மதிப்புள்ள நகைகள் திருட்டு.
கனடாவின் ஒண்டோரியோ நகரில் Emod Greff என்பவரது வீட்டில் 400,000 கனடிய டொலர் மதிப்புள்ள நகைகள் திருட்டுப் போயுள்ளதாக காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Emod Greff என்பவர் தனது மனைவியுடன் அருகிலுள்ள தேவாலயத்திற்கு சென்றிருந்த போது, கொள்ளைக்காரர்கள் அவரது வீட்டிற்குள் புகுந்து விலைமதிப்புள்ள தங்க, வைர, முத்துக்கள் அடங்கிய நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
Emod Greff திரும்பி வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரும், அவரது மனைவியும் வீட்டினுள் சென்று பார்த்த போது அவர்களது மொத்த நகைகளையும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததைப் பார்த்ததும் கதறி அழுதனர்.
Emod Greff ஒவ்வொரு வருடமும் தனது மனைவிக்காக நகைகளை ஆசையாக வாங்கி கொடுத்ததாகவும், அந்த நகைகள் எல்லாவற்றையும் தமது பேரக்குழந்தைகளுக்கு பரிசாக கொடுக்க இருந்ததாகவும், அதற்குள் இவ்வாறு திருடு போய்விட்டதாகவும் விசாரணைக்கு வந்த காவல்துறை அதிகாரியிடம் அவர் கதறி அழுதார்.திருட்டு நடந்த இடத்தில் காவல்துறையினர் புலன் விசாரணை செய்து வருகின்றனர்.
அமெரிக்க ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கெய்ன் மீது பாலியல் புகார்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஹெர்மன் கெய்ன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இவர் மீது திடீரென பாலியல் புகார்கள் எழுந்ததால் போட்டியில் இருந்து கெய்ன் விலகி உள்ளார். இதனால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது. ஜனநாயக கட்சி சார்பில் பாரக் ஒபாமா வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவியேற்றார்.
இவருடைய பதவி காலம் அடுத்த ஆண்டு நவம்பரில் முடிகிறது. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் என்று ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்காவில் ஒருவர் 2 முறை ஜனாதிபதியாக பதவி வகிக்கலாம். அதற்கு மேல் பதவி வகிக்க முடியாது. எனவே ஒபாமா போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக கட்சியின் பிரபலமான ஹெர்மன் கெய்ன் அறிவிக்கப்பட்டார். இவர் அமெரிக்காவில் ஆதரவு கோரி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் கெய்ன் மீது நேற்று(3.12.2011) திடீரென பாலியல் புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து கெய்ன் தனது பிரசாரத்தை ரத்து செய்துள்ளார்.அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் இருந்தும் விலகி உள்ளார். அவருக்கு பதில் வேறு ஒரு வேட்பாளரை தெரிவு செய்வதில் குடியரசு கட்சியினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரானின் பிரான்ஸ் தூதரகத்தில் ஆட்குறைப்பு.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள பிரிட்டன் தூதரகம் தாக்கப்பட்டதன் விளைவாக பிரான்ஸ் தன் தூதரகத்தில் உள்ள பாதிப்பேரை தற்காலிகமாக குறைத்து திரும்பி வருமாறு கூறிவிட்டது.இதனால் சுமார் முப்பது தூதரக அதிகாரிகள் பிரான்ஸ் திரும்புகின்றனர். இத்தகவலை அரசுச் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பிரிட்டன் தன் தூதரக அதிகாரிகள் அனைவரையும் அழைத்துக் கொண்டது. ஈரான் அதிகாரிகளையும் முழுமையாக திருப்பியனுப்பி விட்டது. இப்போது இரண்டு நாடுகளிலும் தூதரகங்கள் மூடப்பட்டுள்ளன.பிரிட்டனின் இத்தகைய அணுகுமுறையை மற்ற ஐரோப்பிய நாடுகள் பின்பற்றுவது சரியல்ல என்று ஈரானின் வெளிவிவகாரத்துறைச் செய்தித் தொடர்பாளர் ரமீன் மெஹ்மன் பிராஸ்ட்(Ramin Mehmanparast) தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு உதவ முடியாது: சீனா திட்டவட்டம்.
ஐரோப்பிய நாடுகள் கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண சீனா தனது வெளிநாட்டு முதலீடுகளைப் பயன்படுத்தப் போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.தற்போது 3.2 டிரில்லியன் டொலர் அளவிற்கு பல்வேறு நாடுகளில் சீனா முதலீடு செய்துள்ளது. இதில் அமெரிக்காவில் மட்டும் 1.25 டிரில்லியன் முதலீடு செய்துள்ளது.
அமெரிக்கா உடனான சீனாவின் ஏற்றுமதி கடந்த 10 மாதங்களில் மட்டும் 17 சதவிகிதம் அதிகரித்து தற்போது 363 பில்லியன் டொலரை எட்டியுள்ளது. அடுத்தாண்டில் இந்த தொகை 400 பில்லியன் டொலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.யூரோ மண்டலப் பொருளாதார நெருக்கடியில் சீனா உட்பட பிற நாடுகள் உதவ வேண்டும் என ஜேர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல்(Angela Merkel), பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி(Nicolas Sarkozy) இருவரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
கடந்த மாதம் நடந்த அவசரக் கூட்டத்தை அடுத்து ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய நிலையான நிதி அமைப்பை(இ.எப்.எஸ்.எப்), பொருளாதார ரீதியில் மேலும் வலுப்படுத்த உதவும் படிக் கோரிக்கை விடுத்தார்.இதற்கு சீனாவும் சம்மதம் தெரிவித்திருந்தது. அப்போது கிரீசில் அரசியல் பிரச்னை உச்சத்தில் இருந்தது. அதனால் கிரீஸ் விவகாரத்தில் ஐரோப்பிய தலைவர்கள் ஒரு முடிவுக்கு வந்த பின்னரே உதவி செய்வதைப் பற்றி சொல்ல முடியும் என சீனா கூறியிருந்தது.
கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள ஐரோப்பாவிற்கு சீனாவின் முதலீடு பேருதவியாக இருக்கும் என்றாலும் அந்த உதவி மூலம் சீனா அரசியல் ரீதியாக ஐரோப்பாவில் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்து விடுமோ என்ற பீதியும் ஐரோப்பாவில் நிலவி வந்தது. இருந்தாலும் அந்த பீதியை வெளியில் காட்டிக் கொள்ளாமல் ஐரோப்பிய தலைவர்கள் சீனாவின் உதவியைக் கோரி வந்தனர்.இந்நிலையில் நேற்று(3.12.2011) சீன வெளிவிவகாரத் துணை அமைச்சர் பூ யிங் அளித்த பேட்டியில் கூறியதாவது: சீனாவின் வெளிநாட்டு முதலீடுகள் கடனில் சிக்கியுள்ள நாடுகளை மீட்கப் பயன்படுத்தப்படும் என தவறான கருத்து கூறப்பட்டு வருகிறது.
ஆனால் சீனாவின் வெளிநாட்டு முதலீடுகளின் நோக்கம் அதுவல்ல. ஐரோப்பிய மற்றும் சர்வதேச நாணய நிதியம்(ஐ.எம்.எப்) மற்றும் அமெரிக்காவின் கடன் பத்திரங்களை சீனா வாங்குவது அவற்றின் பாதுகாப்பு, உடனடியாக மாற்றக் கூடிய தன்மை மற்றும் சரியான லாபவிகிதம் இவற்றுக்காகத் தான்.வெளிநாட்டு முதலீடுகள், உள்நாட்டு வருமானம் போல அல்ல. அவை சேமிப்புகள். அவற்றின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஐரோப்பாவில் பொருளாதார நெருக்கடி துவங்கிய பின், அக்கண்டத்துடனான தன் ஏற்றுமதியை சீனா கடந்தாண்டில் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.ஐரோப்பாவை மீட்கும் சர்வதேச முயற்சியில் சீனாவும் இணைந்தே ஆக்கபூர்வமாக செயல்படும். ஐரோப்பாவில் சீன முதலீடு அரசியல் உள்நோக்கம் கொண்டதல்ல. சந்தைப் பொருளாதார நியதிகளை நிச்சயம் பின்பற்றுவோம் என்றார்.
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி: மியான்மரில் புதிய சட்டம் அறிமுகம்.
மியான்மரில் முதன் முறையாக மக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மியான்மரில் ஜனநாயகத்திற்காக போராடி வரும் அவுங் சான் சூச்சி(Aung San Suu Kyi), கடந்தாண்டு நவம்பர் மாதம் 13ம் திகதி நீண்ட கால வீட்டுச் சிறைக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார்.
இதையடுத்து அந்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய ஜனாதிபதி தெய்ன் செய்ன்(Thein Sein) தலைமையிலான அரசு ஜனநாயகப் பாதையில் முன்னேறும் விதத்தில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன் ஒரு கட்டமாக மக்கள் தங்கள் கோரிக்கைகளைக் கூறி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியளிக்கும் சட்டத்தில், ஜனாதிபதி தெய்ன் செய்ன் நேற்று(3.12.2011) கையெழுத்திட்டார். முந்தைய சட்டத்தின்படி எந்த வகையிலான ஆர்ப்பாட்டத்திற்கும் தடை செய்யப்பட்டிருந்தது.
தற்போதைய சட்டத்தின்படி ஆர்ப்பாட்டத்திற்கு ஐந்து நாட்கள் முன்பு பொலிசாரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி அளிக்கவும், மறுக்கவும் அவர்களுக்கு உரிமை உண்டு.அதேநேரம் ஆர்ப்பாட்டத்திற்கான காரணத்தை கட்டாயம் பொலிசாரிடம் விளக்க வேண்டும். அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன்(Hillary Clinton) முதன்முறையாக மியான்மருக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அவரது பயணத்தின் இறுதி நாளான நேற்று இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானின் வடபகுதியில் பஞ்சம்: 26 லட்சம் பேர் பாதிப்பு.
ஆப்கானிஸ்தானின் வடபகுதியில் நிலவி வரும் பஞ்சத்தால் 26 லட்சம் பேர் வறுமை மற்றும் பசியின் பிடியில் சிக்கி அவதிப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.ஆப்கானின் வடபகுதியில் உள்ள 14 மாகாணங்களில் கடந்த 8 ஆண்டுகளாக கடுமையமான பஞ்சம் நிலவுகிறது.
அந்த மாகாணங்களில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் வற்றி விட்டன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வாழ்விடத்தை விட்டு வெளியேறி வேறிடங்களுக்குச் செல்கின்றன.நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஊட்டச் சத்துக் குறைபாட்டால் அவதியுறுகின்றனர். சாப்பாட்டுக்காக மக்கள் தங்கள் கால்நடைகளை விற்று சமாளித்து வருகின்றனர்.
இந்நிலையில் பனிக்காலம் நெருங்கி வருவதால் அரசு மற்றும் நிவாரண அமைப்புகள், மக்கள் பனிக்காலத்தை சமாளிப்பதற்காக பல்வேறு ஏற்பாடுகளை விரைந்து செயல்படுத்தி வருகின்றன.பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடும் குளிர் அடிக்கும் என்பதால், அங்குள்ள குடும்பங்கள் மிகவும் அபாயக்கட்டத்தில் உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
திருமணத்திற்காக சீனாவுக்கு பெண்கள் கடத்தப்படுவது அதிகரிப்பு.
சீனாவுக்கு அண்டை நாடுகளிலிருந்து பெண்கள் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.சீனாவில்  மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டு முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் பின்விளைவாக அங்கு ஆண், பெண் பாலின விகிதத்தில் மிகப் பெரும் ஏற்றத்தாழ்வு தோன்றியுள்ளது.100 பெண்களுக்கு 118 ஆண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் அமைந்துள்ளது. பெண்களின் விகிதம் குறைந்துவிட்டதால், திருமணத்துக்கு பெண்கள் கிடைக்காமல் ஆண்கள் தவிக்கின்றனர்.
இதனால் சீனாவின் அண்டை நாடுகளான மியான்மர், லாவோஸ், வியத்நாம் ஆகிய நாடுகளிலிருந்து பெண்கள் அதிகளவில் கடத்தி வரப்படுகின்றனர் என சீன பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.சீன நாணய மதிப்பில் 20,000 யுவானிலிருந்து 50,000 யுவான் வரை இப்பெண்கள் விற்கப்படுகின்றனர். அதிகரித்து வரும் இந்தக் கடத்தலைத் தடுக்கும் பொருட்டு சீன எல்லையில் பாதுகாப்புப் படையினரின் கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
2012ம் ஆண்டுக்கான தேர்தலில் போட்டியிடும் ஒபாமா மற்றும் ஜோ பிடென்.
எதிர்வரும் 2012ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ள தேர்தலில் ஜனாதிபதி பதவிக்கு பராக் ஒபாமாவும்(Barack Obama), துணை ஜனாதிபதியாக ஜோ பிடெனும்(Joe Biden) களமிறங்குவார்கள் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இப்போது வெளிவிவகாரத்துறை அமைச்சராக உள்ள ஹிலாரி கிளிண்டன்(Hillary Clinton), துணை ஜனாதிபதியாக களமிறக்கப்படுவார் என முன்னர் தகவல் வெளியாயின.ஆனால் அவற்றையெல்லாம் பொய்யாக்கும் வகையில் இப்போது ஜனாதிபதியாக உள்ள ஒபாமாவும், துணை ஜனாதிபதியாக உள்ள ஜோ பிடெனும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை மாளிகையில் என்ன நடக்கிறது என்பது புரியாமல் பலரும் இதுபோன்று தகவல்களைப் பரப்புகின்றனர் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு செயலர் ஜே கார்னி தெரிவித்துள்ளார்.மேலும் அவர் கூறுகையில், எதிர்வரும் 2012ம் ஆண்டு தேர்தலில் ஒபாமா, ஜோ பிடென் ஆகியோர் முறையே ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு 2013 ஜனவரியில் பதவியேற்பது நிச்சயம் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு யுரேனியம் வினியோகம்: அவுஸ்திரேலிய ஆளும் கட்சி அமோக வரவேற்பு.
இந்தியாவுக்கு யுரேனியம் வினியோகம் செய்ய அவுஸ்திரேலியாவின் ஆளும் லேபர் கட்சி உறுப்பினர்கள் அமோக ஆதரவு அளித்துள்ளனர். இதுகுறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பிரதமர் ஜூலியா கில்லார்டுக்கு(Julia Gillard) வழங்கப்பட்டுள்ளது.அணு ஆயுத பரவல் தடை சட்டம் தொடர்பான சர்ச்சையால், இந்திய அணுசக்தி திட்டங்களுக்கு யுரேனியம் வழங்க சர்வதேச நாடுகள் மறுத்து வந்தன.
இப்போது உலகளவில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் அணுசக்தி கொள்கையால் பல நாடுகள் இந்தியாவுக்கு யுரேனியம் வினியோகம் செய்ய முடிவெடுத்துள்ளன.உலகளவில் 40 சதவிகித யுரேனியம் அவுஸ்திரேலியாவில் உள்ளது. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்கு அவுஸ்திரேலியா யுரேனியத்தை வினியோகம் செய்வதில்லை.
இந்தியாவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து வருவதால், யுரேனியத்தின் வினியோகம் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவுக்கு யுரேனியம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் சமீபத்தில் கூறியிருந்தார். இதுகுறித்து தீவிர ஆலோசனை நடந்து வந்தது.இந்நிலையில் ஆளும் லேபர் கட்சியின் 46வது தேசிய மாநாடு அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்தது. இதில் கட்சி உறுப்பினர்கள் 205 பேர் பங்கேற்றனர்.
மாநாட்டை தொடங்கி வைத்த ஜூலியா, இந்தியாவுக்கு யுரேனியம் வழங்குவது தொடர்பான தீர்மானத்தை தாக்கல் செய்தார்.அப்போது அவர் பேசுகையில், தற்பொழுதுள்ள சூழ்நிலையில் சில மாற்றங்களை கொண்டு வரவேண்டிய அவசியம் உள்ளது. இந்தியாவுக்கு யுரேனியத்தை வினியோகம் செய்வதால், இருநாட்டு வர்த்தகம் உட்பட பல துறைகளில் சிறந்த உறவு ஏற்படும்.
உலக வரலாற்றில் முடிவெடுக்க வேண்டிய சிறந்த நேரம் இதுதான். இந்த வாய்ப்பை நாம் தவறவிட கூடாது. இந்தியாவுக்கு யுரேனியத்தை வினியோகம் செய்வதில் கட்சி உறுப்பினர்களுக்குள் கருத்து வேறுபாடு உள்ளது என்பது தெரியும். ஆனால் வினியோகம் செய்யவே அவுஸ்திரேலியா விரும்புகிறது என்று குறிப்பிட்டார்.அதன்பின் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது. அதில் இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க 185 உறுப்பினர்கள் ஆதரவளித்து வாக்களித்தனர். எனினும் போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோணி அல்பனீஸ் உட்பட சில அமைச்சர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF