Thursday, October 7, 2010

ரஷ்ய விஞ்ஞானிகள் இருவருக்கு அறிவியல் நோபல் பரிசு

ரஷ்ய நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் இருவருக்கு இந்தாண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்தவர்கள் ஆன்ட்ரீ ஜீம் (51), கான்ஸ்டான்டின் நோவோசெலோவ் (36). பிரிட்டனில் மான்செஸ்டர் பல்கலைக்கழக இயற்பியல் துறையில் ஆராய்ச்சியாளர்களாக உள்ளனர். கம்ப்யூட்டரில் சிலிகான் பயன்படுத்தப்படுகிறது. அதைவிட நுண்ணிய அளவில் "கார்பன்` எனப்படும் கரியை பயன்படுத்த முடியும் என, இவர்கள் தங்கள் ஆராய்ச்சியில் நிரூபித்தனர்.
எழுதுகோலாக பயன்படும் பென்சிலில் "கிரைபைட்` எனப்படும் கரித்துண்டு பயன்படுத்தப்படுகிறது. பென்சிலில் உள்ள ஒரு மி.மீ., கிரைபைட்டை 30 லட்சம் இழைகளாக பிரித்து "கிராபீன்` என்ற பொருளை இவர்கள் தயாரித்தனர். இந்த "கிராபீன்` சிலிகானை போலவே கம்ப்யூட்டரில் பயன்படுத்தலாம். சொல்லப்போனால் சிலிகானை விட மெல்லிய இழைகளாக கிராபீனை பயன்படுத்த முடியும்.
கம்ப்யூட்டரின் தொடுதிரையில் இதனை பயன்படுத்தலாம். இந்த கிராபீன் சிறந்த வெப்ப கடத்தி. எனவே, உலோக இழைக்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம். செலவும் குறைவு. எனவே, அறிவியலில் இவர்கள் கண்டுபிடிப்பு பெரிய சாதனையாக கருதப்படுகிறது. கடந்த 2004ல் இவர் "கிராபீன்` குறித்து ஆய்வறிக்கை வெளியிட்டனர்.
மின்னணு சாதனங்களில் கிராபீனின் பயன்பாடு எதிர்காலத்தில் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆன்ட்ரீ ஜீம் மற்றும் நோவோசெலொவின் அரிய கண்டுபிடிப்பை பாராட்டி இந்த ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 7.5 கோடி மதிப்புள்ள இந்த பரிசு இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF