Tuesday, June 14, 2011

இன்றைய செய்திகள்.

ஜெனரல் பதவியும் பதக்கங்களும் பறிக்கப்பட்டதற்கு எதிரான சரத் பொன்சேகாவின் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்பு.

ஜெனரல் தர நிலை மற்றும் நாற்பது வருட கால இராணுவ சேவையில் பெற்ற பதக்கங்கள் என்பன பறிக்கப்பட்டதற்கு எதிராக சரத் பொன்சேகா செய்திருந்த முறைப்பாட்டை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருந்த முதலாவது இராணுவ நீதிமன்றத்தின் மூலம் அவர் இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் முறைகேடான முறையில் டெண்டர் நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணமாகக் குற்றவாளியாககக் காணப்பட்டதுடன், அதன் காரணமாக அவரது இராணுவ ஜெனரல் தர நிலையும், நாற்பது வருட இராணுவ சேவையில் அவர் பெற்றிருந்த பதக்கங்களும் பறிக்கப்பட்டிருந்தன.
ஆயினும் தனது பதவி, பதக்கங்களைப் பறித்த இராணுவ நீதிமன்றத்தின் செயற்பாடுகள் சரியான முறையில் அமைந்திருக்கவில்லை என்றும், அதன் போது தனது சட்டத்தரணிகளிடம் ஆலோசனை பெறுவதற்கும் கூட தான் அனுமதிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டு தனக்கெதிரான தீர்ப்பை வழங்கிய முதலாவது இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்துச் செய்யுமாறு சரத் பொன்சேகா மேன்முறையீடொன்றைச் செய்திருந்தார்.
நாற்பது வருட கால இராணுவ சேவையில் உயிரைத் துச்சமாக மதித்து தான் மேற்கொண்ட செயற்பாடுகளுக்குக் கிடைத்த பதக்கங்கள் மற்றும் தனது பதவிநிலை பறிப்பு என்பன அநீதியானது என்றும் அவர் தனது மேன்முறையீட்டில் குறிப்பிட்டிருந்தார்.அவரது மேன்முறையீட்டு மனுவை இன்று மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதுடன், அது தொடர்பில் பதில் மனு தாக்கல் செய்யுமாறும் இராணுவத்தளபதிக்கு உத்தரவிட்டு எதிர்வரும் 28ம் திகதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கும் தலைமைத்துவ பயிற்சி வழங்கத் திட்டம்.
பல்கலைக்கழக மாணவர்களைப் போன்றே பாடசாலை மாணவர்களுக்கும் தலைமைத்துவ பயிற்சி வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.இவ்வாறான பயிற்சிநெறியொன்றை தமக்கு வழங்குமாறு பாடசாலை மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஜயன்த நவரட்ன தெரிவித்துள்ளார்.உயர்தர மாணவர்களுக்கு இந்த பயிற்சியை வழங்குமாறு சிலரும், சாதாரண தர மாணவர்களுக்கு இந்த பயிற்சியை வழங்குமாறு சிலரும் கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாத பாடசாலை மாணவர்களுக்கு இந்த பயிற்சியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு பாடசாலை மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சியை வழங்குவது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனினும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தலைமைத்துவ பயிற்சி நெறி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நூறு சிறைச்சாலைகளில் அடைத்தாலும் பயணத்தை தடுத்து நிறுத்த முடியாது : சரத் பொன்சேகா.
நூறு சிறைச்சாலைகளில் தம்மை அடைத்தாலும் பயணத்தை தடுத்து நிறுத்த முடியாது என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.நாட்டு மக்களுக்காக இரத்தத்தையும் வியர்வையையும் சிந்திய தாம் தொடர்ந்தும் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.ஊழல் அரசியலை இல்லாதொழித்து நாட்டு மக்கள் மகிழ்ச்சி கோசம் எழுப்பும் வரையில் தமது பயணம் தொடரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்த நீதிமன்ற தீர்ப்பு தொடர்பான வழக்கு விசாரணைகளில் கலந்து கொண்ட போது அவர் இந்தக் கருத்துக்களை ஊடகவியலாளர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.யுத்த நீதிமன்றின் தீர்ப்பினை ஜனாதிபதி அங்கீகரித்துள்ளதனால் அதற்கு எதிராக தீர்ப்பு வழங்கக் கூடிய அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு கிடையாது என பிரதி சொலிசுட்டர் ஜெனரல் பிம்பா திலகரட்ன தெரிவித்துள்ளார்.இவ்வாறு ஏற்கனவே உச்ச நீதிமன்றினால் வழங்கப்பட்ட மூன்று முக்கிய தீர்ப்புக்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்! ஜெயலலிதா, மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தல்.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். பிரதமரை இன்று புதுடில்லியில் சந்தித்தபோது, இந்தக் கோரிக்கையை அவர் விடுத்தார்.. தமது கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் ஒன்றையும் அவர் மன்மோகன் சிங்கிடம் கையளித்தார்.இலங்கையின் இறுதிப்போரில் கடைசி நேரத்தில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.இந்த மோதல் குறித்து ஊடகங்கள் சுதந்திரமாக செய்திகள் சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை.பரவலான குண்டுவீச்சு மூலம் பொதுமக்கள் படுகொலை, மருத்துவமனை மற்றும் நிவாரண முகாம்கள் மீது தாக்குதல், மனிதாபிமான உதவிகள் மறுப்பு, மனித உரிமை மீறல்கள், ஊடகம் மற்றும் அரசுக்கு எதிரான விமர்சகர்கள் மீது தாக்குதல் ஆகியவை குறித்து ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இத்தகைய போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க, இந்தப்;பிரச்னையை இந்திய அரசு ஐக்கிய நாடுகள் சபையிடம் கொண்டுச் செல்ல வேண்டும்.இலங்கையில் தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் நிர்வாகத்தில் அவர்கள் முழுமையாக இடம்பெற வழி ஏற்படுத்த வேண்டும்.இதுகுறித்து, நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும்.
இலங்கையில் தமிழர்கள் நீண்டகாலமாக இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர்.அரசியல் சட்டத்திருத்தம் மூலம் அவர்களுக்கு சமவுரிமை வழங்குவதை இலங்கை அரசு தவிர்த்து வருகிறது.எனவே சிங்களவர்களுக்கு இணையாக தமிழர்களுக்கு அரசியல் ரீதியான சமவுரிமை வழங்க வேண்டும்.முகாம்களில் உள்ள தமிழர்கள் முழுமையாக அவர்களது சொந்த இருப்பிடங்களில் குடியமர்த்தப்படும் வரை, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும்.இதற்கான முயற்சிகளை மற்ற நாடுகளுடன் இணைந்து இந்தியா எடுக்க வேண்டும். என்று ஜெயலலிதா பிரதமர்; மன்மோகன் சிங்கிடம் அளித்துள்ள கோரிக்கை கோப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல் போக்குவரத்தையும் நிறுத்த வேண்டும்
தமிழகத்தின் தூத்துக்குடிக்கும் இலங்கைத் தலைநகர் கொழும்புக்கும் இடையேயான கப்பல் போக்குவரத்து திட்டத்தை இடைநிறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இந்தத் திட்டமானது தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் கடந்த திங்கள் கிழமையன்றுதான் இத் திட்டம் தூத்துக்குடியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. தொடக்க விழாவில் மாநில அரசு அதிகாரிகளும், அதிமுக சட்டசபை உறுப்பினர்கள்  எவரும் கலந்து கொள்ளவில்லை.தூத்துக்குடியிலிருந்து திங்கள் மாலை புறப்பட்ட கப்பல் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கொழும்பை சென்றடைந்துள்ளது.அதேபோல இலங்கையில் மீள்குடியேற்றம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை நேரில் கண்டறிய தமிழக சட்டமன்ற உறுப்பினர் குழுவை அங்கு அனுப்ப வேண்டும் என்றும் முதல்வர் கோரியுள்ளார்.
வேலைவாய்ப்புக்கள் இனி இந்தியா, சீனா வசம் சென்று விடும்: ஒபாமா எச்சரிக்கை.
இந்தியா மற்றும் சீனாவில் இருந்து வரும் மாணவர்கள் வேலைவாய்ப்புகளை கைப்பற்றுவதில் முன்னணி பெற்று வருகிறார்கள்.எனவே இனி அறிவியல், கணிதம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அமெரிக்கர்களை அதிபர் பராக் ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார்.அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் களத்தில் பணிக்கு பொருத்தமானவர்களை கண்டறிவது அமெரிக்க நிறுவனங்களுக்கு சிரமமாக உள்ளது. இது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்ல அடையாளம் அல்ல என ஒபாமா வட கரோலினா, டர்ஹாமில் பேசும் போது தெரிவித்தார்.
இப்போது அமெரிக்காவில் ஒவ்வொரு வேலைவாய்ப்புக்கும் நான்க்கும் மேற்பட்ட தகுதியானவர்கள் உள்ளனர். ஆனால் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அதற்கு மாறாக உள்ளது. இந்த வேலைகளுக்கு ஆசிரியர்கள் தான் வரவேண்டியுள்ளது.திறன் வாய்ந்த ஊழியர்களைக் கொண்டு பணியிடத்தை நிரப்புவது மிகவும் சிரமமாக உள்ளதாக தொழில்துறை பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர். இது ஆரோக்கியமானதல்ல என்று ஒபாமா குறிப்பிட்டார்.
பேஸ்புக்கே வேண்டாம் என்று ஓடி ஒளியும் மக்கள்.
அமெரிக்காவின் பேஸ்புக் இன்கார்ப்பரேஷன் நிறுவனம் கடந்த 2004ம் ஆண்டு  பேஸ்புக் சமூக இணையதள சேவையை தொடங்கியது.மின்னஞ்சல் கணக்கு போல யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். நட்பு வட்டாரத்தை உருவாக்கிக் கொள்ளலாம். தகவல், முக்கிய விவரங்கள், நாட்டு நடப்புகள், கருத்துகளை பரிமாறிக் கொள்ளலாம்.
பள்ளி, கல்லூரி, தேசபக்தி, கம்யூனிசம் இப்படி குழுக்களாக இணைந்தும் கருத்து பரிமாற்றம் செய்யலாம். ஆரம்பத்தில் குறைந்த அளவிலான மக்களே இதை பயன்படுத்தினர். நாள் ஆக ஆக சூடுபிடித்தது. 2008ல் 10 கோடி பேர் பயன்படுத்தினார்கள்.கடந்த ஜனவரி கணக்குப்படி உலகம் முழுவதும் மொத்தம் 60 கோடி பேர் பயன்படுத்துவதாக கூறப்பட்டது. இங்கிலாந்தில் பாதி பேர்(3 கோடி) பயன்படுத்துகிறார்கள் என்றும் பெருமையாக பேசினார்கள்.
பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க்(27) ரூ.60.68 ஆயிரம் கோடிக்கு அதிபரானார். உலகின் 52வது பணக்காரர் என்ற பெருமையை பெற்றார். பேஸ்புக்கின் மவுசு சமீபகாலமாக குறைந்து வருவதாக தற்போது தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில் ஒரு லட்சம் பேர் கடந்த மாதத்தில் பேஸ்புக்கில் இருந்து கணக்கை துண்டித்து விட்டார்கள்.அமெரிக்காவில் 68 லட்சம், கனடாவில் 15 லட்சம், ரஷ்யா, நோர்வேயில் ஒரு லட்சம் என்று உலகம் முழுக்க பேஸ்புக் இணைப்பில் இருந்து விலகியிருக்கிறார்கள்.இதுகுறித்து நிபுணர் கிரகாம் ஜோன்ஸ் கூறுகையில்,"முன்பு உலகம் போரடித்தது. அதனால் எல்லாரும் கணணி, இணையதளம், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமுதாய இணைப்பு இணையதளங்களில் கதியாக கிடந்தார்கள். இப்போது இது போரடிக்கிறது. வெளியேறுகிறார்கள்" என்றார்.
அமெரிக்க செனட் சபையின் தகவல்கள் திருட்டு.
அமெரிக்க செனட் சபையின் கணணி வலையமைப்பில் திருடர்கள் புகுந்து தகவல்களை திருடியுள்ளனர். திங்கட்கிழமை இந்த தகவல்கள் திருடப்பட்டதை அமெரிக்க நிர்வாகமும் ஒப்புக் கொண்டு உள்ளது.கணணி தகவல் திருடர்கள் எடுத்த தகவல்கள் முக்கியமானவையாக இல்லை. இருப்பினும் செனட் கணணி வலையமைப்பின் பாதுகாப்பு ஆய்வு செய்யப்பட வேண்டி உள்ளது என அமெரிக்கா எச்சரித்து உள்ளது.லுல்ஸ் செக்யூரிட்டி என தங்களை அழைத்துக் கொள்ளும் கணணி தகவல் திருடர்கள் அமெரிக்க கணணி சர்வரில் நுழைந்து உள்ளனர்.
இது குறித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையின் முன்னாள் சைபர் பிரிவு அதிகாரி ஸ்டீவர்ட் பேக்கர் கூறுகையில்,"அமெரிக்க செனட்டின் கணணியில் அவர்கள் ஊடுருவி இருப்பது உறுதியாகும். அவர்கள் சர்வரை கண்டறிந்து உள்ளனர்" என்றார்.செனட் கணணி தகவல்களை திருடிய கும்பல் சோனி கார்ப்பரேட் நிறுவனத்தன் தகவல்களையும் திருடி உள்ளது. பாக்ஸ்காம் இணையத்தளத்திலும் ஊடுருவியதாக அந்த கும்பல் தெரிவித்தது.
பணத்திற்காக பாட்டியின் உடலை மறைத்த தாய், மகளுக்கு சிறைத்தண்டனை.
இங்கிலாந்தின் வலாசி நகரில் ஒரு வீட்டில் ஹசல்(58)என்ற பெண் வசித்து வந்தார். அவரது மகள் ஜாஸ்மின்(35). ஹசலின் அம்மா ஆலிவ் மடாக்(91) என்பவரும் அவர்களுடனே இருந்தார்.சமீபகாலமாக வீட்டில் ஆள் நடமாட்டமே இல்லை. ஹசல், ஜாஸ்மின் எப்போதாவதுதான் வருகிறார்கள். ஒரு வாரமாக அங்கிருந்து பிணநாற்றம் அடிக்கிறது என்று அக்கம்பக்கத்தினர் பொலிசில் புகார் கொடுத்தனர்.பொலிசார் உள்ளே நுழைந்து விசாரணை நடத்தினர். பெட்ரூம் கதவின் பின்னால் ஒரு சடலம். ஏழெட்டு மாதம் முன்பு இறந்திருப்பார் என்று தெரிகிறது அழுகியிருந்தது. தாயையும் மகளையும் பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் கூறுகையில்,"ஆலிவ் திடீரென இறந்துவிட்டார். அவருக்கு பென்ஷன் வந்து கொண்டிருந்தது. இறந்துவிட்டதாக தெரிந்தால் பென்ஷனை நிறுத்திவிடுவார்கள் என்பதால் இறந்ததை மறைத்தோம். கதவின் பின்னால் உடலை போட்டோம்" என்று செய்த தவறை ஒப்புக் கொண்டனர்.லிவர்பூல் கிரவுன் கோர்ட்டில் நேற்று நடந்த விசாரணையின் போது அவர்கள் இருவரும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர். சிறை தண்டனை கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு ஜூலை 1ம் திகதி அறிவிக்கப்பட உள்ளது.
லிபியா போராட்டக்காரர்களின் தலைமைக்கு ஜேர்மனி அங்கீகாரம்.
லிபியாவில் கர்னல் கடாபிக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தை மேற்கொள்ளும் தலைமையிடமாக பெங்காசி உள்ளது.இந்த நகருக்கு ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் குய்டோ வெஸ்டர்வலே திடீர் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் தமது நாடு போராட்டக்காரர்களின் தலைமையை அங்கீகரிக்கிறது என தெரிவித்தார்.வெஸ்டர்வலே திங்கட்கிழமை இந்தப் பயணத்தை மேற்கொண்டார். லிபியாவில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்படவும், போராட்டக்காரர்களின் தலைமையை அதிகாரப் பூர்மாக அங்கீகாரம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.
என்.டி.சி எனப்படும் தேசிய மாற்றக் கவுன்சில் லிபியா மக்களின் ஒட்டுமொத்த உரிமையுள்ள பிரதிநிதியாக உள்ளது என்றும் ஜேர்மனி அமைச்சர் தெரிவித்தார்.லிபியாவை விடுவிக்க விரும்புவதாகவும் மோமர் கடாபி அல்லாத ஆட்சி லிபியாவில் ஏற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். ஜேர்மனி அமைச்சர் வெஸ்டர்வெலேடவுடன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் டிரிக் நபேல் உடன் வந்தார்.
வெஸ்டர்வெலே இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பகுதிகளுக்கு பயணம் செல்லும் வழியில் திடீரென லிபியாவுக்கு வருகை தந்தார். லிபியா தேசிய மாற்ற கவுன்சில் அமைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் 13வது நாடாக ஜேர்மனி உள்ளது.அவுஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்ஸ், காம்பியா, இத்தாலி, ஜோர்டன், மால்டா, கத்தார், செனகல், ஸ்பெயின், ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஏற்கனவே லிபியா போராட்டக்குழு தலைமைக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
லிபியா போராட்டத்தை நாங்கள் தற்போது ஆதரிக்கிறோம். அங்கு ஆட்சி மாற்ற கவுன்சிலையும் ஆதரிக்கிறோம் என வெஸ்டர்வெலே உறுதி அளித்ததை லிபியா போராட்டக்குழுவின் துணைத்தலைவர் அப்துல் ஹபிஸ் கோகா தெரிவித்தார்.கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதி லிபியா நடவடிக்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையில் வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பில் ஜேர்மனி பங்கேற்காமல் தவிர்த்தது. அதே போன்று நேட்டோ படைகள் லிபியா ராணுவம் மீதான வான் வழி தாக்குதல் நடடிக்கையிலும் பங்கேற்காமல் தவிர்த்தது. ஆனால் தற்போது நிலைப்பாட்டில் ஜேர்மனி மாற்றம் கொண்டுள்ளது.
குடியுரிமை வழங்கும் நாடுகளில் இங்கிலாந்து முதலிடம்.
கடந்த ஆண்டில் இங்கிலாந்து அரசு ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ஒரு முறை 2 வெளிநாட்டவருக்கு குடியுரிமை வழங்கி இருப்பதாக புள்ளி விபரம் கூறுகிறது.இதன் மூலம் ஐரோப்பிய யூனியனில் வெளிநாட்டவருக்கு தாராளமாக குடியுரிமை வழங்கிய நாடாக உருவெடுத்துள்ளது.ஐரோப்பிய யூனியனின் புள்ளி விவர அமைப்பான யூரோஸ்டட் 2009ம் ஆண்டில் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டுள்ள குடியுரிமை பற்றி ஓர் ஆய்வை மேற்கொண்டது.
அதன் விவரம் பின்வருமாறு: கடந்த 2008ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டில் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் குடியேறிய வெளி நாட்டினர் எண்ணிக்கை 11 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிக குடியுரிமை வழங்கிய ஐரோப்பிய நாடுகளில் இங்கிலாந்து முதலிடம் பிடித்துள்ளது.
இங்கிலாந்து அரசு மட்டும் 2,03,600 வெளிநாட்டினருக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்கியுள்ளது. இது 2008ம் ஆண்டில் வழங்கப்பட்ட 1,29,300ஐ விட 57 சதவீதம் அதிகம்.குடியுரிமை வழங்கியதில் இரண்டாம் இடத்தில் பிரான்ஸ் உள்ளது. மூன்றாம் இடத்தில் உள்ள ஜேர்மனியை விட இங்கிலாந்து இரண்டு மடங்கு அதிகமாக குடியுரிமை வழங்கியுள்ளது.
இதன் படி பார்த்தால் 2060ம் ஆண்டில் 7.9 கோடியுடன் மக்கள் தொகையுடன் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இங்கிலாந்து முதலிடத்தைப் பிடிக்கும். இந்நிலையில் வெளிநாட்டினருக்கு தாராளமாக குடியுரிமை வழங்குவதை கட்டுப்படுத்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் சோசலிஸ்ட் வேட்பாளருக்கு சிராக் ஆதரவு: சர்கோசி அதிர்ச்சி.
முன்னாள் கன்சர்வெடிவ் கட்சி ஜனாதிபதியான ஜாக்குஸ் சிராக் 2012ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சோசலிஸ்ட் வேட்பாளர் பிரர்ன் காய்ஸ் ஹொலாண்டேவுக்கு வாக்களிப்பேன் என்றார்.சிராக்கின் இந்த விமர்சனம் பிரான்ஸ் அரசியலில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. பிரான்சின் தற்போதைய ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி போட்டியிட திட்டமிட்டு உள்ளார்.
இந்த நிலையில் ஜாக்குஸ் சிராக்கின் இந்த விமர்சனம் கன்சர்வேடிவ் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக நிகோலஸ் சர்கோசிக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.சனிக்கிழமை பிரான்சின் சென்ட்ரல் கோரேஸ் பிராந்திய அருங்காட்சியக நிகழ்ச்சியில் சிராக்கும், ஹொலாண்டேவும் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ஹொலாண்டேவுக்கு வாக்களிப்பது குறித்து சிராக் வேடிக்கையாக குறிப்பிட்டார்.
ஹொலாண்டே அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஊடகங்களில் அவை வேறுவிதமாக வந்துவிட்டன என்ற சிராக் வருந்துகிறார். இதுகுறித்து சிராக் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,"தாம் வேடிக்கையாக குறிப்பிட்டதாகவும், தமது கருத்தை ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளன" என்றும் தெரிவித்தார்.
சிராக் தனது கருத்தில் இருந்து பின்வாங்கினாலும் பிரான்ஸ் ஊடகங்கள் அவர் கூறியதின் பின்னணியை ஆய்வு செய்து கொண்டு இருக்கின்றன. சிராக்கின் வேடிக்கையான கருத்தால் சர்கோசி சிரிக்கவில்லை.ஏனெனில் சர்கோசியை சிராக் வெளிப்படையாக விமர்சித்துள்ளார். தனக்கு பின்னர் ஜனாதிபதி பதவியில் சர்கோசி வருவதற்கு தகுதி இல்லாதவர், அவர் மீது நம்பிக்கை இல்லை என அவரது செயல்பாட்டை சிராக் குற்றம் சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரிசோனாவை தாக்கிய காட்டுத் தீ மற்ற நகரங்களுக்கும் பரவும் அபாயம்.
அமெரிக்க மாநிலமான அரிசோனவை தாக்கிய காட்டுத் தீ அருகாமையில் உள்ள மெக்சிக்கோவின் லுனா நகரையும் நெருங்கியுள்ளது.மெக்சிக்கோவின் மேற்கு நகரமான லுனாவில் தீயணைப்பு படையினர் தயார் நிலையில் உள்ளன. 1828 சதுர கி.மீ(708 சதுர மைல்) சதுப்பு நில காட்டு தீ அரிசோனாவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
பலமாக வீசும் காற்றால் தீயணைப்பு துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முடக்கும் விதமாக உள்ளன. அரிசோனா மாநிலத்தின் எகார் ஸ்கபிரிங்காவில் நகர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு இருந்தனர். தற்போது அவர்கள் தங்களது குடியிருப்புக்களுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.சகதி நில தீ கடந்த இரண்டு வாரங்களாக அரிசோனாவில் நீடித்தது. அரிசோனா வரலாற்றின் மிகப்பெரும் காட்டுத் தீ விபத்து இதுவாகும். இந்த காட்டுத் தீயில் 31 வீடுகள் சேதம் அடைந்தன. 4 வர்த்தக கட்டிடங்களும் எரிந்தன.
2500 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். நீண்ட தொலைவில் இருந்தும் குறிப்பாக நியூயார்க்கில் இருந்து தீயணைப்பு துறை வீரர்கள் வந்தனர். அரிசோனாவில் 2002ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தின் போது 732 சதுர மைல் அளவில் காட்டுத் தீ ஏற்பட்டது.அரிசோனா காட்டுத் தீ அருகாமையில் உள்ள மெக்சிக்கோ எல்லையில் ஞாற்றுக்கிழமை பரவியது. 4.7 சதுர கி.மீ அளவு தீ சேதம் ஏற்பட்டது. இதனால் 100 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அரிசோனா டெய்லி ஸ்டார் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
ஆர்வமுடன் செஸ் விளையாடும் கடாபி.
லிபியாவில் கடாபி தரப்பு மற்றும் எதிர் தரப்புக்கு இடையிலான மோதல் கடந்த நான்கு மாதங்களாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.ஜாவியா, பிரிகா, ஜின்டான் ஆகிய நகரங்களில் இரு தரப்புக்கிடையிலான மோதல்கள் வலு பெற்றுள்ளன. கடாபி ராணுவத்தின் இரு வெடிபொருள் கிடங்குகள் மீது நேட்டோ விமானப் படைகள் நேற்று குண்டு வீசி தாக்கி அழித்தன.
இந்நிலையில் நேற்று லிபிய அரசு தொலைக்காட்சி கடாபி தொடர்பான சில காட்சிகளை ஒளிபரப்பியது. அதில் உலக சதுரங்க கூட்டமைப்பின் தலைவரும் ரஷ்யருமான கிர்சன் இலியும்ஷ்னோவ், கடாபியுடன் சதுரங்கம் விளையாடுவது இடம் பெற்றிருந்தது.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிர்சன்,"கடாபி லிபியாவை விட்டு வெளியே போகப் போவதில்லை என்று உறுதியாகத் தெரிவித்தார். எந்தப் பதவியையும் வகிக்காத தன்னை பதவி விலகச் சொல்வது விசித்திரமாக உள்ளதாகவும் கடாபி கூறினார்" என்றார்.


ஏர் கனடா வேலை நிறுத்தக் காலக்கெடு முடிகிறது: பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை.
ஏர் கனடா ஊழியர்கள் தங்களுக்கு முறையான ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கோரி வேலை நிறுத்த போராட்டத்திற்கு காலக்கெடு விதித்தனர்.ஊழியர் விதித்த காலக்கெடு முடிவடையும் நிலையிலும் இருதரப்பு பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. ஏர் கனடா நிர்வாகமும் வாடிக்கையாளர் சேவை மற்றும் விற்பனைப் பிரிவு ஊழியர்கள் இடையே நேற்று பேச்சு வார்த்தை நடந்தது.
இந்த பேச்சு வார்த்தையில் உரிய தீர்வு ஏற்படவில்லை. இதனால் திட்டமிட்டபடி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என அஞ்சப்படுகிறது. இருதரப்பினர் இடையே சுமூக ஒப்பந்தம் ஏற்படாத சூழலில் 12.01 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை விற்பனை மற்றும் சேவை ஏஜன்டுகள் துவக்குவார்கள்.கனடா ஓட்டோ வொர்க்கர்ஸ் யூனியன் தலைவர் கென் லெவன்சா கூறுகையில்,"தங்கள் அமைப்பில் 3800 ஊழியர்கள் உள்ளனர். ஏர்லைன் நிர்வாகத்துடன் ஒப்பந்த விடயங்களில் தங்கள் சங்கம் உடன்பட்டு வந்துள்ளது" என்றார்.
ஓய்வூதியம் மற்றும் சம்பள விடயங்களில் உடன்பாடு ஏற்படவில்லை. வாடிக்கையாளர் சேவை மற்றும் விற்பனைப் பிரிவு ஊழியர்கள் போராட்டம் மேற்கொண்டாலும் அனைத்து விமானங்களும் திட்டமிட்டபடி இயக்கப்படும் என ஏர் கனடா நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.ஞாயிற்றுக்கிழமை கருத்துருக்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் பட்சத்தில் வேலை நிறுத்தம் தவிர்க்கப்படும் என லெவன்சா தெரிவித்தார். தங்களது ஊழியர்கள் 10 ஆண்டுகள் தியாகம் செய்துள்ளனர்.
எனவே உரிய ஓய்வூதியம் அளிக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறினார். ஓய்வூதியம் குறித்து விளக்கமாக பேச ஏர் கனடா செய்தித் தொடர்பாளர் இசபல்லெ விரும்பவில்லை. ஏர் கனடா ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் கனடா பொருளாதார மீட்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என கனடா தொழிலாளர் துறை அமைச்சர் லிசா ராய்ட் தெரிவித்தார்.விமானப்பயணிகள் முன்கூட்டியே விமான நிலையத்திற்கு வர வேண்டும் என்றும் ஏர் கனடா நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஏமனில் மீண்டும் சலேவின் ஆட்சி: அச்சத்தில் மக்கள்.
ஏமனில் அதிகார மாற்றம் அமைதியான வழியில் நடப்பதற்காக எதிர்க்கட்சியினர் நேற்று துணை அதிபரை சந்தித்துப் பேசினர். எனினும் இதில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.இந்நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் அதிபர் சலே விரைவில் நாட்டு மக்களிடையே உரையாற்றுவார் என்று ஏமன் ராணுவம் அறிவித்துள்ளது.
ஏமனில் அதிபர் மாளிகையில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் படுகாயம் அடைந்த அதிபர் அலி அப்துல்லா சலே உள்ளிட்ட ஆறு பேர் தற்போது சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அமைச்சர்கள் சிலரும், ராணுவமும், துணை அதிபரும், சலே மீண்டும் திரும்பி வந்து சட்டப்படி அதிகாரத்தை மாற்றித் தருவார் என்று கூறி வருகின்றனர். ஆனால் இதை மக்கள் எதிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அதிகார மாற்றம் குறித்து துணை அதிபர் அப்துர் மன்சூர் ஹாடியை எதிர்க்கட்சியினர் சந்தித்துப் பேசினர். அப்போது ஏமனில் உள்ள அதிபரின் மகன்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்பு குறித்து அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.இதற்கிடையில் டாயிஸ் நகரில் அதிபர் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் நேற்று மோதல் வெடித்தது. இதில் பலர் கொல்லப்பட்டனர்.
ஒசாமா குறித்து விசாரணை நடத்த பாகிஸ்தானில் எதிர்ப்பு.
அபோதாபாத்தில் ஒசாமா பதுங்கியிருந்தது குறித்து விசாரணை நடத்த கடந்த மே 31ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையில் ஒரு குழுவை நியமித்தார் பிரதமர் யூசுப் ரசா கிலானி.இதற்கு நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து கிலானியின் பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள ஜாமியத் கட்சியின் தலைவர் பசுல் உர் ரகுமான் குழு நியமனத்தை விமர்சித்துள்ளார்.
அவர் கூறியதாவது: குழு நியமனம் புத்திசாலித் தனமான நடவடிக்கை அல்ல. இது பிரச்னையை மேலும் அதிகரிக்கும். ராணுவம் தவறு செய்துள்ளது என்று குழு கண்டுபிடிக்குமானால் அது நாட்டைத் தான் பாதிக்கும். ஒசாமா கொலையில் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ.க்கான பொறுப்புகளை அக்குழுவால் கண்டறிய இயலாது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF