Saturday, June 11, 2011

இன்றைய செய்திகள்.

சிறிலங்கா கடற்படையின் 42 கொமாண்டோக்கள் இந்தியாவுக்கு இரகசியப் பயணம்.

சிறிலங்கா கடற்படையின் சிறப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த 42 கொமாண்டோக்கள் இந்தியாவுக்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இந்திய- சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்திக் கொள்ளும் ஒரு நடவடிக்கையாவே இந்தப் பயணம் இடம்பெற்றுள்ளது. 

கடந்த செவ்வாய்க்கிழமை சிறிலங்கா கடற்படைக் கொமாண்டோக்கள் மும்பை அனைத்துலக விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர். எனினும் இதுதொடர்பாக இரு நாட்டு அரசாங்கங்களும் எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. தீவிரவாத அச்சுறுத்தல்களை முறியடித்தல், சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிரச்சினையை சமாளித்தல் உள்ளிட்ட விவகாரங்களில் இணைந்து செயற்படுவதற்காக உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளவே சிறிலங்கா கடற்படை கொமாண்டோக்கள் இந்தியா சென்றுள்ளனர்.

தமது பயணத்தின் பிரதான நோக்கம் இருநாட்டு கடற்படைகளுக்கும் இடையில் பலமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதே என்று மும்பை விமான நிலையத்தில் வைத்து சிறிலங்கா கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தாம் இந்தியாவில் எந்தவொரு கூட்டு நடவடிக்கையிலும் ஈடுபடப் போவதில்லை என்று தனது பெயரை வெளியிட விரும்பாத அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இந்திய அதிகாரிகளுடன் இணைந்து பல முக்கியமான இடங்களுக்கு செல்லவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மும்பையில் இந்தியக் கடற்படை அதிகாரிகளுடன் சில நாட்களை செலவிட்ட பின்னர், கோவா மற்றும் சென்னைக்குச் செல்லவுள்ளதாகவும், எதிர்காலத்தில் முக்கியமான இடங்களில் விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுப்பது பற்றி இதன்போது ஆராயப்படும் என்றும் அந்த கடற்படை அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். சோமாலியக் கடற்கொள்ளையர்களுக்கு சிறிலங்கா கடற்படை, எரிபொருள் நிரப்பவும், மீள் ஒழுங்கு செய்யவும் இடமளித்து உதவி வருவதாகச் செய்திகள் வெளியானதை அடுத்து இருநாட்டுக் கடற்படைகளுக்கும் இடையில் பதற்றமான சூழல் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆறுமாத கெடு விதித்துள்ள இந்தியா.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு இந்தியா ஆறுமாத கெடுவொன்றை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்வொன்றை வழங்குமாறு கோரியே இந்திய அரசாங்கம் பிரஸ்தாப ஆறுமாதக் கெடுவை விதித்துள்ளதாக மேலதிக தகவல்கள் மூலம் தெரிய வருகின்றது.
அண்மையில் இந்தியாவுக்கு விஜயமொன்றை  மேற்கொண்டிருந்த வெளிவிவகார அலுவல்கள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மூலமாக இந்திய அரசாங்கம் தனது ஆறுமாத காலக்கெடு குறித்த தகவலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ளது.விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவடைந்த பின் ஜனாதிபதி மேற்கொண்ட இந்தியப் பயணங்களின்போதெல்லாம் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக வலியுறுத்தியிருந்தார்.
ஆயினும் அவர் வாக்குறுதியளித்துள்ளதன் பிரகாரம் அதிகாரப் பரவலாக்கலுக்கான எந்தவொரு முயற்சியையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்ற நிலையிலேயே இந்தியா கடுப்புடன் நடந்து கொள்ள முயற்சிக்கின்றது.அத்துடன் இந்தியாவுக்கு எதிரான அமைச்சர்கள் விமல் வீரவங்ச மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோரின் செயற்பாடுகள் குறித்தும் இந்திய அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
கிழக்கில் கொல்லப்பட்ட 600 பொலிஸாருக்கு நினைவஞ்சலி.
இலங்கையின் கிழக்கே சுமார் 600 பொலிசார் 1990 ஜூன் 11 அன்று விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட சம்பவத்தின் இருபத்தோராம் நினைவஞ்சலி நிகழ்வுகள் இலங்கையில் நடந்துள்ளன. இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பொலிஸ் பிரிவுகளில் இருந்து சரணடைந்த பொலிஸ்காரர்கள் கொல்லப்பட்ட இச்சம்பவத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள 450க்கும் மேற்பட்ட பொலிஸ் நிலையங்களில் மௌன அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவு தினத்தின் முக்கிய சடங்கு கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்தில் அமைந்துள்ள பொலிஸ் தியாகிகள் நினைவு மையத்தில் நடந்தது.இலங்கையின் பொலிஸ்துறை தலைவராக இடைக்காலப் பணியாற்றி வருகின்ற ஐ.ஜி.பி. இலங்கக்கோன் இந்த நினைவுச் சடங்குக்கு தலைமையேற்றிருந்தார்.
இருபத்தொரு ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்த கொலைகள் தொடர்பிலான விசாரணைகள் முடிவடையாமல் இருப்பது கவலையளிக்கிறது என்று அச்சமயம் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரியான டஸ்ஸி சேனவிரத்ன பிபிசியிடம் தெரிவித்தார்.இந்த மோசமான சம்பவம் அரங்கேறிய நேரம் கிளர்ச்சி அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் இப்போது அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கும் துரதிருஷ்ட நிலையை நாம் காண்கிறோம்.
இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி ஆர். பிரேமதாஸவின் உத்தரவுக்கு அமைய விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த பொலிஸ்காரரகள் அறுநூறு பேரை விடுதலைப் புலிகள் கொன்றதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.1987ல் இந்திய மத்தியஸ்தத்தின் ஊடாக இலங்கையில் கொண்டுவரப்பட்டிருந்த போர்நிறுத்தம் இந்த சம்பவத்துடன் தான் முடிவுக்கு வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவுக்கு தலையைக் காட்டி மஹிந்தருக்கு வாலைக் காட்டிய மேனன்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள இன முரண்பாடுகளுக்கு விரைவானதொரு தீர்வை எட்ட வேண்டும் என்று மஹிந்த ராஜபக்ஸ அரசிற்கு இந்தியா அழுத்தம் கொடுத்துள்ளது. தமிழ் மக்களுடன் இலங்கை அரசாங்கம் விரைவாக சிறந்ததொரு அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மகிந்த ராஜபக்ஸவிடம் தெரிவித்துள்ளார். 


இந்திய உயர்மட்டக்குழு இன்று பிற்பகல் அலரிமாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்துப் பேச்சு நடத்தியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். 1987 ஆம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தத்தினூடாக 13 ஆவது அரசியல்யாப்பு சீர்திருத்தத்தை மேம்படுத்துவது தொடர்பாக இலங்கை முன்னரே வாக்குறுதியளித்திருந்தது.ஆனால் இலங்கை அதனை செய்யத் தவறிவிட்டது என்று சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


எனினும், இலங்கை தொடர்பாக தமிழக சட்டசபை அண்மையில் நிறைவேற்றிய தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடப்படவில்லை என சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டதை இந்திய தூதுக்குழு தெரிவித்தது. இருதரப்புக்கும் இடையிலான சந்திப்புக்கான திகதி நிர்ணயிக்கப்படவில்லை எனவும் சிவ்சங்கர் மேனன் இந்திய ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். 


மீனவர் பிரச்சினை குறித்து இரு நாடுகளின் மீனவர் சங்கங்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இருதரப்புக்கும் நன்மையளிக்கக்கூடிய தீர்மானங்களை மேற்கொள்வார்கள் எனவும் சிவசங்கர் மேனன் மேலும் தெரிவித்துள்ளார்.சிவசங்கர் மேனனின் இலங்கை விஜயத்திற்கு முன்னர் மேனனை சந்தித்த ஜெயலலிதா, இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மற்றும் முகாம்களில் உள்ள மக்கள் தொடர்பாக குழப்பமான தகவல்கள் வெளியாகின்ற நிலையில், 


இது தொடர்பாக சரியான தகவல்களை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிவசங்கர் மேனனிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இடம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவதுடன் , அவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் சரியான விதத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும். அரசியல் ரீதியாக சிங்களவர்களுக்கு இணையான உரிமைகள் தமிழருக்கும் கிடைக்க வழி செய்யப்பட வேண்டும் என்றும் சிவ்சங்கர் மேனனிடம் வலியுறுத்தியுள்ளார். 


கடந்த காலங்களில் இலங்கை அரசினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பின்பற்றப்படாது குறித்தும் சிவசங்கர் மேனனிடம் கூறியுள்ளார். இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக மகிந்த ராஜபக்ஸவிடம் எடுத்துரைப்பதாக சிவசங்கர் மேனன் தெரிவித்திருந்தார். எனினும் இந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
 13ம் திருத்தச் சட்டத்துக்கு அப்பால் என்பது என்ன? அரசியல் தீர்வு குறித்து ஐ.தே.க கேள்வி.
தமிழ் மக்களுக்கு வழங்க இருப்பதாக கூறப்படும் 13ம் திருத்தச் சட்டத்துக்கு அப்பால் என்பது என்ன? என ஐக்கிய தேசிய கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.13ம் சட்டத்துக்கு அப்பால் சென்று அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு தீர்வு வழங்குமானால், அந்த தீர்வு என்னவென அரசாங்கம் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளின் அழுத்தங்களின் அடிப்படையில், வடக்கு மக்களுக்கு அரசியல் தீர்வை முன்வைப்பதாக அரசாங்கம் கூறி வருகிறது.
ஆனால் இதுவரையில் அவ்வாறான எந்த தீர்வும் முன்வைக்கப்படவில்லை.இந்தநிலையில், 13ம் திருத்தத்துக்கு அப்பால் சென்ற அரசியல் தீர்வு ஒன்றை வழங்கவிருப்பதாக அரசாங்கம் கூறிவருகிறது.அவ்வாறு எனின், அதன் விளக்கம் என்ன என்பதை மக்களுக்கு அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி கோரியுள்ளது. 
இந்திய உயர்மட்ட குழுவினர் தமிழ்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை : இலங்கை வரும் இந்தியப் பிரதமர்.
இலங்கை சென்றுள்ள இந்திய அரசாங்கத்தின் உயர்மட்டக்குழு இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியது.இந்தப் பேச்சுவார்த்தை இலங்கை நேரப்படி இன்று சனிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் நடைபெற்றது.
இதன்போது இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு, தமிழ் மக்களின் மீள்குடியேற்றம்,  இராணுவத்தினரின் அத்துமீறிய குடியேற்றங்கள், விகாரைகள் அமைத்தல் உட்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.அத்துடன் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளின் மதிப்பீடுகளும் இதன்போது ஆராயப்பட்டன.
இந்திய உயர்மட்டக்குழுவில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளியுறவு செயலாளர் நிரூபமா ராவ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் ஆகியோர் அங்கம் பெற்றுள்ளனர்.தமிழத் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் சம்பந்தன் தலைமையிலான குழு கலந்துரையாடலில் ஈடுபட்டது.இந்தநிலையில் இந்திய உயர்மட்டக்குழு மூன்றுகட்சி தமிழ் கூட்டணியையும் இன்று முற்பகல் சந்தித்தது.
புளொட் எனப்படும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் என்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஸ்ரீதரன் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.இதன்போது வடக்கு கிழக்கில் அளவுக்கு அதிகமான இராணுவ கெடுபிடிகள் குறித்து இந்திய குழுவினரின் கவனத்துக்கு கொண்டு வந்தாக சித்தார்த்தன் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் ஈ.பி.டி.பி என்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் இலங்கையின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியக்குழுவினருடன் தொலைபேசியில் கலந்துரையாடிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, இந்தியக்குழு நேற்று வெள்ளிக்கிழமை, இலங்கையின் மூவர் அடங்கிய குழுவை சந்தித்தது.
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் ஆகியோர் இந்தக்குழுவில் அடங்கியிருந்தனர்.எனினும் ஏற்கனவே இலங்கையின் உயர்மட்டக் குழுவில் உள்ளடக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் சகோதரரும் அமைச்சசருமான பசில் ராஜபக்ச இந்த மூவர் குழுவில் இடம்பெறவில்லை. இதற்கான காரணமும் அறிவிக்கப்படவில்லை.
பசில் ராஜபக்ச கடந்த வாரத்தில் இந்தியாவுக்கு சென்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க விரும்பியபோதும் அதற்கான வாய்பபு கிட்டாமல் இலங்கை திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதனை தவிர இந்திய உயர்மட்டக் குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தக்குழுவினர் இன்று இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் சந்தித்தனர். இதன்போது பேசப்பட்ட விடயங்கள் குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.எனினும் இலங்கை வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை இந்திய பிரதமர் ஏற்றுக்கொண்டதாக சிவ்சங்கர் மேனன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு தெரிவித்ததாக மாத்திரம் இலங்கையின் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இந்தியா திரும்பவுள்ள அவர்கள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமையும் சந்திக்கவுள்ளனர்.ஏற்கனவே இலங்கைக்கு செல்வதற்கு முன்னர் இந்தியக்குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன், ஜெயலலிதாவை சந்தித்தார்.பின்னர் இலங்கை சென்று வந்ததும் மீண்டும் அவரை சந்திப்பதாக சிவ்சங்கர் மேனன் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
சரத் பொன்சேகாவுக்கு சிறைச்சாலை புலனாய்வு உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களைக் கொண்டு பாதுகாப்பளிக்கப்படுவதாக சி்ங்கள இணையத்தள செய்தியொன்று தெரிவிக்கின்றது.இதுவரை காலமும் அவர் சாதாரண சிறைக்காவலர்களின் பாதுகாப்பிலேயே வழக்கு விசாரணைகளுக்காக சிறைச்சாலைகளுக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். ஆயினும் அண்மைய நாட்கள் தொடக்கம் அவருக்கான பாதுகாப்பு சிறைச்சாலைப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவ்வாறு சரத் பொன்சேகாவுக்குப் பாதுகாப்பு வழங்கும் உத்தியோகத்தர்களின் பெயர் விபரங்களை வாரம் தோறும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி அனுமதியைப் பெற்றுக் கொள்ளுமாறும் சிறைச்சாலை அத்தியட்சகர் பணிக்கப்பட்டுள்ளார்.அது தொடர்பில் கருத்து வெளியிட்ட சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், சரத் பொன்சேகாவின் பாதுகாப்புக் கருதியே பிரஸ்தாப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் மேலதிக கரிசனையாகவே பாதுகாப்பு அமைச்சிற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறித்த தகவல் சமர்ப்பிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையில் 71 லட்சம் பெறுமதியான வெளிநாட்டு பணம் மீட்பு.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள கழிவறையொன்றிலிருந்து 71 லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு பண நோட்டுகள் அடங்கிய பை ஒன்று இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.விமான நிலையத்தின் சுத்திகரிப்பாளர் ஒருவர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பான் கீ மூனின் இரண்டாம் பதவிக்காலத்துக்கு இலங்கை ஆதரவு.
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இரண்டாம் தவணைப் பதவிக்காலத்துக்கு ஆதரவு வழங்க இலங்கை தீர்மானித்துள்ளது.இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை மையமாக வைத்து இலங்கை அரசாங்கத்துக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் தரப்பினருக்கும் இடையில் கடும் இராஜதந்திர முறுகல் நிலையொன்று கடந்த நாட்களில் ஏற்பட்டிருந்தது.
அவ்வாறான நிலையிலேயே ஐ.நா.  செயலாளர் நாயகம் பான் கீ மூனின் முதலாம் தவணைக்கான பதவிக்காலம் முடிவடையும் கட்டமும் நெருங்கியுள்ளது. அவர் இரண்டாம் தடவையாகவும் அப்பதவியில் நீடிக்க வேண்டுமென பலம்வாய்ந்த நாடுகள் பலவும் விருப்பம் கொண்டுள்ளன.
அத்துடன் பான் கீ மூனும் தனது இரண்டாம் பதவிக்காலத்துக்கான ஆதரவு திரட்டும் முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் மட்டுமன்றி  நிபுணர் குழு விவகாரத்தில் இலங்கைக்கு வெளிப்படையாக ஆதரவளித்த ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் ஆதரவும் அவருக்குக் கிட்டியுள்ளதாக அறிய முடிகின்றது.அதன் தொடராக தற்போது இலங்கையும் அதன் ஆதரவை வெளிவிவகார அமைச்சின் ஊடாக அறிவித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச உதவிகளை மட்டும் நம்பி பிள்ளைகளை வளர்க்கும் உதவாக்கரைப் பெற்றோர்! கமரூன் குற்றச்சாட்டு.
அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் நலன் உதவிகளைக் கொண்டு மட்டும் பிள்ளைகளை வளர்க்க முயலும் உதவாக்கரைப் பெற்றோர்களை பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கமரூன் சாடியுள்ளார்.பிள்ளைகளை வளர்க்க பெற்றோர் முழுக்க முழுக்க அரசாங்க உதவிகளையே நம்பியிருக்கக் கூடாது. தமது வாழ்வு முறைக்கு எல்லையற்ற விதத்தில் அரசு உதவ வேண்டும் என எதிர்ப்பார்ப்பது தவறாகும்.
இன்று காலை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசும்போதே பிரிட்டிஷ் பிரதம மந்திரி இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். தங்கியிருக்கும் கலாசாரத்தை மாற்றி முழுக்க முழுக்க உழைப்பை நம்பும் போக்கை கட்டியெழுப்பி நாட்டின் விழுமியத்தை வளர்க்க முயற்சி செய்கின்றேன். ஒரு பிரதம மந்திரி என்ற வகையில் நான் செய்ய முயலும் பாரிய மாற்றம் இந்த விழுமிய மாற்றம் தான். மக்கள் சரியான காரியங்களைச் செய்ய வேண்டும், கடுமையாக உழைத்து தமது குடும்பத்துக்கு உதவ வேண்டும்.

அப்படிப்பட்டவர்களுக்கு அரசு வெகுமதிகளை அளிக்கும், தவறான செயல்களைப் புரிபவர்களை அரசு தண்டிக்கவும் செய்யும் என்று கூறிய பிரதமர், கடுமையாக உழைத்து வாழும் குடும்பங்கள் சில சமயங்களில் விரக்தியும் அடைகின்றனர் என்று சுட்டிக் காட்டியுள்ளார். பிரிட்டிஷ் புள்ளி விவரங்களின் படி உதவி பெரும் குடும்பங்களில் ஒரு லட்சம் குடும்பங்களில் தலா நான்கு அல்லது அதற்கு மேல் பிள்ளைகள் காணப்படுகின்றனர்.

இவ்வாறு உதவி பெரும் 900த்துக்கும் மேற்பட்ட குடும்பங்களில் குறைந்தபட்சம் எட்டுப் பிள்ளைகளாவது காணப்படுகின்றனர். இவர்களுள் பலருக்கு அரசாங்கத்தால் பெரிய வீடுகளும் வழங்கப்பட்டுள்ளன. கஷ்டப்பட்டு உழைக்கும் குடும்பங்களுக்கு கை கொடுக்கும் நேரம் வந்துள்ளதாகப் பிரதம மந்திரி தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பாகிஸ்தான்: ஆதாரங்களை சமர்பித்த உளவுத்துறை.
அமெரிக்கா மீது அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து அந்த இயக்க தலைவர் பின்லேடனை வேட்டையாடும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டது.இதனால் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதி உதவி அளித்தது. தேவையான அதிநவீன ஆயுதங்களை வழங்கியது. பின்லேடனை பிடிக்க உதவும் படி கேட்டுக் கொண்டது. ஆனால் பாகிஸ்தானோ இரட்டை வேடம் போட்டது.
பின்லேடன் தங்கள் நாட்டில் இல்லை என திட்டவட்டமாக மறுத்த பின்னர் கடந்த 2ந் திகதி பாகிஸ்தான் அபோதாபாத்தில் ஒரு பங்களாவில் குடும்பத்துடன் தங்கியிருந்த பின்லேடன் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது அமெரிக்க மக்களுக்கு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. அமெரிக்காவுடனான நட்புறவை துண்டிக்கும் படி வலியுறுத்தினர். மேலும் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் அல்கொய்தா, தலிபான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் செயல்படுவதாக அமெரிக்க குற்றம் சாட்டி வந்தது.
இந்நிலையில் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் அல்கொய்தா, தலிபான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவம் செயல்படுவதற்கான ஆதாரங்களை பாகிஸ்தான் ராணுவ தளபதியிடமே அமெரிக்க உளவுத்துறை தலைவர் லியோன் பனிட்டா கொடுத்தார். இதனால் அமெரிக்கா-பாகிஸ்தான் உறவு மேலும் மோசமாகும் நிலை உருவாகி உள்ளது.
முஷாரப்புக்கு எதிராக நிரந்தரமான கைது ஆணை: நீதிமன்றம் உத்தரவு.
முன்னாள் பிரதமர் பெனாசீர் புட்டோ கொலை வழக்கில் விசாரணை அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்ததற்காக முஷாரப்புக்கு அந்நாட்டு நீதிமன்றம் நிரந்தர கைது ஆணையைப் பிறப்பித்துள்ளது.பலமுறை சம்மன் அனுப்பியும், குற்றவாளி என அறிவிக்கப்பட்டும் நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை என்று ராவல்பிண்டி பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.அவருக்கு நிரந்தர கைது ஆணையை பிறக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நீதிபதி ராணா நிசார் அகமது நிரந்த கைது ஆணையை பிறப்பித்தார்.
முஷாரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டனர்.சொத்து விவரங்களைத் தெரிவிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
சிரியாவில் கலவரம்: ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 32 பேர் பலி.
எகிப்து புரட்சியை தொடர்ந்து சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிராக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மசூதியில் தொழுகையில் ஈடுபடும் மக்கள் அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது பொலிசார் மற்றும் ராணுவத்தினர் தாக்குதல் நடத்துவதும் தொடர்கிறது.
இதுவரை நடந்த கலவரத்தில் ஏராளமானோர் பலியாகிவிட்டனர். இந்நிலையில் மரட் அல் நுமான் என்ற நகரில் நேற்று போராட்டம் நடத்திய மக்கள் அங்குள்ள கோர்ட் மற்றும் பொலிஸ் நிலையத்தை தீ வைத்து கொளுத்தினர்.அங்கு வந்த ராணுவத்தினர் டேங்க் மூலம் குண்டு வீசினர். இந்த தாக்குதலில் போராட்டக்காரர்கள் 32 பேர் பலியாயினர். சிரியாவில் கலவரம் தீவிரமடைந்துள்ளதால் ஏராளாமான மக்கள் எல்லையை கடந்து துருக்கி நாட்டுக்குள் செல்கின்றனர். கடந்த இரண்டு நாளில் சுமார் 4 ஆயிரம் பேர் துருக்கி சென்றுள்ளனர்.
தற்காலிக விசாக்களின் மூலம் தங்கியிருப்பவர்கள் விரைவில் வெளியேற்றப்படுவர்: பிரிட்டன் அமைச்சர்.
பிரித்தானியாவில் நிரந்தரமாக தங்குவதற்காக தற்காலிக விசாக்களை துஷ்பிரயோகம் செய்து வரும் பல்லாயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறக் கோரப்படவுள்ளதாக அமைச்சர் டாமியன் கிறீன் தெரிவித்துள்ளார்.கடந்த வருடம் பிரித்தானியாவில் குடியேற்றவாசிகளின் தற்காலிக தொகை என்றுமில்லாதவாறு அதிகரித்தமையை கருத்திற் கொண்டு எவரை பிரித்தானியாவில் தங்க அனுமதிப்பது என்பது தொடர்பில் தாம் மிகுந்த தெரிவை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் கூறினார்.
குடியேற்றவாசிகள் சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு பிரித்தானியாவுக்கான தற்காலிக மற்றும் நிரந்தர குடிவரவுகளுக்கு இடையில் தெளிவான வேறுபாட்டை பேணுவது அவசியம் என டாமியன் கிறீன் அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றுகையில் தெரிவித்தார்.கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் வரையான 12 மாத காலப்பகுதியில் அதற்கு முன்னரான 12 மாத கலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் பிரித்தானியாவுக்கான குடிவரவு 35 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது அந்நாட்டு குடிவரவில் 1960 ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெற்ற அதிகளவான அதிகரிப்பாகும்.
பிரித்தானியாவுக்கு தொழில் பெற்று வருவதற்கும் இங்கு நிரந்தரமாக தங்குவதற்குமிடையேயுள்ள தன்னிச்சையான இணைப்பை துண்டிக்க நாம் திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்த டாமியன் கிறீன், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியிலிருந்து பிரித்தானியாவுக்கு குறுகிய கால தகைமை, பற்றாக்குறையை நிரப்புவதற்கு வரும் தகைமையுள்ள பணியாளர்களின் ஆகக் கூடியது 5 வருடங்களில் பிரித்தானியாவை விட்டு வெளியேற எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.எதிர்காலத்தில் கடும் கட்டுப்பாட்டிற்கு அமைவாக மிகக் குறைந்தளவு குடியேற்றவாசிகளுக்கே பிரித்தானியாவில் நிரந்தரமாக தங்க அனுமதி வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேற்படி குடியேற்ற வாசிகளில் தங்கி வாழ்பவர்கள் பிரித்தானியாவில் குடியேற விரும்பும் பட்சத்தில் அவர்கள் ஆங்கில மொழி தகைமையை கொண்டிருக்க வேண்டும் எனக் கோரவும் பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.இராஜதந்திர உத்தியோகத்தர்களது வீடுகளில் பணியாளர்களாக சேவையாற்றுவதற்காக பிரித்தானியாவுக்கு வரும் வீட்டுப் பணியாளர்களுக்கான தங்குவதங்கு அனுமதிக்கப்படும் காலம் 6 மாதங்கள் அல்லது 12 மாதங்கள் வரை வரையறுக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் தனிப்பட்ட வீடுகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கான விசாக்கள் இரத்துச் செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.தற்போது பிரித்தானியாவிலுள்ள குடிவரவு சட்டவிதிகளின் பிரகாரம் வீட்டு பணியாளர்கள் 6 வருட காலத்திற்கும் மேலாக பிரித்தானியாவில் தங்கியிருக்கவும் அதன் பின் அங்கு குடியிருப்பதற்காக விண்ணப்பிக்கவும் முடியும்.
போராட்டக்காரர்கள் மீது ராணுவம் ஏவுகணை வீசித் தாக்குதல்.
லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நேட்டோ படைகள் களமிறங்கி குண்டு மழை பொழிந்து வருகின்றன.
இதற்கிடையே போராட்டக்காரர்கள் வசம் தலைநகர் திரிபோலிக்கு அடுத்த பெரிய நகரமான மிஸ்ரதா உள்ளது. ஏற்கனவே இவர்கள் வசம் இருந்த அஜ்தாபியா, பிரகா நகரங்களை கடாபியின் ராணுவம் மீட்டு தன்வசமாக்கி கொண்டது. அதே போன்று மிஸ்ரதாவையும் மீண்டும் கையகப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக உள்ளது.அதற்காக மிஸ்ரதா நகரின் மீது கடாபியின் ராணுவ போர் விமானங்கள் ஷிந்தான், கிரேடு என்ற ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. மேலும் அதன் அருகே உள்ள யப்ரான், நாலட் ஆகிய நகரங்களின் மீதும் ஏவுகணை வீசப்பட்டது. இவை துனிசியா எல்லையில் உள்ளன. இத்தாக்குதலில் இதுவரை 10 பேர் பரிதாபமாக இறந்தனர். 10 பேர் காயம் அடைந்தனர்.
கனடாவில் மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் பின்தங்கியுள்ளது: அறிக்கையில் தகவல்.
கனடாவின் பெர்ஸ்ட் நேஷன் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் பின்தங்கியதாகவே இருக்கின்றது என்று நாடாளுமன்றத்துக்கு கணக்காய்வாளர் நாயகம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுத்தமான குடிநீர், வீட்டமைப்பு வசதிகள், கல்வி வசதிகள் என பல பிரிவுகளிலும் தேசிய மட்டத்திலான சராசரிக்கும் குறைவான நிலையே இங்கு காணப்படுகின்றது.பில்லியன் கணக்கான டொலர்களை சமஷ்டி அரசு வருடாந்தம் இங்கு செலவிட்டு வந்துள்ள நிலையிலும் அங்கு தரமான குடியிருப்புக்கள் இல்லை.
கல்வி நிலை மிகவும் மோசமாக உள்ளது. சுத்தமாக குடிநீர் வசதியும் போதியளவு இல்லாமை பெரிதும் கவலை அளிக்கின்றது என்று கணக்காய்வாளர் நாயகம் ஷெலா பிரஷரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அவர் கணக்காய்வாளர் நாயகம் என்ற வகையில் தனது பதவிக் காலத்தின் கடைசி அறிக்கையை நாடாளுமனறத்தில் சமர்ப்பித்துள்ளார். கல்வி, சிறுவர் நலன், குடிநீர், வீட்டமைப்பு ஆகிய பிரிவுகளில் ஒதுக்கீடுகளில் பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றன.
எமது சிபார்சுகளுக்கு சமஷ்டி அரசு கடந்த ஆண்டுகளில் சரியாக பதில் அளித்திருந்தும் கூட அங்கு எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. பத்தாண்டுகள் இந்தப் பதவியை வகித்ததன் மூலம் ஒரு விடயம் எனக்கு தெளிவாகின்றது.பெர்ஸ்ட் நேஷன் பகுதி சமூகத்தவர்களுக்கு உரிய நன்மைகள் அவர்களைச் சென்றடைய வேண்டுமானால் அங்கு அடிப்படை மாற்றங்கள் இடம்பெற வேண்டியது அவசியமாகும் என்று கணக்காய்வாளர் நாயகம் சிபார்சு செய்துள்ளார்.
பெர்ஸ்ட் நேஷன் பகுதி மாணவர்களின் கல்வித் தரத்துக்கும் கனடாவின் ஏனைய பிராந்திய பிள்ளைகளின் கல்வித் தரத்துக்கும் இடையிலான இடைவெளி விரிவடைந்துள்ளது. அங்கிருந்து ஒரு சில பட்டதாரிகளே உருவாகின்றனர்.இதே போல் தான் ஏனைய பிரிவுகளிலும் பாரிய பின்னடைவு காணப்படுவதாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இணைய மோசடியில் ஈடுபட்ட நபர்கள் கைது.
இணைய மோசடியில் ஈடுபட்ட சீனா, தைவான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் ஆசிய நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இத்தகைய சந்தேகப்பேர் வழிகள் 37 பேரை மலேசியப் பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்களில் 27 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள். மற்ற 10 பேர் தைவானியர்கள்.மலேசியப் பொலிசார் கோத்தா கினபாலுவில் உள்ள அடுக்குமாடி வீடு ஒன்றில் சோதனை மேற்கொண்ட போது அந்த 47 பேரும் கைது செய்யப்பட்டதாக கூறினர்.
ஒரு கும்பல் உறுப்பினர்கள் சீனாவில் வசிக்கும் சிலரிடம் தொடர்பு கொண்டு அவர்களுக்கு போக்குவரத்து அழைப்பாணை வந்திருப்பதாகவும் அதற்கான அபராதத் தொகையை இணையம் வழியாக செலுத்தும் படியும் கூறுகின்றனர். அந்த அபராதத் தொகையை செலுத்தாவிட்டால் அவர்கள் நீதிமன்ற நடவடிக்கையை எதிர்நோக்கக்கூடும் என்று அக்கும்பல் மிரட்டல் விடுக்கவும் செய்கிறது.
சீனா மற்றும் தைவானில் உள்ள அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் மலேசியப் பொலிசார் அந்த கும்பலைச் சேர்ந்த உறுப்பினர்களை மலேசியாவில் கைது செய்ததாக பொலிஸ் வட்டாரங்கள் கூறின.கோத்தா கினபாலுவில் சென்ற மாதம் செயல்பட்டு வந்த அக்கும்பல் பின்னர் அதன் நடவடிக்கைகளை சீனா மற்றும் தைவானுக்கு மாற்றியதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் இந்தோனிசியாவில் இத்தகைய சந்தேகப்பேர் வழிகள் 170 பேரும் கம்போடியாவில் 166 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாய்லாந்திலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேங்காக் தகவல் கூறியது. சீனாவிலும் தைவானிலும் இணையம் வழி மோசடியில் ஈடுபட்ட கும்பல் உறுப்பினர்கள் தங்களை ஒரு போலி நிறுவனத்தின் முதலாளிகள் என்று கூறிக்கொண்டு நிதிச் சேவைகள் வழங்குவதாகக் கூறி பலரை ஏமாற்றியுள்ளனர். சீனாவிலும் தைவானிலும் இத்தகைய கும்பலிடம் பலர் ஏமாந்துள்ளனர்.
ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள்: ஐ.நா தகவல்.
உலகம் முழுவதும் ஆபத்தான தொழில்களில் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் என்று ஐ.நா.வுக்கான சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.உலகம் முழுவதும் ஆபத்து நிறைந்த தொழில்களில் சுமார் 215 மில்லியன் குழந்தைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு காயம், தொற்றுநோய், இறப்பு போன்றவை ஏற்படுகிறது.
குழந்தை தொழிலாளர்களை ஒழிக்கும் வகையில் வேலையில் சேர்வோருக்கான குறைந்த பட்ச வயது 18ஆக நிர்ணயிக்க வேண்டும் என இவ்வமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.இவ்வமைப்பில் 183 உலக நாடுகள் உறுப்பினராக உள்ளது. நாளை குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
மனித வெடிகுண்டுத் தாக்குதல்: சோமாலிய நாட்டின் உள்துறை அமைச்சர் பலி.
சோமாலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் பலியானார்.ஆப்பிரிக்க சோமாலியா நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்தவர் அபிஷாக்ஹூர் ஷேக் ஹூசைன். இவர் தலைநகர் மொகாடீஸூ நகரில் உள்ள தனது வீட்டிலிருந்து காரில் வெளிய‌ே கிளம்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது வீடு அருகே பதுங்கியிருந்த பெண்(மனித வெடிகுண்டு) திடீர் தாக்குதல் நடத்தினார். அதில் தலையிலும், கால்களிலும் வெடிகுண்டு காயம் ஏற்பட்டது.உடனடியாக பெனிடீர் நகர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இத்தகவலை சோமாலியா நாட்டின் அரசு ரேடியோவும் உறுதி செய்து செய்தி வெளியிட்டுள்ளது.
உலகில் மிகவும் வறுமை மிக்க நாடு சோமாலியா இங்கு கடந்த 1991ம் ஆண்டிலிருந்து நிலையற்ற அரசு உள்ளது. இஸ்லாமிக், ஷகாரி என இரு சட்டங்கள் உள்ளன.இதனால் இரு பிரிவாக செயல்பட்டு வருவதால் அதில் ஒரு பிரிவினர் அரசுக்கெதிராக ஆயுதம் ஏந்தி பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அமைப்பினர் தான் உள்துறை அமைச்சர் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது.
கைத்தொலைபேசிகளால் பெருகி வரும் விமான விபத்துக்கள்: ஆய்வில் தகவல்.
விமானத்தில் பயணிக்கும் போது கைத்தொலைபேசிகளை பயன்படுத்தினால் ஆபத்து ஏற்படும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.கைத்தொலைபேசிகளில் உள்ள மைக்ரே அலைகள் விமானத்தில் உள்ள மின்னணு இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை பழுதடைய செய்வதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக சர்வதேச விமான போக்குவரத்து கழகம் நடத்திய ஆய்வில் கடந்த ஆறு ஆண்டுகளில் நடந்த விமான விபத்துகள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
இதில் 75 விமான விபத்துக்கள் கைத்தொலைபேசிகளால் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் சுமார் 4 ஆயிரத்து 500 அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது யாரேனும் கைத்தொலைபேசியில் பேசினால் விமானத்தில் முக்கிய சாதனங்கள் அனைத்தும் மின்னணுவால் இயங்குபவை என்பதால் அவை பெரும் பாதிப்பு ஏற்படும்.இதனால் விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு முதலில் துண்டிக்கப்படும் எனவும் இதனால் தான் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகின்றன என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிலும் ஐபேடு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கைத்தொலைபேசிகள் போன்று சில உயர் ரக போன்கள் பெரும் ஆபத்தை விளைவிக்ககூடியன. இவை போயிங் போன்ற மிகப்பெரிய விமானங்களில் உள்ள விமான ஓட்டிகள் அமரும் கேபின் பகுதிகளில் ஜி.பி.எஸ்.கருவி உள்ளதால் முதலில் அவைகளைத்தான் ‌தாக்கும்.இவை ஓடுதளத்திலிருந்து உயர பறப்பதற்கு முன்பே தனது சிக்கனல்களை துண்டித்துவிடும் எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எனவே விமானப்பயணிகள் தங்களது கைத்தொலைபேசிகளை முதலில் ஓப் செய்து கொள்ள வேண்டும் என விமானஓட்டிகள் அறிவுறுத்த வேண்டும்.
அவரைச் செடிகளில் பரவி வரும் இ.கோலி பக்டீரியா: பீதியில் மக்கள்.
ஜேர்மனியை பீதிக்குள்ளாக்கிய இ.கோலி பக்டீரியா மீண்டும் அவரை செடிகள், பயிறு வகைகளில் பரவியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஜேர்மனியி்ல் ‌வெள்ளரிக்காய்களில் இ.கோலி எனும் விஷ பக்டீரியா 20 பேர்களை பலி வாங்கியது. மேலும் இந்த விஷ பக்டீரியா ‌ஐரோப்பா முழுவதையும் பீதிக்குள்ளாக்கியது.தற்போது அவரைச் செடியில் இ.கோலி பக்டீரியா தொற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ‌ஜேர்மனியில் அவரை செடிகள் தீவிர ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து ஜேர்மனியின் ‌தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் ரெயின்ஹார்ட் பர்ஜெர் கூறியதாவது: வடக்கு ஜேர்மனியில் உள்ள சக்ஸோனி என்ற இடத்தின் பண்ணையில் பயிரிடப்பட்டிருந்த அவரை செடிகளில் இ.கோலி விஷ பக்டீரிய தொற்றியுள்ளதாக தெரிவித்தார்.ஜேர்மன் விவசாயப்பணிகளை கலங்கடித்துள்ள இந்த இ.கோலி பக்டீரியாவினால் காய்கனிகளை நுகரும் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளதாக டெலிகிராப் பத்திரிகை செய்தி‌ வெளியிட்டுள்ளது.
இதனால் நாட்டில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்களுக்கு பயன்படும் அவரைக்காய்கள், பீன்ஸ்கள், மொச்சை பயிறுகள் அனுப்பி வைக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் வெள்ளரிக்காயில் பரவிய இந்த விஷ பக்டீரியாவினால் பலியானவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்‌ளதாக கூறப்படுகிறது.
பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 15 குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி பலி.
பாகிஸ்தான் காஷ்மீர் பகுதியில் பள்ளி வேன் கால்வாய்க்குள் கவிழந்து விழுந்த விபத்தில் 15 குழந்தைகள் பலியாயினர்.பாகிஸ்தான் காஷ்மீர் பகுதியான ஜீலம் நதியினை ஒட்டியுள்ள மிர்பூர், அலிபெக் ஆகிய நகரங்களைச் சேர்ந்த பள்ளிக்குழந்தைகள் 17 பேர் ‌பள்ளி வேன் ஒன்றில் நேற்று அதிகாலை 6.30 மணியளவில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தை கால்வாய் ஒன்றினுள் புகுந்ததில் இதில் 12 குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி பலியாயினர்.பலியான 15 உடல்களும் மீட்கப்பட்டதாகவும், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பீம்ப்ஹர் மாவட்ட பொலிஸ் சூப்பிரண்டு செளத்ரி முனீர் ஹூசைன் தெரிவித்தார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF