Friday, December 23, 2011

இன்றைய செய்திகள்.

ஜனாதிபதி விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளைப் பேணவில்லை – விநாயகமூர்த்தி முரளிதரன்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஒரு போதும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணவில்லை என்று மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தாம் அங்கம் வகித்த காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினர் தொடர்புகளைப் பேணியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் ஜனாதிபதியின் நன்னடத்தையினால் அவருடன் இணைந்து செயற்படத் தீர்மானித்ததாக முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, விநாயகமூர்த்தி முரளிதரனை அரசியல் பிரவாகத்திற்குள் அழைத்துச் சென்றதால் ஏற்படும் நன்மையோ தீமையோ அதனை ஐக்கிய தேசியக் கட்சி பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமென்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.தமது நடவடிக்கைகளினால் முரளிதரன் அரசியலில் கால் பதித்தார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தபோதே பசில் ராஜபக்ச தமது கருத்தை வெளியிட்டார்.

பேஸ் புக் குறித்த முறைப்பாடுகள் அதிகரிப்பு: கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு.
 பேஸ் புக் எனப்படும் முகப்புத்தகம் தொடர்பான முறைப்பாடுகள் இலங்கையில் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.மற்றைய நபர்களின் கணக்குகளில் அநாவசியமாக வெளி நபர்கள் பிரவேசிப்பது குறித்து நாளாந்தம் முறைப்பாடுகள் செய்யப்படுவதாக கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் முகப்புத்தக பகுதி பாதுகாப்பு பொறியியலாளர் ரோஹண பல்லியகுரு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போலியான முகப்புத்தக கணக்குகள் குறித்த முறைப்பாடுகளும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் இதுவரை முகப்புத்தக மோசடி தொடர்பில் 1750 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக  சுட்டிக்காட்டிய அவர், இந்த முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை: அரசாங்கம்.
இலங்கையின் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை (22.12.2011) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குமாறு கூட்டமைப்பினர் கோருவதை வழங்க அரசாங்கம் ஒருபோதும் இணங்காது எனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்தும் போதெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குமாறு கோருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனினும், குறித்த அதிகாரங்களை அரசாங்கம் வழங்க முன்வராது என்பதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்துவது காலத்தை கடத்தும் செயல் என கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கணவரின் விடுதலைக்கு தேவையான அளவு கையொப்பங்கள் திரட்டப்பட்டுள்ளன: அனோமா.
தனது கணவரை விடுதலை செய்வது தொடர்பாக,   சர்வதேச சமூகத்தின் அழுத்தத்துக்கு தேவையான அளவு கையொப்பங்கள் திரட்டப்பட்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இதன்படி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட மகஜரில் 25000 கையொப்பங்கள் ஏற்கனவே திரட்டப்பட்டுள்ளதாகவும் இன்னும் பலர் மகஜரில் கையொப்பம் இட்டுவருவதாகவும் அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் நோக்கில் அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு இணைய மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் இந்த மகஜருக்கு குறைந்த பட்சம் 25000 கையொப்பங்கள் தேவைப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், ஒரு மாத காலத்திற்குள் 25000 கையொப்பங்கள் திரட்டப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டால் அந்த மகஜர் குறித்து நடவடிக்கை எடுக்கும் என அமெரிக்கா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோத்தபாய மீது போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்திய முன்னாள் இராணுவ உயரதிகாரி குறித்து விசாரணை.
இலங்கைக்கு எதிராக அதாவது பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மீது போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்திய முன்னாள் இராணுவ உயரதிகாரி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு;ள்ளன.மேஜர் ஜெனரல் தரத்தில் பதவி வகித்த குறித்த இராணுவ அதிகாரி சத்தியக் கடதாசி ஒன்றின் மூலம் இலங்கைப் படையினர் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக வெளிநாட்டில் பிரசாரம் செய்துள்ளார்.
இந்தநிலையில் குறித்த அதிகாரிக்கு அமெரிக்கா புகலிடம் வழங்கியுள்ளது.எனினும், 58ம் படைப் பிரிவைச் சேர்ந்த எந்தவொரு உயரதிகாரியும் அமெரிக்காவிற்கு தப்பிச் செல்லவில்லை என்று ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
போர் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் போலி இராணுவ உத்தியோகத்தர்கள் தோன்றி பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.இவ்வாறு குற்றம் சுமத்தும் எவரும் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை எனவும் இதனால் இந்தக் குற்றச்சாட்டுக்களின் நம்பகத்தன்மை இல்லாது போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த அதிகாரி அமெரிக்காவில் இருந்துகொண்டு லண்டனில் இருந்து வெளிவரும் த ரெலிகிராப் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் முள்ளிவாய்க்காலில் சரணடைய வந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை கோத்தபாயவின் உத்தரவின் பேரிலேயே படையினர் சுட்டுக்கொன்றதாக  தகவல் வெளியிட்டிருந்தார்.
துமிந்த மீதான துப்பாக்கி வேட்டுகள்: வெளியானது எக்ரே படங்கள்.
முல்லேரியா சூட்டுச் சம்பவத்தில் போது தலையில் சூடுபட்டு பாரிய காயங்களுக்கு உள்ளான நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வாவிற்கு ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய சத்திர சிகிச்சைகளை காட்டும் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.நாடாளுமன்ற உறுப்பினரது தலையில் பாரிய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், தலையில் பட்ட துப்பாக்கி சூட்டின் காரணமாக ரவைகள் நுள்நுழைவது மற்றும் வெளிவருவதாக எக்ரே படங்களும் இதில் அடங்கும்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் துமிந்த சில்வாவிற்கு துப்பாகி வெடி விழுந்தது எவ்வாறு? மற்றும் அவருக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டது யார் என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதி நீதவான் பிரசன்ன டி அல்விஸ் இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார். ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமாந்த வர்ணகுலசூரிய, ஆர் துமிந்த சில்வாவிற்கு ஏற்பட்ட காயங்களை காட்டும் 19 ஸ்கேன் படங்களையும் நீதிமன்றில் சமர்ப்பித்தார்.
இவற்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வாவினது மண்டை ஓட்டில் துப்பாக்கி ரவை உள்நுழைந்திருப்பது மற்றும் வெளியேறியிருப்பது தொடர்பில் அந்த படங்களில் காட்டப்பட்டுள்ளன.இந்த துப்பாக்கி பிரயோகமானது 10 லிருந்து 30 சென்ரி மீட்டர் தூரத்தில் இருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
படையினர் மலசலகூடம் துப்புரவு செய்யும் பணிகளில்...!- போர் முடிந்த பின்னர் 60 ஆயிரம் பேர் தப்பியோட்டம்.
நாட்டில் யுத்தம் முடிந்த பின்னரும் 60,000 படைச் சிப்பாய்கள் தப்பி ஓடியுள்ளனர். தங்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் அவமானங்களை சகித்துக்கொள்ள முடியாமலே அவர்கள் ஓடுகின்றனர்.நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய படைச் சிப்பாய்கள் இன்று மலசலகூடம், வாய்க்கால்கள் துப்பரவு செய்யவும், புல்லு நடவும், பாதை வெட்டவும் கூலிகளாக மாற்றப்பட்டுள்ளனர்.
இது படையினருக்கு ஏற்பட்டுள்ள மாபெரும் அவமானமாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார்.பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஓதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்த அரசின் இணையத்தளம் ஒன்றில் 1952 ஆம் ஆண்டு தொடக்கம் இறுதி யுத்தம் வரைக்கும் கடைமையாற்றிய இராணுவத் தளபதிகளின் பெயர் பட்டியல் வரிசைப்படி வெளியிடப்பட்டுள்ளன.ஆனால், நாட்டை பயங்கரவாத பிடியில் இருந்து மீட்டெடுக்க அர்ப்பணிப்புடன் செயலாற்றி புலிகளை முற்றாகஒழித்துக் கட்டிய சிறந்த தளபதி என்று ஜனாதிபதியாலேயே பாராட்டப்பட்ட மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பெயர் அந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.
ஒரு படைத்தளபதி இன்றியா நீங்கள் பயங்கரவாதத்தை ஒழித்தீர்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்.முன்பு கிராமப்பறங்களிலிருந்து பொலிஸ் மற்றும் முப்படைகளிலும் கடைமையாற்றச் சென்றவர்கள் தமது கிராமங்களுக்குச் செல்லும் போது அந்தக் கிராமமே திரண்டு மேடை அமைத்து மலர் மாலை அணிந்து வரவேற்றது.ஆனால் இப்பொழுது யுத்தத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு திரும்பிய படையினர் வயல்வெட்டவும், பாதை போடவும், குப்பை அகற்றவும், மலசலகூடம் துப்பரவு செய்யவும், புல்லு நடவும் கூலிகளாக அமர்த்தப்பட்டுள்ளனர்.
யுத்தம் நடந்தபோது தப்பி ஓடியவர்கள் உயிருக்கு பயந்து ஓடினார்கள். ஆனால் இப்போது அவமானம் தாங்க முடியாமல் தப்பி ஓடுகின்றனர்.யாழ்ப்பாணத்தில் கடைமையாற்றும் படையினருக்கு குளிக்கக் கூட தண்ணீர் இல்லை. அடிப்படை வசதிகள் கூட இல்லை. நாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீரழிந்துவிட்டன. என்றார்.
கூட்டமைப்பு விடுதலைப் புலிகளை விட மோசம்!- பசில் ராஜபக்ஸ.
தமிழீழ விடுதலைப் புலிகளை விட தமிழ் தேசிய கூட்டமைப்பு மோசமாக நடந்து கொள்கிறது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.நேற்று புதன்கிழமை(21.12.2011) நாடாளுமன்ற கட்டடத்தில் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்துக் கலந்துரையாடிய போதே பசில் ராஜபக்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்ல என்பதை கடந்த காலங்களில் நடந்த தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்ற போதிலும், தம்முடன் மட்டுமே பேச்சுக்களை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற தவறான மனப்போக்கில்  கூட்டமைப்பு செயற்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
விடுதலைப் புலிகள் சிலவேளைகளில் விரும்பியோ விரும்பாமலோ போர் நடந்து கொண்டிருந்த போது, அரசாங்கத் தரப்புடன் வெளிநாடுகளில் பேச்சுக்களை நடத்த முன்வந்தனர். அத்துடன் போர் நிறுத்த உடன்பாடிக்கைகளைச் செய்து கொண்டு, திடீரெனப் போரை பிரகடனம் செய்யும் தந்திரங்களையும் கையாண்டனர் என குறிப்பட்டுள்ளார்.

முன்னர், தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாங்களே என்ற ஆணவத்துடன் விடுதலைப் புலிகள் செயற்பட்டதாக பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கம் நியமிக்கவுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்கு கொள்வது அவசியம். ஆனால் கூட்டமைப்புடன் மட்டும் பேசி இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

தெரிவுக்குழுவில் உள்ள சகல கட்சிகளுடனும் பேசி அவற்றின் இணக்கப்பாட்டுடன் ஒரு தீர்வை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலமே, சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என  பசில் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
ரவூப் ஹக்கீம், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் தமது மக்களின் நலனுக்காக இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுவது போன்று, அதே வழியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும், ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து சென்ற ஒரு பிரிவினர் வடக்கில் சட்டபூர்வமான அரசியல் செய்வதை போன்று தெற்கிலுள்ள ஏனைய கட்சிகளும் வடக்கில் அரசியலில் ஈடுபடுவது இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு உதவியாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.
மோசடியில் ஈடுபட்ட 15 மாணவர்களுக்கு பரீட்சை எழுத தடை: அநுர எதிரிசிங்க.
2011ஆம்ஆண்டிற்கான க.பொ.த. சாதாரணத் தரப் பரீட்சைகளின்போது பரீட்சை மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்பட்ட 15 மாணவர்களுக்கு பரீட்சை எழுதுவதற்கு தடை விதிக்கப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பரீட்சை கண்காணிப்பாளர்கள் நால்வர் மற்றும் பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிகள் நால்வர் ஆகியோருக்கு பரீட்சை கடமைகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.இவ்வருட க.பொ.த. சாதாரணத்தரப் பரீட்சைகள் நேற்று புதன்கிழமை (21.12.2011)முடிவுற்றமை குறிப்பிடத்தக்கது.
தகவல் தொடர்பு செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது சீனா.
நைஜீரியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சீனாவின் ஜிசாங் விண்வெளி தளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணுக்குச் செலுத்தப்பட்டது.இது இன்னும் 15 ஆண்டுகள் இயங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் நைஜீரியாவின் பாதிப்படைந்த தகவல் தொடர்பு செயற்கைக்கோள்-1க்குப் பதிலாக அனுப்பப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த ஆண்டில் மட்டும் 4 சர்வதேச தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை விண்ணுக்குச் செலுத்தி சீனா சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதுவரை வர்த்தக ரீதியில் சுமார் 33 சர்வதேச செயற்கைக்கோள்களை சீனா விண்ணில் செலுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ஒபாமாவுக்கு செல்வாக்கு அதிகரிப்பு: கருத்துக் கணிப்பில் தகவல்.
சமீபகாலமாக அமெரிக்க மக்கள் மத்தியில் ஜனாதிபதி ஒபாமாவுக்கு செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும், இதனால் அவர் மீண்டும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் 2012ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாக பராக் ஒபாமா மீண்டும் போட்டியிடவுள்ளார். குடியரசுக் கட்சி வேட்பாளர் குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.இருப்பினும் அக்கட்சி சார்பில் மித் ராம்னே, நெவ்ட் கிங்ரிச், ரிக் பெரி, ரான் பால், மிஷேல் பாச்மான் ஆகிய 5 பேரில் ஒருவரை தான் வேட்பாளராக தெரிவு செய்யும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளவர்களுக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு குறித்து சிஎன்என்/ஓஆர்சி என்ற நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தியது. இதில் கடந்த சில மாதங்களில் அமெரிக்க மக்கள் மத்தியில் ஒபாமாவின் செல்வாக்கு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.ஒபாமா மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு ஆதரவு தெரிவித்து 52 சதவீதம் பேரும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மித் ராம்னேவை ஆதரித்து 45 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். குடியரசுக் கட்சியை சேர்ந்த மற்றவர்கள் இதைவிட குறைவான வாக்குகளையே பெற்றுள்ளனர்.
இதுகுறித்து சிஎன்என் நிறுவனத்தின் இயக்குநர் ஹீட்டிங் கூறுகையில், பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் ஆகியோர் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் ஒபாமா அளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற்றிருந்தனர். அதைப்போல அவர்கள் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றனர்.
ஜார்ஜ் புஷ்சின் தந்தையாரும் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னதாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் அதிக செல்வாக்கைப் பெற்றிருந்தார். ஆனால் அவரால் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. இதனால் கருத்துக் கணிப்பை வைத்து தேர்தல் முடிவை தீர்மானித்திட முடியாது என்றார்.இந்தக் கருத்துக் கணிப்பு குறித்து கருத்து வெளியிட்ட வெள்ளை மாளிகை ஊடகச் செயலர் ஜே கார்னி கூறுகையில், தலைவர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிப்பதும், குறைவதும் இயற்கையான ஒன்று. இதனால் அதைப்பற்றி ஒபாமா கவலைப்படவில்லை. இப்போது நாடு சந்தித்து வரும் பொருளாதார சிக்கலை தீர்ப்பதில்தான் அவர் முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறார் என்றார்.
இந்திய மாணவர் கொலை: அவுஸ்திரேலிய சிறுவனுக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு.
இந்தியாவை சேர்ந்த நிதின் கார்க் அவுஸ்திரேலியாவில் படித்து வந்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி மெல்பர்னில் உள்ள உணவு விடுதியில் சாப்பிட்டு விட்டு வெளியில் வந்தார்.
அப்போது 15 வயது சிறுவன் ஒருவன் கத்தியால் நிதினை சரமாரியாக குத்தி கொலை செய்தான். அவரிடம் இருந்த கைபேசி மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்றான்.அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை இந்தியா கடுமையாக கண்டித்தது. அத்துடன் அவுஸ்திரேலியாவில் சிறுபான்மை இன மக்கள் மீது நிறவெறி தாக்குதல் நடத்தப்படுகிறது என்ற அச்சம் சர்வதேச அளவில் எழுந்தது.
இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவும் அவுஸ்திரேலிய அரசை இந்திய அரசு வலியுறுத்தியது.இந்நிலையில் நிதினை கொன்ற சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு மெல்பர்ன் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிறுவனுக்கு 13 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்..
டாபியின் சதியில் சிக்கிய கனடா பெண்ணுக்கு காவல் நீட்டிப்பு.
கடாபியின் மகன் லிபியாவிலிருந்து திருட்டுத்தனமாக மெக்சிகோ வருவதற்கு உதவி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த 40 வயது கனடா பெண் சிந்தியா வேனியருக்கு காவல் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 10ம் திகதி முதல் சிந்தியா மெக்சிகோவில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.கனடா வெளிவிவகாரத் துறை அமைச்சரின் செய்தித் தொடர்பாளரான ஜான் பேப்காக், கனடா அரசாங்கம் சிந்தியாவின் காவல் பற்றி அறிந்திருப்பதாகவும், தமது தூதரகம் மூலமாகத் தேவையான உதவிகள் செய்து வருவதாகவும் கூறினார்.
மேலும் தூதரக அதிகாரிகள் மெக்சிகோவின் காவலதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், நிலைமையை கூர்ந்து கவனித்து வருவதாகவும் கூறினார்.மெக்சிகோவின் உள்துறை அமைச்சர் சிந்தியா வேனியர், இரண்டு மெக்சிகோ நபர் மற்றும் ஒரு வெளிநாட்டவரோடு இணைந்து கடாபியின் மகனை மெக்ஸிகோ அழைத்துவர சதி செய்ததாகத் தெரிவித்தார். இந்நால்வரும் தற்பொழுது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொது இடங்களில் கொடூரமாக நடந்து கொள்ளும் சிறுவர்கள்.
ஜேர்மன் நாட்டில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை 18 வயது மற்றும் 13 வயதுடைய சிறுவர்கள் இருவர் அடித்து துன்புறுத்தி கொலை செய்தனர்.பொது இடத்தில் நடந்த இக்கொலைச் சம்பவம் குறித்து பெர்லின் நகர மக்கள் தங்களது பாதுகாப்பு குறித்து அச்சமும், ஆத்திரமும் கொண்டனர்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் லிக்டென்பெர்க் யூ பான் ரயில் நிலையத்திற்கு அருகில் இரண்டு நபர்களை சிறுவர்கள் அடித்தனர். அதில் ஒருவர் தலைக்காயத்தால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை பெர்லின் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போது இவர்கள் புலம் பெயர்ந்தோர் என்றும் ஜேர்மானியர் மீது வெறுப்புக் கொண்டவர்கள் என்பதும் தெரியவந்தது.நாஜிப் படையைச் சேர்ந்த ஒருவரால் இவர்கள் தூண்டப்பெற்று இக்கொலையை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆர்மீனியப் படுகொலையை நியாயப்படுத்தாதே: பிரான்சுக்கு துருக்கி எச்சரிக்கை.
முதலாம் உலகப் போரில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆர்மீனியரைக் கொன்று குவித்தனர். இந்த கொலைகளில் தவறேதுமில்லை என்ற மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேறவுள்ளது.ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் வேளையில் இம்மசோதா அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.
ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் ஆர்மீனியப் படுகொலை பற்றிய பிரச்னை அரசியலாக்கப்படுவதுண்டு. இந்த முறையும் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ள பிரெஞ்சு அரசாங்கத்தை எதிர்த்து துருக்கி கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.இந்த மசோதாவால் அரசியல் மற்றும் பொருளியல் ரீதியான பாதிப்புகளை பிரான்ஸ் சந்திக்க வேண்டி வரும் என்று எச்சரித்தது.
துருக்கி நாட்டைச் சேர்ந்த சட்டத்தரனிகளும், தொழிலதிபர்களும் பாரிசுக்கு வந்த அரசு அதிகாரிகளைச் சந்தித்து துருக்கி ஜனாதிபதி அப்துல்லா குல் இந்த மசோதாவை நிறைவேற்ற எதிர்ப்புத் தெரிவித்ததை எடுத்துக் கூறினர்.எங்கள் நாட்டையும், மக்களையும் குற்றவாளிகளாக்கும் இந்த மசோதாவை நாங்கள் அனுமதிக்க முடியாது என்று துருக்கி ஜனாதிபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். துருக்கிக்கும், பிரான்சுக்கும் பல நூற்றாண்டுகளாக இருக்கும் நட்பை இழக்க பிரான்ஸ் தயாராக இருக்காது என்றார் குல்.
துருக்கியின் வர்த்தகர்கள் சார்பாக பிரான்ஸ் வந்திருந்த ரிபாத் ஹிசார்சை, இந்த மசோதாவால் இரண்டு நாடுகளுக்கும் பெருத்த சேதமும் மோசமான பின்விளைவுகளும் ஏற்படும் என்றார்.துருக்கி இப்போது பிரான்சின் முக்கியப் பொருளாதாரப் பங்குதாரராக இருக்கிறது. இரண்டு நாடுகளுக்கும் இடையே கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து சுமார் 12 பில்லியன் யூரோ அளவிற்கு தொழில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் துருக்கி இந்த மசோதாவை எதிர்த்து கடும் நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
என்னை பதவியில் இருந்து அகற்ற சதி நடக்கிறது: பிரதமர் கிலானி.
பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி, தன்னை பதவியில் இருந்து அகற்ற சதி நடக்கிறது என அச்சம் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானில் இராணுவத்தை அகற்ற அமெரிக்காவின் உதவியைக் கேட்டு அந்நாட்டின் ஜனாதிபதி ஸர்தாரியின் உதவியுடன் தான் ரகசியக் கடிதம் எழுதப்பட்டதா என்பது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து உச்சநீதிமன்றம் முடிவு செய்யவுள்ளது. இந்த நிலையில் கிலானி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க சதிகாரக்கள் முயற்சி செய்து வருகின்றனர் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் என தேசிய கலைக் களஞ்சியத்தியத்தில் யார் பெயரையும் குறிப்பிடாமல் கிலானி தெரிவித்தார்.அரசில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாகிஸ்தான் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து நாங்கள் போராடுவோம் என கிலானி தெரிவித்தார்.
எல்லைப்பகுதியில் கோவில் சர்ச்சை: சமரசம் செய்து கொள்ள தாய்லாந்து - கம்போடியா முடிவு.
எல்லைப்பகுதியில் சர்ச்சைக்குள்ளான இந்து ‌கோயிலை உரிமை கொண்டாடும் விவகாரம் குறித்து தாய்லாந்து, கம்போடியா ஆகிய இருநாடுகளும் சமரசம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளன.தாய்லாந்து - கம்போடியா எல்லையில் போனோபென் நகரில் பரேக்விஹீர் என்ற பகுதியில் மிகவும் பழமையான சிவன் கோவில் உள்ளது.
இக்கோயிலை கடந்த 2008ம் ஆண்டு உலக கலாச்சார சின்னமாக ஐ.நா.வின் யுனெஸ்கோ அறிவித்தது. அன்றிலிருந்து பிரச்னை உருவானது.தாய்லாந்தும்,கம்போடியாவும் சிவன் கோவில் தங்களுக்கு தான் சொந்தம் என உரிமை கொண்டாடின. இதனால் இருநாடுகளிடையே போர் ஏற்பட்டது, கடந்த 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சண்டையில் 8 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து நடந்த சண்டையினால் 10 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்தனர்.
இந்த விவகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்(ஐ.சி.சி) வரை சென்றது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் இரு தரப்பினரும் தங்களது இராணுவத்தினை விலக்கி கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது.இந்நிலையில் இரு நாடுகள் சமரசம் செய்து கொள்ள முன்வந்துள்ளன. அதன்படி இரு நாட்டு இராணுவ அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தாய்லாந்து இராணுவ அமைச்சர் யூதாஸாக் சசிபரேபா, கம்போடியா இராணுவ அமைச்சர் டீபன்னாக் ஆகியோர் போனோபென் நகரில் சந்தித்து பேசினர்.
அப்போது இந்தோனோஷியா மத்தியஸ்தர் முன்னிலையில் சமரச ஒப்பந்தம் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடந்தது. இதில் இரு தரப்பிலும் இராணுவத்தினை விலக்கி கொள்வது, இருநாட்டு இராணுவ உயரதிகாரிகளை ‌கொண்ட செயல்குழுவை அமைப்பது எனவும் கம்போடியாவிற்கு சொந்தமான பகுதிகளில் உள்ள கலாச்சார ‌கோவில்கள் எதனையும் தாய்லாந்து உரிமை கொண்டாடாது எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. முன்னர் இருந்த நிலைமை தொடரும் எனவும் ஒப்பந்தம் ஏற்பட்டது.
புகுஷிமா அணு உலையை சரி செய்ய 40 ஆண்டுகள் தேவைப்படும்: அமைச்சர் தகவல்.
ஜப்பானின் புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய இன்னும் 40 ஆண்டுகளும், சுமார் ரூ.78,400 கோடியும்(இந்திய ரூபாய்) தேவைப்படும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.இதுகுறித்து அமைச்சர் கோஷி ஹோசனே கூறுகையில், இந்த அணு உலையில் சிக்கியுள்ள கதிரியக்கக் குணம் கொண்ட எரிபொருளை சுற்றுப்புறத்துக்கு ஆபத்து இல்லாமல் எப்படி அப்புறப்படுத்துவது என்பதற்கான வழிகளை இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
உலையிலிருந்து எரி கலத்தின் அடிப்புறத்துக்குச் சென்றுவிட்ட எரிபொருளை வெளியே கொண்டு வருவதற்கான முன் ஏற்பாடுகளைச் செய்யவே 10 ஆண்டுகள் பிடிக்கும். அதைச் செய்வதற்கும் இயந்திர மனிதர்களை இனிமேல்தான் தயாரிக்க வேண்டும்.புகுஷிமா அணு உலையால் ஏற்பட்ட கதிரியக்க ஆபத்து 40 ஆண்டுகளுக்குப் பிறகும் மறைந்துவிடாது. ரூ.78,400 கோடி எரிபொருளை வெளியே எடுக்க மட்டும்தான். பிற செலவுகளும் காத்திருக்கின்றன என தெரிவித்தார்.
பாக்தாத்தில் தொடர் குண்டுவெடிப்பு: 49 பேர் பலி.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று(22.12.2011) காலை நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 49 பேர் கொல்லப்பட்டனர், 167க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.இதுகுறித்து ஈராக் சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜியாத் தாரிக் கூறுகையில், இன்று காலை பாக்தாத் நகரம் முழுவதும் 12 இடங்களில் தொடர்ந்து குண்டுகள் வெடித்தது.
இந்த வன்முறை சம்பவங்கள் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் வெடிபொருட்கள் நிரம்பிய கார்கள் மூலம் நிகழ்த்தப்பட்டுள்ளது.மேலும் ஈராக்கிலுள்ள சன்னி தரப்பு மற்றும் ஷியா தரப்பு முஸ்லிம்களுக்கு இடையேயான அரசியல் நெருக்கடி தான், இந்த மோசமான வன்முறை செயல்களுக்கு காரணமாகும் என கருதப்படுகிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF