Sunday, June 5, 2011

இன்றைய செய்திகள்.

ஜெயலலிதாவுடன் மிலிந்த மொறகொட சந்திப்பு � சந்திரபாபு நாயுடு மூலம் நட்புறவுக்கு சிறிலங்கா முயற்சி - புதுடெல்லி சென்ற கோத்தாபயவும் ஏமாற்றத்துடனே திரும்பினார்.

சிறிலங்கா தொடர்பாக இந்தியா உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதற்கு தடையாக உள்ள தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுடன் உறவுகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன் ஒருகட்டமாக சிறிலங்கா அதிபரின் மூத்த ஆலோசகராக அண்மையில் நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழ்நாடு முதல்வருக்கு நெருக்கமான ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மூலமாகவே ஜெயலலிதாவை மிலிந்த மொறகொட சந்தித்துப் பேசியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை தனக்கு நெருக்கமான வர்த்தகப்புள்ளி ஒருவருடன் சிறப்பு ஜெட் விமானம் ஒன்றில் மிலிந்த மொறகொட ஹைதராபாத் சென்றிருந்தார்.

இது அவரது முறைப்படியான பயணமாக இல்லாத போதும், சந்திரபாபு நாயுடு ஊடாக சிறிலங்கா அரசுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்துவதே இந்தப் பயணத்தின் நோக்கமாகும். இந்திய அரசியலில் ஜெயலலிதா முக்கியமான ஒருவராக மாறுவார் என்று சிறிலங்கா கருதுவதால், அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்த சிறிலங்கா முயற்சித்து வருகிறது.

மிலிந்த மொறகொடவின் அதிகாரபூர்வமற்ற இந்தப் பயணத்தின் போது தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்துள்ளதாகவும் கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இது மிலிந்த மொறகொடவின் அதிகாரபூர்வமற்ற பயணம் என்பதால், இந்தத் தகவலை சிறிலங்கா அரசோ அல்லது தமிழ்நாடு அரசோ உறுதி செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரகசியமாக புதுடெல்லி சென்ற கோத்தாபயவும் ஏமாற்றத்துடனே திரும்பினார்.ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாவதற்கு முன்னர் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும் புதுடெல்லிக்குச் சென்று இந்திய அதிகாரிகளைச் சந்தித்துள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசின் இந்தியப் பயணம் எதிர்பார்த்த வெற்றியைத் தராத நிலையில், கடந்தமாதம் 26ம் நாள் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பசில் ராஜபக்ச புதுடெல்லி சென்றிருந்தார்.

இந்தியாவின் இறுக்கமான நிலைப்பாட்டைத் தளர்த்தி சுமுகமாக்கும் முயற்சியில் ஈடுபட இவர் எத்தனித்த போதும், இந்தியத் தரப்பு தமது கடும் போக்கில் இருந்து இறங்கி வரவில்லை. இதனால் பசில் ராஜபக்ச புதுடெல்லியில் இருந்து உடனடியாகவே கொழும்பு திரும்பினார்.இந்தநிலையிலேயே கோத்தாபய ராஜபக்சவும் தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் இந்திய அரசின் நிலைப்பாட்டை தளர்த்தும் முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது.

கடந்தமாத இறுதி வாரத்தில் இவர் புதுடெல்லி சென்றிருந்தார். இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தாவின் மகளின் திருமணத்துக்காகவே கோத்தாபய ராஜபக்ச புதுடெல்லி சென்றதாக கூறப்படுகின்ற போதும், அவரது பயணத்தின் பிரதான நோக்கம் இந்திய இராஜதந்திரிகளைச் சந்திப்பதேயாகும்.

இந்தியாவின் நிலைப்பாட்டை நெகிழ்வுபடுத்தும் வகையில், கோத்தாபய ராஜபக்ச இந்திய இராஜதந்திரிகள் பலரையும் சந்தித்துப் பேசியுள்ளார். ஆனால் இவரால் இந்திய உயர்மட்டத் தலைவர்களை சந்திக்க முடியவில்லை. அதேவேளை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு கூறப்பட்ட அதே விடயங்களையே கோத்தாபயவுக்கும் இந்திய இராஜதந்திரிகள் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா அழுத்தம் கொடுத்தாலும் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு இல்லை! அரசாங்கம் திட்டவட்டம்.

இந்திய அரசாங்கத்தின் வலியுறுத்தலின் அடிப்படையில், வடக்கு,கிழக்கு தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வை வழங்கும் வகையில் கொண்டு வரவிருந்த சட்டமூலத்தை இலங்கை அரசாங்கம் திரும்பப்பெற்றுக்கொண்டது.இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் அரசியலமைப்பின் 20 வது சட்டத்திருத்தத்தை இலங்கை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருந்தது. எனினும் அதனை தற்போது இலங்கை அரசாங்கம் சமர்ப்பிக்கப் போவதில்லை என்று தீர்மானித்துளளதாக லங்காதீப செய்திதாள் தெரிவித்துள்ளது.
தனியார் ஓய்வூதிய திட்டத்துக்கு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் காட்டப்பட்ட எதிர்ப்பைப் போன்று இந்த அரசியலமைப்பு சீர்திருத்தத்துக்கும் எதிர்ப்பு ஏற்படலாம் என்ற காரணத்தினால் அதனை திரும்பப்பெற்றுக்கொண்டதாக இலங்கை அரசாங்கத் தரப்பு தெரிவித்தது.அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டமொன்றை முன்வைப்பதனால் பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்தும் எதிர்ப்புகள் ஏற்படும். இந்தநிலையில் இந்தியா எவ்வாறான அழுத்தங்களை பிரயோகித்தாலும் தற்போதைக்கு அதிகாரப் பகிர்வு குறித்த சட்ட மூலங்களை சமர்ப்பிப்பதில்லை என்று இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் பிரதம நீதியரசரின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு வரையறுக்கும் நோக்கில் முன்வைக்கப்படவிருந்த 19ம் திருத்தச் சட்ட மூலமும் திரும்பப்பெற்றுககொள்ளப்பட்டுள்ளது.தமக்கு சாதகமான அடிப்படையில் பிரதம நீதியரசராக ஷிரானி பண்டாரநாயக்கவை நியமித்த நிலையிலேயே அந்த 19 ஆம் அரசியல் அமைப்பு சீர்திருத்தமும் மீள்ப்பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது. 
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸின் பதவி பறிபோகும் நிலையில்?
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவரது பதவியில் இருந்து விரைவில் வெளியேற்றப்படுவார் என்று கொழும்பு ராஜதந்திர வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.இந்தியாவுக்கு கடந்த மாதம் அவர் மேற்கொண்டிருந்த பயணம் தோல்வியில் முடிந்ததை அடுத்து ஜனாதிபதி அவர் மீது கடும் சீற்றம் கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
அமைச்சர் பீரிஸின் இந்தியப் பயணத்தின் இறுதியில் இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், "நேர்மையான நல்லிணக்கத்துக்கு இலங்கை அரசு தயார்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுவரை எந்த ஓர் அரச அறிக்கையிலும் "நேர்மையான நல்லிணக்கம்' என்ற பதம் பாவிக்கவில்லை என்று சுட்டிக்காட்டும் ராஜதந்திர வட்டாரங்கள், அப்படி ஒரு பதம் பயன்படுத்தப்பட பீரிஸ் எப்படி அனுமதித்தார் என்று ஜனாதிபதி ஏனைய அமைச்சர்களிடம் சீறினார் என்கின்றன.அமைச்சர் பீரிஸ் தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ளார். அவர் நாடு திரும்பியதும், வெளிவிவகார அமைச்சர் பதவியிலிருந்து நீக்க ஜனாதிபதி முடிவு செய்திருக்கிறார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.அதேவேளை, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க புதிய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியில் அரசாங்கம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதாவுடன் இராஜதந்திர மற்றும் தனிப்பட்ட நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய நாடுகள் நிபுணர்குழு அறிக்கை தொடர்பாக இலங்கைக்கு ஆதரவான  உறுதியான நிலைப்பாட்டை  இந்தியா எடுப்பதற்கு தடையாக உள்ள தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் என்ற இலக்கை அரசாங்கம் அடைந்து கொள்ள முயற்சிக்கின்றது.ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக அண்மையில் நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட உத்தியோகபூர்வமற்ற முறையில் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு முதல்வருக்கு நெருக்கமான வேறொரு மாநிலத்தின் முன்னாள் முதலமைசச்சர் ஒருவர் மூலமாகவே ஜெயலலிதாவை மிலிந்த மொறகொட சந்தித்துப் பேசியுள்ளார்.இந்திய அரசியலில் ஜெயலலிதா முக்கியமான ஒருவராக மாறுவார் என்று சிறிலங்கா கருதுவதாலேயே அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக அரசாங்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
ஜெர்மனிய தூதுவர் ஜென்ஸ் புளொட்னர் இராஜதந்திர விதிமுறைகளை மீறிச் செயற்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய கடுப்பு.
இலங்கைக்கான ஜெர்மனிய தூதுவர் ஜென்ஸ் புளொட்னர் இராஜதந்திர விதிமுறைகளை மீறிச் செயற்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ பதில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கட்டுநாயக்கவில் சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீது சிறிலங்கா காவல்துறை நடத்திய தாக்குதலைக் கண்டித்து கடும்தொனியில் எச்சரிக்கை விடுக்கும் இரண்டு பக்கக் கடிதம் ஒன்றை ஜேர்மனித் தூதுவர் ஜென்ஸ் புளொட்னர் சிறிலங்கா பாதுகாப்பு செயலருக்கு அனுப்பியிருந்தார்.
இவ்வாறான சம்பவங்களினால் எதிர்காலத்தில் ஜெர்மனியர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு தயங்குவார்கள் என ஜெர்மனிய தூதுவர் இரண்டு பக்க கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.அக்கடிதம் தொடர்பாகவே பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன் ஜெர்மனிய தூதுவரை உடனடியாக பாதுகாப்பு அமைச்சுக்கு அழைத்து எச்சரித்துள்ளார்.
கட்டுநாயக்க சம்பவம் தொடர்பில் எதிர்ப்பை வெளியிட வேண்டுமாயின் வெளிவிவகார அமைச்சிற்கே எதிர்ப்பை வெளியிட்டிருக்க வேண்டுமெனவும், பாதுகாப்பு அமைச்சுக்கு எழுதியிருக்கக் கூடாது என்றும் அவர் அழுத்திக் கூறியுள்ளார். அதைவிடுத்து தனக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியதன் மூலம் இராஜதந்திர வழி முறையை ஜொ்மனியத் தூதுவர் மீறியுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கண்டித்துள்ளார்மேலும் அத்துடன் ஜேர்மனித் தூதுவர் இந்தச் சம்பவத்தில் விசேட அதிரடிப்படையினரும் தொடர்புபட்டிருந்ததாக கூறியுள்ள குற்றச்சாட்டையும் கோத்தாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.  விசேட அதிரடிப்படையினர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்டுநாயக்க சம்பவத்துடன் தொடர்புபடவில்லை என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் உள்ளிட்ட 25 பொலிசார் இந்தச் சம்பவத்தில் எப்படிக் காயமடைந்தனர் என்பதையும் ஜெர்மனித் தூதுவர் கவனிக்க மறந்து விட்டதாகவும் அவர் கடிந்து கொண்டுள்ளார்.இதேவேளை கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய சம்பவம் குறித்து வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் மன்னிப்பு கோருவதாக ஜெர்மனிய தூதுவர் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா காங்கிரஸின் பிரேரணைக்கு இலங்கை எதிர்ப்பு! போர்க்குற்ற விசாரணைக்கு தயாராகிறது.
இலங்கை தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் மைக்கல் கிரிம் (Michael Grimm) கொண்டு வந்த பிரேரணைக்கு, காங்கிரஸின் சில உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிடுவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மார்ச் 17 ஆம் திகதியன்று, காங்கிரஸின் நியூயோர்க் 13 ம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மைக்கல் கிரிம் இலங்கையின் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்தார்.இந்த பிரேரணை, இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் அமரிக்காவின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் முரண்பாடுகளை கொண்டிருப்பதாக சில காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த வாரம், சட்டவிரோத கொலைகள் மற்றும் சித்திரவதைகளுக்கான பிரதிநிதி கிறிஸடோவ் ஹெய்ன்ஸ். சனல் 4 தொலைக்காட்சி ஒளிப்பரப்பிய இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான காட்சிகள் உண்மையானவை என்று நிரூபித்திருப்பது, பிரச்சினைக்கு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்தே சில குறிப்பிட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில், விசாரணை நடத்தப்படலாம் என்று இலங்கையின் இராணுவத்தளபதி ஜெகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.சர்வதேச அழுத்தமே இலங்கை அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டுக்கு காரணம் என்றும் கருதப்படுகிறது.
போராட்டங்களை தடுப்பதற்கு இராணுவத்தினரை ஈடுபடுத்த அரசாங்கம் திட்டம்.
எதிர்வரும் காலங்களில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை தடுப்பதற்கு இராணுவத்தினரை ஈடுபடுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மோதல் சம்பவத்தில் பொலிஸார் பல்வேறு தவறுகளை இழைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனவே எதிர்வரும் காலங்களில் கலகங்களை தடுப்பதற்கு பொலிஸாரை ஈடுபடுத்தும் உத்தேசம் கிடையாது எனவும், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களைத் தடுப்பதற்கு இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.கட்டுநாயக்கவை அண்டிய முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தின் பாதுகாப்பும் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சம்பவத்தின் காரணமாக ஊழியர்கள் காவல்துறையினர் மீது கோபம் கொண்டுள்ளதாகவும், மீளவும் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்துவது பிரச்சினைகளை தோற்றுவிக்கும் எனவும் அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை, பொலிஸாருக்கு ஒழுக்கம் தொடர்பான வழிகாட்டல்கள் வழங்கப்படவுள்ளன. முரண்பாடான நிலைமைகளின் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் பொலிஸாருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பின்லேடன், இலியாஸ் கொலையைத் தொடர்ந்து பாகிஸ்தானில் அதிகரிக்கும் தீவிரவாத சம்பவங்கள்.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பேருந்து நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர்.பின்லேடன் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் பரவலாக தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் சமீபத்தில் பாகிஸ்தான்-ஆப்கன் எல்லைப் பகுதியில் அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் அல் காய்தா முக்கிய நிர்வாகி இலியாஸ் காஷ்மீரி என்பவரும் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
பெஷாவருக்கு தெற்கே 12 மைல்கள் தொலைவில் உள்ள மடானி பகுதி பஜார் ஒன்றில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் நடக்கும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுக்கு பாகிஸ்தான் தலிபான் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலையும் அந்த அமைப்பே நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இலியாஸ் கொல்லப்பட்டது தொடர்பாக உறுதியான தகவல் எதுவும் இல்லை: இந்தியா.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டதன் பின்னணியில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் இலியாஸ் காஷ்மீரி.இவர் பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டாரா என்பது குறித்து உறுதியான தகவல் கிடைக்கவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.
மும்பை தாக்குதல் சதிகாரரும், இந்திய அரசால் நீண்டகாலம் தேடப்பட்டு வருபவருமான காஷ்மீரி அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக வெளியான செய்திகளை உறுதிப்படுத்திக்கொள்ள மத்திய அரசு பல்வேறு நட்பு நாடுகளைத் தொடர்புகொண்டு கேட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.பல்வேறு வட்டாரங்களில் இருந்து அந்த செய்திகளை உறுதிப்படுத்த இந்திய அமைப்புகள் முயற்சித்து வருகின்றன. ஓரிரு தினங்களில் காஷ்மீரி குறித்து உறுதியான தகவல் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னாள் பாகிஸ்தான் ராணுவ கமாண்டோவான காஷ்மீரியின் தலைக்கு அமெரிக்க அரசு 5 மில்லியன் டொலர் நிர்ணயம் செய்திருந்தது. அவர் தெற்கு வாஜிரிஸ்தானில் உள்ள ஒரு வளாகத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாயின.அவரது ஹர்கத் உல் ஜிகாத் அல் இஸ்லாமி அமைப்பு அவரது மரணத்தை உறுதி செய்து இஸ்லாமாபாதில் தொலைக்காட்சி அலுவலகங்களுக்கு ஃபேக்ஸ் மூலம் செய்தி அனுப்பியது.
தந்தையின் நினைவாக 100 வயது வரை வங்கிக் கணக்கை தொடரும் பாட்டி.
ஜப்பானில் உள்ள ஓகியோ என்ற இடத்தை சேர்ந்தவர் ஜுன்கிரேக். தற்போது அவருக்கு 100 வயது ஆகிறது. இந்த வயதிலும் அவர் தெற்கு ஒகியோவில் உள்ள ஒரு வங்கியில் கணக்கு வைத்துள்ளார்.
கடந்த 1913ம் ஆண்டு முதல் இவரது பெயரில் வங்கி கணக்கு உள்ளது. 1 1/2 வயது குழந்தையாக இருந்த போது இவரது தந்தை கில்பர்ட் அவருக்கு இந்த வங்கி கணக்கை தொடங்கி வைத்தார்.முதலில் அவரது பெயரில் ரூ. 300 டெபாசிட் செய்தார். அன்று முதல் இவரது பெயரில் இங்கு வங்கி கணக்கு தொடர்கிறது. இதை ஒரு மிகப்பெரும் சாதனையாக வங்கி நிர்வாகம் கருதுகிறது.
இந்த தள்ளாத வயதிலும் தனது வங்கி கணக்கை தொடரும் ஜுன் கிரேக் கூறியதாவது: விவசாயியான எனது தந்தை இந்த வங்கியின் வாடிக்கையாளராக இருந்தார். குழந்தை பருவத்திலேயே எனக்கு அவர் சேமிப்பு பழக்கத்தை கற்றுக் கொடுத்தார். தற்போது அது எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
லிபியாவிற்கு பிரிட்டன் அமைச்சரின் திடீர் பயணம்.
42 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி செய்து வரும் கர்னல் கடாபிக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதால் நேட்டோ படைகள் களத்தில் இறங்கி உள்ளன.அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளை சேர்ந்த துருப்புகள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக லிபிய ராணுவத்தை எதிர்க்கின்றன. தற்போது நேட்டோ படைகள் தலைநகர் திரிபோலியில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளார்கள்.
திரிபோலியில் 6 வெடிகுண்டு தாக்குதல் சத்தம் கேட்டது. இந்த நிலையில் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹாக் போராட்டக்காரர்களின் மையப்பகுதியான பெங்காசிக்கு திடீரென சென்றார். அங்கு போராட்டக்குழு தலைவர்களை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.பிரிட்டிஷ் நேரம் மாலை 5 மணி அளவில் திரிபோலியில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. லிபியாவில் பிரிட்டனின் அபேச்சே ஹெலிகொப்டர்கள் களத்தில் இறங்கிய மறுநாளே இந்த பயங்கர வெடிகுண்டுகள் திரிபோலியில் விழுந்தன.
வெள்ளிக்கிழமை இரவு எண்ணெய் நகரமான பிரகாவில் நடந்த வான்வழித் தாக்குதலில் 2 குண்டுகள் வெடித்தன. இதற்கிடையே பிரிட்டன் அமைச்சர் ஹாக் அறிவிக்கப்படாத லிபியா பயணத்தை மேற்கொண்டு லிபியாவின் கிழக்குப்பகுதியல் உள்ள போராட்டக்காரர்களின் பெங்காசிக்கு வந்தார்.இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் டுவிட்டரில் எழுதுகையில்,"போராட்டக்காரர்கள் சுதந்திரத்திற்காக போராடுகிறார்கள்" என்றார். ஹாக் லிபியாவில் இடைக்கால தேசிய மாற்றக் கவுன்சில் தலைவர் அப்துல் ஜலீலுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
சிலியில் எரிமலை வெடிப்பு: ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்.
தெற்கு சிலியில் உள்ள புயே யுயே எரிமலையில் தொடர்ந்து வெடிப்பு ஏற்பட்டது. இந்த வெடிப்பை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டார்கள்.புயே யுயெ பகுதி எரிமலையில் இருந்து பெருமளவு புகை மண்டலம் ஏற்பட்டது. சிலி தலைநகர் சாண்டியகோவிற்கு 800 கிலோ மீற்றர்(500மைல்) தொலைவில் இந்த எரிமலை சீற்றம் காணப்பட்டது.
எரிமலையில் சீறி பாய்ந்த சாம்பல் கந்தக வாடையுடன் காணப்பட்டது என்றும் நேரில் பார்த்தவர்கள் கூறினார்கள். எரிமலை வெடிப்பு ஏற்படுவதற்கு முன்பாக சிறிய நிலநடுக்கமும் காணப்பட்டது என அவர்கள் கூறினார்கள்.அந்தப்பகுதியில் அதிக பட்ச எச்சரிக்கை அளவு விடுக்கப்பட்டது. 3500 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது. அவர்கள் தற்காலிக புகலிடங்களில் தங்க வைக்கப்பட்டார்கள்.
இந்த பயங்கர எரிமலை வெடிப்பு தொடர்பாக இதுவரை காயம் அடைந்தவர்கள் பற்றிய தகவல் வரவில்லை. இருப்பினும் அருகாமையில் உள்ள அர்ஜென்டினா பகுதி மக்கள் பாதுகாப்பாக வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டார்கள்.1960ஆம் ஆண்டிற்கு பின்னர் இது போன்று இங்கு எரிமலை வெடிப்பு தொடர்ந்து ஏற்படுவது இதுவே முதல் முறையாகும்.




வங்கியில் வெடிகுண்டு வைத்ததாக புரளி: வங்கி ஊழியர் உட்பட 3 பேர் கைது.
பிரிட்டனின் வாட்போர்டு பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் கடந்த வியாழக்கிழமை வெடிகுண்டு வைக்கப்பட்டதாக புரளி ஏற்பட்டது. இந்த புரளி காரணமாக அந்த பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.இந்த சூழ்நிலையில் பொலிசார் திரண்டு சாலைகளில் போக்குவரத்தை நிறுத்தினர். வங்கி பகுதியிலும் தீவிரமான சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த நேரத்தில் அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது இந்த வெடிகுண்டு புரளியை ஏற்படுத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் முகமது காசிம் சலாம், வேலை இல்லா இளைஞர் இம்ரான் லீபா மற்றும் பைசான் ரகுமான் ஆகிய 3 பேரை பொலிசார் கைது செய்தார்கள்.அவர்கள் வங்கியில் வெடிகுண்டு இருப்பதாக புரளி ஏற்படுத்தி கூட்டம் இல்லாத தருணத்தில் கொள்ளை அடிக்க திட்டமிட்ட விடயம் வெளிச்சத்திற்கு வந்தது. வெடிகுண்டு புரளி குற்றச்சாட்டில் தொடர்புடைய நபர்கள் 23 வயது உடையவர்கள். அவர்கள் லுடன் பகுதியை சார்ந்தவர்கள் ஆவார்கள்.
கிரவுன் விசாரணை பிரிவைச் சேர்ந்த அட்ரியன் ரொபர்ட்ஸ் கூறியதாவது: ஹெர்ட்போர்டுஷயர் பொலிஸ் பிரிவுடன் இணைந்து விசாரணை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உரிய ஆதாரங்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.பொது மக்களும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு விருப்பம் கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட நபர்கள் பொலிஸ் காவலில் உள்ளனர். அவர்கள் ஜூன் 6ம் திகதி திங்கட்கிழமை ஹாட்பீல்ட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.
ஒபாமாவின் கடவுச்சீட்டை புகைப்படம் எடுத்த அதிகாரி பதவி நீக்கம்.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கடவுச்சீட்டுக்கு புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்த பிரான்ஸ் பிராந்திய சுங்க இலாகா தலைவரை பிரான்ஸ் அரச நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.பிரான்ஸ் அதிகாரி மேற்கொண்ட இந்த நடவடிக்கை அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. அமெரிக்க உளவுத்துறையினர் கடுமையான அதிருப்தி அடைந்தனர்.
இது குறித்து பிரான்ஸ் நிர்வாகத்திடமும் புகார் செய்தார்கள். பிரான்சில் உள்ள வாசஸ்தலமான டெயுவிலே பகுதியில் வளர்ந்த 8 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரிட்டனில் இருந்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கடந்த மாதம் பிரான்ஸ் வந்தார்.அப்போது அவரது கடவுச்சீட்டு சுங்க இலாகா பார்வையின் பரிசீலனைக்ககு வந்தது. அந்த கடவுச்சீட்டை பார்வையிட்ட பிரான்ஸ் பிராந்திய தலைவர் ஒபாமாவின் கடவுச்சீட்டுடன் புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்தார்.
பராக் ஒபாமாவின் கடவுச்சீட்டு அனைத்து தரப்பினரும் பார்வையிடும் வகையில் வருவது பாதுகாப்புக்கு உகந்தது அல்ல என அமெரிக்க உளவுத்துறையினர் கடுமையாக கண்டித்தனர்.பராக் ஒபாமா கடவுச்சீட்டை வெளியில் தெரியும்படி புகைப்படம் எடுத்த வடக்கு பிரான்சின் பிராந்திய தலைவர் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.கடந்த மே மாதம் 26ம் திகதி டெயுவிலே செய்ன்ட் விமான நிலையத்திற்கு ஒபாமா வந்த போது அவரது கடவுச்சீ்ட்டை பார்வையிட்ட போது அதனை படம் பிடித்தார்.
அல்பெர்டாவில் விமான விபத்து: இருவர் பலி.
மத்திய அல்பெர்டா பகுதியில் சனிக்கிழமை சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.பிரிட்டிஷ் கொலம்பியாவின் வெர்மான் பகுதியில் இருந்து 4 இருக்கை கொண்ட மூனே எம் 20 விமானம் ஆல்டாவில் உள்ள கிலம் பகுதியை நோக்கி வந்தது.அப்போது இந்த விமானம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு திடீரென மாயமானதாக தெரிவிக்கப்பட்டது என போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜான் கூறினார்.
ஆர்.சி.எம்.பி பொலிசார் சனிக்கிழமை அதிகாலை பாஷா பகுதி அருகே 4 மணி நேரம் தேடுதல் பணியை மேற்கொண்டார்கள். அப்போது சிறிய விமானம் விவசாய நிலத்தில் நொறுங்கி கிடப்பது தெரியவந்தது.விபத்துக்கு உள்ளான விமானத்தில் இருந்து கருகிய புகை வாடை வந்து கொண்டு இருந்தத்தை தொடர்ந்து தேடுதல் குழுவினர் அந்த விமானத்தை கண்டுபிடிக்க முடிந்தது என சார்ஜன்ட் ஜெப் பக்சி கூறினார்.
விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். அவர்களின் பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. விபத்து குறித்த விசாரணை துவங்கியது. விமானம் நொறுங்கி விழுந்த இடத்தில் உடல்களை மீட்பதற்கு கனரக கருவிகளை ஆர்.சி.எம்.பி பொலிஸ் அதிகாரிகள் பயன்படுத்தியதாக கூறினர்.போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு விசாரணையை நடத்துகிறது. நொறுங்கிய விமான பாகங்கள் தொடர் ஆய்வுக்காக எட்மாண்டன் கொண்டுவரப்படுகிறது. விமானம் கிடந்த பாஷா பகுதி ரெட்டீர் எல்கை அருகே உள்ளது.
ஆயுதங்கள் கடத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு: எல்லை பகுதியை மூடியது எகிப்து.
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை ஒட்டிய எகிப்து எல்லை மூடப்பட்டுள்ளது. இதனால் பாலஸ்தீன மக்கள் எகிப்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எகிப்து அரசின் இத்தகைய நடவடிக்கையால் அந்நாட்டுக்குள் எல்லை வழியாக செல்ல விரும்பும் பாலஸ்தீன மக்களால் செல்ல முடியவில்லை என்று ஹமாஸ் தீவிரவாதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.எல்லை மூடப்பட்டது தொடர்பாக எகிப்து அரசு அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். ஆனால் அவர்கள் உரிய பதிலை அளிக்கவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள எகிப்து நிர்வாகம் காஸா பகுதியை ஒட்டிய எல்லைப் பகுதியில் கட்டுமானப் பணி நடைபெறுகிறது. பாலஸ்தீன மக்கள் பேருந்தில் வந்து செல்லுவதற்கு ஏதுவாக கட்டுமானப் பணி நடைபெறுகிறது. அந்த பணி நிறைவுபெற்றதும் எல்லைப் பகுதி திறக்கப்படும் என்று கூறியுள்ளது.எகிப்து-காஸா எல்லைப் பகுதியில் பகுதியளவு திறக்கப்பட்டுள்ளது. இவ்வழியாகச் செல்ல பாதசாரிகள் அனுமதிக்கப்படுகின்றனர். வாகனங்கள் தான் அனுமதிக்கப்படவில்லை என்று அங்கிருந்து வரும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.
காஸாவில் வசிக்கும் மக்கள் ரபா என்ற எல்லைப் பகுதி வழியாகவே எகிப்துக்கு சென்று வருகின்றனர். காஸா மக்களுக்கு எகிப்துக்கு சென்றுவர இவ்வழியைத் தவிர வேறு பாதை இல்லை. ஆனால் இப்பாதை வழியாக ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதாக இஸ்ரேல் குற்றம் சுமத்தி வருகிறது.முன்னதாக இந்த எல்லைப் பகுதி அவ்வப்போது மட்டுமே திறக்கப்பட்டது. எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகியதில் இருந்து இந்த எல்லைப் பகுதியை நிரந்தரமாகத் திறந்து வைப்பதென அந்நாடு முடிவெடுத்தது.
ஈராக் மசூதி, மருத்துவமனைகளில் குண்டு வீசித் தாக்குதல்: 24 பேர் பலி.
ஈராக்கில் முன்னாள் அதிபர் சதாம் ஹுசேனின் சொந்த ஊரான திக்ரித் நகரில் மசூதி, மருத்துவமனையை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு, தற்கொலைப் படை தாக்குதலை நிகழ்த்தினர்.
இதில் 24 பேர் கொல்லப்பட்டனர். 75 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.கடந்த வியாழக்கிழமை நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ரமாதி நகரில் அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுவெடித்தது. இதில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நடந்த அடுத்த நாளே பயங்கரவாதிகள் கைவரிசையை காட்டியுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் பாதுகாப்புப் படையின் வலிமை குறித்து கேள்வி எழுந்துள்ளது.திக்ரித் நகரின் மையப்பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் மக்கள் தொழுகையை முடித்துக்கொண்டு வீடு திரும்பத் தயாராகினர். அந்த நேரத்தில் மசூதிக்குள் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்தன. இதில் சம்பவ இடத்திலேயே 19 பேர் கொல்லப்பட்டனர். 72 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. காயமடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறுவதற்காக அந்நாட்டு எம்.பி. முதாஷேர் அல் சமாரி மருத்துவமனைக்கு வந்தார். அவர் வரும் நேரத்தில் மருத்துவமனையில் தற்கொலைப் படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.ஆனால் இதில் அவருக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை. சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல்களுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் தாக்குதலை அல்கொய்தா பயங்கரவாதிகள் தான் நிகழ்த்தியிருப்பார்கள் என்று பாதுகாப்புப் படையினர் சந்தேகிக்கின்றனர். ஈராக்கில் அவர்கள் தான் மசூதிகளையும், மருத்துவமனைகளையும் குறிவைத்து தொடர்ந்து தாக்குதலை நிகழ்த்தி வருகின்றனர். இந்த சம்பவங்களை அடுத்து திக்ரித் நகரில் பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மசூதிகளுக்கும், மருத்துவமனைகளுக்கு கூடுதல் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
சுற்றுலாப்பயணிகளின் மனதைக் கொள்ளை கொண்ட ஐரோப்பிய நகரங்கள்.
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவரும் நாடுகளின் பட்டியலில் முதல் 20 இடங்களை பொறுத்த வரையில் ஐரோப்பிய நாடுகளே அதிக இடம் பிடித்துள்ளன.அதில் லண்டனிற்கு ஆண்டு தோறும் 20.1 மில்லியன் மக்களும், பாரீஸ் நகருக்கு 18.1 மில்லியன் மக்களும் வருகை தருகின்றனர்.
முதல் 10 நாடுகளில் 9வது இடத்தை துபாய் பிடித்துள்ளது. இந்தாண்டு மட்டும் சுமார் 8 மில்லியன் மக்கள் துபாய்க்கு சுற்றுலாவாக வந்துள்ளனர். இதற்கு அடுத்த படியாக நியூயார்க் நகருக்கு 7.9 மில்லியன், ஆம்ஸ்டர்டாம் நகருக்கு 7.4 மில்லியன் மக்கள் சுற்றுலாவாக வருகை தந்துள்ளனர்.இதற்கு அடுத்த படியாக கோலாலம்பூர் இடம்பிடித்துள்ளது. பெரும்பாலான சுற்றுலாப்பயணிகள் லண்டனில் இருந்து வந்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் லண்டனிற்கு அடுத்த படியாக சுற்றுலாபயணிகளின் மனதில் இடம் பிடிப்பது குவைத் மற்றும் பீஜிங் நகரமாகும்.
இதை தவிர ஆசிய கண்டத்தை பொறுத்த வரையில் பாங்காங், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நகரங்கள் இடம் பிடித்துள்ளது. முதல் 20 நாடுகளின் வரிசையில் ஆசிய பசிபிக் நாடுகள் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.மேலும் நியூயார்க் நகருக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டாலும் அவை 12 இடத்தையே பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாளிகை மீது குண்டு வீசித் தாக்கியதில் ஏமன் அதிபர் காயம்: சவுதியில் சிகிச்சை.
ஏமனில் அதிபர் மாளிகை மீது எதிர்ப்பாளர்கள் குண்டு வீசி தாக்கியதில் அதிபர் சலே காயம் அடைந்தார்.அவர் சிகிச்சைக்காக நேற்று சவுதி அரேபியா சென்றதாக தகவல் வெளியானது. ஆனால் ஏமன் அரசு இதை மறுத்துள்ளது. அவரது கதி என்ன என்பது தெரியவில்லை.ஏமனில் அதிபர் அலி அப்துல்லா சலே பதவி விலகக் கோரி மக்கள் நான்கு மாதங்களாகப் போராடி வருகின்றனர். அவரது ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் மீது பல்வேறு வன்முறைகளை ஏவி வருகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடுகள் மீது குண்டுகளும் வீசப்படுகின்றன. ஏமன் தலைநகர் சனாவில் கலவரம் அதிகரித்து வருவதால் அந்நகரை விட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர்.இங்குள்ள அதிபர் மாளிகை மீது நேற்று முன்தினம் எதிர்ப்பாளர்கள் நடத்திய குண்டு வீச்சில் அதிபர் சலே, பிரதமர், துணைப் பிரதமர், பாராளுமன்ற சபாநாயகர்கள் இருவர் உட்பட பலர் படுகாயம் அடைந்தனர்.
அதிபர் தவிர மற்றவர்கள் உடனடியாக சவுதி அரேபியாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவரின் நிலைமை மோசமாக உள்ளது. குண்டு வீச்சில் காயம் அடைந்த பின் அதிபர் சலே பேசிய ஓடியோ ஒன்று வெளியிடப்பட்டது.அதில்,"இந்தச் சவால்களை உறுதியுடன் எதிர்த்து நிற்கும் நமது பாதுகாப்பு வீரர்களுக்கு என் வணக்கத்தைச் செலுத்துகிறேன். ஏழு அதிகாரிகள் இதுவரை பலியாகியுள்ளனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவரது பேச்சின் இடையே அவர் வலியில் அவதிப்படுவதும், அதிகமாக மூச்சு வாங்குவதும் தெரிந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அதிபர் சலே நேற்று திடீரென சிகிச்சைக்காக சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டுச் சென்றதாக செய்திகள் வெளியாகின.ஏமன் அரசுத் தரப்பில் உடனடியாக இச்செய்திகள் மறுக்கப்பட்டன. ஆனாலும் அதிபர் என்ன நிலையில் இருக்கிறார் என்பது பற்றி எவ்வித தகவலும் அளிக்கப்படவில்லை.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF