Friday, December 16, 2011

இன்றைய செய்திகள்.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு அரசு உரிய பதிலளிக்கவில்லை – ஐ.தே.க.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் உரிய பதிலளிக்க வில்லை என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இந்த நாட்டில் இடம்பெற்ற அனைத்து விடயங்கள் தொடர்பிலும் விளக்கம் அளிக்கப்பட வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அத்தோடு ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் சில பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன.
இந்தப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுகின்றனவா? என கேள்வியெழுப்பியுள்ளார்.
உதலாகம ஆணைக்குழுவின் அறிக்கைக்கு என்ன நேர்ந்தது இதுவரையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. மனித உரிமைகளை மேம்படுத்த விசேட செயற்திட்டமொன்று அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும் விளக்கமளித்தார். எனினும், இதுவரையில் மனித உரிமை மேம்பாடு தொடர்பான செயற்திட்ட அறிக்கை தயாரிக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மரக்கறி வகைகளுக்கு தட்டுப்பாடு ? பல்வேறு விலைகளில் மரக்கறிகள் விற்பனை.
நாட்டின் பல பகுதிகளிலும் மரக்கறி வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் புதிய சட்டத்தினால் மரக்கறி விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரக்கறி மற்றும் பழ வகைகளை போக்குவரத்து செய்யும் போது பிளாஸ்டிக் கூடைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என கொண்டுவரப்பட்ட சட்டம் காரணமாக மரக்கறி பழ வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஒவ்வொரு பிரதேசத்திலும் மரக்கறி வகைகள் மற்றும் பழங்கள் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மரக்கறி வகைகளை போக்குவரத்து செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கலினால் இவ்வாறு தட்டுப்பாடு நிலவுவதுடன், மரக்கறி வகைகளின் விலைகளும் உயர்வடைந்துள்ளன.
இதனிடையே, பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்தும் புதிய சட்டம் ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சு அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் மரக்கறி விலைகள் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா.வின் செயலாளரினால் எமது நாடு தொடர்பில் தீர்மானங்களை எடுக்க முடியாது!- சஜின்வாஸ் குணவர்தன.
ஐ.நா.வின் செயலாளர் இந்த நாட்டின் ஜனாதிபதியோ, பிரதமரோ, எதிர்க்கட்சியின் தலைவரோ, இன்றேல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரோ அல்ல. அவரினால் எமது நாடு தொடர்பில் தீர்மானங்களை எடுக்க முடியாது. என்று ஆளும் கட்சியின் எம்.பி.யான சஜின்வாஸ் குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
புலிகள் அழிக்கப்பட்டபோதிலும் அவர்களின் கோஷங்கள் இன்னுமே ஒழியவில்லை. கோஷங்கள் மென்மேலும் வலுப்பெற்றுள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தவறான வழியில் பயணித்து கொண்டிருக்கின்றனர். அரசுக்கும் புலம்பெயர் வாழ் மக்களுக்கும் இடையிலான கயிற்றிலேயே தமிழ்க் கூட்டமைப்பு நின்று கொண்டிருக்கின்றது. அதனால் அவர்கள் விரைவில் தடம்புரள்வார்கள். தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்காமலே சர்வதேசத்தை நோக்கி ஆர்ப்பரிக்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐ.நா.வின் செயலாளர் இந்த நாட்டின் ஜனாதிபதியோ, பிரதமரோ, எதிர்க்கட்சியின் தலைவரோ, இன்றேல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரோ அல்ல. அவரினால் எமது நாடு தொடர்பில் தீர்மானங்களை எடுக்க முடியாது.
எனினும் இங்குள்ள சிலரே வெளிநாடுகளுக்கு ஓடிச் சென்று எமது நாடு தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்கி வருகின்றனர். இது தொடர்பில் இலங்கையரான நாங்களே வெட்கி தலைகுனிய வேண்டும்.
எம்மை தனித்து சுதந்திரமாக செயற்படுவதற்கு இடமளிக்குமாறு ஏகாதிபத்திய நாடுகளிடம் கேட்டுக் கொண்டுள்ளன. இறைமையுள்ள நாடு என்ற வகையில் எமது விடயத்தில் ஏனையோர் தலையிட முடியாது. எமது பிரச்சினைகளை நாமே தீர்ப்போம்.
தனித்தே செயற்பட நாம் விரும்புகின்றோம் என்பதுடன் சம்பந்தனின் பேச்சு தமிழ் மக்களுக்கானது அல்ல சர்வதேசத்துக்கு உரியதாகும் என்றார். 
பஸ் கட்டணங்களை அதிகரிக்க கோரி தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்.
பஸ் கட்டணங்களை அதிகரிக்குமாறும் டீசல் மானியத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தியும் இல்லாவிட்டால் நாடளாவிய ரீதியில் பகிஷ்கரிப்பை மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் நேற்று புதன்கிழமை கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
தமது கோரிக்கைளை முன்வைத்து இன்றுடன் ஒருமாதம் நிறைவடைகின்ற போதிலும் இதுவரை தமக்கு பதில் எதுவும் கிடைக்கவில்லை என அச் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
ஒருமாதகாலத்தில் நிறைவேற்றுவதாக உறுதியளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற தனியார் போக்குவரத்து அமைச்சு தவறிவிட்டது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
சட்டவிரோத அனுமதிப் பத்திரங்களை வழங்க வேண்டாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும் இப்போதும் சட்டவிரோத அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதாகவும் சங்கம் தெரிவித்துள்ளதுடன், சட்டவிரோத அனுமதிப்பத்திரம் தொடர்பாக பஸ் உரிமையாளர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தொடர்பாக விசாரணை நடத்துமாறும் கோரியுள்ளது.
இடிஅமீனின் மறுஜென்மம் பற்றி உலகிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்!- சரத் பொன்சேகா.
இடிஅமீனின் மறுஜென்மம் பற்றி உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும். சர்வாதிகாரத்தை தோற்கடிக்க சர்வதேசத்தின் ஒத்துழைப்புப் பெற்றுக்கொள்ளப்படும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தோள்பட்டையில் ஏற்பட்ட உபாதைக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள தனியார் வைத்தியசாலைக்குச் சென்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வாதிகாரிகளை தோற்கடிப்பதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படவுள்ளமையானது ,நாட்டுக்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ எதிராக நாம் சர்வதேசத்திற்கு செல்லவில்லை, சர்வாதிகாரிகளுக்கு எதிராகவே நாம் சர்வதேசத்தில் முறையிடுகின்றோம்.
இடிஅமீனின் மறுஜென்மம் பற்றி உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
முன்னர் கறுப்பு இடிஅமீன் இருந்தார், தற்போது வெள்ளை இடிஅமீன் இருக்கிறார் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடற்பரப்பு கொந்தளிப்பாக அமையும்! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.
இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பு இன்று சற்று கொந்தளிப்பாக அமையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று வடகிழக்கு திசையில் இருந்து மணித்தியாலத்திற்கு 20 தொடக்கம் 30 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும் என திணைக்களத்தின் வானிலை நிபுணர் மெரில் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.
காற்றின் வேகம் சில சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்திற்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் என்பதால் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பு சில சந்தர்ப்பங்களில் கொந்தளிப்பாக காணப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில பிரதேசங்களில் கடும் மழை பெய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் அல்லது மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் வானிலை நிபுணர் மெரில் மென்டிஸ் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இலங்கைக்கு போதைப் பொருள் கடத்திய பாகிஸ்தானியர்களுக்கு ஆயுள் தண்டனை.
இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட பாகிஸ்தானியர்கள் இருவருக்கு நீர்கொழும்பு உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தங்கள் மீதான குற்றச்சாட்டை இவர்கள் ஒப்புக்கொண்டதையடுத்து நீர்கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி சிரான் குணரட்னவினால் இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1641.1 கிராம் மற்றும் 279.2 கிராம் ஹெரோயின் வைத்திருந்ததாக குற்றச்சாட்டப்பட்டு, கடந்த 2009ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்ப்பட்டு இவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அஸிஸ் ராஹீம், ஹாஷ்ஹிஸ் முகமட் ஆகிய பாகிஸ்தானியரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
போதைப்பொருள் கடத்தியமை, வைத்திருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சட்ட மா அதிபர் இவர்கள் மீது வழக்குத் தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐ.தே.கவின் தலைவர் கரு! எதிர்க்கட்சித் தலைவர் ரணில்: மகாநாயக்க தேரர்கள் தெரிவிப்பு.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பு கரு ஜயசூரியவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு ரணில் விக்ரமசிங்கவிற்கும் வழங்கப்பட வேண்டுமென மாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பிற்காக வாக்கெடுப்பு நடத்தப்படக் கூடாது எனவும் ஒற்றுமையான முறையில் தலைமைத்துவப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்சித் தலைமைப் பதவிக்காக இரண்டு குழுக்காக பிரிந்து செயற்படுவது ஆரோக்கியமான நிலைமையல்ல என மல்வத்து, அஸ்கிரி, அமரபுர மற்றும் ராமன்ய பௌத்த பீடங்களின் மாநாயக்கத் தேரர்கள் இணைந்து இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
இந்தக் கோரிக்கைகள் அடங்கிய விசேட கடிதமொன்றையும் தேரர்கள், ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மல்வத்து விஹாரையைச் சேர்ந்த பொறுப்பு வாய்ந்த பௌத்த பிக்குகளினால் இந்த கூட்டுக் கடிதம் அனுப்பி வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரயில் நிலைய கட்டடங்களில் தங்தியிருப்போர் ஜனவரிக்கு முன்னர் வெளிறே வேண்டும்: ரயில்வே திணைக்கள பிராந்திய பொறியியலாளர் தெரிவிப்பு.
வடமாகாணத்திலுள்ள ரயில்வே நடைபாதைகள் மற்றும் ரயில் நிலைய கட்டடங்களில் தங்கியிருக்கும் மக்கள் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு முன்னதாக அவற்றை கைவிட்டு வேறு இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று ரயில்வே திணைக்களத்தின் வட பிராந்திய பொறியியலாளர் எஸ். எஸ் செல்வரட்ணம் தெரிவித்துள்ளார்.
ஓமந்தையில் இருந்து காங்கேசன்துறை வரையும் ரயில்வே பாதை அமைக்கும் ஆரம்ப கட்ட பணிகள் எதிர்வரும் ஜனவரியில் ஆரம்பிக்கப்பட உள்ளன.
இதற்கு முன் ஏற்பாடாக ரயில் பாதைகளை அமைத்து சீர்செய்யும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஓமந்தையில் இருந்து காங்கேசன்துறை வரைக்குமான ரயில் பாதையை நேரான பாதையாக அமைப்பதற்கு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஏற்கனவே இருந்த பாதை வளைந்த பாதையாகும். இப்போது பாதைகள், மதகுகள் போன்றவற்றை தவிர்த்து ரயில் பாதை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைவிட யாழ்-ரயில்வே நிலையம் மற்றும் காங்கேசன்துறை ரயில் நிலையம் என்பனவும் மிகவும் நவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளன.
இதே சமயம் யாழ்-ரயில் நிலைய கட்டடத்தில் தங்கிருப்போரும் ஜனவரிக்கு முன்னர் குறித்த இடத்திலிருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண பாடசாலைகளின் ஆசிரியர் இடமாற்றம் குறித்து மீண்டும் ஆர்ப்பாட்டம்.
கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் சமமின்மையை நீக்க மாகாண கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான இடமாற்ற உத்தரவுகள் தொடர்பாக மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடக்கம் ஏற்கனவே இப்படியான இடமாற்றம் அமுலுக்கு வந்த வேளை ஆசிரியர்களின் எதிரிப்பு தொழிற் சங்கங்கள், அரசியல் வாதிகளின் அழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் குறித்த இடமாற்ற உத்தரவுகள் ரத்துசெய்யப்பட்டன.
தற்போது மீண்டும் புதிய இடமாற்றத் திட்டம் எதிர்வரும் ஜனவரி 2ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மாகாண கல்வி அமைச்சினால் தெரிவான ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராகவும் தற்போது எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
நேற்று புதன்கிழமை கல்முனை கல்வி வலய பாடசாலைகளிலிருந்து இடமாற்றம் பெற்றுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வீதியில் இறங்கி தமது குழந்தைகள் சகிதம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கல்முனை பொது நூலக முன்றலிலிருந்து வலயக் கல்வி அலுவலகம் வரை பேரணியொன்றையும் நடத்தி வலயக் கல்வி இயக்குனரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
அங்கு சமூகமளித்த ஆளும் கட்சி மாகாண சபை உறுப்பினர் துல்ஹார் நஹீம் குறித்த இடமாற்ற உத்தரவு ரத்து செய்வதற்கான முயற்சிகளை தான் மேற்கொள்வதாக அளித்த உறுதிமொழியையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண கல்வி அமைச்சின் தகவலின்படி பட்டிருப்பு, கல்முனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய கல்வி வலயங்களில் மேலதிகமாக உள்ள ஆசிரியர்கள் அடையாளம் காணப்பட்டு புள்ளி திட்ட அடிப்படையில் கிண்ணியா, மட்டக்களப்பு மத்தி, கல்குடா, மூதூர் மற்றும் பொத்துவில் ஆகிய கல்வி வலயங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு ஏற்ப இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
''தாமரைத் தடாகம்'' மகிந்த ராஜபக்ஸ கலையரங்கு திறந்துவைக்கப்படவுள்ளது.
இலங்கை - சீன நட்புறவின் ஞாபகார்த்தமாக கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள தாமரை தடாகம் (நெலும் பொக்குன) மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் சீனாவின் பிரதிப் பிரதமரும் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக கலையரங்கைத் திறந்துவைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1288 ஆசனங்களைக் கொண்ட இந்தக் கலையரங்கம், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதுடன், நவீன முறையில் மாற்றங்கள் செய்யக் கூடிய மேடை, நவீன தொழில்நுட்பத்திலான ஒலி மற்றும் ஒளி அமைப்புக்கள் செய்யப்பட்டுள்ளன.
ஐந்து மாடிகளைக் கொண்ட இந்தக் கலையரங்கம் 21,760 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. உடைகள் மாற்றும் 13 அறைகள், சிற்றுண்டிச்சாலை, 306 வாகனங்கள் நிறுத்தக்கூடிய வாகனத் தரிப்பிட வசதி எனப் பல்வேறு வசதிகளைக் கொண்டதாக இந்தக் கலையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 300 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள இக்கலையரங்கம் திறந்துவைக்கப்படுவதை முன்னிட்டு ஹோர்டன் பிளேஸ் முதல் பொது நூலகம் வரையிலான வீதிக்கு ‘தாமரை தடாகம்’ வீதி (நெலும் பொக்குன) எனப் பெயரிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
50 தமிழர்களை இன்று நாடு கடத்துகிறது பிரித்தானியா – ‘கார்டியன்‘ நாளிதழ் செய்தி.
சுமார் 50 வரையான தமிழ் அகதிகளை பிரித்தானிய அதிகாரிகள் இன்று தனி விமானம் ஒன்றின் மூலம் சிறிலங்காவுக்கு நாடு கடத்தவுள்ளதாக பிரித்தானியாவின் ‘கார்டியன்‘ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.இன்று பிற்பகல் 50 வரையான அகதிகளுடன் இந்த விமானம் சிறிலங்கா நோக்கிப் புறப்படவுள்ளது. ஆனால் எந்த விமான நிலையத்தில் இருந்து இவர்களை ஏற்றிய விமானம் புறப்படவுள்ளது என்பதை வெளியிடாமல் பிரித்தானிய அதிகாரிகள் இரகசியமாக வைத்துள்ளனர்.
திருப்பி அனுப்பப்படும் தமிழ் அகதிகள் சிறிலங்கா படைகளால் துன்புறுத்தப்படுவதாக புதிய சாட்சியங்கள் கிடைத்துள்ள போதிலும் பிரித்தானியாவின் எல்லை முகவரகம் இவர்களை கட்டாயமாக திருப்பி அனுப்புவதாக ‘கார்டியன்‘ குறிப்பிட்டுள்ளது.
திருப்பி அனுப்ப்ப்படும் தமிழ் அகதிகள் சிறிலங்காவில் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படும் ஆபத்து இருப்பதாக அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியன எச்சரித்துள்ள போதும் இவர்களை நாடு கடத்துவதில் பிரித்தானிய அதிகாரிகள் உறுதியுடன் உள்ளனர்.சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ உதவிகளை வழங்கி வரும், ‘சித்திரவதையில் இருந்து விடுதலை‘ என்ற லண்டனைத் தளமாகக் கொண்ட அரசசார்பற்ற நிறுவனம், சிறிலங்காவில் உள்நாட்டு போர் முடிந்தாலும் இந்த ஆண்டும் அங்கு சிறைக்கைதிகள் துன்புறுத்தப்படுவதாக கூறியுள்ளது.
அண்மையில் இந்த அமைப்பு பிரித்தானிய எல்லை முகவரக அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள தகவலில், பிரித்தானியாவில் இருந்து சிறிலங்கா சென்ற றொகான் என்ற தமிழர் சித்திரவதை செய்யப்பட்டதற்கான சாட்சியங்களை அளித்துள்ளது.மாணவர் வீசாவில் பிரித்தானியா சென்றிருந்த றொகான் சுகவீனமுற்ற உறவினரைப் பார்க்க சிறிலங்கா திரும்பிய போது, கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்த அதிகாரிகள் மூன்று நாட்கள் தடுத்து வைத்திருந்தனர். அப்போது அவர் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன், சூடாக்கப்பட்ட கம்பியினால் உடலில் சூடு வைக்கப்பட்டு சித்திரவதை செய்யபட்டுள்ளார்.
32 வயதான இந்த இளைஞரை சிறிலங்கா குற்றப்புலனாய்வு அதிகாரிகள் என்று கூறி அணுகிய இரண்டு பேர் வாகனம் ஒன்றில் கண்ணைக் கட்டி ஏற்றி சென்று, அடையாளம் தெரியாத இடம் ஒன்றில் வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர்.விடுதலைப் புலிகளுடன் தொடர்புட்டவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் உடைகளைக் களைந்து விட்டு உலோக கம்பியாலும், மரக்கட்டைகளினாலும் தாக்கியுள்ளனர்.“என்று ‘சித்திரவதைகளில் இருந்து விடுதலை‘ அமைப்பு கூறியுள்ளதாக ‘கார்டியன்‘ தகவல் வெளியிட்டுள்ளது.
போராட்டக்காரர்களை சுட்டுத்தள்ள உத்தரவிட்ட சிரியா இராணுவ அதிகாரிகள்.
சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆஷாத்துக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.இன்று(15.12.2011) காலையில் சிரியா இராணுவத்தினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 27 பேர் வரை கொல்லப்பட்டனர் என்று இலண்டனில் உள்ள மனித உரிமைக்கான சிரியா ஆய்வகம் தெரிவித்துள்ளது.நியூயோர்க் நகரில் உள்ள HRW என்ற மனித உரிமை கண்காணிப்பகம் சிரியா இராணுவத்தைச் சேர்ந்த 60 பேரிடம் தகவல் திரட்டினர்.
அவர்கள் கூறியதாவது: போராட்டக்காரர்களை அதிகாரிகள் சுட்டுத்தள்ள உத்தரவிட்டனர். அதுமட்டுமல்லாமல் அருகில் இருந்து வேடிக்கை பார்ப்பவர்களையும் சுட்டுக்கொல்லுமாறு தமக்கு உத்தரவு பிறப்பித்ததாகவும் கூறினர்.மேலும் தோட்டாவை கணக்கின்றி பயன்படுத்துங்கள் என்றும் உத்தரவிட்டதாக கூறினர். “கொல் அல்லது சித்திரவதை செய்” என்பது இந்த கொலைவெறித் தாக்குதலுக்கான தாரக மந்திரமாகப் போதிக்கப்பட்டது.குண்டடிபட்டுச் சாகாதவர்களுக்கு மின்சார அதிர்ச்சி கொடுத்தல், குறிப்பிட்ட இடத்திற்குள் அடைத்து வைத்தல் போன்ற சித்திரவதைகளும் நடந்தன.
தங்களுக்கு எந்த அதிகாரி உத்தரவு பிறப்பித்தார் என்பதை இந்த வீரர்கள் தெரிவித்திருப்பதால் அவர்கள் மீது முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனித உரிமை கண்காணிப்பகத்தின் அதிகாரி அன்னா நெய்ஸ்டாட் தெரிவித்தார்.சிரியாவின் ஜனாதிபதி ஆஷாத் இந்த குற்றச்சாட்டை மறுத்தார். ஆனாலும் மனித உரிமைச் சட்டத்தின்படி ஒருவரின் பணியாளரால் ஏற்படும் இழப்புகளுக்கு அவரது மேலதிகாரியே காரணமாவார் என்பதால் ஆஷாத் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கைச் சந்திப்பது உறுதியாகிவிட்டது.
அமெரிக்க இரட்டை கோபுரம் போன்றதொரு கட்டிடத்தை நிறுவ தென் கொரியா முடிவு.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள இரட்டை கோபுரத்தை தீவிரவாதிகள் விமானத்தை மோதவிட்டு தகர்த்தனர்.விமானம் மோதும் போது கட்டிடம் எவ்வாறு தோற்றமளித்ததோ அதே போன்றதொறு கட்டிடத்தை தென் கொரியாவில் உள்ள சியோல் நகரில் கட்ட உள்ளனர்.
இந்த கட்டிடத்தை நெதர்லாந்து நாட்டை சேர்ந்த எம்.வி. ஆர்.டி.வி என்ற கட்டிட நிறுவனம் வடிவமைக்க உள்ளது.கட்டித்தில் புகை தெரிவது போன்ற இடத்தில் இரு கட்டிடத்தையும் இணைத்து உள்ளனர். அதில் ஹோட்டல், பூங்கா, நீச்சல் குளம் போன்றவை அமைக்கப்படுகிறது.இந்த கட்டிடம் வடிவைமைப்புக்கு அமெரிக்கர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதற்காக கட்டிட வடிவமைப்பு நிறுவனம் மன்னிப்பு கேட்டு உள்ளது.ஆனாலும் திட்டமிட்டபடி கட்டிடம் கட்டப்படும் என்று கூறியுள்ளது. அடுத்தமாதம் கட்டிட பணி தொடங்கி 3 ஆண்டில் கட்டிடத்தை முடிக்க திட்டமிட்டு உள்ளனர்.
துபாயில் தங்கி சில காலம் ஓய்வெடுக்கிறார் ஸர்தாரி.
துபாய் வைத்தியசாலையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்‌சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் ஜனாதிபதி ஸர்தாரி சிகிச்சை முடிந்துவிட்டதால் ஓய்வுக்காக துபாயில் சில காலம் தங்கியிருப்பார் என ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் பரக்கத்துல்லாபாபர் தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக அவர் கடந்த 6ம் திகதி துபாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.இதற்கிடையில் அவர் தனது பதவியை ராஜினாமா ‌செய்துவிட்டதாகவும், இராணுவம் ஆட்சியை கைப்பற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா - பாகிஸ்தான் உறவின் பிணைப்பு வலுவின்றி உள்ளது: ஹிலாரி கிளிண்டன்.
அமெரிக்க - பாகிஸ்தான் நாடுகளிடையே தற்போது ஸ்திரத்தன்மையற்ற நிலை நிலவி வருவதால், இருநாடுகளுக்கிடையேயான உறவின் பிணைப்பு வலுவின்றி உள்ளதாக அமெரிக்கா வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து‌ கொண்ட பின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஹிலாரி கிளிண்டன் கூறியதாவது, கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் உடனான நட்பு சொல்லிக் கொள்ளும் படி இல்லை, இதை நாங்கள் எக்காலத்திலும் மறுப்பதற்கில்லை.பாகிஸ்தானிற்கு நிதியுதவி செய்வதைக் காட்டிலும் ஆப்கானிஸ்தான் நாட்டின் வளர்ச்சிக்கு தாங்கள் முழுமூச்சாக ஈடுபட்டு வருவதாக அவர் த‌ெரிவித்தார்.
ஆப்கான் நாட்டிற்கு இந்தியா இராணுவ உதவி.
ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகள் விரைவில் வெளியேறவுள்ளது. இந்நிலையிலும் இந்திய இராணுவம் ஆப்கானிஸ்‌தானிற்கு உரிய பாதுகாப்பு அளிக்க உள்ளதாக அமெரிக்க இராணுவ உயரதிகாரி ஒருவர் ‌தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு பல புறங்களிலிருந்து பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதன் காரணத்தினாலேயே ஆப்கானிற்கு இந்தியா இராணுவ உதவி வழங்க முன்வந்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ரூ.615 கோடிக்கு ஏலம் போன எலிசபெத் டெய்லரின் நகைகள்.
ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் இதயங்களை கட்டிப் போட்டவர் எலிசபெத் டெய்லர்.எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கடந்த 1991ம் ஆண்டில் தி எலிசபெத் டெய்லர் பவுண்டேசன் என்ற தொண்டு நிறுவனம் ஒன்றை நிறுவினார்.
79 வயதான இவர் கடந்த மார்ச் மாதம் இறந்தார். இந்நிலையில் டெய்லரின் தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்டும் வகையில் கிறிஸ்டிஸ் அமெரிக்காஸ் ஏல நிறுவனம் சார்பில் அவரது புகழ்பெற்ற மற்றும் பாரம்பரியமான 269 வகையான நகைகள் ஏலம் விடப்பட்டன.இவை அனைத்தும் ரூ.615 கோடிக்கு(இந்திய ரூபாய்) விற்பனையானது. இந்த ஏலத்தில் ரூ.150 கோடி கிடைக்கும் என மதிப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. கணிப்பைப் போல் 6 மடங்கு அதிக தொகையை திரட்டி உள்ளது.
இதற்கு முன்பு 1987ம் ஆண்டில் விண்ட்சர் என்ற மன்னனின் மனைவி நகைகள் ரூ.265 கோடிக்கு ஏலம் போனதே அதிகபட்ச தொகையாக இருந்தது.இப்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் அதிக அளவாக முத்து நெக்லஸ் மட்டும் ரூ.63 கோடியை ஈட்டியுள்ளது. இதுபோல் டெய்லரின் 2வது கணவரும், நடிகருமான ரிச்சர்டு புர்டன் பரிசாக தந்த 33 காரட் வைர மோதிரம் ரூ.46 கோடிக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.



ஊழல் செய்தால் பதவி இழக்க நேரிடும் சட்டம் இங்கிலாந்தில் நிறைவேற்றம்.
ஊழல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை திரும்ப அழைக்கும் சட்ட பிரேணனை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இங்கிலாந்து அரசியல் சட்டப்படி 12 மாதங்களுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியிழக்க நேரிடும். இந்த சட்டத்தில் அரசியல் சீர்திருத்தம் மேற்கொள்ள அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. 


அதன்படி 12 மாதங்களுக்கு குறைவாக சிறைத்தண்டனை பெறுவது உட்பட சிலவற்றின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியை பறிக்கும் வகையில் புதிய சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி லண்டனில் இங்கிலாந்து அரசியல் மற்றும் அரசியல் சட்ட சீர்திருத்தத் துறை அமைச்சர் மார்க் ஹார்ப்பர் கூறியதாவது: இது அரசின் சீர்திருத்த திட்டங்களில் முக்கியமானது. நமது அரசியல் நடைமுறையில் மக்களுக்கு நம்பிக்கையை அதிகரிப்பதுடன் பொது வாழ்வில் ஒழுக்கத்தை நிலைநாட்ட உதவும். 


தொடர்ந்து தவறான செயல்களில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரது பதவியை இடையிலேயே இழக்க நேரிடும். குற்றம்சாட்டப்பட்டவர் பதவியில் நீடிக்கலாமா என்பதை அவர் பெறும் தண்டனை மட்டுமின்றி தொகுதி மக்களும் மற்றும் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் முடிவு செய்ய இந்த சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. இது அமுல் செய்யப்படுவதற்கு முன்பாக மக்களின் கருத்தை அறிய வெளியிடப்பட்டுள்ளது என்றார். 
ஈராக்கில் போர் முடிவடைந்து விட்டது: ஒபாமா.
ஈராக்கில் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட பின்னர் அந்நாட்டின் பாதுகாப்பு பொறுப்பை அமெரிக்கா ஏற்றது. அங்கு ஆயிரக்கணக்கான வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
எனினும் தீவிரவாதிகள் தாக்குதலில் அமெரிக்கர்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதிக்குள் ஈராக்கில் உள்ள அனைத்து அமெரிக்க வீரர்களும் நாடு திரும்புவார்கள் என்று ஒபாமா அறிவித்திருந்தார்.அதன்படி பெரும்பாலான வீரர்கள் அமெரிக்கா திரும்பினர். இந்நிலையில் மேலும் ஒரு படை பிரிவினர் நேற்று(14.12.2011) போர்ட்பிராக் ராணுவ முகாமுக்கு திரும்பினர்.
அவர்களை வரவேற்று பாராட்டு தெரிவித்து ஒபாமா பேசியதாவது: ஈராக்கில் போர் முடிந்து விட்டது. ஒன்பது ஆண்டு போராட்டத்தில் அமெரிக்க வீரர்கள் 4,500 பேர் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர்.32 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.  இந்த போரும், அமெரிக்க வீரர்களின் தியாகமும் இனி வரலாற்றின் பக்கங்களில் இடம்பெறும். ஈராக் மக்களுக்கான உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து செய்து வரும் என்று கூறினார்.
பபுவா நியூகினியா நாட்டில் இரண்டு பிரதமர்கள்.
அவுஸ்திரேலியாவின் பக்கத்து நாடான பபுவா நியூகினியா நாட்டில் பல ஆண்டுகளாக பிரதமராக இருந்தவர் மைக்கேல் சோமாரே.இவர் 2002ம் ஆண்டு பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சிங்கப்பூரில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனால் பீட்டர் நீல் என்பவர் தற்காலிக பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இப்போது மைக்கேல் சோமாரே குணமாகி நாடு திரும்பி விட்டதால், தற்காலிக பிரதமர் பீட்டர் நீலை பதவி விலகக் கேட்டு கொண்டார்.
ஆனால் அவர் பதவி விலக மறுத்து விட்டார். நான் தான் உண்மையான பிரதமர் என்று அவர் கூறி வருகிறார். அவருக்கு சபாநாயகர் மற்றும் பல தலைவர்கள் ஆதரவாக உள்ளனர்.இதனால் பீட்டர் நீலை எதிர்த்து மைக்கேல் சோமாரே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதி மைக்கேல் சோமாரே தான் பிரதமர் என்று தீர்ப்பு கூறினார். அதன் பிறகும் பீட்டர் நீல் பதவி விலக மறுத்து விட்டார்.
நாட்டில் தற்பொழுது இரண்டு பிரதமர்கள் உள்ளது குழப்ப நிலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சினையால் இருதரப்பினர் ஆதரவாளர்களும் ஆங்காங்கே மோதிக் கொண்டுள்ளனர். அங்கு அமைதியை ஏற்படுத்த பக்கத்து நாடான அவுஸ்திரேலியா சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
கிராம நிலத்தை ஆக்கிரமித்த சீன அரசு: மக்கள் கொந்தளிப்பு.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள உகான் கிராமத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இங்குள்ள பெரும்பாலான மக்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.இந்த கிராமத்தில் தொழிற்சாலைகள் அமைக்க சீன அரசு நிலத்தை ஆக்கிரமித்தது. இதை கண்டித்து மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மர்மமான முறையில் இறந்ததால் கிராம மக்கள் ஆத்திரம் அடைந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.இதையடுத்து கிராமத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர், எல்லைகளில் சீல் வைக்கப்பட்டது, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் வெளியாட்கள் யாரும் கிராமத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
அத்துடன் மீன்பிடி தொழிலுக்கு செல்பவர்களையும் தடுத்து வருகின்றனர். இதனால் கிராமத்தில் உணவு பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.கிராம மக்கள் வெளியில் செல்ல முடியவில்லை. குழந்தைகள் பாடசாலைக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர் என்று கிராம மக்கள் கொந்தளித்துள்ளனர்.
கடாபி கொலை குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்: மகள் வழக்கு.
லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபியை புரட்சிப் படையினர் கடந்த அக்டோபர் மாதம் 20 திகதி சுட்டுக் கொன்றனர்.இந்நிலையில் கடாபியின் மகள் ஆயிஷா தனது தந்தை மற்றும் சகோதரர் கொலை பற்றி முறையாக விசாரணை நடத்தக் கோரி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆயிஷா சார்பில் அவரது வக்கீல் நிக்காப்மேன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது: கடாபியும், அவரது மகனும் கொலை செய்யப்பட்டதில் பல்வேறு மர்மங்கள் உள்ளன.கடாபி கொலை செய்யப்பட்ட பிறகு அவரது படத்தை தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினர். புரட்சிப்படையினர் கடாபியின் உடலை அவமதித்ததை தொலைக்காட்சியில் பார்த்த அவரது குடும்பத்தினர் பெரும் வேதனைக்குள்ளானார்கள்.
இறந்த பிறகு இது இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரானதாகும். இதுபற்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.லிபியாவில் இராணுவத்திற்கும், புரட்சிப்படைக்கும் இடையே போர் நடந்த சமயத்தில் கடாபி மகள் ஆயிஷா அவரது சகோதரர்கள் முகமது, ஹரிபால், தாயார் சபியா உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் அல்ஜீரியா நாட்டுக்கு தப்பி சென்றனர். தற்போது அவர்கள் பாதுகாப்பு கருதி அங்கேயே தங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையான அரசியல் ஒற்றுமை பிறந்தது: மார்க்கெல் மகிழ்ச்சி.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 நாடுகளில் பிரிட்டன் தவிர்த்த மற்ற 26 நாடுகளும் இணைந்து புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை ஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மார்க்கெல் உண்மையான அரசியல் ஒற்றுமை பிறந்தது எனக் கூறி மகிழ்ந்தார்.யூரோ நெருக்கடி தீர இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். ஆனால் அதற்கான வழிமுறையாக கடுமையான நிதிக்கொள்கைகளை இந்த 26 நாடுகளும் கடைப்பிடிக்கப் போகின்றன என்று தெரிவித்தார்.
ஜேர்மனியின் நாடாளுமன்றத்தின் கீழவையில் பிரதமர் ஐரோப்பிய ஒன்றியக் கூட்டம் குறித்துப் பேசிய போது, இப்போது தான் உண்மையான அரசியல் ஒற்றுமை பிறந்திருக்கிறது.
இந்த ஒற்றுமை ஒரு நிலையான உறுதித்தன்மையை ஏற்படுத்தும். இதற்கும் மேலாக பொதுவான வளர்ச்சியை உருவாக்கும், குறிப்பாக நிலையான வளர்ச்சியை உருவாக்கும் என்று நம்பிக்கையோடு தெரிவித்தார்.பிரான்ஸ் – ஜேர்மன் நாடுகளின் பெரு முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தில் ஒன்றியத்தைச் சேர்ந்த 26 நாடுகளும் கையெழுத்திட்டன.இப்போது கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. பிரிட்டன் மட்டும் இந்தப் புதிய பொதுநிதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டது.
சிரியாவிலிருந்து விரைவில் வெளியேறுங்கள்: கனடா அழைப்பு.
சிரியாவிலிருந்து கனடாவுக்கு திரும்பி விடுமாறு தன்நாட்டு மக்களுக்கு கனடாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜான் பெய்ர்டு அழைப்பு விடுத்துள்ளார்.சிரியாவில் அண்மைக்காலமாக அதன் ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் அரசு இராணுவம் அடக்கி வருவது கொடூரமாகிவிட்டது.
இந்த அடக்குமுறையால் ஆயிரக்கணக்கான பொது மக்கள் உயிரிழந்து விட்டனர். கடந்த புதன்கிழமை இராணுவத்தினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 25 பேர் கொல்லப்பட்டனர்.சிரியா நாட்டு இராணுவத்தின் மீது கனடா கடந்த மே மாதம் கடுமையான நிபந்தனைகளை விதித்தது. ஒக்டோபர் மாதத்தில் இவை இன்னும் கடுமையாகின. ஆனால் இராணுவத்தின் போக்கு மாறவில்லை, இதனைத் தொடர்ந்து கனடா தன் மக்களைத் திரும்ப அழைத்துக் கொள்ள விரும்புகிறது.அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், சிரியாவின் படைகள் விரைவில் வீழும் என்றார்.
பிரான்சின் தகுதியை குறைத்து மதிப்பிட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது: நோயர்.
பிரான்ஸ் நாட்டின் AAA என்ற தகுதியை ஸ்டாண்டர்டு அண்டு புவர்ஸ் நிறுவனம் குறைத்து மதிப்பிட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஐரோப்பிய மத்திய வங்கியின்(ECB) ஆட்சிக்குழு உறுப்பினரும், பிரான்ஸ் வங்கியின் தலைவருமான கிறிஸ்டியன் நோயர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த தகுதிக் கணிப்புக்கு பொருளாதார காரணங்களை விட அரசியல் காரணங்களே அதிகமாக விவாதிக்கப்பட்டது.பிரான்சின் பொருளாதார தகுதியைக் குறைத்து மதிப்பிட்டதால் பாதிப்பு அதிகமில்லை என்றாலும் இக்கணிப்பு வருந்தத்தக்கதே.
பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு ஆராய்ந்தால் இவ்வாறு தகுதியைக் குறைத்து மதிப்பிட்டது நியாயமானதாகத் தோன்றவில்லை. அப்படிக் குறைத்து மதிப்பிடுவதாக இருந்தால் பிரிட்டனுக்குத்தான் அந்த மதிப்பீடு மிகவும் பொருந்தும்.பிரான்சை விட பிரிட்டன் தான் அதிக பற்றாக்குறை, அதிகக் கடன், அதிகப் பணவீக்கம், குறைந்த வளர்ச்சி, சரிந்து வரும் நிதிநிலைமையோடு தள்ளாடுகின்றது என்று நோயர் தெரிவித்தார்.
பிரான்சின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலைன் ஜுப்பே கூறுகையில், தகுதிக் கணிப்பு நிறுவனங்கள் சில சமயம் பாரபட்சமாகவும், அரசியல் சார்ந்தும் முடிவுகளை வெளியிடுகின்றன என்றார்.
இங்கிலாந்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பு.
ஒரு காலத்தில் செல்வம் கொழிக்கும் நாடாக திகழ்ந்த இங்கிலாந்து நாட்டின் நிலைமை பெரும் கவலைக்கிடமாக உள்ளது.நிதி நெருக்கடி மற்றும் பொருளாதாரத்தால் தொடர்ந்து நலிவடைந்து வருகிறது. இதனால் பல்வேறு தொழில்களும் முடங்கி போயுள்ளன. எனவே அங்கு வேலை பார்ப்பவர்களை வீட்டுக்கு அனுப்பி வருகிறார்கள்.
வேலை இல்லாததால் மக்கள் மத்தியில் கடும் விரக்தி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை போக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனாலும் அதற்கு உரிய பலன் கிடைக்கவில்லை. தொடர்ந்து வேலை இழப்பு அதிகரித்தபடி தான் உள்ளது.கடந்த 3 மாதத்தில் மட்டும் 1 லட்சத்து 28 ஆயிரம் பேர் வேலை இழந்து உள்ளனர். மொத்தத்தில் 26 லட்சம் பேர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.அதிலும் 16 வயதில் இருந்து 24 வயதுக்கு உட்பட்டவர்களில் 22 சதவிகிதம் பேருக்கு வேலை இல்லை. இங்கிலாந்தில் வேலை இல்லாதவர்களுக்கு அரசே நிவாரண உதவி வழங்குகிறது. இதை மட்டும் 16 லட்சம் பேர் வாங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் வளர்ச்சியை கண்டு அமெரிக்கா அஞ்சவில்லை: ஹிலாரி கிளிண்டன்.
சீனாவின் அமைதியான வளர்ச்சியைக் கண்டு அஞ்சுவதற்கு ஏதும் இல்லை என அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.ஆனால் வேகமான வளர்ச்சிக் கண்டு வரும் சீனா நியாயமான பொருளாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அமெரிக்கா விரும்புவதாகவும் ஹிலாரி குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக அறிவுசார் சொத்துரிமையை சீனா மதித்து நடக்க வேண்டும் என்றும், இது முக்கியமானது என்றும் ஹிலாரி குறிப்பிட்டார்.சீனாவின் பொருளாதார வளர்ச்சியை அமெரிக்கா வரவேற்பதாகவும், சீனாவின் இணக்கமான உறவைத் தொடரவே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா விரும்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவிற்கும் நல்லதே என்றும், சீனாவுடன் கொண்ட உறவு ஒருங்கிணைந்த சாதகமான உறவு என்றாலும், அரசியல், பொருளாதாரம், சமூக உறவு போன்றவற்றில் இரண்டும் போட்டி நாடுகளே என்றும் ஹிலாரி குறிப்பிட்டுள்ளார்.மேலும் சீனாவுக்கான விசா அனுமதி 32 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டிருப்பதையும் ஹிலாரி கிளிண்டன் சுட்டிக்காட்டினார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF