Thursday, December 15, 2011

இன்றைய செய்திகள்.

13 இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச பிடியாணை.
13 இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஏற்கனவே நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ள சந்தேக நபர்கள் என   குறிப்பிடப்படுகிறது. இதில் மூன்று பேர் பெண்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
செலிங்கொ குழும நிறுவனத்தின் உரிமையாளர் லலித் கொத்தலாவலவின் மனைவி சிசிலி கொத்தலாவலவிற்கு எதிராகவும் சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.போலி நாணயத் தாள் அச்சிடல் உள்ளிட்ட பல்வேறு மோசடிக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இவ்வாறு சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
நாமல் ராஜபக்ச சட்டத்தரணியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.
அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் புதல்வருமான நாமல் ராஜபக்ச, நாளை வியாழக்கிழமை சட்டத்தரணியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.அவர்,மேல் நீதிமன்ற சட்டத்தரணியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க உள்ளிட் மூவர் அடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில், நாளை காலை இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வு நடைபெறவுள்ளது.
2011ம் ஆண்டு சட்டத்தரணிப் பரீட்சைகளில் சித்தியெய்திய 250 பேர் தற்போது பதவிப் பிரமாணம் செய்யும்நடவடிக்கைகளில்ஈடுபட்டுள்ளனர்.நாளொன்றுக்கு அறுபது பேர் வரையில் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொள்கின்றனர்.
நாட்டின் பிரச்சினைகளை உக்கிரப்படுத்தி அதன் மூலம் டொலர்களை ஈட்ட சிலர் முயற்சிக்கின்றனர் – ஜனாதிபதி மகிந்த.
நாட்டு பிரச்சினைகளை உக்கிரப்படுத்தி அதன் மூலம் டொலர்களை ஈட்ட சிலர் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.
இவ்வாறான நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.அலரி மாளிகையில் நடைபெற்ற மஹவலி விவசாயிகள் விருது வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சமூக குரோதம் உடையவர்கள், கலாசாரம் தொடர்பில் எவ்விதமான உணர்வும் அற்ற வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் இவ்வாறு நாட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர்.தமிழீழ விடுதலைப் புலிகளினால் எப்போது தாக்குதல் நடத்தப்படும் என்ற அச்சம் களையப்பட்டுள்ளது.மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய ஓர் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோ்வின் சில்வாவின் இணைப்புச் செயலாளர் கடத்தப்பட்டார்?
அமைச்சர் மோ்வின் சில்வாவின் இணைப்புச் செயலாளர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம், நேற்று கொழும்பின் புறநகர் பிட்டகோட்டே பகுதியில் இடம்பெற்றுள்ளது.எனினும் பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின்படி கடத்தப்பட்டவர் என்று கூறப்படும் அஜித் ரொட்றிகோ என்பவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் பொலிஸ் நிலையத்தி;ல் வந்து வாக்குமூலம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவ்வாறு எவரும் வந்து வாக்குமூலம் வழங்கவில்லை என்று மீரிஹன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தநிலையில் கடத்தப்பட்டவரை தேடும் பணிகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.கடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படும் நபர், மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவின் இணைப்புச் செயலாளர் என உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இலத்திரனியல் ஊடகங்களைக் கட்டுப்படுத்த புதிய நிறுவனம்!- அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல.
இலத்திரனியல் ஊடகங்களில் சில தேவையற்ற  நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதால் அதனைக் கட்டுப்படுத்த ஒளிபரப்புக் கட்டுப்பாட்டுச் சபை உருவாக்கப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஏனையவர்கள் மீது பழிவாங்குவதாக ஊடகங்களைப் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள் உயர்வடைந்துள்ளதாகவும் , எனவே இவற்றைக் கட்டுப்படுத்த நிறுவனக் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை, ஊடக பயிற்சி நிலையமொன்று அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர்களுக்கு வாகனக் கொள்வனவு கடன் வழங்கும் வயதெல்லையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள அமைச்சர் , 25 ஆண்டு காலம் சேவையில் ஈடுபட்டவர்களுக்கு 1.2 மில்லியன் வாகனக் கடன் வழங்க வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டது. எனினும் தற்போது இந்த சேவைக் காலத்தை குறைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸில் குடியுரிமை பெற்றவர்கள் இலங்கையில் உள்ள குடும்பத்தினரை பிரான்ஸுக்கு அழைக்க வாய்ப்பு.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் பிரான்ஸ் நாட்டில் சட்டபூர்வமான பிரஜைகளாக இருந்தால் அவர்கள் இலங்கையில் உள்ள தமது குடும்ப அங்கத்தவர்களையும் தங்களுடன் பிரான்ஸுக்கு அழைக்க விரும்பினால் அந்தக் கோரிக்கை பற்றிச் சாதகமாகப் பரிசீலிக்கப்படும்.  என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் யாழ். மாவட்ட அரச அதிபருடனான சந்திப்பின் போது தெரிவித்தார். பிரான்ஸ் தூதுவருக்கும் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை மாலை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அரச அதிபர் இதனைத் தெரிவித்தார்.இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு.பிரான்ஸ் தூதுவர் குடாநாட்டின் சகல விடயங்கள் தொடர்பாக அறிவதிலும் முழுமையாக கவனம் செலுத்தினார். இங்கு நேரடியாக இடங்களைப் பார்வையிட்ட அவர் அரசின் அபிவிருத்திப் பணிகள் இடம் பெற்ற போதும் தனியார் கட்டமைப்புகள் ஊடான அபிவிருத்திகள் இடம் பெறவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகள் எவ்வாறு உள்ளன? மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் தொடர்பாக மக்களிடமிருந்து ஏதாவது முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளனவா என்றும் அவர் என்னிடம் கேள்விகளை எழுப்பினார்.
அத்துடன் பிரான்ஸில் சட்டரீதியான பிரஜையாக உள்ள இலங்கையர்கள் இங்கு தமது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ விரும்பினால் விண்ணப்பிக்கலாம். அதனைத் தமது தூதரகம் சாதகமாகப் பரிசீலிக்கும் என்றும் தெரிவித்தார் என்றார் அரச அதிபர்.
தாய்நாட்டுக்கோ, இராணுவத்துக்கோ கணவர் துரோகமிழைக்கமாட்டார்! ஒருபோதும் மன்னிப்புக்கோரி மன்றாடப் போவதில்லை!- அனோமா பொன்சேகா.
தாய்நாட்டுக்காக தனது உயிரைக்கூட தியாகம்செய்யும் குணவியல்பு கொண்ட எனது கணவர், தனது உயிரிலும் மேலாக நேசிக்கும் தாய்நாட்டுக்கோ அல்லது இராணுவத்துக்கோ ஒரு போதும் துரோகம் இழைக்க மாட்டார். இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.அத்துடன், சர்வதேசத்திற்குச் சென்றாலும் தாய்நாட்டுக்காகச் செல்வாரே தவிர, தனிப்பட்ட நோக்கங்களுக்காக அவர் அங்கு செல்லமாட்டார். எனவும் தெரிவித்தார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.பொன்சேகாவை விடுதலை செய்தால், இலங்கையில் யுத்தக்குற்றம் இடம்பெற்றது என்று சர்வதேசத்திடம் கூறி ஒரு சாட்சியாக அவர் மாறுவார் என அனோமா பொன்சேகாவிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
பொதுமன்னிப்பு மட்டுமல்ல, வேறு எந்தவொரு விடயமாக இருந்தாலும், நானும் எனது மகள்மார்களும் கலந்தாலோசித்து ஒரு முடிவை எடுத்தாலும் இறுதி முடிவை அவரே எடுப்பார்.கணவருடன் கலந்துரையாடுவதற்கு எனக்குச் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. அவருடன் கலந்துரையாடாமல் எமக்கு எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாது.
ஐ.தே.க. முன்னெடுத்த தேசிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்துகொள்ளாததற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றை நான் அடியோடு நிராகரிக்கின்றேன்.எமது கட்சி எடுத்த பொது தீர்மானத்திற்கிணங்கவே நான் செயற்பட்டேன். இதில் வேறு எந்தவித உள்நோக்கமும் இல்லை.எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து செயற்படுதல் அவசியம். எனது கணவரின் விடுதலைக்காக மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் செயற்படவேண்டும்.
எனது கணவர் தனது உயிரிலும் மேலாக தாய்நாட்டையும், இராணுவத்தையும் நேசிக்கின்றார். தாய்நாட்டுக்காக அவர் தனது உயிரைக்கூட தியாகம் செய்யும் பண்புடையவர். நாட்டுக்காக தான் செய்ய வேண்டியவற்றை சரிவர அவர் செய்வார்.இராணுவத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் ஒருபோதும் செயற்படமாட்டார். சர்வதேசத்தை நாடிச் சென்றாலும் தாய்நாட்டுக்காகச் செல்வாரே தவிர, தனது தனிப்பட்ட நோக்கங்களுக்காகச் செல்ல மாட்டார்.
நாம் ஒருபோதும் மன்னிப்புக் கோரி மன்றாடப் போவதில்லை. அவ்வாறு செய்தால் குற்றத்தை நாமே ஒப்புக் கொண்டது போலாகிவிடும் என்றார்.
அரசாங்கத்தில்தான் மாற்றம் ஏற்பட வேண்டுமே தவிர எதிர்க்கட்சி பதவிகளில் அல்ல!- ரணில்.
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாதென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை  ஆளும்கட்சி பிரதம கொறடா தினேஸ் குணவர்த்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஒருவரையும் கட்சித் தலைவர் பதவிக்கு ஒருவரையும் நியமிக்க எதிர்பார்த்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளமை ஊடகங்கள் ஊடாக வெளிவந்துள்ளதென தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யும் போது எதிர்கட்சித் தலைவர் மற்றும் ஐதேக தலைவர் ஆகியோருக்கு வெவ்வேறாக நிதி ஒதுக்க வேண்டி வருமென்றால் அது தொடர்பில் முன்கூட்டியே அறிவிக்குமாறு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தில்தான் மாற்றம் ஏற்பட வேண்டுமே தவிர எதிர்கட்சி பதவிகளில் அல்ல என தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டில் அரசியல் இல்லை, வீரர்களிடையே தான் அரசியல் உள்ளது : சனத் ஜயசூரிய.
இலங்கை அணி தற்போது கிரிக்கெட் போட்டிகளில் சந்தித்து வரும் பின்னடைவுகளுக்கு வீரர்களே காரணம் என்றும் இதற்கு அரசாங்கத்தையோ ஜனாதிபதியையோ விளையாட்டுத்துறை அமைச்சரையோ குறைகூற முடியாது என மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் விளையாடிய ஒருசில வீரர்களை தவிர ஏனையோர் இப்போதும் அணியில் தொடர்ந்தும் விளையாடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டினுள் அரசியல் தலையீடுகள் இல்லை என்றும் கிரிக்கெட் வீரர்கள் தமக்கிடையே உள்ள அரசியலை முதலில் களைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டு.காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞன் சவூதியில் சடலமாக மீட்பு.
மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞரொருவர் சவூதி அரேபியாவில் இன்று புதன்கிழமை(14.12.2011) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி முதலாம் குறிச்சியை சேர்ந்த 22 வயதான அப்துல் கப்பார் அஷ்ரப் என்பவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவர் கடந்த 22 நாட்களுக்கு முன்னரே தொழில் நிமித்தம் சவூதி அரேபியாவின் றியாத் நகருக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.சாரதி தொழிலுக்கு சென்ற இவர், கடந்த இரண்டு நாட்களாக வேலைக்கு சமூகமளிக்கவில்லை. இதனால் இவர் தங்கியிருந்த அறையை உடைத்து பார்த்த போது சடலமாக காணப்பட்டுள்ளார்.இவரது மரணம் தொடர்பான முழுமையான தகவல் எதுவும் எமக்கு இதுவரை கிடைக்கவில்லை என குறித்த இளைஞனின் தந்தை தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் பயப்படப் போவதில்லை!- அமைச்சர் குணசேகர.
இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் அஞ்சப் போவதில்லை என சிரேஷ்ட அமைச்சர் டி.யூ குணசேகர இன்று(14.12.2011) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை மன்றத்தின் கூட்டத்தில் போர்க்குற்றச்சாட்டக்களை அரசாங்கம் எதிர்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் வெளிவிகார அமைச்சு மீதான நிதி ஒதுக்கும் விவாதத்தின் போது கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினையில் லத்தீன் அமெரிக்கா, ஆசிய, ஆபிரிக்கா ஆகிய நாடுகள் எல்லாம் இலங்கையின் பக்கம் உள்ளன. எனவே உலக விடயங்களில் தமது ஆதிக்கத்தை இழந்து வரும் ஒரு சில நாடுகளின் குற்றச் சாட்டுக்களையிட்டு இலங்கை பயப்படப்போவதில்லை என கூறினார்.'சர்வதேச சமூகம் எமக்கு எதிராகவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுவது யதார்த்தமானது அல்ல என அமைச்சர் குணசேகர தெரிவித்துள்ளார்.
லத்தீன் அமெரிக்க நாடுகள் யாவும் அமெரிக்காவின் மேலாதிக்கத்துக்கு எதிராக அணித்திரண்டுள்ளன. உலக அதிகாரம் ஆசியாவின் பக்கம் திரும்பியுள்ளது. சீனா, பிரேஸில், இந்தியா, ரஷ்யா ஆகியன வல்லரசுகளாக உருவாகி வருகின்றன. அந்நாடுகளின் துணை தம்மிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தங்க இளநீர்! இரண்டரைக் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சித்தவர் கைது.
புதையலில் தோண்டி எடுத்ததாக கூறி தங்க முலாம் பூசப்பட்ட இளநீரை சுமார் இரண்டரை கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சந்தேகநபர் கெக்கிராவை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர் களுத்துறை - தொடங்கொட பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.போலியான முறையில் தயாரிக்கப்பட்ட இளநீரை காயை தங்க இளநீர் எனக்கூறி விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளார்.
குறித்த இளநீர் காயை கொள்வனவு செய்ய எப்பாவெல பிரதேச வர்த்தகர் ஒருவர் இணங்கியதை அடுத்து கொடுக்கல் - வாங்கல் இடம்பெறவிருந்த இடத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இளநீர் 193 கிரேம் 80 மில்லி கிரேம் நிறையுடையது எனவும் அதில் தங்க முலாம் பூசப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதிவேக நெடுஞ்சாலையில் நடந்து சென்ற நபர் கைது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸசினால் திறந்து வைக்கப்பட்டுள்ள தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நடந்து செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள போதிலும் அதில் நடந்து சென்ற நபர் ஒருவரை நெடுஞ்சாலை போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் இன்று(14.12.2011) கைதுசெய்துள்ளனர்.

இவ்வீதி கடந்த மாதம் போக்குவரத்துக்கு திறக்கப்பட்ட பின்னர், அதில் நடந்து சென்றமைக்காக கைது செய்யப்பட்ட முதல் நபர் இவராவார்.இச்சந்தேக நபர் ஹோமாகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் நெடுஞ்சாலை போக்குவரத்துப் பிரிவு பணிப்பாளர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.
அரசு தலையில் துப்பாக்கியை வைத்தே தனது திட்டங்கைளை நிறைவேற்றுகிறது!- சஜித் பிரேமதாஸ.
அரச நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகளை சரி செய்வதை விடுத்து அரசாங்கம் விவசாயிகளின் பணத்தை சுரண்ட ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.மரக்கறி மற்றும் பழங்களை பிளாஸ்டிக் கூடைகளில் கொண்டு செல்ல வேண்டும் என்ற அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் புறக்கோட்டை மெனிங் சந்தை வர்த்தகர்களை சஜித் பிரேமதாஸ இன்று (14.12.2011) நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முனையும் அடிமட்ட விவசாயிகளை அரசாங்கம் குறி வைக்கிறதே தவிர உயர்மட்டத்தில் ஊழல் செய்பவர்களை கண்டும் காணாமல் இருப்பது போல் நடந்து கொள்கிறது.
முறையாக ஒரு திட்டத்தை ஒரு அரசு நடைமுறைப்படுத்துமானால் அது எந்த அரசாக இருந்தாலும் மக்கள் ஆதரவு வழங்குவர். ஆனால் தற்போதைய அரசு தலைகளில் துப்பாக்கியை வைத்தே தமது திட்டங்களை நிறைவேற்றுகிறது என சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.
இலஞ்சம் பெற்றுக் கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் பணி இடைநிறுத்தம்.
இலஞ்சம் பெற்றுக் கொண்ட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வட மத்திய மாகாணத்தின் மிஹிந்தலைப் பிரதேசத்தில் பௌர்ணமி தினமன்று சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்த நபர் ஒருவரிடமிருந்து இலஞ்சப் பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.மிஹிந்தலை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் நால்வர் இவ்வாறு பணி இடை நிறுத்த உத்தரவிற்கு ஆளாகியுள்ளனர்.
சட்ட விரோதமான முறையில் மதுபானத்தை விற்பனை செய்த நபரிடமிருந்து 20 போத்தல் மதுபானம் மீட்கப்பட்ட போதிலும், நீதிமன்றில்வெறும் மூன்று போத்தல்களே ஒப்படைக்கப்பட்டுள்ளது.சந்தேக நபரிடமிருந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் 20,000 ரூபா லஞ்சமாகப் பெற்றுக்கொண்டுள்ளனர்.இது சம்பந்தமாக விசாரணைகளை நடத்திய அநுராதபுர மாவட்ட உயர் பொலிஸ் அதிகாரி மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய ஐவரையும் இன்று முதல் பணி இடைநிறுத்தம் செய்துள்ளார்.
நிபுணர் குழு அறிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை– அரசாங்கம்.
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட தாருஸ்மன் தலைமையிலான குழுவினர் சமர்ப்பித்த அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையானது, சாட்சியங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படாது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே, இந்த அறிக்கையை அங்கீகரிக்க முடியாது எனவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேசியத் தன்மைக்கும், அபிமானத்திற்கும் எவரும் களங்கம் ஏற்படுத்த முடியாது.இலங்கையின் உள் விவகாரங்களில் தலையீடு செய்ய எவருக்கும் அனுமதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா- பாகிஸ்தான் இடையே பரஸ்பர நம்பிக்கை குறைந்து வருகிறது: கிலானி.
அமெரிக்கா- பாகிஸ்தான் இடையே பரஸ்பர நம்பிக்கை குறைந்து வருகிறது என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி கூறியுள்ளார்.ஆப்கான் எல்லையை ஒட்டியுள்ள பைசாய் என்ற இடத்தில் நேட்டோ படையின் விமானங்கள் கடந்த 26ம் திகதி குண்டுகளை வீசித் தாக்கின. இதில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 24 பேர் பலியாயினர்.
இதையடுத்து பாகிஸ்தானில் இருந்து அமெரிக்க படை வெளியேற பாகிஸ்தான் அரசு 15 நாள் கெடு விதித்தது. கெடு முடிந்ததால் பலுசிஸ்தானில் உள்ள ஷாம்சி தளத்தில் இருந்து அமெரிக்க படை நேற்று(11.12.2011) வெளியேறியது. இது அமெரிக்கா- பாகிஸ்தான் உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி நேற்று பேட்டியளித்தார். அவர் கூறுகையில், அமெரிக்கா, பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் பரஸ்பர நம்பிக்கை குறைந்திருக்கிறது. கணிசமான இடைவெளி விழுந்திருக்கிறது என்றார்.அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து ஷாம்சி தளம் பாகிஸ்தானின் முழு கட்டுப்பாட்டில் வந்திருப்பதை கிலானி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
வெளியேறுவதற்கு முன் ஷாம்சி விமான தளத்திற்கு தீ வைத்த அமெரிக்கா.
பாகிஸ்தானின் ஷாம்சி விமான தளத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அங்கிருந்த உபயோகமற்ற கருவிகள், பொருட்களை தீ வைத்து அழித்து விட்டுத் தான் அமெரிக்கப் படைகள் வெளியேறியுள்ளன.
பாகிஸ்தான் எல்லையில் கடந்த நவம்பர் மாதம் 26ம் திகதி நேட்டோ படைகள் நிகழ்த்திய தாக்குதலை அடுத்து பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஷாம்சி விமான தளத்தை விட்டு வெளியேறும் படி அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உத்தரவிட்டது.இந்த விமான தளத்தை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சி.ஐ.ஏ பயன்படுத்தி வந்தது. நேட்டோ விவகாரத்தை மேலும் தீவிரமாக்க விரும்பாத அமெரிக்காவும் சொன்னபடி நேற்று முன்தினம்(11.12.2011) விமான தளத்தைக் காலி செய்து வெளியேறியது.
ஆனால் அதற்கு முன்பாக விமான தளத்தில் இருந்து எந்த ஒரு தகவலும், பொருளும் பாகிஸ்தானுக்கு கிடைத்து விடக் கூடாது என்பதில் முடிவாக இருந்த அமெரிக்கப் படை அத்தளத்தில் இருந்த உபயோகமற்ற கருவிகள், பொருட்கள் என அனைத்தையும் தீ வைத்து அழித்து விட்டது.இதுகுறித்து பாகிஸ்தான் இராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுபோன்று நடப்பது வழக்கமான ஒன்று தான் என தெரிவித்தார். தற்போது ஷாம்சி விமான தளம் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் முழுமையாக வந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் மசூதிகளில் ஒலிப்பெருக்கி பயன்படுத்த தடை.....
இஸ்ரேலில் உள்ள மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்த தடை விதிக்கும் புதிய சட்டத்திற்கு பிரதமர் பெஞ்சமின் நெடான்யாஹு(Benjamin Netanyahu) ஆதரவு தெரிவித்துள்ளார்.இஸ்ரயீல் பெய்டெய்னு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அனஸ்டசியா மிக்கேலி இஸ்ரேல் நாட்டில் உள்ள மசூதிகளில் தொழுகைக்கு மக்களை அழைக்கப் பயன்படுத்தப்படும் ஒலிப்பெருக்கியைத் தடை செய்யும் விதத்தில் புதிய சட்ட பிரேணனை ஒன்றைக் கொண்டு வந்துள்ளார்.
இந்தச் சட்டத்தின்படி எந்த விதமான மதத் தலங்களிலும் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது. எனினும் மசூதிகளில் ஒலிப்பெருக்கிப் பயன்பாட்டைத் தடுக்கும் நோக்கில் இம்மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மிக்கேலி கூறுகையில், இதுபோன்ற ஒலிப்பெருக்கி அழைப்புகளால் இஸ்ரேல் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. மதச் சுதந்திரம் என்கிற பெயரால் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படக் கூடாது என்ற உலக நோக்கில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது மதப் பிரச்னை அல்ல. சுற்றுச் சூழல் பிரச்னை என்றார்.
இதை வரவேற்றுள்ள பிரதமர் பெஞ்சமின் நெடான்யாஹு, ஐரோப்பாவை விட அதிக சுதந்திரம் இஸ்ரேலில் தேவையில்லை என்றார்.இந்த ஒலிப்பெருக்கியால் அவஸ்தைப்படும் மக்கள் என்னிடம் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். ஐரோப்பாவின் அனைத்து நாடுகளிலும் இதே பிரச்னை இருந்தது.
பெல்ஜியம், பிரான்ஸ் போன்றவை சட்டப்பூர்வத் தடை கொண்டு வந்தன. அதே தடையை இங்கு ஏன் கொண்டு வரக் கூடாது எனக் கேள்வி எழுப்பினார்.இருப்பினும் துணைப் பிரதமர், அமைச்சர்கள் சிலர் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இதன் மீதான விவாததத்தை பிரதமர் தள்ளி வைத்துள்ளார்.
ஏமன் சிறையிலிருந்து 12 அல்கொய்தாவினர் தப்பியோட்டம்.
ஏமன் நாட்டின் தென்பகுதியில் உள்ள ஏடன் நகரில் சிறை வைக்கப்பட்டிருந்த அல்கொய்தா இயக்கத்தைச் சேர்ந்த 12 பேர் நேற்று(12.12.2011) தப்பிச் சென்று விட்டனர்.
ஏமனில் தற்போது ஜனாதிபதி அலி அப்துல்லா சலேவுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. வளைகுடா நாடுகள் கூட்டுறவு அமைப்பின் பரிந்துரைப்படி சலே மீது எதிர்காலத்தில் எவ்வித வழக்குகளும் பதியப்பட மாட்டாது.இதற்கு எதிர்க்கட்சிகளும் ஒப்புக் கொண்டு இரு நாட்களுக்கு முன்பு இடைக்கால அரசு பதவியேற்றது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை மக்கள் ஏற்கவில்லை.
சலே தன் ஆட்சிக் காலத்தில் செய்த வன்முறைகளுக்கு ஈடாக அவர் மீது வழக்குகள் போடப்பட்டு அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.இதை முன்வைத்து கடந்த இருநாட்களாக அந்நாட்டில் ஆயிரக்கணக்கானோர் போராடி வருகின்றனர். இந்நிலையில் நாட்டின் தென்பகுதியில் உள்ள ஏடன் நகரில் உள்ள சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த அல்கொய்தா இயக்கத்தைச் சேர்ந்த 12 பேரும், வேறு இருவரும் சேர்ந்து ஆறு மீட்டர் நீளம் பூமிக்கடியில் வளை தோண்டி அதன் மூலம் தப்பித்து ஓடிவிட்டனர்.
தப்பியோடியவர்கள் ஒரு வங்கியைக் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளதோடு மட்டுமல்லாமல் பாதுகாப்புப் படையினரைத் தாக்கியுள்ளனர். ஏமனின் தென்பகுதியில் அல்கொய்தாவினரின் ஆதிக்கம் அதிகம் உண்டு.நான் பதவி விலகினால் அல்கொய்தாவின் பிடி அதிகரித்து விடும் என சலே கூறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உளவு பார்க்கும் செயற்கைகோளை விண்ணில் ஏவியது ஜப்பான்.
வட கொரியாவின் ஏவுகணை வளர்ச்சியால் பீதியடைந்துள்ள ஜப்பான் நேற்று(12.12.2011) உளவு பார்க்கும் செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் ஏவியது.சர்வதேச நெருக்கடி இருந்த போதிலும் 2009ம் ஆண்டில் வட கொரியா டாபோடாங்-2 என்ற ஏவுகணையை வெற்றிகரமாக விண்ணில் ஏவி பரிசோதித்தது.
இந்த ஏவுகணை 6,700 கி.மீ தூரம் சென்று தாக்கக்கூடிய திறன் கொண்டது. மேலும் பல ஏவுகணைகளை வட கொரியா தயாரித்து வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.இதனால் அண்டை நாடான ஜப்பான் பீதியடைந்துள்ளது. ஜப்பானின் தென்பகுதியில் உள்ள டனேகஷிமா விண்வெளி மையத்தில் இருந்து இந்திய நேரப்படி நேற்று காலை எச்-2ஏ என்ற ஏவுகணை மூலம் உளவு பார்க்கும் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.வடகொரியாவின் ஏவுகணைப் பரிசோதனைகளை உளவு பார்க்கும் அதேநேரம் ஜப்பானின் உள்பகுதியில் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், இந்த செயற்கைக்கோள் கண்காணித்து தகவல்களை அளிக்கும்.
பாகிஸ்தான் உளவு அமைப்புடன் இம்ரான்கானுக்கு தொடர்பு: இராணுவ வீரர் குற்றச்சாட்டு.
பாகிஸ்தானில் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் எனக்கு தொடர்பிருப்பதாக நிரூபித்தால் நான் அரசியலை விட்டு செல்கிறேன் என அந்நாட்டு முன்னாள் கிரிக்கட் அணித்தலைவரும், அரசியல் கட்சித்தலைவருமான இம்ரான்கான் கூறியுள்ளார்.
பாகிஸ்தானி தக்ரிக்-இ-இன்சாப் எனும் கட்சியை இம்ரான்கான் நடத்தி வருகிறார். கடந்த அ‌க்டோபர் மாதம் கட்சியின் சார்பில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினார்.இந்நிலையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ தான் இம்ரான்கானின் கட்சியை வழிநடத்துகின்றன என அந்நாட்டு முன்னாள் இராணு வீரரும், அரசியல்வாதி ஒருவர் தொடர்ந்து கூறிவந்தார்.இது குறித்து இம்ரான்கான் கூறுகையில், என் மீதான குற்றச்சாட்டு பொய்யானது. ஐ.எஸ்.ஐ.வுடன் எனக்கு தொடர்பில்லை. அப்படி எனக்கு தொடர்பிருப்பதாக நிரூபித்தால் நான் அரசியலை விட்டு செல்கிறேன் என்றார்.
சவூதி அரேபியாவில் பெண்ணுக்கு தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றம்.
சவூதி அரேபியாவில் சூன்யம், மந்திரம் பழகியதாக எழுந்த முறைப்பாட்டின் பேரில் பெண் ஒருவருக்கு தலை துண்டித்து கொடூர தண்டனை அளிக்கப்பட்டது.அரேபிய நாடான சவூதியில் பல்வேறு குற்றங்களுக்கு அந்நாட்டில் கொடூர தண்டனை விதிக்கப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் சவூதி அரேபியாவின் வடக்கு மாகாணமான ஜாவ்ப் பகுதியைச் சேர்ந்த அபினா பிந்த் அப்துல்லாஹிம் நாஸர் என்ற பெண் மந்திரம், பில்லி, சூனியம் போன்றவைகளை கற்றுக்கொண்டதாக தெரியவந்ததையடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டார்.அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்தாண்டில் இதுவரை 73 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரம் கூறுகிறது. சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா பொதுச்சபையில் பல்வேறு குற்றங்களுக்கு கொடூர தண்டனை வழங்கப்படுவதை தடை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய ஜனாதிபதி தேர்தல்: புடினை எதிர்த்து மிக்கேல் போட்டியிடப் போவதாக அறிவிப்பு.
ரஷ்ய நாடாளுமன்றத்துக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக பிரதமர் விளாடிமிர் புடினின் ஐக்கிய ரஷ்ய கட்சி மீது பல முறைப்பாடுகள் எழுந்துள்ளது.இதுகுறித்து விசாரணை நடத்த ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவ் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில் புடின் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார். இதற்கும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.மேலும் நியூ ஜெர்சி நெட்ஸ் பேஸ்கட்பால் குழு ஜனாதிபதியும், உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரருமான மிக்கேல் புரகோரோவ்(45) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக நேற்று(12.12.2011) அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், என் வாழ்க்கையில் இதுவரை நான் எடுத்த முடிவுகளிலேயே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எடுத்த முடிவு தான் மிகச் சிறந்தது என்றார்.
இந்தோனேசியா பகுதியில் கடுமையான நிலநடுக்கம்.
இந்தோனேசியாவின் மையப்பகுதியில் இன்று(13.12.2011) ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் சுமார் 20 வினாடிகள் நீடித்தது. இந்த நிலநடுக்கத்தால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
இந்தோனேசியாவின் மையத்தில் அமைந்துள்ள ஜகார்தா பகுதியில் நிலநடுக்கம் 6.1ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் எவ்வித சேதமுமின்றி மக்கள் தப்பினர். மேலும் சுனாமி வருவதற்கான வாய்ப்பில்லை எனவும் அவர்கள் அறிவித்திருந்தனர்..
பஹ்ரைனில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்: கமரூன்.
பஹ்ரைன் மன்னர் தான் ஒத்துக்கொண்ட சீர்திருத்தங்களையும், சமரசங்களையும் தனது நாட்டில் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் வலியுறுத்தியுள்ளார்.பஹ்ரைன் நாட்டின் மன்னரான ஹமது அரசர் பிரிட்டனுக்கு வருகை புரிந்து பிரதமர் கமரூனைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பஹ்ரைனில் மனித உரிமைகளுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்று கமரூன் வலியுறுத்தினார். மன்னரும் பஹ்ரைனில் உள்ள நிதி அமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை வரவேற்றார். இருவரும் தங்கள் நாடுகளுக்கிடையிலான வர்த்தகக் கூட்டுறவு குறித்தும் பேசினர்.
இதுகுறித்து பேட்டியளித்த மன்னர், வன்முறைகளுக்குக் காரணமாக சில தனிநபர்களைக் குற்றம் சாட்டினார். தனது நாட்டில் பெரும்பான்மையாக வாழும் ஷியா முஸ்லிம்களை சிரியாவும், ஈரானும் தூண்டிவிட்டு சன்னி பிரிவு முஸ்லிம்களைத் தாக்குகின்றனர் என்றார்.இந்தத் தாக்குதல் அரசின் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டது, தனிநபர் விருப்பு வெறுப்பு சார்ந்தது என்றும் விளக்கிக் கூறினார். தனது அரசை எதிர்க்கும் பலர் சிரியாவில் தான் அதற்கான பயிற்சியைப் பெறுகின்றனர் என்றும் தெரிவித்தார்.
இந்தப் பிரச்னைகளுக்குக் காரணம் உலகத்தாரின் பார்வையை சிரியா மற்றும் ஈரானில் இருந்து விலக்கி பஹ்ரைன், சவுதி அரேபியா மற்றும் குவைத் பக்கமாகத் திருப்பிவிடுவதேயாகும் என்று கூறினார்.இதற்கு முன்பு பிரிட்டன் பஹ்ரைனுடன் வர்த்தகம் மற்றும் பாதுகாப்புத் தொடர்புகளை ஏராளமாக வைத்திருந்தது. ஆனால் இப்போது சில சமயவாதிகளால் ஏற்படும் பிரச்னை காரணமாகத்தான் அனைத்துத் தொடர்புகளையும் ரத்துச் செய்தது என்று பிரிட்டனின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்தார்.
காதலித்ததால் மகளை சுட்டுக் கொன்ற தந்தை.
பாகிஸ்தானை சேர்ந்தவர் தாரிக் மமூத் ஷேக். இவரது இளைய மகள் சாதியா ஷேக், பெல்ஜியத்தில் சட்டப் படிப்பு படித்த போது அங்கு ஒரு வாலிபரை காதலித்துள்ளார்.இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கு தாரிக் மற்றும் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அத்துடன் பாகிஸ்தானில் உள்ள உறவுக்கார வாலிபரை சாதியாவுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர். இதை எதிர்த்த சாதியா பெற்றோருடன் தகராறு செய்தார்.2007ம் ஆண்டு அக்டோபர் 22ம் திகதி பெல்ஜியம் வந்த தாரிக், இவரது மனைவி ஜாஹிதா பர்வீன் சரியா, மகன் முடுசார், மூத்த மகள் சாரியா ஆகியோர் சமாதான பேச்சு நடத்தினர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் சகோதரி சாதியாவை முடுசார் சுட்டுக் கொன்றார். 4 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் நீதிமன்றம் நேற்று(12.12.2011) தீர்ப்பளித்தது. தாரிக் மமூத்துக்கு 25 ஆண்டு சிறை, தாய் ஜாஹியாவுக்கு 20 ஆண்டு சிறை, சகோதரன் முடுசாருக்கு 15 ஆண்டு சிறை, சகோதரி சாரியாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிரியாவில் தொடரும் வன்முறை: பலி எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்வு.
சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த 10 மாதங்களாக பொதுமக்கள் போராட்டம் நடந்து வருகிறது.போராட்டத்தில் ஈடுபடுபவர்களை இராணுவம் கொன்று குவித்து வருகிறது. இதனால் அங்கு தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில் இராணுவம் சுட்டத்தில் இதுவரை 5 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இந்த தகவலை ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நவிபிள்ளை தெரிவித்துள்ளார். கடந்த 10 நாட்களில் மட்டும் 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.சிரியாவில் மனிதாபிமானத்துக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே இதுகுறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்படும் என்றும் நவிபிள்ளை கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு உதவிகள் நிறுத்தப்படும்: அமெரிக்கா.
பயங்கரவாதிகள் பயன்படுத்தும் வெடிமருந்து பொருட்களை பாகிஸ்தான் தடை செய்யாத வரை அந்நாட்டுக்கு அளிக்கப்படும் இராணுவ உதவி நிறுத்தப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைதி பணியில் நேட்டோ படைகள் ஈடுபட்டுள்ளன. இந்த படைகள் மீது தலிபான்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்து பொருட்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன.பாகிஸ்தானில் முகாமிட்டுள்ள பயங்கரவாதிகள் இந்த வெடிமருந்து பொருளை தயாரித்து வருகின்றனர். இதை தடை செய்யும்படி அமெரிக்கா பலமுறை பாகிஸ்தானிடம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த வெடிமருந்து பொருள் தயாரிப்பை பாகிஸ்தான் தடுப்பதாக தெரியவில்லை. எனவே பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் 700 மில்லியன் அமெரிக்க டொலர் இராணுவ உதவியை நிறுத்தி விடும்படி அமெரிக்க பிரதிநிதிகள் சபையும், செனட் சபையும் ஒருமித்த கருத்தை தெரிவித்துள்ளன.எனினும் இந்த விடயத்தில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதி ஒபாமாவின் வசம் தான் உள்ளது.
அமெரிக்க உளவு விமானத்தை திருப்பி தாருங்கள்: ஈரானிடம் ஒபாமா வேண்டுகோள்.
அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த ஆளில்லா உளவு விமானமொன்று ஈரான் நாட்டு இராணுவத்தினரால் கடந்த 4ம் திகதி தரையிரக்கப்பட்டது.அந்த விமானத்தை தங்களிடம் திருப்பித் தர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.அமெரிக்க நாட்டின் இராணுவத் துறையைச் சேர்ந்த உளவு விமானம் ஆளில்லாமல் இயங்க வல்லது. இவ்வகை விமானமொன்று ஈரான் நாட்டின் மீது பறந்து கொண்டிருந்த போது ஈரான் நாட்டு இராணுவத்தினரால் தரையிறக்கப்பட்டது.
இதுகுறித்து அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹலாரி கிளின்டன் கூறுகையில், ஈரான் பிடித்து வைத்துள்ள அமெரிக்க விமானத்தை திருப்பித் தருமாறு பலமுறை ஈரான் நாட்டிடம் கோரி உள்ளோம் என்றார்.இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள ஈரான் பிரதமர் நூரி அல் மாலிகி, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்து பேசினார்.
பின்னர் இருவரும் இணைந்து நடத்திய நிருபர்கள் சந்திப்பில் பேசிய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஈரான் நாட்டில் உள்ள அமெரிக்க விமானத்தை எங்களிடம் திருப்பித் தருமாறு கோரி உள்ளோம். அதற்கு ஈரான் என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை எதிர்பார்த்துள்ளோம்.விமானத்தை ஈரான் பிடித்து வைத்துள்ளதால் வருங்காலத்தில் அமெரிக்கப் பாதுகாப்பிற்கு பாதிப்பு வருமா என்பது குறித்தெல்லாம் விரிவாக பதில் அளிக்க முடியாது என்று தெரிவித்தார்.
கியோட்டோ உடன்பாடு: கனடா விலகுவதாக அறிவிப்பு.
புவி வெப்பமடைவதைத் தடுப்பதற்காக ஜப்பானின் கியோட்டோ நகரில் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டிலிருந்து விலகுவதாக கனடா அறிவித்துள்ளது.கரியமில வாயு வெளியேற்றுவதைக் குறைப்பது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதலின்படி கியோட்டோவில் 1997ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் திகதி நடைபெற்ற மாநாட்டில் உடன்பாடு எட்டப்பட்டது.கரியமில வாயுவை அதிகம் வெளியேற்றும் அமெரிக்கா, சீனா உட்பட இரு நாடுகளும் இந்த மாநாட்டில் எட்டப்பட்ட தீர்மான வரம்பிற்குள் வரவில்லை. எனவே உடன்பாட்டிலிருந்து விலகுவதாக கனடா அறிவித்துள்ளது.
கனடாவின் விலகல் தீர்மானத்தை அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் பீட்டர் கென்ட் முறைப்படி வெளியிட்டார்.தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு கடந்த வாரம் நடைபெற்றது. இம்மாநாட்டில் 194 நாடுகள் பங்கேற்றன. அப்போது கரியமில வாயுவைக் கட்டுப்படுத்துவதற்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டு அதை அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்டன.மாநாடு முடிவடைந்த இரண்டே நாளில் கியோட்டோ உடன்பாட்டிலிருந்து விலகுவதாக கனடா அறிவித்துள்ளது.
கியோட்டோ உடன்பாட்டில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் அதிலிருந்து விலக முடிவு செய்யப்பட்டதாக கென்ட் அறிவித்தார். இப்போது டர்பனில் எட்டப்பட்ட தீர்மானத்தின்படி நடக்க முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.டர்பன் தீர்மானத்தை பின்பற்ற முக்கிய நாடுகள் முன்வந்துள்ளதாக அவர் கூறினார். இந்த வார தொடக்கத்தில் உலக அளவில் கரியமில வாயுவை 30 சதவீத அளவுக்கு வெளியேற்றும் நாடுகள் கியோட்டோ உடன்பாட்டு பட்டியலில் இடம்பெற்றிருந்தன.
அதில் கனடா விலகியதால் இந்த அளவு 13 சதவீத அளவுக்குக் குறைந்துள்ளது. அமெரிக்காவும், சீனாவும் கியோட்டோ உடன்பாட்டு வரம்புக்குள் வராததால், இந்த உடன்படிக்கை சரிவர செயல்படுத்தப்படாது என்பதாலேயே இதிலிருந்து விலக கனடா முடிவு செய்ததாக கென்ட் அறிவித்தார்.சர்வதேச அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தில் கனடாவின் பங்கு 2 சதவீதமாகும். இருப்பினும் சர்வதேச அளவில் இந்த உடன்படிக்கையை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டதாக கென்ட் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
27ம் திகதிக்குள் ஸர்தாரி நாடு திரும்புவார்: பாகிஸ்தான் அமைச்சர்.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி ஸர்தாரி எதிர்வரும் 27ம் திகதிக்கு முன்னதாக நாடு திரும்புவார் என மத விவகாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் ஜனாதிபதி ஸர்தாரி கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிகிச்சைக்காக துபாய் நாட்டிற்கு சென்றிருந்தார்.
இதனை தொடர்ந்து அவர் பதவி விலகப் போவதாக வதந்தி கிளம்பியது. இதனை மறுத்து வரும் பாகிஸ்தான் அமைச்சர்கள் ஸர்தாரி ஆரோக்கியத்துடன் இருப்பதாக கூறி வருகின்றனர்.இந்நிலையில் மத விவாகரங்களுக்‌கான அமைச்சர் சையத் குர்ஷித் ஷா கூறுகையில், எதிர்வரும் டிசம்பர் மாதம் 27ம் திகதிக்கு முன்னதாகவே ஸர்தாரி நாடு திரும்புவார் என கூறினார்.
மேலும் சிந்து மாகாணத்தில் 27ம் திகதி நடைபெறவிருக்கும் பெனாசிர் பூட்டோ நினைவிடத்தில் நிகழவிருக்கும் நிகழ்ச்சியில் மக்களை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.கடந்த 2007ம் ஆண்டு சிந்து மாகாணத்தில் உள்ள ராவல் பிண்டியில் நடைபெற்ற ‌பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பெனாசிர் பூட்டோ மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.
அவுஸ்திரேலியாவின் தெற்கு பசிபிக் தீவான பப்புவா நியு கினியாவின் கடலோர பகுதியில் 7.3 ரிக்டர்(Richter) அளவில் இன்று(14.12.2011) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், சேதங்கள் குறித்தும் இதுவரை எந்த தகவல்களும் இல்லை.சுனாமி போன்ற எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.
கொலம்பியாவில் பலத்த மழை: நிலச்சரிவில் சிக்கி 144 பேர் பலி.
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது.
வடக்கு பகுதியில் உள்ள லா குரூஸ் நகரில் மழை காரணமாக நேற்று(13.12.2011) நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மூன்று வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.அங்கு வசித்த 18 பேர் இடிபாடுகளில் சிக்கினர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. நிலச்சரிவு காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. கடும் மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
நிலச்சரிவு அபாயம் இருக்கும் இடங்களில் வீடுகளை விட்டு வெளியேறுமாறு மக்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் அங்கு ஓடும் மயோ ஆற்றில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆற்றின் கரையோரங்களில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் முதல் நீடித்து வரும் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 144ஆக உயர்ந்துள்ளது, 125 பேர் காயமடைந்துள்ளனர், பலரை காணவில்லை.5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் பிரான்ஸ் முன்னாள் அமைச்சர் கைது.
பாகிஸ்தான் நாட்டிற்கு நீர்மூழ்கிக் கப்பல் விநியோகம் செய்தது தொடர்பான ஊழல் வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.பிரான்ஸ் நாட்டின் கலாசாரத் துறை அமைச்சராக கடந்த 2004ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை பதவி வகித்தவர் டோனிடியூ டி வேப்ரஸ்(57).
இவர் கடந்த 1994ம் ஆண்டு இராணுவ அமைச்சரின் ஆலோசகராக பணியாற்றினார். அப்போது பாகிஸ்தானுக்கு நீர் மூழ்கிக் கப்பல் விற்றதில் நடந்த ஊழலில் இவர் மீது முறைப்பாடு சுமத்தப்பட்டது.இந்த சம்பவம் குறித்து தனக்கு ஏதும் தெரியாது என பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி தெரிவித்துள்ளார். எனினும் வேப்ரஸ் இந்த ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டார்.
பிரான்சின் அரோவா அணு மின் நிலையத்தில் ஆட்குறைப்பு.
பிரான்ஸ் நாட்டில் உள்ள அரோவா அணு மின் நிலையத்தின் நிதி நிலைமை மோசமாகி விட்டதால் ஆட்குறைப்புச் செய்ய வேண்டிய கட்டாயம் நிலை ஏற்பட்டுள்ளது.ஜப்பானின் புகுஷிமாவின் அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட கதிர்வீச்சுப் பிரச்னையால் பிரான்சின் அரேவா அணு மின் நிலையத்தின் வர்த்தக பங்குகள் சரிவை சந்தித்தன. இதனால் இந்நிறுவனம் நிதி இழப்பில் சிக்கிக்கொண்டது.
பிரான்ஸ் அரசின் பெரும்பான்மைப் பங்குகளை இந்த அணு மின் நிலையம் கொண்டுள்ளது. ஆனால் இன்று அதனுடன் யாரும் தொடர்ந்து வர்த்தகத் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்பவில்லை.கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இந்த ஆண்டு இந்நிறுவனம் பெருத்த நிதி இழப்பைச் சந்திக்கப் போகின்றது. விரைவில் அரோவாவின் இழப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று பிரான்சின் தொழில்துறை அமைச்சர் ஏரிக் பெஸ்ஸோன் தெரிவித்தார்.
எலிசபெத் டெய்லரின் நகைகள் ஏலம்.
பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர். இவர் தனது 79வது வயதில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மரணம் அடைந்தார்.இவர் ஆடைகள் மற்றும் நகைகள் அணிவதில் ஆர்வம் கொண்டவர். எனவே இவர் விதவிதமான நகைகள் மற்றும் ஆடைகளை சேகரித்து வைத்திருந்தார்.
அவை நியூயோர்க்கில் உள்ள கிறிஸ்டிஸ் அமெரிக்காஸ் என்ற ஏல மையத்தில் வைத்து ஏலம் விடப்படவுள்ளது.அதற்காக எலிசபெத் டெய்லரின் 400 ஆடைகள், 269 விதமான நகைகள் மற்றும் அவர் வாங்கிய விருதுகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.அவற்றில் அவரது நண்பரான மறைந்த பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் பரிசாக வழங்கிய வைரம் மற்றும் நீலக்கல்லால் ஆன மோதிரமும் அடங்கும்.
அந்த மோதிரத்தை ஏலத்தில் எடுக்க ஏற்கனவே ஒருவர் 3 கோடி ரூபாயை(இந்திய ரூபாய்) முன்பணமாக வழங்கி உள்ளார்.ஏலம் 4 நாட்கள் நடைபெற உள்ளது. நகைகள் மற்றும் உடைகள் மொத்தம் ரூ.150 கோடிக்கு(இந்திய ரூபாய்) ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஏல மையத்தின் தலைவர் மார்க் போர்டர் கூறுகையில், இவை அனைத்தும் நடிகை எலிசபெத் டெய்லர் தனிப்பட்ட முறையில் தெரிவு செய்த நகைகளாகும். 50 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் பயன்படுத்தப்பட்டவையாகும். அவற்றை அவர் மிகவும் விரும்பி தெரிவு செய்து சேகரித்து வைத்து இருந்தார் என்று தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பின் ஆலோசகராக குட்டன்பெர்க் நியமனம்.
ஜேர்மனியின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த கார்ல் தியோடேர் ஸுகுட்டன்பெர்க்(Karl-Theodor zu Guttenberg) என்பவர் பிறர் கருத்துக்களைத் திருடி கலாநிதி(Ph.D) பட்டத்தை பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தனது பதவியை இழந்தார்.ஆனால் தற்பொழுது ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் நீலி குரோயஸ்(Neelie Kroes) குட்டன்பர்கை ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பின் ஆலோசகராக நியமித்தார். இது ஒரு கௌரவப் பதவி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நியமனம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. அதற்குப் பதிலளித்த குரோயஸ், எனக்குத் தேவை திறமைசாலி தான் என பதிலளித்தார்.40 வயது நிரம்பிய குட்டன்பர்க் ஒரு காலத்தில் ஜேர்மனியின் பழமைவாதிகளுக்கு உதாரணமாக விளங்கினார். கருத்துத் திருட்டுக் குற்றச்சாட்டுக்கு ஆளானதால் ஒன்பது மாதம் பதவியின்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி இவர் வளர்ந்த நாடுகளின் அடக்குமுறையால் தவிக்கும் வலைப்பதிவாளர்கள் மற்றும் இணையப்பதிவாளர்களுக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றியம் செயல்பட உதவுவார்.பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த மாநாட்டின் போது செய்தியாளர் சந்திப்பில் குட்டன்பர்க், தன் பொறுப்பை உணர்ந்து செயல்படுவேன் என்று தெரிவித்தார்.
முஷாரப் எப்போது பாகிஸ்தான் வந்தாலும் கைது செய்வோம்: பாகிஸ்தான் ஆளுநர்.
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் எப்போது நாடு திரும்பினாலும் உடனே கைது செய்யப்படுவார் என்று அந்நாட்டு பஞ்சாப் மாநில ஆளுநர் லத்தீப் கோஷா தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தின் ஆளும் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் லத்தீப் கோஷா ஆளுநராக உள்ளார்.
அவர் லாகூரில் நிருபர்களிடம் கூறியதாவது: முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக முஷாரப் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறார். எனவே அவர் எப்போது நாடு திரும்பினாலும் உடனடியாக அவரை கைது செய்வோம் என்றார்.பாகிஸ்தானிலிருந்து கடந்த 2009ம் ஆண்டில் முஷாரப் தப்பியோடினார். அதன்பின் இங்கிலாந்திலும், துபாயிலுமாக வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 23ம் திகதி பாகிஸ்தானுக்கு திரும்பி செல்வேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நைஜீரியாவில் குண்டுவெடிப்பு, துப்பாக்கிசூடு: 10 பேர் பலி.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலிலும், பாதுகாப்புப் படைகள் துப்பாக்கியால் சுட்டதிலும் 10 பேர் உயிரிழந்தனர்.நைஜீரிய நாட்டின் மெய்டுகுரி நகரில், போரோ ஹாரம் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஒருவர் பாதுகாப்புப் படைகள் மீது வெடிகுண்டு வீச முற்பட்ட போது அது வெடித்ததால் உயிரிழந்தார்.
இதையடுத்து பாதுகாப்புப் படைகள் அந்தப் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்தச் சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்தனர், 30 பேர் காயமடைந்தனர்.மேலும் அங்குள்ள சில வீடுகளையும் படையினர் எரித்ததோடு மட்டுமல்லாமல் சில குடியிருப்புவாசிகளையும் அவர்கள் தாக்கியுள்ளனர். இங்கு நடத்தவற்றை மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்பதற்காக, இங்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று குடியிருப்புவாசி ஒருவர் தெரிவித்தார்.
மக்கள் கொல்லப்பட்டதை மறுத்துள்ள பாதுகாப்பு உயரதிகாரி ஒருவர், குண்டு வெடிப்புச் சம்பவத்தையடுத்து வீடுகள் எரிந்த போது சில பெண்களையும், குழுந்தைகளையும் இராணுவம் மீட்டுள்ளதாகத் தெரிவித்தார்.போகோ ஹாரம் என்ற அடிப்படைவாத அமைப்பு நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டப்படியான ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளில் இயங்குவது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில் பலத்த காற்று: போக்குவரத்து கடுமையாக பாதிப்பு.
பிரிட்டனின் தென் கடற்கரைப் பகுதியில் புயல்காற்று மணிக்கு எழுபது மீற்றர் வேகத்தில் வீசியது. இதனால் மின்கம்பங்கள் தரையில் சாய்ந்தன.சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது, மின்சாரம் இல்லாததால் நகரங்கள் இருளில் மூழ்கின. இந்த வார இறுதியில் இன்னும் பலமான காற்று வீசும் என்று வானிலை அறிவிப்பு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஆறுகளில் வெள்ளம் பெருகுவதால் பிரான்ஸ் நாட்டிற்கு சென்று வரும் படகுகளும் நிறுத்தப்பட்டன. இன்னும் ஒரு பலத்த புயல் வீசக்கூடும் என்பதால் நிலைமையைக் கூர்ந்து கவனித்து வருவதாக வானிலை அறிவிப்பாளர் டிம் ஹியூசன் தெரிவித்தார்.
வானிலை அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்படுவதால் மக்கள் அதனைக் கேட்டு செயல்படுவது பாதிப்புகளைத் தடுக்கும் என்றார்.ஸ்காட்லாந்தில் பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் சாலைகளில் வாகனங்கள் செல்ல சிரமப்படுகின்றன. பத்து சென்டி மீற்றர் உயரத்திற்கு பனி படர்ந்துள்ளது. எனவே மாலை வேலைகளில் ஓட்டுநர்கள் தம் வண்டியின் வேகத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.
பயங்கரவாதச் செயல்களுக்கு ஆப்கான் அகதிகளே காரணம்: ஹீனா ரப்பானி குற்றச்சாட்டு.
ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி புர்ஹானுதின் ரப்பானியின் படுகொலைக்கு பாகிஸ்தானிலுள்ள ஆப்கான் அகதிகளே காரணம் என்று பாகிஸ்தான் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹீனா ரப்பானி குற்றம்சாட்டினார்.மேலும் ஆப்கானில் நடைபெறும் பல்வேறு பயங்கரவாதச் செயல்களுக்கும் பாகிஸ்தானிலுள்ள ஆப்கான் அகதிகளே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது: ஆப்கான் அகதிகள் எல்லையைக் கடந்து காபூலில் நுழைந்து தாக்குதல் நடத்தியதற்கு நாங்கள் பொறுப்பல்ல.
ஆப்கானிஸ்தானின் அனைத்துப் பிரச்னைகளுக்கும், அங்கு நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் பாகிஸ்தானை குற்றம் சாட்டக்கூடாது. அந்நாட்டில் நடைபெறும் தாக்குதல்களுக்கு பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ள ஆப்கான் அகதிகளே காரணமாகும்.அண்மையில் காபூலில் நடைபெற்றத் தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் மீது எவ்வித அடிப்படையுமில்லாமல் குற்றம் சுமத்தப்படுகிறது. அங்கு நடைபெறும் பிரச்னைகளுக்கு பாகிஸ்தானை பலிகடாவாக்க ஆப்கானும், பிற நாடுகளும் முயற்சி செய்யக் கூடாது.
பாகிஸ்தான் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நாடே தவிர, பிரச்னைகளை உருவாக்கும் நாடல்ல என்றார்.முன்னதாக ரப்பானியின் படுகொலைக்கான திட்டம் பாகிஸ்தானில் தீட்டப்பட்டது என்றும், அதை நிலைவேற்றியவர் பாகிஸ்தானியர் என்றும் ஆப்கான் அதிகாரிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF