Sunday, June 19, 2011

இன்றைய செய்திகள்.


1,000 கடாக்கள் வெட்டிச் சரிப்பு; கவுணாவத்தையில் இரத்தப் பலி.

கவுணாவத்தை வைரவர் ஆலயத்தில் நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடாக்கள் வெட்டிச் சரிக்கப்பட்டன. அவற்றில் ஆலயத்தில் வெட்டவென திட்டமிட்டு வளர்க்கப்பட்ட பெரிய ஆடுகள் 300இற்கும் மேற்பட்டவை என்று நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

20 ஆண்டுகளின் பின்னர் ஆலயத்தின் முன்றிலில் மிருகவதை நடக்க இராணுவத்தினரும் பொலிஸாரும் இடமளித்தமையைத் தொடர்ந்து, காலை சுமார் 4.30 மணி முதல் ஆடுகளை வெட்டிச்சரிக்கும் படலம் ஆரம்பிக்கப்பட்டது. 
மொத்தமாக 1050 கடாக்களும் நூற்றுக்கணக்கான கோழிகளும் ஆலய முன்றலில் வெட்டிச் சரிக்கப்பட்டதை, ஆயிரக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் முட்டி மோதிக்கொண்டு பார்வையிட்டனர்.கவுணாவத்தையில் வெட்டிச் சரிக்கவென, குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள் பெரும் சோடனைகளுடன் டிராக்டர்களிலும் லான்ட் மாஸ்டர்களிலும் கொண்டு வரப்பட்டன. மேளதாளங்களுடனும், வெடி ஆரவாரங்களுடனும் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கடாக்கள் வந்தன. தெல்லிப்பளை, கருகம்பனை, கவுணாவத்தை வைரவர் ஆலயப் பொங்கல் மற்றும் மடைத் திருவிழா நேற்று நடைபெற்றது. 

ஆலயம் அமைந்துள்ள பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அமைந்திருந்ததால், இதுநாள் வரை அங்கு கடாக்களை வெட்டுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. எனினும் படையினரிடம் அனுமதி பெற்று ஒரு கடாவை மட்டும் ஆலய முன்றலில் வெட்டிய பின்னர், ஏனயைவற்றை தனியார் காணி ஒன்றில் வைத்து வெட்டி வந்தனர். இம்முறை ஆலயத்துக்குச் செல்ல அனைவருக்கும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து ஆயிரம் கடாக்களும் ஆலய முன்றலிலேயே வெட்டிச் சரிக்கப்பட்டன. 

வெட்டிச் சரிக்கப்பட்ட கடாக்களை உணவுக்காக வாங்கிச் செல்வதில் குடாநாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வந்தவர்கள், நீயா நானா என்று போட்டியிட்டனர். முதலாவதாக வெட்டிச் சரிக்கப்பட்ட கடா ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்கப்பட்டாதகத் தெரிவிக்கப்பட்டது. உயிருடன் 3 லட்சம் ரூபாவுக்கு வாங்கப்பட்டு ஆலய முன்றலில் வெட்டிச் சரிக்கப்பட்ட ஒரு கடா, ஒன்றரை லட்சம் ரூபாவுக்கு விற்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

ஆலயத்தில் வெட்டிச் சரிப்பதற்காக கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக வளர்க்கப்பட்ட கடாக்கள் நேற்றுமுன்தினம் இரவு இளவாலை வடக்குப் பகுதிகளான சித்திரைமேழி, வித்தகபுரம், ஆலடி, பன்னாலை, கருகம்பனை, தெல்லிப்பளை, கீரிமலை ஆகிய இடங்களில் வர்ண மின் விளக்குகளால் சுற்றிவர அலங்கரிக்கப்பட்ட இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. பின்னர் அவை டிராக்டர்கள், லான்ட் மாஸ்டர்களில் ஏற்றிச் செல்லப்பட்டு இன்று காலையில் கவுணாவத்தை ஆலய முன்றலில் வெட்டிச் சரிக்கப்பட்டன.









மஹிந்தரின் ரஷிய விஜயம் வெற்றி!

ரஷ்யாவின் பீட்டர்ஸ்பேர்க் நகரில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார மாநாட்டின் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உட்பட தூதுக் குழுவினர் இன்று நாடு திரும்பினர்.மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ரஷ்ய ஜனாதிபதி நிமித்ரி மெத்வேதேவ், ஸ்பானிய பிரதமர் ஜோஸ் லூயிஸ் செப்டேரோ மற்றும் கசகஸ்தான் ஜனாதிபதி நூர்தல்தான் நயார்பயேவ் ஆகியோருடன் பேச்சு நடத்தினார். 

மனிதாபிமான நடவடிக்கையின் பின்னர் இலங்கையில் இன்று வரை பெற்றுள்ள பொருளாதார வெற்றிகள் தொடர்பாகவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களை மீளக் குடியமர்த்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பாகவும் ஜனாதிபதி அந்நாட்டுத் தலைவர்களுக்கு விளக்கமளித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இம்மாநாட்டில் கலந்து கொண்டமையால் இலங்கைக்கு அரசியல், பொருளாதார ரீதியில் பல நன்மைகளையும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைத்துள்ளன என ஜனாதிபதி செயலக ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு நாணயங்களுடன் இலங்கையர் கைது!

2 கோடி ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை சட்டவிரோதமான முறையில் எடுத்துக் கொண்டு சிங்கப்பூர் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்கா விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெளிநாட்டுப் பண நோட்டுகளில் இந்தியா, அமெரிக்கா சவூதி அரேபியா போன்ற நாடுகளின் நாணயத்தாள்கள் உள்ளடங்குகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பண நோட்டுகளை பிறிதொரு குழுவினரின் தேவைக்காக விமானம் மூலம் கொண்டு செல்ல இருந்தார் என்று விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. கைதானவர் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

உலக அரங்கில் தனிமைப்படும் இலங்கை!

சர்வதேச ரீதியில் இலங்கை தனிமைப்படுத்தப்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு: 

"அரசின் செயல் திறனற்ற தன்மையினால் சர்வதேச அரங்கில் நாடு பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடலாம். யுத்தத்தின் பின்னரான இலங்கையின் நல்லிணக்க மற்றும் அபிவிருத்திப் பணிகளை இது பெரிதும் பாதிக்கும். 

சனல் 4 ஊடகத்தின் ஆவணப் படம் நாட்டின் நன்மதிப்புக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இராஜதந்திர விவகாரங்கள் தொடர்பில் அரசு பின்பற்றி வரும் தூர நோக்கற்ற கொள்கைகளே இதற்கான காரணம் . சனல் 4 பிரித்தானியாவின் ஊடக நிறுவனம்.போலியான தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தால் பொறுப்பு வாய்ந்த அரசு என்ற ரீதியில் "சனல் 4' ஊடகத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து நியாயத்தை நிலை நாட்டக் கூடிய சகல சந்தர்ப்பங்களும் அரசுக்கு காணப்படுகின்றது. யுத்தத்தில் வெற்றியீட்டிய படையினருக்கு நினைவுத் தூபிகளை அமைப்பதை விடவும், படையினருக்கு ஏற்படும் களங்கத்தை நீக்குவது முக்கியமானது. அரசுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவோரை தேசத் துரோகிகளாக முத்திரை குத்தும் கலாசாரம் இல்லாது ஒழிக்கப்பட வேண்டும்.

மன்னாரில் எண்ணெய் அகழ்வுப் பணிகள்! ரஸ்யாவிடம் ஒப்படைப்பு.

மன்னார் கடல் பகுதியில் காணப்படும் எண்ணெய் படிமங்களை அகழும் பணியை அரசாங்கம் ரஸ்யாவிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எண்ணெய்ப் படிமங்களை அகழ்வது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ரஸ்யாவின் நிபுணர் குழு ஒன்று விரைவில் இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஸ்யாவின் சென் பீற்றேஸ்பேர்க்கில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி மகிந்தா ராஜபக்ஸ, ரஸ்யாவின் மிகப்பெரும் எண்ணை உற்பத்தி நிறுவனமான Gazprom நிறுவனத்தின் அதிகாரிகளுடன் மேற்கொண்ட பேச்சுக்களை தொடர்ந்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு ரஸ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவிடம், மகிந்த ராஜபக்ஸ வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.
அமெரிக்க நீதிமன்ற அழைப்பாணையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பாக அமெரிக்க நீதிமன்றம் அனுப்பிய அழைப்பாணையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.பாதுகாப்புப் படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட 30 மில்லியன் டொலர்கள் நஷ்டஈடு கோரும் மூன்று வழக்குகள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வொசிங்டன் மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்தது.இந்த அழைப்பாணை ஜனாதிபதியின் வாசஸ்தலமான அலரி மாளிகைக்கு முதலில் அனுப்பப்பட்டது.  ஆனால் அதை ஏற்க அவர் மறுத்து விட்டதையடுத்து  நீதி அமைச்சு அதைப் பெற்றுக் கொண்டுள்ளது.
அதே நேரம் இதுபோன்ற அழைப்பாணைகளுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை என்று நீதியமைச்சின் செயலர் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார்.  தமது சட்ட நிலைப்பாடு தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்துக்குத் தகவல் தெரிவிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.இந்த நீதிமன்ற நடவடிக்கையானது ஜனாதிபதிக்கும் அரசுக்கும் தொல்லை கொடுக்கின்ற வகையில் திட்டமிடப்பட்டதொன்று என வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“அனைத்துலக ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரகடனத்தின் படி அரச தலைமைகளுக்கு விதிவிலக்கு உள்ளது. எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அமெரிக்காவுக்கு செல்ல விடாமல் தடுக்க முனைவது பயனற்ற செயல்“ என்றும் அவர் கூறியுள்ளார்.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக நியுயோர்க் செல்வதற்குத் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
17 வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமர்வில் பல நாடுகளும் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகித்தன.
17 வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமர்வில் பல நாடுகளும் இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகித்தன. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 17 வது அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதன்போது இலங்கை தொடர்பில் உலக நாடுகள் பலவும் தமது கருத்துக்களை வெளியிட்டன. இலங்கை அரசாங்கம் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவேண்டும் என்று அமரிக்கா இதன்போது வலியுறுத்தியது. அத்துடன் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என்றும் அதன் பிரதிநிதி கோரினார்.ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று பிரித்தானியா இலங்கையை வலியுறுத்தியது.
சட்டவிரோத படுகொலைகள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் அது சுட்டிக்காட்டியது.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இவை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக்கொண்டது.சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அத்துடன் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இலங்கை அரசாங்கம் இணைந்து செயற்படவேண்டும் என்றும் ஒன்றியம் வலியுறுத்தியது.
ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை, உன்னிப்பாக அவதானிக்கப்பட்டதாக ஸ்பெய்ன் அறிவித்தது.. நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் மனித உரிமைப் பேரவை கவனம் செலுத்த வேண்டும் என்று அந்த நாடு வலியுறுத்தியது.இந்தநிலையில் பக்கச்சார்பற்ற நம்பகமான தேசிய ரீதியான விசாரணைப் பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டுமென்று ஸ்பெய்ன் வலியுறுத்தியது.
இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதே ஜப்பானின் விருப்பம் என்று அறிவிக்கப்பட்டது. தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளின் போது மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னின்று செயற்பட வேண்டியது அவசியமானது என்று ஜப்பான் கோரியது.போர்க்குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவதன் மூலமே நிரந்தரமான சமாதானத்தை எட்ட முடியும் என ஸ்லோவாக்கியா தெரிவித்தது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அந்த நாடு வலியுறுத்தியது.
இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள் இலக்கு வைக்கப்படுவதாக ஜெர்மன் சுட்டிக்காட்டியது. ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை வரவேற்கப்பட வேண்டியதென அந்த நாட்டின் பிரதிநிதி குறிப்பிட்டார்.ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இலங்கை இணைந்து செயற்பட வேண்டுமென்று அயர்லாந்து வலியுறுத்தியது.. நிபுணர் குழு அறிக்கை பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த நாட்டின் பிரதிநிதி கோரினார்.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை வரவேற்கப்பட வேண்டியது என்று சுவீடன் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கையில் மேலும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென சுவீடன் கோரிக்கை விடுத்தது.இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பிலான நிபுணர் குழு அறிக்கையை வரவேற்பதாக டென்மார்க் அறிவித்தது. நம்பகமாக சுயாதீனமான விசாரணைகள் அவசியமானது. பாரிய குற்றச்சாட்டுக்களுக்கு தீர்வு காண்பதன் மூலம் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என்றும் டென்மார்க் கூறியது.
நான் பிரேமதாச ஜனாதிபதியின் மகன்: சஜித் பிரேமதாச கர்ச்சனை.
தான் யாருக்கும் அஞ்சாத ஜனாதிபதி பிரேமதாசவின் மகன் என்றும், தந்தையைப் போலவே தானும் அஞ்சாநெஞ்சன் தான் என்றும் சஜித் பிரேமதாச கர்ச்சித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான சஜித் பிரேமதாச கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையில் அடிக்கடி ஊடகங்களுக்குக் கருத்துக்களை வெளியிடுவதும், ஊடகங்கள் வாயிலாக கட்சியையும், தலைமைத்துவத்தையும் விமர்சிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவர்கள் அதிருப்தியடைந்து சஜித் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரியுள்ளதுடன், அதற்கான பிரேரணையொன்றையும் கட்சியின் செயற்குழுவில் முன்வைத்துள்ளார்கள்.
ஆயினும் அதுபற்றிக் கேள்விப்பட்ட சஜித் பிரேமதாச, தான் அஞ்சா நெஞ்சன் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகன் என்றும், சின்னச்சின்ன சலசலப்புக்கெல்லாம் தான் அஞ்சப் போவதில்லை என்றும் கர்ச்சித்துள்ளார்.அத்துடன் ஜனாதிபதிக்கெதிரான குற்றவியல் பிரேரணையே தோற்கடித்த தனது தந்தையின் அனுபவத்தைக் கொண்டு, கட்சியில் தனக்கெதிராக மேற்கொள்ளப்படும் சதிகளை முறியடிக்கப் போவதாகவும் சூளுரைத்துள்ளார்.

உணவாக மாறுகின்றது மனித மலம் .

ஹம்பர்கர் அல்லது பர்கர் என்று அழைக்கப்படுகின்ற உணவுப் பொருள் மாடு, பன்றி போன்றவற்றின் இறைச்சியில் தயாரிக்கப்படுகின்றது. ஆனால் மனித மலத்தில் இருந்து செயற்கையான முறையில் இவ்வுணவுப் பொருளை தயாரித்து உள்ளனர் யப்பானிய விஞ்ஞானிகள். உலக உணவு நெருக்கடியை சமாளிக்கின்றமைக்காக மனித மல ஹம்பர்கரை அறிமுகம் செய்து உள்ளார்கள்.


பொலிஸ் உடையணிந்து பத்திரிக்கையாளர்களை தாக்கிய நபர் கைது.
பாகிஸ்தானில் பொலிஸ் உடை அணிந்த மர்ம நபர்கள் பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பிரிட்டன் கார்டியன் பத்திரிகையின் நிருபராக இருப்பவர் வாக்கர் கியானி.சம்பவத்தன்று இவர் பணிமுடிந்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்த போது பொலிஸ் சீருடை அணிந்த மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான நிருபர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில் தாக்குதல் சம்பவத்தில் பொலிசார் யாரும் ஈடுபடவில்லை என இஸ்லாமாபாத் பொலிஸ் அதிகாரி பின்யாமினி கூறியுள்ளார்.
அமெரிக்கா - பாகிஸ்தான் உறவு மோசமடையவில்லை: ஹீசைன் ஹக்கானி.
ஊடகங்கள் சித்தரிப்பதை போல அமெரிக்கா-பாகிஸ்தான் உறவு மோசம் அடையவில்லை என ஹீசைன் ஹக்கானி கூறினார்.அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதராக ஹீசைன் ஹக்கானி உள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு 30 மைல் தொலைவில் அபோதாபாத் உள்ளது.
மிகுந்த பாதுகாப்பு உள்ள இடத்தின் அருகே அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் 5 ஆண்டுகள் வசித்தார். அவரை கடந்த மே மாதம் 2ஆம் திகதி அமெரிக்க சிறப்பு வீரர்கள் கொன்றனர்.பாகிஸ்தான் அரசுக்கு தெரியாமல் 5 ஆண்டுகள் பின்லேடன் அங்கு இருந்திருக்க முடியுமா? பாகிஸ்தான் அரசு அல்கொய்தாவுக்கு உதவி செய்கிறது என அமெரிக்கா சந்தேகப்பட்டது.
பின்லேடன் மரணத்திற்கு பின்னர் இரு நாடுகள் உறவில் மிகுந்த விரிசல் ஏற்பட்டதாக சித்திரிக்கப்பட்டது. ஆனால் இரு நாடுகளின் உறவு மோசம் அடையவில்லை.அபோதாபாத் நகரில் அமெரிக்க ராணுவ செயல்பாடு பாகிஸ்தானை அறிந்து இருந்தது. தங்களுடைய கட்டாயமாக பாகிஸ்தானை நம்ப முடியுமா என அமெரிக்கா கேள்வி எழுப்புகிறது.
இதே கேள்வியை அமெரிக்காவை பார்த்து பாகிஸ்தான் கேட்கிறது. தீவிரவாத்தை எதிர்த்து போராட பாகிஸ்தான் அதிக விலை கொடுத்து உள்ளது. 35 ஆயிரம் மக்கள் இறந்துள்ளனர்.நேட்டோ கூட்டுப்படையை காட்டிலும் கூடுதலாக பாகிஸ்தான் வீரர்கள் இறந்துள்ளனர். 2 ஆயிரம் பொலிசார் இறந்துள்ளனர். எங்களது தலைவர் பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டார். முதலீடு வர்த்தகம் கட்டமைப்பு என பெரும் இழப்பு பாகிஸ்தானுக்கு ஏற்பட்டு உள்ளது என ஹீசைன் ஹக்கானி கூறினார்.
ஆப்கானில் அல்கொய்தா பலவீனம் அடைந்தது: அமெரிக்க படைகள் நாடு திரும்ப முடிவு.
ஆப்கானிஸ்தானில் அல்கொய்தா பிரிவினரை பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.அல்கொய்தா தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து அந்த தீவிரவாத அமைப்பு பலவீனம் அடைந்துள்ளது. எனவே ஆப்கானிஸ்தானில் இருந்து விரைவில் அமெரிக்க துருப்புகள் நாடு திரும்பலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மே மாதம் 3ஆம் திகதி பாகிஸ்தான் அபோதாபாத் நகரில் அல்கொய்தாவின் 30 முக்கியத் தலைவர்களில் 20 பேரை அமெரிக்கா கொன்றுள்ளது. முக்கிய தலைவர்கள் இறந்து விட்டதால் அந்த அமைப்பு பலவீனம் அடைந்துள்ளது என அமெரிக்க கூறுகிறது. அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகள் இதனை கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்புகளுடன் அமெரிக்க பேச்சு வார்த்தை நடத்துகிறது. 10 ஆண்டு போருக்கு பின்னர் தலிபான்-அமெரிக்கா இடையே முதல் முறையாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இரு தரப்பு பேச்சு வார்த்தையை ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமித் கர்சாய் சனிக்கிழமை உறுதி செய்தார்.
2014ம் ஆண்டு அனைத்து அயல் நாட்டு துருப்புகளும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்கு இந்த அரசியல் தீர்வு மேற்கொள்ளப்படுகிறது. அமெரிக்கா-தலிபான் இடையே பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. இதில் நல்ல முன்னேற்றம் உள்ளது என தலைநகர் காபூல் கூட்டத்தில் கர்சாய் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் ஒரு லட்சம் அமெரிக்க வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வடகொரிய விமானம் எனக் கருதி பயணிகள் விமானத்தை தாக்கிய தென் கொரியர்கள்.
தென் கொரியாவை சேர்ந்த ஏசியானா நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் சீனாவில் இருந்து சியோல் நகருக்கு புறப்பட்டு வந்தது. அதில் 119 பயணிகள் இருந்தனர்.அந்த விமானம் வட கொரியா கடல் எல்லையில் இருந்து சுமார் 12 கிலோ மீற்றர் தூரத்தில் தென் கொரியாவில் உள்ள ஜிமூன் தீவு பகுதியில் பறந்து கொண்டிருந்தது.
அப்போது ஜடோடாங் தீவில் தென்கொரிய ராணுவ வீரர்கள் 2 பேர் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அந்த விமானம் வட கொரியாவின் போர் விமானம் என தவறுதலாக கருதி விட்டனர். பிரிவினை ஏற்பட்ட பிறகும் கடந்த 1953ம் ஆண்டு முதல் வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே தொடர்ந்து பகை நீடித்து வருகிறது.
எனவே வட கொரியா போர் விமானம் தான் அத்து மீறி நுழைந்து விட்டதாக கருதி அதன் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். சுமார் 99 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். நீண்ட தொலைவில் பறந்ததால் இவர்கள் சுட்ட துப்பாக்கி குண்டுகள் விமானத்தை தாக்காததால் பாதிப்பு எதுவும் இல்லை. எனவே அதில் பயணம் செய்த 119 பேரும் தப்பினர்.இந்த துப்பாக்கி சூடு சம்பவம் சுமார் 10 நிமிடம் நடந்தது. அதன் பிறகு தான் தவறுதலாக சுட்டது தெரிய வந்தது. இச்சம்பவம் தென் கொரியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கு உதவிய அயல்நாட்டவர்களுக்கு சிறைத் தண்டனை.
மூன்று பிரிட்டன் மற்றும் மூன்று அமெரிக்கர்கள் உட்பட 6 அயல்நாட்டவருக்கு சோமாலியாவில் 15 ஆண்டு சிறை தண்டணை விதிக்கப்பட்டது.சோமாலியா கடற் கொள்ளையர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய 36 லட்சம் டொலரை அவர்கள் சிறிய விமானத்தில் எடுத்து வந்த போது பிடிபட்டனர்.
மே 24ஆம் திகதி தலைநகர் மொகாதிஷீவுக்கு ஒரு விமானம் வந்து இறங்கியது. அவர்கள் இன்னொரு சிறிய விமான வருகைக்காக காத்திருந்த போது பிடிபட்டனர் என சோமாலியா அரசு பாதுகாப்பு அதிகாரி முகமது ஒமர் கூறினார்.கடற்கொள்ளையர்களுக்கு பணம் கொண்டு வந்த அமெரிக்கர் மற்றும் பிரிட்டன் நபர்களுக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனையை மொகாதிஷீ பனாடிர் நீதிமன்ற தலைமை நீதிபதி வழங்கினார்.
விமான ஓட்டி உள்பட 4 பேருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. கடற்கொள்ளையர்களுக்கு பணம் கடத்த உதவிய 2 விமானங்களையும் சோமாலிய அரசு பறிமுதல் செய்தது.அந்தப் பணத்தை பிணையத்தொகையாக பயன்படுத்த இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. பிடிபட்ட 2 அயல் நாட்டவர்களின் விவரம் தெரியவில்லை. அவர்கள் என்ன காரணத்திற்காக கடற்கொள்ளையர்களுக்கு பணம் கொண்டு சென்றனர் என்பது தெரியவில்லை.
தந்தையாக இருப்பது மிக கடினமான வேலை: ஒபாமா.
இன்று தந்தையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாப்படுகிறது. இதை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று பேட்டி அளித்தார்.அதில் ஒபாமா கூறியதாவது: நான் சிறுவனாக இருக்கும் போது என் அப்பா பிரிந்து சென்று விட்டார். அதனால் தாத்தா, பாட்டியிடம் வளர்ந்தேன். அப்பா இல்லாமல் வளர்ந்தது பெரிய ஏக்கமாக இருந்தது.
அவர் என்னுடன் இருந்திருந்தால் என் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என நினைத்து ஆச்சர்யப்படுவேன். என் குழந்தைகளுக்கு நான் பொறுப்பான தந்தையாக இருக்க முயற்சிக்கிறேன்.ஆனால் சில நேரங்களில் முடியவில்லை. தந்தையாக இருப்பது எனக்கு கஷ்டமான வேலையாக உள்ளது. அதிபராக இருப்பதால் நான் பெரும்பாலும் வீட்டை விட்டு பிரிந்தே இருக்கிறேன்.
என் மகள்கள் மலியா மற்றும் ஷாசாவை வளர்க்க வேண்டிய பொறுப்பை பெரும்பாலும் என் மனைவி மிஷேலே கவனிக்கிறார். குழந்தைகளுக்கு எப்போதும் பெற்றோரின் அன்பு தேவை.அவர்கள் வெற்றியடைந்தாலோ அல்லது தவறு செய்தாலோ நாம் ஆதரவாக இருக்க வேண்டும். தந்தைகள் தங்கள் பிள்ளைகளுக்கு பொறுப்பானவர்களாக இருக்க வேண்டும்.
அமெரிக்காவில் பின்லேடனுக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி.
அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடன். கடந்த மே 2ந் திகதி பாகிஸ்தான் அபோதாபாத்தில் அமெரிக்க ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.அமெரிக்க கோர்ட்டுகளில் இவர் மீது பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ந் திகதி நியூயார்க் இரட்டை கோபுரங்களை அல்கொய்தா தீவிரவாதிகள் விமானங்கள் மூலம் மோதி தகர்த்தனர். அதில் ஏராளமானவர்கள் பலியாகினர். 
இதற்கு மூளையாக செயல்பட்டவர் பின்லேடன். எனவே இவர் மீதும் உதவியாளராகவும் தற்போது அல்கொய்தா இயக்கத்தின் தலைவருமான அல்ஜவாகிரி மீதும் அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவை தவிர 1993ம் ஆண்டு சோமாலியாவில் 18 அமெரிக்க ராணுவ வீரர்கள் அல்கொய்தா தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
1998ம் ஆண்டில் கிழக்கு ஆப்பிரிக்காவில் 2 அமெரிக்க தூதரகங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. அதில் 224 பேர் பலியாகியனர். இச்சம்பவங்களிலும் பின்லேடன் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்நிலையில் பின்லேடன் சுட்டு கொல்லப்பட்டதால் அவர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்ய அமெரிக்க நீதித் துறையினர் முடிவு செய்தனர்.அதற்கான மனு நியூயார்க்கில் உள்ள மாவட்ட கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி லெவிஸ் கப்லான் பின்லேடன் மீதான குற்ற வழக்குகளை தள்ளுபடி செய்தார். வழக்கு தொடரப்பட்டவர் உயிருடன் இல்லாததால் அவர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
லிபியாவில் நேட்டோ படைத் தாக்குதல்: 2 பேர் பலி.
லிபியாவில் அதிபர் கடாபியின் 41 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த போராட்டம் உச்ச நிலையை அடைந்துள்ளது. லிபியா பொது மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ள நோட்டோ படைகள் தலைநகர் திரிபோலியில் புதிய வான் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.நகரின் சுக் அல் ஜீமா குடியிருப்பு பகுதியில் 3 அடுக்கு குடியிருப்பு தகர்க்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் லிபியாவில் நேட்டோ படைகளின் பணிகள் துவங்கின. குடியிருப்பு பகுதியில் அயல் நாட்டு துருப்புகள் நடத்திய தாக்குதல் புதிய கேள்வியை எழுப்பி உள்ளது.
பன்னாட்டு துருப்புகளில் காயம் அடைந்த பொது மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இறந்தவர்களின் உடல்களும் அங்கு வைக்கப்பட்டிருந்தன. அவர்களது நிலைமையை பி.பி.சி செய்தியாளரிடம் லிபிய அரச நிர்வாகத்தினர் காட்டினர்.மருத்துவமனையில் ஒரு பெண் உடல், ஒரு ஆண் உடல் மற்றும் குழந்தை உடல் குண்டுகாயம் பட்டு இறந்து கிடந்ததை லிபியா அதிகாரிகள் காட்டினர். நேட்டோ படைகளின் மீது வெறுப்பு ஏற்படக்கூடிய மனநிலை லிபியா மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
அன்னிய நாட்டு ராணுவத்தினர் தங்கள் எதிர்காலத்தை நிர்ணயிப்பதை லிபியா மக்கள் ஏற்க மாட்டார்கள் என லிபியா அரசு செய்தி தொடர்பாளர் முசா இப்ராகிம் கூறினார். தாக்குதல் நடந்த இடத்தில் கடுமையான இடிபாடுகள் ஏற்பட்டுள்ளன. அந்த இடிபாடுகளை அகற்றி மேலும் உடல்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.நேட்டோ தாக்குதலில் தங்களது குடும்பமே பலியாகி விட்டதாக நிகழ்விடத்தில் உள்ளூர் மக்கள் கண்ணீர் விட்டனர். லிபியாவில் இதுவரை 10 ஆயிரம் தாக்குதலை நேட்டோ படைகள் மேற்கொண்டுள்ளன. இதில் 4 ஆயிரம் அரசாங்க இலக்குகளை குறிவைத்த எறியப்பட்டவை ஆகும்.
பேஸ்புக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து நிகழ்ச்சி: வன்முறையில் முடிந்த பரிதாபம்.
பேஸ்புக் மூலமாக ஜேர்மனியின் பெர்டல் நகரில் ஒரு விருந்து நிகழ்ச்சி நடைபெறுவதாக அடையாளம் தெரியாத நபர் செய்தி அனுப்பினார். அவர் வெள்ளிக்கிழமை விருந்து நடைபெறுவதாக செய்தி அனுப்பினார்.அதை நம்பி ஏராளமானவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். விருந்து நிகழ்ச்சிக்கு 1500 பேர் வருவதாக உறுதி அளித்து இருந்தனர். ஆனால் 800 பேர் சம்பவ இடத்திற்கு வந்தார்கள்.
அங்கு எதிர்பார்த்ததை போல விருந்து இல்லாததை கண்டு வந்திருந்தவர்கள் ஆத்திரம் அடைந்தனர். சிலர் பாட்டில்களை வீசினர். சிலர் வெடிகளை வீசினார்கள். இந்த தாக்குதலின் போது ஒரு நபர் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.மிளகு தூவல் காரணமாக பாதிக்கப்பட்ட ஒரு பொலிஸ் அதிகாரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த தாக்குதல் காரணமாக 41 பேர் காவலில் வைக்கப்பட்டார்கள். அமைதியை குலைக்கும் விதமாக தாக்குதல் நடத்தியதாக 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஹம்பர்க்கில் ஒரு இள வயது நபர் பேஸ்புக்கில் உள்ள அனைவருக்கும் எதிர்பாராத விதமாக தனது 16வது பிறந்தநாளுக்கு அழைப்பு செய்தி அனுப்பினார்.  அந்த விருந்துக்கு 1400 பேர் திரண்டனர். அப்போது ஏற்பட்ட மோதலின் போது 11 பேர் கைது செய்யப்பட்டனர்.கூட்டத்தில் இருந்தவர்களை பொலிசார் கட்டுப்படுத்த தடுமாறினர். பேஸ்புக்கில் விருந்து நிகழ்ச்சிக்கு அழைப்பவர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் போது அதற்கான கட்டணத்தை அளிக்க வேண்டும் என பொலிசார் எச்சரித்தனர்.
மிஸ்ட்ரல் போர்க்கப்பலை வாங்க பிரான்சுடன் ரஷ்யா ஒப்பந்தம்.
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மிஸ்ட்ரல் போர்க்கப்பலை வாங்க பிரான்சுடன் ரஷ்யா ஒப்பந்தம் செய்தது.இந்த ஒப்பந்தத்தால் ஆயிரம் பேருக்கு 4 ஆண்டுகளுக்கு வேலை கிடைக்கும் என பிரான்ஸ் அரசு தெரிவித்தது. ரஷ்யா மேற்கொண்ட இந்த ஒப்பந்தம் காரணமாக முன்னாள் சோவியத் நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆகியவை உஷார் அடைந்துள்ளன.
ரஷ்யாவின் ரோசோபோரன் எக்ஸ்போர்ட் மிலிட்டரி கொர்ப்பரேஷன் மற்றும் பிரான்ஸ் போர்க்கப்பல் தயாரிக்கும் டி.சி.என்.எஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. செயின்ட் பீட்ஸ்பர்க் பொருளாதார அமைப்பு கூட்டத்தின் இடையே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.112 கோடி யூரோ மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் போது பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் பியரே லெலோசே மற்றும் ரஷ்ய ஜனாதிபதி திமிட்ரி மெட்வடேவ் உடன் இருந்தனர்.
ரோசோபோரன் எக்ஸ்போர்ட் இயக்குனர் அனடோலி இசாய்கின் கூறுகையில்,"முக்கிய தொழில்நுட்பங்களை ரஷ்யாவுடன் பிரான்ஸ் பகிர்ந்து கொள்ளும்" என்றார். இந்த ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் முன்னாள் சோவியத் நாடுகளுக்கு கவலை அளித்துள்ளன.ஸ்னிட்-9 எனப்படும் அதி நவீன போர்க்கப்பல் முறையை பிரான்சிடம் பெற ரஷ்யா முனைந்துள்ளது. ரஷ்யாவுக்கான முதல் இரண்டு போர் கப்பல்கள் பிரான்சில் தயாரிக்கப்படும் 3வது மற்றும் 4வது போர் கப்பல் ரஷ்யாவில் தயாரிக்க உதவுவோம் என்றும் இசாய்கின் தெரிவித்தார்.
மிஸ்ட்ரல் போர் கப்பலில் 16 ஹெலிகொப்டர் 4 விமான தரை இறக்கம், 13 பீரங்கி இதர 100 வாகனங்கள் மற்றும் 450 துருப்புகளை வைக்க முடியும்.ரஷ்யா பிரதமர் விளாடிமிர் புடின் பிரான்ஸ் பிரதமர் பிரான்கய்ஸ் பிலானை திங்கட்கிழமை நடைபெறும் லேபோர்கட் விமான நிகழ்ச்சியை பார்வையிட்ட பின்னர் சந்திக்கிறார்.
நயாகரா ஆற்றில் தத்தளித்த 2 அமெரிக்க பொலிஸ் அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு.
சீறிப்பாயும் நயாகரா ஆற்றின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இரண்டு அமெரிக்க பொலிஸ் அதிகாரிகள் ஹொலிகாப்டர் மூலம் காப்பாற்றப்பட்டனர்.சனிக்கிழமை நடந்த இந்த மீட்பு நடவடிக்கையில் கனடா பொலிஸ் அதிகாரி தனது உயிரை பற்றி கவலைப்படாமல் அமெரிக்க பொலிஸ் அதிகாரிகளை காப்பாற்றினார்.காப்பாற்றப்பட்ட அதிகாரிகள் நியூயாரக்கை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அந்த அதிகாரிகள் தப்பிக்க எடுத்த முயற்சிகள் பலன் அளிக்காத போது கனடா பொலிஸ் நிர்வாகம் உரிய உதவி அளித்து காப்பாற்றியது.
நயாகரா பார்க் பொலிஸ் பிரிவை சேர்ந்த ஷான் பிளாக் தனது உடலில் கயிற்றை கட்டி நயாகரா தண்ணீர் பகுதியில் இறங்கினார். அவர்கள் தண்ணீரில் தத்தளித்த படகில் இருந்து அமெரிக்க பொலிஸ் அதிகாரிகளை மீட்டார்.நீர்வீழ்ச்சிக்கு 900 மீற்றர் தூரத்தில் இந்த சாகச மீட்பு பணி நடந்தது. பிளாக் தன்னையும் தண்ணீரில் தத்தளிக்கும் அதிகாரிகளுடன் இணைத்துக் கொண்டு ஹெலிகாப்டரில் கோட் தீவுப்பகுதிக்கு வந்தார்.நயாகரா ஹெலிகாப்டர் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் இந்த மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டது. கனடா பொலிஸ் அதிகாரி தண்ணீரில் தத்தளித்த அதிகாரிகளை ஒவ்வொருவராக மீட்டு வந்து கரை சேர்த்தார்.
பொலிஸ் ஹெலிகாப்டர்கள் உடனடியாக கிடைக்காத நிலையில் தனியார் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. அதிகாலை 6 மணி அளவில் உதவி கேட்டு கனடா பொலிசாருக்கு அழைப்பு வந்தது.இதனையடுத்த 2 மணி நேரத்தில் அதாவது 8 மணி அளவில் இரு அமெரிக்க பொலிஸ் அதிகாரிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சீனாவில் குளோரின் வாயு கசிவு: 27 குழந்தைகள் பாதிப்பு.
சீனாவில் குளோரின் வாயு கசிவால் பள்ளிக்குழந்தைகள் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் தென்மேற்கு பகுதியான குயிஸ்கோவ் மாகாணத்தில் உள்ள டைட்டானியம் தொழிற்சாலை உள்ளது.இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய குளோரின் வாயு கசிவு காரணமாக அப்பகுதியில் படித்து வந்த குழந்தைகளுக்கு வயிற்று வலி மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் அருகில் உள்ள மூன்று மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.விசாரணையில் தொழிற்சாலையில் உள்ள கருவிகளின் பழுது காரணமாக வாயு கசிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அந்நிறுவனம் சுற்றுச்சூழல் துறை மூலம் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அணு உலையில் தொடரும் சிக்கல்கள்.
ஜப்பானில் சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளான புகுஷிமா அணு உலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் சிக்கல் நீடிக்கிறது.புகுஷிமா அணு உலையில் வெள்ளிக்கிழமை அணுக்கதிர் வீச்சினால் பாதிப்புக்குள்ளான நீரை சுத்தப்படுத்தும் பணி துவங்கியது. இந்த நீரை சுத்தப்படுத்தும் இயந்திரத்திலுள்ள ஒர் அமைப்பு அணுக்கதிர் வீச்சினால் பாதிப்புக்குள்ளான நீரிலுள்ள சீசியம் அணுப்பொருளை உறிஞ்சும் தன்மையுடையது.
வேலை செய்ய ஆரம்பித்த 5 மணி நேரத்துக்குள்ளாகவே இந்த அமைப்பு தனது அதிகபட்சத் திறனை அடைந்து விட்டதால் முழுமையாக நீரை சுத்தப்படுத்த முடியவில்லை என அணு உலையைப் பராமரிக்கும் டோக்கியோ மின் கார்ப்பரேஷனின் அதிகாரி ஜுனிச்சி மட்ஸ்மோட்டோ தெரிவித்தார். கதிர்வீச்சுக்குள்ளான நீரை சுத்தப்படுத்தும் பணி மீண்டும் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பது தெரியாது என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த மார்ச் 11ம் திகதி சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளான புகுஷிமா அணு உலையை குளிர்விக்க உபயோகப்படுத்தப்பட்ட 1,00,000 டன்னிற்கும் மேற்பட்ட நீர் கதிர்வீச்சு பாதிப்புக்குள்ளானது.இதில் சிறிதளவு நீர் கடலுக்குள் செலுத்தப்பட்டது. மீதமுள்ள நீரை மீண்டும் அணு உலையைக் குளிர்விக்கவோ அல்லது வேறு பயன்பாட்டுக்கு மறுசுழற்சி செய்யவேண்டுமானால் அதிலிருக்கும் கதிர்வீச்சு நீக்கப்பட வேண்டும். இல்லையெனில் அந்நீர் அணு உலையின் குளிர்விப்பு அமைப்பை பாதிக்கும்.
தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை.
ஆப்கானிஸ்தானில் தலிபான் மற்றும் அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு எதிராக 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கப் படையினர் போரிட்டு வருகின்றனர்.
"தலிபான் பயங்கரவாதிகள் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பில் இருந்து பிரிந்து அமைதி வழிக்கு திரும்ப வேண்டும்" என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை தலிபான்கள் நிராகரித்தனர்.
இந்நிலையில் அமெரிக்காவே முன்வந்து தலிபான்களுடன் பேச்சுவார்த்தையை துவக்கியிருப்பதாக ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய் நேற்று காபூலில் நிருபர்களிடம் தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில்,"தலிபான்கள் உடனான அமெரிக்காவின் பேச்சுவார்த்தை துவங்கி சிறப்பான முறையில் சென்று கொண்டிருக்கிறது" என்றார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF