Monday, December 19, 2011

இன்றைய செய்திகள்.

அநுராதபுரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4பேர் கொடூரமாக வெட்டிக் கொலை!
அநுராதபுரம், எப்பாவெல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மிகவும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை(17.12.2011) இரவு இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
49 வயதுடைய தாய், அவருடைய சகோதரி (55 வயது). 23 வயதுடைய அவரது மகள் மற்றும் மகளின் 23 வயதுடைய கணவன் ஆகிய நால்வர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞன் பனாகொட இராணுவ முகாமில் சேவை புரிந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, எப்பாவெல பகுதியில் அண்மையில் இரு யுவதிகளும் ஒரு இளைஞனும் தூக்கிட்டு மரணமான நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.அச்சம்பவத்திற்கும் இக்கொலைச் சம்பவத்திற்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் இக்கொலைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது
இந்தியாவின் கைத்தொழில் நிறுவனங்களினால் இலங்கைக்கு பாதிப்பு.
இந்தியாவின் பல்வேறு கைத்தொழில் நிறுவனங்களிலிருந்தும் வெளியாகும் விஷ வாயுக்களினால் இலங்கையின் மலைப் பிரதேசங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சபரகமுவ பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தகவல் வெளியிடப்பட்டுள்ள ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.
ஹோர்டன் சமவெளி உள்ளிட்ட நாட்டின் மலைப் பிரதேசங்கள் மாசடைவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாகவும் சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைக் கருத்திற் கொண்டு உடனடியாக இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் சப்ரகமுவ பல்கலைக்கழக பேராசிரியர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்,இலங்கையின் வாயு மண்டலம் விஷ வாயுக்களினால் நிரம்பியுள்ளதாகவும் இந்த நிலைமை மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக அமையக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐ.தே.கவின் தலைமைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படாவிட்டால் இரகசிய வாக்கெடுப்பு.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ பதவி தொடர்பான பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்படாவிட்டால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இன்று (18.12.2011) கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ள கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தலைமைத்துவ பதவி தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணக்கப்பாடு எட்டப்படாத பட்சத்தில் நாளைய தினம் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் தலைமைத்துவ பதவி தவிர்ந்த ஏனைய பதவிகளுக்கும் போட்டி நிலவினால் அவற்றுக்காகவும் வாக்கெடுப்பு நடத்தப்படலாம் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வாக்கெடுப்பு நடத்தாமல் இணக்கப்பாடுகளின் மூலம் தலைமைத்துவப் பதவி குறித்து தீர்மானம் எடுக்கப்பட்ட பல சந்தர்ப்பங்கள் தோல்வியில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹெரோயின் போதைப்பொருள் கடத்த முயன்ற இலங்கைப் பிரஜை கைது.
சுமார் 90 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் சென்னையிலிருந்து வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் சென்னையில் இருந்து வந்த இலங்கைப் பிரஜையான சந்தேகநபர் நேற்றிரவு 8 மணியளவில் கைது செய்யப்பட்டதாக விமானநிலைய சுங்கப்பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோ 350 கிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெரோய்ன் கோதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விமானநிலைய சுங்கப்பிரிவினர் குறிப்பிடுகின்றனர்.
சந்தேகநபரின் பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சுங்கப்பிரிவினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
அநுராதபுர படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பொலிஸில் சரணடைந்துள்ளார்!
அநுராதபுரம் எப்பாவெல பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை(17.12.2011) இரவு இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேகநபர் இன்று காலை தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாகவும், சரணடைந்தவர் ஓய்வுபெற்ற பாதுகாப்பு அதிகாரி எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இக்கொலைக்கென பயன்படுத்தப்பட்ட கத்தியையும் மீட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்கென அநுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்பாவெல - யாய - முதலாம் கட்டியாய பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மிகவும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள அகோர சம்பவமொன்று நேற்று இரவு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஐ.தே.க தலைமை பதவிக்கு நாளை தேர்தல்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை நிர்ணயிப்பது குறித்த தீர்மானமிக்க வாக்கெடுப்பு நாளை திங்கட்கிழமை (19.12.2011) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாளை கட்சித் தலைமைப் பதவி உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்காக தற்போதைய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், கட்சியின் இணைப் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவும் போட்டியிடவுள்ளனர்.
இதுதவிர, கட்சியின் பிரதித் தலைவர் பதவிக்காக கட்சியின் தற்போதைய தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க மற்றும் தற்போதைய இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் போட்டியிடுவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மற்றும் செயற்குழு உறுப்பினர் தயா கமகே ஆகியோர் போட்டியிடுகின்றனர்.இதேவேளை, கட்சியின் தவிசாளர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான வெற்றிடங்கள் போட்டியின்றி தீர்மானிக்கப்பட்டுள்ளதாககட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கட்சியின் தவிசாளராக காமினி ஜயவிக்ரம பெரேராவும், துணைத் தலைவராக ஜோசப் மைக்கல் பெரேராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டால் கட்சியின் பொதுச் செயலாளராக தொடர்ந்தும் திஸ்ஸ அத்தநாயக்க செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகாவிற்கு பிறந்த நாள் கேக் வழங்க சிறைச்சாலை அதிகாரிகள் மறுப்பு.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பிறந்த தினம் இன்றாகும்.பிறந்த தினத்தை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் சரத் பொன்சேகாவை சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.
கட்சியின் இணைப் பிரதித் தலைவர்களான கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, பாலித ரங்கே பண்டார மற்றும் பாலித தெவரப்பெரும ஆகியோர் சிறைச்சாலைக்கு சென்று சரத் பொன்சேகாவை பார்வையிட்டுள்ளனர்.
பிறந்த நாளை முன்னிட்டு பாலித ரங்கே பண்டாரவும், பாலித தெவரப்பெருமவும் கேக் ஒன்றை சிறைச்சாலைக்கு எடுத்து சென்றிருந்தனர்.
எனினும், இந்த கேக்கை சரத் பொன்சேகாவிற்கு வழங்கக் கூடாது என சிறைச்சாலை அதிகாரிகள் மறுப்பு வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்தியுள்ளதை வரவேற்கிறார் பான் கீ மூன்!
சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து பகிரங்கப்படுத்தியுள்ளதை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வரவேற்றுள்ளார்.
நேற்றிரவு ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும், நல்லிணக்கத்தை நோக்கிய முக்கியமான அடியெடுத்து வைப்பதற்கும் அவசியமான பொறுப்புக் கூறுதல் பற்றிய கவலைகளுக்கு பதிலளிப்பதற்கான தனது கடப்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் முன்னோக்கி நகர்த்தும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நம்புகிறார்“ என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிபியா அதிபர் 'கடாபியை கொன்றது போர்க்குற்றம்' என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அறிவிப்பு.
லிபியா நாட்டின் முன்னாள் அதிபர் கடாபியை கொன்றது போர்க்குற்றம் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 
கடாபி கடந்த அக்டோபர் மாதம் 23 ஆம் தேதியன்று புரட்சிப் படையினரால் கைது செய்யப்பட்டு கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்நிலையில் இவர் கொல்லப்பட்டது போர்க்குற்றம் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில், அதன் தலைமை வழக்கறிஞர் லூயிஸ் மொரேனோ அகாடம்போ தெரிவித்துள்ளார்.
லிபியா முன்னாள் அதிபர் கடாபி கொல்லப்பட்டது ஒரு போர்க் குற்றமாகும். அது குறித்து வருகிற ஜனவரி 10 ஆம் தேதி லிபியா அரசு நீதிமன்றத்தில் பதில் கூற வேண்டும். கடாபியின் மகன் சயீப் அல்-இஸ்லாமும் லிபியா அரசால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அவரையும் ஒப்படைப்பது குறித்து தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
ஜனாதிபதி மன்னிப்பிற்கென ஏதாவது தரப்பு முன்வைக்கும் யோசனையை எதிர்க்க மாட்டேன்!- சரத் பொன்சேகா.
ஜனாதிபதி மன்னிப்புக்கென ஏதாவது தரப்பு முன்வைக்கும் யோசனையை தான் எதிர்க்கப் போவதில்லை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஆனால் பொன்சேகாவோ அவரது குடும்ப அங்கத்தவர்களோ அது தொடர்பில் எவ்வித யோசனைகளையும் கோரிக்கைகளையும் முன்வைக்க மாட்டார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
பொன்சேகாவை பார்வையிட இன்று சனிக்கிழமை சிறைச்சாலைக்குச் சென்ற திஸ்ஸ அத்தநாயக்க அவரை பார்த்துவிட்டு வெளியில் வந்து ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.
ஜனாதிபதி மன்னிப்பு குறித்த ​யோசனையை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்படவுள்ள நிலையில் அதனை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க கங்காராம விகாரையின் விகாராதிபதி தயாராகி வருவதாக திஸ்ஸ நாயக்க மேலும் தெரிவித்தார்.
380 பயணிகளுடன் அவுஸ்திரேலியா சென்ற படகு கடலில் மூழ்கியது! 76 பேர் மீட்பு: இலங்கையரும் இருக்கலாம் என சந்தேகம்.
அவுஸ்திரேலியா நோக்கிச் சென்ற படகு ஒன்று 380 அகதிகளுடன் இந்தோனேசியக் கடற்பரப்பில் நேற்று சனிக்கிழமை கவிழ்ந்ததில் 300 ற்கும் அதிகமானோர் காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஜாவா கடற்பகுதியில் கவிழ்ந்த இந்தக் கப்பலில் பயணம் செய்த 76 அகதிகளை மீட்டுள்ளதாக ஜாவா அவசரகால மீட்பு பணியகத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்தும் அண்மையில் அகதிகள் அவுஸ்திரேலியா நோக்கி சென்றுள்ள நிலையில் இந்தப் படகில் இலங்கையைச் சேர்ந்தவர்களும் பயணம் மேற்கொண்டனரா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரத்தினாலான இந்தப் படகில் அளவுக்கதிகமானோர் பயணம் செய்துள்ளதாகவும், பெரிய அலைகளால் தாக்கப்பட்டு அது கவிழ்ந்திருக்கலாம் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தப் படகில் பல்வேறு நாட்டவர்கள் பயணம் செய்ததாகவும் அவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரையில் இருந்து 90 கி.மீ தொலைவில் மூழ்கிய இந்தப் படகில் 40 சிறுவர்கள் வரை பயணம் செய்ததாக, மீட்கப்பட்ட அகதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தப் படகில் பயணம் செய்த 200 ற்கும் அதிகமானோர் மரணமாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
பிலிப்பைன்சில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 521ஆக உயர்வு.
பிலிப்பைன்சில் ஏற்பட்ட கடும் மழை, சூறாவளி, வெள்ளத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 521ஆக அதிகரித்துள்ளது.
பலி எண்ணிக்கை இன்னும் உயரும் என அந்நாட்டு செஞ்சிலுவை சங்க செயலாளர் கூறியுள்ளார்.
மேலும் இன்னும் 458 பேர் காணாமல் போகியுள்ளதாகவும், பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் கூறினார்.
வெளிநாட்டினருக்கு குடியுரிமை தர வேண்டும் என கூறி குவைத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்.
குவைத்தில் வசித்து வரும் வெளிநாட்டினருக்கு குடியுரிமை தர வேண்டும் எனக் கூறி 400க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.குவைத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள ஜாஹ்ரா பகுதியில் மதிய நேரத் தொழுகை முடிந்த பின் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடாமல் கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்த பிறகும், மக்கள் கலைந்து செல்லாததால் தண்ணீரை அடித்தும், கண்ணீர் புகைக் குண்டு வீசியும் கூட்டத்தைக் கலைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அரசின் இந்த செயலுக்கு எதிர்கட்சியினரும், பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமைதியாகப் போராடியவர்கள் மீது வன்முறையைப் பயன்படுத்தியது தவறு. இது வெளிநாட்டினரின் மத்தியில் நம் நாட்டின் மதிப்பை குறைக்கும் வகையில் அமைந்துள்ளது என குவைத் மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இதே போல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு நாள்களுக்கு முன்பு அவர்களின் வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. இதையடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததாகத் தெரிகிறது.
குவைத் நாட்டின் சட்டப்படி குவைத்தில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு குடியுரிமை கிடையாது. அதே போல் அவர்கள் பொது இடங்களில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களின் உரிமைகளுக்கு போராடிய சட்டத்தரனி மீண்டும் சிறையில் அடைப்பு.
சீனாவில் பின்தங்கிய மக்களின் உரிமைக்காக போராடியதற்காக சட்டத்தரனி கவோ சிசெங்கிற்கு கடந்த 2006ம் ஆண்டு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டணை வழங்கப்பட்டிருந்தது.சிறையில் இருந்த போது காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட கவோ மீண்டும் 2009ம் ஆண்டு மார்ச் மாதம் கண்டறியப்பட்டார்.
வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டிருந்த அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் காணாமல் போனதாக அரசால் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் மீண்டும் கவோ சிசெங் சிறையில் அடைக்கப்பட்டதாக சீன பத்திரிக்கை சின்குவா தகவல் வெளியிட்டுள்ளது.
பேஸ்புக் இணையத்தளத்தை உபயோகிக்க மகள்களுக்கு தடைவிதித்த ஒபாமா.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கடந்த 2008ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டும் போது, தனது தேர்தல் பிரசாரத்துக்கு பேஸ்புக் இணையத்தளத்தை பயன்படுத்தினார்.
அதன் மூலம் பிரசாரம் செய்து மக்களை கவர்ந்த அவர் அமோக வெற்றி பெற்றார். இதன் மூலம் இணையத்தளத்தில் பிரசாரம் செய்து ஜனாதிபதியானவர் என்ற பெருமையை பெற்றார்.
ஆனால் அவர் தனது மகள்கள் பேஸ்புக் இணையத்தளத்தில் உறுப்பினராகி அதை பயன்படுத்த தடை விதித்துள்ளார். ஒபாமா மூத்த மகள் மாலியா(13). இளைய மகள் சாஷா(10).இதுகுறித்து ஒபாமா கூறுகையில், பேஸ்புக் போன்ற இணையத்தளங்களை பயன்படுத்தும் அளவுக்கு வயது பக்குவம் அவர்களுக்கு வரவில்லை என்றார்.மேலும் நான்கு ஆண்டுகள் கழித்து அவர்கள் உறுப்பினர்களாக இணைந்து வெளியுலக தொடர்பை ஏற்படுத்தி கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
மாணவர்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் புதிய முறை அறிமுகம்.
கனடாவில் இளம் மாணவர்கள் இடையே தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல் மாணவர்களுக்கு பொதுத் தேர்தலுக்கான ஒரு மாதிரியாக இருக்கும் என கருதப்பட்டது.
ஆனால் மாதிரி தேர்தலில் நல்ல முறையில் மாணவர்கள் வாக்களித்தாலும் இவர்கள் இதே பொறுப்புணர்ச்சியோடும், ஊக்கத்தோடும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க மாட்டார்கள் என்பது ஆய்வு அறிக்கையின் மூலமாகத் தெரியவந்துள்ளது.எலெக்ஷன்ஸ் கனடா என்ற நிறுவனம் இந்த தேர்தல் குறித்த ஆய்வை நிகழ்த்தியது. ஆசிரியர்களைக் கொண்டு மாகாண, மத்திய தேர்தலுக்கான பிரச்சாரத்தை மாணவர்களிடம் நடத்தியது, விவாத அரங்குகளும் நடந்தேறின.
மாணவர்களிடம் நடத்தப்பட்ட இப்பயிற்சி மாணவர்களுக்கு அரசியல் அறிவை வளர்த்தது, வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தியது. அரசியல் பற்றி விவாதிக்கும் துணிச்சலை வழங்கியது.
ஆனால் இம்மாணவர்கள் தேர்தல் நடைபெறும் போது கடமையுணர்ச்சியுடன் வாக்குச்சாவடிகளுக்கு வருவார்களா என்பது சந்தேகம் தான் என்பது ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.நாடெங்கும் உள்ள 16,000 மாணவர்கள், ஆசிரியர், பெற்றோரிடம் இந்த மாதிரித் தேர்தல் முறை குறித்து கேட்டறியப்பட்டது. கடந்த 2003ஆம் ஆண்டில் நடந்த மாதிரித் தேர்தலில் மூன்று மில்லியன் வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜேர்மன் இராணுவ வீரர்கள் விரைவில் தாயகம் திரும்புவார்கள்: அமைச்சர் தகவல்.
ஆப்கானிஸ்தானிலிருந்து முதற்கட்டமாக 100 ஜேர்மன் வீரர்கள் தாய்நாட்டுக்குத் திரும்புகின்றனர் என்று ஜேர்மன் பாதுகாப்புத் துறை அமைச்சர் தாமஸ் டி மாஜிரே தெரிவித்தார்.
இவர் மேலும் தெரிவிக்கையில், இவர்கள் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஆப்கானை விட்டு வெளியேறுவர். எதிர்வரும் 2014ஆம் ஆண்டில் நேட்டோ படைகள் தன் பணியை நிறைவு செய்யும் போது பணிநிறைவு விழா நடைபெறலாம் என்று கூறினார்.இந்த தீர்மானமானது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இத்தீர்மானத்திற்கு முக்கிய எதிர்க்கட்சியான மைய – இடது சாரிப் பிரிவைச் சேர்ந்த சமூக குடியரசுக் கட்சி தன் ஆதரவை அளித்தது.
ஜனவரி மாத இறுதியில் 100 வீரர் எனத் தொடங்கி, அங்கே இருக்கும் 5000 வீரரும் விரைவில் ஜேர்மனிக்குத் திரும்பி வருவார்கள்.
அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு பிரிட்டன் உதவி.
பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு பிரிட்டன் உளவுப்பணி மேற்கொண்டது. இதற்கான விளக்கத்தை உடனே தரவேண்டும் எனக்கூறி நுர்கான் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.இவ்வழக்குத் தொடர்பாக லேடே என்ற நிறுவனம் பிரிட்டனின் வெளிவிவகாரத்துறை அமைச்சரான வில்லியம் ஹேக்கிடம் விளக்கம் கேட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் தலைவரான ரிச்சர்டு ஸ்டீன் கூறுகையில், பிரிட்டன் அரசு முகவர்கள் அமெரிக்காவின் படைகளுக்கு பாகிஸ்தான் குறித்த விபரங்களை அளித்தனரா என்பதை கூற வேண்டும் என்று வில்லியம் ஹேக்கிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.மேலும் இதன் மூலமாக நம் நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையை அறிய விரும்புவதாகவும், இவ்வாறு இரகசியத் தகவல் கொடுப்பதற்கு இக்கொள்கையில் இடம் இருக்கிறதா என்பதையும் தெளிவாக அறிய விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் CIA ஆளில்லா விமானத்தாக்குதல் அப்பாவி பொதுமக்களை ஏராளமாகக் கொன்று குவிக்கின்றது. சமீபத்தில் பாகிஸ்தான் எல்லையில் நேட்டோவின் அமெரிக்கப்படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் அந்நாட்டு வீரர்கள் 24 பேர் கொல்லப்பட்டனர்.பாகிஸ்தான் மக்கள் இத்தாக்குதல் தமது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்று கருதுகின்றனர். இதனால் அமெரிக்கப் படைகளை பாகிஸ்தானின் ஷாம்சி விமானத்தளத்தை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தான் அரசு கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.
உளவு பார்ப்பதற்காக வெளிநாடுகளால் அனுப்பப்பட்ட விமானங்களை காட்சிக்கு வைக்கிறது ஈரான்.
ஈரானை உளவு பார்ப்பதற்காக வெளிநாடுகளால் அனுப்பப்பட்ட உளவு மற்றும் போர் விமானங்களை வெளிநாட்டு உயர் அதிகாரிகளின் பார்வைக்கு வைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.ஈரானை உளவு பார்ப்பதற்காக இஸ்ரேலும், அமெரிக்காவும் பல உளவு மற்றும் போர் விமானங்களை அனுப்பி வைத்துள்ளன.
அவற்றில் சிலவற்றை ஈரான் இராணுவம் பிடித்து வைத்துள்ளது. சமீபத்தில் அவ்வாறு ஈரான் வான்வெளிக்குள் நுழைந்த அமெரிக்க ஆளில்லா விமானம் ஒன்றை ஈரான் இராணுவம் சிறை பிடித்தது.
இந்நிலையில் மெஹ்ர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ஈரான் வசம் உள்ள இஸ்ரேலின் நான்கு விமானங்களும், அமெரிக்காவின் மூன்று விமானங்களும் விரைவில் காட்சிக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விமானங்களைப் பார்வையிட தேசிய பத்திரிகையாளர்கள், டெஹ்ரானில் உள்ள வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள் ஆகியோருக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இந்திய மீனவர்கள் 12 பேர் கைது.
இந்திய மீனவர்கள் 12 பேர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியா, பாகிஸ்தான் கடல் எல்லையை தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களை இருநாட்டு கப்பல் படையினரும் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 12 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அவர்களிடம் இருந்து 2 படகுகள், மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் கராச்சி காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் மட்டும் கடல் பாதுகாப்பு அமைப்பின் வீரர்கள் 122 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதாகவும், அவர்களை விடுவிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரான்சில் புயல், மழை: மின்சாரம் இன்றி மக்கள் தவிப்பு.
ஜோக்கீம் என்ற புயல் பிரான்சின் வடபகுதியை கடுமையாகத் தாக்கியது. இதனால் மின்சாரம் தடைபட்டதில் பல்லாயிரக்கணக்கானோர் இருளில் தவிக்கின்றனர்.வியாழக்கிழமை இரவு மணிக்கு 133 கிலோ மீற்றர் வேகத்தில் புயல் காற்று வீசியது, கடல் அலைகள் ஏழு மீற்றர் உயரத்திற்கு எழுந்தன.
மத்திய ஃபிரான்சில் பதினைந்து ரயில்களுக்கும் மேலாக ரத்து செய்யப்பட்டது. சர்வதேச விமான சேவையில் பாதிப்பு இல்லை என்றாலும், சில சுற்றுலா மையங்கள் மூடப்பட்டுள்ளன. ஸ்ட்ராஸ்போர்கில் உள்ள கிறிஸ்துமஸ் அங்காடி, பாரிஸ் அருகே உள்ள சாட்டியூ டெ வெர்செய்ல்ஸ் என்ற பூங்கா போன்றவை மூடப்பட்டன.சுவிட்சர்லாந்திலும் ஏற்பட்ட இந்தப் புயல் காரணமாக சில விமானநிலையங்கள் பாதிக்கப்பட்டன. ஜுரிச் மற்றும் பேசல் விமான நிலையங்களில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டன.
சீனாவில் தப்பிச் சென்ற கைதி 13 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கைது.
சீனாவின் யான் நகரில் வசித்தவர் லீ ஜன்லின். வழிப்பறி, கொள்ளை, கொலை போன்ற குற்றங்களில் ஈடுபட்டதற்காக கடந்த 1997ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இவருடன் சேர்த்து 12 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது இந்த கும்பலை சேர்ந்த 11 பேர் சிறை சுற்றுச்சுவர் அருகில் ஒரே இரவில் வெறும் கைகளால் 13 மீற்றர் தூரத்துக்கு சுரங்கம் தோண்டி தப்பித்தனர்.
3 மாதங்களுக்கு பின்னர் 10 பேர் பிடிபட்டனர். லீ மட்டும் சிக்கவில்லை. இந்த வழக்கில் பின்னர் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில் யான் நகரில் உறவினர் வீட்டில் லீ ஜன்லின் தங்கியிருப்பதை, கைபேசி உரையாடலின் மூலம் கண்டுபிடித்த காவல்துறையினர் விரைந்து சென்று அவரை கைது செய்தனர்..
இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் நியமனம்.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நான்சி ஜே.பவாலை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நியமித்துள்ளார்.திமோதி ரோமர் கடந்த ஏப்ரல் மாதம் தனது இந்தியாவிற்கான தூதர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அப்பதவிக்கு நான்சி பவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த 2 ஆண்டுகளுக்கு நான்சி பவால் இப்பதவியில் நீடிப்பார் என்று வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.ஏற்கனவே நான்சி பவால் பாகிஸ்தான் மற்றும் நேபாள நாட்டின் அமெரிக்க தூதராக செயற்பட்ட‌தோடு மட்டுமல்லாமல், கொல்கத்தா, புதுடெல்லி, டாக்கா, காத்மண்ட், இஸ்லாமாபாத் மற்றும் ஒட்டாவா நகரங்களில் செயற்பட்டு வரும் அமெரிக்க அலுவலகங்களில் உயர் பதவியை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எகிப்தில் மீண்டும் கலவரம்: ஒன்பது பேர் பலி.
எகிப்து நாட்டில் பத்து மாதங்களுக்கு பின்னர் மீண்டும் கலவரம் ஏற்பட்டதில் ஒன்பது பேர் ‌கொல்லப்பட்டனர், 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.எகிப்து நாட்டில் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த ஹோஸினி முபாரக் பதவி விலக வேண்டும் என நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
நீண்ட நாட்களாக நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக ஜனாதிபதி தன்னுடைய பதவியை ராஜினாமா‌ செய்தார். தொடர்ந்து இராணுவ ஆட்சியின் கீழ் அதிகாரம் கொண்டுவரப்பட்டது.
ஆறுமாத காலத்திற்குள் நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து நாடாளுமன்ற முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது.தேர்தலில் இஸ்லாமியக் கட்சிகளுக்கிடையே போட்டி உருவானது, இதன்காரணமாக கலவரம் மூண்டது. தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தை அடக்குவதற்காக இராணுவத்தினர் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
பொதுமக்களும் இராணுவத்தின் வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். இரு தரப்பினரிடையே மோதல் நீடித்து வருவதால் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தாஹிர் சதுக்கத்தில் தான் புரட்சி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஸர்தாரி பதவியில் நீடிப்பாரா: மீண்டும் புதிய சர்ச்சை.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி ஸர்தாரியை பதவியை விட்டு நீக்குவதற்கு அந்நாட்டு உளவு நிறுவனத்தின்(ஐ.எஸ்.ஐ) தலைவருக்கு அரபு தலைவர்கள் அனுமதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக இருந்த உசைன் ஹக்கானி, அமெரிக்க இராணுவ தலைவர் மைக் முல்லனுக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில், பாகிஸ்தானில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றக்கூடும் என்று கூறப்பட்டிருந்தது.
இதனால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து உசைன் ராஜினாமா செய்தார். பாகிஸ்தான் ஜனாதிபதி ஸர்தாரியின் உத்தரவுபடி உசைன் அந்த கடிதத்தை கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து ஸர்தாரிக்கு அந்நாட்டு இராணுவம் நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் ஸர்தாரி திடீரென கடந்த 6ம் திகதி துபாய்க்கு சென்றார். இருதய நோய் சிகிச்சைக்காக அங்குள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் சிகிச்சை முடிந்து திரும்பும் போது பதவியில் நீடிக்க மாட்டார் என்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது அவருக்கு சிகிச்சை முடிந்து விட்டாலும் துபாயிலேயே ஸர்தாரி இருக்கிறார். இதற்கிடையே தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஸர்தாரியை பதவி நீக்கம் செய்ய பாகிஸ்தான் உளவு நிறுவனத் தலைவர் சுஜா பாஷா ஏற்கனவே மூத்த அரபு தலைவர்களிடம் அனுமதி பெற்று விட்டதாக கூறப்பட்டுள்ளது.இதனால் ஸர்தாரி பதவியில் நீடிப்பாரா என்ற சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.
விக்கிலீக்ஸூக்கு தகவல் வழங்கிய அமெரிக்க வீரரிடம் விசாரணை.
விக்கிலீக்ஸ் புலனாய்வு இணையத்தளத்துக்கு அமெரிக்க இராணுவத் தாக்குதல் குறித்த தகவல்களை அளித்த அந்நாட்டு வீரர் பிராட்லி மானிங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2010ம் ஆண்டு வரை அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட தாக்குதல்கள் குறித்த ஆவணங்கள் மற்றும் காணொளி காட்சிகள் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டன.
இவற்றை விக்கிலீக்ஸூக்கு வழங்கியதாக அமெரிக்க படைவீரர் பிராட்லி மானிங் குற்றம்சாட்டப்பட்டு, 2010ம் ஆண்டு மே மாதம் 6ம் திகதி கைது செய்யப்பட்டார். அவரை விசாரிக்க லெப்டினன்ட்.கர்னல் பால் அல்மான்ஸ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஒன்றரை வருடங்கள் கழித்து நேற்று முன்தினம்(16.12.2011) மேரிலாண்டு நீதிமன்றத்தில் பிராட்லி ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையின் போது இக்குற்றச்சாட்டை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள விசாரணை அதிகாரி ஒருதலைப்பட்சமாக விசாரணை மேற்கொண்டுள்ளதாக பிராட்லியின் சட்டத்தரனிகள் வாதாடினர்.ஏற்கெனவே நீதித்துறையில் பணியாற்றியுள்ள அல்மான்ஸ் இவ்வாறு ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்ளக் கூடாது என்றும் அவர்கள் கூறினர்.ஆனால் அவர்களது வாதத்தை அல்மான்ஸ் மறுத்தார். தான் ஒருதலைப்பட்சமாக நடக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
முன்னதாக சம்பிரதாயமான கேள்விகளை பிராட்லியிடம் கேட்டார் அல்மான்ஸ். இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பிராட்லிக்கு ஆயுள் தண்டனை வழங்க வாய்ப்புண்டு.
உலக வர்த்தக அமைப்பில் ரஷ்யா: அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வாழ்த்து.
உலக வர்த்தக அமைப்பில் ரஷ்யா இணைந்ததற்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ரஷ்ய ஜனாதிபதி டிமி‌ட்ரி மெட்வதேவ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதன் மூலம் அமெரிக்க-ரஷ்ய இருதரப்பு உறவுகள் பலப்படும், இது இருநாடுகளுக்கும் நன்மை சேர்க்கும் என்றார்.
இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கார்னே விடுத்த அறிக்கையில், 18 ஆண்டுகளாக உலக வர்த்தக அமைப்பில் ரஷ்யா இணைவது குறித்து கேள்வி இருந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் தற்போது உலக வர்த்தக அமைப்பு ரஷ்யாவிற்கு அனுமதி அளித்துள்ளது வரவேற்கதக்கது என்றார்.
லிபிய மத்திய வங்கிக்கு ஐ.நா அனுமதி.
லிபிய மத்திய வங்கிக்கு வெளிநாட்டு முதலீடுகள‌ை கவர மற்றும் மேம்படுத்துவதற்கு ஐ.நா பாதுகாப்பு சபை அனுமதி அளித்துள்ளது.இதுகுறித்து ‌லிபிய தேசிய வர்த்தக சபையின் தலைமை அதிகாரி முஸ்தபா ஜலில் கூறுகையில், லிபியாவில் பொருளாதார நிலைத்தன்மை ஏற்பட, அந்நிய முதலீட்டை பெற இத்தகைய அனுமதி இன்றியமையாதது என தெரிவித்தார்.
ஜப்பான் அணு உலை குளிர்விக்கப்பட்டது: அதிகாரிகள் அறிவிப்பு.
சுனாமி தாக்குதலால் பாதிப்புக்குள்ளான புகுஷிமா அணு மின் நிலையம் குளிர்விக்கப்பட்ட நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், ஆதலால் அணுமின் நிலையத்தில் இருந்து கதிரியக்கம் வெளியாவது நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.
இந்த அணு உலையை முழுமையாக செயலிழக்க செய்ய குறைந்தது நாற்பது ஆண்டுகளாவது ஆகும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.அணு உலையை சுற்றி முன்னர் வசித்து வந்த மக்கள் திரும்ப அந்த பகுதிக்கு திரும்ப அணுமதிக்கப்படுவார்களா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
அப்படியே அனுமதிக்கப்பட்டாலும் அணு உலையை சுற்றி 20 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தெரிகிறது.அணு உலையில் விபத்து ஏற்பட்டு ஒன்பது மாதங்கள் கடந்த பிறகு தற்போதுதான் அணு உலை குளிர்விக்கப்பட்ட நிலையை அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யூரோ மண்டல நிதிநெருக்கடியால் ஜேர்மனியில் வேலையிழப்பு.
யூரோ மண்டல நிதி நெருக்கடியால் ஜேர்மனியில் கோடிக்கணக்கானோர் தங்களது வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.ஜேர்மனி பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளுடன் ஏற்றுமதி வணிகத்தை மேற்கொள்வதால் யூரோ நெருக்கடி ஜேர்மனியின் ஏற்றுமதித் தொழிலைப் கடுமையாக பாதித்துள்ளது.
இதனால் அங்கு பணியாற்றும் 4.4 மில்லியன் பேர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று புரோக்னோஸ் கன்சல்ட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.ஜேர்மனி நாட்டின் ஏற்றுமதி வர்த்தகம் பெரும்பாலும் போர்ச்சுகல், கிரீஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளுடன் நடைபெறுகின்றது. 1 மில்லியன் பணியாளர் இந்த நாடுகளுடன் நடைபெறும் ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.
ஏற்றுமதி தொழில் நலிவடைவதால் ஜேர்மனியிலும் நிதி நெருக்கடியும் வேலையிழப்பும் ஏற்படும் என்பது உறுதியாகிறது என்றாலும் BGA என்ற மொத்த வெளிநாட்டு வியாபாரம் மற்றும் சேவைப்பணிகளின் ஜேர்மன் கூட்டமைப்பு தாங்கள் மிகவும் நம்பிக்கையோடு இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
ஏனெனில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருந்தாலும் கூட ஏற்றுமதித் துறை வலுவாக இருப்பதாகவும் வேலைவாய்ப்புக்கு அபாயம் நேரிடாது என்றும் தெரிவித்துள்ளது.ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடியால் நலிவுற்ற ஜேர்மனி இந்தியா, சீனா போன்ற பொருளாதாரச் சிறப்புள்ள நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியிருப்பதால் வேலையிழப்பு ஏற்படாது. ஐரோப்பாவை முழுவதுமாக நம்பியிருக்கும் அவசியம் இனி ஜேர்மனிக்குக் கிடையாது என்றும் BGA நம்பிக்கையளித்துள்ளது.
அத்துமீறி தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும்: கிலானி.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் நேட்டோ படை தாக்குதலில் 24 வீரர்கள் பலியானதற்கு பின் பாகிஸ்தான், அமெரிக்க உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் கிலானி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில் பாகிஸ்தான் எல்லைக்குள் அமெரிக்கா அத்துமீறி நுழைவதை நிறுத்த வேண்டும்.தீவிரவாத ஒழிப்பில் பொது எதிரியை ஒழிப்பதில் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் முழு ஒத்துழைப்பு வழங்கும்.
அதேநேரத்தில் பாகிஸ்தானில் எல்லையையும் அமெரிக்கா மதித்து நடக்க வேண்டும். ஆளில்லா உளவு விமானங்கள் டிரோன் மூலம் திடீர் திடீரென தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என கூறினார்.
ஆங்கிலம் பேச தெரிந்தால் மட்டுமே இங்கிலாந்தில் குடியேற முடியும்: லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
ஆங்கிலம் பேச தெரியாதவர்கள் இங்கிலாந்தில் குடியேற தடை விதிக்கும் சட்டம் செல்லும் என்று லண்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இங்கிலாந்தில் குடியேறுகின்றனர். அவர்கள் குடியுரிமை பெற ஆங்கிலம் பேச தெரிந்திருக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புது சட்டம் கொண்டு வரப்பட்டது.
இதை எதிர்த்து இந்தியாவை சேர்ந்த ரஷீதா சாப்தி(54) என்பவர் லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது மனுவில், என் கணவர் வாலி சாப்தி(57) இந்தியாவில் இருக்கிறார். எங்களுக்கு 37 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
எங்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். கடந்த 15 ஆண்டுக்கு முன்பு இங்கிலாந்தில் குடியேறினேன். இங்கு குடியுரிமையும் பெற்றுள்ளேன். ஆனால் என் கணவருக்கு ஆங்கிலம் பேச தெரியாததால் இங்கிலாந்தில் குடியேற முடியவில்லை.புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள குடியேற்ற சட்டம் சட்டவிரோதமானது. இது இனமொழி பாகுபாடானது. அதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பீட்சன், ஆங்கிலம் பேச தெரிந்திருக்க வேண்டும் என்ற சட்டம், தம்பதியின் குடும்ப வாழ்க்கையில் தலையிடவில்லை. அதேபோல் இங்கிலாந்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் திருமணம் செய்து கொள்வதையோ, திருமணத்துக்காக அவர்கள் வெளிநாடு செல்வதையோ இந்த சட்டம் தடுக்கவில்லை.இங்கிலாந்தில் குடியேறுபவர்களுக்கு ஆங்கிலம் பேச தெரிந்திருந்தால், சமுதாயத்தில் ஒன்றி பழக முடியும், மக்களுடன் எளிதாக ஒன்றிணைய முடியும் என்பதுதான் நோக்கம் என்று தீர்ப்பளித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF