Wednesday, June 8, 2011

இன்றைய செய்திகள்.

திருமலைக் கடலில் திமிங்கல இராச்சியம்!
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலைக் கடலில் தற்போது திமிங்கலங்களின் இராச்சியம் நடக்கின்றது.இந்நிலையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் திமிங்கலங்களை கடலில் பார்த்து இரசிக்கின்றமைக்கு கடல் படையினர் விசேட ஏற்பாடுகளை செய்து உள்ளார்கள். பிரத்தியேக பயணிகள் கப்பல் சேவை ஒன்றை கடந்த 06 ஆம் திகதியில் இருந்து ஆரம்பித்து உள்ளார்கள். 100 பயணிகள் வரை ஒன்றாக இக்கப்பலில் பயணிக்க முடியும்.




இலங்கை மீது பொருளாதாரத் தடை! தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்.

இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பிரேரணையை முன்வைத்துள்ளார்.இந்தப் பிரேரணை தமிழக சட்டசபையால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்தப்பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, 

“தமிழனின் பண்பு யாருக்கும் தாழ்ந்தவனாக இருப்பதல்ல. யாரையும் தாழ்த்துவதல்ல என்றார் பேரறிஞர் அண்ணா. இப்படிப்பட்ட உயரிய எண்ணத்தைக் கொண்ட தமிழர்கள் உலகெங்கும் பரவி இருக்கிறார்கள். மொழி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஒற்றுமையுடன் திகழும் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இடையே உள்ள தொப்புள் கொடி உறவு அனைவரும் அறிந்த ஒன்றாகும். இலங்கைக்கு விடுதலை கிடைத்து விட்டாலும், அங்கு வாழும் தமிழர்கள் அவர்கள் நாட்டிலேயே இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுவதை எதிர்த்து, இலங்கைத் தமிழர்கள் பல்லாண்டு காலமாக போராடி வந்தனர். 

இவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து தேவையான அரசமைப்புச் சட்டத்திருத்தங்களை கொண்டு வந்து, தமிழர்கள் கௌரவத்துடனும், சம உரிமையுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்காமல் அவர்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது.பரவலாக குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களை கொன்று குவித்தது. மக்கள் வாழும் இடங்களின் மீதும், மருத்துவமனைகள் மீதும் குண்டுகளை வீசியது. மனிதாபிமான முறையில் செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது. 

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகப்படக்கூடியர்கள் உட்பட இந்தச் சண்டையில் பலியானவர்கள் மற்றும் எஞ்சியுள்ளவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது. இலங்கை அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் உள்பட போர்ப் பகுதிக்கு வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது. கடுமையான, நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்களை உள்நாட்டுப்போரின் போது இலங்கை அரசு நிகழ்த்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமனம் செய்யப்பட்ட குழு கண்டறிந்து இருக்கிறது. 

எனவே, இத்தகைய போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும், தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழவகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை இந்திய அரசை கேட்டுக் கொள்கிறது” என்றார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உரையினை அடுத்து இலங்கை மீது இந்திய மத்திய அரசாங்கம் பொருளாதார தடையை விதிக்க வேண்டும் எனக்கோரிய பிரேரணை தமிழக சட்டசபை நிறைவேற்றியுள்ளது.


நிபுணர்குழு அறிக்கையை நிராகரிப்பதை சிறிலங்கா நிறுத்த வேண்டும்! நியுசீலாந்து பாராளுமன்ற உறுப்பினர்.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட இலங்கைப் போர்க் குற்ற தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையை நிராகரிக்கும் வீண் முயற்சியை இலங்கை கைவிட வேண்டும். இந்த அறிக்கையில் காணப்பட்டுள்ள விடயங்களை விசாரிப்பதற்கு நம்பகத்தன்மையுள்ள வெளிப்படையான பன்முகக் கண்காணிப்புள்ள குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என அண்மையில் நியூசீலந்து  நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்கும்  நியூ சீலாந்து தமிழ் அமைப்புகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வெறும் உரையூடாட்டமாக  இல்லமால்  முள்ளிவாய்க்கால் தொடர்பான  சான்றுக் காண்பியங்களுடன் இந்த நிகழ்வை நியூசீலந்து தமிழர் பேரவை, நியூசீலந்து தமிழ் மூத்தோர் பேரவை நியூசீலந்து  தமிழ்ச்சங்கம் என்பன ஒழுங்கமைத்திருந்தன.இத்தகைய நிகழ்ச்சி வடிவமைப்பு வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களையும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களையும்  கவர்ந்திருந்தாக இதில் கலந்து கொண்ட மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

கனடா நாடாளுமன்ற  உறுப்பினர் ராதிகா சிற்சபைசனின் உரையுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் மேலும் பல காண்பியங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் காட்டப்பட்டன.இவற்றை அன்றுதான் இவர்கள்  பார்க்கவும் முழுமையாக  அறியவும் வாய்ப்புக் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.நியூ சீலந்தின் இலங்கை நட்புறவுக் குழுவின் தலைவரும் நாடாளுமன்றஉறுப்பினருமான  கல்வந்த்சிங் பக்ஷி ,வைத்திய கலாநிதி ஜாக்கி புளூ (நா.உ) ,கலாநிதி ராஜென் பிரசாத்(நா.உ) ,நியூ சீலந்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான வணபிதா பீட்டர் மேமன், மாய்ரோ லீட் பீட்டர், கெவின்மக்பிறைட், பீட்டர் காரிக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் இறுதியில்  இலங்கை அரசு அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் – குறித்த அறிக்கை – கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் போர்க்குற்றங்கள் நடைபெற்றிருக்க வாய்ப்பு, இருப்பதாக மட்டுமே சொல்கின்றது.அத்துடன் அவை உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் போர்க்குற்றங்களையும் அனைத்துலக மனித உரிமை சட்டமீறல்களையும் புரிந்ததாக அமையும் என்றும் கூறுகின்றது, எனவே விசாரணை நடத்தாமல் மௌனம் காத்தல் மௌனம் ஏற்பு என்று தான் சட்டம் கொள்ளும். 

ஆதலால் விசாரணை நடத்தப்பட்டே ஆதல் வேண்டும் எனவும் அனைத்துலக சமூகம் போர்க்குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தும்வரை ஓயவும் கூடாது என ஏற்றுக்கொள்ளப்பட்டது.இந்துக்கள் தங்களது சமயக்கிரிகைகளை நிறைவேற்றுவதற்கும் ஆலய  உற்சவங்களுக்குச்    செல்வதற்கும் இராணுவத்தின் அனுமதி பெறவேண்டிய அடிமை நிலையில் நல்லிணக்கம் எங்கிருந்து தோன்றமுடியும் என அங்கு வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத்  தெரிவிக்கப்பட்டது.
யாழ் சுகாதாரப் பரிசோதர்கள் அதிரடிச் சோதனையில் பாவனைக்குதவாத இறைச்சி கண்டுபிடிப்பு.

அழுகிய நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 81 கிலோ மாட்டிறைச்சியை யாழ் மாநகரசபையின் சுகாதாரப்பிரிவினர் அதிரடியாக சோதனையில் கைப்பற்றினர்.இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவதுமாநகரசபையின் சுகாதாரப்பிரிவினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அந்தச் சோதனையின் போது நாவாந்துறையில் இரண்டு மாட்டிறைச்சிக் கடைகளில் பாவனைக்குதவாத 81 கிலோ மாட்டிறைச்சியை கைப்பற்றினர்.
இன்று நீதிமன்றில் ஆயராகிய குறித்த இரண்டு சந்தேக நபர்களும் தமது குற்றத்தினை ஒப்புக்கொண்டதையடுத்து தலா 10000 ரூபாவினை தண்டப்பணமாக செலுத்துமாறு நீதிமன்ற நீதவான் ஏ.கே.ஆனந்தராஜா உத்தரவிட்டார்.
கட்டுநாயக்க சம்பவம் குறித்த விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைப்பு.
கட்டுநாயக்க மோதல் சம்பவம் குறித்த விசாரணை அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.கடந்த 30ம் திகதி பொலிஸாருக்கும், சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது.
இந்த சம்பவத்தின் போது பொலிஸார் நடத்திய தாக்குதலில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவம் குறித்து ஆராய்வதற்காக ஓய்வு பெற்ற நீதவான் மஹானாம திலகரட்ன தலைமையிலான தனிநபர் ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.சம்பவம் குறித்த விசாரணை அறிக்கை இன்று மாலை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.சம்பவத்தைத் தொடர்ந்து  பொலிஸ் மா அதிபர் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மின்னல் தாக்கி 31 பேர் உயிரிழப்பு.
ஜனவரி மாதம் தொடக்கம் மே மாதம் வரையிலான ஐந்து மாத காலப் பகுதியில் நாட்டின் பல பாகங்களில் மின்னல் தாக்கத்திற்குள்ளாகி 31 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காலநிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.ஜனவரி மாதம் தொடக்கம் மே மாதம் வரையிலான ஐந்து மாத காலப் பகுதியில் நாட்டின் பல பாகங்களில் மின்னல் தாக்கத்திற்குள்ளாகி 31 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காலநிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது. 

மின்னல் தாக்கத்தினால் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். அம் மாதத்தில் மாத்திரம் 20 பேர் பலியாகியுள்ளதாக காலநிலை அவதான நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, மின்னல் தாக்கத்தினால் ஜனவரி மாதம் 02, மார்ச் மாதம் 05, ஏப்ரல் மாதம் 20 பேரும், மே மாதம் 04 பேரும் என்ற அடிப்படையிலேயே 31 பேர் பலியாகியுள்ளனர். அநுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை, இரத்தினபுரி உள்ளிட்ட கிராம பகுதியிலேயே இந்த மின்னல் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்தியாவின் உதவியோடு தருஸ்மன் அறிக்கையை நிராகரிக்கும் எண்ணம் இல்லை: பீரிஸ்

எமது நாட்டுக்கு எதிரானதாக அமைந்துள்ள தருஸ்மன் அறிக்கையை இந்தியாவின் உதவியோடு நிராகரிக்கும் நோக்கம் இலங்கை அரசுக்கு கிடையாது. அவ்வாறு இந்தியாவைக் கோரும் எண்ணமும் இல்லை. இந்தியா ஊடாக நிராகரிக்க முற்பட்டால் அது எமது நாட்டுக்கு பாதகமாகவே அமையும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நேற்று சபையில் தெரிவித்தார்.எமது நாட்டுக்கு எதிரானதாக அமைந்துள்ள தருஸ்மன் அறிக்கையை இந்தியாவின் உதவியோடு நிராகரிக்கும் நோக்கம் இலங்கை அரசுக்கு கிடையாது. அவ்வாறு இந்தியாவைக் கோரும் எண்ணமும் இல்லை. இந்தியா ஊடாக நிராகரிக்க முற்பட்டால் அது எமது நாட்டுக்கு பாதகமாகவே அமையும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நேற்று சபையில் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது மே மாதம் 25 ஆம் திகதி ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி. அனுரகுமார திசாநாயக்கவினால் நிலையியற் கட்டளை 23 இன் கீழ் இரண்டின் அடிப்படையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், இலங்கை அரசாங்கத்தின் இந்தியாவுடனான கூட்டு அறிக்கை தொடர்பில் அனுர குமார திசாநாயக்க எம்.பி. யினால் கேட்கப்பட்ட கேள்விகளும் கூறப்பட்ட காரணங்களும் மற்றும் சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளும் எந்த வகையிலும் அடிப்படையற்றவை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் நான் இந்தியாவுக்கு சென்றதும் அங்கு உயர்மட்ட தலைவர்களை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டதும் எமது நாட்டின் தேவைகள் கருதியதாகும். இதற்காக இந்தியா எமக்கு அழைப்பு விடுக்கவில்லை.
அங்கு மேற்கொள்ளப்பட்ட கூட்டு அறிக்கையின் பிரகாரம் காங்கேசன்துறைக்கும் ரயில் பாதையமைக்கும் திட்டம் குறித்து உள்வாங்கப்பட்டுள்ளது. மாறாக காங்கேசன்துறை துறைமுகத்தினதும் பலாலி விமான நிலையத்தினதும் நடவடிக்கைகளை இந்தியாவுக்கு தாரைவார்ககும் அளவில் எதுவும் கூறப்படவில்லை. இவ்வாறு அனுரகுமார எம்.பி. யினால் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பதானது இங்கு ஏதோ பாரிய தவறு இழைக்கப்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டப்படுவதாகவே அமைந்திருக்கின்றது.
மேலும் இந்த ரயி“ல பாதை அமைக்கும் விடயம் சம்பந்தமாக இரு தரப்பிலிருந்தும் விரிவாக கலந்துரையாடல்களை மேற்கொண்டதன் பின்னரே உடன்பாடு ஒன்றுக்கு வர வேண்டும் என்பது அந்த கூட்டு அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டிருக்கின்றது. அதேபோல சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பிலும் இங்கு தவறான அர்த்தம் கற்பிக்கப்பட்டிருக்கின்து. அது முற்றிலும் தவறானதாகும். அதாவது இலங்கை இந்திய அரசுகளின் மேற்படி கூட்டு அறிக்கையானது எந்தவித பாதகத்தையும் கொண்டிருக்கவில்லை. எனனே இது தொடர்பில் முன்வைக்கப்பட்டிருக்கின்ற கருத்துகள் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவையாகும். இது இவ்வாறிருக்க தருஸ்மன் அறிக்கை தொடர்பாக இந்தியாவின் உதவியை நாடுவதற்காகவே இந்தியா சென்றிருப்பதாகவும் இங்கு கூறப்பட்டிருக்கின்றது.
மேலும் தருஸ்மன் அறிக்கை விவகாரத்தை இந்தியாவின் உதவியோடு நிராகரிப்பதற்கான நோக்கம் இலங்கை அரசுக்கு கிடையாது. அது எமது நாட்டுக்கும் நல்லதல்ல. இது விடயம் சம்பந்தமாக நாம் இந்திய உயர்மட்டத்துடன் மட்டுமல்ல, வேறு பல நாடுகளுடனும் பேச்சுக்களை நடத்தியுள்ளோம். இந்த அறிக்கை தொடர்பில் சர்வதேச அளவிலான தேடல்கள் வேண்டுமென சர்வதேசத்தின் பல நாடுகள் கோரிக்கை விடுத்திருக்கின்ற போதிலும் இந்தியாவிடமிருந்து எந்த கருத்தும் வெளிப்படவில்லை. இந்நிலையில் தருஸ்மன் அறிக்கையை இந்தியாவூடாக நிராகரிக்க முற்படும் பட்சத்தில் அது எமது நாட்டுக்கு பாதகமாக அமைந்துவிடும்.
22 அணிசேரா நாடுகளின் உயர் மட்ட பிரதிநிதிகளுடனும் நாம் இந்த அறிக்கை சம்பந்தமாக கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளோம். எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய உயர்மட்டத்துடனான பேச்சுக்கள்,சந்திப்புக்கள் மிகவும் பெறுமதிமிக்கவையாக அமைந்தன. இது ஒருபுறமிருக்க இந்த தருஸ்மன் அறிக்கையானது ஐக்கிய நாடுகள் சபையானது அறிக்கை அல்ல. அது ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் தமக்கு ஆலோசனை வழங்கும் வகையில் நியமிக்கப்பட்ட குழுவொன்றினால் தயாரிக்கப்பட்ட அறிக்கையாகும் என்பதை நாம் முன்னரே கூறியிருந்தோம்.
அனுர குமார திசாநாயக்க எம்.பி. யின் கேள்வியின் பிரகாரம் நாம் இந்தியாவின் நோக்கத்திற்காக அங்கு செல்லவில்லை. மாறாக எமது தேவைக்காகவே சென்றோம். அவ்வாறு சென்றமைக்கான பெறுபேறுகள் திருப்திகரமானவையாகும். எனவே தவறான அர்த்தங்களைக் கற்பிக்கும் வகையில் அனுர குமார எம்.பி. யினால் சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்பதை இந்த பாராளுமன்றத்துக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
மரணத்தை வரவேற்கிறேன்: கடாபி.
லிபிய ஜனாதிபதி கடாபி தனது நாட்டுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகளை எதிர்த்து மரணிக்கும் வரை போராடப் போவதாகவும் மரணத்தை வரவேற்பதாகவும் அறிவித்துள்ளார். மேற்படி தகவல் அடங்கிய அவரது குரல் பதிவை அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சி நேற்று ஒளிபரப்பாக்கியுள்ளது. இக்குரல் பகுதிவில் அவர் தனது ஆதரவாளர்களை திரிபோலியில் உள்ள இல்லத்தில் கூடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். மேற்படி தகவலானது கடாபியின் பாப் அல் அஸீசியா இல்ல வளாகத்தில் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றதன் பின்னரே வெளியாகியுள்ளது.

கடாபியின் இல்ல வளாகத்தை இலக்கு வைத்து நேட்டோ படைகள் நேற்று பல தடவைகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேட்டோ படைகள் லிபிய இராணுவத்திற்கெதிரான படைநடவடிக்கைகளை மார்ச் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பித்தது. எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதி வரை தனது படை நடவடிக்கைகளை தொடர கடந்த வாரம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கின்னஸ் சாதனை படைத்திருக்கும் உலகின் மிகச்சிறந்த பூங்கா.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் கின்டனா ரூ மாநிலத்தில் கரீபியன் கடலை ஒட்டி அமைந்துள்ளது எக்ஸ்காரட் சுற்றுச்சூழல் பூங்கா.பாரம்பரிய பெருமை வாய்ந்த ரிவெரா மாயா பகுதியில் சுமார் 200 ஏக்கரில் அமைக்கப்பட்ட பிரமாண்ட பூங்கா. இங்கு பவளப் பாறைகளை ரசித்த படி நீந்தலாம்.
டால்பின்களுடன் சேர்ந்து குளிக்கலாம். பொதுவாக சரணாலயங்கள், மிருககாட்சி சாலைகளில் பறவைகள், விலங்குகளை தொட அனுமதி அளிக்கப்படாது. இங்கு வித்தியாசம்.ஆபத்து இல்லாத விலங்குகள், பறவைகளை தொந்தரவு செய்யாமல் தொட்டு ரசிக்கலாம். பறவைகளை கொஞ்சி மகிழலாம். இதுதவிர ஆயிரக்கணக்கான வகைகளை சேர்ந்த செடி, கொடி, மரங்களும் இங்கு வளர்க்கப்படுகின்றன.
1990ல் தொடங்கப்பட்ட இந்த பூங்கா சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் சுற்றுச்சூழலை சிறப்பாக பராமரிப்பதன் மூலம் தற்போது கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது இப்பூங்கா.கின்னஸ் விருதை எக்ஸ்காரட் பூங்கா உரிமையாளர் மிகல் கின்டனா பாலியிடம் கின்னஸ் நிறுவன பிரதிநிதி கிம்பர்லி பாட்ரிக் வழங்கினார். உலகில் அரிதாக காணப்படும் மகாவ் கிளி வகைகள் இங்கு சமீபகாலமாக அதிகம் பிறந்துள்ளன.
கடந்த ஓராண்டில் மட்டும் 125 மகாவ் கிளிகள் பிறந்துள்ளன. கிளிகள் உள்பட பல்வேறு உயிரினங்களை பாதுகாக்கவும் அவற்றின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும் பிரத்யேக மையம் ஒன்றை எக்ஸ்காரட் சுற்றுச்சூழல் பூங்கா அமைத்திருக்கிறது.இந்த பூங்காவில் இருக்கும் விலங்குகள், பறவைகள் மிகவும் உற்சாகமாக இருக்கின்றன. அதற்கான சூழ்நிலையை எக்ஸ்காரட் நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்று கின்னஸ் நிறுவனம் பாராட்டியுள்ளது.
லிபியாவை பாதுகாப்பது மட்டுமே எனது கடமை: கடாபி 
நேட்டோ படைகள் தலைநகர் திரிபோலியில் குண்டுவீச்சைத் தீவிரப்படுத்துவதால் சரண் அடைய மாட்டேன். இறுதி வரை போராடுவேன் என லிபிய அதிபர் கடாபி கூறியுள்ளார்.மேலும் அவர் கூறியதாவது: என்னைச் சுற்றி விமானங்கள் பறந்து கொண்டு தான் இருக்கின்றன. வெடிகுண்டுகளும் விழுந்து கொண்டு தான் இருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் தான் நான் பேசுகிறேன். எனது ஆன்மா கடவுளின் கைகளில் உள்ளது. எனது மரணம் அல்லது வாழ்க்கையை பற்றி சிந்திக்கவில்லை. கடமை அழைப்பையே எண்ணிக் கொண்டு இருக்கிறோம் என கடாபி பேசினார்.நேற்று இரவு திரிபோலியில் 3 குண்டுகள் வெடித்தன. முன்னதாக நேட்டோ படைகள் லிபிய ராணுவ மையத்தையும், கடாபி வளாகத்தையும் குறி வைத்து தாக்குதல் நடத்தின. கடாபி வளாகம் மீது குண்டு தாக்குதல்கள் தீவிரமாகி உள்ளன என்றும் அரசு தொலைக்காட்சி தெரிவித்தது. இந்த குண்டு வீச்சில் கட்டிடங்கள் சேதம் அடைந்தன.
எங்களது ஒரே நோக்கம் லிபிய நாடு தான். எங்களது எதிர்ப்பை கைவிட மாட்டோம். சரண் அடைய மாட்டோம். வாழ்வோ, சாவோ, வெற்றியோ எதைப் பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை. லிபியாவை பாதுகாப்பது தான் எங்கள் நோக்கம் என கடாபி கூறினார்.திரிபோலி குண்டு வீச்சு குறித்து லிபிய அரசு செய்தித் தொடர்பாளர் முசா இப்ராகிம் கூறுகையில்,"நேட்டோ தாக்குதலில் தொலைக்காட்சி சேவை சேதம் அடைந்தது. 2 பேர் இறந்துள்ளனர். 16 பேர் காயம் அடைந்தனர்" என்றார். லிபிய ஒளிபரப்பு நிறுவனங்களை நாங்கள் தாக்கவில்லை என நேட்டோ கூறியது.


சீனாவில் நிலநடுக்கம்: அதிர்ச்சியில் மக்கள்.
சீனாவின் வடமேற்கு பகுதியில் இன்று அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. சீனாவின் வடமேற்கு பகுதியில் இன்று அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.காலை 9.54 மணிக்கும், 10 மணிக்கும் நடைபெற்ற அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் 4.2 எனவும், 4.1 எனவும் ரிக்டர் அளவுகோலில் அளவிடப்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட உயிரிழப்பு, சேத விபரங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் சீனாவின் தென்மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 21 பேர் பலியாகி உள்ளனர்.காணாமல் போன 37 பேரை மீட்புப் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் பலரை காணாததால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.
யூதர்களை அழிக்க ஹிட்லர் 1919ஆம் ஆண்டு எழுதிய கடிதம் வெளியீடு.
அடால்ப் ஹிட்லர் என்ற பெயரை கேட்டதுமே ஒரு நடுக்கம் வரத்தான் செய்கிறது. ஹிட்லருக்கு யூதர்களையும், அவர்களது மொழியையும் கண்டாலே கடுமையான வெறுப்பு ஏற்பட்டது.இந்த வெறிப்பின் உச்சக் கட்டமாக யூதர்களை கொன்று குவிக்க வேண்டும் என்ற வெறி அவருக்கு ஏற்பட்டது. அந்த நடவடிக்கைகளில் அவர் தீவிரமாக இறங்கினார். யூதர்களை அழிக்க வேண்டும் என அவரது முதல் எண்ணம் 1919ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தில் தெரியவந்தது.
ஹிட்லர் எழுதிய அந்தக் கடிதத்தில் யூதர்கள் பற்றிய அவரது எண்ண ஓட்டம் தெளிவாக விளக்கப்பட்டு இருந்தது. 1919ஆம் ஆண்டு ஹிட்லர் கையெழுத்திட்ட கடிதமானது நியூயார்க்கில் நடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின் போது சைமன் வெசன்தால் மையத்தால் வெளியிடப்பட்டது.மிகப் பழமையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த மஞ்சள் நிற கடிதத்தை வெசன்தால் மைய நிறுவனரான ரபி மார்வின் எடுத்துக் காட்டினார். யூதர்களை அழிப்பதே ஜேர்மானியர்களின் நோக்கம் என்பதை ஹிட்லர் எழுதிய வரிகளை அவர் சுட்டிக்காட்டினார்.

1919ஆம் ஆண்டு எழுதிய அந்த கடித விவரம் 22 ஆண்டுகளுக்கு பின்னர் செயல்படுத்தப்பட்டது. சைமன் வெசன்தால் மையம் யூத மனித உரிமை அமைப்பு ஆகும். ஹிட்லரின் அந்தக் கடிதத்தை ஒரு தனி நபரிடம் இருந்து அந்த மையம் 150 ஆயிரம் டொலருக்கு வாங்கி பாதுகாத்து வருகிறது.லாஸ் ஏஞ்சல்சில் உள்ள அருங்காட்சிகயத்தில் இந்த கடிதம் ஜூலை மாதம் நிரந்தரமாக வைக்கப்படுகிறது. முதல் உலகப்போரின் போது ஹிட்லருக்கு 30 வயது ஆகும். 1919ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் திகதி யூதர்களை அழிப்பது குறித்து கடிதத்தை எழுதி இருந்தார்.
ஜேர்மன் ராணுவத்தின் பிரசார பிரிவில் இருந்த ஹிட்லர் அந்தக் கடிதத்தை எழுதி இருந்தார். அந்தக் கடிதம் ஜேர்மன் மொழியில் எழுதப்பட்டுள்ளது. அது 1988ஆம் ஆண்டு உறதிப்படுத்தப்பட்டது.யூதர்களை ஒரு இனமாகவே ஹிட்லர் கருதினார். அது ஒரு மதம் அல்ல என்பது அவரது கருத்து ஆகும். பணம் மற்றும் அதிகாரத்தால் மட்டுமே அந்த இனம் வளர்ந்துள்ளது என ஹிட்லர் எண்ணம் கொண்டிருந்தார்.
மரங்களை அழிக்கும் பார்பி பொம்மைகள்.
மழை மரங்களை அழிப்பதில் பார்பி பொம்மைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? சிறு குழந்தைகளை மகிழ்விப்பதில் பார்பி பொம்மைகள் முதன்மை வகிக்கின்றன.
அந்த சின்னஞ்சிறு பொம்மைகள் மெல்லிய தங்க நிற தலைமுடியுடன் பார்ப்பவரை சந்தோஷப்படுத்தம் விளையாட்டு பொருளாக உள்ளது. அந்த பொம்மையை பேக் செய்வதற்கு மழைவனப்பகுதி மரங்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன.இந்த பேக்கிங் பொருளை உருவாக்குவதற்காக மழைவனப்பகுதி மரங்கள் வெட்டப்படுகின்றன. குழந்தைகளின் விருப்பத் தேர்வான பார்பிகளை மூடுவதற்கு தயாரிக்கப்படும் பெட்டிகள் இந்தோனேஷியாவின் ஹார்ட் வுட் மரங்களில் இருந்து பெறப்படுகின்றன.
பிரிட்டன், அமெரிக்கா, ஜேர்மனி போன்ற உலக நாடுகளில் பார்பிகள் அதிக அளவில் விற்பனை ஆகின்றன. இந்த பார்பிகளின் அட்டைப்பெட்டிகளின் தேவை அதிகரித்து வருவதால் மிக அதிக அளவில் மழைக்காடுகளில் மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.உலக அரங்கில் பருவ நிலை மாற்றம் ஏற்படுவதற்கும், பூமி வெப்பம் அடைவதற்கும் அதிக அளவில் மரங்கள் வெட்டப்படுவதே காரணமாக உள்ளன. அதிக அளவில் மரங்கள் வெட்டப்படுவதால் மழை அளவு குறைவதுடன் காற்றில் கரி மாசு படிவது அதிகரித்து பூமி வெப்ப நிலையும் அதிகரித்து வருகிறது.
பார்பி அட்டைப்பெட்டிகளுக்காக மழை மரங்கள் வெட்டப்படுதை பசுமை இயக்கத்தினர் எதிர்த்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். பார்பிகள் தயாரிப்பில் உள்ள மேட்டல் நிறுவனம் இந்த எதிர்ப்பால் விற்பனையில் பின்டைவை பெறும் நிலை உள்ளது.பிரிட்டனில் பெண் தலையுடனும் மீன் உடலுடனும் தயாரிக்கப்படும் பார்பி பொம்மை 25 பவுண்ட் வரை பரபரப்பாக விற்பனை ஆகிறது.
குழந்தைகளுக்கு இருக்கும் புற்றுநோயை கண்டறிவதில் தடுமாற்றம்: மிக மோசமான நிலையில் பிரிட்டன்.
வளர்ந்த நாடுகளில் மிக மோசமான சாதனை ஒன்றை பிரிட்டன் எட்டியுள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் மூளைகட்டி புற்றுநோயை கண்டறிவதில் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன.ஆனால் அந்த நாடுகளை ஒப்பிடுகையில் பிரிட்டன் 3 மடங்கு நேரத்தை மூளை கட்டியை சரியாக கண்டறிவதற்காக எடுத்துக் கொள்கிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
பிரிட்டன் நாட்டிங்காம் பல்கலைகழகத்தின் குழந்தைகள் மூளை கட்டி ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் டேவிட் வாக்கர் கூறியதாவது: மூளைக்கட்டியை கண்டறிவதில் தாமதம் செய்வதால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அபாய நிலை அதிகரிக்கிறது.ஒரு அபாய காரணியாக அதி விரைவ மரணம் ஏற்படுகிறது. மூளை காயத்தை முன்கூட்டியே கண்டறியாத பட்சத்தில் அதில் இருந்து மீள்வது பெரும் சிரமத்தை தருகிறது.
சமந்தா என்ற சிறுமிக்கு 9 மாதமாக மூளைக்கட்டி கண்டறியப்படாததால் மரணம் அடைந்தார் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அந்த சிறுமியின் பெற்றோர் தற்போது ஒரு அறக்கட்டளை அமைத்து ஹெட் ஸ்மார்ட் திட்டத்திற்கு உதவி வருகிறார்கள் என பேராசிரியர் டேவிட் வாக்கர் தெரிவித்தார்.சிறுமி சமந்தாவின் பெற்றோர் கடந்த 14 ஆண்டுகளாக அறக்கட்டளையை நடத்தி உதவி வருகிறார்கள். இன்னும் மூளைக்கட்டியை முன்கூட்டியே அறிவதில் பிரிட்டனில் தாமதம் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் விபரீத நிகழ்வுகள் ஏற்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
சிறுமி சமந்தாவின் தாய் ஏங்கலா மற்றும் தந்தை நீல் டிக்சன் முளைகட்டி புற்று நோய் அபாயம் குறித்து தெரிவித்தனர். மரணம் ஏற்படுத்தும் புற்றுநோய்களில் இரண்டாவது பெரிய புற்றுநோயாக மூளைக்கட்டி புற்றுநோய் உள்ளது. இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அதிக மரணங்களை ஏற்படுத்துகிறது என்றனர்.ஆண்டு தோறம் 500 சிறுவர்களுக்கு மூளைக்கட்டி புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது. குழந்தைக்கு ஏற்படும் புற்றுநோயில் 25 சதவீதம் மூளைகட்டி நோயாகவே உள்ளது.
அமெரிக்காவில் ஒபாமாவின் செல்வாக்கு சரிவு.
பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பின் அமெரிக்க அதிபர் ஒபாமா செல்வாக்கு அதிகரித்தது.ஆனால் அமெரிக்க பொருளாதார நிலை சீராக இல்லை என்பதாலும், வேலைவாய்ப்பு குறைந்து வரும் போக்கும் அவரது செல்வாக்கை தற்போது கணிசமாக குறைத்து விட்டது.அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கிறது. அதிபர் ஒபாமாவும், அவரது குடியரசு கட்சிப் பிரமுகர்களும் மீண்டும் போட்டியிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மாசாசூயட்ஸ் மாநில கவர்னர் மிட் ரோனி அதிபர் தேர்தலில் போட்டியிட ஆயத்தங்களை மேற்கொண்டிருக்கிறார்.
அதிக வேலைவாய்ப்புகள், அதிக அளவு பொருளாதார வளர்ச்சி எட்டப்படுவதே தன் லட்சியம் என அவர் பிரசாரம் செய்வதால் அவருக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.ஒபாமா கட்சியிலேயே அவரை முறியடிக்கும் வாய்ப்பாளராக அவர் உருவெடுக்கிறார். முன்பு சாராபாலின் அதிபர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு என்ற பேச்சு இருந்தது. இப்போது அப்படி இல்லை.
தற்போது அதிபர் ஒபாமா செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதை "வாஷிங்டன் போஸ்ட்- ஏபிசி" இணைந்து நடத்திய சர்வே ஒபாமா முக்கியத்துவம் குறைந்து வருவதைக் காட்டுகிறது.பெட்ரோலியப் பொருட்கள் விலையேற்றம், வீடுகள் விலை மதிப்பு குறைவு, வேலை வாய்ப்புகள் குறைந்து வரும் போக்கு ஆகியவை மக்கள் மனதில் ஒபாமா அரசு மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றன.
அமெரிக்கா தன் வளர்ச்சிப் பாதையில் இருந்து எதிர்மறையாகச் செல்கிறது என 90 சதவீதம் பேர் தெரிவித்திருக்கின்றனர். தேசிய அளவில் நடந்த கருத்துக் கணிப்பில் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்திருக்கிறது.சமீபத்தில் பாகிஸ்தானின் அபோதாபாத்தில் ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவம் வீழ்த்திய செயலால் ஒபாமா செல்வாக்கு அபாரமாக உயர்ந்தது. தற்போது முற்றிலும் மாறாக அவர் செல்வாக்கு சரிந்திருப்பதை சர்வே முடிவுகள் காட்டுகின்றன.
ஹார்ப்பரின் இணையதளத்தை திருடி பொய்யான தகவல்களை வெளியிட்ட திருட்டுக் கும்பல்.
கணணி தகவல்களை நுணுக்கமாக திருடும் நபர்கள் கனடாவின் பழமைவாத கட்சியின் இணையத்தளத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.இதனைத் தொடர்ந்து ஆளும் பழமைவாத கட்சிக்கு அவதூறாக செயல்படும் தகவல்களை அவர்கள் அனுப்பினார்கள். பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்ற பொய்யான தகவலையும் அவர்கள் வெளியிட்டனர்.
இதுகுறித்து ஹார்ப்பர் அலுவலகம் கூறுகையில்,"பிரதமர் முழு உடல் நலத்துடன் உள்ளார்" என தெரிவித்தது. கனடா பழமைவாத கட்சியினர் 2006ம் ஆண்டு முதல் சிறுபான்மை அரசையும், மே மாதம் நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையும் பெற்று ஆட்சி செய்து வருகிறார்கள்.செவ்வாய்க்கிழமை ஆளும் கட்சியான பழமைவாத கட்சியின் இணையத்தளத்தில் காலை சிற்றுண்டி சாப்பிட்ட போது ஏற்பட்ட நிகழ்வு காரணமாக பிரதமர் றொரண்டோ பொது மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்து செல்லப்பட்டார்.
அதிகாலை பிரதமரின் மனைவி 911 சேவையை அழைத்ததன் பேரில் பிரதமர் ஹார்ப்பர் விமானத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் என மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர் என்ற பொய்த் தகவல்களை கணணி தகவல் திருடர்கள் அனுப்பினர்.பிரதமர் சாப்பிடும் போது தொண்டையில் வறுக்கப்பட்ட உணவு சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் உள்ளூர் நேரம் காலை 11 மணிக்கு லுட்ஸ் ராப்ட் என்பவர் டிவிட்டர் இணையத்தளத்தில் ஹார்ப்பர் பற்றிய வதந்தி செய்தியை அனைவரும் ரசித்து இருப்பார்கள் என எழுதி இருந்தார்.பொய்த்தகவல் சம்பவத்தால் பழமைவாத இணையத்தளம் செவ்வாய்க்கிழமை மதியம் செயல்படவில்லை.
தொடர்ந்து 90 நாட்கள் லிபியாவை தாக்க நேட்டோ படைகள் திட்டம்.
லிபியாவில் நேட்டோ படைகள் அதிபர் கடாபியின் வீட்டிற்கு அருகே தாக்குதல் நடத்தின.அரசுப் படைகளும் பதிலுக்கு அதிருப்தியாளர்கள் தங்கியுள்ள நகரத்தின் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன. லிபியாவை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் அதிபர் கடாபியை பதவி விலகக் கோரி அதிருப்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களை ஒடுக்க அரசுப் படைகள் விமான தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர். இதையடுத்து அதிருப்தியாளர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நேட்டோ படைகள் கடாபிக்கு எதிராக களமிறங்கின.தலைநகர் டிரிபோலியில் கடாபியின் மாளிகையையொட்டிய பகுதியில் நேட்டோ படைகள் தாக்குதல் நடத்தியதில் பயங்கர குண்டு சத்தமும், வானளாவிய புகை மண்டலமும் காணப்பட்டது. கடாபி ராணுவத் தளபதி வீட்டை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் உயிர் பலி குறித்த விவரம் ஏதும் தெரியவில்லை.
இதற்கிடையே கடாபி ராணுவப் படைகள் அதிருப்தியாளர்கள் அதிகமுள்ள அஜிதாபியான் நகரின் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன. இதனால் லிபியாவில் முக்கிய நகரங்களில் உணவு, குடிநீர், மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அதிபர் பதவியிலிருந்து கடாபி இறங்க மறுப்பதால் அந்நாட்டுக்கு எதிரான தாக்குதலை மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்க நேட்டோ படைகள் திட்டமிட்டுள்ளன. இதனிடையே பெங்காசி நகரில் கடாபிக்கு எதிரான அதிருப்தியாளர் தலைவர்களுடன் ரஷ்ய தூதர் பேச்சு நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது.
ஜேர்மன் அதிபருக்கு தனி கௌரவம் அளித்த ஒபாமா.
ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மார்கெலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா ஹோட்டலில் விருந்தளித்து கௌரவித்தார்.வெளிநாடுகளில் இருந்து வரும் தலைவர்களுக்கு ஹோட்டலில் விருந்தளிப்பது என்பது அமெரிக்க அரசியலில் மிகவும் அரிதான விடயம் என்பதால் இந்த விவகாரம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மார்கெல் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தனது அமைச்சரவையின் மூத்த அமைச்சர்கள் அடங்கிய குழுவுடன் நேற்று முன்தினம் இரவு வாஷிங்டனுக்கு வந்த ஏஞ்சலா மார்கலுக்கு அமெரிக்கா சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இதன்பின் ஏஞ்சலா மார்க்கெலையும், அவரது குழுவினரையும் வாஷிங்டனில் உள்ள பிரபலமான ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற அதிபர் ஒபாமா அங்கு அவர்களுக்கு சிறப்பான விருந்தளித்து கௌரவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு பயணம் வரும் தலைவர்களுக்கு ஹோட்டலில் விருந்தளிப்பது என்பது மிகவும் அரிதான விடயம். இந்நிலையில் ஜேர்மன் அதிபருக்கு ஹோட்டலில் விருந்தளித்து இருப்பது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: லிபியா விவகாரத்துக்கு தீர்வு காண ராணுவ நடவடிக்கை அவசியம் என அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் வலியுறுத்தி வந்தன.
விமானங்கள் பறப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதி என அறிவித்து விமானங்கள் மூலம் லிபியாவில் தாக்குதல் நடத்தவும் அமெரிக்கா திட்டமிட்டது. இதுகுறித்து ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது ராணுவ நடவடிக்கைக்கு ஜேர்மனி எதிர்ப்பு தெரிவித்தது.இது தொடர்பான ஓட்டெடுப்பையும் ஜேர்மனி புறக்கணித்தது. ஜேர்மனியின் எதிர்ப்பை அமெரிக்கா அலட்சியப்படுத்தியது. இதனால் அமெரிக்கா மீது ஜேர்மனி கடும் மனக் கசப்பில் இருந்தது. இந்த கசப்புணர்வை போக்குவதற்காக தான் அதிபர் ஒபாமா ஜேர்மன் அதிபருக்கு ஹோட்டலில் விருந்தளித்து கௌரவித்தார். இவ்வாறு அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே அமெரிக்க-ஜேர்மன் பிரதிநிதிகளுக்கு இடையே நடக்கவுள்ள பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடி, ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம், அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் நாடுகளில் நிலவும் சூழ்நிலை, சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பானின் பிரச்சனை ஆகியவை பற்றி விரிவாக பேசப்படவுள்ளதாக அமெரிக்க அதிபர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF