Sunday, June 12, 2011

இன்றைய செய்திகள்.


ஆயுத புரட்சிக்கு தயாராகும் கோட்டாபய? - இராணுவ லெப்டினன்ட் கேணல் கொலை.

இலங்கை பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி ஆரம்பிக்கபட்டுள்ளதை தொடர்ந்து மாணவருக்கு பயிற்சி கொடுத்த இராணுவ அதிகாரி பொலன்னறுவைக்கு அருகில் மர்ம வாகனமொன்றால் மோதுண்டு மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளார். 
இராணுவத்தின் கெடேற் படைப்பிரிவின் 13ஆவது படையணியின் கட்டளையிடும் அதிகாரியாகக் கடமையாற்றிய லெப்டினன்ட் கேணல் தர அதிகாரி லெனாட் என்பவரே பிரஸ்தாப மர்ம விபத்தில் உயரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ரந்தம்பையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியை வழங்குவதில் ஈடுபட்டிருந்த அவர் அதனை நிறைவு செய்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போதே மர்ம வாகனத்தினால் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
அவரை மோதிய வாகனம் தப்பிச் சென்றுவிட்ட நிலையில் வீதியோரமாக வீசப்பட்டுக் கிடந்த பிரஸ்தாப அதிகாரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் மரணத்தைத் தழுவிக் கொண்டார்.

அண்மைக் காலமாக இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலரும் இவ்வாறான வாகன விபத்துக்களில் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு சக்திகளின் ஊடுருவல் இந்த விடயத்தில் இருக்கலாம் என தெரியவருகிறது.
ஜெயலலிதா மன்மோகன் சிங்கை சந்திக்கிறார்.

இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டின் தொடர்ச்சியாக இன்றைய தினம் ஜெயலலிதா ஜெயராம் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இதன் பொருட்டு நாளைய தினம் அவர் புதுடில்கிக்கு பயணமாகிறார். 
இதன் போது இலங்கை தமிழர்களின் விவகாரம் மற்றும் தமிழக மீனவர்களின் விவகாரங்கள் குறித்து பேசப்படும் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியஉயர்மட்டக் குழுவின் தலைவர் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனை சந்தித்து இலங்கைப் பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


எனினும் ஜெயலலிதாவின் கூற்றுக்கள் தொடர்பில் இலங்கையில் வைத்து பேசப்படவில்லை என சிவ்சங்கர் மேனன் இந்திய ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். அத்துடன் தமிழக அரசாங்கத்துடன் எந்த தொடர்பை கொள்வதில்லை எனவும் இந்திய அரசாங்கத்துடனேயே பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாகவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ஜெயலலிதா மன்மோகன் சிங்கை சந்திப்பதானது முக்கியத்துவம் பெறுகிறது.
மாகாண சபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கமுடியாது! இலங்கை, இந்தியாவிடம் நேரடியாக தெரிவிப்பு.
13 வது அரசியலமைப்பின்படி மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கமுடியாது என்று  இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நேற்று தம்மை சந்தித்த இந்திய உயர்மட்டக் குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த அதிகாரங்களுக்கு கட்சி தலைவர்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு காட்டப்பட்டதாக அவர் இந்திய குழுவிடம் தெரிவித்துள்ளார்.
13 வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்செய்ய வேண்டும் என்று இந்திய குழு வலியுறுத்திய போதே இந்த பதிலை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.இந்தநிலையில் இலங்கையின் இந்த நிலைப்பாடு இரண்டு நாடுகளுக்கு இடையிலும் ராஜதந்திர சிக்கலுக்கு வழிவகுக்கும் என்று இலங்கையின் சண்டே டைம்ஸ் செய்திதாள் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் ஏற்கனவே இந்தியாவுக்கு சென்றிருந்த இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ_க்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் எம் கிருஸ்ணாவுக்கும் இடையிலும் பேசப்பட்டிருந்தது.இதன்போது 13 வது திருத்தத்தின் கீழ் அதிகாரப்பரவலாக்கம், நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும் என்று பீரிஸ் உடன்பட்டிருந்தார். எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அதனை நிராகரித்துள்ளார்.
இதேவேளை வடக்கு, கிழக்கில் இனி யுத்தம் இடம்பெறாது என்பதால் இலங்கை அரசாங்கம் அவசரகால சட்டத்தை விலக்கிக்கொள்ளும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினை குறித்து நேற்றைய சந்திப்பில் பேசப்பட்டபோதும் இலங்கை தமது பக்க நியாயங்களையே கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 வது சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த இணக்கம் - இலங்கையின் பிரதி வெளியுறவு அமைச்சர்.
13 வது அரசியல் அமைப்பை சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளதாக இலங்கையின் பிரதி வெளியுறவு அமைச்சர் நியூமல் பெரேரா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பிரதியமைச்சர் செய்திதாள் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.இலங்கை அரசாங்கம், சர்வதேச சமூகத்துடன் இணைந்து நாட்டின் எதிர்கால நலன்கருதி செயற்படவுள்ளதாகவும் நியூமல் பெரேரா குறிப்பி;ட்டுள்ளார்.இலங்கையின் ஜனாதிபதி 13 வது சீர்திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாது என்று கூறியுள்ள நிலையில் நியூமல் பெரோராவின் கருத்து மாறுப்பட்டு அமைந்துள்ளது.
இலங்கையின் வெளியுறவு சேவையில் குறைபாடுகள் இருப்பதை ஏற்றுக்கொண்ட அவர், இதனை நிவர்த்திக்கும் வகையில் வெளிநாட்டு சேவையில் முக்கிய அரசியல்வாதிகளும் வர்த்தகர்களும் இணைக்கப்படவுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்இந்தியாவில் வைத்து, வெளிநாட்டு அமைச்சர் ஜி எல் பீரிஸ், 13 வது அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த இணக்கம் தெரிவித்தமை குறித்து கருத்துரைத்த நியூமல் பெரேரா, ஜீ.எல்.பீரிஸ் இணக்கம் வெளியிட்ட 13 வது திருத்தத்தில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் அடங்கியிருக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
அவசர காலச் சட்ட விடயத்தில் அரசாங்கம் பொதுமக்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றுகின்றது: விஜித ஹேரத்.
அவசர காலச்சட்டத்தைத் தளர்த்தப் போவதாகக் கூறி அரசாங்கம் பொதுமக்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குற்றம் சாட்டியுள்ளார்.இலங்கையின் பெரும்பாலான ஊடகங்கள் வாயிலாக அவசர காலச் சட்டத்தை தளர்த்தப் போவதாக அரசாங்கம் மேற்கொள்ளும் பிரச்சாரங்களில் எள்ளளவும் உண்மையில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
"இரிதா திவயின" ஞாயிறு வாராந்த திவயினப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே ஜே.வி.பி. கட்சியின் பிரச்சாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் மேற்கண்ட விடயங்களை முன்வைத்துள்ளார்.கடந்த காலங்களில் அவசர காலச்சட்ட விதிகளைத் தளர்த்தப் போவதாக ஊடகங்கள் வாயிலாக அரசாங்கம் பெருமெடுப்பில் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மகாநாடொன்றின் போதும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அதுபற்றிப் பிரஸ்தாபித்திருந்தார்.
அதுமாத்திரமன்றி சட்டமாஅதிபரே கூட அவசர காலச்சட்டத்தை தளர்த்துவது குறித்து ஊடகமொன்றில் கருத்து வெளியிட்டிருந்தார்.ஆனாலும் அரசாங்கம் அவ்வாறான செயற்பாடுகள் மூலம் ஒருபுறத்தில்  பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டு மறுபுறத்தில் பாராளுமன்றத்தின் ஊடாக அவசர காலச்சட்டத்தை நீடித்துக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் அவசர காலச்சட்டத்தை நீக்கும் நோக்கம் அரசாங்கத்திடம் அடியோடு இல்லை என்பதையே அது புலப்படுத்துகின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசியல்வாதிகள் வெட்கமற்றவர்கள்: சட்டத்தரணி எஸ்.எல்.குணசேகர.
இலங்கையிலுள்ள அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் வெட்கமற்றவர்கள் என்பதாக சிங்கள தேசியவாத கடும்போக்குடைய பிரபல சட்டத்தரணி எஸ்.எல். குணசேகர விமர்சித்துள்ளார்.கட்டுநாயக்க  சுதந்திர வர்த்தக வலய அசம்பாவிதங்கள் மற்றும் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையின் தாக்கம் என்பன குறித்து இன்றைய சிங்கள வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள விசேட நோ்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இருக்கும் அரசியல்வாதிகள் நாட்டை நாசம் செய்யவே அவதரித்தவர்கள். நாட்டுக்கு என்னதான் கெடுதி நடந்தாலும் பரவாயில்லை, தான் மட்டும் நன்றாக இருந்தால் போதுமென்று நினைக்கும் பண்பைக் கொண்டவர்கள்.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் மூலம் தமக்கு சாதகமான சூழ்நிலையொன்றை ஏற்படுத்திக் கொள்ள முடியுமா என்று கூட சில அரசியல்வாதிகளின் சிந்தனைகள் செயற்பட்டிருந்தன. அதில் ஆளுந்தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு என்ற பேதம் இருக்கவில்லை.விடுதலைப் புலிகளின் சிந்தனைகளை அப்படியே உள்வாங்கிக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருப்பதும் அப்படியான ஒரு சம்பவமாக நோக்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரை ஒளிப்பதிவு செய்ய அரசாங்கம் தீர்மானம்.
இனிவரும் காலங்களில் அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வோரை வீடியோ ஒளிப்பதிவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.அதன் அடிப்படையில் நாடு முழுவதும் நடைபெறும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அதில் பங்குபற்றுவோர் இனிவரும் காலங்களில் பொலிஸ் திணைக்கள உதவியுடன் வீடியோ ஒளிப்பதிவு செய்யப்படவுள்ளனர்.அதற்கென பொலிஸ் திணைக்களத்தில் விசேட வீடியோ ஒளிப்பதிவாளர்கள் அணியொன்றை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்களின் எதிரொலியாகவே அரசாங்கம் பிரஸ்தாப தீர்மானத்தை எடுத்துள்ளது. அதே நேரம் கட்டுநாயக்கவில் பொலிசார் மீது தாக்குதலை மேற்கொண்டவர்கள் சிலர் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.பெரும்பாலும் அவர்களுக்கெதிராக எதிர்வரும் நாட்களில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பாகிஸ்தான்-அமெரிக்க உளவுத்துறை இடையே தேக்க நிலை.
அமெரிக்க உளவுத்துறை(சி.ஐ.ஏ) மற்றும் பாகிஸ்தான் உளவுத்துறை(ஐ.எஸ்.ஐ) இடையேயான உறவில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுதொடர்பாக பாகிஸ்தானின் "டான்" நாளிதழ் செய்தியை மேற்கொள்காட்டி பி.டி.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
சி.ஐ.ஏ தலைவர் லியோன் பனெட்டா வெள்ளிக்கிழமை மாலை இஸ்லாமாபாத் வந்தார். பாகிஸ்தான் ராணுவத் தளபதி கயானி மற்றும் ஐ.எஸ்.ஐ தலைவர் அகமது சுஜா பாஷா ஆகிய இருவரையும் அவர் சந்தித்துப் பேசினார்.வெள்ளிக்கிழமை இரவு ராவல்பிண்டியில் உள்ள ராணுவ விருந்தினர் இல்லத்தில் அவர்கள் இருவரையும் லியோன் பனெட்டா சந்தித்துப் பேசினார். எதிர்காலத்தில் புலனாய்வு தகவல்களை பகிர்ந்து கொள்வது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி, பிரதமர் கிலானி ஆகியோரை சந்திக்காமலேயே சி.ஐ.ஏ தலைவர் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். பாகிஸ்தான் அதிகாரிகளுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தையில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளதையே இது காட்டுகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
கடலில் வீசப்பட்ட பின்லேடனின் உடலை தேடும் பணியில் அமெரிக்கர்.
வடக்கு அரபிக்கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையினர் அடக்கம் செய்த பின்லேடன் உடலை தேடி கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்காவின் புதையல் வேட்டைக்காரர் பில் வாரன் ஈடுபட்டுள்ளார்.அல்கொய்தா அமைப்பின் தலைவர் பின்லேடனை அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவு கமாண்டோக்கள் பாகிஸ்தானின் அபோதாபாத் பகுதியில் கடந்த 2ம் திகதி சுட்டுக் கொன்றனர்.
பின்லேடனின் உடல் ஹெலிகாப்டர் மூலம் அரபிக்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யு.எஸ்.எஸ் கார்ல் வின்சன் போர்க்கப்பலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு டி.என்.ஏ உள்பட எல்லா வித சோதனைகளையும் முடித்து பின்லேடனின் உடல் கடலில் அடக்கம் செய்ததாக அமெரிக்கா செய்தி வெளியிட்டது.இதுகுறித்து தகவல் வெளியிட்ட அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன்,"முஸ்லிம் மதப்படி எல்லாவித சடங்குகளும் செய்யப்பட்டு பின்லேடனின் உடல் அதிக எடையுள்ள பையில் வைத்து தட்டையான பலகையில் வைத்து கட்டப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டது" என கூறியது.
ஆதாரத்தை வெளியிடாமல் பின்லேடன் மரணம் பற்றி அமெரிக்க அதிபர் ஒபாமா வாய்மொழியாக தகவல் தெரிவித்தது அமெரிக்கர்கள் பலருக்கு உடன்பாடு இல்லை. இத்தகவல் வெளியானவுடன் அரபிக் கடல் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தி, ஒபாமாவின் உடலை கண்டுபிடிக்க வேண்டும் என முடிவு செய்தார் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த புதையல் வேட்டைக்காரர் பில் வாரன்.கடலில் மூழ்கிய கப்பல்கள் பலவற்றை இவர் கண்டுபிடித்துள்ளார். கடலில் தேடும் தொழிலை வர்த்தக ரீதியாக 1972ம் ஆண்டு முதல் பில் வாரன் செய்து வருகிறார்.
இதுகுறித்து பில் வாரன் கூறியதாவது: அமெரிக்கர்கள் தேசபக்தியுடைவர்கள். பின்லேடனை கொன்று புதைத்து விட்டோம் என்பதை ஆதாரத்துடன் நிருபிக்க அதிபர் ஒபாமா தவறிவிட்டார் என நினைக்கிறோம். ஒபாமா அரசை நான் நம்பவில்லை. அதனால் பின்லேடன் உடலை தேடும் பணியில் ஈடுபடுகிறோம்.வடக்கு அரபிக்கடல் பகுதியில் பின்லேடனை புதைத்தாக கூறப்பட்டுள்ளது. மற்ற எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. அதிநவீன சாதனங்கள், படகுகளுடன் பின்லேடன் உடலை தேடும் பணியில் ஈடுபடுகிறேன். எங்கள் குழு பின்லேடன் உடலை கண்டுபிடிக்கும் என நம்புகிறேன். இதற்கு கோடிக்கணக்கில் பணம் செலவாகும்.
மிகப் பழமையான பிரமிடை பாதுகாக்க புதிய தொழில்நுட்பம் அறிமுகம்.
எகிப்தில் நிலநடுக்கத்தால் சீர் குலைந்த தொன்மையான பிரமிடு ஒன்றை நவீன தொழில்நுட்பம் மூலம் மேலும் சிதையாமல் பாதுகாக்கும் பணியில் புகழ்பெற்ற பொறியியல் நிறுவனம் ஒன்று ஈடுபட்டுள்ளது.
எகிப்தில் உள்ள பழமையான பிரமிடுகளில் கி.மு.2700களில் கட்டப்பட்ட படிக்கட்டு வடிவில் அமைந்த "ட்ஜோசர்" பிரமிடு முக்கியமானது. இது தலைநகர் கெய்ரோவின் தென்மேற்குப் பகுதியில் சக்காரா என்ற இடத்தில் அமைந்துள்ளது.இது 1992ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சீர் குலைந்து போனது. சுட்ட செங்கற்களால் ஆனதால் நிலநடுக்கத்தில் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. அதன் பின் இதைச் சீரமைக்கும் பணியில் எகிப்து அரசு முனைந்தது. இனி ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டால் இந்தப் பிரமிடு முற்றிலும் குலைந்து விடும் என்பதால் இதைப் பாதுகாக்கப் பல்வேறு வழிமுறைகள் ஆராயப்பட்டன.
பிரிட்டனின் சவுத்வேல்ஸ் பகுதியில் இயங்கி வரும் சர்வதேச நிறுவனமான "சின்டெக்" இந்தப் பிரமிடைப் பாதுகாக்கப் புதிய வழிமுறையைக் கண்டறிந்துள்ளது. கார்களில் விபத்து ஏற்படும் போது ஓட்டுனர் முன்புள்ள ஸ்டீரிங்கில் இருந்து காற்றுப் பை ஒன்று வெளிவந்து அவரைப் பாதுகாக்கும்.இதே போன்ற வழிமுறையைத் தான் இந்நிறுவனம் பிரமிடைப் பாதுகாக்கவும் பயன்படுத்துகிறது. பிரமிடின் உள்பக்கம் குலைந்து போன பகுதிகளில் இரும்புத் தூண்கள் மூலம் மேடை அமைக்கப்பட்டு அதன் மீது காற்றடைக்கப்பட்ட பிரமாண்ட பைகள் பொருத்தப்படுகின்றன.
இந்தப் பைகள் தமக்கு மேலே உள்ள கட்டடப்பகுதிகளைத் தாங்கிக் கொண்டிருக்கும். நிலநடுக்கத்தின் போது கட்டடத்தின் மேல் பகுதி கீழே விழாமல் இந்தப் பைகள் அதிர்ச்சி தாங்கிகளாகச் செயல்படும்.இந்த நவீன தொழில்நுட்பம் மூலம் மேலும் பல பிரமிடுகளைப் பாதுகாக்க முடியும் என்று இந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ட்ஜோசர் பிரமிடின் ஒரு பகுதியில் தற்போது ஆறு காற்றுப் பைகளும், கூரைகளை 11 காற்றுப் பைகளும் தாங்கும் விதத்தில் பொருத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க தூதரகங்களில் குண்டு வைத்த அல்கொய்தா தலைவர் சோமாலியாவில் சுட்டுக்கொலை.
ஆப்பிரிக்காவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் குண்டு வைத்த அல்கொய்தா தீவிரவாத தலைவர் பசுல் அப்துல்லா முகமது சோமாலியாவின் சோதனைச்சாவடியில் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.அவர் இந்த வாரத் துவக்கத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் 1988ம் ஆண்டு கென்யாவின் நைரோபி மற்றும் தான்சானியாவின் எஸ் சலாம் அமெரிக்க தூதரகங்களில் குண்டு வைத்தவர் ஆவார்.கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க தூதரகங்களில் குண்டு வைத்த பசுல் அப்துல்லா முகமது ஆப்பிரிக்காவில் அதி தீவிரமாக தேடப்பட்டு வரும் பயங்கர தீவிரவாதி ஆவார்.
அவர் சோமாலியாவின் மொகா திசு நகரில் இந்த வாரத் துவக்கத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்ட விவரத்தை தேசிய பாதுகாப்பு அதிகாரி ஹலிமா ஆடன் உறுதிப்படுத்தினார்.கிழக்கு ஆப்பிரிக்காவில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் மிக முக்கிய தலைவராக பசுல் அப்துல்லா முகமது இருந்தார். அவர் தனது தாக்குதல் நடவடிக்கைகளை சோமாலியாவில் இருந்து மேற்கொண்டு வந்தார்.
கடந்த 1991ம் ஆண்டு முகமது சியாட் பாரே பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். அதனைத் தொடர்ந்து சோமாலியாவில் ஸ்திரமான அரசு நிலவவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட பசுல் அப்துல்லா முகமது தனது தாக்குதல் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தார்.5 மொழிகளை பேசும் அப்துல்லாவை பிடித்துக் கொடுப்பவர்களுக்கு அமெரிக்கா 50 லட்சம் டொலர் பரிசுத் தொகை அறிவித்து இருந்தது. அவர் தூதரகங்களில் நடத்திய தாக்குதல்களில் 240 பேர் இறந்தனர். 5 ஆயிரம் பேர் காயம் அடைந்தார்கள்.
ஜேர்மனியில் இ.கோலி பக்டீரியா பரப்பிய பண்ணை மீது கிரிமினல் வழக்கு.
ஜேர்மனியில் இ.கோலி என்ற பயங்கர பக்டீரியா பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நுண் உயிரி தாக்குதலால் இதுவரை ஜேர்மனியில் 32 பேர் இறந்துள்ளனர்.இ.கோலி பக்டீரியா நுண் உயிரி மரபணு மாற்றம் காரணமாக மிகுந்த நச்சு மிக்கதாக உருவெடுத்துள்ளது. இந்த பக்டீரியா வெள்ளரிக்காயில் இருந்து பரவலாக வந்துள்ளது என கூறப்பட்டது.
மேலும் தக்காளியிலும் இவை பரவலாம் என கருதியதால் அந்த காய்கறியை பச்சையாக சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சாக்சோனி மாகாணத்தில் இ.கோலி பக்டீரியா பரவலுக்கு காரணமான காய்கறிகளை உற்பத்தி செய்த பண்ணை மீது கிரிமினல் விசாரணை மேற்கொள்ளப்படுமா என கேள்வி வந்துள்ளது.இது குறித்து மாகாண வேளாண்துறை அமைச்சர் கெர்ட் லிண்டர்மான் சனிக்கிழமை ரய்ன் நகர் செய்ங்கிற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்ட பண்ணை நிறுவனம் எந்த தவறும் செய்ததாக தெரியவில்லை.
பென்பட்டல் கிராமத்தில் இயற்கை முறையில் உயரிய தரத்துடன் பயிர்கள் வளர்க்கப்பட்டுள்ளன. அந்த பண்ணையில் இருந்து தான் இ.கோலி பக்டீரியா வந்ததா என தெரியவில்லை என்றார்.இதற்கிடையே வழக்கறிஞர் சக்சோனி விவசாயிகள் சங்க தலைவர் வெர்னர் ஹில்சே நிர்வாகத்தினரை கடுமையாக விமர்சித்து உள்ளார். வழக்கறிஞர் சக்சோனியில் இ.கோலி பக்டீரியாவை பரப்பிய பண்ணை தற்போது மூடப்பட்டு உள்ளது.
அந்த பண்ணையின் காய்கறிகளை சாப்பிடவும் தடை உள்ளது என பொதுவாக நிர்வாகிகள் கூறியுள்ளனர். பக்டீரியா பரவலுக்கு காரணமாக இருந்த பண்ணை பெயர் பொது மக்களுக்கு தொடர்பு இல்லாததாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.கடந்த வெள்ளிக்கிழமை குறிப்பிட்ட பண்ணையில் இருந்து வந்த காய்கறியில் இ.கோலி பக்டீரியா தாக்கம் இருந்தது. இருப்பினும் இறுதி சரிபார்ப்பு நிலுவையிலேயே உள்ளது.
ஏர் கனடா ஊழியர்கள் வேலை நிறுத்த எச்சரிக்கை: நிர்வாகம் தவிப்பு.
ஏர் கனடா நிறுவனத்தில் புதிதாக தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துகிறது. தற்போது பணியில் உள்ள ஊழியர்கள் பெறும் பலன்களை விட இது மாறுபட்டதாக உள்ளது.இந்த வேறுபாட்டை களைய வேண்டும் என ஊழியர்கள் கடந்த 10 வாரங்களாக நிர்வாகத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சு வார்த்தை உரிய பலன் தராத நிலையில் ஏர் கனடா பணியாளர்கள் 72 மணி நேர வேலை நிறுத்த எச்சரிக்கை நோட்டீஸ் அளித்துள்ளனர்.
ஏர் கனடா பணியாளர்கள் மேற்கொள்ளும் வேலை நிறுத்தத்தால் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு உள்ளது.இது குறித்து ஏர் கனடா நிர்வாகம் தனது இணையத்தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,"தங்களது அனைத்து விமான சேவைகளும் வழக்கம் போல செயல்படும். தற்போது விமானத்தில் செல்வதற்கு மேற்கொண்ட பயணச்சீட்டு பதிவு வசதிகள் உரிய செயல்பாட்டில் இருக்கும். அதே போன்று வரவிருக்கும் நாட்களில் விமானப் பயணத்திற்கான பதிவுகள் தொடர்ந்து நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏர் கனடா ஊழியர்கள் முழுமையான தொழில் சார்பு உள்ளவர்கள். அவர்கள் தங்களது பணிகளை தொடர்ந்து மேற்கொள்வார்கள் என ஏர் கனடா விமான நிறுவன செய்தித் தொடரபாளர் பீட்டர் பிட்ஸ் பாட்ரிக் நம்பிக்கை தெரிவித்தார்.கனடா ஊழியர்கள் யூனியன் நிர்வாகி பாகப் செர்னகி மற்றும் பீட்டர் பிட்ஸ் பாட்ரிக் கூறுகையில்,"தங்களது அமைப்புகள் உரிய தீர்வு காண்பதற்கு தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது" என்றனர்.
இந்த வேலை நிறுத்த அறிவிப்புபடி செவ்வாய்க்கிழமை காலை 12.01 மணி முதல் 3800 வாடிக்கையாளர் சேவை ஏஜன்டுகள் தங்கள் பணி இடத்தை விட்டு வெளியேறுவார்கள். ஏர் கனடா ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பாதிப்பு ஏற்படும் என தொழிலாளர் துறை அமைச்சர் லிசா ரெய்டிப் தெரிவித்தார்.சேர்னகி கூறுகையில்,"பிரச்சனைக்கு தீர்வு காண 24 மணி நேரமும் செயல்பட்டு கொண்டு இருக்கிறோம். ஏர் கனடா வாடிக்கையாளரை இழக்க விரும்பவில்லை" என்றார். கனடா ஊழியர்கள் யூனியன் கடந்த வெள்ளிக்கிழமை வேலை நிறுத்த நோட்டீஸ் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
தாக்குதலுக்கு பயந்து 4 ஆயிரம் பேர் தப்பி ஓட்டம்: சிரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை.
சிரியா ராணுவம் நடத்தும் தாக்குதல்களில் மனிதம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உடனே அந்த தாக்குதல்களை நிறுத்துங்கள் என சிரியா அரசுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது.பொதுமக்கள் மீது நடத்தும் வன்முறைத் தாக்குதலை நிறுத்துவதற்காக அமெரிக்க வெள்ளை மாளிகை நிர்வாகப் பிரதிநிதிகள் லிபிய அரசாங்கத்தினருக்கு அழைப்பு விடுத்தனர்.
சிரியா அரசுக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்குவதற்கு சிரியா ராணுவம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. இதில் உயிர் பிழைக்க வடக்கு சிரியாப் பகுதியில் இருந்து 4 ஆயிரம் பேர் துருக்கிக்கு தப்பி ஓடி உள்ளனர். எல்லைப் பகுதியில் நிலைமை மிக மோசமாகவே உள்ளது என நிவாரண உதவியாளர்கள் தெரிவித்தனர்.
ராணுவம் நடத்தும் தாக்குதலில் ஏராளமான பொது மக்கள் காயம் அடைந்து உள்ளதால் உரிய மருத்துவ வசதிகள் இல்லாமல் தவிக்கின்றனர். குறிப்பாக பின்தங்கிய பகுதிகளில் போதிய மருத்துவமனைகள் வசதியும் இல்லை என ஐ.நா அகதி முகமையின் மான்ஸ் நைபெர்க் தெரிவித்தார்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வசதி தேவைப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் போர்வை, பாய், கூடுதல் கூடார வசதிகளும் தேவைப்படுகின்றன. வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகள் நடைபெற்ற போது சிரியாவில் நடைபெற்ற மோதல்களில் 32 பேர் இறந்தனர்.
வடக்கு சிரியாவில் சிரிய அரச நிர்வாகம் நடத்தும் தாக்குதலால் பெரும் மனித நெருக்கடிகள் ஏற்பட்டு உள்ளன என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்து உள்ளது.வடக்கு சிரியாப் பகுதியில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் நிவாரண உதவிகளை மேற்கொள்ள சிரிய அரச நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அமெரிக்கா கோரி உள்ளது.
கடல் எல்லை பிரச்சனை: சீனாவுக்கு வியட்நாம் அச்சுறுத்தல்.
வியட்நாம் அச்சுறுத்தலின் காரணமாக சீனா, வியட்நாம் மீது போர் நடவடிக்கையை உருவாக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.இரு நாடுகளுக்கி‌டை‌யே கடல் எல்லை பிரச்சினை காரணமாக தகராறு இருந்து வருகிறது. ‌சீன தெற்கு கடற்கரை பகுதியில் வசிக்கும் மீனவர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கையை சீன மேற்கொள்கிறது.நன்சா தீவுகளில் நீண்ட காலமாக‌வே சீனா தனது அதிகாரத்தை செலுத்தி வந்துள்ளது. இந்நிலையில் தற்போது முதன்முதலாக வியட்நாம் சீனாவுக்கு சவால் விடுகிறது.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின்‌ செய்தி தொடர்பாளர் கூறியத‌ாவது: வியட்நாம் கப்பல் கடந்த வியாழக்கிழமை சீன படகை மீன் பிடிக்க வி‌டாமல் துரத்தியதாகவும் அதுவும் சீன எல்லையின் வட்டத்திற்குள் மீன் பிடித்த போது துரத்தியதால் நாங்கள் எங்கள் மீனவர்களுக்கு பாதுகாப்பு அளி்க்க வேண்டிய நோக்கில் இப்பிரச்‌னையை பெரிதாகி விட்டதாக அவர் தெ‌ரிவித்தார்.
பாகிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு: 34 பேர் பலி.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள கைபர் சூப்பர் மார்க்கெட்டில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 34 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 100 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இவர்களில் 6 பேரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அந்த பகுதியில் மின்தடை காரணமாக மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இச்சம்பவம் குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்கள் போராட்டம் உருவாகாமல் தடுக்க தாராள சலுகைகளை அளிக்கும் மன்னர்.
துனிசியா, எகிப்து நாடுகளில் உருவானது போல சவுதி அரேபியாவிலும் புரட்சி உருவாகாமல் தடுக்க அரசு ஊழியர்களுக்கும், பொது மக்களுக்கும் பல்வேறு சலுகைகளை அந்நாட்டு மன்னர் அறிவித்துள்ளார்.இதற்காக ஆறு லட்சம் கோடி ரூபாய் வரை செலவிடவும் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக "நியூயார்க் டைம்ஸ்" பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது: துனிசியா மற்றும் எகிப்தில் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். இது போன்ற சூழ்நிலை தங்கள் நாட்டில் உருவாகி விடக்கூடாது என்பதில் சவுதி அரேபிய மன்னர் குடும்பத்தினர் உஷாராக உள்ளனர்.
அதனால் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இரண்டு மாதச் சம்பளம் கூடுதலாக வழங்க சவுதி மன்னர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார். மேலும் குறைவான வருவாய் பிரிவினருக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்காக 3 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார்.மத ரீதியான பொலிஸ் உட்பட மத நிறுவனங்களுக்காக 900 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது. மத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பை சவுதி அரேபிய அரசு கொண்டுள்ளது. அதுவும் மன்னர் குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க பெரிதும் துணை புரிகிறது. மொத்தத்தில் ஆறு லட்சம் கோடி ரூபாயை செலவிட மன்னர் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
அதே நேரத்தில் மன்னர் அப்துல்லாவின் தம்பியும், இளவரசருமான தலால் பின் அப்துல் அசீஸ் கூறியதாவது: மன்னர் தன் அதிகாரத்தையும், பணத்தையும், கவுரவத்தையும் பாதுகாத்துக் கொள்ள விரும்புகிறார். தற்போதைய நிலைமை நீடிக்க வேண்டும் என்றும் விரும்புகிறார். மாற்றம் என்ற வார்த்தையைக் கண்டு பயப்படுகிறார்.அதனால் பல சலுகைகளை அறிவித்துள்ளார். குறுகிய கண்ணோட்டம் கொண்ட அவர்களை எப்படி மாற்றுவது என்பது எனக்குத் தெரியவில்லை.கடந்த சில மாதங்களாகவே சவுதி மக்கள் மனதில் எழும் அதிருப்திக்கு விடையாக மன்னரின் தாராள சலுகைத் திட்டங்கள் தற்போது வெளிப்படையாக வந்துள்ளன.
சீனாவில் கனமழை: 50 பேர் பலி.
சீனாவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நான்கு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக திடீரென பெய்த பெருமழையில் சிக்கி இதுவரை 50 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவின் பெரிய நதியான யாங்த்ஸி ஆறு ஓடும் ஹூபேய், ஹூனான், ஜியாங்க்சி மற்றும் குயி ஷாவூ ஆகிய நான்கு மாகாணங்கள் கடந்த சில மாதங்களாக கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த நான்கு மாகாணங்களிலும் திடீரென பெருமழை பெய்து வருகிறது. ஹூபேய் மாகாணத்தில் மழையில் சிக்கி 25 பேர் பலியாகினர். 12 பேர் மாயமாயினர்.வெள்ள நீர் சூழ்ந்ததால் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 500 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். இம்மாகாணத்தில் மட்டும் மழையால் 600 கோடி ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.இம்மாகாணத்தின் ஷியான்னிங் நகரின் டாங்செங் பகுதியில் கடந்த 200 ஆண்டுகளுக்குப் பின் நேற்று நான்கு மணி நேரத்தில் 300 மி.மீ அளவு மழை கொட்டித் தீர்த்துள்ளது. நகரின் பெரும் பகுதிகள் நீரில் மூழ்கின. போக்குவரத்து, மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டன. ஹூனான் மாகாணத்தில் மழைக்கு 19 பேர் பலியாகினர். 28 பேர் மாயமாயினர்.
இரு நகரங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஜியாங்க்சி மாகாணத்தின் ஷின்சூயி பகுதியில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட 1,200 பேர் மீட்கப்பட்டனர். அப்பகுதியைச் சேர்ந்த 29 ஆயிரத்து 500 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.இப்பகுதியில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் நிலச்சரிவில் சிக்கி பலியாகினர். குயி ஷாவூ மாகாணத்திலும் மழைக்கு மூன்று பேர் பலியாகினர். மொத்தம் 50 பேர் வரை மழைக்கு பலியாகியிருக்கக் கூடும் அல்லது காணாமல் போயிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF