Sunday, December 4, 2011

இன்றைய செய்திகள்.

ரயில்மோதி ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
குருணாகல் வெல்லாவ பகுதியில் முச்சக்கர வண்டியொன்று ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை (50 வயது), மகன் (12 வயது), மகள் (7 வயது) என மூவரும் உயிரிழந்துள்ளதாக வெல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக வகுப்பிற்காக தந்தையுடன் பிள்ளைகள் முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த வேளையில்  குருணாகல் வெல்லவ பகுதியில் வரத்தன ரயில் கடவையில் ஏற்பட்ட விபத்திலேயெ இவர்கள் உயிரிழந்துள்ளனர்.
சரத் பொன்சேகா குடும்பத்தினர் மனு கையளிக்க விரும்பினால் அமெரிக்கா செல்லாமல் ஜனாதிபதியிடம் கையளிக்கலாம்!- பேச்சாளர் பந்துல ஜெயசேகர.
சிறையில் உள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் குடும்பத்தினர் வெள்ளை மாளிகையிடம் விண்ணப்பிக்காமல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஜனாதிபதியின் பேச்சாளர் பந்துல ஜெயசேகர தெ ஹிந்து செய்தித்தாளுக்கு தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவின் மனைவி அனோமாவும் அவருடைய மகள்மாரும் சரத் பொன்சேகா தொடர்பில் அமெரிக்காவிடம் மனு ஒன்றை கையளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தயாராவதாக தமக்கு அறியக்கிடைத்ததாக பந்துல ஜெயசேகர குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் நியூயோர்க்கில் உள்ள அமெரிக்க ஜனாதிபதியின் வாசஸ்தலத்துக்கு செல்லாமல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் நேரடியாக தமது விண்ணப்பத்தை மேற்கொள்ளலாம் என்று பந்துல சுட்டிக்காட்டியுள்ளார். 
ஜனாதிபதி நிச்சயமாக அவர்களின் கோரிக்கையை கருணையுடன் பரிசீலிப்பார் என்று குறிப்பிட்டுள்ள பந்துல ஜெயசேகர, கொழும்பு 3 இல் இலங்கை ஜனாதிபதியின் வாசஸ்தலம் அமைந்துள்ளது. எனினும், அமெரிக்க ஜனாதிபதியின் வாசஸ்தலம் பல மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.  
ஜனாதிபதியை இன்று உலக தலைவர்கள் மத்தியில் மிகவும் எளிமையானவராக திகழ்கிறார். ஆனால், எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் வெளிநாடுகளுக்கு ஓடிக்கொண்டிருப்பதாக பந்துல ஜெயசேகர குற்றம் சுமத்தினார். 
சரத் பொன்சேகாவின் நெருங்கிய உறவினர் இறந்தபோது அதில் பங்கேற்பதற்கு சரத் பொன்சேகாவுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதி அனுமதியளித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு பங்கு சந்தை சரிவுக்குள்ளாகும் அபாயம்.
கொழும்பு பங்குசந்தை பங்களாதேஷ் பங்குசந்தையை போன்று சரிவு நிலைக்கு உள்ளாகும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமையன்று (01.12.2011) கொழும்பு பங்குசந்தையின் தலைவராக பணியாற்றிய இந்திராணி சுகததாஸ பதவிவிலகிய நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களாக கொழும்பு பங்குசந்தை அரசியல் அதிகாரம் மிக்கவர்களின் ஆதிக்கத்தில் இருந்து வருகிறது. இதன்காரணமாக கொழும்பு பங்குசந்தை தொடர்ந்தும் சரிவுநிலையை எதிர்நோக்கி வருகிறதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்த கொழும்பு பங்கு சந்தையின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையுடன் கடலுக்கு அடியிலான மின்சார பரிமாற்றுத்திட்டத்திற்கு இந்தியா அழுத்தம்.
கடலுக்கடியிலான மின்சார பரிமாற்றத்திட்டம் தொடர்பில் இந்தியா, இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆரம்ப ஆய்வு அறிக்கைகளையும் இந்தியா இலங்கையிடம் வழங்கியுள்ளதாகவும்  எனினும் இந்த திட்டத்தை அமுல்செய்வதில் சில தொழில்நுட்ப பிரச்சினைகள் உள்ளதாக இலங்கையின் மின்சாரத்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
2014 ஆம் ஆண்டளவிலேயே கடலுக்கு அடியிலான இந்த திட்டத்தை அமுல்செய்யக்கூடியதாக இருக்கும். எனினும் இந்தியாவின் அனல் மின்சாரத்திட்டம் சம்பூரில் பூர்த்தியடையுமாக இருந்தால் அதன்மூலம் தேவையான மின்சார அலகுகளை பெறக்கூடியதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். 
எனவே, கடலுக்கு அடியிலான மின்சார பரிமாற்றத்திட்டதுக்கு அதிகளவு செலவுகளை மேற்கொள்ளவேண்டியிருக்கும் என்று இலங்கை அரசாங்கம் அச்சம் கொண்டிருப்பதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 
எதிர்காலத்தில் இந்தியா சேது சமுத்திர திட்டத்தை முன்னெடுத்தால் இந்த திட்டம் இன்னும் இலங்கைக்கு பாதகங்களை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மீண்டும் முறுகல்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தொடர்பில் மீண்டும் முறுகல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸ, மீண்டும் ஒருமுறை மற்றும் ஒரு பிரதித்தலைவரான கரு ஜெயசூரியவை கட்சியின் தலைமைக்கு போட்டியிடுமாறு கோரியுள்ளமையை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கட்சியின் பிரச்சினைகளை களைவதற்காக இந்த முனைப்பு அவசியமானது என்று சஜித் பிரேமதாஸ நேற்று கரு ஜெயசூரியவுக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே இவ்வாறான ஒரு அழைப்புக் காரணமாக கட்சிக்குள் பாரிய பிரச்சினை ஏற்பட்டதுடன் கரு ஜெயசூரியவுக்கும் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான உறவிலும் விரிசல் ஏற்பட்டது.
இதன் காரணமாக கடந்த ஒரு மாதக்காலத்துக்கு முன்னர் இங்கிலாந்து சென்ற போது ரணில் விக்கிரமசிங்க பதில் தலைவர் பதவியை எவருக்கும் வழங்காமல் பதில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்கவுக்கு வழங்கிச்சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கட்சித்தலைவர் பதவிக்காக தாம் போட்டியிடப் போவதாக ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை கட்சியின் முக்கியஸ்தர்களுடன் கலந்தாலோசனை ஒன்றும் நடத்தப்படவுள்ளது.
மஹிந்த நல்லவர்! ஆயினும் அவரது குடும்பத்தினர் இனவாதிகள்! - மங்கள சமரவீர.
இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச மிகவும் மோசமானவர் அல்ல! எனினும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இனவாத கருத்துக்களினால் அவரைச் சிறைபிடித்துள்ளனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.இனப்பிரச்சினைக்கு ராஜபக்ச அரசாங்கம் தீர்வு வழங்கும் என்பதில் நம்பிக்கையில்லை என்றும், அவர்  தெரிவித்துள்ளார்.
இதனை விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்கத் தூதுவர் புட்டினீஸ்சுக்கும் மங்கள சமரவீரவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு குறித்த விடயங்கள் அடக்கி இந்த தகவல் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அரச அதிபர் மஹிந்த ராஜபக்ச மிகவும் மோசமானவர் அல்ல. எனினும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இனவாத கருத்துக்களினால் அவரை சிறைபிடித்துள்ளனர் என்று மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஜனாதிபதி தேர்தல் பிரசாரப் பணிகள் குறித்தும் மங்கள கருத்து வெளியிட்டுள்ளார்.ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா வெற்றியீட்டினால் ஆட்சி நிர்வாகப் பொறுப்புக்களை ஏற்க மாட்டார் என்று அவர், அமெரிக்கத் தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.
மகிந்தவுக்காக 1480 மில்லியன் ரூபா பெறுமதியான உலங்குவானூர்திகள்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட மிகமுக்கிய பிரமுகர்களின் பயணங்களுக்காகப் பயனபடுத்துவதற்கு சிறிலங்கா விமானப்படை கொள்வனவு செய்துள்ள பெல்-412 உலங்குவானூர்திகள் இரண்டினதும் பெறுமதி சுமார் 1480 மில்லியன் ரூபா என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்காவின் பெல் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட பெல்-412 உலங்குவானூர்திகள் ஒவ்வொன்றினதும் பெறுமதி 6.7 மில்லியன் டொலர்களாகும்.சிறிலங்கா நாணய மதிப்பில் இது சுமார் 740 மில்லியன் ரூபாவாகும்.


இதன்படி இரண்டு பெல்-412 உலங்குவானூர்திகளுக்காகவும் 1480 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை சிறிலங்கா விமானப்படை செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.சிறிலங்கா விமானப்படை ஏற்கனவே ஆறு பெல்- 412 உலங்குவானூர்திகளைப் பயன்படுத்தி வருகின்றது.


அமெரிக்காவில் வைத்து நேற்று கையளிக்கப்பட்ட இரண்டு பெல்-412 உலங்குவானூர்திகளும் சிறப்பு சரக்கு விமானம் ஒன்றின் மூலம் விரைவில் சிறிலங்காவுக்குக் கொண்டு வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதனிடையே, 2010ம் ஆண்டு ரஸ்ய கடன் திட்டத்தின் கீழ் பெறப்படும், எம்.ஐ 171 ரகத்தைச் சேர்ந்த 14 உலங்குவானூர்திகள் விரைவில் கிடைக்கும் என்று சிறிலங்கா விமானப்படை எதிர்பார்த்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
காதலியுடன் தகராறு: தன்னைத் தானே கழுத்தை அறுத்து கொண்டு நபர் தற்கொலை.
வர்த்தக விடயமாக இந்தியா சென்ற இங்கிலாந்து நபர் ஒருவர் தன்னை தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தகொடூரகாட்சியைலண்டனில் இருந்தஅவரது தோழி இணையம் மூலம் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இங்கிலாந்தின் பெர்க்ஷைரில் உள்ள உட்லே பகுதியில் வசித்தவர் அட்ரியன் ரோலேண்ட்(53). இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். உட்லேவில் உள்ள பொறியியல் நிறுவனத்தில் பணியாற்றினார்.
வர்த்தக விடயமாக இந்தியா சென்றார். அதே நிறுவனத்தில் ஜூலி ஜலின்ஸ்கி என்பவரும் பணியாற்றுகிறார். இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் உள்ள அட்ரியனுடன் இணையத்தில் பேசிக் கொண்டிருந்தார் ஜூலி. திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இருவரும் சேர்ந்து வாழ்வது குறித்து இருவரும் இணையம் மூலம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அட்ரியன் கத்தியை எடுத்து திடீரென தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டார்.
ரத்தம் பீறிட்டு வெளியேற துடிதுடித்து அவர் இறந்தார். இந்த காட்சிகளை வெப் கமெரா மூலம் ஜூலி பார்த்து அலறினார். உடனடியாக இங்கிலாந்தின் அவசர உதவி எண் 999க்கும் உள்ளூர் பொலிசுக்கும் தகவல் தெரிவித்தார். அவர்கள் உடனடியாக தூதரக அதிகாரிகள் மூலம் இந்திய அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.ஆனால் அட்ரியன் இந்தியாவில் எங்கு தங்கியுள்ளார் என்ற விபரம் தெரியவில்லை. அட்ரியன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சடலத்தை இங்கிலாந்து கொண்டு வரும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவல் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆண்களை விட அதிகமாக பணம் சேமிக்கும் பெண்கள்.
இங்கிலாந்தின் ஆண்களை விடக் குறைவாகச் சம்பாதித்தாலும் அதிகமாகச் சேமிப்பவர்கள் பெண்களே என்று ஹேலிஃபாக்ஸ் சேமிப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.பெண்கள் தங்கள் வருமானத்தில் 40 சதவீதம் சேமிக்கிறார்கள், ஆண்கள் 23 சதவீதம் மட்டுமே சேமிக்கின்றனர். இங்கிலாந்தின் வடபகுதியிலும், ஸ்காட்லாந்திலும் வாழும் ஆண்கள் மட்டும் அதிகமாகச் சேமிக்கின்றனர் என்று இந்த ஹேலிஃபாக்ஸ் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
பெண்களுக்கு இரண்டு வழிகளில் சேமிப்பை உயர்த்துகின்றனர், ஒன்று பணக்காரத் துணைவர்கள், வரி ஏய்ப்புக்காக தங்கள் பணத்தை பெண்களின் வங்கிக் கணக்குக்கு மாற்றிவிடுகின்றனர். இரண்டாவது வயதான கணவர்கள் இறந்த பிறகு அவர்களின் நிதி இருப்பு மனைவிமார் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இந்தக் காரணங்களால் பெண்களின் வங்கிக் கணக்கில் வைப்புநிதி உயர்கிறது. இங்கிலாந்தின் தென்பகுதியில், தென் கிழக்கு மற்றும் தென்மேற்கில், கிழக்கு ஆங்கிலியாவில் அப்பகுதியின் மொத்த ஆண்டு வருமானத்தில் 29 சதவீதம் அல்லது 8,734 பவுண்டு வங்கியிருப்பில் வைக்கப்படுகிறது.
ஹேம்பிள்ட்டன் மற்றும் வடக்கு யார்ஷயரில் உள்ளவர்கள் தம் சராசரி வருமானத்தில் 58 சதவீதம் அதாவது 11,316 பவுண்டு மிச்சப்படுத்துகின்றனர். கியும்பிரியா மாவட்டத்தில் ஏடென், டோர்செட் மாவட்டத்தில் கிரைஸ்ட் சர்ச், சுஃபோல்க் மாவட்டத்தில் வடஃபோங்க் மற்றும் வேவனீ நகரங்களில் வருமானத்தில் பாதிப்பணத்தை சேமிப்பாக வைத்திருக்கின்றனர்.
இந்தப் பகுதியில் வாழ்பவர்கள் பெரும்பாலும் பணி ஓய்வு பெற்றவர்கள் என்பதால் சேமிப்பு உயர்ந்து செலவு குறைகிறது. இதற்கு நேர்மாறாக, இலண்டனில் வடபகுதியில் உள்ள இஸ்லிங்ட்டன் என்ற நகரத்தில் இளைஞர்கள் 7,133 பவுண்டு சேமிக்கின்றனர்.
தேசிய சராசரியில் இத்தொகை சிறிதளவே குறைந்துள்ளது எனினும் சராசரி உள்நாட்டு வருமானத்தில் 12 சதவீதத்திற்கு நிகரானதாகும். சேமிப்பு குறைந்த மாவட்டங்கள் ஒன்பதில் மிக மிகக் குறைந்த அளவைக் காட்டுவது இலண்டன் மாநகரமே என்பது இந்த அய்வறிக்கையின் முடிவாகும்.
அமெரிக்காவை விட ஜேர்மனியில் ஊழல் குறைவு.
ஜேர்மனியில் ஊழல் குறைந்திருக்கும் என்று பலரும் நம்பிக்கொண்டிருக்கும் நிலையில் ஊழல் பற்றிய ஆய்வில் ஜேர்மனி பதினான்காம் இடத்தைப் பிடித்துள்ளது.ஆனால் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஆஸ்டிரியா, பெல்ஜியம் போன்ற நாடுகளை விட ஜேர்மனியின் நிலை சிறப்பாக இருக்கிறது.
ட்ரான்ஸ்பெரன்சி இண்டர்நேஷனல்(Transparency International) நிறுவனத்தின் ஜேர்மனி கிளை கடந்த 2010ஆம் ஆண்டு 15வது இடத்தையும், கடந்த 2009ஆம் ஆண்டு 14வது இடத்தையும் பிடித்திருந்தது.இந்த ஆண்டும் 14 வது இடம் என்பது ஜேர்மனி ஊழலை ஒழிப்பதில் முனைப்பு காட்டவில்லை என்பதையே உணர்த்துகிறது. ஊழல் ஒழிப்பு பணிகள் இன்னும் ஏராளமாக ஜேர்மனியில் நடைபெறவேண்டும் என்று இந்த நிறுவனத்தின் தலைவரான ஹம்போர்க்(Humborg)தெரிவித்தார்.
மேலும் கூறுகையில், அரசியல்வாதிகளும் ஊழலை வரவேற்பதால் நாட்டில் மிக விரிவான ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரத்தை நடத்த வேண்டும். இது நாட்டின் அவசரத் தேவையாகும் என்றும் குறிப்பிட்டார்.ஜேர்மனியின் சட்டம், அரசியல் கட்சிகளுக்கு நிதி உதவி வழங்குவதை அனுமதிக்கின்றது. இதனால் நிதி வழங்கும் நிறுவனங்களும், அரசியல் கட்சிகளும் கூட்டுச் சேர்கின்றன. அரசியல் கட்சிகள் மற்ற துறைகளில் பெருகிவரும் ஊழலை சமுதாய தீமையாகக் கருதுவதுமில்லை, கண்டிப்பதுமில்லை.
ஐ.நா சபையின் ஊழல் எதிர்ப்புத் திட்டத்தில் ஜேர்மனி உடனடியாக இணைய வேண்டும். அத்திட்டம் குறித்து சந்தேகத்துடன் இருக்கும் சவுதி அரேபியா, சிரியா, வடகொரியா போன்ற நாடுகளுடன் ஜேர்மனி சேரக்கூடாது.ஐரோப்பாவில் செக் குடியரசு மட்டுமே இத்திட்டத்தில் இணையவில்லை. இத்திட்டத்தில் ஜேர்மனி இணைந்தால் ஊழலுக்கு எதிரான வழிமுறைகளை ஐ.நா வலியுறுத்தும் என்று டிரான்ஸ்பெரன்சி நிறுவனத்தின் தலைவர் ஹம்போர்க் விளக்கினார்.
சிரியா எதிர்க்கட்சித் தலைவருக்கு பிரான்சில் பாதுகாப்பு.
சிரியாவின் விடுதலைக்காகப் போராடி வரும் எதிர்க்கட்சித் தலைவர் புர்ஹான் கலியோனுக்கு(Burhan Ghalioun) பிரான்ஸ் நாட்டில் பாதுகாப்பு அளிக்கப் போவதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் கிளாடி குயண்ட் தெரிவித்தார்.
கலியோனுக்கு கடந்த சில நாட்களாக மிரட்டல் இருந்து வருவதால் அவருக்குப் சில பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய குயண்ட் மிரட்டல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக விளக்கவில்லை.சிரியாவில் ஜனாதிபதி பஷார் அசாத்தின்(Al Bashar Assad) இராணுவத்தால் போராட்டக்காரர்கள் 4000 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர் என ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும் விடுதலை வீரருமான கலியோனுக்கு சிறப்பு பாதுகாப்புகள் அவசியமாகின்றது.
எல்லைப் பாதுகாப்பு ஒப்பந்தம்: ஹார்ப்பர் - ஒபாமா சந்திப்பு.
கனடாவும், அமெரிக்காவும் அவற்றின் எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவாமல் இருக்க பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கியுள்ளன.இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட கனடாவின் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் அடுத்த வாரம் வாஷிங்டன் செல்லவிருக்கிறார்.
அங்கு ஹார்ப்பரும், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றனர். இந்த சந்திப்புக்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.கடந்த பெப்ரவரி மாதம் இந்தத் திட்டத்திற்கான ஒரு விரிவான வரைபடம் உருவாக்கப்பட்டது. பின்பு அனைத்துச் சாலைகளிலும் பாதுகாப்பு குறித்து விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஹார்ப்பரின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அடுத்த வாரச் சந்திப்பின் போது இரு நாட்டுத் தலைவர்களும் வணிகம், பாதுகாப்பு மற்றும் முக்கியமான உலகப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப் போவதாகக் கூறினார்.
மியான்மரில் ஆங் சான் சூச்சியை சந்தித்தார் ஹிலாரி கிளிண்டன்.
மியான்மர் நாட்டில் மூன்று நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் நேற்று(2.12.2011) ஆங் சான் சூச்சியை
சந்தித்தார்.
இந்தச் சந்திப்பு குறித்துக் கருத்துத் தெரிவித்த ஹிலாரி, இங்கு வந்திருப்பது மட்டுமல்ல, உங்கள் எல்லோரையும் சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்ததையே எனக்குக் அளிக்கப்பட்ட மிகப் பெரிய மரியாதையாகக் கருதுகிறேன் என்றார்.
நீண்ட காலமாக உலக நாடுகளுடனான தொடர்பிலிருந்து சற்று ஒதுங்கியே இருந்த மியான்மருக்கு ஹிலாரி பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.அந்நாட்டில் புதிதாகப் பதவியேற்றுள்ள அரசு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. அரசியல் கைதிகள் பலர் தற்பொழுது விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.
அரசியல் கைதிகள் விடுதலை, சீர்திருத்தங்கள் மேற்கொள்வது ஆகியவற்றில் ஏதேனும் சுணக்கம் ஏற்பட்டால் ஹிலாரியின் பயணத்தையடுத்து அந்நாட்டுக்கு அளிக்கப்படும் சிறு அளவிலான உதவிகள்கூட நிறுத்தப்படும் என்று அமெரிக்கத் தரப்பில் இருந்து எச்சரிக்கப்பட்டுள்ளது.தலைநகர் நேபிடோவில் மியான்மரின் உயர்நிலைத் தலைவர்களைச் சந்தித்த பின் கருத்துத் தெரிவித்த ஹிலாரி, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் வடகொரியாவுடனான உறவுகளையும் மியான்மர் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஒபாமா மீண்டும் ஜனாதிபதியாவார்: பில் கிளிண்டன்.
எதிர்வரும் 2012ம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியாவார் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் கூறியுள்ளார்.
மேலும் கிளிண்டன் கூறுகையில், அவரை யாரும் தோற்கடிக்க முடியாது என கூறினார்.இதனிடையே அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என வெளியான தகவலை வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார்.
எகிப்தில் முதல் கட்ட தேர்தல்: 62 சதவிகித வாக்குப்பதிவு.
எகிப்து நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்த பின் அவர் பதவி விலகினார். அதன்பின் ராணுவம் ஆட்சி பொறுப்பை ஏற்றது.
இதற்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பொதுத் தேர்தல் நடத்துவதாக ராணுவம் அறிவித்தது. அதன்படி எகிப்தின் 27 மாகாணங்களிலும் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.முதல் கட்ட தேர்தல் 9 மாகாணங்களுக்கு கடந்த மாதம் 28ம் திகதி நடந்தது. மொத்தம் 508 உறுப்பினர்களை கொண்ட எகிப்து நாடாளுமன்றத்துக்கு நடந்த முதல் கட்ட தேர்தலில் 50க்கும் அதிகமான அரசியல் கட்சிகள், ஆயிரக்கணக்கான சுயேச்சைகள் போட்டியிட்டனர்.
இந்நிலையில் முதல் கட்ட தேர்தலில் 62 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது என்றும், எகிப்து வரலாற்றில் இதுதான் அதிகபட்ச வாக்குப் பதிவு என்றும் தலைமை தேர்தல் ஆணையர் அப்தெல் மோஸ் இப்ராகிம் நேற்று(2.12.2011) அறிவித்தார்.மேலும் கூறுகையில், ஒன்பது மாகாணங்களில் பதிவான வாக்குகளை கணக்கிடும் பணி 3 முறை நடத்தப்பட்டதால் வாக்குப் பதிவு சதவிகிதம் அறிவிப்பதில் காலதாமதமானது எனவும், டிசம்பர் 14ம் திகதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
சிரியாவுக்கு அதிநவீன ஏவுகணைகளை வழங்கிய ரஷ்யா.
சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத்(Bashar al-Assad) அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து போராடும் மக்களை இராணுவம் மூலம் கொன்று குவிக்கும் சிரியாவுக்கு பொருளாதார தடையும், தற்காலிக வணிகத் தடையும் ஐ.நா சபை விதித்துள்ளது.
இதை ஏற்று அமெரிக்கா உட்பட அரபு கூட்டமைப்பு நாடுகள் சிரியாவுக்கு பொருளாதாரத் தடை விதித்துள்ளன. ஆனால் ரஷ்யாவோ அதை சிறிதும் பொருட்படுத்தவில்லை.மாறாக ஆயுத உதவி மற்றும் கப்பலை தாக்கி அழிக்கும் யாக்னாட் என்ற ஏவுகணைகளை வழங்கியுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் கடந்த 2007ம் ஆண்டு கையெழுத்தானது. அதன்படி சிரியாவுக்கு 72 யாக்னாட் ஏவுகணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகள் 300 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்று கப்பலை தாக்க கூடியது.இதேபோன்று பிரமோஸ் என்ற ஏவுகணை இந்தியா - ரஷ்யா கூட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்டது. ஆனால் அவற்றை இந்திய கணணி மற்றும் கப்பல் போக்குவரத்து இயந்திரங்கள் மூலமே இயக்க முடியும்.
ஆனால் சிரியாவுக்கு வழங்கப்பட்டுள்ள யாக்னாட் ஏவுகணைகள் சிரியா இராணுவத்துக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது என ரஷ்ய செனட்டரும், வடக்கு பகுதி முன்னாள் இராணுவ தலைவருமான போபோவ் தெரிவித்துள்ளார்.
ஆப்கானில் திருமணத்திற்கு மறுத்த இளம்பெண் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசி தாக்குதல்.
ஆப்கானிஸ்தானில் திருமணத்துக்கு மறுத்த 18 வயது இளம்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசி பயங்கர தாக்குதல் நடத்தி உள்ளனர்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் சிறிய பிரச்னைக்கு கூட சம்பந்தப்பட்டவர்கள் மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது.ஆப்கானிஸ்தான் குண்துஸ் மாகாணத்தில் வசிக்கும் நபர் ஒருவருக்கு 3 பெண்கள் உள்ளனர். அவர்களில் 18 வயது நிரம்பிய இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வாலிபர் ஒருவர் விரும்பி உள்ளார்.
அவருக்கு திருமணம் செய்து கொடுக்க பெண்ணின் தந்தை மறுத்துவிட்டார். சமீபத்தில் அந்த பெண்ணுக்கும் உறவினர் ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் கூட்டாளிகளுடன் கடந்த வியாழக்கிழமை(1.12.2011) நள்ளிரவு பயங்கர ஆயுதங்களுடன் இளம்பெண்ணின் வீட்டுக்கு சென்று, பொருட்களை அடித்து நொறுக்கினார்.
இளம்பெண், அவருடைய 2 சகோதரிகள், தாய், தந்தையை அடித்து உதைத்து அவர்கள் மீது ஆசிட் வீசி சென்றனர். ஐந்து பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதில் இளம்பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று வைத்தியர் அப்துல் ஷோகுர் ரகிமி தெரிவித்துள்ளார். ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியவர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.
கயானியின் எச்சரிக்கைக்கு அமெரிக்கா பதிலடி.
ஆப்கான் - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் நேட்டோப் படை நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவத்தினர் 24 பேர் கொல்லப்பட்டனர்.இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் இராணுவத் தலைமை தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானி(Ashfaq Parvez Kayani) நேற்று(2.12.2011) அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் கயானி கூறியிருப்பதாவது, பாகிஸ்தான் வீரர்கள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தினால் யாருடைய உத்தரவுக்காகவும் காத்திருக்க தேவையில்லை, பதிலுக்கு பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தலாம் என்றார்.இந்நிலையில் இதற்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனும் கயானிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.அதில் அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் நடத்த நாங்கள் தயங்க மாட்டோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிரியா மீதான பொருளாதார தடையை கடுமையாக அமுல்படுத்த முடிவு.
சிரியா நாட்டின் மீதான பொருளாதாரத் தடையை கடுமையாக அமுல்படுத்த அமெரிக்காவும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் முடிவெடுத்துள்ளன.இந்நாடுகளின் பிரதிநிதிகள் இதற்கான முடிவுகளை நேற்று(2.12.2011) அறிவித்தனர். கடந்த மார்ச் மாதத்திலிருந்து சிரியா ஜனாதிபதி அல்-பஷாரின்(Bashar al-Assad) ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
அரசுப் படைகளுக்கும், போராட்டக்காரர்களுக்குமான மோதலில் இதுவரை 4,000-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று ஐ.நா சபை தெரிவித்துள்ளது.போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நகரங்களான ஹோம்ஸ், ஹமா, தாரா ஆகிய இடங்களில் அரசுப் படைகள் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 16 பேர் உயிரிழந்ததாகவும், 20-க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டதாகவும் சிரியாவிலுள்ள மனித உரிமை அமைப்புகள் தகவல் தெரிவித்துள்ளன.
இந்த நிகழ்வுகளுக்கு பின்னரே அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை மேலும் அதிகரிக்க மேற்கத்திய நாடுகள் முடிவெடுத்துள்ளன.இறப்பு விபரம் குறித்து கருத்துத் தெரிவித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நவி பிள்ளை(Navi Pillay), தங்களுக்குக் கிடைத்திருக்கும் தகவலின்படி இறப்பு எண்ணிக்கை மேலும் கூடுதலாக இருக்க வாய்ப்புண்டு என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் ஐரோப்பிய கூட்டமைப்பின் வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள், அரபு கூட்டமைப்பு நாடுகளின் செயலாளர் நபில் அல்-அராபியை சந்தித்தனர். அப்போது போராட்டக்காரர்கள் மீது சிரியா அரசு மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் குறித்து கவலை தெரிவித்தனர்.
மேலும் அரபு கூட்டமைப்பு நாடுகளுடன் உடன் இணைந்து சிரியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைமை வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர் கேத்தரின் ஆஷ்டன், தங்களுடன் இணைந்து பொருளாதாரத் தடைகளை விதிப்பதனால் சிரியாவின் தற்போதைய ஆட்சிக்கெதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க இயலும் என்று அரபு லீக் கருதுவதாகத் தெரிவித்தார்.
ஆனால் சிரியா விடயத்தில் எவ்வித சர்வதேச தலையீட்டையும் ஈடுபடுத்த அரபு லீக் முயலவில்லை என்ற மாறுபட்டக் கருத்தையும் தெரிவித்துள்ளார் அவ்வமைப்பின் செயலாளர் அராபி.அரபு கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் தங்கள் நாட்டு விடயத்தை சர்வதேசப் பிரச்னையாக்குகின்றன என்று சிரியா குற்றம்சாட்டியுள்ள நிலையில் அராபி இக்கருத்தைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எரிவாயு, பெட்ரோலியப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிலகங்களுக்கான தொழில்நுட்பக் கருவிகள் ஆகியவற்றை சிரியாவுக்கு ஏற்றுமதி செய்யவும், நிதிச் சந்தையில் சிரியாவின் கடன் பத்திரங்களை விற்பனை செய்யவும், ஐரோப்பிய கூட்டமைப்பு தடைவிதித்துள்ளது.மேலும் ஐரோப்பாவிலிருந்து சிரியாவுக்கு மென்பொருள் ஏற்றுமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்திற்கு ஒளியூட்டினார் பராக் ஒபாமா.
கிறிஸ்துமஸ் விழாவின் தொடக்கமாக அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்துக்கு ஒளியூட்டினார் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா(Barack Obama).அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் விழாக் கொண்டாட்டத்தின் தொடக்கமாக அந்நாட்டு ஜனாதிபதி அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்துக்கு ஒளியூட்டுவது என்பது 89 வருடங்களாகத் தொடர்ந்து வரும் பாரம்பரியமாகும்.
கடந்த 1923-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கால்வின் கூலிட்ஜ்(Calvin Coolidge) என்பவர் தொடக்கி வைத்த இந்தப் பழக்கம், இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த வருட கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம்(1.12.2011) நடைபெற்றது.அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒபாமா அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்திற்கு ஒளியூட்டி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.அவருடன் அவரது மனைவி மிஷேல், மகள்கள் சாஷா, மலியா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
அவர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய ஒபாமா கூறியதாவது: 89 வருடங்களாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதியும், மக்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த வருட நிகழ்ச்சி சிறப்புப் பெற்றதாகும்.ஏனெனில் புதிய கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடங்களில் பயன்படுத்தப்பட்ட மரம் இந்த வருட ஆரம்பத்தில் ஏற்பட்ட புயலில் சிதைந்துவிட்டது. ஆனால் அந்த ஒரு மரத்தை இழந்ததைவிட இந்நிகழ்ச்சியில் பங்கு கொள்வதே மிகப் பெரிய விடயம் என்பதை நாம் அறிவோம்.
மைக்கேல் ஜாக்சன் மரணம்: நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வைத்தியர் மேல்முறையீடு.
பிரபல பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் தொடர்பாக அவரது வைத்தியர் கோன்ராட் முரேவுக்கு(Conrad Murray) நான்கு ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.பொப் மியூசிக் மூலம் உலக இளைஞர்கள‌ை தன்வசமாக்கியவர் மைக்கேல் ஜாக்சன். இவரது இசை மற்றும் பாடலுடன் கூடிய நடனத்தின் மூலம் உலக இளைய சமூகத்தை தன்வசமாக்கினார்.
இதனிடையே கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் தன்னுடைய வீட்டில் திடீரென மரணமடைந்தார். இவரது மரணம் உலகத்தையே உலுக்கியது. ஜாக்சனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவரது குடும்ப வைத்தியர் முர்ரே மீது சந்தேகம் இருப்பதாகவும் ஜாக்சனின் குடும்பத்தினர் தெரிவித்து வந்தனர்.இதனையடுத்து ஜாக்சனின் குடும்ப வைத்தியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. வழக்கு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
ஜாக்சனின் இறப்பு குறித்த விசாரணையில் மன அழுத்தத்தில் தவித்து வந்த ஜாக்சன் அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரை உட்கொண்டதால் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து வைத்தியர் முர்ரே ஜாக்‌சனை கருண‌ை கொலை செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து நீதிபதி மைக்‌கேல் பாஸ்டருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்‌டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் ஜாக்சனின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய உள்ளார். இதற்காக அவர் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களை தனக்கு தர வேண்டும் என கூறி லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
2012ம் ஆண்டில் மீண்டும் பொருளாதார மந்தநிலை ஏற்படும்: ஐ.நா.
எதிர்வரும் 2012ம் ஆண்டில் மீண்டும் பொருளாதார மந்தநிலை ஏற்படலாம் என ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.கடந்த முறை பொருளாதார மந்தநிலை ஏற்பட்ட போது உதவி செய்த இந்தியாவும், சீனாவும் இந்த முறை பாதிப்புக்கு உள்ளாகலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த நிதியாண்டில் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார மந்த நிலையிலிருந்து உலகம் இன்றளவும் மீளாத காரணத்தினால், மந்தநிலை ஏற்படும் அபாயத்தில் உள்ளதாக ஐ.நா எச்சரித்துள்ளது.வளர்ச்சியடைந்த நாடுகளில் ஏற்படும் பாதிப்புகள் காரணமாக இந்த பொருளாதார மந்தநிலையின் போது வளரும் நாடுகளும் பாதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF