Saturday, September 4, 2010

பமகல வெந்நீரூற்றுக்கள் : துருக்கியின் அற்புத படைப்பு!

இயற்கையின் அருங்கொடையாக உலகுக்கு வழங்கப்பட்ட அற்புதப் படைப்புக்களுள் வெந்நீரூற்றுக்களும் ஒன்று. 

இந்த வகையில், துருக்கியின் டினிஸில் மாகாணத்தில் அமைந்துள்ள பமகல வெந்நீரூற்று மிகவும் பிரசித்தி வாய்ந்தது. உலகிலேயே இது ஒன்று தான் அற்புத வெந்நீரூற்றாகத் திகழ்கின்றது . இது யுனஸ்கோ அமைப்பினால் பாதுகாக்கப்படும் பரம்பரைச் சொத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மெண்டிரஸ் நதிப்பள்ளத்தாக்கு தான் பமகலவின் அமைவிடம். இவ்வெந்நீரூற்று 2700மீ உயரமும் 600மீ அகலமும் 160மீ உயரமும் கொண்டது. இதிலிருந்து தூய வெந்நீர் வெளியேறுகின்றது. பார்ப்பதற்கு பழுப்பு நிறத்தில் காணப்படும் இது, கல்சியம் காபனை அதிகளவு கொண்டிருப்பது சிறப்பம்சம். 

எப்போதுமே இதனுடைய வெப்பநிலை 35 பாகையிலிருந்து 100 பாகை செல்சியஸ் வரை காணப்படும். இதன் நீர் சுண்ணாம்புக் கலவையை அதிகளவில் கொண்டிருப்பதால், நீர் பாய்ந்து வரும் பகுதிகளில் செடிமென்ரரி என்றழைக்கப்படும் பாறைகள் உருவாகின்றன. 

இப்பாறைகள் ஐஸ்கட்டிகள் போன்றே தோற்றமளிக்கும். இதனை பஞ்சுக் கோட்டை என்று அழைப்பர். மலையிலிருந்து 100மீ அடிப்பாகத்தில் இவை அமைந்துள்ளன. 

நோய்களைக் குணமாக்கும் வல்லமை 

பமகல, 17 நீரூற்றுக்களைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் வெவ்வேறு வகையான வெப்பநிலையைக் கொண்டவை. இதில் நீராடினால் நோய்கள் குணமாகும் என ஆராய்ச்சியாளர்கள் தமது ஆய்வில் தெரிவித்துள்ளனர். 

இதய நோய்கள், குருதிச்சுற்றோட்டப் பிரச்சினைகள், உயர்குருதி அமுக்கம், நரம்பு சார்பான நோய்கள், வாத நோய்கள், கண் மற்றும் தோல் சார்ந்த நோய்கள், உடல் களைப்பு, மன உளைச்சல், சமிபாட்டுப் பிரச்சினைகள் ஆகியவற்றைக் குணமாக்கக் கூடிய சக்தி இவ்வெந்நீருற்றுக்கு உண்டு. 

ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தந்த வண்ணமுள்ளனர். 20ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் இங்கு பல சுற்றுலா விடுதிகள் அமைக்கப்பட்டன. 

இதனால் வெந்நீரூற்றுக்களின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. 

இவ்வெந்நீரூற்றுக்களைச் சென்றடைய, பள்ளத்தாக்கின் கீழேயும் மேலேயும் பல வீதிகள் போக்குவரத்து வசதிகளுக்காக அமைக்கப்பட்டன. ஆனால் இவ்வீதியில் மோட்டார் வாகனங்கள் செல்ல மட்டுமே அனுமதியளிக்கப்படுகிறது. 

தற்போது இங்கேயுள்ள சுற்றுலா விடுதிகளை அகற்றி விட்டு, அவ்விடங்களில் செயற்கை முறையிலான நீச்சற் தடாகங்களை அமைக்க துருக்கியின் சுற்றுலாத்துறையினர் தீர்மானித்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அது மட்டுமன்றி, இவ்வெந்நீரூற்றுக்களுக்குக் காலணிகளுடன் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. 

இயற்கையின் அரும்பெரும் சொத்தான பமகல வெந்நீரூற்றுக்களைப் பாதுகாக்க பற்பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

உல்லாசப் பயணிகளின் உள்ளங்கவர்ந்த வெந்நீரூற்றுக்கள் என்றால், அவற்றின் பராபரிப்பும் சிறப்பாகத்தானே இருக்க வேண்டும்?

பமகல வெந்நீரூற்றுக்கள், துருக்கி நாட்டுக்குக் கிடைத்த அரிய வரப்பிரசாதம் என்றால் கூட, அது மிகையல்ல.


பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF