Saturday, June 4, 2011

இன்றைய செய்திகள்.


கொழும்பில் தனியார் பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் போக்குவரத்து முடக்கம்!

தனியார் பஸ் ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் கொழும்பின் சில பகுதிகளுக்கான போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. 

தற்போது பஸ் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ள போக்குவரத்து வழித்தடங்களாக, (மட்டக்குளி - இரத்மலானை 155 ), (நுகேகொடை- கெட்டியாவத்தை 176), (மவுன்ட்லவனியா - கிரிபத்கொடை 154), (தெகிவளை - பத்தரமுல்லை 163)....

அரசியல் பிரசாரங்களுக்கு ' பேஸ் புக் '!

கட்டுநாயக்க சம்பவத்தை முன்னிறுத்தி மஹிந்த அரசுக்கு எதிராக ' பேஸ் புக் ' சமூக இணைப்பு இணையத் தளம் மூலம் பிரசாரங்களை முன்னெடுக்க எதிர்க் கட்சிகள் திட்டுமிட்டு உள்ளன என்று இலங்கையின் வீடமைப்பு அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணிக் கட்சித் தலைவருமான விமல் வீரவன்ஸ குற்றம் சாட்டி உள்ளார்.

இவர் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான மொறட்டுவயில் வீடமைப்புத் திட்டம் ஒன்றை ஆரம்பித்து வைத்தார். இவ்வைபவத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இவர் மேலும் பேசுகையில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களை குறிப்பாக அப்பாவி இளைஞர்களை பகடைக் காய்களாக ஆக்கி அரசியல் இலாபம் தேட எதிர்க் கட்சிகள் முயல்கின்றன.நாட்டில் இடம்பெற்று வருகின்ற பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்டு எதிர்க் கட்சிகளால் பொறுக்க முடியாமல் இருக்கின்றது.அரசுக்கு எதிரான சக்தி ஒன்றை நிர்ப்பந்தப்படுத்தி எதிர்க் கட்சிகள் உருவாக்கப் பார்க்கின்றன. மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்றார்.
இராணுவத்தினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை நடாத்தத் தயார்: இராணுவத்தளபதி.

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினர் போர்க்குற்றங்களை இழைத்துள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடாத்தத் தயார் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பான இலங்கை அனுபவம் குறித்த சர்வதேச இராணுவக் கருத்தரங்கின் இறுதியில் ஊடகவியலாளர்கள் மத்தியில்  கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் போது குறிப்பிடத்தக்க யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்து விசாரணை நடத்தப்படும். இராணுவம் பொது மக்கள் எவரையும் கொல்லவில்லை. ஆனால் யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் உரிமை மீறல்கள் ஏதாவது இடம் பெற்றிருந்தால் அது பற்றி விசாரிக்கத் தயார்.
குறிப்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு சில குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறையானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை முன்னெடுக்க இராணுவம் என்றைக்கும் தயாராகவே உள்ளது.எதையும் நாம் மூடி மறைக்க விரும்பவில்லை என்றும் அவர் அதன்  போது மேலும் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவின் விடுதலை குறித்து இந்திய தலைவர்களுடன் ரணில் பேச்சு நடத்தினார் – லக்ஸ்மன்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது குறித்து இந்திய தலைவர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தியதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கு தேவையான சகல முயற்சிகளையும் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.நிபுணர் குழு அறிக்கையை அரசாங்கம் நிராகரித்த போதிலும் அதில் குறிப்பிட்ட விடயங்களை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கம் நாள்தோறும் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நிபுணர் குழு அறிக்கையில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதனை நிரூபிக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் கடந்துள்ள போதிலும், அதனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அரசாங்கம் அரசியல் அமைப்பை மீறும் வகையில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.நீண்டகாலமாக நீடித்து வரும் அவசரகாலச்சட்டத்தை நீக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தி வந்த போதிலும் குறிப்பிட்டுள்ளார்.
அலரிமாளிகையை முற்றுகையிட்டுள்ள பௌத்த பிக்குகள்.
அலரிமாளிகையைச் சுற்றியுள்ள பிரதேசத்தை தற்போதைக்கு ஆயிரக்கணக்கில் திரண்டுள்ள பௌத்த பிக்குகள் முற்றுகையிட்டுள்ளதாக தெரிய வருகின்றது.இன்று மதியம் தாண்டிய பின்பு கொழும்பு நகர மண்டபம் அருகில் தொடங்கிய பாதயாத்திரை ஒன்றின் மூலமாக அலரிமாளிகையை வந்தடைந்த பௌத்த பிக்குகளே தற்போது அலரிமாளிகை பிரதேசத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த பிக்குமாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதனை அடுத்து உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க பௌத்த பிக்குகளை அகௌரவப்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டதற்கும், பல்கலைக்கழகத்தில் பௌத்த பிக்கு மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் பிரஸ்தாப பாதயாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தங்களது கோரிக்கைகள் மற்றும் கண்டனங்கள் அடங்கிய மகஜரொன்றை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நோக்கில் பௌத்த பிக்குகள் அலரிமாளிகையைச் சுற்றியுள்ள பகுதியில் ஒன்றுதிரண்டு நின்று கொண்டிருப்பதாக எமது கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அலரிமாளிகை வரையான பௌத்த பிக்குகளின் பாதயாத்திரை வழக்கத்துக்கு மாற்றமாக பொலிசார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரின் எதுவிதமான தடைகளையும் எதிர்கொண்டிருக்கவில்லை. ஏற்கெனவே கட்டுநாயக்கவில் தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் மேலும் அசௌகரியங்கள் ஏற்படாதவண்ணம் அவதானமாக செயற்படுகின்றமையை அவதானிக்க முடிகின்றது.அதன் காரணமாக பிரஸ்தாப பௌத்த பிக்குகளின் பேரணிக்கு எதுவித இடையூறும் ஏற்படுத்த வேண்டாம் என்று பாதுகாப்புச் செயலாளர் தனிப்பட்ட முறையில் முப்படையினர் மற்றும் பொலிசாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
பாதி இதயத்துடன் பிறந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்.
இரண்டு வயது சிறுவன் சார்லஸ் கிரிபத்துக்கு பிறக்கும் போதே இதயத்தின் இடது பகுதி செயல்படாமல் இருந்தது. இந்த அபாய குறைபாடு உள்ள சிறுவன் உயிர்வாழ்வது கடினம் என  மருத்துவர்கள் கூறினர்.இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அந்த சிறுவனின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. சார்லிக்கு இதயத்தின் இடது பகுதி செய்ய வேண்டிய வேலையை இதயத்தின் வலது பகுதி செய்ய வேண்டிய நிலை இருந்தது.
உடல் முழுவதும் இரத்தத்தை அனுப்ப வேண்டிய சூழல் இருந்தது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் சிறுவனுக்கு உயிரிழப்பு ஏற்படும் என்பதால் மருத்துவர்கள் 10 மணி நேரம் ஓபரேஷன் செய்து சிறுவன் உயிரைக் காப்பாற்றினர். கிரிபத்தின் இதயக் குறைபாட்டை சரிசெய்ய 4 இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த சிகிச்சைக்கு பின்னர் சார்லி கிரிபத் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளான். அவனது இதயம் இயல்பாக செயல்படத் துவங்கி உள்ளது. சிறுவனின் 24 வயது தாயார் சாரியோடே கூறுகையில்,"சார்லி பிறக்கும் போதே இதயத்தின் இடது பகுதி செயல்படவில்லை" என்றார்.
இதயம் உடைந்து போன நிலையில் உள்ளது. அவன் உயிர் பிழைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என மருத்துவர்கள் கூறினர்.இருப்பினும் 4 ஓபரேஷன்கள் மூலம் இயல்பு நிலை அடைந்துள்ளான். அவனது இரண்டாவது பிறந்த நாளை எதிர்கொண்டுள்ளான். இதயக் குறைபாட்டால் ரத்த ஓட்டப் பிரச்சனை இருந்ததால் சிறுவனுக்கு உடல் நீல நிறத்தில் இருந்தது. தற்போது நிறம் மாறிவிட்டது.
போர்க்குற்ற நீதிமன்றத்தில் மிலாடிக் இன்று ஆஜர்.
முன்னாள் போஸ்னியா ராணுவத் தலைவரான ராட்கோ மிலாடிக் ஹாக் போர்க்குற்ற நீதிமன்றத்தின் முன்பாக ஆஜர்படுத்தப்படுகிறார்.1992 – 1995 ம் ஆண்டு போஸ்னியா போரின் போது கொடூரமாக நடந்து கொண்ட மிலாடிக் மீது 16 ஆண்டுகள் விசாரணை நடந்தது. இந்த விசாரணை முடிவில் கடந்த வாரம் அவர் கைது செய்யப்பட்டார்.
ராட்கோ மிலாடிக்கின் உடல் நலம் மிக மோசமாக உள்ளது. அவரால் விசாரணையின் போது நிற்க கூட முடியாது என மிலாடிக்கின் குடும்பத்தினரும், அவரது வழக்கறிஞரும் கூறினர். ஆனால் செர்பியா மருத்துவர்கள் அவர் விசாரணையில் பங்கேற்க கூடிய உடல் தகுதி உள்ளது என தெரிவித்தனர்.
1995ம் ஆண்டு ஸ்ரெப்னிகா பகுதியில் 8 ஆயிரம் முஸ்லீம் ஆண்கள் மற்றும் சிறுவர்களை இனப் படுகொலை செய்தார் என மிலாடிக் மீது குற்றச்சாட்டு உள்ளது.இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஐரோப்பாவில் நடந்த மிகப்பெரும் கொடூர நிகழ்வாக இந்த இனப்படுகொலை உள்ளது. 1992ம் ஆண்டு மே மாதம் முதல் தலைநகர் சர்ஜெவாவில் 44 மாதம் முற்றுகை செய்த குற்றச்சாட்டும் மிலாடிக் மீது உள்ளது. இந்த முற்றுகையின் போது 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள்.
செர்பியாவின் விருப்பத்தின் பேரில் மிலாடிக் போஸ்னியா பகுதியை ஆக்கிரமித்து இருந்தார். ஹாக் போர்க்குற்ற நீதிமன்றத்தின் முன்பாக 30 நாட்களுக்குள் மிலாடிக் தரப்பில் பதில் அளிக்க வேண்டும். மிலாடிக் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்தார் என்றும் இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டது என்றும் செர்பியாவில் அவரது வழக்கறிஞர் கூறினார்.
லிபிய தலைநகரில் அமெரிக்கப் படைகள் தொடர் குண்டு மழை: 40 பேர் பலி.
லிபியா அதிபர் கடாபி பதவி விலக வேண்டும் என்று வற்புறுத்தி அந்த நாட்டு பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களை கடாபி ராணுவம் ஒடுக்கி வருகிறது. இதனால் அமெரிக்க கூட்டு படைகள் லிபியா மீது போர் தொடுத்துள்ளன.தினமும் விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று இரவு அமெரிக்க கூட்டுப்படை விமானங்கள் திரிபோலி நகரில் அடுத்தடுத்து குண்டு வீசி தாக்கின. ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
12 இடங்களில் ஏவுகணைகள் விழுந்து வெடித்தன. இந்த தாக்குதலில் 40 பொதுமக்கள் பலியாகி இருப்பதாக லிபியா அரசு அறிவித்துள்ளது. அதிபர் கடாபியின் மாளிகை அருகேயும் ஏவுகணை விழுந்தது. இதில் கடாபிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டதா என்ற விவரமும் தெரியவில்லை.இதற்கிடையே பென்காசி நகரில் எதிர்ப்பு படையினருக்கும், லிபியா ராணுவத்துக்கும் கடும் சண்டை நடந்தது. இதில் எதிர்ப்பு படையினர் தரப்பில் ஏராளமானோர் பலியாகி உள்ளனர்.
சோனி நிறுவனத்தின் மீது மீண்டும் தாக்குதல்: பாவனையாளர்களின் கணக்குகள் திருட்டு.
சோனி நிறுவனத்தின் இணையக் கட்டமைப்பின் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.ஆரம்பத்தில் அதன் பிளே ஸ்டேஷன் வலையமைப்பு மற்றும் கிரியோ சீடி இசை வலையமைப்பு ஆகியன தாக்குதலுக்கு உள்ளாகியதுடன் சுமார் 77 மில்லியனுக்கும் மேற்பட்ட பாவனையாளர்களின் தரவுகளும் திருடப்பட்டன.
இதில் அவர்களின் பெயர், விபரங்கள் மற்றும் கடனட்டை விபரங்களும் களவாடப்பட்டன. இதனைத்தொடர்ந்து சோனி குறித்த இணைய வலையமைப்புகளை இடை நிறுத்தியிருந்ததுடன் அண்மையில் அதனை மீண்டும் வழமையான செயற்பாட்டு நிலைக்கு கொண்டுவந்தது.
இந்நிலையில் சோனியின் "சோனி பிக்ஸர்ஸிடன்" இணைந்த பல இணையத்தளங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இம்முறை சுமார் 1 மில்லியன் பாவனையாளர்களின் மின்னஞ்சல் முகவரி, கடவுச்சொல் உட்பட பல தகவல்கள் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இத்தாக்குதலுக்கும் லல்செக்(Lulzec) என்ற குழு உரிமை கோரியுள்ளது. இக்குழுவே ஆரம்பத்தில் அமெரிக்க செய்தி சேவைகளான பி.பி.எஸ் மற்றும் பொக்ஸ் ஆகியவற்றின் இணையங்களையும் தாக்கியதாக உரிமைகோரியிருந்தது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள லல்செக்(Lulzec) மிகவும் இலகுவான எஸ்.கியூ.எல் (SQL injection vulnerability) குறைப்பாட்டின் ஊடாகவே தரவுகளை திருடியதாக தெரிவித்துள்ளது. மேலும் சோனியானது பாவனையாளர்களின் தகவல்களை மிகவும் இலகுவாக திருடக்கூடிய வகையில் வைத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.இது தொடர்பில் விசாரணை நடத்தப்படுமென சோனி தற்போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
அதிபர் மாளிகை மீது குண்டு வீசித் தாக்குதல்.
ஏமன் அதிபர் மாளிகை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அலி அப்துல்லா சலேத் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இன்று காலை அதிபர் ஆதரவு படையினருக்கும் பழங்குடியினர் அமைப்பைச் சேர்ந்த குழுவினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் அதிபர் மாளிகை மீது திடீரென குண்டுகள் வீசப்பட்டன.இதில் அலி அப்துல்லா சலேத் உயிரிழந்து விட்டதாக எதிர்க்கட்சியினரால் நடத்தப்படும் தொலைக்காட்சி ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டது.
ஆனால் இத்தகவலை அந்நாட்டின் தகவல்துறை இணையமைச்சர் அப்துல் ஜனாதி மறுத்துள்ளார். "குண்டுவீச்சு தாக்குதலில் சில அதிகாரிகள் மட்டுமே லேசாக காயமடைந்துள்ளனர். அதிபர் அலி அப்துல்லா சலேத் நலமாக உள்ளார். இன்னும் சில மணி நேரங்களில் அவர் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றுவார்" என்று தெரிவித்தார்.எனினும் குண்டுவீச்சில் அதிபர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏமனில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதிபராக உள்ள அலி அப்துல்லா சலேத் ஆட்சியில் பெரிய முன்னேற்றம் இல்லை என்று கூறி ஜனவரி மாதம் முதல் அங்கு பழங்குடியினர் அமைப்பைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராணி பதவியேற்ற வைர விழா கொண்டாட்டம்: மகிழ்ச்சியில் பிரிட்டன் மக்கள்.
பிரிட்டன் ராணி பதவியேற்ற 60வது ஆண்டு விழா வருகிற ஆண்டு ஜூன் மாதம் வருகிறது. இந்த வைர விழா கொண்டாட்டத்தை ஒட்டி பிரிட்டன் மக்கள் 4 நாள் விடுமுறையை பெறுகிறார்கள்.பிரிட்டனில் வழக்கமாக பாங்க் ஹொலிடே மே மாதம் இறுதியில் வரும். இந்த விடுமுறை தினம் ஜூன் 4ம் திகதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதையடுத்த தினம் கூடுதல் விடுமுறை நாளாகும்.
இந்த விடுமுறை மாற்ற அறிவிப்பின் மூலம் பிரிட்டன் மக்கள் சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை ராணியாரின் வைர விழா கொண்டாட்டத்தை விடுமுறை நாளாக கொண்டாடி மகிழலாம்.இந்த வைரவிழாவால் நாடு முழுவம் உற்சாக நிலையை எட்டுகிறது என பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. ராணியாரின் பணிச்சேவைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி செயின்ட் பால் கதீட்ரலில் நடைபெறுகிறது.
மேலும் மரபுப்படி ராணி ரத வண்டியில் அழைத்து வரப்படுகிறார். ராணியின் வைர விழாவையொட்டி பக்கிங்காம் அரண்மனையில் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. பி.பி.சி ஒளிபரப்பு செய்கிறது. இதனை பல லட்சம் மக்கள் கண்டுகளிப்பார்கள்.ஜூன் 4ம் திகதியான திங்கட்கிழமை பி.பி.சி.யின் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த இசை நிகழ்ச்சியில் காமன்வெல்த் இசை நிபுணர்கள் மற்றும் பிரிட்டிஷ் இசை நிபுணர்கள் பங்கேற்பார்கள்.
ராணி குதிரைகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். குதிரை போட்டிகளிலும் ஆர்வம் கொண்டவர் ஆவார். எனவே அவர் 2012ஆம் ஆண்டு வைர விழா கொண்டத்தின் வாராந்த இறுதியான சனிக்கிழமை அவர் எப்சம் டெர்பியில் கலந்து கொள்வார்.ஜூன் 3ம் திகதி பிரிட்டனின் அனைத்து பகுதியைச் சார்ந்த நண்பர்கள் மற்றும் பிரிட்டனுக்கு அருகாமையில் உள்ளவர்கள் பங்கேற்கும் விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது.
வெள்ளரிக்காய் இறக்குமதிக்கு அரபு நாடுகள் தடை.
ஸ்பெயின், ஜேர்மனி, டென்மார்க், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வெள்ளரிக்காய் இறக்குமதி செய்வதற்கு ஐக்கிய அரபு நாடுகள் தடைவிதித்துள்ளது.மேற்கண்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளரிக்காயில் இ.கோலி வகை பக்டீரிய இருப்பதே காரணமாகும்.
வளைகுடா நாடுகளின் சுற்றுப்புற சூழல் துறை அமைச்சகம் இத்தடையை விதித்திருப்பதாக வாம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.அதே போல் வளைகுடா நாடுகளை சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்வோர் காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என வளைகுடா நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகமும் அறிவுறுத்தியுள்ளது. 
இங்கிலாந்து அளித்து வரும் நிதியுதவிக்கு கடும் எதிர்ப்பு.
இந்திய குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு இங்கிலாந்து அளித்து வரும் நிதியுதவிக்கு அந்நாட்டு அரசயில் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு உடனடியாக நிதியுதவியை நிறுத்தும்படியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இங்கிலாந்து அரசு பீகார் போன்ற வளர்ச்சி குறைந்த மாநிலத்தில் வாழும் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக வரும் 2015ம் ஆண்டு வரையில் ஆண்டு தோறும் சுமார் 280 மில்லியன் பவுண்டு அளவிற்கு உதவி செய்வதாக உறுதியளித்து அதன்படி நிதி அளித்து வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சியினர் இந்தியாவிற்கு அளிக்கப்பட்டு வரும் நிதியுதவியை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், அந்நிதி தவறான வழிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் டெய்லி மெயில் பத்திரிகையை மேற்கோள் காட்டி கோரிக்கை விடுத்துள்ளனர்.
மகாராணி எலிசபெத் அணிவகுப்பில் காயமுற்றதால் கருணைக் கொலை செய்யப்பட்ட குதிரை.
பிரிட்டஷ் மகாராணியின் முடிசூட்டு ஞாபகார்த்த தின அணிவகுப்பில் பங்கேற்ற ஒரு குதிரை திடீரென நடை தடுமாறி இடறி விழுந்ததால் மரணத்தைத் தழுவ வேண்டிய நிலை ஏற்பட்டது.இதனால் இந்த விழாவைக் காண வந்திருந்த மக்கள் அதிர்ச்சியில் திகைத்துப் போய்விட்டனர். வருடாந்தம் ஜூன் மாதம் இரண்டாம் திகதி இடம்பெறும் மகாராணியின் முடிசூட்டு விழா ஞாபகார்த்த அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சியின் போதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றது. இந்தக் குதிரையின் பெயர் மேர்பி.
அரச அணிவகுப்பு படைப் பிரிவைச் சேர்ந்தது. லண்டன் ஹைட்பார்க்கில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. படை வீரர்கள் அணிவகுப்புக்குக்கான தயார்படுத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மெள்ள மெள்ளத் தாவி வந்த இந்தக் குதிரையின் கால்கள் நிலை தடுமாறி பீரங்கி பொருத்தப்பட்டிருந்த வாகனத்தின் சில்லுகளுக்குள் சிக்கிக் கொண்டன.இந்த நேரம் பார்த்து அந்த வண்டி ஓடியதால் குதிரை அதற்குள் நன்றாகவே மாட்டிக் கொண்டது. அதிலிருந்து காலை எடுக்கும் முயற்சியில் குதிரை நிலைதடுமாறி கீழே புல் தரையில் இழுபட்டுச் சென்றது.
படைவீரர்கள் குதிரையை நெருங்கிய போது அது மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. மிருக வைத்திய நிபுணர்கள் உடனடியாக ஸ்தலத்துக்கு வந்து பார்த்த போது அதன் கால்களில் பல முறிவுகள் ஏற்பட்டிருந்தன.வேறு வழியின்றி இந்த மாதிரி நிலைக்கு ஆளாகின்ற ஏனைய எல்லாக் குதிரைகளுக்கும் ஏற்படுகின்ற முடிவு இந்தக் குதிரைக்கும் ஏற்பட்டது. அதற்கு மேலதிக வலி எதுவுமின்று ஊசி மருந்து மூலம் மரணம் ஏற்படுத்தப்பட்டது.
மக்கள் இந்தக் காட்சியைக் காணாமல் இருப்பதற்காக பச்சை நிறப் போர்வை ஒன்று போர்த்தப்பட்டே ஊசி மருந்து ஏற்றப்பட்டது. ஆனாலும் என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொண்ட மக்கள் அதிர்ச்சியடைந்து காணப்பட்டனர்.
மக்கள் மட்டுமன்றி இங்கு வந்திருந்த படை வீரர்கள் கூட இதைப் பார்த்து கதிகலங்கிவிட்டனர். அவர்கள் எல்லோரது முகத்திலும் வேதனை குடிகொண்டது.மேர்பி இந்தப் படைப்பிரிவில் நீண்ட காலம் அங்கம் வகித்த ஒரு குதிரையாகும். அதற்கு இந்தக் கதி ஏற்பட்டது. பெரும் கவலை அளிக்கின்றது. ஆனால் இதைத் தவிர வேறு வழியும் கிடையாது என்று அதிகாரிகள் கூறினர்.
ஐவரிகோஸ்ட்டில் கடத்தப்பட்ட பிரான்ஸ் தொழிலதிபர் சடலமாக மீட்பு.
நோவோடெல் ஹோட்டல் இயக்குனர் ஸ்டெபானே பிரான்ட்ஸ் டி ரிபேல் கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி ஐவரிகோஸ்டில் கடத்தப்பட்டார்.அவர் கொல்லப்பட்டு விட்டதாக அவரது குடும்ப வழக்கறிஞர் வியாழக்கிழமை தெரிவித்தார்.மரணம் அடைந்த ஸ்டெபானேவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு அவரது மரணம் குறித்து விசாரணை செய்யப்படுகிறது என தொழிலதிபரின் வழக்கறிஞர் பியரெ ஓலிவர் தெரிவித்தார்.
ஐவரிகோஸ்டில் அரசியல் போராட்டங்கள் நடந்தன. அங்கு கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி ஐவரிகோஸ்ட்டின் அப்டஜன் நகரில் உள்ள ஹோட்டலுக்கு பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து ஸ்டெபானே மற்றும் லாம்பெலின் ஆகிய 2 பிரெஞ்சு நபர்களை கடத்திச் சென்றனர்.லாம்பெலின் ஐவரிகோஸ்ட்டின் மிகப்பெரும் நிறுவனமான சிப்காவின் தலைவர் ஆவார். கடத்தல்காரர்கள் மலேசியாவைச் சேர்ந்த செல்லப்பாண்டியனையும் கடத்திச் சென்றனர். சிப்காவின் துணை நிறுவனமான சானியா நிறுவனத்தின் இயக்குனராக அவர் உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் லாம்பெலின் உதவியார் ஒருவரும் கடத்தப்பட்டார். புதன்கிழமை 2 உடல்கள் கடல் நீர் பிரிந்து வரும் பாதை அருகே கிடந்தன. அந்த நபர்கள் கடத்தப்பட்ட 2 பிரெஞ்சு நாட்டவர்களா என்பதை உறுதிசெய்ய முடியவில்லை என பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.கடந்த மாதம் ஐவரிகோஸ்ட்டின் புதிய தலைவர் ஜனாதிபதி அலசானே ஒட்டாரா கூறுகையில்,"தமது படையினர் கடத்தலில் ஈடுபட்ட சில நபர்களை பிடித்ததாக" கூறினார்.
மனிதர்களை கொல்லும் இ.கோலி பக்டீரியா: உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்.
இ.கோலி பக்டீரியாவுக்கு 17வது நபர் ஜேர்மனியில் பலியாகி உள்ளார். பயங்கர நச்சுப்பொருளுடன் புதிய வகை பக்டீரியாவாக இ.கோலி பக்டீரியா உருவாகி உள்ளது.இந்த நுண் பக்டீரியாவானது புதிய மரபணு மாற்றத்துடன் உருவாகியுள்ளது. இதில் மனிதர்களை கொல்லும் ஜூன்கள் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்பெயினில் இருந்து ஜேர்மனி போன்ற நாடுகளுக்கு வெள்ளரிக்காய் உள்பட காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த வெள்ளரிக்காயை சாப்பிட்டதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்  பக்டீரியாவான இ.கோலி பரவி உள்ளது என ஜேர்மனி முதலில் குறிப்பிட்டது.இந்த கருத்துக்கு ஸ்பெயின் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஜேர்மனி அறிவிப்பால் தங்கள் விவசாயம் செய்த உணவு வகைகளை ஏற்றுமதி செய்யமுடியாமல் போனது. எனவே எங்கள் இழப்புக்கு உரிய நிவாரணம் தரவேண்டும் என ஸ்பெயின் கூறியது.
இ.கோலி பக்டீரியா உயிரைக் கொல்லும் மரபணுக்களுடன் அமைந்துள்ளது. இந்த இ.கோலி நுண் உப பக்டீரியாவின் திடீர் மரபணு மாற்றம் காரணமாக ஏற்பட்டு உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் இகோலி பக்டீரியாவிற்கு பலியான 17வது நபராக ஹம்பர்க் மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தார். ஐரோப்பிய நாடுகளில் இ.கோலி பக்டீரியாவிற்கு இதுவரை 1500 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பக்டீரியா வேகமாக பரவி வருவதால் பாதிப்பு வேகம் அதிகரித்து உள்ளது.
தபால்துறையினர் வேலை நிறுத்தத்தை துவக்கினர்: தபால் சேவை முடங்கியது.
கனடா தபால்துறை நிர்வாகம் கருத்துருவை தபால்தலை ஊழியர்கள் நிராகரித்தனர். இதனைத் தொடர்ந்து வின்னிபெக்கில் நள்ளிரவில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை துவக்கினர்.சுகவீனக்கால விடுமுறை, எதிர்காலத்தில் ஊழியர்களை பணிக்கு தேர்வு செய்வது போன்ற விடயங்களில் பல சமரசங்களை மேற்கொண்டதாக க்ரௌன் கார்ப்பரேஷன் தெரிவித்து இருந்தது.இதுகுறித்து கனேடிய தபால்துறை ஊழியர்கள் சங்க தலைவர் டெனிங் லேமல் கூறுகையில்,"நிலுவையில் உள்ள பிரச்சனைகளில் எந்த தீர்வும் காணப்படவில்லை" என்றார்.
7 மாத காலமாக கனடா தபால்துறை நிர்வாகத்திற்கும் ஊழியர் சங்க நிர்வாகத்திற்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தை மனப்புழுக்கத்துடனேயே அமைந்திருந்தது. நீண்ட காலப் பேச்சுவார்த்தை பலன் அளிக்காத நிலையில் ஊழியர் சங்கத்தினர் வேலை நிறுத்த நடவடிக்கையை துவக்கினர்.கடந்த 13 ஆண்டுகளில் முதன்முறையாக வேலை நிறுத்தத்தை மேற்கொண்ட ஊழியர்களாக வின்னிபெக் தபால் துறையினர் உள்ளனர்.
கனடா தபால்துறை நிர்வாக செய்தி தொடர்பாளர் ஜான் ஹாமில்டன் கூறுகையில்,"ஊழியர்களுக்கு நாங்கள் சலுகைகள் குறித்து புதன்கிழமை இரவு கூறினோம். அதற்கு வெள்ளிக்கிழமை பதில் அளிப்பதாக கூறிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை துவக்கி உள்ளனர்" என்றார்.வேலை நிறுத்தம் காரணமாக அதிக இழப்பு ஏற்படும். இதனை தவிர்க்கவே பேச்சு வார்த்தை நடத்தினோம். ஆனால் ஊழியர் சங்கம் பதில் அளிக்காமல் வேலை நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக கனடா தபால் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. 
பாஸ்டன் அருகே பயங்கர சூறாவளி புயல்.
அமெரிக்காவின் மாசாசூயட்ஸ் மாகாணத்தில் பயங்கர சூறாவளிப் புயல் தாக்கியதில் நான்கு பேர் பலியாயினர்.அமெரிக்காவின் பாஸ்டன் அருகே 90 மைல் தொலைவில் மாசாசூயட்ஸ் மாகாணத்தில் உள்ள ஸ்பிரிங்பீல்டு என்ற இடத்தை சூறாவளிப் புயல் தாக்கியது.இதில் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்தன. வீட்டுக் கூரைகள், காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் தலைகீழாக கவிழ்ந்தன.
புயலுடன் மழையும் பெய்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் அவசர நிலையை அறிவித்துள்ளார் மாகாண கவர்னர் டிவல் பாட்ரிக்.மீட்புப் பணிக்காக ஆயிரம் ராணுவ வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதுவரை புயலால் நான்கு பேர் பலியாகியுள்ளனர். 33 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தலிபான்கள் திடீர் தாக்குதல்: 25 வீரர்கள் மரணம்.
பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தி 25 பாகிஸ்தான் வீரர்களை கொன்று விட்டனர்.பாகிஸ்தானில் பின்லேடன் அமெரிக்கப் படையால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு தலிபான் தீவிரவாதிகள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகள் நூற்றுக்கணக்கானவர்கள் புதன்கிழமை அதிகாலை வடமேற்கு பகுதி வழியாக பாகிஸ்தானுக்குள் புகுந்தனர்.அங்குள்ள சாலோதல் ராணுவ சோதனைச் சாவடி மீது துப்பாக்கியால் சுட்டும், வெடி குண்டுகள் வீசியும் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த திடீர் தாக்குதலால் ராணுவ வீரர்கள் நிலை குலைந்தனர். என்றாலும் திருப்பி சுட்டனர். இரு தரப்பினருக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில் 25 ராணுவத்தினர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இது பற்றி தகவல் அறிந்ததும் அங்கு கூடுதல் ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டனர். ராணுவத்தினர் ஹெலிகாப்டரில் சென்று தீவிரவாதிகளை தேடி வருகின்றனர்.
சுனாமி பாதிப்புக்களை சரிசெய்த பின் பதவியை விட்டு விலகுவேன்: ஜப்பான் பிரதமர்.
ஜப்பான் பிரதமர் நயோட்டாகான் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் சுனாமி ஏற்பட்டதில் புகுஷிமா உள்ளிட்ட பகுதிகள் அடியோடு அழிந்தன. இங்குள்ள அணு மின் நிலையங்கள் சேதமடைந்து கதிர்வீச்சு வெளியானது.
சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய பிரதமர் நயோட்டாகான் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சியினரும், ஆளுங்கட்சியில் உள்ள அதிருப்தியாளர்களும் புகார் கூறினர்.இந்நிலையில் ஜப்பான் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரதமர் நயோட்டாகான் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானம் தோல்வியடைந்தது.பாராளுமன்றத்தில் நயோட்டாகான் குறிப்பிடுகையில்,"சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் வரை பிரதமர் பதவியில் இருக்கிறேன். அதன் பின் பதவி விலகுகிறேன்" என்றார்.
ஒசாமா வேட்டையில் பயன்படுத்தப்பட்ட நாயை வாங்க பலத்த போட்டி.
ஒசாமா பின்லேடன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் போது அப்பணியில் ஈடுபட்ட ராணுவ நாயை தத்தெடுக்க கடும் போட்டி உருவாகியுள்ளது.அமெரிக்க ராணுவத்தில் வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பது, மீட்புப் பணிகளில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நாய்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.
ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த போது அமெரிக்க கடற்படையின் "சீல் படைப்பிரிவு" அதிரடி தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றனர்.இந்த தாக்குதலின் போது அமெரிக்க ராணுவத்துடன் சிறப்பு பயிற்சி பெற்ற "கெய்ரோ" என்ற நாயும் கொண்டு செல்லப்பட்டது. பின்லேடன் தப்பி ஓடினால் குதறிப் பிடிக்கவும், வெடிகுண்டு உள்ளிட்டவற்றை கண்டுபிடித்து எச்சரிக்கவும் இந்த நாய் கொண்டு செல்லப்பட்டது.
இந்த நாய் பின்லேடன் தாக்குதலில் பங்கேற்று வெற்றிகரமாக திரும்பி வந்துள்ள நிலையில் அதற்கு விரைவில் ஓய்வு அளிக்கப்பட உள்ளது. இந்த நாயை தத்தெடுக்க கடும் போட்டி உருவாகியுள்ளது.மே மாதம் 2ம் திகதிக்குப் பின் கெய்ரோவை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்து இதுவரை 400 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF