Wednesday, December 21, 2011

இன்றைய செய்திகள்.

அதிவேக நெடுஞ்சாலையில் இரும்பு திருடிய மாணவன் உட்பட மூவர் கைது!
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் திறந்து வைக்கப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பெருந்தொகையான இரும்புகளை திருடியதாக பாடசாலை மாணவன் ஒருவன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நெடுஞ்சாலையில் நலவன பிரதேசத்தில் பாலமொன்றை நிர்மாணிப்பதற்காக கொண்டுவரப்பட்டிருந்த இரும்புகளை திருடியதாகவே குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.இப்பிரதேசத்திலிருந்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் 12 அடி நீளமான இரும்புகளை ட்ரக்டர் ஒன்றில் ஏற்றிச்சென்றுகொண்டிருந்ததாகவும் இந்த இரும்புகளின் பெறுமதி சுமார் 10 லட்சம் ரூபா மதிப்பிருக்கும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேக நபர்கள் பின்னதுவ, கனன்கே, மாத்தறை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் ஏற்கெனவே இடம்பெற்ற திருட்டுகளுடனும் தொடர்புடையவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொட்டாவ முதல் பின்னதுவ வரை தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து  பிரிவினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். எனினும், தற்போது நிர்மாணிக்கப்படும் பின்னதுவ முதல் மாத்தறை வரையான பகுதியில் பாதுகாப்பு குறைவாகவுள்ளது.
சிறிகொத்தவில் தாக்குதல் நடத்தும் போது பொலிஸார் பார்த்துக்கொண்டிருந்தனர்! திஸ்ஸ அத்தநாயக.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ தேர்தல் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றவேளை, பொலிஸ் மா அதிபரிடம் உரிய பாதுகாப்பு கோரப்பட்டிருந்த போதும் ஐ.தே.க தலைமையகத்திற்கு போதுமான அளவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை என ஐ.தே.க பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.இன்று போதிய பாதுகாப்பு வழங்கப்படாததால் எதிர்கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி அலுவலகத்திற்குள் இருந்தபோது வெளியில் இருந்து வந்தவர்கள் தாக்குதல் நடத்தியதை பொலிஸார் பார்த்துக் கொண்டிருந்தமை சிறந்த எடுத்துக் காட்டாக அமையாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிகொத்தவில் இடம்பெற்ற பதற்ற நிலையால் அலுவலகத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதோடு உறுப்பினர்களின் வாகனங்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.திட்டமிட்டு அழைத்துவரப்பட்ட குழுவொன்று இத்தாக்குதலை நடத்தியதாக சுட்டிக்காட்டியுள்ள ஐ.தே.கவின் பொதுச் செயலாளர், இது தொடர்பில் விசாரணை நடத்தி பாரபட்சம் இன்றி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியை பலவீனப்படுத்த ஜனாதிபதி மகிந்த முயற்சி: விக்கிலீக்ஸ்.
எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சிகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஈடுபட்டதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக் கொள்ளவும், ஐக்கிய தேசியக் கட்சியைப் பலவீனப்படுத்தவும் ஜனாதிபதி கூடுதல் முயற்சி எடுத்ததாக கரு ஜயசூரிய தெரிவித்துள்ளதாக, இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக் 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் திகதி இந்த தகவல்களை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.கரு ஜயசூரிய ஆளும் கட்சியில் இணைந்து கொள்வதற்கு பத்து தினங்களுக்கு முன்னதாக அமெரிக்கத் தூதுவரிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி விருப்பம் தெரிவித்துள்ளமை வரவேற்கத்தக்கது.எவ்வாறெனினும், இருதரப்பினருக்கும் இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை ஆக்கபூர்வமாக அமையவில்லை எனவும் விக்கிலீஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
ஒரு இலட்சம் சவூதி ரியாலுடன் இலங்கை பிரஜை கைது!
சவுதி அரேபிய ரியால்களை சட்ட விரோதமான முறையில் கடத்திச் சென்ற இலங்கை பிரஜை ஒருவர் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையில் இருந்து சென்னை மீனம்பாக்கம் அண்ணா சர்வதேச விமான நிலையத்துக்கு சென்ன விமானத்திலேயே இச்சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை (19.12.2011) இரவு விமானத்டதில் பயணம் செய்தவர்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தபோது, இலங்கையை சேர்ந்த கிராத் முகாரி (வயது 50)என்பவருடைய உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்ததில், ரூ.1 லட்சம் மதிப்புள்ள சவுதி ரியால் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதும், சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
யூரோ நாணயத் தாள்களை சட்டவிரோதமாக கொண்டு சென்ற நபர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைது.
யூரோ நாணயத் தாள்களை சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு கொண்டு செல்ல முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினரால்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.அவரிடமிருந்து 51 இலட்சம் ரூபா பெறுமதியான யூரோ நாணயத் தாள்கள் கைப்பற்றப்பட்டதாக விமான நிலையத்தின் சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தப் பணத்தை சிங்கப்பூருக்கு கொண்டு செல்வதற்கு முயற்சித்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்ட குறித்த நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக விமான நிலையத்தின் சுங்கப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் இரகசியத்தை அம்பலப்படுத்தவா?- மேர்வின் சில்வா.
ஐக்கிய தேசியக் கட்சி நிர்வாகிகள் தெரிவு வாக்கெடுப்பில் இடம்பெற்ற இரகசியத்தை விரைவில் அம்பலப்படுத்துவேன் என மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய வாக்கெடுப்பு முடிவுகள் மாறி அமைந்திருந்தால் அந்தக் கட்சியைச் சேர்ந்த சுமார் 15 பேர் ஆளும் தரப்பிற்கு மாறியிருப்பர் .என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவை அடித்து நொறுக்கியது பிழையானதொரு விடயம். என தெரிவித்த அவர், கட்சிக்குள்ள ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் தன்னிடம் முறையிட்டிருந்தால் அதற்குரிய சரியான தீர்வைக் கொடுத்திருப்பேன் என்றும் அமைச்சர் மேர்வின் இன்று செவ்வாய்கிழமை(20.12.2011) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மரண அறிவிப்பு நாளில் வட கொரியா ஏவுகணை சோதணை.
வட கொரியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்தவர் கிம் ஜாங். சுப்ரீம் லீடர் என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டவர்.பிரதமர் என்ற பதவி இருந்தாலும், சர்வ அதிகாரத்தையும் தன்னிடமே வைத்துக் கொண்டவர். இவர் கடந்த சனிக்கிழமை(17.12.2011) மாரடைப்பால் காலமானார்.
இந்த தகவலை நேற்று(19.12.2011) தான் அதிகாரப்பூர்வமாக அரசு தொலைக்காட்சி அறிவித்தது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் மரணம் குறித்த அறிவிப்பு வெளியான நேற்றே குறைந்த தூரம் சென்று இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்று தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன.
இதுகுறித்து இராணுவ அதிகாரிகள் எந்த தகவலும் வெளியிடவில்லை. எனினும் வடக்கு கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக யான்ஹாப் தொலைக்காட்சி தெரிவித்தது.கிம் ஜாங் மரணத்தை அடுத்து அவரது மகன் கிம் ஜாங் யுன் தலைவர் பொறுப்பேற்கிறார். அவருக்கு மக்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது.
வட கொரியாவின் அடுத்த தலைவராகிறார் கிம் ஜாங்கின் மகன்.
வட கொரியாவின் சர்வாதிகாரியும், அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவருமான கிம் ஜாங் இல்(69) கடந்த 17ம் திகதி மாரடைப்பால் காலமானதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் நேற்று(19.12.2011) அறிவிக்கப்பட்டது.வட கொரியாவில் 1994ம் ஆண்டு முதல் நாட்டின் தலைவராக இருந்து வந்த கிம் ஜாங் இல் உடல் நலக் குறைவு காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார்.
கிம் ஜாங் இல் கடந்த 2008ம் ஆண்டு பக்கவாதத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சில மாதங்களுக்கு வெளியில் வருவதைத் தவிர்த்தார்.எனினும் அவரது உடல் நிலை மோசமான நிலையில் இருந்ததாகவே தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் அவர் சீனா, ரஷ்யாவில் மேற்கொண்ட சுற்றுப் பயணங்கள் பற்றிய ஒளிப்படங்கள் மற்றும் காணொனிகள் வெளியிடப்பட்டு வந்தன. 
மேலும் அவரது இறுதிச் சடங்கு இம்மாதம் 28ம் திகதி நடக்கும் என்றும், 17ம் திகதி முதல் 29ம் திகதி வரை நாட்டில் துக்க தினம் அனுசரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அவரை அடுத்து நாட்டின் தலைமைப் பொறுப்பேற்க உள்ள தலைவரின் மகனான கிம் ஜாங் உன்-னின் பின்னால் நாம் அணிதிரண்டு நமது ஒற்றுமையைக் காட்ட வேண்டும் எனவும் அரசு செய்தி நிறுவனம் கே.சி.என்.ஏ மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
கிம் ஜாங் இல்லுக்குப் பின் அவரின் மகன் கிம் ஜாங் உன் அடுத்த தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்வார் என கடந்தாண்டு செப்டம்பரில் அறிவிக்கப்பட்டது.கிம் ஜாங் உன்னைப் பற்றி மிகக் குறைந்த தகவல்களே இதுவரை வெளிவந்திருக்கின்றன. அவர் சுவிட்சர்லாந்தில் படித்தவர் என்றும், அவருக்கு வயது 28 என்றும் தான் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த ஈராக் துணை ஜனாதிபதிக்கு கைது வாரண்ட்.
ஈராக் நாட்டு பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அந்நாட்டு துணை ஜனாதிபதிக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.வளைகுடா நாடான ஈராக்கின் துணை ஜனாதிபதியாக தாரிக் அல் ஹஸ்மி(65) உள்ளார். இவர் ஈராக்கின் சன்னிப் பிரிவு தலைவராக உள்ளார்.இப்பிரிவினர் அந்நாட்டின் வடக்கே குர்தீஷ் இனத்தவர்கள் இணைந்து ஷியா பிரிவு அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் துணை ஜனாதிபதி தாரிக் அல் ஹஸ்மியின் நெருங்கிய பாதுகாவலராக இருந்த குர்தீஷ் இனத்தவர் சமீபத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததன் பேரில் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் ஈராக்கில் பல்வேறு இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு, அந்நாட்டின் துணை ஜனாதிபதி தாரிக் அல் ஹஸ்மிக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது.இதைத்தொடந்து ஈராக் உள்துறை அமைச்சகம் அவர் மேல் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஏடல்தாஹம் கூறுகையில், துணை ஜனாதிபதியான தாரிக் அல் ஹஸ்மியின் பாதுகாவலரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையின் மூலம் ஈராக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்கும், துணை ஜனாதிபதிக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது.
இந்த முறைப்பாட்டின் பேரில், பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈராக்கின் 5 நீதிபதிகள் கொண்ட நீதித்துறை குழு, துணை ஜனாதிபதி மீது கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது என்றார். இவருடன் சேர்த்து மேலும் மூன்று பாதுகாவலர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈராக்கில் அமெரிக்கப் படைகள் முற்றிலுமாக வெளியேறியுள்ள நிலையில் துணை ஜனாதிபதி மீது பயங்கரவாதிகளுடான தொடர்பு அந்நாட்டில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதாக ஈராக் தொலைக்காட்சிகள் தகவல் வெளியிட்டுள்ளன.தற்போது குர்தீஷ் இனத்தவர்களின் ஆதரவில் தாரிக் அல் ஹஸ்மி பதுக்கியிருப்பதாக இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவர் நாட்டை விட்டு தப்பியோடிவிடாமல் இருக்க விமானநிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த தகவலில் மேலும் கூறப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் நாடு திரும்புகிறார் முஷாரப்.
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு திரும்பப் போவதாக அறிவித்துள்ளார்.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ கொலை வழக்கில் முஷாரப் சரியாக ஒத்துழைக்காததால் அவரை லாகூரில் உள்ள பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது.
இதைத் தொடர்ந்து அவரது சொத்துக்களையும் முடக்கியது. இதற்கிடையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்தபடி முஷாரப் அடிக்கடி பேட்டிகளையும், அறிக்கைகளையும் வெளியிட்டு வந்தார். தனது அறிக்கைகளில் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் நாடு திரும்பப் போவதாகக் கூறி வந்தார்.இதுகுறித்து நேற்று(19.12.2011) அவரது செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் முஷாரப் நாடு திரும்புகிறார். நாட்டின் தற்போதைய சூழல் தான் அவரை அடுத்த மாதமே நாடு திரும்பும் முடிவை எடுக்க வைத்துள்ளது என்றார்.
தாய்லாந்தில் வெள்ளம்: காப்பீட்டு நிறுவனங்களுக்கு பெருமளவில் இழப்பு.
தாய்லாந்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் காரணமாக காப்பீட்டு நிறுவனங்களுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இழப்பீடுகளை வழங்க முடியாமல் இந்நிறுவனங்கள் திணறுகின்றன.
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியின் சீற்றம் ஆகியவற்றால் ஏற்பட்ட இழப்பைக் காட்டிலும் தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளச் சீற்றத்துக்கு அதிக இழப்பீடு தொகை அளிக்க வேண்டியிருக்கும் என்று டோக்கியோ மெரைன் ஹோல்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கு 120 கோடி டொலர் இழப்பீட்டுத் தொகை வழங்கியதாக இந்நிறுவனம் தெரிவித்தது.
ஆனால் தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளச் சீற்றம் காரணமாக வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை இதைவிட அதிகமாக இருக்கும் என்று இடெல்வைஸ் டோக்கியோ ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஜுன் ஹெமி தெரிவித்துள்ளார்.ஜப்பானில் சுனாமி பேரழிவு ஏற்பட்ட பிறகு காப்பீட்டு நிறுவனங்களுக்குத் தேவையான பாதுகாப்பை அரசு அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இதுபோன்ற வசதி தாய்லாந்தில் இல்லை என்றார்.
இதனால் அளிக்க வேண்டிய காப்பீட்டு தொகை மிக அதிகமாக உள்ளது. இது காப்பீட்டு நிறுவனங்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.டோக்கியோ மெரைன் ஹோல்டிங் நிறுவனம் செயற்கைக்கோள் படப் பதிவுகள் அடிப்படையில் இழப்பீடுகளை அளித்துள்ளது. அதாவது இழப்பீடு கோரும் வீடு உண்மையில் சேதமடைந்துள்ளதா, சேதத்தின் மதிப்பு எவ்வளவு என்பதை செயற்கைக்கோள் படம் மூலம் கண்டறிந்து வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
வெனிசுலா நாட்டு முன்னாள் அழகி மார்பக புற்றுநோய்க்கு பலி.
வெனிசுலா நாட்டின் முன்னாள் அழகி மார்பக புற்றுநோய் காரணமாக இறந்தார். வெனிசுலா நாட்டின் முன்னாள் அழகியாக தெரிவு செய்யப்பட்டவர் ஈவா எக்வால்(28).இவர் மொடல் அழகியாகவும், நடிகையாகவும் இருந்தார். கடந்த ஆண்டு இவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.இதையடுத்து அவர் அமெரிக்காவில் உள்ள ஹஸ்டன் நகரில் தங்கி சிகிச்சை பெற்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்  இறந்தார்.
இதைத் தொடர்ந்து அவரது உடல் சொந்த நாடான வெனிசுலாவுக்கு அனுப்பப்பட்டது. தான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அறிந்ததும் அவர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த புத்தகம் ஒன்றை எழுதினார்.அதில் வெனிசுலா மக்களாகிய நாம் பணத்தை சம்பாதித்து சேமித்து வைத்திருக்கிறோம். அதன் மூலம் அழகை பேணி பாதுகாக்கிறோம். ஆனால் உடல்நலனை கவனிக்க தவறி விடுகிறோம் என கூறியுள்ளார்.
சமூக வலைத்தளமான ட்விட்டரில் சவுதி அரேபிய இளவரசர் முதலீடு.
சமூக வலைத்தளமான ட்விட்டரில் சவுதி அரேபிய இளவரசர் 300 மில்லியன் டொலர் முதலீடு செய்துள்ளார்.சமூக வலைத்தளமான ட்விட்டர் கடந்த 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகளவில் தற்போது இந்த வலைத்தளத்தை 10 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சவுதி இளவரசர் அல்வலீத் பின் தலால் பின் அப்துல் அஜீஸ் அல்சவுத், ட்விட்டரில் 300 பில்லியன் டொலர் முதலீடு செய்துள்ளதாக அவரது கிங்டம் ஹோல்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த ஏழு மாதங்களாக இருதரப்புக்கும் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இந்த முதலீடு நடந்துள்ளது. அரபு புரட்சியில் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் சமூக வலைத்தளங்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றின.
சிரியாவில் வெளிநாட்டு ஊடகங்கள் நுழையத்தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் அந்நாட்டு மக்கள், அங்கு நடப்பதை இந்த இரு வலைத்தளங்களின் வழியாக வெளியுலகுக்கு கொண்டு வருகின்றனர்.இதுகுறித்து கிங்டம் ஹோல்டிங் நிறுவன இயக்குனர் அகமது ஹலாவானி கூறுகையில், இந்த சமூக வலைத்தளங்கள் வரும் ஆண்டுகளில் ஊடக உலகத்தின் அடிப்படையையே மாற்றி அமைத்து விடும் என நம்புகிறோம் என்றார்.
சீனாவில் உரையாற்றினார் ஸ்ட்ராஸ்கான்.
சர்வதேச நிதியத்தின் முன்னாள் தலைவரான ஸ்ட்ராஸ்கான்(Strauss-Kahn) சீனாவின் தலைநகரான பீஜிங்கின்(Beijing) Net Ease என்ற இணையதள நிறுவனத்தினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கடன் நெருக்கடியால் ஐரோப்பா எதிர்கொள்ளும் ஆபத்துகள் பற்றி உரையாற்றினார்.நியூயார்க்கில் ஸ்ட்ராஸ்கான் சோஃபிட் டெல்(Sofitel hote) விடுதியில் தங்கியிருந்த போது அவர்மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றத்திற்காக சர்வதேச நிதியத்தின் தலைவர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார். பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி தேர்தலிலும் இந்த அவப்பெயரால் அவரால் போட்டியிட இயலவில்லை.
இந்த நிகழ்ச்சி பற்றி இவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு இவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். ஸ்ட்ராஸ் கான் தன்னுடைய உரையில் பிரான்சின் ஜனாதிபதியான சர்கோசியும்(Sarkozy) ஜேர்மனியின் ஜனாதிபதியான மெர்கெலும்(Merkel) ஒருவரையொருவர் சரியாகப் புரிந்து கொள்ள வில்லை.அதனால் தான் ஐரோப்பாவின் நிதிப் பிரச்னைகள் தீர்வு காணாமல் வளர்ந்து கொண்டே இருக்கின்றன என்றார். எந்தப் பிரச்னையும் சரியாக ஆராயப்படவில்லை. ஐரோப்பாவுக்கு என்று ஒரு பொதுவான நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட பொதுவான நிறுவனங்கள் கிடையாது.
மேலும் கடைசிப் புகலிடம் என்று எதுவுமில்லை நிதிக் கொள்கையை வரிவுபடுத்தவும் இல்லை என்று இப்பிரச்னையின் தீவிரத்தை விளக்கினார். ஸ்ட்ராஸ் கானின் மனைவி ஆன் சின்க்ளேர்(Anne Sinclair) CSA நடத்திய கருத்துக்கணிப்பில் ‘Woman of the year’ ஆகத் தெரிவு செய்யப்பட்டார். இதனை டெரேஃபெமினா இணையதளமும் 20 Minutes என்ற செய்தித்தாளும் செய்தி வெளியிட்டது.
CSA வின் தலைவர் பெர்னார்ட் சேனன்ஸ், 2011ஆம் ஆண்டின் செய்தித்தாள்களில் அடிக்கடி இடம்பெற்ற பத்துப் பெண்களின் பெயர்களைப் பட்டியலிட்டு வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தினோம். மக்களால் அதிகம் கவரப்பட்ட பிரபலமான பெண்மணி யார் என்பதை அறியவே இக்கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது என்றார்.
டெரேஃபெமினாவின் கருத்துப்படி சின்க்ளேர் காயம்பட்ட பெண்ணாக மக்களால் அடையாளம் காணப்பட்டார். பல பெண்கள் தங்களோடு அவரை இணைத்துப் பார்த்தனர். எனவே அவர் பிரபலமானார் என்று இந்த இணையதளத்தை உருவாக்கிய வெரானிக் மொராலி கூறியுள்ளார்.இந்தக் கருத்துக்கணிப்பில் சர்வதேச நிதியத்தின் தற்போதைய தலைவியான கிறிஸ்ட்டினா லா கார்டேயும் சோசலிசக் கட்சியைச் சேர்ந்த மார்ட்டின் ஆப்ரியும் இரண்டாவது இடத்தைப் பெற்றனர்.
புதிய ஒப்பந்தத்தில் பிரிட்டனுக்கு எதிரான ரகசியம் எதுவுமில்லை ஜேர்மனி அறிவிப்பு.
ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் குய்ட் வெஸ்ட்டெர்வெல்(Westerwelle), புதிய ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தில் பிரிட்டிஷாருக்கு எதிரான ரகசியங்கள் எதுவுமில்லை.அதில் பிரிட்டன் கையெழுத்திட மறுத்துவிட்டாலும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓர் அங்கமாக இருப்பதையே அனைவரும் விரும்புகின்றனர். எனவே உறவுப்பாலம் அமைக்கும் முயற்சிகளை எடுப்போம் என்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
ஜேர்மனி, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து சிந்திக்கவும், செயல்படவும் வேண்டும் என்று விரும்புகிறது. புதிய ஒப்பந்தம் ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார மையமாகத் திகழும் இலண்டனை வலுவிழக்கச் செய்வதால் எனவே பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் ஒருமனதாக இணைய வேண்டும் என்பது எனது ஆவலும் அழைப்பும் ஆகும் என்று வெஸ்ட்டெர் வெல் பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சரான வில்லியம் ஹேகுடன் இணைந்து நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
ஜேர்மனியின் விருப்பத்தின் பேரில் இந்தச் சந்திப்பு இலண்டன் மாநகரில் நடைபெற்றது. வெளியுறவுக் கொள்கை மற்றும் யூரோ மண்டல நெருக்கடிக்கான தீர்வுகளில் பிரிட்டனும் முக்கியப்பங்கு வகிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதற்காக வெஸ்ட்டர்வெல் இலண்டன் வந்தார்.இப்போது புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத போதும் பிரிட்டன் அந்த பொது நிதி ஒப்பந்தம் தொடர்பான விவாதங்களில் பார்வையாளராகக் கலந்து கொள்ளலாம் என இலண்டனில் முடிவு செய்யப்பட்டிருக்கின்றது.
ஸர்தாரியை பாகிஸ்தான் ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி ஸர்தாரியை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.உடல் அளவிலும், மனதளவிலும் முழு தகுதி இல்லாததால் அவர் நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியில் தொடரக் கூடாது என்று மனுதாரர் முகமது ஆசிம் வலியுறுத்தியுள்ளார்.
தனது கோரிக்கைக்கு ஆதரவாக பாகிஸ்தான் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 47-வது பிரிவை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அப்பிரிவின்படி உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ முழு தகுதி இல்லாதவரை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க முடியும்.
ஸர்தாரி இப்போது மனரீதியாக பாதிக்கப்பட்டவராக உள்ளார். எனவே ஜனாதிபதி பதவியில் தொடரும் தகுதியை அவர் இழந்துவிட்டார் என்று அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.ஜனாதிபதியாகப் பதவியேற்கும் ஒவ்வொருவரும், அரசியல் சாசனத்துக்கு உள்பட்டு நடப்பேன் என்று உறுதிமொழி ஏற்கின்றனர். ஆனால் இப்போது மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஸர்தாரி, தனது உறுதிமொழியை மீறிவிட்டார் என்றும் தனது மனுவில் முகமது ஆசிம் கூறியுள்ளார்.
இருதய நோய் சிகிச்சைக்காக அவர் துபாய் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு மனநோய் ஏற்பட்டுள்ளதால் சிகிச்சை பெற சென்றுள்ளதாகவும் தகவல் வெளியானது. அவர் எப்போது பாகிஸ்தான் திரும்புவார் என்பது குறித்தும் அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
எனினும் ஸர்தாரியை பதவியில் இருந்து நீக்குவதற்காக பாகிஸ்தான் இராணுவம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாகவே அவர் துபாய் சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில் அவரை பதவி நீக்கக்கோரி நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
550 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் முடிவு.
ஹமாஸ் அமைப்பினருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி 550 பாலஸ்தீனக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.முன்னதாக பாலஸ்தீனத்தில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் இராணுவத்தின் கமாண்டர் கிலாட் ஷாலிட்டை கடந்த 2006ம் ஆண்டில் பிடித்துச் சென்றனர். சுமார் 5 ஆண்டுகளுக்குப்பின் கடந்த அக்டோபரில் அவர் விடுவிக்கப்பட்டார்.
இஸ்ரேல் பிடித்து வைத்துள்ள பாலஸ்தீனர்களில் 1,027 பேரை விடுவிக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிலாட் விடுதலை செய்யப்பட்டார். ஹமாஸ் அமைப்பிடம் பிடிபட்டு இஸ்ரேலுக்கு உயிருடன் திரும்பிய ஒரே இராணுவ கமாண்டர் கிலாட் மட்டும்தான்.
இந்நிலையில் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தின் இறுதிக் கட்டமாக 550 பாலஸ்தீனக் கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது.எனினும் விடுவிக்கப்படும் கைதிகளில் ஒருவர் கூட ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாதி அமைப்பினர் இல்லை, யாரையெல்லாம் விடுவிப்பது என்பதை இஸ்ரேல் அரசுதான் தீர்மானித்தது என்று இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா எல்லைப் பகுதியில் வைத்து கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர். இப்போது விடுவிக்கப்படுவோரில் சாலா ஹமூரி குறிப்பிட்டத்தக்கவர்.இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். பலமுறை அமைதிப் பேச்சு நடத்தியும், இதுவரை நிரந்தரமாக அமைதி திரும்பவில்லை.
வட கொரிய தலைவர் மரணம்.
வட கொரிய தலைவர் கிம் ஜோங்(69) சனிக்கிழமை(17.12.2011) மரணமடைந்தார். ஆனால் இன்று(19.12.2011) தான் அரசு தொலைக்காட்சி உத்தியோகப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.கடந்த 1994ம் ஆண்டு முதல் வட கொரியாவை ஆட்சி செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிம் ஜோங் மரணமடைந்ததை தொடர்ந்து தென் கொரியா தனது இராணுவத்தை உஷார்படுத்தியுள்ளது.கிம் ஜோங் கடந்த 2008ம் ஆண்டு முதல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தீவிர சிகிச்சை பலன் இன்றி மரணமடைந்தார்.
எகிப்தில் தொடரும் கலவரம்: 441 பேர் படுகாயம்.
எகிப்தில் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான கல்வீச்சு நேற்றும்(18.12.2011) தொடர்ந்தது. கடந்த இரு நாட்களாக நடந்த கலவரத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர், 441 பேர் காயம் அடைந்துள்ளனர்.
எகிப்தில் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 28ம் திகதி முதல் நடந்து வருகிறது. கடந்த வாரம் இரண்டாம் கட்டத் தேர்தல் அமைதியான முறையில் நடந்தது.இந்நிலையில் கடந்த 16ம் திகதி பாதுகாப்புப் படையினருக்கும், தாரிர் சதுக்கத்தில் தங்கி இராணுவ ஆட்சிக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் இளைஞர்களுக்கும், இடையில் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலைத் தொடர்ந்து கெய்ரோவின் பல பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள் தாரிர் சதுக்கத்தில் குவிய ஆரம்பித்தனர். நேற்று முன்தினம் இருதரப்புக்கிடையிலான மோதலில் பாதுகாப்புப் படையினர் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.இவற்றில் சில குண்டுகள் தேசிய ஆவணக் காப்பகத்திலும் விழுந்தன. இதனால் காப்பகம் தீப்பிடித்து எரிந்தது. எகிப்தின் கடந்த 200 ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட காகித ஆவணங்கள் இத்தீயில் எரிந்து சாம்பலாயின.
இச்சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு பழமையான ஆவணங்களை இழந்து விட்டதாக குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.இந்நிலையில் தாரிர் சதுக்கத்தில் திரண்டிருந்த இளைஞர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் இளைஞர்கள் படையினரை நோக்கி கற்களை அள்ளி வீசினர். தொடர்ந்து சதுக்கத்தில் இருந்து நாடாளுமன்ற அமைச்சரவைக் கட்டடம் ஆகியவற்றை நோக்கிச் செல்லும் பாதைகளில் தற்காலிக தடுப்புகளை படையினர் ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த திடீர் கலவரத்திற்கு காரணம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. நாடாளுமன்ற வளாகத்திற்குள் விழுந்த பந்து ஒன்றை எடுக்கச் சென்ற இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கடுமையாக அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.கடந்த இரு நாட்களில் நடந்த கலவரம் குறித்துப் பேசிய பிரதமர் கமால் அல் கன்ஜோரி(78) கூறுகையில், தற்போது நடப்பது புரட்சியல்ல, புரட்சி மீது நடத்தப்படும் தாக்குதல் என விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றம் அமைந்த பின்பும், இராணுவத்திற்கான தற்போதைய அதிகாரங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று அரசியல் அமைப்புச் சட்டத்தின் முன்வரைவில் குறிப்பிடப்பட்டிருந்ததால், மக்கள் மத்தியில் மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.நடந்து முடிந்த இரு கட்ட நாடாளுமன்ற தேர்தல்களில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியான நீதி மற்றும் விடுதலைக் கட்சியும், இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சியான அல் நூர் கட்சியும் கணிசமான இடங்களைப் பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் திரும்பினார் ஸர்தாரி.
உடல்நலக்குறைவு காரணமாக துபாயில் சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் ஜனாதிபதி ஸர்தாரி நள்ளிரவில் சொந்த நாடு திரும்பினார்.கடந்த 6ம் திகதியன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் துபாய் சென்றார். அங்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டார்.
இதற்கிடையே ஸர்தாரி குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகின. அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் நேற்று(18.12.2011) நள்ளிரவில் துபாயில் சிகிச்சை முடித்து கராச்சியில் உள்ள மசூரூர் விமானப்படைத்தளம் வழியாக நாடு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் கடைசி இராணுவப் பிரிவும் ஈராக்கிலிருந்து வெளியேறியது.
ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படையின் கடைசிப் பிரிவு வெளியேறி குவைத் நாட்டுக்குள் நுழைந்தது.சதாம் உசேனை ஆட்சியில் இருந்து கவிழ்ப்பதற்காக ஈராக்கில் நுழைந்த அமெரிக்கப் படை ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் குவைத் வழியாக தாய்நாடு திரும்புகிறது.ஈராக்கில் கடந்த 2003ம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி சதாம் உசேன் இரசாயன ஆயுதங்கள் வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டி, அவரை பதவியில் இருந்து வெளியேற்றிய அமெரிக்க இராணுவம் அந்நாட்டிற்குள் நுழைந்தது.
கடந்த ஒன்பதாண்டுகளில் 4,500 அமெரிக்க வீரர்களும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஈராக்கியர்களும் பலியாகியுள்ளனர். இந்தப் போருக்காக அமெரிக்கா 800 பில்லியன் டொலரை செலவழித்துள்ளது.போரின் உச்சக்கட்டத்தில் ஈராக்கில் ஒரு லட்சத்து, 70 ஆயிரம் வீரர்களை அமெரிக்கா குவித்தது. அந்நாட்டின் 500 இடங்களில் இராணுவ தளங்களை அமைத்தது. எனினும் போருக்கான நோக்கங்கள் நிறைவேறியதா என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
திட்டமிட்டபடி கடந்தாண்டில் இருந்தே ஈராக்கின் பல பகுதிகளின் பாதுகாப்பு அமெரிக்கப் படையிடம் இருந்து ஈராக் பாதுகாப்புப் படைக்கு மாற்றப்பட்டு வந்தது.கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அமெரிக்கப் படைகள் இந்தாண்டின் இறுதிக்குள் ஈராக்கில் இருந்து வெளியேறும் என அறிவித்தார்.
படிப்படியாக அமெரிக்கப் படைகளும் வெளியேறி வந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம்(17.12.2011) அமெரிக்கப் படையின் 100 ஆயுத வாகனங்களில் 500 வீரர்களைக் கொண்ட கடைசிப் பிரிவு ஈராக்கில் இருந்து புறப்பட்டது.ஒரே நாள் இரவில் அப்படை ஈராக்கின் பாலைவனத்தைக் கடந்து குவைத்திற்குள் நுழைந்தது. இதே வழியாகத்தான் கடந்த ஒன்பதாண்டுகளுக்கு முன் அமெரிக்கப் படை ஈராக்கிற்குள் நுழைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கப் படைகளின் வெளியேற்றத்திற்குப் பின் ஈராக்கில் அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலவரங்கள் உறுதிப்படுமா என்பதில் சர்வதேச அளவில் கவலை ஏற்பட்டுள்ளது.மீண்டும் அங்கு இன மோதல்கள் அதன் மூலமான உள்நாட்டுப் போர் ஆகியவற்றுக்கு வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் 157 வீரர்கள் மட்டுமே உள்ளனர். தூதரகப் பாதுகாப்பிற்காக கடற்படையின் ஒரு பிரிவும் அங்கு தங்கியுள்ளது.
தூதரகத்தை பாதுகாப்பதற்காக ஆராய்ச்சி மேற்கொள்ளும் கனடா.
கனடா தனது தூதரகத்தை தீவிரவாதிகள் மற்றும் இயற்கைப் பேரிடர் போன்ற அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதற்காக அடுத்த ஆண்டு ஓர் ஆராய்ச்சியை மேற்கொள்ளவுள்ளது.இந்த ஆராய்ச்சிக்கு ஒரு மில்லியன் டொலர் முதல் ஐந்து மில்லியன் டொலர் வரை செலவாகும் என்று அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அச்சுறுத்தலை ஆராய்வதற்கும், மதிப்பீடு செய்வதற்கும் திறமையான உளவு நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளது.இதற்கான ஒப்பந்தம் விரைவில் ஏதேனும் ஒரு நிறுவனத்துடன் கையெழுத்தாகும். அடுத்த ஆண்டில்(2012) முதல் மூன்று மாதத்திற்குள் ஓர் ஒப்பந்தக்காரரிடம் தூதரக அச்சுறுத்தல் மதிப்பீட்டுப் பணிகள் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிகிறது.
கடன் தொல்லையால் அவதிப்படும் ஜேர்மன் ஜனாதிபதி.
ஜேர்மன் ஜனாதிபதி கிறிஸ்டியன் உல்ப் யாருக்கும் தெரியாமல் கீர்கென் என்ற பணக்காரரின் மனைவியான எகோன் கீர்கெனின்சிடம் அரை மில்லியன் யூரோ கடன் வாங்கியுள்ளார்.இந்த ரகசியம் தற்போது வெளியாகி விட்டதால் அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி குரல் எழுப்பியுள்ளது.
ஜேர்மனியின் வடக்குப் பகுதியில் லோயர் சேக்ஸனி என்ற மாநிலத்தின் தலைவராக இருந்த போது இந்த ஊழல் நடைபெற்றது. இதனை இப்போது கிறிஸ்டியன் உல்ப் ஒத்துக் கொண்டுள்ளார்.மைய-இடது சாரிப் பிரிவைச் சேர்ந்த சமூகக் குடியரசுக் கட்சியின் நாடாளுமன்றத் தலைவரான தாமஸ் ஓப்பர்மன் ஜேர்மனியின் செய்தித்தாள் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறுகையில், உல்ப் கீர்கென்சின் மனைவி எடித் என்பவரிடம் பெற்ற வீட்டுக் கடன் பற்றி முழுமையாக விளக்கினால் மட்டுமே அவருடைய நம்பகத்தன்மை காப்பாற்றப்படும் என்றார்.இக்கட்சியின் பொதுச் செயலர் ஆண்டிரியா நாஹ்லெஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார்.
இதுகுறித்து உல்ப் கூறுகையில், பதவி விலக கூடிய அளவுக்கு எந்த தவறையும் நான் செய்யவில்லை என்றார்.மேலும் கூறுகையில், தனக்கும் எகோன் கீர்கென்சுக்கும் எவ்வித வர்த்தகத் தொடர்பும் கிடையாது. கடந்த 2010ஆம் ஆண்டில் ஜனாதிபதி ஆனவுடன் வங்கிக் கடன் பெற்று எடித் கீர்கென்ஸிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தியதாகவும் தெரிவித்தார்..
பிரான்சில் விமான நிலையப் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்.
பிரான்ஸ் நாட்டின் விமானப் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்கிறது. இதனால் பல விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன, சில விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டன.லேயோன் என்ற விமான நிலையத்தில் நேற்று(18.12.2011) காலையில் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. இங்கு வேலை நிறுத்தப் போராட்டம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பிற்பகலிலும் கிட்டத்தட்ட பாதி சேவைகள் ரத்தாகும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விமான நிலைய பாதுகாப்புத் துறையின் அதிகாரிகளுடன், சேசா என்ற பணியாளர் அமைப்பினர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து இன்று திங்கட்கிழமை மீண்டும் போராட்டம் தொடரும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்தன.சம்பள உயர்வு முதலான தொழிற்சங்கக் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் அரை மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு தொழிற்சங்கப் பிரதிநிதிகள் வெளியேறினர்.இந்த வேலை நிறுத்தப் போராட்டம் லேயோன் விமான நிலையத்திலிருந்து சார்லஸ் டே கவுலே மற்றும் தோலோஸ் விமான நிலையங்களுக்கும் பரவியது.
நான்கு ஆண்டுகளாக பிரிட்டனில் வருமான வீழ்ச்சி.
தொடர்ந்து நான்காவது ஆண்டாக பிரிட்டனில் மக்களின் சராசரி வருமானம் வீழ்ச்சியடைந்து வருகிறது. இங்கிலாந்து வங்கியின் முதல் காலாண்டு அறிக்கையை ஆய்வு செய்த போது கடந்த ஆண்டில் 46 பவுண்டு வரை வருமானம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
சுமார் 56 சதவிகிதம் பேர் தங்களின் வரவுக்கும், செலவுக்கும் சரியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். 13 சதவிகிதம் பேர் மட்டுமே தாங்கள் சிறப்பாக இருப்பதாகத் தெரிவித்தனர். 12 சதவிகிதம் பேர் தாங்கள் வீட்டு வாடகை கூட தர இயலாமல் தவிப்பதாக கூறினர்.
அரசின் நிதிக்கட்டுப்பாடுகளால் மக்கள் பெரிதும் அலைக்கழிக்கப்படுகின்றனர். பாதிப் பேர், சென்ற ஆண்டைக்(2010) காட்டிலும் இந்த ஆண்டு செலவு அதிகரித்துள்ளதாக கூறினர்.மூன்றில் இரண்டு பங்கினர் இந்தப் பிரச்னை வருங்காலத்தில் தங்களை அதிகமாகப் பாதிக்கும் என்றனர். சம்பளம் குறைவதால் நுகர்வோரின் வாங்கும் திறனும் குறைந்துவிட்டது. இதனால் பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டுள்ளது.
தலிபான் அமைப்பு பாகிஸ்தானிலிருந்து செயல்படுகிறது: ஹமீத் கர்சாய்.
தலிபான் பயங்கரவாத இயக்கத்தினர் பாகிஸ்தானிலிருந்து இயங்கி வருவதாக ஆப்கான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் கூறியுள்ளார்.
மேலும் அவர் பாகிஸ்தான் ஒத்துழைப்பு இல்லாமல் அர்த்தமுள்ள பேச்சவார்த்தையோ தீர்வோ கிடைக்காது எனவும் கூறியுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி கொல்லப்பட்ட சம்பவம் அமைதி பேச்சுவார்த்தைக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறினார்.
மனைவியின் மூக்கு, உதடுகளை அறுத்து விட்டு தப்பிய ஓடிய கணவருக்கு வலைவீச்சு.
பாகிஸ்தானில் குடும்ப தகராறு காரணமாக இளம் மனைவியின் மூக்கு, உதடுகளை அறுத்துவிட்டு தப்பியோடிய கணவனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் தேரா காஸி கான் மாவட்டத்தில் உள்ளது தார்க் நகரம். இங்கு பழங்குடியின மக்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.
காதிர் பக்ஷ் என்பவருக்கு சமீபத்தில் சல்மா என்ற 17 வயது இளம்பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. அதன்பின் இளம் தம்பதிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.மனைவியின் மூக்கு, உதடுகளை ஆத்திரத்தில் அறுத்துவிட்டு காதிர் தப்பியோடி விட்டார். இருவருக்குமிடையே என்ன தகராறு நடந்தது, காதிர் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார் என்பன போன்ற விபரங்கள் தெரியவில்லை. தலைமறைவான காதிரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சிரியாவில் அமைதி ஏற்படும்: ஓமன் வெளிவிவகாரத்துறை அமைச்சர் நம்பிக்கை.
சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக அரபு நாடுகளுடன் இணைந்து அமைதியை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தில் சிரியா ஜனாதிபதி கையெழுத்திடுவார் என ஓமன் நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் யூசுப் பின் அப்துல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் வளைகுடா நாடுகளின் ஆலோசனை கூட்டம் இன்று(19.12.2011) தொடங்குகிறது. இதில் சிரியாவிற்கான அமைதி ஒப்பந்தமும் சமர்பிக்கப்படும் எனத் தெரிகிறது.
பிலிப்பைன்சில் சூறாவளி: பலி எண்ணிக்கை 1000-ஐத் தொடுகிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மிடானோ மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியில் பலியானவர்களின் எண்ணிக்கை 1000-ஐத் தொடுகிறது.
இதுவரை 957 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளது.இன்னும் 49 பேரை காணவில்லை. ககாயன் டி ஓரோ பகுதியில் மட்டும் 579 பேர் பலியாகியுள்ளனர்.லிகன் பகுதியில் 279 பேர் பலியாகியுள்ளதாக தெரிகிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF