Tuesday, April 5, 2011

இன்றைய செய்திகள்.

ஆயிரத்து ஐநூறு வருடங்கள் பழைமையான கிணறொன்று ஈச்சிலம்பற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கிழக்கு மாகாணத்தின் ஈச்சிலம் பற்று பிரதேசத்தில் சுமார் ஆயிரத்து ஐநூறு வருடங்கள் பழைமையான கிணறொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஈச்சிலம்பற்று அம்மன் கோயிலை அண்டியுள்ள பிரதேசத்தில் இருந்தே பிரஸ்தாப பழைமை வாய்ந்த கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் ஆய்வுத் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
கி.பி. இரண்டாம் நுாற்றாண்டில் அக்கிணறு தோண்டப்பட்டிருக்கலாம் அல்லது பயன்பாட்டில் இருந்திருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தொல்பொருளியல் திணைக்களம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மலசல கூடத்துக்கான குழியொன்றைத் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பிரதேசவாசியொருவரே பிரஸ்தாப கிணற்றைக் கண்டுபிடித்துள்ளார்.ஆயினும் அக்கிணறு பற்றிய முழுமையான விபரங்கள் வெளிவர முன்பே அது லங்கா பட்டுன விகாரை மற்றும் பாசாண பப்பத விகாரை என்பவற்றுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்தது என்று கூறி அதனை பௌத்த மயமாக்கும் முயற்சியில் தொல்பொருளியல் திணைக்களம் ஈடுபட்டுள்ளது.
அது மட்டுமன்றி அவ்வழியாகவே புத்தரின் தந்த தாது எடுத்து வரப்பட்டது என்றும் புதுக்கதையொன்றை கட்டிவிட்டுள்ளது.

செயற்கை இதயம் தயார்! விஞ்ஞானிகளின் வெற்றி நோக்கிய வியத்தகு சாதனை.

மனித இதயத்தை ஆய்வு கூடங்களில் உருவாக்கும் ஒரு புதிய முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இலட்சக்கணக்கான இருதய நோயாளிகளுக்கு இது ஒரு சுப செய்தியாக அமையவுள்ளது. செயற்கையாக உருவாக்கப்படும் இந்த இதயம் ஒரு சில வாரங்களில் துடிக்க ஆரம்பிக்கும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது ஒரு பாரிய ஆராய்ச்சித் திட்டத்தின் முதலாவது படியாகும். 

இதைத் தொடர்ந்து ஈரல், நுரையீரல், சிறுநீரகம் என்பனவற்றையும் ஆய்வுகூடங்களில் உருவாக்கக் கூடியதாக இருக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். நன்கொடையாக வழங்கப்படும் மனித உறுப்புக்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட தசைக்கலங்களில் இருந்தே செயற்கை இருதயம் உருவாக்கப்படுகின்றது.

இதயத்தோடு தொடர்புடைய ஏனைய திசுக்களோடு இவை சேர்க்கப்பட்டு அவற்றுக்கு ஊசி மூலம் ஏனைய இணைப்புக் கலங்கள் அனுப்பப்பட்டு வளரவிடப்படுகின்றன. இந்த முறையின் மூலம் ஆரோக்கியமாக இருதயக் கலங்களையும் கட்டமைப்பையும் உருவாக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செயற்கையாக ஆய்வு கூடத்தில் உருவாக்கப்பட்டுள்ள இதயம் மிகவும் ஆரோக்கியமாக வளர்ந்து வருகின்றது. 

அடுத்த ஓரிரு வாரங்களில் அது துடிக்க ஆரம்பிக்கும் என்று நம்புகின்றோம் என்று அமெரிக்காவின் மினியாபோலிஸ் பிராந்தியத்தின் மினசோடா பல்கலைக்கழக மருத்துவ மீள் ஊக்கமளித்தல் பிரிவின் பேராசிரியர் டொக்டர். டொரிஸ் டேலர் தெரிவித்துள்ளார். முழு அளவில் செயற்படக்கூடிய இதயம் ஒன்றை உருவாக்குவதில் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் எதிர்காலத்தில் மனித உறுப்பு மாற்றத்துக்கான அனைத்து உறுப்புக்களையும் நாமே உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதை மட்டும் என்னால் நிச்சயம் கூற முடியும் என்று அவர் மிகவும் உறுதியாகக் கூறியுள்ளார். 

தற்போது இதய மாற்று சிகிச்சைக்கு ஆளாகின்றவர்கள் இயல்பான நோய் எதிர்ப்புச் சக்தியைத் தொடர்ந்தும் பேணுவதற்காக வாழ்நாள் முழுவதும் மருந்துகளைப் பாவிக்க வேண்டியுள்ளது.இதனால் அவர்களுக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆனால் ஒரு நோயாளியின் சொந்த இணைப்புக் கலங்கள் மூலம் உருவாக்கப்படும் செயற்கை இதயங்கள் மூலம் இந்தப் பிரச்சினையை தடுக்கலாம். மேலும் ஒருவரின் சொந்தக் கலங்கள் மூலம் உருவாக்கப்பட்டு பொருத்தப்படும் இதயத்தை நிச்சயம் அவரின் உடல் ஏற்றுக் கொள்ளும் என்று அவர் மேலும் விளக்கமளித்துள்ளார் .
எலி வேட்டைக்கு புறப்படுவோமா?
உலகில் மிகவும் பின் தங்கிய நாடு என்று ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கின்றது மலாபி.இந்நாடு தென்கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்து உள்ளது.மக்களின் ஜீவனோபாயம் விவசாயத்தில் தங்கி உள்ளது.ஆனால் இந்நாட்டு மக்கள் மத்தியில் பாரம்பரியம் பாரம்பரியமாக மிகவும் பிரபலமான உணவு எலி.

எலி வேட்டை இங்கு சாதாரணமாக இடம்பெறுகின்றது.இங்கு ஒரு வகை எலிகள் மண்ணில் வளைகளுக்குள் வாழ்கின்றன.இவற்றை பிடித்து சமைத்து சாப்பிட்டுகின்றனர்.அத்துடன் எலி வறுவல் அமோக விற்பனை ஆகின்றது.

காங்கோவில் ஐ.நா. விமானம் விபத்து : 20 பேர் பலி
ஐ.நா.வுக்கு சொந்தமான விமானம் ஒன்று காங்கோ நாட்டில் விபத்திற்குள்ளானதில் அதில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். ஐ.நா.வுக்கு சொந்தமான சி.‌ஜெ.-100 என்ற விமானம் 16 பயணிகளுடன், ஆப்ரிக்க நாடான காங்‌கோவின் தெற்கு மாகாணமான கின்ஷகாஸாவில் உள்ள கூமா நகரில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்ததில் 20-க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், இதில் ஜியார்ஜியா, காங்கோ நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் பலியாகியிருக்கலாம் என ஜிங்கூவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. இப்பகுதியில் கடும் மழை பெய்துள்ளதாலும் மேக மூட்டம் காரணமாக ஏங்கேனும் மோதியதில் தீப்பற்றியதில் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என ஐ.நா. செய்தி தொடர்பாளர் மார்டின் நெஸர்கி ‌செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த ஒரு வார காலத்துக்குள் பதினைந்து இலட்சம் இணையத்தளங்களின் மீது தாக்குதல்.
கடந்த ஒரு வார காலத்துக்குள் பதினைந்து இலட்சம் இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச இணையத்தள சேவை வழங்குனர் அமைப்பு அறிவித்துள்ளது.
லீசா மூன் என்ற பெயரிலான இந்த சைபர் தாக்குதல் நடவடிக்கையின் ஆரம்ப கட்டம் மார்ச் மாதம் 29ம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதலில் கணணி வைரஸ் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக எச்சரிக்கை செய்தி விடப்பட்டு, அதன் பின் அதனுடன் தொடர்புபட்ட இணையத்தள வலையமைப்புகள் முடக்கப்பட்டுள்ளன.
ஆயினும் ஆராய்ச்சியாளர்கள் உடனடியாகச் செயற்பட்டு பாதிக்கப்பட்ட இணையத்தளங்களை மூடிவிட நடவடிக்கை எடுத்த காரணத்தால் பாதிப்பின் அளவு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலும் மைக்ரோசொப்ட் எஸ்.கியூ.எல் 2003 மற்றும் 2005 பயன்படுத்தும் பாவனையாளர்கள் மற்றும் ஆப்பிள் ஐ டியூன்ஸ் உடன் தொடர்பையேற்படுத்திக் கொண்டுள்ள வலைத்தளங்களே பிரஸ்தாப சைபர் தாக்குதலில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.

கடாபியை ஆட்சியில் இருந்து அகற்ற மகன்கள் ஆர்வம்.


லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் கடாபியின் ஆட்சியை அகற்றி புதிய ஜனநாயக ஆட்சி மலர வேண்டும் என அவரது இரு மகன்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
லிபியாவில் நடந்து வரும் மோதலை தவிர்ப்பதற்காக கடாபி ஆட்சியை அகற்ற சர்வதேச நாடுகள் முயற்சிக்கின்றன. இந்த முயற்சியில் தீர்வு கிடைக்கும் வகையில் கடாபியின் மகன்கள் செய்ப் மற்றும் சாடி எல்கடாபி கருத்துரு கொண்டு வந்துள்ளனர்.


அதன்படி கடாபி ஆட்சியை அகற்றி புதிய ஜனநாயக ஆட்சியை கொண்டுவர விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆட்சி மாற்றத்திற்கு 68 வயது மோமர் கடாபி கருத்துருவில் கையெழுத்திட்டுள்ளாரா எனத் தெரியவில்லை. கடாபி மகன்கள் தீர்வு குறித்து பெயர் குறிப்பிடாத லிபிய துதரக அதிகாரி தெரிவித்தார்.
கடாபியின் மகன்களின் முக்கிய உதவியாளர் ஒருவர் கூறியதாவது: தந்தை கடாபியும் ஆட்சி மாற்றத்திற்கு தயாராகி விட்டதாக தெரிவித்தார். ஆட்சி மாற்றம் தொடர்பாக அவரது மகன்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். லிபிய கொந்தளிப்பை முடிவுக்கு கொண்டுவர ஆட்சி மாற்றமே சரியான தீர்வு என மகன்கள் கருதுகிறார்கள்.
இதனால் அவர்களுக்கும் கர்னல் கடாபிக்கும் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது. கடாபியின் இருமகன்கள் செய்ப் மற்றம் சாடி மேற்கத்திய நாகரிக அரசியல் துவக்கத்தை விரும்புகின்றனர். ஆனால் மற்ற இருமகன்களான காமிஸ் மற்றும் முதாசிம் ஆகியோர் தீவிரவாத நிலையையே கடைபிடிக்க விரும்புதாக தகவல்கள் கூறுகின்றன.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF