Sunday, April 18, 2010

கொழும்பு - ஐரோப்பிய விமான சேவைகள் பல ரத்து

ஐஸ்லாந்தில் வெடித்த எரிமலை கக்கிய புகை மண்டலம் வான்பரப்பில் பரவியதையடுத்து ஐரோப்பிய நாடுகளில் சுமார் 17ஆயிரம் விமான சேவைகளை ரத்துச் செய்துள்ளதாக யூரோ கண்ட்ரோல் தெவித்துள்ளது. இதன் காரணமாக லண்டன் மற்றும் ஏனைய ஐரோப்பிய நகரங்களுக்கு கொழும்பிலிருந்து இயக்கப்படும் பல விமான சேவைகள் மறு அறிவித்தல் வரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


விமானப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளோர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருவதற்கு முன்னராக தமது பயண ஏற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொண்டு விமான சேவை குறித்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஐரோப்பாவில் பரவியுள்ள புகைமண்ட லம் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.இதன் காரணமாகவே இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, நேற்றுப் புறப்படவிருந்த இரு விமான சேவைகளும் ரத்துச் செய்யப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய சேவைகள் காமையாளர் ரொஷானி மாசகோரல தெரிவித்துள்ளார்.

நேற்று அதிகாலை 2.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட விருந்த இலண்டனுக்கான விமான சேவையும் நேற்றுப் பகல் 1.15 இற்குப் புறப்படவிருந்த மேலுமொரு இலண்டனுக்கான விமான சேவையுமே ரத்துச் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இது தவிர பிராங்போர்டுக்கான விமான சேவையை ரூமேனியா வரையிலேயே நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், பயணிகள் தாம் பயணிக்கவிருக்கும் விமானம் தொடர்பான தகவல்களை 091 7335500 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, அயர்லாந்து, பிரிட்டன், பெல்ஜியம்,நெதர்லாந்து, டென்மார்க், சுவீடன், நோர்வே, பின்லாந்து, எஸ்டோனியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாத்திரம் 17 ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக ஐரோப்பிய விமானசேவை கட்டுப்பாட்டு அமைப்பான யூரோ கன்ட்ரோல் தெவித்துள்ளது.

இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கும் குறித்த எரிமலையை அண்டிய பகுதிக்கு பயணித்து அதன் நிலைமைகளை கண்காணித்துள்ள ஐஸ்லாந்து வானிலை மையத்தின் உறை பனி எரிமலை தொடர்பான ஆராச்சியாளர் டாக்டர் மெத்தீவ் ராபர்ட்ஸ், இந்த எரிமலை கக்குவது இன்னும் சில நாடுகளுக்கு நீடிக்கும் எனவும் ஆனால் தற்போது குறைந்தளவான சாம்பல் புகையையே எரிமலை கக்கிக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு இவ்வாறான நிலைமையே தொடர்ந்தும் நீடிக்குமானால் உள்ளூரில் மட்டுமே அதிக பாதிப்புகள் ஏற்படலாம் என கூறியுள்ள டாக்டர் மெத்தீவ் ராபர்ட்ஸ், சர்வதேச ஆகாய போக்குவரத்தில் குறைந்தளவான அச்சுறுத்தலையே எதிர்பார்க்கமுடியும் என சுட்டிக்காட்டினார்.

ஆசிய நாடுகளிலிருந்த ஐரோப்பாவுக்குச் செல்லும் விமானங்களுக்கு பிரதான நாடாக சிங்கப்பூர் திகழ்வதால் சிங்கப்பூரில் தற்போது ஹோட்டல்கள் விமானப் பயணிகளால் நிரம்பி வழிவதாகவும் தெவித்துள்ள பி.பி.ஸி, இந்த விமானப் போக்குவரத்துத் தடை காரணமாக விமான சேவை நிறுவனங்களுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF