Tuesday, September 21, 2010

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஒற்றை தலைவலி : மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி பிரச்னைகளால் பள்ளிக்குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் அவர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்' என மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
குடும்ப சுமை, வேலைப்பளு போன்றவற்றால், பெரியவர்களுக்கு தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி பிரச்னை ஏற்படுவதாக கருதப்படுகிறது. ஆனால் இந்த பிரச்னைகளால் தற்போது பள்ளிக்குழந்தைகள் பாதிக்கப்படுவதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து குழந்தைகள் மற்றும் மூளை நரம்பியல் மருத்துவ நிபுணர் ஆண்ட்ரூ ஹெர்சி கூறியதாவது:
தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்காக அதிகாலையிலேயே எழுந்து விடுகின்றனர். பள்ளியில் நீண்ட நேரம் பாடங்களை கூர்ந்து கவனிக்கின்றனர். மேலும் வீடு திரும்பும் அவர்கள் வீட்டு பாடங்களை முடித்துவிட்டு வெகு நேரம் கழித்து தூங்க செல்கின்றனர். இதுதவிர காலையில் பள்ளிக்கு செல்லும் பதட்டத்தில் அவர்கள் சாப்பிடுவதில்லை.போதிய தண்ணீர் குடிப்பதில்லை. இதனால் அவர்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. ஒற்றை தலைவலி பரம்பரையாக வரக்கூடிய பிரச்னை.அடிக்கடி ஏற்படும் தலைவலியும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்த வல்லது.
ஹார்மோன்களில் மாற்றம், இரத்த நாளங்களை விரிவடைய செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். தற்போது 10 சதவீத குழந்தைகளுக்கும், 28 சதவீத பெரியவர்களுக்கும் இந்த பிரச்னை உள்ளது.
பெரியவர்களுக்கு 4 மணி நேரமும்,குழந்தைகளுக்கு ஒரு மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை கூட ஒற்றை தலைவலி தொடர்ந்து இருக்கும். பெரியவர்களுக்கு தலையின் ஒரு பகுதியிலும் குழந்தைகளுக்கு நெற்றியிலும் ஒற்றை தலைவலி ஏற்படுகிறது.மூன்று வயது குழந்தைகளுக்கு கூட ஒற்றை தலைவலி பிரச்னை ஏற்படுகிறது. சீதோஷ்ண நிலையில் ஏற்படும் மாற்றங்களாலும் அவர்களுக்கு தலைவலி பிரச்னை ஏற்படுகிறது. இவ்வாறு ஆண்ட்ரூ ஹெர்சி கூறினார்.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF