Monday, April 30, 2012

உணவில் உப்பை குறைத்தால் மாரடைப்பு ஏற்படும்: ஆய்வாளர்கள் எச்சரிக்கை!


அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதேபோல உப்போ, சர்க்கரையோ தேவையான அளவு இல்லாவிட்டாலும் அது ஆபத்துதான் என்கின்றனர் மருத்துவர்கள்.உணவுப் பொருட்களில் உப்பு அதிகம் சேர்த்தால் உயர் ரத்த அழுத்தம் வரும் என்று பயமுறுத்துகின்றனர். இதை தவிர்க்க உப்பை குறைத்தாலும் இதயநோய் வரும் என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.திடீரென மாரடைப்பு வருவதற்கு உயர்ரத்த அழுத்தமும், கொழுப்பு பொருட்களை சேர்ப்பதும் தான் காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள். எனவேதான் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு உணவில் உப்பின் அளவைக் குறைக்க மருத்துவர்கள் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.


அதேசமயம் மாரடைப்பு வராமல் தடுப்பதற்காக உப்பைக் குறைத்துக் கொள்வதே, மாரடைப்பு முதலான இதய நோய்களை ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வுத் தகவல் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.இது குறித்து டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழக மருத்துவமனையில் 40,000 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 67 ஆய்வுகளின் முடிவில், உப்பைக் குறைத்துக் கொள்வோரின் உடலில் 2.5 சதவீதம் கொழுப்பு அதிகரிப்பதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.


இவ்வாறு தொடர்ந்து உப்பைக் குறைத்து வந்தோரின் சிறுநீரகத்தில் ரெனின் என்ற புரதமும், அல்டோஸ்டிரோன் என்ற ஹோர்மோனும் அதிகளவில் சுரந்து, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.உப்பைக் குறைத்தால் அது இருதய நோயை ஏற்படுத்தும். அதற்குப் பதிலாக புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். அதிக உடல் எடை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர் நீல்ஸ் கிரெடல் தெரிவித்துள்ளார்.நாளொன்றுக்கு உணவில் சராசரியாக 6 கிராம் அளவு உப்பைச் சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF