Thursday, June 2, 2011

இன்றைய செய்திகள்.


"கொலையாளிக்கு தண்டனை வழங்க நான் தயார்"! கட்டுநாயக்காவில் மேர்வின்.

கட்டுநாயக்கவில் இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் 22 வயது இளைஞன் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்னர் அவருக்கு தண்டனை வழங்க தான் தயார் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். 

கட்டுநாயக்கா தாக்குதலில் உயிரிழந்த இளைஞனின் வீட்டிற்கு இன்று சென்றிருந்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.கட்டுநாயக்க தாக்குதலில் உயிரிழந்த இளைஞனின் கொலையை கண்டிப்பதாகவும் இதற்கு அரசாங்கம் மட்டுமன்றி நாடு முழுவதும் கவலையடைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோத்தா என்னை காட்டிக் கொடுத்து விட்டார்! காமினி நவரட்னா.

சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோதாபாய ராஜபக்ச தன்னை காட்டிக் கொடுத்து விட்டதாக சிறீலங்காவின் மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் காமினி நவரத்ன கடும் ஆத்திரத்துடன் நேற்றிரவு கூறியதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களின் பிரச்சினையில் பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் இருந்து கிடைத்த உத்தரவின் பேரில் தான் காவல்துறை உத்தரவு பிறப்பித்ததாகவும் எனினும் உத்தரவிட்ட பாதுகாப்புச் செயலாளர் தன்னை காட்டிக் கொடுத்து விட்டதாக காமினி நவரத்ன தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, ஏற்பட்டுள்ள மக்களின் எதிர்ப்பு தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து சிறீலங்கா ஜனாதிபதி தலைமையில் நேற்று முன்தினம் முற்பகல் அளவில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன் போது, சில காவல்துறையினரை அதிகாரிகளையாவது பலி கடாக்களாக்கி, அரசாங்கத்தை பாதுகாத்து கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டதாக தெரியவருகிறது. இந்த தீர்மானத்திற்கு அமைய மேல் மாகாணம் மேற்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிக் காவற்துறை மா அதிபர் காமினி நவரத்ன இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், நீர்கொழும்பு
காவற்துறை நிலையத்தின் இரண்டு அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் ரவிராஜ் கொலையில் கருணா மற்றும் கோத்தாபய நேரடித்தொடர்பு: சிங்கள இணையத்தளம்.

பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் ரவிராஜ் ஆகியோரின் படுகொலைச் சம்பவங்களில் பிரதியமைச்சர் முரளிதரன் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு நேரடித் தொடர்புகள் இருப்பதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோர் கொல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மிகவும் கவலையடைந்ததாக சிங்கள வார இதழ் ஒன்றுக்கு அண்மையில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்திருந்த போதிலும்,  இந்த இரண்டு கொலைகளின் பின்னணியில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாக அந்த இணையத்தளம் மேலும் சுட்டிக்காட்டுகின்றது.
பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவு காரணமாகவே இந்த இரண்டு கொலைகளுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களுக்கெதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை. இந்தக் கொலை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அரசாங்கம் அதனை விடுதலைப் புலிகள் மீது சுமத்த முயற்சித்த போதிலும் கொலைச் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் கொலையின் பின்னணியில் இருக்கும் உண்மையான குற்றவாளிகள் குறித்து தெரியவந்ததாகவும், அது சம்பந்தமான சாட்சி ஆவணங்களை பாதுகாப்புச் செயலாளர் எடுத்துச் சென்றிருப்பதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
விடுதலைப் புலி அமைப்பின் புலனாய்வுப் பிரிவின் பல தகவல்கள் தற்போது பாதுகாப்புத் தரப்பினரால் கண்டறியப்பட்டுள்ளன. அவர்கள் செய்த முக்கியமான கொலைகள் சம்பந்தமாகவும் தெரியவந்துள்ளது. எனினும் இந்தத் தகவல்களின் அடிப்படையில் பரராஜசிங்கம், ரவிராஜ் ஆகியோரின் கொலைகள் விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்டதாகவோ அவர்களின் உதவியுடன் செய்யப்பட்டதாகவோ உறுதிப்படுத்துவதற்கான  எதுவிதமான சாட்சியங்களும் இல்லை.
2005 ம் ஆண்டு டிசம்பர் 25 ம் திகதி நத்தார் ஆராதனையில் கலந்துகொண்டிருந்த ஜோசப் பரராஜசிங்கத்தை லான்ஸ் கோப்ரல் சங்கர் என்ற முன்னாள் இராணுவ அதிகாரியே சுட்டுக்கொன்றுள்ளார். இந்தக் கொலைக்கான ஒப்பந்தத்தை அவருக்கு வழங்கியிருந்தவர் தற்போதைய அரசாங்கத்தின் பிரதியமைச்சரான கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் என பிரஸ்தாப புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரி தெரிவித்தார்.
மட்டக்களப்பு வாவி வீதியில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் தேசிய பாதுகாப்புப் படையணியில் பணியாற்றிய லான்ஸ் கோப்ரல் சங்கர் விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்டவர் என சந்தேகத்தின் பேரில் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஒருவராவார். விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான அவருக்கு புலிகளினால் மரண அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்ததுடன் பாதுகாப்பு கருதி அவர் கருணாவுடன் இணைந்துகொண்டார்.
சங்கரின் பக்கச்சார்பற்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக பரராஜசிங்கத்தை சுட்டுக்கொல்லுமாறு கருணா, சங்கருக்கு உத்தரவிட்டிருந்தார். பரராஜசிங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் கருணாவின் உத்தரவை செயற்படுத்த சற்று தயங்கியுள்ளார். இது பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் உத்தரவு என்பதால் எவ்வித அச்சமும் இன்றி துப்பாக்கிச் சூட்டை நடத்துமாறு கருணா கூறியுள்ளார்.
அதனடிப்படையில், மட்டக்களப்பு வாவி வீதியில் அமைந்துள்ள கருணாவின் அலுவலகத்தினால் வழங்கப்பட்ட 9 மில்லிமீற்றர் கைத்துப்பாக்கியினால் நத்தார் தின விசேட ஆராதனையில் கலந்துகொண்டிருந்த ஜோசப் பரராஜசிங்கத்தை சங்கர் சுட்டுக்கொன்றார்.ஜோசப் பரராஜசிங்கம் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் வெற்றியடைந்ததை அடுத்த அன்றைய தினம் அதிகாலை சங்கரை தன் முன்னால் வைத்துக்கொண்டு பாதுகாப்புச் செயலாளருடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட கருணா நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்ததாக அறிவித்துள்ளார். 
அதேபோல், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த நிஷாந்த கஜநாயக்க மற்றும் இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த நேவி சம்பத் என அழைக்கப்படும் லெப்டினன் கமாண்டர் சம்பத் ஆகியோரின் வழிக்காட்டலில் கருணா தரப்பைச் சேர்ந்த இரண்டு பேர் 2006  நவம்பர் 9 ம் திகதி கொழும்பு நாராஹேன்பிட்டியில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை சுட்டுக் கொன்றதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.நிஷாந்த கஜநாயக்க அப்போது விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் டொனால்ட் பெரேராவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக சேவையாற்றினார். லெப்டினன் கமாண்டர் சம்பத் கடற்படைத் தளபதி வசந்த கரண்ணாகொடவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றினார்.
பின்னர் இவர்கள் இருவரும் பாதுகாப்புச் செயலாளரின் கட்டுப்பாட்டின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட துணை இராணுவப் பிரிவில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். நிஷாந்த கஜநாயக்கவிடமே ரவிராஜை கொலை செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளிலிருந்து தெரியவந்தது. இதனை கஜநாயக்கவே நேவி சம்பத்திடம் ஒப்படைத்திருந்தார்.அதன்படி சீலன் மற்றும்  கிரன் என்ற பெயர்களில் அழைக்கப்படும் கருணா தரப்பைச் சேர்ந்த இரண்டு துணை இராணுவத்தினரைப் பயன்படுத்தி ரி.56 ரக துப்பாக்கியின் மூலம் ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தத் துப்பாக்கி கடற்படை புலனாய்வுப் பிரிவின் விசேட இரகசிய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கியாகும்.
நிஷாந்த கஜநாயக்க, நேரடியாக பாதுகாப்பு அமைச்சில் செயல்பட்டு வந்ததுடன் துணை இராணுவத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். கஜநாயக்க, எந்தவொரு வீதிச் சோதனைச் சாவடியிலும் துப்பாக்கியுடன் இலக்குத் தகடு அற்ற வாகனங்களில் செல்லக் கூடிய வகையில் பாதுகாப்பு அமைச்சினால் அவருக்கு விசேட அனுமதிகளும் வழங்கப்பட்டிருந்தன. மேற்படி தகவல்கள் வெளியானதை அடுத்து உடனடியாக விசாரணைகளை இடைநிறுத்துமாறு உத்தரவிட்ட பாதுகாப்புச் செயலாளர் விசாரணை சம்பந்தமான ஆவணங்களையும் தன்வசம் எடுத்துக்கொண்டார் என்றும் பிரஸ்தாப இணையத்தளம் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது. 
சரணடைந்த புலி உறுப்பினர்களை இராணுவம் சுட்டுக் கொல்லவில்லை! வெள்ளைக்கொடி வழக்கில் நீதிமன்றம் உரிய பதிலளிக்கும் - சவேந்திர சில்வா.
உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் சரணடைந்த புலி உறுப்பினர்களை இராணுவம் சுட்டுக்கொல்லவில்லை. வெள்ளைக் கொடி வழக்கு தொடர்பில் நீதிமன்றம் உரிய பதிலளிக்கும் என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் துணை வதிவிடப் பிரதிநிதி சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார். பல்லாயிரக் கணக்கான அப்பாவி பொதுமக்களை பணயக் கைதிகளாக புலிகள் இயக்கத்தினர் வைத்துக் கொண்டு இராணுவத்தினரை நோக்கி தாக்குதல்களை மேற்கொண்டனர். யுத்த சூனிய வலயத்திற்கு தப்பித்து வந்த பொது மக்கள் மீது புலிகளே துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.யுத்த வெற்றி அனுபவங்கள் தொடர்பான செயலமர்வின் இரண்டாவது நாள் அமர்வு நேற்று புதன்கிழமை கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மேற்கண்டவாறு கூறினார்.
இவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி 5ம் திகதி 53 மற்றும் 55ம் படையணிகள் வடக்கை நோக்கிய தரைவழி தாக்குதல்களை புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கையில் பளை இராணுவ வசமானது.4ம் மற்றும் 2ம் அதிரடிப்படையணிகள் 53, 55ஆம் படையணிகளுடன் இணைந்து புலிகளின் முன்னரண்களை நோக்கி வலிந்து தாக்குதல்களை மேற்கொண்டு முன்னோக்கி நகர்ந்தனர்.
இந்த முன்னகர்வுகளின் போது 58 மற்றும் 57ஆவது படையணிகளும் வெவ்வேறு திசைகளின் ஊடாக முன்னர்கையில் பரந்தன் உட்பட புலிகளின் தலைமையகமாக கருதப்பட்ட கிளிநொச்சியையும் இராணுவம் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.,ஏ9 வீதியை படையணிகள் தக்க வைத்துக் கொண்டு, புலிகளால் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து விடுபடும். அப்பாவி மக்களுக்கு தேவையான உணவு உட்பட அடிப்படை தேவைகள் அனைத்தையும் இவ்வீதியூடாக ஐ.நா. மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உட்பட தொண்டு நிறுவனங்களுக்கு கொண்டு செல்ல அனுமதியளிக்கப்பட்டது.
இராணுவ முன்னெடுப்புகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் புலிகள் கல்மடு அணைக்கட்டை உடைத்து விட்டு பின்னகர்ந்தனர். தொடர் தரை மற்றும் வான் வழி தாக்குதல்களின் மூலம் புலிகளை குறுகிய நிலப்பரப்புக்களுக்குள் வைத்துக் கொள்ளவும். கைப்பற்றப்பட்ட ஏனைய பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் படையணிகளுக்கு முடிந்தமை இறுதி நகர்வுகளுக்கு பாரியளவில் வலுச் சேர்த்தது.
2009ம் ஆண்டு ஜனவரி இறுதிக் காலப்பகுதியில் கடற்புலிகள் தளமாக விளங்கிய சாலை உட்பட முல்லைத்தீவு கடற்பரப்பை 58ஆவது மற்றும் 59 ம் படையணிகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுடன் பெரிய மன்னார் கைப்பற்றலுடன் இராணுவம் மேற்கொண்ட விஸ்வமடு, முல்லைத்தீவு நோக்கிய முன்னெடுப்புகள் மூலம் புலிகளின் தொடர்பாடல்களும், உதவிகளும் முற்றாக இடைநிறுத்தப்பட்டன.
எவ்வாறாயினும் புதுமாத்தளனில் அறிவிக்கப்பட்ட யுத்த சூனிய பிரதேசத்திற்கு ஏராளமான பொது மக்கள் வந்து கொண்டிருந்தனர். இவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், மக்களுக்குள் ஊடுருவியுள்ள புலிகளின் தற்கொலை குண்டுதாரிகளை இனம் காண்பதும், பணயக்கைதிகளாக புலிகள் வசம் சிக்கியுள்ள மக்களை மீட்டெடுப்பதும் பாரிய சவாலான விடயமாகவே படைத் தளபதிகளுக்கு காணப்பட்டன.
எவ்வாறாயினும் அனைத்து படையணிகளின் தளபதிகளும் ஒன்றுகூடி தந்திரோபாய முன்னெடுப்புகளின் ஊடாக மனிதாபிமான நடவடிக்கையை முன்னெடுத்தோம். இந்த முன்öனடுப்புக்களின் போது புலிகள் தற்கொலை தாக்குதல்களையும் மேற்கொண்டனர். அது மட்டுமின்றி பயணக் கைதிகளாக இருந்து தப்பித்து வரும் மக்கள் மீது புலி உறுப்பினர்கள் சரமாரியாக சுட்டனர். 58ஆவது படையணியின் தலைமையில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்து வரும் மக்களை பராமரிக்க நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த நிலையத்திற்கு மக்களோடு ஊடுருவியும் புலிகள் தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்டனர்.


அத்தோடு யுத்த சூனிய வலயத்திற்குள் புலிகள் கனரக தாக்குதல்களையும் மேற்கொண்டனர். இவ்வாறு மக்களை பாதுகாத்துக் கொண்டு இராணுவம் புலிகள் நிலை கொண்டிருந்த இறுதி நிலப்பரப்புகளை முள்ளிவாய்க்கால், நந்திக்கடல் மற்றும் இதனை அண்டிய புதுமாத்தளன் வடக்கு பகுதிகளையும் நோக்கிய பாரிய நகர்வுகளை அனைத்து படையணிகளும் முன்னெடுத்தன.இதன்போது புலிகள் முழு அளவில் செயலிழந்ததுடன் பிரபாகரனின் உடலும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது.எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவம் மக்களை நோக்கி சுடவில்லை. புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்து வந்தவர்களை அவர்களே சுட்டனர் என்றார்.
முன்னாள் பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரியவுக்கு வெளிநாட்டு இராஜதந்திரி பதவி?
பதவி விலகியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவுக்கு வெளிநாடொன்றில் இராஜதந்திரி பதவியொன்றை வழங்க பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.தனியார் துறை ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் பொலிசாரின் வரம்புமீறிய  செயற்பாடுகள் என்பவற்றுக்கு தார்மீகப் பொறுப்பேற்று முன்னாள் பொலிஸ் மா அதிபர் பாலசூரிய பதவி விலகியிருந்தார்.
ஆயினும் கட்டுநாயக்கவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் எண்மர் காயமடைந்துள்ளதன் காரணமாக நாடளாவிய ரீதியில் தோன்றியுள்ள எதிர்ப்பலைகளை தணிக்கும் வகையில் பொலிஸ் மா அதிபரை பதவி விலகுமாறு ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரே கோரிக்கை விடுத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதுமாத்திரமன்றி அவ்வாறு அவர் பதவி விலகியிருக்காது  விட்டிருந்தாலும் இம்மாதம் பதினெட்டாம் திகதியுடன் அவரது பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் இருந்தது.அவ்வாறான பின்புலத்தில் கட்டுநாயக்க சம்பவங்களுக்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகியுள்ள மஹிந்த பாலசூரிய, நேற்று மாலை பாதுகாப்புச் செயலாளரை சந்தித்து உரையாடியுள்ளார். அதன்போது அவர் இதுவரை காலமும் அரசாங்கத்துக்காக தான் மேற்கொண்ட சட்டவிரோத நடவடிக்கைகள்  தொடர்பிலும் பிரஸ்தாபித்துள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான விசாரணை நடவடிக்கைகள், பாதாள உலகக்குழுவினரை ஒடுக்குவதில் சட்டத்திற்கு முரணாக மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் போன்றவையும் அவற்றில் உள்ளடங்குகின்றன.அவ்வாறாக தான் அரசாங்கத்துக்காக மேற்கொண்ட செயற்பாடுகள் குறித்துப் பிரஸ்தாபித்துள்ள அவர் அவற்றை கருத்திற்கொண்டு தனக்கு ஏதாவது மாற்று ஏற்பாடொன்றைச் செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மிக விரைவில் அவருக்கு வெளிநாடொன்றின் இராஜதந்திரிப் பதவியை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்அத்துடன் அரசாங்கத்தைப்பாதுகாக்கும் நோக்கில் சட்டவிரோதமாக மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் குறித்து தான் விடுத்த கட்டளைகள் குறித்து எக்காரணம் கொண்டும் வாய் திறக்க வேண்டாம் என்றும் அவர் முன்னாள் பொலிஸ் மா அதிபரை எச்சரித்துள்ளார்.
எதிர்வரும் 18ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச யாழ். விஜயம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதியுடன் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவும் செல்லவுள்ளார்.ஊவாமாகாண சபையின் 8 லட்சம் ரூபா நிதியுடன் கோப்பாய் நாவலர் மகாவித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி வகுப்பறை கட்டடத் தொகுதி திறப்பு விழாவுக்கே ஜனாதிபதி அங்கு விஜயம் செய்யவுள்ளார்.பிரஸ்தாப பாடசாலையில் நிரிமாணிக்கப்பட்டுள்ள இந்த வகுப்பறை கட்டட பணிகள் யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவின் மேற்பார்வையில் இராணுவத்தினரின் முழுமையான பங்களிப்புடன் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை, புதிய வகுப்பறை கட்டத் தொகுதியை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ சந்திரசிறி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.மேலும் குறித்த வகுப்பறைக் கட்டடத் தொகுதிக்கான திறப்பு விழா வைபவத்திற்கான ஏற்பாடுகளை வடக்கு மாகாண சபை மேற்கொள்ளவுள்ளது.இந்த நிகழ்வில் வடக்கு மற்றும் ஊவா மாகாண ஆளுநர்கள், ஊவா மாகாண முதலமைச்சர்,  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர். 
ஐபொட் வாங்குவதற்காக சிறுநீரகத்தை விற்ற சீன இளைஞர்.
ஐபொட் வாங்குவதற்காக தனது ஒரு சிறுநீரகத்தை சீன இளைஞர் விற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் ஹூய் சான் நகரத்தைச் சேர்ந்தவர் ஷெங்(17). ஐபொட் 2, டேப்ளட் கணணி ஒன்றை வாங்க விரும்பிய ஷெங் இதற்காக தனது ஒரு சிறுநீரகத்தை விற்றுள்ளார்.
தன்னை அணுகிய புரோக்கர் ஒருவர் கணணி வாங்க 20 ஆயிரம் யான் தருவதாக தெரிவித்ததால் தன்னுடைய சிறுநீரகத்தை விற்க ஒப்புக்கொண்டதாக ஷெங் தெரிவித்துள்ளார்.
வெள்ளரிக்காயால் பரவி வரும் தொற்றுநோய்: உலக நாடுகள் அதிர்ச்சி.
வெள்ளரிக்காய் மூலம் பரவி வரும் வரும் இ-கோலி பக்டீரியாவானது எப்போது முடிவுக்கு வருமென தெரியாது என ஜேர்மனியின் ரொபர்ட் கொச் நிலைய தலைவர் ரினார்ட் பேர்கர் தெரிவிக்கின்றார்.இதற்கு நீண்ட நாட்கள் ஆகலாம் எனவும் பேர்கர் தெரிவிக்கின்றார். இதனால் உலக நாடுகள் பல அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஸ்பெயின் நாட்டு வெள்ளரிக்காய் உற்பத்தியாளர் மீது குற்றம் சுமத்தியமைக்காக தனது வருத்ததையும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பலர் இப் பக்டீரியா தொற்றினால் உயிரிழந்துள்னர்.
இதனையடுத்து ஐரோப்பிய யூனியன் நாடுகளிலிருந்து மரக்கறி இறக்குமதிக்கு ரஸ்யா தடை விதித்துள்ளது. இதேவேளை ஜேர்மனியின் ஹம்பேர்க்கிற்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கர்கள் இருவருக்கும் இ-கோலி தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சுவீடனிலும் இத்தொற்று பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எலிகளால் விமானம் அவசரமாக தரையிறக்கம்.
சிட்னியிலிருந்து பிரிஸ்‌பேன் நோக்கி சென்ற விமானத்தில் 5 எலிகள் இருந்ததையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.அவுஸ்திரேலிய நாட்டு விமான நிறுவனமான குவாண்டாஸ் உள்நாட்டில் விமான சேவை நடத்தி வருகிறது.
இந்நிலையில் சிட்னி - பிரிஸ்பேன் மார்க்கமாக போயிங் 767 ரக விமானத்தை இயக்கியது. இந்த விமானத்தின் உட்பகுதியில் ஏதோ சப்தம் வந்தது.விமான ஊழியர்கள் சோதனை செய்ததி்ல ஒரு பெட்டியின் உள்ளே 5 எலிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது.
உலகின் பிரபலமான தலைவர்களின் கடவுச்சொற்களை சீன திருடர்கள் திருடிவிட்டனர்: கூகுள்.
சீனாவிலிருந்து செயல்படும் ஹேக்கர் கும்பல் ஜிமெயிலைப் பயன்படுத்தி வரும் நூற்றுக்கணக்கானோரின் கடவுச்சொல்லை திருடி விட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன் மூலம் அந்த ஜிமெயில்களின் பயன்பாடுகளை இந்த ஹேக்கர்கள் கண்காணித்து பல்வேறு குழப்ப வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கூகுள் கூறியுள்ளதாவது: அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகள், சீனாவில் ஜனநாயகம் கோரி குரல் கொடுத்து வரும் அரசியல் தலைவர்கள், அமைப்பினர், ஆசிய நாடுகள் பலவற்றின் முக்கிய அதிகாரிகள் ஆகியோரின் கடவுச்சொற்கள் திருட்டுப் போயுள்ளதாக அறிகிறோம். ராணுவ அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் பலரின் கடவுச்சொற்களும் கூட இதுபோல திருட்டுப் போயுள்ளதாக அறிகிறோம் என்று அது கூறியுள்ளது.
கூகுளின் இணையதள செயல்பாடுகளில் சீன ஹேக்கர்கள் ஊடுறுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு ஹேக்கர்கள் அட்டகாசத்துடன் சீன அரசின் அடக்குமுறைகளும் அதிகரித்ததால் சீனாவில் உள்ள தனது அலுவலகத்தை மூடுவதாக அறிவித்தது கூகுள் என்பது நினைவிருக்கலாம்.அதன் பின்னர் சீனாவில் உள்ள தனது செயல்பாடுகளை ஹாங்காங்குக்கு மாற்றி விட்டது கூகுள். இந்த நிலையில் ஜிமெயில் கடவுச்சொற்களை திருடும் கும்பல்களின் அட்டகாசம் சீனாவில் அதிகரித்துள்ளதாக கூகுள் கூறியிருப்பதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பத்திரிக்கையாளரை நாங்கள் கொல்லவில்லை: பாகிஸ்தான் மறுப்பு.
பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிகை நிருபர் சலீம் சகாஷத்(வயது 40). இவர் திடீரென மாயமானார். பின்னர் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவரை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றதாகவும், பின்னர் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்ததாகவும் தகவல்கள் வெளியாயின.
எனவே ஐ.எஸ்.ஐ அதிகாரிகள் தான் அவரை சித்ரவதை செய்து கொன்று விட்டதாக கூறப்பட்டது. பாகிஸ்தானில் கடந்த வாரம் கடற்படை தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதுதொடர்பாக சலீம் சகாஷத் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதில் ராணுவத்தை குறை கூறி சில தகவல்களை கூறிப்பிட்டிருந்தார்.இதனால் தான் ஐ.எஸ்.ஐ அதிகாரிகள் அவரை கடத்தி சென்று கொலை செய்து விட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதை ஐ.எஸ்.ஐ அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இதுதொடர்பாக ஐ.எஸ்.ஐ அதிகாரிகள் ஏ.பி செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில்,"சலீம்சகாஷத் சாவுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தேவையில்லாமல் இதை முடிச்சு போடுகிறார்கள். அவரை நாங்கள் அழைத்து செல்லவும் இல்லை. அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை பரப்புகின்றனர்" என்று கூறினார்.
சீனா வளர்ச்சிக்கு அமெரிக்கா தடை போட முயற்சி: ரோபர்ட் கேட்ஸ் பரபரப்பு பேச்சு.
உலகப்பொருளாதாரத்தில் ஆசிய நாடுகளில் ஒன்றான சீனா மிக அபார வளர்ச்சியை எட்டி வருகிறது. தற்போது உலக நாடுகளில் நம்பர் ஒன் வல்லரசு நாடாக அமெரிக்கா திகழ்கிறது.இந்த அமெரிக்காவின் வளர்ச்சியை சீனா இன்னும் 5 ஆண்டுகளில் கடந்து விடும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். சீனா வளர்ச்சியை அமெரிக்கா விரும்பவில்லை.
சீனாவின் வளர்ச்சியை அமெரிக்கா தடை செய்கிறது என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன. இந்த கருத்தை அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ரொபர்ட் கேட்ஸ் முற்றிலும் நிராகரித்தார்.அமெரிக்கா-சீனா உறவு மிக நல்ல நிலையில் உள்ளது. இருப்பினும் இரு தரப்பினர் இடையே தொடர் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்றார்.
சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் உரை நிகழ்த்த சென்ற போது அவர் இதனை குறிப்பிட்டார். இந்த மாநாட்டில் சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் லியாங் குவாங்லி பங்கேற்கிறார்.சீனா பல ஆயிரம் ஆண்டுகளாக சக்தி சாய்ந்த நாடாக திகழ்கிறது. அதன் வளர்ச்சியை அமெரிக்கா கட்டுப்படுத்தவில்லை. சீனா உலக சக்தியாக திகழ்கிறது. நாங்களும் உலக சக்தியாக திகழ்வோம் என்றார்.
கடந்த மாதம் அமெரிக்காவில் சீனா ஜெனரல் சென் கூறுகையில்,"அமெரிக்க ராணுவத்திற்கு இணையாக போட்டி போட வேண்டும் என்ற எண்ணம் சீனாவுக்கு இல்லை. தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் தருவதை நிறுத்த வேண்டும் இல்லை என்றால் சீனா-அமெரிக்க உறவில் பாதிப்பு ஏற்படும்" என எச்சரித்து இருந்தார்.
அதிபுத்திசாலிகள் குழுவில் இடம்பெறும் 3 வயது பிரிட்டிஷ் சிறுமி.
3 வயது சாப்ரான் பிளட்ஜர் என்ற சிறுமி மிக சிறந்த புத்திசாலியாக திகழ்கிறார். தொலைக்காட்சி குவிஸ் நிகழ்ச்சிகளில் அவர் அற்புதமாக பதில் அளித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.இந்த சிறுமி விரைவில் அதிபுத்திசாலிகள் அமைப்பான மென்சாவில் இடம் பெறுவதற்கு தயாராகி வருகிறார். இந்த இளம் சிறுமி பிரிட்டனின் சராசரி அறிவுத்திறன் 100 என்ற நிலையை விட 140 என்ற அற்புத அறிவுத்திறனை பெற்றுள்ளார்.
சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வார்த்தைகள் மற்றும் கணித விளையாட்டுப் போட்டியில் தந்தை டேனியை இந்த சிறுமி தோற்கடித்தார். 23 வயதான டேனி இந்த வார்த்தை கணித போட்டியில் கடந்த ஆண்டு 8 முறை கால் இறுதியில் முன்னேறி இருந்தார்.
அவர் தனது 3 வயது மகள் சாப்ரான் குறித்து கூறுகையில்,"எனக்கு 7 எழுத்து வார்த்தையை கூறும் தகுதி உள்ளது. ஆனால் எனது மகள் 8 வார்த்தை எழுத்தை கூறும் திறமை பெற்றவளாக உள்ளாள்" என்றார்.சாப்ரான் தனது சிறிய சகோதரிக்காக கதைகளை படிக்கிறார். அடிப்படை கணிதங்களையும் அழகாக செய்கிறார். ஆடை வடிவமைப்பாளரான தாய் கிறிஸ்டி கூறுகையில்,"சிறுமி சாப்ரான் இந்த சிறந்த அறிவுத்திறன் பெற தாங்கள் விசேட பயிற்சி ஏதும் அளிக்கவில்லை" என்றார்.
அதிபர் விமானம் நடுவானில் தவிப்பு: ஈரான் நடவடிக்கையால் ஜேர்மனி அதிர்ச்சி.
அதிபர் ஏங்கலா மார்கெல் இந்தியா சென்ற விமானத்தை வான் எல்லையில் நுழைய விடாமல் ஈரான் தடுத்தது. விமான ஓட்டியின் தவறால் நிறுத்தினோம் என ஈரான் தெரிவித்தது. ஈரானின் இந்த விளக்கத்தை ஜேர்மனி முற்றிலும் நிராகரித்தது.ஜேர்மனி தலைநகர் பெர்லினில் இருந்து திங்கட்கிழமை இந்தியாவுக்கு அதிபர் ஏங்கலா மார்கெல் புறப்பட்டார். அவரது விமானம் ஈரான் வழியாக இந்தியா வந்து கொண்டிருந்தது. அப்போது அதிபரின் விமானத்தை தங்கள் வான் எல்லையில் நுழைய விடாமல் ஈரான் தடுத்தது.
இதனால் அதிபர் மார்கெல் விமானம் 2 மணிநேரம் வானில் சுற்றியபடியே இருந்தது. விமானம் துருக்கி எல்லை பகுதியை சுற்றிக் கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எரிபொருள் தீரும் நிலையில் ஈரான் அரசு ஜேர்மனி அதிபரின் விமானம் தங்கள் வான் எல்லையில் பறந்து செல்ல அனுமதி அளித்தது.அதிபரின் விமான ஓட்டி மேற்கொண்ட தவறு காரணமாகவே அதிபரின் விமானத்தை அனுமதிக்கவில்லை என ஈரான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. இந்த விளக்கத்தை ஜேர்மனி முற்றிலும் நிராகரித்தது.
ஈரான் நாடாளுமன்ற இணையதளத்தில் ஜேர்மனி அதிபரின் விமான ஓட்டி தவறான விதிமுறையில் வந்ததால் அந்த விமானத்தை நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது என அயல் விவகார கொமிஷன் தலைவர் அலாதீன் போரு ஜெர்டி விளக்கம் அளித்தார்.இந்த விளக்கத்தை நிராகரித்த ஜேர்மனி பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியதாவது: அதிபரின் விமானம் சர்வதேச விதிமுறைகளை முறையாக கடைபிடித்தது. ஏப்ரல் 27ஆம் திகதி ஈரான் வழியாக பறப்பதற்கு நிர்வாகத்தினரிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஏப்ரல் 29ம்தேதி அனுமதி கிடைத்தது.
மார்கெலின் விமானம் ஈரான் எல்லைக்குள் நுழைந்த நிலையில் அதனை நிர்வாகிகள் திருப்பி அனுப்பினார்கள். இதனால் தாமதமாக இந்தியா வந்த ஏங்கலா மார்கெல் டெல்லியில் கூறுகையில்,"இதுபோன்ற விமான பயண்தை எப்போதும் சந்தித்தது இல்லை" என்றார்.எதிர்காலத்தில் இத்தகைய பிரச்சனை ஏற்படாமல் ஈரான் பார்த்துக் கொள்ள வேண்டும் என ஜேர்மன் அயல்துறை அமைச்சக செயலாளர் வோல்ப் ருதார்ட் பார்ன் தெரிவித்துள்ளார்.
கனடாவின் சாஸ்க்கட்ச் மாகாணத்தில் பாரிய காட்டுத் தீ: ராணுவ விமானங்கள் மூலம் மக்கள் வெளியேற்றம்.
சாஸ்க்கட்ச் வான் மாகாணத்தின் வோலஸ்டன் லேக் பர்ஸ்ட் நேஷன் பகுதிகளில் பயங்கர காட்டுத் தீ அபாயம் ஏற்பட்டுள்ளது.கொழுந்து விட்டு எரியும் தீயில் இருந்து மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்ற ராணுவ விமானங்களும், ஹெலிகாப்டர்களும் விரைந்துள்ளன.புதன்கிழமை இரவு 9.45 மணி அளவில் 2 ஹெர்குலஸ் போர் விமானமும், 3 கிரிபான் ஹெலிகாப்டர்களும் சாஸ்க்கட்ச் மாகாணத்தை வந்தடைந்தன. வியாழக்கிழமை காலையும் கூடுதல் விமானங்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன.
காட்டுப் பகுதியில் பரவும் தீ 24 மணி நேரத்தில் 10 மடங்கு தீவிரமாகும் என்கிற அபாய நிலை ஏற்பட்டதை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக கொண்டு செல்லப்படுகிறார்கள்.புதன்கிழமை மாலை 630 பேர் சாஸ்க்கட்ச் வானின் தெற்கு பகுதியில் உள்ள சமூக கூடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். வோலஸ்டன் லேக் பகுதியின் மொத்த மக்கள் தொகை 1400 ஆகும். ராணுவ விமானங்கள் நார்த் வேண்டிங் பகுதிக்கு நேரடியாக வந்து அவர்களை சாஸ்க்டூன் பகுதிக்கு நேரடியாக கொண்டு செல்கின்றன.
நார்த் வேண்டிங் பகுதியில் அவசர நிலை குழுவினர் மக்களுக்கு உரிய ஏற்பாடுகளை செய்தார்கள். ஒவ்வொரு விமானமும் 96 பேரையும், ஒவ்வொரு ஹெலிகாப்டரும் 6 முதல் 10 பேரையும் ஏற்றிச் செல்கின்றன.காட்டுத் தீ 500 எக்டேரில் பரவி உள்ளது. இந்த தீ புதன்கிழமை கொம்யூனிட்டி விமான நிலையத்தை நெருங்கியது. செவ்வாய்க்கிழமை 242 பேர் பிரின்ஸ் ஆல்பர்ட் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து 750 கி.மீ தொலைவுக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டார்கள். காட்டுத் தீயை அணைக்க டன் கணக்கில் தண்ணீரும் தீயணைப்பு ரசாயனங்களும் கொட்டப்பட்டன.
ஏமனில் கலவரம்: 41 பேர் பலி.
ஏமன் தலைநகர் சனாவில் நேற்று அதிகாலை முதல் அதிபர் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் கடும் மோதல் நடந்தது.இதில் 41 பேர் பலியாயினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். எதிர்ப்பாளர்களான பழங்குடியினர் அலுவலகம், ஆளும் கட்சித் தலைமையகம் உள்ளிட்ட பல்வேறு அரசுக் கட்டடங்களைக் கைப்பற்றினர்.
எதிர்க்கட்சித் தலைவரான ஷேக் சாதிக் அல் அமரின் வீட்டின் மீது நேற்று ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதிபர் மாளிகை வட்டாரத்தைப் பாதுகாக்கும் படைகள் நேற்று ராணுவத்தின் ஒரு பிரிவின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியது.ராணுவத்தில் இருந்து பிரிந்து எதிர்ப்பாளர்களுடன் சேர்ந்த ராணுவப் பிரிவின் அலுவலகம் என்பதால் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
அணுமின் நிலையங்களை அதிகரிக்கும் சீனாவுக்கு பேராபத்து ஏற்படும்: நிபுணர்கள் எச்சரிக்கை.
அணுமின் நிலையங்களை அதிகரிக்கும் சீனாவின் அதிவேக போக்கு ஆபத்தில் தான் முடியும் என அந்நாட்டைச் சேர்ந்த இயற்பியல் பேராசிரியர் ஹீ ஷூவோஷியூ கவலை தெரிவித்துள்ளார்.அவரது இந்த அறிக்கை சீன அணுசக்தி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் புகுஷிமா டச்சி அணுமின் நிலையத்தை சுனாமி தாக்கிய பின் அங்கு ஏற்பட்ட கதிர்வீச்சு அபாயத்திற்குப் பின் உலகளவில் அணுமின் நிலையங்களை புதிதாக அமைக்கும் திட்டங்களை பல நாடுகள் கைவிட்டுள்ளன.
2022க்குள் தங்கள் நாட்டிலுள்ள அனைத்து அணுமின் நிலையங்களையும் மூடிவிடப் போவதாக ஜேர்மனி அறிவித்துள்ளது. இந்நிலையில் தங்கள் நாட்டிலுள்ள 13 அணுமின் நிலையங்களை 2020ம் ஆண்டுக்குள் 50 அணுமின் நிலையங்களாக அதிகரிக்கவும், இந்தத் திட்டத்தை 540 லட்சம் கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றவும் சீனா திட்டமிட்டுள்ளது.
அதற்கான பணிகளையும் முடுக்கி விட்டுள்ளது. தற்போது அணுமின் நிலையங்கள் மூலம் 9 ஜிகாவாட் மின்சாரத்தை சீனா பெறுகிறது. தற்போதுள்ள 13 அணுமின் நிலையங்கள் 50 ஆக அதிகரிக்கும் போது 70 ஜிகா வாட் மின்சாரம் உற்பத்தியாகும். இதுமட்டுமின்றி 2030க்குள் அணுமின் நிலையங்களின் உற்பத்தியை 250 ஜிகாவாட்டாக அதிகரிக்கவும் சீனா திட்டமிட்டுள்ளது.
உலகளவில் உள்ள அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி ஏஜென்சி(ஐ.ஏ.இ.ஏ) கவலை தெரிவித்துள்ள நிலையில் சீனா மட்டும் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரியாகத் திட்டமிடாமல் அணுமின் நிலையக் கட்டுமானங்களை துரித வேகத்தில் செய்து வருவதாக அந்நாட்டின் புகழ்பெற்ற இயற்பியல் பேராசிரியர் ஹீ ஷூவோஷியூ கவலை தெரிவித்துள்ளார்.சீனாவில் வெளியாகும் சயின்ஸ் டைம்ஸ் பத்திரிகையில் இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: எவ்விதத் தயாரிப்பும் இல்லாமல் குறிப்பாக பாதுகாப்பு பற்றிய எவ்வித அக்கறையும் இல்லாமல் சீன அரசு அணுமின் நிலையங்களை புயல் வேகத்தில் கட்டி வருகிறது.
இதைப் பார்க்கும் போது எனக்கு 1950ம் ஆண்டுகளில் மாவோ மேற்கொண்ட "முன்னோக்கிய பெரும் பாய்ச்சல்" திட்டம் தான் நினைவுக்கு வருகிறது. தொழில்நுட்பம், செலவு மற்றும் பாதுகாப்பு சார்ந்த பிரச்னைகளை நம்மால் சரி செய்ய முடியவில்லை.அதிக ஆர்வக்கோளாறில் அணுமின் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இது அனேகமாக நடக்க முடியாத திட்டம்  தான். அணுமின் நிலையங்கள் அமைப்பதற்கான செலவுகளை சீன அரசு சரியாகக் கணக்கிட்டுள்ளதாகத் தெரியவில்லை. இவ்வளவு அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டால் யுரேனியத்துக்கு எங்கே போவது? எண்ணெய் மற்றும் எரிவாயு போல அவ்வளவு சுலபத்தில் அதை இறக்குமதியும் செய்ய முடியாது.
அணுமின் நிலையங்கள் அமையக் கூடிய இடங்கள் அனைத்தும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள். அதனால் அப்பகுதிகளில் நிறுவப்படும் அணுமின் நிலையங்களின் பாதுகாப்புக்காக மிக அதிகளவில் செலவழிக்க வேண்டி வரும். அது லாபகரமானதாகவும் இருக்காது. இந்தக் கருத்துகளுக்காக நான் ஏற்கனவே தாக்கப்பட்டுள்ளேன்.ஆனால் இத்துறையில் எனது கருத்தை பலர் ஒப்புக் கொண்டுள்ளனர் அல்லது எனது கேள்விகளுக்குப் பலரிடம் பதில்கள் இல்லை. இவ்வாறு ஹீ தெரிவித்துள்ளார்.
அவரது இந்தப் பேட்டி சீனாவின் அணுசக்தித் துறையில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சீனாவின் குவாங்டாங் அணுசக்திக் குழுமத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில்,"ஹீயின் அறிக்கை அணுசக்தித் துறையில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. சீன அரசை எதிர்த்து இத்துறையில் முதல் குரல் கொடுத்துள்ளார்" என்றார்.
பாகிஸ்தானுக்கு நிதியுதவி அளிக்கும் அமெரிக்கா.
பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க அமெரிக்கா 1.1 பில்லியன் டொலர் நிதியுதவியை பாகிஸ்தானுக்கு அளித்துள்ளது.பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின் அந்நாட்டுக்கு அளித்து வரும் நிதியுதவியை முற்றிலும் நிறுத்த வேண்டும் என அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை கமிட்டி நேற்று நிறைவேற்றிய 2012ம் ஆண்டுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான மசோதாவின்படி பாகிஸ்தானுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுப்பதற்காக அந்நாட்டிற்கு 1.1 பில்லிடன் டொலர் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிதியை பயன்படுத்துவதால் ஏற்படக் கூடிய பலன்களை பற்றி அமெரிக்க ராணுவ மையமான பென்டகன் பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். பாகிஸ்தானில் அமெரிக்காவை எதிர்க்கும் பயங்கரவாதிகளின் பெயர் பட்டியலை ராணுவ அமைச்சகம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அதுவரையில் இந்த நிதியின் நான்கில் மூன்று பங்கு நிறுத்தி வைக்கப்படும். இந்த மசோதாவின் இன்னொரு பிரிவின்படி ஆப்கானிஸ்தானில் உள்ள பாதுகாப்பு வீரர்களுக்கான ஆயுதங்களை அதிகரிப்பதற்காக 13 பில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது குறித்து முழு விசாரணை நடத்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஜாவேத் இக்பால் தலைமையில் ஐந்து நபர் குழுவை அந்நாட்டு பிரதமர் யூசுப் ரசா கிலானி நியமித்துள்ளார். இக்குழு ஒசாமா பாகிஸ்தானில் தங்கியிருந்தது அரசுக்கு எப்படி தெரியாமல் போனது என்பது பற்றியும் விசாரிக்கும்.
நேட்டோ படைத் தாக்குதல்: 718 பேர் பலி.
லிபியாவில் இதுவரை நேட்டோ படையினர் நடத்திய தாக்குதலில் 718 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியுள்ளது.அதே நேரத்தில் தங்களது லிபிய நடவடிக்கை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படும் என்று நேட்டோ அறிவித்துள்ளது. லிபியாவில் கடந்த மார்ச் முதல் நேட்டோ விமானப் படைகள் கடாபி ராணுவ மையங்கள், வாகனங்கள் மீது குண்டுகளை வீசித் தாக்கி வருகின்றன.
லிபிய அரசு செய்தித் தொடர்பாளர் மூசா இப்ராகிம் நேற்று அளித்த பேட்டியில்,"கடந்த மார்ச் 19 முதல் மே 26ம் திகதி வரையிலான 10 வார காலகட்டத்தில் நேட்டோ தாக்குதலில் 718 பேர் பலியாகியுள்ளனர். 4067 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 433 பேர் நிலைமை மோசமாக உள்ளது" என்றார்.
மேலும் கடாபி நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தால் நாட்டுக்கு அதை விட மோசமான நிலை வேறு எதுவும் இருக்காது என்றும் கூறினார்.இதற்கிடையில் நேட்டோ பொதுச் செயலர் ஆண்டர்ஸ் ராஸ்முசேன் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,"நேட்டோவின் லிபியா மீதான ராணுவ நடவடிக்கை வரும் செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது" என்றார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF