Thursday, September 2, 2010

டைட்டானிக் கப்பலின் புதிய படங்கள் கிடைத்துள்ளன. மிகத் துல்லியமான இந்தப் படங்கள் சிலிர்க்க வைப்பதாக உள்ளது.

உலக மக்களால் மறக்க முடியாத பெயர் டைட்டானிக். 1912ம் ஆண்டு 1500பேருக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் அன்டார்க்டிக் கடலில் சென்று கொண்டிருந்த உலகின் புகழ் பெற்ற சொகுசுக் கப்பலான டைட்டானிக், பெரிய ஐஸ் மலையில் மோதி கடலில் மூழ்கியது.

அதுதான் பிரமாண்டமான டைட்டானிக்கின் முதல் சொகுசுப் பயணமாகும். கடலில் மூழ்கியதில் அதில் இருந்த அத்தனை பேருமே ஜல சமாதி அடைந்தனர்.
மூழ்கிப் போய்விட்ட கப்பலை இதுவரை மீட்க முடியவில்லை. அவ்வப்போது டைட்டானிக்கை அடையும் அகழ்வுப் பணிகள் நடந்தபடி உள்ளது. கடல் மட்டத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் ஆழத்தில் டைட்டானிக் புதைந்து கிடக்கிறது.

தற்போது கனடாவைச் சேர்ந்த ஒரு குழு டைட்டானிக் குறித்த புதிய புகைப்படங்களையும், வீடியோவையும் வெளியிட்டு சிலிர்க்க வைத்துள்ளது. இதுவரை இல்லாத மிகத் துல்லியமாக உள்ளன இந்தப் படங்கள். ரோபோட் மூலம் இந்தப் புகைப்படங்கள் அதி நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 28-ம்தேதி இந்தப் படங்களை பிரீமியர் எக்ஸிபிஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில் டைட்டானிக் கப்பலின் முகப்புப் பகுதியின் மேல் பகுதி தெளிவாக தெரிகிறது. முகப்புப் பகுதியின் மேல் பகுதியில் உள்ள தடுப்புக் கம்பி உள்ளிட்டவை அப்படியே இருக்கிறது. கப்பலில் பொருத்தப்பட்டிருந்த நங்கூரம்கூட அப்படியே காணப்படுகிறது.

இமேஜிங் டெக்னாலஜி மற்றும் சோனார் சாதனங்கள் மூலம் இந்தப் புகைப்படங்களையும், வீடியோவையும் எடுத்துள்ளது கனடிய குழு. டைட்டானிக் கண்டுபிடிப்பு முயற்சியில் முதல் முறையாக இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆர்.எம்.எஸ். டைட்டானிக் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆய்வை கனடிய நிறுவனம் மேற்கொண்டுள்ளது. ஆர்.எம்.எஸ். டைட்டானிக் நிறுவனத்திடம்தான் புதைந்து போயுள்ள டைட்டானிக் கப்பலின் உரிமை உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதைந்து போயுள்ள டைட்டானிக் கப்பலிலிருந்து எதையாவது கண்டுபிடித்தால் அதை இந்த நிறுவனத்திடம்தான் ஒப்படைக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது கடல் பகுதியில் டேனியல் என்ற புயல் வீசிக் கொண்டிருப்பதால், வானிலை மோசமடைந்துள்ளது. இதனால் ஆய்வுக் குழு கனடாவில் உள்ள நியூபவுன்லேன்ட்டுக்குத் திரும்புவதாக அறிவித்துள்ளது. கடல் அமைதி அடைந்ததும் மீண்டும் அகழ்வாராய்ச்சி தொடரும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

டைட்டானிக் படத்தை எடுத்த இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனும்கூட படத்தை எடுப்பதற்கு முன்பு நேரடியாக அகழ்வாராய்ச்சியில் இறங்கி டைட்டானிக்கின் மேல் பக்கம் உள்ளிட்டவற்றை புகைப்படம் எடுத்து வந்தார் என்பது நினைவிருக்கலாம்.

கடைசியாக கடந்த 2004-ம் ஆண்டுதான் டைட்டானிக் குறித்த அகழ்வாராய்ச்சி நடந்தது.

பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF