Monday, April 16, 2012

ஆசியாவில் ஆச்சரியம்! காரகோரம் மலை பனி இறுகி, திண்மமாகிறது!


புவி வெப்பமடைவதால் பனி மலைகள் உருகும் போக்குக்கு மாறாக ஆசியாவின் காரகோரம் மலையில் பனி இறுகி, திண்மமாகிவருவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.இமாலய பிராந்தியத்தின் மேற்காக உள்ள காரகோரம் மலைத்தொடரில் பனியின் அளவு அதிகரித்து வருவதை செய்மதி தகவல்கள் மூலமாக ஒரு பிரஞ்சு விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது.புவி வெப்பமடையும் போக்குக்கு ஏற்ப, இமாலயத்தின் ஏனைய பகுதிகளில் உள்ள பனி மலைகள் உருகிவரும் நிலையில், இந்த மலை மாத்திரம் திண்மமாகி வருவதன் காரணம் இன்னமும் அறியப்படவில்லை.


இந்த பிராந்தியத்தில் உள்ள பனிமலைகள் 100 கோடி மக்களுக்கு நீர் வழங்கும் மூலமாக இருக்கின்ற போதிலும், அவை குறித்த ஆய்வுகள் பெரிதாக எதுவும் நடக்கவில்லை.இமாலய பிராந்தியத்தில் உள்ள மொத்த பனியும் 2035 ஆம் ஆண்டளவில் உருகிப் போய்விடும் என்று 2007 ஆம் ஆண்டு வெளியான ´´காலநிலை மாற்றத்துக்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவின் அறிக்கை´´ கூறியதை அடுத்து, இமாலய பனி மலைகளின் விவகாரம் ஒரு முக்கிய அம்சமாக பலராலும் பேசப்படுகிறது.


இமாலயத்தின் ஒரு பகுதியாக இருக்கின்ற போதிலும், காரகோரம் மலை ஒரு வேறுபட்ட தொடராகவே காணப்படுகிறது.இந்த மலைச்சிகரங்கள் பொதுவில் சென்றுவருவதற்கு மிகவும் கடினமான பகுதியாகவே இருக்கிறது. இருந்த போதிலும் அங்கு ஆய்வுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF