Monday, August 23, 2010

அணு உலையில் எரிபொருள் நிரப்புவதைத் துவங்கிய ஈரான்

ஈரான் நாட்டின், தெற்குப் பகுதியில் உள்ள புஷேர் அணுமின் உற்பத்தி நிலையம் அந்த நாட்டின் முதல் அணுமின்சக்தி நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் யுரேனியம் எரிபொருளை ரஷ்ய பொறியியலாளர்கள் உதவியுடன் நிரப்பும் பணியைத் ஈரான் தொடங்கியது.
இந்த அணு மின்சக்தி நிலையத்தை ஏற்படுத்துவதில்தான் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பையும், தடைகளையும் செய்துவந்தன. ஏனெனில் ஈரான் அணு ஆயுத உற்பத்திக்காகத்தான் இந்த முயற்சியை மேற்கொள்கிறது என்று கருதப்பட்டது.
இந்த அணு உலையை உருவாக்கித் தந்த ரஷ்யா, அணு ஆயுதத் தயாரிப்பில் ஈரான் ஈடுபடவில்லை என்பதை உறுதி செய்வதற்கு இந்த அணு மின் சக்தி ஏற்பாடு முக்கியமானது என்று கூறியுள்ளது.
80 டன்கள் யுரேனிய எரிபொருள் இந்த அணு உலையின் மையப்பகுதிக்குள் வரும் நாட்களில் கொண்டு செல்லப்படவுள்ளது.
அதன் பிறகு ஒரு மாத காலத்தில் 1,000 மெகா வாட் மின்சாரம் இதிலிருந்து உற்பத்தி செய்யப்படவுள்ளது.
எரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பிறகு எஞ்சும் எரிபொருளில் அடங்கியுள்ள புளோட்டோனியம் கொண்டு அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதுதான் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் கவலையாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த மிஞ்சிய யுரேனிய எரிபொருளை வேறு விதங்களில் பயன்படுத்த முடியாதவாறு ரஷ்யா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF