Monday, January 17, 2011

கொழும்பு - தூத்துக்குடி இடையே கப்பல் போக்குவரத்து துவக்கம்: 2 கப்பல் வாங்குகிறது இலங்கை!



கொழும்பு மற்றும் தூத்துக்குடி இடையே கப்பல் போக்குவரத்தானது, மீண்டும் துவங்கப்பட உள்ளது. இந்நிலையில், அனைத்து வசதிகளுடன் கூடிய 2 பயணிகள் கப்பலை வாங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் போக்குவரத்து தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. இதுகுறித்து, இலங்கை துறைமுகத் துறை இணை அமைச்சர் ரோகிதா அபயகுணவர்த்தனே தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், கப்பல் போக்குவரத்து ஒப்பந்தத்தின் படி, கொழும்பு - தூத்துக்குடி, தலைமன்னார் - ராமேஸ்வரம் இடையே 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கப்பல் போக்குவரத்து துவங்கவுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் சார்பில் வாரத்திற்கு நான்கு முறையும், இலங்கை சார்பில், வாரத்திற்கு மூன்று முறையும் கப்பலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக பயணிகளின் நலன் கருதி, விரைவில் இரண்டு பயணிகள் கப்பலை வாங்க திட்டமிட்டுள்ளோம். நவீன வசதி கொண்ட இந்த பயணிகள் கப்பலில், தூங்குவதற்கும் வசதி ஏற்படுத்தப்படும்.
இதுகுறித்து, ஐரோப்பா நாட்டைச் சேர்ந்த இரண்டு கப்பல் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றும் ரோகிதா தெரிவித்தார்.
இந்த கப்பல் போக்குவரத்தானது, வர்த்தகர்கள், சுற்றுலாப் பயணிகள் என அனைவருக்கும் மிக உதவியாக இருக்கும் என்று இலங்கை துறைமுகத் துறை இணை அமைச்சர் கூறினார்.
மேலும், கொழும்பு துறைமுகத்தை நவீனப்படுத்த முடிவு செய்துள்ளோம். இதனால், இந்தியாவிலிருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருவதற்கான வாய்ப்பு பெருகும் என்று ரோகிதா தகவல் தெரிவித்துள்ளார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF