Wednesday, April 27, 2011

இன்றைய செய்திகள்.

நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து பாதுகாப்புக் கவுன்சிலில் இறுதித் தீர்மானம்: பான் கீ மூன் முடிவு


ஐ. நா. நிபுணர் குழு அறிக்கை குறித்த இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தை பாதுகாப்புக் கவுன்சிலிடம் ஒப்படைக்க பான் கீ மூன் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதன் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் பாதுகாப்புக் கவுன்சில் உறுப்புரிமை நாடுகளின் கருத்தை உத்தியோகப்பற்றற்ற ரீதியில் விசாரித்தறிந்து கொள்ள உள்ளதாகவும் உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக தமிழ்வின்னுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இலங்கை மட்டுமன்றி மேலும் பல்வேறு நாடுகளும் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாகவே அது தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பாதுகாப்புக் கவுன்சிலிடம் ஒப்படைப்பதற்கு செயலாளர் நாயகம் முடிவெடுத்துள்ளார்.
பாதுகாப்புக் கவுன்சிலில் ரஷ்யா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகள் வீட்டோ அதிகாரத்தைக் கொண்டிருப்பதுடன், இந்தியா, போர்த்துக்கல் உள்ளிட்ட பத்து நாடுகள் தற்காலிக உறுப்புரிமை அந்தஸ்தில் செயற்படுகின்றன.
இலங்கை தொடர்பில் மேற்கத்தேய ஊடகங்கள் நடுநிலை தவறி நடக்கின்றன: ரஷ்யத் தூதுவர்
இலங்கை தொடர்பில் மேற்கத்தேய நாடுகளின் ஊடகங்கள் நடுநிலை தவறி நடப்பதாக இலங்கையிலுள்ள ரஷ்யத் தூதுவர் குற்றம் சாட்டியுள்ளார்.ரஷ்ய விண்வெளி வீரர் யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்று ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு பிரதமர் டீ.எம். ஜயரத்ன நேற்று கம்பளை அம்புளுவாவையில் வைபவமொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இலங்கைக்கான ரஷ்யத் தூதர் விளாடிமிர் மிக்கலோவ் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேற்குலக ஊடகங்கள் உலகளாவிய மனிதாபிமான விவகாரங்களில் ஒரு முறையான அணுகுமுறையைக் கைக்கொள்வதில்லை. தமது நோக்கங்கள் மற்றும் நிகழ்ச்சி நிரலை அடைந்து கொள்ளும் நோக்கில் அவை பக்கச்சார்பாக நடந்து கொள்கின்றன.தமக்குத் தேவையான தரப்பின் செய்தியை மட்டும் முக்கியத்துவம் கொடுத்தும், தமக்குத் தேவையான முறையில் ஏனைய செய்திகளைத் திரித்தும் அவர்கள் செய்தி வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
இலங்கை விடயத்திலும் அதனையே மேற்குலக ஊடகங்கள் கடைப்பிடிக்கின்றன. இலங்கையின் மனிதாபிமான விவகாரங்கள் தொடர்பான நடுநிலையான செய்திகள் மேற்குலக ஊடகங்களில் வெளிவருவதில்லை.பயங்கரவாதத்தினால் பல தசாப்தங்களாகப் பாதிக்கப்பட்ட  இலங்கையை கட்டியெழுப்பும் முயற்சிகளுக்க ஐ.நா. சபை ஆதரவு வழங்க வேண்டும்.அந்தப் பொறுப்பை ஐ.நா. தட்டிக்கழிக்க முடியாது.
பயங்கரவாதத்தினால் இலங்கை எதிர்கொண்டிருந்த பாதிப்புகளை நான் நேரில் கண்டிருக்கின்றேன். அந்த வகையில் இலங்கையிலிருந்து பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டமை குறித்து நட்பு நாடென்ற வகையில் ரஷ்யா மகிழ்ச்சியடைகின்றது.அத்துடன் இலங்கை அரசாங்கமும், இலங்கையின் முப்படையினரும் எப்போதும் பொதுமக்களைப் பாதுகாக்கும் விடயத்தில் முன்னுரிமை கொடுத்துச் செயற்பட்டதை நான் எந்த இடத்திலும் அடித்துக் கூறுவேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
போர்க்குற்ற விசாரணைக்கு ஐ.நா. செயலாளர் நாயகம் தன்னிச்சையாக உத்தரவிட முடியாது: பான் கீ மூன்
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைக்கு ஐ.நா. செயலாளர் நாயகம் தன்னிச்சையாக உத்தரவிட முடியாது என்று பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.அவ்வாறான ஒரு விசாரணை முன்னெடுக்கப்பட  வேண்டுமாயின் இலங்கை அரசாங்கம் முதலில் அதற்கு இணங்க வேண்டும். இல்லையேல் பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பு நாடுகள் அதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நிபுணர் குழு அறிக்கையில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு ஐ.நா.செயலாளர் நாயகம் உத்தரவிட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆயினும் அவ்வாறான தன்னிச்சையான அதிகாரம் தனக்கு இல்லாதிருப்பதாக ஐ.நா. செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளதை அவரது பேச்சாளர் மார்ட்டின் நெசர்கி நியூயோர்க்கில் இடம்பெற்ற செய்தியாளர்கள் மகாநாட்டின் போது நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.அவ்வாறான விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டுமாயின் இலங்கை அரசாங்கம் அதற்கு அழைப்பு விடுக்க வேண்டும். அல்லது பாதுகாப்புக் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் ஏகோபித்த முடிவெடுக்க வேண்டும்.
ஆனால் நிபுணர் அறிக்கை குறித்து கூட இலங்கை இதுவரை எதுவித பதிலும் அளிக்கவில்லை. அதற்குப் பதிலாக கடுமையான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றது. அது கவலைக்குரிய விடயமாகும்.பொறுப்புக் கூறல்  மற்றும் நீதியை நிலைநாட்டல் ஆகிய செயற்பாடுகளின் ஊடாகவே இலங்கையில் மீண்டும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்று ஐ.நா. செயலாளர் நாயகம் கருதுகின்றார் என்றும் மார்ட்டின் நெசர்கி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. நிபுணர் குழுவின் 214 பக்கங்கள் அடங்கிய அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளிவந்துள்ளது.
இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாக வெளிவந்துள்ளது.இலங்கையில் இறுதிப் போர் நடைபெற்ற காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரணை ஒன்று நடைபெற வேண்டுமா இல்லையா என்பதை பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை தற்போது முழுமையாகக் வெளிவந்துள்ளது.
214  பக்கங்களை உள்ளடக்கிய அந்த அறிக்கையின் எந்தப் பாகமும் தணிக்கைக்கு உட்படாமல் வெளிவந்துள்ள இவ்வறிக்கையே யுத்தக் குற்ற விசாரணை ஒரு உள்ளக விசாரணையாக நடைபெறுமா அல்லது வேறு அலகுகளுடன் இணைந்த ஒரு விசாரணையாக இடம்பெறுமா என்பதை முடிவு செய்ய சிறீலங்காவிற்கும் சர்வதேசத்திற்கும் உதவும்.இந்த அறிக்கை இலங்கை அரசினதும், தமிழீழ விடுதலைப் புலிகளினதும் யுத்தக் குற்றங்கள் என அறியப்பட்டவற்றை அப்படமாகப் பட்டியலிடுகிறது.
ஐ.நா. அறிக்கையின் முழு வடிவத்தினை நேரடியாக பார்வையிட
3ம் இணைப்பு
ஐக்கிய நாடுகள் அமைப்பு நிபுணர் குழு அறிக்கையை முழுமையாக வெளியிட்டுள்ளது
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டபோரில் அரசாங்கப் படையினரும், தமிழீழ விடுதலைப் புலிகளும் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நிபுணர்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களின் நலனைக் கருத்திக் கொண்டு விசாரணை அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.நிபுணர் குழு அறிக்கை முழுமையாக விசாரணைகளை நடத்தியிருப்பதாகவும் இதன் மூலம் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கப் படையினரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறிச் செயற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் நிபுணர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,
மனித உரிமை மற்றும் போர்க் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் நிபுணர் குழு அறிவித்துள்ளது.
எறிகணைத் தாக்குதல் நடத்தி பொதுமக்களை படுகொலை செய்தமை, வைத்தியசாலைகள் மற்றும் மனிதாபிமான முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தியமை, மனிதாபிமான உதவிகளை மறுத்தமை, இடம்பெயர் மக்கள் மற்றும் புலிச் சந்தேக நபர்கள் உள்ளிட்டவர்களின் அடிப்படை உரிமைகளை மீறியமை, போர் வலயத்திற்கு வெளியே ஊடக அடக்குமுறை உள்ளிட்ட மனித உரிமை மீறல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தியமை, புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பிச் செல்லும் பொதுமக்களை கொலை செய்தமை, பொதுமக்கள் நிலைகளுக்கு அருகாமையில் ஆயுதங்களைப் பயன்படுத்தியமை, பலவந்தமாக சிறுவர்கள் உள்ளிட்டவர்களை படையில் இணைத்துக் கொண்டமை, பலவந்தமாக ஊழியர்களை கடமையில் ஈடுபடுத்தியமை, தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களை படுகொலை செய்தமை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.குற்றச் செயல்களுக்கு எதிராக சர்வதேச ரீதியல் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசாரணைகள் நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நிபுணர் குழு வலியுறுத்தியுள்ளது.
இறுதிக் கட்ட போரின் போது பொதுமக்கள் இழப்பு ஏற்படவில்லை என அரசாங்கம் வலியுறுத்தி வருகின்ற போதிலும் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.சர்வதேச விசாரணைகள் கொள்கை அடிப்படையில் மேற்கொள்ள முடியாது எனவும், கட்டயாமாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கட்ட போரின் போது சர்வதேசம் சிவிலியன் இழப்புக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை நடாத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நிபுணர்குழுவின் அறிக்கையால் கலவரங்கள் ஏற்பட்டால் பான் கீ மூன் பொறுப்புக் கூற வேண்டும்!

ஐ.நா நிபுணர்கள் குழு சமர்பித்துள்ள அறிக்கையால் இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளோ அல்லது கலவரங்களோ ஏற்பட்டால் அதற்கு ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் தான் பொறுப்பேற்கவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாசா ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தில் தளம்பல் நிலை ஏற்பட்டு வன்முறைகள் வெடித்தால் அதற்கு ஐ.நா செயலாளர் தான் பொறுப்பேற்கவேண்டும். 

ஐ.நாவின் அறிக்கை பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்புக்களை சீர்குலைக்கலாம். ஐ.நாவின் விதிகளுக்கு முரணாகவே நிபுணர்குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. றோம் சட்டவிதிகளுக்கு அரசு கட்டுப்படாததால் இலங்கை மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொள்ள முடியாது என பான் கீ மூனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளர். 

குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை விடுதலை செய்க! பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா பணிப்புரை

குற்றச்சாட்டுக்கள் இன்றி நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர், யுவதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்ட மா அதிபருக்கும் பொலிஸாருக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா தெரிவித்துள்ளார். 


பி.பி.சி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு உதவி புரிவதற்கு தமது இரண்டு வருட பதவிக்காலத்தில் பல முயற்சிகளை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் அமைப்பிற்கு முரணான வகையிலும் நீண்ட காலமாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தமக்கு பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யும் மனுக்களை சாதகமாக பரிசீலித்தாக அவர் தனது செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். 


நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் தொடர்பான அறிக்கையை தம்மிடம் சமர்ப்பிக்குமாறு சட்ட மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா தெரிவிக்கின்றார் சந்தேகநபர் ஒருவர் குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து வைக்கப்படுவதை தாம் ஊக்கப்படுத்துவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். குற்றச்சாட்டுக்கள் இன்றி சந்தேகநபர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பின் அவரை விடுதலை செய்வதுடன் விசாரணைகளை தொடர்வதன் ஊடாக குறித்த நபர் குற்றவாளி என இனங்காணப்படின் அவரை மீண்டும் கைது செய்ய முடியும் என பிரதம நீதியரசர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜோர்தானில் இலங்கை பணியாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பு! தீர்வினைப் பெற்றுகொள்ள கலந்துரையாடல் ஆரம்பம்!!

ஜோர்தானில் அமான் நகரிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் இலங்கை பணியாளர்கள் சிலர் ஆரம்பித்த பணி பகிஷ்கரிப்புக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்தற்கான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டு தொழிலாளர் திணைக்களத்துடன் கலந்துறையாடலை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிடுகின்றது. ஜோர்தானில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவிக்கின்றார். 


குறித்த இலங்கை பணியாளர்கள் சம்பள உயர்வை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி இந்த பணிப் பகிஷ்கரிப்பை ஆரம்பித்திருந்தனர். எனினும் அவர்கள் தொழிலுக்கு சென்ற போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய சம்பளம் வழங்கப்படுவதாக கிங்ஸ்லி ரணவக்க சுட்டிக்காட்டுகின்றார். 


குறித்த பணியாளர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டால் ஜோர்தானில் உள்ள ஏனைய தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்தையும் உயர்த்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஜோர்தான் அரசாங்கம் மிகவும் மந்தகதியில் செயற்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும்.

நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தற்போது நாட்டின் பல பாகங்களில் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது.காற்றழுத்த மாற்றத்தினால் இவ்வாறு சீரற்ற காலநிலை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.நாட்டின் சகல பாகங்களிலும் இடைக்கிடை மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், இடி மின்னல் தாக்கம் அதிகமாகக் ஏற்படக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கையடக்கத் தொலைபேசி, மின்சார உபகரணங்கள் ஆகியவற்றை பயன்படுத்தும் போது மிகவும் நிதானமாக செயற்பட வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய அற்புத மலர்!

பெஸல் நகர தாவரவியல் பூங்காவில் பூத்திருக்கும் அரிய ரக டைடான்அரும் மலரைக் காணபதற்கு பெருந்திரளான மக்கள் அங்கு வந்தவண்ணம் உள்ளனர். உலகில் பூக்கும் மிகப்பெரிய மலர் இனங்களில் இதுவும் ஒன்றாகும். 

இதை ஒரு இயற்கையின் அற்புதமாகவே மக்கள் பார்க்கின்றனர். கடும் சுகந்தம் கெண்ட இந்த மலர் மஞ்சள் நிற மின்குமிழ் ஒன்றின் வடிவில் சுமார் இரண்டு மீட்டர் உயரத்துக்கு நீண்டு வளருகின்றது. இந்த மலர் பெரிய வெள்ளித் தினத்தன்று பூக்க ஆரம்பித்துள்ளது. இதன் விஞ்ஞானப் பெயர் Amorphophallus titanium என்பதாகும். இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவுப்பகுதியில் உள்ள மழை வீழ்ச்சிக் காடுகள் தான் இதன் தோற்ற இடம். 

அங்கு இவை சுமார் மூன்று மீட்டர் உயரத்துக்கு வளரும் பண்பு கொண்டவை. இவை அரிதாகப் பூக்கும் ஒரு மலரினம். இதன் சுகந்தம் பூச்சிகளையும் வண்டுகளையும் கவர்ந்து இழுக்கக் கூடியவை. ஒரு சில நாட்களில் இது வாடிப்போய்விடும். பெஸல் நகரில் இந்தப் பூ இந்தளவுக்கு வளர 17 ஆண்டுகள் எடுத்துள்ளன. உலகம் முழுவதும் இதனை ஒத்த 134 பிரதிகள் உள்ளன. அவற்றுள் அரைவாசிக்கும் அதிகமானவை அமெரிக்காவில் உள்ளன.
சிறைச்சாலையின் நிலத்துக்கடியில் சுரங்கம் தோண்டி 476 ஆப்கான் சிறைக்கைதிகள் தப்பியோட்டம்.
ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் அமைந்துள்ள சிறைச்சாலையிலிருந்து 476 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சிறைச்சாலைக்கு அடியில் சுரங்கம் தோண்டி அதன் மூலமாகவே இவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தப்பிச் சென்றுள்ள கைதிகளில் பெரும்பாலானோர் தீவிரவாதிகள் என்பதுடன் 100 பேர் தலிபான் இயக்கத்தின் கட்டளை அதிகாரிகள் எனவும் சிறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த சிறை உடைப்பு சம்பவத்துக்கு தலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.



2011 இன் Great Escape! : கந்தஹார் சிறையிலிருந்து தலிபான்கள் தப்பியது இப்படித்தான்.

தெற்கு ஆப்கானிஸ்த்தானில் உள்ள கந்தஹார் சிறையிலிருந்து 476 தலிபான் கைதிகள், 360 மீட்டர் சுரங்கம் தோண்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை தப்பிச்சென்றனர்.எந்தவித உயிர்ச்சேதமும் இன்றி ஐந்து மணித்தியாலங்களாக இந்த தப்பிச்செல்லல் நடவடிக்கை நடந்தது. எனினும் காவலிலிருந்த ஆப்கான் படையினருக்கு அவர்கள் தப்பிச்சென்று மூன்று மணித்தியாலங்கள் வரை என்ன நடந்தது என்றே தெரியாது.
2008ம் ஆண்டு, தற்கொலை குண்டு தாக்குதல் மூலம், நூற்றுக்கணக்கான தலிபான்கள் சிறையிலிருந்து தப்பிச்சென்ற பிறகு தலிபான்களுக்கு மீண்டும் பாரிய வெற்றியை தேடித்தந்த சம்பவமாக இது மாறியுள்து.தப்பியவர்களில் நூற்றுக்கு மேற்பட்டோர், அமெரிக்க படைகளினால் கடும் முயற்சியின் பின் கைது செய்யப்பட்ட போர்த்தளபதிகள் என்பது அமெரிக்காவுக்கு மேலும் கோபத்தை கிளறிவிட்டுள்ளது.
கந்தகார் சிறைச்சாலையின், அதியுயர் பாதுகாப்பு வலய செல்களில் ஒன்றின் நிலப்பகுதிக்கு தான் வெளியிருந்தான குகை குடையப்பட்டுள்ளது.இச்செல்லுக்கு வருவதற்காக போலிச்சாவிகள் கொடுக்கப்பட்டதால் இலகுவாக மற்றவர்களும் தங்களது செல்களிருந்து வெளியேறி அதே குகையின் வழியே வெளியேறியுள்ளனர். இவ்வாறு வெளியேறிய ஒருவர் பிபிசிக்கு பேட்டியும் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் நடைபெற்ற போது அருகில் உள்ள மற்றைய தடுப்பு முகாமில் நேட்டோ படைகள் காவலுக்கு நின்றதும் குறிப்பிடத்தக்கது.இச்சம்பவம் குறித்து, அதிர்ச்சி வெளியிட்டுள்ள, ஆப்கானில் உள்ள பிரிட்டிஷ் படைகளின் கேனல் ரிஷாட் கெம்ப், அமெரிக்க, இங்கிலாந்து ஆப்கான் மற்றும் ஏனைய கூட்டுப்படைகள் கஷ்ட்டப்பட்டு, தங்களது உயிரை பணயம் வைத்து, தலிபான்களை கைது செய்தால், இப்படி கவனயீனமாக அவர்களை தப்பவிடுகிறீர்கள்! மீண்டும் இவர்களை பிடித்து தர நம்மால் முடியாது என ஆதங்கப்பட்டார்.

ஆனால், தப்பிய  தலிபான் தீவிரவாதிகளில் 65 பேரை மீண்டும், பிடித்துவிட்டதாகவும், மற்றவர்களையும் தீவிரமாக தேடி வருவதாகவும் ஆப்கான் இராணுவ அதிகாரிகள் இப்போது தெரிவித்துள்ளனர்.

சுறாவுடன் விளையாட்டில் ஈடுபட்ட வாலிபர்: விபத்தில் முடிந்த பரிதாபம்
பல நேரங்களில் விளையாட்டு கூட விபரீதமாகி விடுவதுண்டு. அந்த ரகத்தை சேர்ந்தது தான் சமீபத்தில் சிட்னியில் நடந்த ஒரு சம்பவம்.சிட்னியின் மேற்குப் பகுதியில் உள்ள கார்நர்வோன் கடல் பகுதியில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.தனது அருகில் சுமார் ஒரு மீற்றர் நீளமுள்ள சுறா ஒன்று வருவதைப் பார்த்த அவருக்கு பீதி. இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல், திடீரென சுறாவுடன் விளையாட துவங்கினார்.
கடலில் மிதந்த இறந்த மீனை எடுத்து சுறாவை நோக்கி வீசினார். கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து போட்டார். மீண்டும் மீண்டும் இந்த விளையாட்டு தொடர்ந்து கொண்டே இருந்தது.பொறுமை இழந்த சுறா இளைஞர் மீது பாய முயன்றது. உடனே இளைஞர் சுறாவின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் சுறாவின் குறி தப்பவில்லை. இளைஞரின் காலை கவ்வியது.
அதன் பற்கள் ஆழமாக பதிந்ததால் காலில் ரத்தம் கொட்டியது. ஒரு வழியாக தப்பித்தோம் பிழைத்தோம் என்று அலறியடித்து வெளியே வந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மரண பீதியில் சிகிச்சை பெற்று வருகிறார் அவர்.

வில்லியம்ஸ் : கதே மிடில்டன் திருமணத்தில் கலந்துகொள்ளும் வி.ஐ.பி பட்டியலில் ஒபாமா இல்லை!?

இளவரசர் வில்லியம்ஸ் : கதே மிடில்டன் திருமணத்திற்காக அழைக்கப்பட்டுள்ள வி.ஐ.பிக்களின் பட்டியல், பிரிட்டிஷ் அரச குடும்பத்தினரால் நேற்று சனிக்கிழமை வெளியிடப்பட்டது.பிரபல காற்பந்தாளர் டேவிட் பெக்கம் மற்றும் அவரது மனைவியார் விக்டாரியா, இசைக்கலைஞர் எல்டன் ஜோன், இயக்குனர் காய் ரிட்ச், பாடகர் ஜோஸ் ஸ்டோன், மிஸ்டர் பீன் ஆக வலம் வரும் ரோவன் அட்கின்சன் என இங்கிலாந்து நட்சத்திரங்கள், இப்பட்டியலில் முன்னணி விருந்தினர்களாக இடம்பிடித்திருக்கிறார்.

மேலும் இளவரசர் சார்லஸின் நெருங்கிய நண்பர்கள் பலருக்கும் இதில் கலந்துகொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது.எனினும் சுமார் 1,900 பேருக்கு அழைப்புவிடப்பட்டுள்ள இப்பட்டியலில், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, பிரான்ஸ் அதிபர் சார்கோஸி ஆகியோர் இடம்பெறவில்லை.

இங்கிலாந்தின் நெருங்கிய கூட்டாளிகாளாக விளங்கும் அமெரிக்கா : பிரான்ஸ் அதிபர்கள், அரச குடும்பத்தினரின் திருமண பட்டியலில் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகிறார்கள் என ஒரு பக்கம் ஊடகங்கள் போட்டுத்தாக்க,  அப்படியென்றால் 54 காமன்வெல்த் நாடுகளின் அரசியல் தலைவர்களுக்கும் இப்பட்டியலில் அழைப்பு விடப்பட்டிருக்க வேண்டுமென, பிரிட்டிஷ் மகாராணியார் தரப்பு விளக்கம் கோருகிறது.

இதேவேளை, நோர்வே, ஸ்பெயின், தாய்லாந்து மொரோகோ போன்ற நாடுகளின் அரச குடும்பத்தாரின் இளவரசர்கள், இளவரசிகளுக்கு இப்பட்டியலில் அழைப்பு வைக்கப்பட்டுள்ளது.இதில் முக்கியமானவர் பஹ்ரென் இளவரசர் சல்மான் பின் ஹமட் அல் கலிஃபா. மேலும் வில்லியம்ஸ் ஆப்கானிஸ்த்தானில் யுத்தம் செய்ய புறப்பட்டு சென்ற போது தன்னுடன் கூடவிருந்த பிரிட்டிஷ் இராணுவ நண்பர்களுக்கும், இத்திருமண வைபத்திற்கு அழைப்புவிடுத்துள்ளார்.

பாகிஸ்தான் உளவுத்துறை தீவிரவாத அமைப்பாக செயல்படுகிறது: அமெரிக்கா குற்றச்சாட்டு.
அமெரிக்க தூதரகங்களின் ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பாகிஸ்தானில் இயங்கும் அமெரிக்க தூதரகத்தின் ஆவணங்கள் வெளியிடப்பட்டன. அதில் பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ அமைப்பு பற்றி அமெரிக்கா கடுமையான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவுத்துறை ஒரு தீவிரவாத அமைப்பாக உள்ளது. அதன் செயல்பாடுகள் அல்கொய்தா, தலிபான்களின் நடவடிக்கைகளைவிட மிகவும் அச்சுறுத்தல் தருவதாக உள்ளது.
அல்கொய்தா, தலிபான்கள், ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவுத்துறைக்கும் தொடர்பு உண்டு என்று அதில் கூறப்பட்டுள்ளது.இந்த அறிக்கை 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலால் பாகிஸ்தான் அரசு அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ராணுவ தளங்கள் மீது குண்டு வீச இத்தாலி முடிவு.

லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களை ராணுவம் கொன்று குவிக்கிறது.எனவே மக்களுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் களம் இறங்கி உள்ளன. அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையில் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் ராணுவமும் உள்ளது.அதில் பிரிட்டன், பிரான்ஸ் நாட்டு ராணுவ போர் விமானங்கள் குண்டு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் இத்தாலி ராணுவம் இதுவரை தாக்குதலில் ஈடுபடவில்லை.
இந்த நிலையில் இத்தாலியின் விமானப்படை போர் விமானங்களும் கடாபியின் ராணுவ தளங்கள் மீது குண்டு வீச முடிவு செய்துள்ளது.இது குறித்து இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி, அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன்  தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது.
அப்போது கடாபியின் ராணுவ தளங்களின் மீது மட்டும் இத்தாலி போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தும் என அறிவித்தார். இரக்கமின்றி கொன்று குவிக்கும் கடாபி ராணுவத்திடம் இருந்து பொதுமக்களை காப்பாற்றவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.அதுவும் உடனடியாக குண்டுவீச்சு தாக்குதல் நடத்த உள்ளது. இதற்கான அறிக்கையை பிரதமர் பெர்லுஸ்கோனி அலுவலகம் வெளியிட்டது.
சிரியாவில் தீவிரமடையும் போராட்டம்: 11 பேர் சுட்டுக் கொலை
அரபு நாடான சிரியாவில் அதன் அதிபர் அசாத்துக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டரா நகரில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீது சிரிய ராணுவத்தினர் நடத்திய பீரங்கித் தாக்குதலில் ஐந்து பேர் பலியானதாக செய்திகள் வெளியாயின. சிரியாவில் முதலில் அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படக் கோரி துவங்கிய மக்கள் ஆர்ப்பாட்டங்கள், தற்போது அதிபர் பஷர் அல் அசாத் பதவி விலகியே தீர வேண்டும் என்ற கோரிக்கையில் வந்து நின்றுள்ளது.
கடந்த வாரம் அவசர நிலைச் சட்டம் ரத்து உள்ளிட்ட சில சீர்திருத்தங்களை அதிபர் அசாத் அறிவித்தார். ஆயினும் மக்கள் தங்கள் நிலையில் இருந்து மாறவில்லை. 22ம் திகதி அதிபருக்கு எதிராக நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அந்த ஆர்ப்பாட்டங்களின் மீது பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 95 பேர் பலியாயினர். மறுநாள் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியாயினர். நேற்று முன்தினம் நாட்டின் வடபகுதியில் உள்ள ஜப்லா நகரில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலியானோரின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டோரின் மீதும் பொலிசார் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில் டரா நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிரியா ராணுவ வீரர்கள் பீரங்கிகள் மூலம் சுட்டுத்தள்ளியதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்தனர். இதற்கு ஆதாரமாக தாங்கள் எடுத்த வீடியோக்களையும் அவர்கள் வெளியிட்டனர்.
வெளிநாட்டு நிருபர்கள் சிரியாவில் நுழையத் தடை விதிக்கப்பட்டிருப்பதால் அங்கே என்ன நடக்கிறது என்று முழுமையாகத் தெரியவில்லை. டரா நகரம் ஜோர்டான் நாட்டு எல்லையில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது. நேற்று டரா நகரை ஒட்டிய சிரியா எல்லை மூடப்பட்டு விட்டதாக ஜோர்டான் நாட்டு தகவல் தொடர்புத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
சுவிஸ் வங்கி கணக்கு; இந்தியர்களின் பெயர் விரைவில் வெளியீடு: விக்கிலீக்ஸ் நிறுவனர்
சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ள இந்தியர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும் என்று விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜுலியன் அசாஞ்ஜே கூறியுள்ளார்.இந்தியாவைச் சேர்ந்த ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் இன்று அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை ரகசியமாக முதலீடு செய்துள்ளவர்களின் பட்டியலில் இந்தியர்களின் பெயர்களையும் கண்டேன். விரைவில் அந்த பட்டியலை இணையதளத்தில் வெளியிடுவோம். கறுப்புப் பண விவகாரத்தில் இந்திய அரசு மெத்தனமாக உள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் ஜெர்மன் அரசு தீவிரம் காட்டி வருகிறது. வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்பதில் ஜெர்மன் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. எனினும், ஜெர்மனை விட இந்தியர்களின் பணமே சுவிஸ் வங்கிகளில் அதிகமாக பதுக்கப்பட்டுள்ளது." என்று அசாஞ்ஜே கூறியுள்ளார்.

ஜுலியன் அசாஞ்ஜேவின் தகவலால், சுவிஸ் வங்கிகளில் ரகசிய கணக்கு வைத்துள்ள இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

இன்னும் 5 ஆண்டுகளில் அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவடையும்: அதிர்ச்சித் தகவல்
உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடு என்ற அந்தஸ்தை அமெரிக்கா இன்னும் 5 ஆண்டுகளில் இழக்கிறது.2016ம் ஆண்டில் அமெரிக்கப் பொருளாதார நிலையைக் காட்டிலும் சீனாவின் பொருளாதாரம் உயர்ந்து இருக்கும் என சர்வதேச நிதியம் மதிப்பிட்டுள்ளது.
2012ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர் தனது 4 ஆண்டு கால பதவி முடிவில் அமெரிக்கப் பொருளாதாரம் சீனாவுக்கு அடுத்த நிலையில் வந்து இருக்கும் நிலையை காண்பார்.
வாஷிங்டனை மையமாகக் கொண்ட சர்வதேச நிதியத்தின் மதிப்பீட்டை அரசியல் தலைவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். ஏனெனில் பெய்ஜிங் தொழில்நுட்பம் அமெரிக்காவைக் காட்டிலும் பின்தங்கியே உள்ளது.சீனாவில் வாழ்பவர்களில் பெரும்பாலானவர்கள் வறுமையில் உள்ளனர். ஆசிய நாடான சீனா அமெரிக்காவைக் காட்டிலும் தனி மனித உற்பத்தியில் பின்தங்கியே உள்ளது என அவர்கள் கூறுகிறார்கள்.
2009ம் ஆண்டில் சர்வதேச நிதிய மதிப்பீட்டின் படி அமெரிக்க தனிநபருக்கு உள்நாட்டு உற்பத்தியில் 28 ஆயிரம் பவுண்ட் ஆக இருந்தது. ஆனால் சீன தனிநபர் உள்நாட்டு தயாரிப்பு 2500 பவுண்ட் ஆக இருந்தது.சீனா விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் வைத்து நாணய மதிப்பை நிலைநிறுத்தி உள்ளது. உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவை சீனா மிஞ்சும் போது அதன் ஆதிக்கத்திற்கு அமெரிக்கா அடிபணியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்ட 177 சடலங்கள்.
மெக்சிகோவின் வடகிழக்குப் பகுதியில் போதை மருந்து கும்பல் அங்கு வரும் பயணிகளை கடத்துகின்றனர்.கடத்தப்பட்டவர்களில் 18 பேர் மத்திய அமெரிக்கர்கள் மற்றும் 6 சீன தொழிலாளர்கள் என பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
அமெரிக்க எல்லைக்கு அருகாமையில் மெக்சிகோவின் வடமேற்கு நகரம் ரெய்னோசா உள்ளது. இங்கு போதை மருந்து கடத்தல் கும்பல்கள் அபரித வர்த்தகம் நடைபெற உதவும் பாதையை கைப்பற்ற மோதிக் கொண்டு இருக்கிறார்கள்.இங்கு பயணிகளை போதை மருந்துக் கும்பல் கடத்திச் செல்கின்றனர். பொலிசார் தற்போது கடத்தல்காரர்களிடம் இருந்து விடுவித்துள்ள 51 பேரில் 14 பேர் குவாண்ட மாலாவைச் சேர்ந்தவர்கள்.
தலா 2 பேர் ஹோண்டுராஸ் மற்றும் சால்வடார் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். 27 பேர் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த மாதத் துவக்கத்தில் பொலிசார் கடத்தப்பட்ட 68 பேரை விடுவித்தனர்.ரெய்னோசா பகுதி சான்பிரான்டோ நகரில் இருந்து 160 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு புதைக்கப்பட்டு இருந்த 177 உடல்களை பொலிசார் கண்டுபிடித்தனர்.
நைஜீரியாவில் கலவரம்: 500 பேர் பலி
நைஜீரியாவில் நடைபெற்று வரும் அதிபர் தேர்தலில் ஏற்பட்ட வன்முறையில் சுமார் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.நைஜீரியாவில் வடக்கு பகுதி, தெற்கு பகுதி என இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கு பகுதியில் இஸ்லாமியர்களும், தெற்கு பகுதியில் கிறிஸ்தவர்களும் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்நாட்டிற்கு அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.இதில் குறிப்பாக வடக்கு பகுதியை சேர்ந்த கடுனா பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் வன்முறை சம்பவத்தின் போது கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
தெற்கு பகுதியைக் காட்டிலும், வடக்குப் பகுதி பொருளாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் பின்தங்கியிருப்பது மக்களிடையே வெறுப்பை அதிகரித்துள்ளது. இதுவே வன்முறைக்கு அடிப்படை காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கடாபி கட்டிடத்தை நேட்டோ வான்படை தாக்கியது.
லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தும் கடாபியின் அதிகாரத்தை ஒடுக்குவதற்கும், பொது மக்களை காப்பாற்றவும் நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன.இந்த நேட்டோ படைகள் லிபியா தலைநகர் திரிபோலியில் கடாபியின் வளாகப் பகுதியில் வான்வழித் தாக்குதலை நடத்தின. இந்தத் தாக்குதலில் கடாபியின் கட்டிடம் மிக மோசமாக சேதம் அடைந்தது. இன்று அதிகாலை லிபிய தலைவரின் கட்டிடத்தை 2 சக்தி வாய்ந்த ஏவுகணைகள் தாக்கியதாக தகவல் வெளியானது.
இந்த தாக்குதலில் 3 தொலைக்காட்சி நிறுவனங்கள் தற்காலிகமாக செயல் இழந்தன. ஒளிபரப்பும் தடை செய்யப்பட்டது. திரிபோலியில் இதுவரை நடந்த தாக்குதலில் இந்த தாக்குதல் மிகப் பயங்கரமானது ஆகும். நேட்டோ படைகள் அப்பாவி மக்களைக் கொல்லும் லிபிய ராணுவத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
லிபிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆப்பிரிக்க கூட்டமைப்பின் அமைதிக் குழு வந்த போது கடாபி பயன்படுத்திய கட்டிடம் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது. குண்டு வெடிப்பு காரணமாக லிபிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 30 நிமிடம் தடைபட்டன.போராட்டக்காரர்கள் ஆதிக்கம் உள்ள மிஸ்ரட்டா பகுதியில் தாக்குதலை நிறுத்தியதாக லிபிய ராணுவம் கூறியது. ஆனால் ஞாயிற்றுக்கிழமையும் அங்கு லிபிய ராணுவம் குண்டுகளை வீசின.
சிரிய வன்முறை: உலக நாடுகள் கடும் கண்டனம்.
சிரியாவில் அதிபருக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் வலுத்து வருகின்றது. மக்களை ஒடுக்குவதற்காக சிரிய அரசு வன்முறையில் இறங்கியுள்ளது.சிரியாவின் இந்த போக்கிற்கு உலக நாடுகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அங்குள்ள அமெரிக்கர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
சிரியாவின் டரா நகரில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. எனினும் பீரங்கிகளுடன் ராணுவம் ரோந்து வந்தது. வீடுகளின் கூரைகளில் ஏறி நின்ற படி ராணுவ வீரர்கள் கண்மூடித்தனமாக சுட்டனர். நேற்று முன்தினம் மட்டும் டரா நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் பலியாகினர். நேற்று நாடு முழுவதும் 500 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இதுமட்டுமில்லாமல் டவுமா நகரிலும் நேற்று பீரங்கிகளுடன் ராணுவம் ரோந்து சுற்றியது. அந்நகரில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் பலியாகினர். ஜனநாயக முறையில் போராடி வரும் மக்கள் மீது கட்டற்ற வன்முறையை அவிழ்த்து விடும் சிரிய அரசுக்கு ஐ.நா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று பிரான்ஸ், ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் போர்ச்சுகல் நாட்டின் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதே நேரம் சிரியாவின் மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் சிரியாவுக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், பிற அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறும்படி அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச அளவில் தேடப்படும் அல் கொய்தா இயக்கத்தின் முக்கிய தலைவர் பலி.
சர்வதேச அளவில் தேடப்படும் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் பலியானார்.அமெரிக்கா தலைமையிலான சர்வதேச பாதுகாப்பு துணை ராணுவம் (ஐ.எஸ்.ஏ.எப்) ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் அல் கொய்தாக இயக்கத்துக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ளது.
இந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் உள்ள குனார் மாகாணத்தில் நடந்த விமானத் தாக்குதலில், அபு ஹப்ஸ் அல் நஜ்தி என்ற அப்துல் கனி என்பவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர் பல்வேறு அபாயகரமான பயங்கரவாத தாக்குதல்களுக்குத் திட்டமிட்டவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் இவர் தேடப்படும் 85 பயங்கரவாதிகளில் ஒருவராக உள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரான்சில் அணு மின்சாரத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் வேட்பாளர்.
பசுமை கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நம்பிக்கையுடன் வலம் வரும் நிகோலஸ் ஹீலாட் நீண்ட மௌனத்திற்கு பின்னர் அணு மின்சாரத்திற்கு எதிராக குரல் கொடுத்தார்.நிகோலசின் இந்த முடிவால் அணு மின்சாரத்தை ஆதரிக்கும் பிரான்சின் 55 சதவீத மக்களின் ஆதரவை அவர் இழக்கும் நிலை உள்ளது.
ஜப்பானில் உள்ள புகுஷிமாவில் கடந்த 11ம் திகதி 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் நாட்டின் முதன்மையான அணு மின் நிலையம் சேதம் அடைந்து கதிர்வீச்சு பரவியது. இதனால் ஜப்பான் மக்கள் உடல் நலனுக்கு பாதிப்பு ஏற்பட்டது.ஜப்பான் அணு விபத்து உலக நாடுகளுக்கு எச்சரிக்கையை தந்த போதும் பிரான்ஸ் அணு மின்சாரம் மீது இன்னும் நம்பிக்கை வைத்துள்ளது. நாட்டில் உள்ள 55 சதவீத மக்கள் அணு மின்சாரத்திற்கு ஆதரவாக உள்ளனர்.
2012 ஆம் ஆண்டு பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில் பசுமைக் கட்சியின் வேட்பாளராக களம் இறங்கும் நிகோலஸ் இது நாள் வரை அமைதி காத்து வந்தார். உக்ரேனில் உள்ள செர்னோபிள் அணு விபத்து ஏற்பட்டதன் 25ம் ஆண்டு நினைவு நிகழ்ச்சி ஸ்ட்ராஸ் போர்க் நகரில் நடந்தது. இதில் நிகோலஸ் தனது அணு மின்சாரம் எதிர்ப்பு நிலையை வெளியிட்டார்.
பிரான்சின் 75 சதவீத மின்சாரம் அணு மின் நிலையங்கள் மூலமாக பெறப்படுகிறது. பிரான்சில் 1973ம் ஆண்டு கடுமையான எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அங்கு அணு மின்சாரம் அவசியமானது. பிரான்சில் தற்போது 58 அணு உலைகள் செயல்பாட்டில் உள்ளன. அணு மின் நிலையங்களுக்கு பசுமைக் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறது. பிரான்சின் பெரும்பாலான மக்கள் இதனை ஏற்கவில்லை.
கனடாவில் அல்கொய்தா அமைப்பினர்: விக்கிலீக்ஸ் அதிர்ச்சித் தகவல்
கனடாவின் மொன்றியல் நகரில் அல்குவைதா அமைப்பின் முக்கிய பிரிவொன்று செயற்பட்டதாகவும், அங்கிருந்தே அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதல்கள் நடத்த திட்டமிடப்பட்டதாகவும் விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா குறித்த புதிய ரகசியத் தகவல்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில் குவாண்டமோ சிறையில் உள்ள மொரிஷியஸ் தீவிரவாதி மொன்றியல் அல்கொய்தா தீவிரவாதப்பிரிவின் தலைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீவிரவாதப் பிரிவு அமெரிக்காவில் தொடர் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு உள்ளன.அமெரிக்கத் தூதரகங்கள் உலக நாடுகளில் உள்ளன. இந்த தூதரகங்களின் முக்கிய ரகசியச் செய்திகளை விக்கிலீக்ஸ் இணையதளம் தொடர்ந்து வெளியிட்டு அமெரிக்காவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவை தாக்குவதற்கு திட்டமிட்ட அல்கொய்தா தீவிரவாதப் பிரிவு மொன்றியலில் உள்ளது என தகவல்களை வெளியிட்டு உள்ளது. இந்த தீவிரவாதிகள் தெரிவு செய்யப்பட்டு மாண்ட்ரீல் மசூதியில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது சிறையில் உள்ள தீவிரவாத நபர் மொன்றியல் மசூதியில் சில காலம் இமாம் ஆகவும் பணியாற்றினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு நவம்பர் 26ம் திகதி ஜேர்மனியில் இருந்து முகமது இத் சிலாகி மொன்றியல் வந்தார். ரமலான் மாதத்தில் அவர் மொன்றியல் மசூதியின் இமாம் ஆனார். ஆர்.சி.எம்.பியும், சி.எஸ்.ஐ.எஸ் படைபிரிவும் அகமது ரெசாம் என்பவருடன் முகமது குய்த்சிலாகிக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்தியது.
இந்த விசாரணைக்கு பின்னர் முகமது குய்த் சிலாகி கனடாவை விட்டு வெளியேறினார். அகமது ரெசாம் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டவர் ஆவார். சிலாகியும், ரெசாமும் மொன்றியலில் 4 நாட்கள் சந்தித்து உள்ளனர். சிலாகி 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி முதல் 3 பேரை தீவிரவாதப் பயிற்சிக்கு தெரிவு செய்தார்.
பின்லேடனை பிடிக்க முற்பட்டால் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும்: அல்கொய்தா மிரட்டல்
தங்களுடைய இயக்கத் தலைவர் பின்லேடனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்க முற்பட்டால் ஐரோப்பியக் கண்டம் முழுவதையும் அணுகுண்டு வெடித்து தகர்த்து விடுவோம் என்று அல் கொய்தா பயங்கரவாதிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்க வெளியுறவுத்துறையின் ரகசியக் கோப்புகளை அம்பலப்படுத்தி வரும் விக்கிலீக்ஸ் இணையதளம் இந்தத் தகவலை இப்போது தெரிவிக்கிறது. கியூபா நாட்டில் அமெரிக்கா பராமரித்து வரும் குவாந்தநாமோ சிறை முகாமில் உள்ள 780 ரகசியக் கைதிகள் பற்றிய குறிப்புகளைத் திரட்டிய போது இந்த மிரட்டல் பற்றிய குறிப்புகள் விக்கிலீக்ஸ் இணைய தளத்திடம் சிக்கியுள்ளன.
இந்த மிரட்டலுக்கு அஞ்சித்தான் அமெரிக்காவும், பிற மேலை நாடுகளும் பின்லேடனை நெருங்கிய போதிலும் பிடிக்காமல் விட்டுவிட்டார்களா அல்லது உண்மையிலேயே அவர் இருக்கும் இடம் தெரியாமல் நழுவவிட்டுவிட்டார்களா என்று தெரியவில்லை.ஆனால் அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் தான் தளங்களாக அப்போதும் இப்போதும் விளங்குகின்றன என்பதையும், பின்லேடன் சாகவில்லை இன்னும் இவ்விரு நாடுகளில் மறைந்து வாழ்கிறார் என்பதையும் இந்த இணையதளம் தெரிவிக்கும் ரகசியத் தகவல் உணர்த்துகிறது.
அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தில் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானத்தைச் செலுத்தி வெடிக்க வைத்த போது பின்லேடனும் அவருடைய சகாக்களும் கராச்சி நகரில் பாதுகாப்பான ஓரு வீட்டில் இருந்து கொண்டு தொலைக்காட்சியில் பார்த்து திருப்திப்பட்டிருக்கிறார்கள்.அதே நேரத்தில் ஏமன் நாட்டில் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க போர்க்கப்பல் யு.எஸ்.எஸ் கோலில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்டவர் கராச்சி நகரிலேயே பின்லேடன் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். 2001க்குப் பிறகே அந்தச் சம்பவம் நடந்தது.
இந்தோனேசியாவின் பாலி தீவில் 2002ல் நடந்த மிகப்பெரிய குண்டுவெடிப்புக்கு மூளையாகச் செயல்பட்டவர். 2001ல் இந்தச் சம்பவம் நடந்த அன்றே உயிரி வேதியியல் வெடிகுண்டுகளைத் தயாரிப்பதற்கான ரசாயனக் கொள்முதலில் கராச்சி கடை வீதியில் இறங்கினார்.
செப்டம்பர் 11ல் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட மறுநாளே அல்கொய்தாவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கராச்சியை விட்டு வெளியேறி ஆப்கானிஸ்தான் நாட்டில் ஓரிடத்தில் கூடினர். அமெரிக்காவுக்கும் பிற மேலை நாடுகளுக்கும் எதிராக இதே பாணியில் நீண்டகாலத்துக்கு நாச வேலைகள் மூலம் எப்படி தாக்குதல் நடத்துவது என்று தங்களுக்குள் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டனர்.பின்லேடன் மட்டும் அல்லாது அவருடைய தளபதி அய்மான் அல் ஜவாஹிரியும் இந்த சதிக் கூட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டார். குவாந்தநாமோ சிறையில் இருக்கும் அல்கொய்தா பயங்கரவாதிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் முக்கியமானவர்களாக இருக்கின்றனர்.
செப்டம்பர் 11 தாக்குதல் நடந்த 4 நாள்களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தஹார் மாநிலம் சென்று தன்னுடைய தளபதிகளை அழைத்துப் பேசினார் பின்லேடன். அல்லா மீது நம்பிக்கை இல்லாத மேலை நாட்டு ராணுவத்துக்கு எதிராக கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரை நாம் போராடியே தீர வேண்டும். அல்லாவின் திருப்பெயரால் போரிட்டு வெற்றி பெறுவோம் என்றார்.
அதன் பிறகு 3 வாரங்களுக்கு பின் லேடனும் அவருடைய தளபதிகளும் ஆப்கானிஸ்தானின் குறுக்கும் நெடுக்குமாகப் பயணம் செய்து தங்களுடைய தளபதிகளையெல்லாம் எச்சரிக்கைப்படுத்தி அடுத்தடுத்து எப்படி தாக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தனர்.அமெரிக்கப்படைகள் தங்களை நெருங்கிவிட்டதால் கைது செய்யப்படுவோம் அல்லது கொலை செய்யப்படுவோம் என்று அஞ்சிய பின்லேடனும், மூத்த நிர்வாகிகளும் ஷூரா என்று அழைக்கப்படும் பழங்குடி தலைக்கட்டுகளை அழைத்து அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு வழிகாட்டும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் விருந்தினர் இல்லத்துக்கு அருகிலேயே துணிகரமாக ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டார் பின்லேடன். தன்னுடைய அமைப்பைச் சேர்ந்த வீரர்களைப் பயிற்சி முகாம்களிலிருந்து உடனே வெளியேறி மேற்கத்திய ராணுவத்தையும் அவர்களுடைய தளங்களையும் கிடைக்கும் எந்த ஆயுதம் மூலமாவது தாக்கி அழிக்குமாறு கட்டளையிட்டார்.
ஜப்பானில் இறந்தவர்களை தேடும் முயற்சியில் ஈடுபடும் ரோபோ.
ஜப்பானில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கமும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி பேரலையிலும் சிக்கி உயிரிழந்தோரை கடலில் தேடும் பணியில் 2 ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.கடந்த 5 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட பணியில் இதுவரை எவரது சடலமும் கிடைக்கவில்லை என ஜப்பான் அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். கடலுக்கடியில் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்த ரோபோக்களில் கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அத்துடன் சோனார் கருவியும் உள்ளது. இரண்டு ரோபோக்களில் ஒன்று ஜப்பானிலும், மற்றொன்று அமெரிக்காவிலும் தயாரிக்கப்பட்டதாகும். இப்பகுதியில் கடலில் சீற்றம் அதிகமாக இருப்பதால் தேடும் பணியில் ஈடுபடுவது சிரமம் என நீச்சல் வீரர்கள் தெரிவித்ததால் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டன.
கடலில் மூழ்கிய காரைக் கண்டுபிடித்த ரோபோக்கள் அதில் உயிரிழந்தோர் எவரேனும் உள்ளனரா என்றும் தேடியது. ரோபோக்கள் எடுத்த படப்பதிவுகள் செய்தியாளர்களுக்கு காட்டப்பட்டன. கடலில் கலந்துள்ள கதிர்வீச்சின் அளவை அறிய மற்றொரு ரோபோ பயன்படுத்தப்பட உள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF