Friday, December 2, 2011

இன்றைய செய்திகள்.

விடுதலைப்புலிகளை போரில் வென்றதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணி அபகரிக்கப்பட்டுள்ளது – சரத் பொன்சேகா.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றியீட்டியமைக்காக அரசாங்கம் சரத் பொன்சேகாவுக்கு 25 பேர்சஸ் காணியை வழங்கியிருந்ததாகவும் குறித்த காணியை அரசாங்கம் மீளப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அவ்வாறு வெகுமதிகள் வழங்கப்பட வேண்டுமாயின் ஆட்சியாளர்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். எனினும் தற்போது அவ்வாறான ஒரு சூழ்நிலையை எதிர்பார்க்க முடியாது.ஐக்கிய தேசியக்கட்சியினால் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட எதிர்ப்பு போராட்டம் வரவேற்கப்பட வேண்டியது என்று குறிப்பிட்டுள்ள சரத் பொன்சேகா, போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
குறித்த காணியை சுற்றி பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர் எனவே காணிக்குள் யாரும் பிரவேசிக்க முடியாது எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். ஹைகோர்ப் வழக்கு விசாரணைகளில் கலந்து கொண்டு நேற்று சிறைச்சாலை திரும்பிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த வழக்கு விசாரணை நாளை வெள்ளிக்கிழமை வரையில் ஒத்தி வைக்கப்பட்டது.
ஒரே நாடு என ஏற்றுக் கொண்டால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட வேண்டும்- பசில் ராஜபக்ஸ.
ஒரே நாடு என ஏற்றுக் கொண்டால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட வேண்டும். அதனை தவிர்க்கமுடியாது என்றும் நாட்டில் மக்களுடன் நட்புறவாக செயற்படக் கூடிய படையினரே தற்போது சேவையாற்றுவதாகவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்  பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.வரவுசெலவுத்திட்ட விவாதத்தின் போது நேற்று புதன் கிழமை(30.11.2011) அன்ற நாடாளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், 
பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்போரே பாதுகாப்புச் செலவுகள் குறைக்கப்பட வேண்டுமென்று கோரி வருவதாக பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 
பாதுகாப்புச் செலவுகளை ஒரு முதலீடாகவே தாம் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சாதனை படைக்கப்பட்டுள்ளது. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டமையினால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை விடுதலைப்புலிகள் வடக்கைக் கைப்பற்றியிருந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இருக்கவில்லை என்பது அவர்களது மனச்சாட்சிகளுக்குத் தெரியும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் வருமானத்தில் 54.4 சதவீதத்தை ஒரேயொரு குடும்பத்தினரே அனுபவிக்கின்றனர்! அனுரகுமார எம்.பி..
வரவுசெலவுத் திட்டத்தில் விவசாயிகள், மீனவர்கள் உழைக்கும் வர்க்கத்தினர், அரச தனியார் துறையினர் என சகல தரப்பினரும் ஏமாற்றப்பட்டனர். நாட்டில் வாழும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவதில்லை. எனினும் வருமானத்தில் 54.4 வீதத்தை ஒரேயொரு குடும்பத்தினரே அனுபவித்து வருகின்றனர் என்று அனுரகுமார திஸாநாயக்க எம்.பி தெரிவித்தார்.வடக்கு மக்கள் தங்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையிலான வழிமுறைகளையும் நிவாரணங்களையும், நிம்மதியான வாழ்க்கையையும், காணாமல் போன தங்களுடைய குடும்ப அங்கத்தினர் தொடர்பான விபரங்களையுமே கோரி நிற்கின்றனர். தங்களுடைய வீடுகளையும், காணிகளையும் தவிடுபொடியாக்கும் அதிவேக வீதிகளை அவர்கள் விரும்பவில்லை என்றார்.பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவுசெலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தெற்கு அதிவேக பாதையை திறந்து வைக்கும்போது வடக்கிற்கும் அதிவேக பாதை நிர்மாணிக்கப்படும் என்று ஜனாதிபதி சொன்னார். ஏ 9 வீதியை அதிவேக வீதியாக மாற்ற வேண்டும் என்று ஒப்பந்தக்காரர்களின் கோரிக்கையே தவிர யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையல்ல.யாழ்ப்பாணத்தில் 37286 வீடுகளும், முல்லைத்தீவில் 18617 வீடுகளும், கிளிநொச்சியில் 29467 வீடுகளும், வவுனியாவில் 13154 வீடுகளும் முழுமையாக சேதமாக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் யுத்த மேகம் களையப்பட்டதன் பின்னரும் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவில்லை. எனினும் அதிவேக வீதி நிர்மாணிக்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். அடிப்படை தேவைகளை எதிர்பார்த்து நிற்கின்ற வடக்கு மக்கள் தங்களுடைய வீடுகள், காணிகளை தவிடுபொடியாக்கும் அதிவேக வீதிகளை எதிர்பார்க்கவில்லை.தங்களுடைய வீடுகளை நிர்மாணிக்க வேண்டும். பிள்ளைகள் தொடர்பிலும் குடும்ப அங்கத்தவர்கள் குறித்தும் தகவல்கள் நிவாரணங்களை எதிர்பார்த்து நிற்கின்றனர்.
யுத்தத்தினால் மட்டும் வடக்கில் 27 ஆயிரம் பேர் விதவைகளாக்கப்பட்டுள்ள னர். தாய் தந்தையை இழந்த 5000 சிறார்க ளும், இருவல் ஒருவரை இழந்த பிள்ளை கள் 12 ஆயிரம் பேரும் இருக்கின்றனர் அவர்களின் நலன்பு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தியிருக்கலாம்.மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படாத அநீதியான வரவு செலவுத் திட்டம். எனினும் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கான வாகனங்களை கொள்வனவு செய்வதற்கென கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 29 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வருடங்களில் வரவு செலவுத்திட்டம் மூலம் மிஹின் ஏயார் நிறுவனத்திற்கு 8000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் நட்டத்திலேயே இயங்குகின்றது. அந்நிறுவனம் 4700 மில்லியன் ரூபா நட்டத்திலேயே இயங்குகின்றது.நாட்டின் வருமானத்தில் 54.4 சதவீதத்தை ஒரேயொரு குடும்பத்தினரே அனுபவிக்கின்றனர். வருமானத்தில் 4 வீதத்தையே சாதாரண மக்கள் அனுபவிக்கின்றனர்.பொய்யான தகவல்களையும் புள்ளிவிபரங்களையும் கவனத்தில்கொண்டு சகல பிரிவினர்களையும் மறந்த திட்டமாகும் என்றார். 
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை.
கடந்த ஏப்ரலில் முடிவடைந்த உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய இலங்கை அணியின் வீரர்களுக்கு இன்னும் போட்டிகளுக்கான கட்டணங்கள் ,உடன்படிக்கைத் தொகைகள் என்பன வழங்கப்படவில்லை என இலங்கை கிரிக்கெட் சபை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்துக்கு அறிவித்துள்ளது.இது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் பணிப்பாளர் டிம் மே தெரிவிக்கையில், இலங்கை கிரிக்கெட் சபை நிதிப்பிரச்சினையில் சிக்குண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் இந்த சம்பள தொகைகள் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 
இந்தநிலையில் இலங்கை கிரிக்கெட் சபை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்திடம் இருந்து 4.3 மில்லியன் டொலர்களை எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்காக இலங்கை கிரிக்கெட் சபை பல்லேகல மற்றும் பிரேமதாஸ மைதானங்களை புனரமைக்க அதிக நிதிகளை செலவிட்டதாகவும் எனினும் போட்டிகளில் எதிர்ப்பார்த்த வருமானத்தை ஈட்டமுடியவில்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் ஏற்பட்ட நட்டத்தை ஈடுசெய்ய இலங்கை கிரிக்கெட் சபை இலங்கை அரசாங்கத்திடம் 23 மில்லியன் அமெரிக்க டொலர்களை கோரியுள்ளது .
நாடாளுமன்ற ஒழுங்குவிதியை மீறும் அரச தரப்பினருக்கு எதிராக இனி கடும் நடவடிக்கை! ஜனாதிபதி எச்சரிக்கை!
நாடாளுமன்ற ஒழுங்குவிதிகளை மீறி செயற்படும் அரச தரப்பினருக்கு எதிராக இனிமேல் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளார்.நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்படும் அரசதரப்பு எம்.பிக்களுக்கு எதிராகப் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று இரவு இடம் பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தில் சுமார் அரை மணித்தியாலம் இடம் பெற்ற இந்தக் கூட்டத்தில் வரவுசெலவுத் திட்டம் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது.குறிப்பாக வரவு செலவுத்திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சபையில் சமர்ப்பித்து உரையாற்றிய தினத்தன்று சபையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.இதனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முட்டி மோதிக்கொண்டனர். இந்த விவகாரம் குறித்தும் சூடான கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தின்போது சபையில் ஏற்பட்ட களேபரத்தை வன்மையாகக் கண்டித்த ஜனாதிபதி, இனிமேல் இவ்வாறான சம்பவங்களுக்கு இடமளிக்கமாட்டேன். தண்டனை நிச்சயம் என அரசதரப்பு எம்.பிக்களிடம் ஆணித்தரமாகக் கூறியுள்ளார் என அறியமுடிகிறது.வரவுசெலவுத்திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட தினத்தன்று ஜனாதிபதியின் உரையை செவிமடுக்க வெளிநாட்டு இராஜதந்திரிகள், தூதுவர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் நாடாளுமன்றத்துக்குச் சென்றிருந்தனர்.
உயரதிகாரிகள் கலரியில் நிரம்பியிருக்க, அவர்களுக்கு மத்தியிலேயே இரு தரப்பினரும் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.ஜனாதிபதி நிலைமையைக் கட்டுப்படுத்த முயற்சித்தும் பயனளிக்கவில்லை. இதனால் யுத்தக்களமாகக் காட்சியளித்தது சபை. பிரச்சினை பூதாகரமாக உருவெடுக்க, ஐ.தே.க யினர் வெளிநடப்புச் செய்தனர்.முக்கியஸ்தர்களுக்கு மத்தியில் ஜனநாயகத்தின் தேவாலயம் எனக் கருதப்படும் நாடாளுமன்றில் அரங்கேறிய அசாதாரண சம்பவமானது ஜனாதிபதியை கொதிப்படையச் செய்தது.
இந்நிலையிலேயே நேற்று இரவு ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இடம் பெற்றது.இதன்போது, "வெளிநாட்டு முக்கியஸ்தர்களுக்கு மத்தியில் எம்.பிக்கள் இவ்வாறு நடந்துகொள்வது முறைகேடான செயற்பாடாகும். இவ்வாறான சம்பவங்கள் நாட்டின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும். நாட்டின் ஜனாதிபதி சபையில் இருக்கும்போது ஆளுங்கட்சி எம்.பிக்கள் இவ்வாறாக நடந்து கொண்டால், இராஜதந்திரிகள் அதனை என்னவாகக் கருதுவர்'' என ஜனாதிபதி கடுந்தொனியில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, நாடாளுமன்றில் இனிமேல் இவ்வாறு நடந்துகொள்ளக் கூடாது என்றும், நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்குக் குந்தகம் ஏற்படும் வகையில் செயற்பட்டால் பாரபட்சமின்றி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அத்துடன், வரவுசெலவுத்திட்டம் மீதான விவாதம் இடம்பெறும் இக்காலப்பகுதிகளில் ஆளுந்தரப்பு எம்.பிக்கள் கட்டாயம் சபைக்குப் பிரசன்னமாக வேண்டும் எனவும், பிரத்தியேக நடவடிக்கைகளுக்குக் காலத்தை வீணடிக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என அறியமுடிகின்றது.அரச தலைமையின் இந்த அதிரடி நடவடிக்கையால் ஆளுந்தரப்பு எம்.பிக்கள் அதிர்ச்சியடைந்து போயுள்ளனர் என்றும் அறிய முடிகிறது.
குறைந்தளவு லஞ்சம் வாங்கும் நாடுகளில் இலங்கை 86வது இடம்.
ஊழல் கண்காணிப்பு சர்வதேச அமையம் வெளியிட்டுள்ள குறைந்த அளவு லஞ்சம் வாங்கும் நாடுகள் குறித்த 2011ம் ஆண்டு அறிக்கையில், இலங்கை 86ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
2010ம் ஆண்டு அறிக்கையில் 91வது இடத்தைப் பிடித்த இலங்கை, 2011ம் ஆண்டு அறிக்கையில் மூன்று இடங்கள் முன்னோக்கி 86வது இடத்தைப் பிடித்துள்ளது.
மொத்தமாக 178 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட இக்கணிப்பீட்டில் இலங்கையுடன் 86வது இடத்தை ஜமேக்கா. பனாமா, பல்கீரியா மற்றும் சேர்பியா ஆகிய நாடுகள் பகிர்ந்து கொண்டுள்ளன. இவ்வறிக்கையில் இந்தியா 95வது இடத்திலும் சீனா 75வது இடத்திலும் உள்ளதுடன் முதல் இடத்தை நியூசிலாந்து பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றில் உரையாற்ற மறுத்த ரணில் பின்னர் பேசினார்.
இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்ற மறுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றது.முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தொடர்பில் அண்மையில் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் கருத்தை முன்வைக்க முயற்சித்தார்.எனினும் சரத் பொன்சேகாவின் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளமையால் ரணிலின் கருத்துக்கு சபாநாயகர் ச்சமல் ராஜபக்ச மறுப்பு வெளியிட்டார்.
இதனையடுத்து பொதுநலவாய நாடுகளின் உறுப்பு நாடாக உள்ள இலங்கையின் நாடாளுமன்றத்தில் கருத்துக்கூற அனுமதியில்லை என்றுக்கூறி ரணில் விக்கிரமசிங்க தாம் அணிந்திருந்த பொதுநலவாய கழுத்துப்பட்டியையும் அகற்றி விட்டு சபையில் இருந்து வெளியேறினார்.இந்தநிலையில் ரணிலுக்கு குறித்து கருத்தை சீர்திருத்தத்துடன் தெரிவிக்க இன்று அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அதற்காக இன்று நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமானவுடனேயே நேரமும் ஒதுக்கப்பட்டிருந்தது.எனினும் குறித்த சீர்திருத்த அனுமதிக்கு நாடாளுமன்ற செயலாளரே கையொப்பமிட்டுள்ளமையை சுட்டிக்காட்டி ரணில் விக்கிரமசிங்க தமது உரையை நிகழ்த்த மறுத்தார்.குறித்த சீர்திருத்தத்துக்கு சபாநாயகரே அனுமதி கையொப்பம் இட்டிருக்கவேண்டும் என்பது ரணில் வாதமாக அமைந்திருந்தது.
எனினும் ஆளும் கட்சியினரும் இதற்கு இணங்காமையால் ரணில் விக்கிரமசிங்க தாம் உரையாற்றப்போவதில்லை என்று அறிவித்தார். இதனையடுத்து நாடாளுமன்றத்தின் வழமையான நடவடிக்கைகள் தொடர்ந்தன.இந்தநிலையில் வரவுசெலவுத்திட்ட குழு நிலை விவாதம் இடம்பெற்ற போது எதிர்க்கட்சி தலைவருக்கான உரையில் ரணில் விக்கிரமசிங்க முன்னதாக ஆற்றவிருந்த உரையில் அடங்கியிருந்தவற்றை வெளிப்படுத்தினார்.
இதன்போது இலங்கை மனித உரிமைகளை மதிக்கும் நாடாக இருக்குமானால், பொதுநலவாய நாடுகள் மாநாடு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற போது மனித உரிமைகள் ஆணையாளர் பதவி ஒன்று உருவாக்கப்படுவதற்கு ஏன் எதிர்ப்பை வெளியிட்டது என்று கேள்வி எழுப்பினார்.அத்துடன் முன்னாள் இராணுவ தளபதியை பெயர் குறிப்பிடாது, அவரின் உரிமைகள் மீறப்பட்டுள்ளமையை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சாசனத்துக்கு எதிரானவை என்றும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.இதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி எல் பீரிஸ், இலங்கை மாத்திரமல்லாமல் 50க்கும் மேற்பட்ட நாடுகள் பொதுநலவாய மனித உரிமைகள் ஆணையாளர் பதவிக்கு தமது எதிர்ப்பை தெரிவித்தன என்று குறிப்பிட்டார்.
இலங்கையில் 40 அரச நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றன்-அமைச்சர் குணசேகர.
இலங்கையின் நாடாளுமன்றத்தில் கோப் என்ற அரச நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிக்குழுவின் அறிக்கையை இன்று வியாழக்கிழமை(01.12.2011)  அமைச்சர் டியூ.குணசேகர சமர்ப்பித்துள்ளார்.இதன்போது கருத்துரைத்த அமைச்சர் கோப் அறிக்கையை ஒரு வருடத்துக்கு ஒருமுறை இல்லாமல் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சமர்ப்பிப்பது சிறந்தது என குறிப்பிட்டதுடன், குழு அறிக்கை மூலம் 229 அரச நிறுவனங்களில் 40 அரச நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவது தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை அரசாங்க நிதியில் இயங்கும் மிஹின் லங்கா, மஹாவலி அதிகார சபை, நீர் வடிகாலமைப்பு சபை, கனிய எண்ணெய் கூட்டுதாபனம், ஸ்ரீ ஜெயவர்த்தனபுர மருத்துவமனை, மரமுந்திரிகை கூட்டுதாபனம் மற்றும் மின்சார சபை என்பன நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களாக இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் படைவீரர் எவருக்கும் கருணை காட்டப்படமாட்டாது– கெஹலிய ரம்புக்வெல.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் எந்த ஒரு தனிப்பட்ட படைவீரர் விடயத்திலும் மென்மைபோக்கு கடைப்பிடிக்கப்படமாட்டாது என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வறிக்கையில் படைவீரர்கள் மீது போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் குறித்த படைவீரர்கள் தொடர்பில் கடுமையான போக்கை கடைப்பிடிக்காது என்று நேற்று வியாழக்கிழமை(01.12.2011) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே   அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
நல்லிணக்க ஆணைக்குழு இலங்கையின் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட அமைப்பாகும். எனவே, அதன் பரிந்துரைகளை கவனத்தில் கொள்ளவேண்டியது நாட்டுக்கு நன்மைப்பயக்கும் என்று அமைச்சர் இதன்போது கூறினார். இதேவேளை நல்லிணக்க குழுவின் அறிக்கை இந்த மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய சீனி நிறுவனமும் அமெரிக்க நிறுவனமும் இலங்கையில் முதலீடு.
இலங்கையில் இந்திய சீனி உற்பத்தி நிறுவனம் உட்பட்ட மூன்று வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, சீனாவினால் 361 மில்லியன் டொலர்கள் செலவில் ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட துறைமுகப்பகுதியின் பொருளாதார வலயத்திலேயே இந்த நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை அமைக்கவுள்ளன.
இந்திய சீனி உற்பத்தி நிறுவனம், சிங்கப்பூரின் பெற்றோ-கெமிகல் மற்றும் பாகிஸ்தானின் சீமெந்து தொழிற்சாலை என்பனவே தமது தொழிற்சாலைகளை அமைக்கவுள்ளன.இந்த மூன்று நிறுவனங்களின் மூலம் இலங்கைக்கு 1 பில்லியன் அமொரிக்க டொலர்கள் முதலீடாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, அமொரிக்காவின் SHERATON Group நிறுவனம் இலங்கையின் கொழும்பில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.300 மில்லியன் அமரிக்க டொலர்கள் ஒதுக்கீட்டுடன் இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. இதற்காக 99 வருட குத்தகை அடிப்படையில் 5 ஏக்கர் காணி இலங்கை அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு சென்ற 9000 வைத்தியர்கள் நாடு திரும்பவில்லை-சுகாதார அமைச்சு.
பயிற்சிகளுக்காக வெளிநாடு சென்ற சுமார் ஒன்பதாயிரம் வைத்தியர்கள் இதுவரையில் நாடு திரும்பவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இலங்கையின் சுகாதார அமைச்சில் சேவையாற்றியவர்களே தற்போது வெளிநாடுகளில் கடமையாற்றி வருவதாகவும் இதனால், அரசாங்க வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்கு வெற்றிடம் நிலவுவதாகவும் மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்லும் அநேக வைத்தியர்கள் மேல் படிப்பை முடித்துக்கொண்டு அங்கேயே தங்கி விடுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட நிபுணத்துவம் பெற்றுக்கொண்ட பல வைத்தியர்கள் இவ்வாறு வெளிநாடுகளில் சேவையாற்றி வருகின்றனர். எனவே, மருத்துவ பீடத்திலிருந்து வெளியேறும் மாணவர்களுக்கு உடனடியாக பயிற்சிகளை வழங்கி அவர்களை அரசாங்க சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையர்கள் அனைவருக்கும் கணனிகள் கிடைக்க புதிய திட்டம்.
இலங்கையின் அனைத்து பிரஜைகளுக்கும் கணனிகள் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(29.11.2011)  முதல் திட்டம் ஒன்று அமுல்செய்யப்பட்டுள்ளது. இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இதன் அடிப்படையில் மாதம் ஒன்றுக்கு 2341 ரூபாவை மாத்திரம் செலுத்தி இலங்கையர் எவரும் கணனிகளை கொள்வனவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 8 மாதங்களில் ஒருவருக்கு கணனி சொந்தக்காரராக முடியும்.எச்பி ரகத்தின் 5 மடிகணனிகள் இந்த திட்டத்தின் கீழ் இலங்கையர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபன தலைவர் பிரதீப் குணவர்த்தனதெரிவித்துள்ளார்.
பாதாள உலகக் குழுத் தலைவர் பெரோஸ் கடத்தப்பட்டார்.
பாதாள உலகக் குழுத் தலைவர் மொஹமட் ஜலீல் மொஹமட் பெரோஸ் எனப்படும் பெரோஸ் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.பெரோஸ் நேற்று வியாழக்கிழமை நீர்கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்துக்கும் மேற்பட்ட படுகொலைகள் உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களுடன் பெரோஸிற்கு தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. தனது அடியாட்களுடன் செல்லும் போதே பெரோஸ் கடத்தப்பட்டுள்ளார். எனினும் பெரோஸிடன் இருந்த அடியாட்கள் எவரும் கடத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.இனந்தெரியாதவர்களினால் தமது மகன் கடத்திச் செல்லப்பட்டதாக பெரோஸின் தயார் நீர்கொழும்பு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 
இதற்கு முன்னர் பல தடவைகள் பெரோஸை பொலிஸார் கைது செய்த போதிலும், அரசியல் செல்வாக்கு காரணமாக விடுவிக்கப்பட்டார். சில ஆண்டுகளுக்கு முன்னர் விபத்து ஒன்றில் கால்களை இழந்த பெரோஸ் செயற்கை கால் ஒன்றைப் பொருத்திக் கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார் என்பதும் அண்மைக்காலமாக முக்கிய பாதாள உலகக் குழுத் தலைவர்கள் இனந்தெரியாதவர்களினால் கடத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
ராஜ் ராஜரட்ணத்தின் பிணை மனு நிராகரிப்பு! தண்டனை திங்கட்கிழமை ஆரம்பம்.
அமரிக்க உட்சந்தை மோசடி வழக்கில் 11 வருட சிறைத்தண்டனை பெற்றுள்ள இலங்கைத் தமிழரான ராஜ் ராஜரட்ணத்தின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து, அவரின் 11 வருட சிறைத்தண்டனை எதிர்வரும் திங்கட்கிழமை (05.12.2011) ஆரம்பமாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், சிறுநீரக மாற்றுச்சிகிச்சை உட்பட்ட பல்வேறு நோய்களுக்கு ராஜரட்ணம் உள்ளாகியிருப்பதாக நேற்று வியாழக்கிழமை(01.12.2011) சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் பிணைக்கான காரணங்களை முன்வைத்து ராஜ் ராஜரட்ணத்தின் உடல்நிலை கருதி அவருக்கு பிணை வழங்கவேண்டும் என்று அவரின் சட்டத்தரணிகள் வாதத்தை முன்வைத்தனர்.
அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனினும், மேன்முறையீட்டு விசாரணைகள் முடிவடையும் வரையில் அவர் சிறைக்கு செல்லாமல் பிணை வழங்கப்படவேண்டும் என்பதே மனுதாரர் தரப்பு கோரிக்கையாக இருந்தது. 
அதனை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்காவின் பிராந்திய மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கான 11 வருட சிறைத்தண்டனையை உறுதிசெய்துள்ளது. Galleon Group இன் நிறுவுனரான ராஜ் ராஜரட்ணம் அமெரிக்க பங்குசந்தையில் உட்சந்தை மோசடியில் ஈடுபட்டு பல மில்லியன் டொலர்கள் நட்டத்துக்கு காரணமாக இருந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டார்.
ஆய்காங்கில் தீ விபத்து: 8 பேர் உடல் கருகி பலி.
ஆங்காங்கில் மோங்சாஜ் மாவட்டத்தில் மிகப்பெரிய மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அங்குள்ள ஒரு நடைபாதை கடையில் இருந்து புகையுடன் நெருப்பு கிளம்பியது.இந்த தீ அருகில் உள்ள கடைகளுக்கும் வேகமாக பரவியது. அந்த சமயத்தில் அங்கு ஏராளமானோர் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் 8 பேர் உடல் கருகி அங்கேயே பலியாகினர்.
மேலும் 30 பேர் தீக்காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் இன்று அதிகாலையில் உயிரிழந்தார். தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஐ.நா தீவிரவாதப் பட்டியலிலிருந்து கனடா தீவிரவாதி பெயர் நீக்கம்.
சூடானில் பிறந்து கனடாவின் மொன்றியலில் வாழ்ந்து வந்த அப்துல் ரசீக் என்பவரை ஐ.நா பாதுகாப்பு குழு அல்கொய்தா ஆதரவாளர் என முத்திரை குத்தி காவலில் வைத்தது. தற்பொழுது அதை விலக்கிக் கொண்டுள்ளது.
சூடானுக்கு தன் தாயாரைப் பார்க்க சென்ற போது அப்துல் ரசீக் கைது செய்யப்பட்டார். CSIS என்ற கனடா பாதுகாப்பு புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர்களும், RCMP என்ற றொயல் கனடா மௌண்ட்டட் காவல்துறையினரும் இவர் மீது நடவடிக்கை எடுத்தனர்.
இப்போது இவர் பெயர் தீவிரவாதப் பட்டியலிலிருந்து விடுவிக்கப்பட்டதால் இவருடைய சொத்து பரிவர்த்தனைகளை நிறுத்திவைத்தல், பயணத்தடை, ஆயுதத்தடை போன்ற தடைகளும் விலக்கப்பட்டது.
அமெரிக்கா இவரை 2006ம் ஆண்டு ஜீலை மாதத்தில் அல்கொய்தா ஆதரவாளராக குற்றம் சாட்டியது. இவர் தனக்கும், அல்கொய்தாவுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று CSIS மற்றும் FBI அதிகாரிகளிடம் தெரிவித்தார்.CSISயின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட சூடான் அதிகாரிகள் அப்துல் ரசீக்கை காவலில் வைத்து சித்ரவதை செய்ததாக இவர் கூறினார்.
மேலும் இக்காலகட்டத்தில் இவரது கடவுச்சீட்டும் காலாவதியாகிப் போனது. இவரை கார்ட்டோவும் என்ற ஊரில் உள்ள கனடா தூதரகத்தில் காவலில் வைத்தனர்.ஆனால் கனடா இவரை கைது செய்தது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவந்தது. இவர் கடந்த 2009ம் ஆண்டு ஜீன் மாதம் கனடா திரும்பினார். அன்று முதல் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க முயன்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடாபியின் மகனிடம் நன்கொடை பெற்ற லண்டன் கல்லூரி.
லிபியாவின் முன்னாள் ஜனாதிபதியான கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் கடாபி இலண்டனில் உள்ள பொருளாதார கல்லூரி ஒன்றிற்கு 300,000 பவுண்ட் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
சைப் அல் இஸ்லாம் இந்த கல்லூரியில் கடந்த 2003ம் ஆண்டு முதுகலை அறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் 2008ம் ஆண்டு முனைவர் பட்டமும்(Ph.D) பெற்றார்.இவருக்கு முனைவர் பட்டம் வழங்கி ஆறுவாரம் கழித்து முதல் தவணைத் தொகை வந்து சேர்ந்த காரணத்தினால் இவர் முறைப்படி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெறவில்லை, பணம் கொடுத்து பட்டத்தை விலைக்கு வாங்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டு இவர் மீது எழுந்தது.
சைப் அல் இஸ்லாமிடம் லண்டன் கல்லூரி நன்கொடை என்ற பெயரில் வாங்கிய லஞ்சப் பணம் குறித்து அறிக்கை வெளியிட்ட முன்னாள் நீதிபதி ஹேரி உலப் கூறுகையில், இக்கல்லூரி தனக்கு இருந்த நற்பெயரையும், நன்மதிப்பையும் இந்த நன்கொடை கெடுத்து விட்டது.இனி இந்த கல்லூரி முதுகலை படிப்புக்கு மாணவர்களைத் தெரிவு செய்யும் போது ஒரு குழுவின் கண்காணிப்பில் தான் செயல்பட வேண்டும் என்றார்.
பிரிட்டன் தூதரகம் மீதான தாக்குதல்: ஜேர்மனி தனது தூதரை திரும்ப அழைத்துக் கொண்டது.
ஈரானின் தலைநகரான டெஹ்ரானில் பிரிட்டன் துதரகத்தில் நடந்த தாக்குதலுக்கு ஜேர்மனி எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், தனது தூதரை உடனடியாக தாய்நாடு திரும்ப வேண்டும் என்று கூறியுள்ளது.இதுகுறித்து ஜேர்மன் வெளிவிவகாரத்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஈரானில் உள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து தனது நாட்டு தூதரிடம் ஜேர்மன் வெளிவிவகாரத்துறை அமைச்சர் குய்டோ வெஸ்டர்வேலே பேச விரும்பியதால் அவரை இங்கு அழைத்தோம் என்றார்.
வெஸ்டர்வேலே கிரேக்க நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சரான ஸ்டாவ்ரோஸ் டிமாஸ் என்பவரோடு ஈரான் நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.சர்வதேச சட்டமீறலில் ஈரான் ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இவர்கள் தெரிவித்தனர்.
பிரிட்டன் தூதரகத்தை தாக்கியதோடு மட்டுமல்லாமல் ஜேர்மன் பள்ளி ஒன்றையும் சேதப்படுத்தியது ஜேர்மனிக்கு கடுங்கோபத்தை வரவழைத்தது.ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகப்படும் வளர்ந்த நாடுகளில் ஜேர்மனியும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்லின் நகரில் பள்ளிகளில் தொழுகை நடத்த தடை.
ஜேர்மனியின் பெர்லின் நகரில் கடந்த 2007ம் ஆண்டு பள்ளிகளில் படிக்கும் இஸ்லாமிய மாணவர்கள் தொழுகை நேரங்களில் பள்ளிலேயே குழுவாக இணைந்து தொழுகை நடத்தினர்.
அப்போது இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ரானில் கூறப்பட்டுள்ளபடி தொழுகை நடத்தவில்லை என்று கூறி மாணவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது.இதுதொடர்பான வழக்கு பெர்லின் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பள்ளிகளில் இஸ்லாமிய மாணவர்கள் தொழுகை நடத்த தடை விதித்தார்.
நீதிபதி தனது தீர்ப்பில் கூறுகையில், பள்ளி நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படும் வகையில் உள்ள செயல்களை அனுமதிக்க முடியாது. வகுப்பு நடக்காத நேரங்களில் கூட பள்ளியின் அமைதி கெடும் வகையில் பிரார்த்தனை நடத்த கூடாது.மேலும் இஸ்லாமிய மாணவர்களுக்காக தனி அறையையும் பள்ளி நிர்வாகம் ஒதுக்கித்தர இயலாது. பள்ளியின் சுற்றுச்சூழல் பிரச்னைக்கு வழிவகுப்பதாய் இருக்க கூடாது. இந்த தீர்ப்பு இந்த வழக்குக்கு மட்டுமே பொருந்தும் என்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவிடம் 3000 அணுகுண்டுகள்: அமெரிக்கா தகவல்.
சீனாவிடம் 3,000 அணுகுண்டுகள் இருக்கலாம் என்று அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வு செய்து தகவல் வெளியிட்டுள்ளனர்.அமெரிக்காவின் ஜார்ஜ்டவுண் பல்கலைக்கழக மாணவர்கள், "அண்டர்கிரவுண்ட் கிரேட் வால்" என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கூகுள் எர்த், வலைப்பதிவு, ராணுவ இதழ்கள் உட்பட பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் 363 பக்க ஆய்வறிக்கையை பேராசியர் பிலிப் கார்பரிடம் சமர்ப்பித்துள்ளனர்.இந்த பேராசிரியர் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனில் அதிகாரியாக பணியாற்றியவர். இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: மாணவர்களின் ஆய்வறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் பென்டகனின் முக்கிய அதிகாரிகளுக்கு ஆய்வறிக்கையின் நகல் வழங்கப்பட்டுள்ளது.
சீனாவிடம் 80 முதல் 400 அணுகுண்டுகள் வரை இருக்கும் என்று அமெரிக்கா நினைத்து கொண்டிருக்கிறது. ஆனால் 3,000க்கும் அதிகமான அணுகுண்டுகளை சீனா வைத்திருக்கும் என்று தெரிகிறது. அவை மிகப்பெரிய அளவில் இருக்கும்.அணுகுண்டுகளை மறைத்து வைக்க நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கி.மீ தூரத்துக்கு மிகப்பெரிய சுரங்கப் பாதைகளையும் சீனா உருவாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது.
நேட்டோ படைத் தாக்குதல்: வீடியோ ஆதாரங்களை வெளியிட்டது பாகிஸ்தான்.
நேட்டோ படை தாக்குதலில் ராணுவ வீரர்கள் 24 பேர் பலியானது தொடர்பான வீடியோ காட்சிகளை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வடக்கு பகுதியில் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் சமீபத்தில் தாக்குதல் நடத்தின. இதில் ராணுவ வீரர்கள் 24 பேர் பலியாயினர்.இது அமெரிக்கா, பாகிஸ்தான் உறவில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. தவறுதலாக நடந்த தாக்குதலுக்கு நேட்டோ படைகளும், அமெரிக்காவும் பகிரங்க மன்னிப்பு கேட்டது.
அதை ஏற்க மறுத்த பாகிஸ்தான் பிரதமர் கிலானி மற்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹினா ரபானி கர் ஆகியோர், அமெரிக்காவுடனான உறவு குறித்து முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உறுதியாக கூறி விட்டனர்.இந்நிலையில் நேட்டோ படைகள் தாக்குதலில் ராணுவ வீரர்கள் பலியானது பற்றிய வீடியோ காட்சிகளை பாகிஸ்தான் நேற்று(30.11.2011) வெளியிட்டது.
இதுகுறித்து ஹினா கூறுகையில், நேட்டோ படை தாக்குதல் தவறுதலாக நடந்தது அல்ல. அதற்கு மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது. நேட்டோ படை தாக்குதலில் இனிமேல் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கூட பலியாவதை பாகிஸ்தான் பொறுத்துக் கொள்ளாது என்று கோபமாக கூறினார்.
இதுகுறித்து மேஜர் ஜெனரல் இஸ்பக் நதீம் கூறுகையில், தீவிரவாதிகள் பதுங்கி இருக்கும் இடங்களை கண்டுபிடித்து தாக்குதல் நடத்துவதற்கு முன் ராணுவத்துக்கு நேட்டோ படைகள் தகவல் தெரிவிக்க வேண்டும்.ஆனால் தகவல் தெரிவிக்காமல் தாக்குதல் நடத்தினர். அந்த இடத்தில் ராணுவ முகாம்களில் இருந்த 24 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த விஷயத்தில் எல்லா விதிமுறைகளையும் நேட்டோ மீறியுள்ளது என்று குற்றம் சாட்டினார்



பொது வேலை நிறுத்தப் போராட்டத்தால் முடங்கிப் போன பிரிட்டன்.
பிரிட்டனில் ஓய்வூதியச் சீர்திருத்தத்தை எதிர்த்து 20 லட்சம் பொதுத் துறை ஊழியர்கள் பங்கேற்ற பிரமாண்ட ஒருநாள் பொது வேலை நிறுத்தம் நேற்று(30.11.2011) நடந்தது.பிரிட்டன் தொழிற்சங்கங்கள் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தத்தை எதிர்த்து நேற்று ஒரு நாள் அடையாள பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன.
அதன்படி மொத்தம் 20 லட்சம் பொதுத் துறை ஊழியர்கள் கலந்து கொண்ட பிரமாண்ட பொது வேலை நிறுத்தம் நேற்று பிரிட்டனை ஸ்தம்பிக்க வைத்தது.நாடெங்கிலும் ஆயிரக்கணக்கான பேரணிகள் நடந்தன. பள்ளிகள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள், போக்குவரத்து, விமானச் சேவைகள் என அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் முடங்கிப் போயின. ஸ்காட்லாந்தில் மூன்று லட்சம் ஊழியர்களும், வேல்சில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஊழியர்களும், இங்கிலாந்தில் நான்கு லட்சம் மருத்துவத் துறை ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. இந்த வேலை நிறுத்தத்தில் நாட்டின் 22 தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன.வடக்கு அயர்லாந்தில் பேருந்து, ரயில்கள் ஓடவில்லை. ஸ்காட்லாந்தில் நேற்று நடக்க இருந்த மூவாயிரம் அறுவை சிகிச்சைகள் நடக்கவில்லை. மருத்துவ ஆலோசனைக்கான ஆயிரக்கணக்கான முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டன. வேலை நிறுத்தம் குறித்து நேற்று பேசிய பிரிட்டன் நிதித்துறை அமைச்சர் ஜார்ஜ் ஆஸ்போர்ன், இந்த வேலை நிறுத்தம் எதையும் சாதிக்கப் போவதில்லை. ஆனால் நமது பொருளாதாரத்தை மேலும் பலவீனப்படுத்தத்தான் செய்யும். இதற்குப் பதிலாக தொழிற்சங்கங்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். இதுபோன்ற கடினமான நடவடிக்கைகள் எடுக்காவிடில் பிரிட்டன் திவாலாகிவிடும் என்றார்.எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் ஈத் மிலிபண்ட், செய்ய முடியாத ஒன்றை தாங்கள் செய்ய வேண்டும் என அரசு தங்களை நெருக்குவதாக ஊழியர்கள் கருதுவதால் தான், வேலை நிறுத்த முடிவை மேற்கொண்டனர். இதனால் பாதிக்கப்படும் மக்களுக்காக நான் வருந்துகிறேன் என்றார்.
பிரிட்டனில் மொத்தம் இரண்டு கோடியே 90 லட்சம் பேர் பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்றனர். இவர்களில் இரண்டு கோடியே 30 லட்சம் பேர் தனியார் நிறுவனங்களில் உள்ளனர். மீதமுள்ளோர் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.தனியார் நிறுவனங்களில் உள்ளோரில் 32 லட்சம் பேர் மட்டுமே ஊழியர், நிறுவனம் இணைந்து செலுத்தும் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருகின்றனர். 64 லட்சம் பேர் தனிப்பட்ட முறையில் ஓய்வூதியத்திற்காக பணம் செலுத்தி வருகின்றனர்.
ஓய்வூதிய நிதிக்கான தேசியக் கூட்டமைப்பின் கணக்குப் படி, ஒரு பொதுத் துறை ஊழியர் ஆண்டு ஒன்றுக்கு 5,600 பவுண்டும், ஒரு தனியார் நிறுவன ஊழியர் ஆண்டு ஒன்றுக்கு 5,860 பவுண்டும் ஓய்வூதியமாகப் பெறுகின்றனர். ஆனாலும் இந்தக் கணக்கில் குளறுபடிகள் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பிரிட்டன், பொதுத் துறை ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை அறிமுகப்படுத்தப் போவதாகக் கூறியுள்ளது.
சமீபத்தில் அரசு வெளியிட்ட ஓய்வூதிய சீர்திருத்தத்தின்படி, பொதுத் துறை ஊழியர்கள், தங்கள் ஓய்வூதியத்திற்காக சம்பளத்தில் இருந்து கூடுதலாகப் பணம் செலுத்த வேண்டும், அதற்காகக் கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டும், தற்போது ஒரு பொதுத் துறை ஊழியர் ஓய்வு பெறும் போது பெறும் சம்பளத்தின் அடிப்படையில் வழங்கப்படும் ஓய்வூதியம் இனி, அவரது பணிக்காலத்தின் சராசரி சம்பளத்தின் அடிப்படையில் வழங்கப்படும்.இந்த சீர்திருத்தங்களுக்கு அரசு சொன்ன காரணம் ஓய்வூதியதாரர்கள் நீண்ட ஆயுள் வாழ்வதால் அவர்களுக்கு ஓய்வூதியம் கொடுத்துக் கட்டுப்படியாகவில்லை என்பது தான்.
பாகிஸ்தானை தலிபான்களின் தேசமாக மாற்றுவோம்: ஜமாத் உத் தவா சபதம்.
பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான ஜமாத் உத் தவா பாகிஸ்தானை முழுமையான தலிபான் தேசமாக மாற்றப் போவதாகவும், அமெரிக்காவுக்கு எதிராக இளைஞர்களைத் திரட்டி ஜிகாத்தில் ஈடுபடுத்தப் போவதாகவும் சபதம் எடுத்துள்ளது.பாகிஸ்தான் எல்லைச் சாவடி மீதான நேட்டோ தாக்குதலை எதிர்த்து லாகூரில் நேற்று(30.11.2011) நடந்த ஜமாத் உத் தவா சார்பிலான பேரணியில் பேசிய அதன் மூத்த தலைவர் அமீர் ஹம்சா கூறியதாவது: பாகிஸ்தான் ராணுவத்துக்கு எங்களது ஆதரவு உண்டு.
ஜமாத் தனது தொண்டர்களை தலிபான்களாக மாற்றும். பஞ்சாப் பல்கலைக்கழகம், அரசு கல்லூரிகள், பைசலாபாத்தில் உள்ள விவசாய பல்கலைக்கழகம் என எல்லாவற்றிலும் தலிபான்கள் இருப்பர்.ஷாம்சி ராணுவ தளத்தில் இருந்து மட்டுமல்லாமல், ஷாபாஸ் ராணுவ தளத்தில் இருந்தும் அமெரிக்காவை வெளியேற்ற வேண்டும் என்றார்.
மற்றொரு தலைவர் அப்துல் ரஹ்மான் மக்கி பேசுகையில், ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை விரைவில் கொல்வோம். அமெரிக்காவை அரசு பழிவாங்கவில்லை என்றால் நாங்கள் அதைச் செய்வோம் என்றார்.ஐ.எஸ்.ஐ முன்னாள் தலைவர் ஹமீத் குல்லின் மகன் அப்துல்லா குல் பேசுகையில், ஜிகாத்தில்(புனிதப் போர்) பங்கேற்க பாகிஸ்தான் மக்கள் ஆர்வமாக உள்ளனர் என்றார்.
ஈரான் ராணுவத்தள வெடி விபத்து குறித்து புது தகவல்கள் வெளியீடு.
ஈரானில் 17 ராணுவ வீரர்கள் மற்றும் அந்நாட்டின் ஏவுகணை விஞ்ஞானி ஆகியோரை பலி கொண்ட ராணுவ தள வெடிவிபத்து குறித்து பரபரப்பான தகவல்களை அமெரிக்க பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள பின் கனே என்ற ராணுவ தளம் ஒன்றில் கடந்த நவம்பர் 14ம் திகதி திடீரென வெடிவிபத்து நிகழ்ந்தது.
இதில் ஈரான் புரட்சி படையின் 17 வீரர்கள், அந்நாட்டின் தலைசிறந்த ஏவுகணை விஞ்ஞானி ஹசன் மொகாதம்(Hassan Moqqadam) ஆகியோர் பலியாயினர். இச்சம்பவம் எதிர்பாராமல் நடந்த விபத்து என ஈரான் தெரிவித்தது.அதே நேரம் இதன் பின்னணியில் இஸ்ரேல் உளவுத் துறையான மொசாட் இருக்கலாம் என்ற சந்தேகமும் உலா வந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் “தி நியூயார்க் டைம்ஸ்” என்ற பத்திரிகை இந்த வெடிவிபத்து குறித்து வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் கூறியிருப்பதாவது: பின் கனே பகுதியை செயற்கைக்கோள் மூலம் படம் எடுத்ததில் அப்பகுதி ராணுவ தளம் முற்றிலும் அழிந்து போயிருப்பது தெரியவந்துள்ளது.
அந்த ராணுவ தளம் ஈரானின் ஏவுகணை ஆய்வுக் கூடமாகச் செயல்பட்டு வந்திருக்கிறது. இதுகுறித்து சர்வதேச பாதுகாப்பு மற்றும் அறிவியல் கழகத்தினர் நடத்திய ஆய்வில் பின் கனேயில் இருந்த ஏவுகணை பொறியாளர்கள் ஓர் ஏவுகணையின் இயந்திரத்தை செயற்படுத்திக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
இந்த ஏவுகணை விபத்து, ஈரான் அதிக தூரம் சென்று தாக்கக் கூடிய அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக் கூடிய ஏவுகணைகளைத் தயாரித்து வருகிறது என்பதைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது என்று அறிவியல் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.இதை உறுதிப்படுத்தும் விதத்தில் விபத்து நடந்த உடன் ஈரான் ராணுவத் தளபதி ஹசன் பிரவுசாபதி கூறிய போது, இஸ்ரேலுக்கு பதிலளிக்கும் விதத்தில் ஆயுதங்களை பொறியாளர்கள் ஆய்வு செய்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தனது நாட்டு தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்துக் கொண்டது பிரிட்டன்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள பிரிட்டன் தூதரகங்கள், அந்நாட்டு மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து ஈரானுக்கான தனது தூதரக அதிகாரிகளை பிரிட்டன் திரும்ப அழைத்துக் கொண்டுள்ளது.கடந்த வாரம் அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை தடுத்து நிறுத்துவதற்காக அந்நாட்டின் மத்திய வங்கி மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்தன.
ஈரான் வங்கிகளுடனான தனது வங்கித் தொடர்புகளை பிரிட்டன் முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்தது. இதையடுத்து கடந்த நவம்வர் மாதம் 27ம் திகதி ஈரான் நாடாளுமன்றத்தில் பிரிட்டனுடனான அரசியல் ரீதியிலான உறவுகளை குறைத்துக் கொள்வதாக வாக்கெடுப்பு மூலம் முடிவெடுக்கப்பட்டது.இந்நிலையில் நேற்று முன்தினம்(29.11.2011) ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள பிரிட்டன் தூதரகத்தின் வாசலில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரிட்டன் கொடியை எரித்தனர். ஒரு கட்டத்தில் மாணவர்கள் வாசல் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று தூதரகத்தின் ஆறு ஊழியர்களை சிறை பிடித்தனர். தூதரகத்தை தாக்கினர். சம்பவம் நடந்து சிறிது நேரத்திற்குப் பின் அங்கு வந்த ஈரான் காவல்துறையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.டெஹ்ரானின் வடபகுதியில் இருந்த பிரிட்டனின் மற்றொரு தூதரகமும் தாக்கப்பட்டது. கடந்த ஆண்டு 1979ல் ஈரானில் நிகழ்ந்த இஸ்லாமியப் புரட்சிக்கு அடுத்து தற்போது தான் பிரிட்டன் தூதரகம் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்திற்கு ஐ.நா பாதுகாப்பு சபையும், அமெரிக்கா மற்றும் பிரிட்டனும் கண்டனம் தெரிவித்தன. ஈரானும் வருத்தம் தெரிவித்தது. இதுகுறித்து விசாரணை நடத்துவதாகவும் கூறியது. பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூனும் விளைவுகள் மோசமாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு சபையின் கண்டனம் குறித்து கருத்து தெரிவித்த ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானி," சம்பவத்தின் போது ஈரான் நாட்டு காவல்துறையினர் அமைதியை நிலைநாட்டியுள்ளனர். ஆனால் இக்கண்டனம் மூலம் அமெரிக்காவும், பிரிட்டனும், முன்பு செய்த குற்றங்களை மூடி மறைக்க ஐ.நா பாதுகாப்பு சபை முயல்கிறது” என்றார்.
இந்நிலையில் டெஹ்ரானில் உள்ள தனது தூதரக ஊழியர்களில் ஒரு பகுதியினரை பிரிட்டன் அரசு துபாய்க்கு அழைத்துச் சென்று விட்டது.பிரிட்டன் வெளிவிவகாரத்துறை அமைச்சர் வில்லியம் ஹாக் வெளியிட்ட அறிக்கையில், தூதரக ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முன்னுரிமையான விடயம் என குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணம் கருதி ஈரானில் உள்ள தனது தூதகரத்தை மூடப் போவதாக நோர்வே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
50 ஆண்டுகளுக்கு பின் மியான்மரில் ஹிலாரி கிளிண்டன்.
கடந்த 50 ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முறையாக அமெரிக்‌காவின் வெளிவிவகாரத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் மியான்மர் நாட்டில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.இது குறித்து சீனாவில் இருந்து வெளிவரும் இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது: அமெரிக்‌காவின் வெளிவிவகாரத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் மூன்று நாள் சுற்றுப்பயணமாக மியான்மர் நாட்டிற்கு சென்றுள்ளார்.
சுற்றுப்பயணத்தின் போது அவர் இருநாடுகளிடையே நல்லுறவை மேம்படுத்துவது அரசி்யல் மற்றும் ‌பொருளாதார மாற்றங்கள் குறித்தும் ஜனாதிபதி தெயின் செயின், வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஊனாமவூங் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் யூகின் ஆகியோரையும் சந்தித்து பேச உள்ளார்.
மேலும் தேசிய ஜனநாயக கட்சி தலைவர் ஆங்சாங் சூயியையும் சந்தித்து பேச உள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்‌கப்பட்டுள்ளது.கடந்த 1955ம் ஆண்டு பெப்ரவரி மாதம் அமெரிக்காவின் ‌வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜான் பாஸ்டர் டல்லஸ் என்பவர் மியான்மர் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் பின்னர் தற்போது தான் ஹிலாரி கிளிண்டன் சுற்றுப்பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லஞ்சம் வாங்கும் நாடுகளின் பட்டியல்: நியூசிலாந்து முதலிடம்.
குறைந்த அளவில் லஞ்சம் வாங்கும் நாடுகள் குறித்த ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது.லஞ்ச ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு உலகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அதிகளவில் லஞ்சம் வாங்கும் நாடுகளில் முதல் நிலையில் இருந்த டென்மார்க் மற்றும் சிங்கப்பூர் ஆகியன தற்போது முறையே 2வது மற்றும் 5வது இடங்களில் உள்ளன.
8வது இடத்தில் அவுஸ்திரேலியாவும், சுவிட்சர்லாந்தும் உள்ளன. டிஐ நிறுவனம், 183 நாடுகளில் லஞ்சம், பயங்கரவாதம் குறித்த 17 ஆய்வுகளை நடத்தியது.குறைந்த அளவு லஞ்சம் வாங்கும் நாடுகளில் நியூசிலாந்திற்கு 9.5 புள்ளிகளும், அவுஸ்திரேலியாவிற்கு 8.8 புள்ளிகளும், வடகொரியா மற்றும் சோமாலியா ஒரு புள்ளிகளும் பெற்றுள்ளன.இந்த பட்டியலில் 3.6 புள்ளிகளுடன் சீனா 75வது இடத்தில் உள்ளது. 8 புள்ளிகளுடன் ஜப்பான் 14வது இடத்தில் உள்ளது.
அறிவியல் ஆராய்ச்சி தொடர்பான செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது சீனா.
அறிவியல் ஆராய்ச்சி மற்றும் நில வளம் தொடர்பான ஆய்வு உட்பட பல்வேறு பணிகளுக்கு உதவக்கூடிய தொலையுணர்வு செயற்கைக்கோளை சீனா நேற்று(30.11.2011) வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் உள்ள தையூவான் விண்வெளி ஆய்வு மைய ஏவுதளத்திலிருந்து லாங் மார்ச் 2சி கேரியர் ராக்கெட் இந்த செயற்கைக்கோளை ஏற்றிச்சென்றது.இந்த செயற்கைகோளை சீன விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைத்தது.இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 25 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த சீனா திட்டமிட்டுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF