Saturday, June 19, 2010

மெக்சிக்கோ எண்ணெய்க்கசிவு : பிரி. ரூ. 92 ஆயிரம் கோடி நஷ்டஈடு

மெக்சிகோ வளைகுடாவில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவுக்கு ரூ. 92 ஆயிரம் கோடி இழப்பீடு வழங்க பிரிட்டிஷ் பெற்றோலிய நிறுவனம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து பெருமளவில் மெக்ஸிகோ கடலில் எண்ணெய்க் கசிந்து வருகிறது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்தான் இதனை ஓரளவு அடைக்க முடியும் எனக் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மெக்ஸிகோ கடலில் பெரும் பரப்பளவில் பரவிக் கிடக்கும் இந்த எண்ணெயால் சுற்றுச் சூழல் பாதிப்பு பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எண்ணெய்க் கசிவைச் சுத்தம் செய்யும் பணியை இப்போதைக்கு ஆரம்பித்துள்ளனர். ஆனால் கசியும் எண்ணெயின் அளவில் 1 சதவீதத்தைக் கூட நாள்தோறும் சுத்தம் செய்யமுடியவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு பிரிட்டிஷ் பெற்றோலிய நிறுவனம் 1.6 பில்லியன் டொலர் மட்டுமே முதலில் செலவிட்டது. ஆனால் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் எச்சரிக்கை மற்றும் நெருக்குதல் காரணமாக 20 பில்லியன் டொலர் (ரூ. 92,000 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது மேற்படி நிறுவனம்.
இந்தத் தொகையை மேலும் அதிகரித்துத் தரவும் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டோனி ஹேவர்ட் ஒப்புக் கொண்டுள்ளார்.
பிரிட்டிஷ் பெற்றோலிய நிறுவன அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்துக்கு பிறகு அமெரிக்க அதிபர் ஒபாமா இத்தகவலை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
"தற்போதைய அமெரிக்க சட்டத்தின் படி, இத்தகைய எண்ணெய்க் கசிவு விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனம் ரூ. 345 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது.
ஆனால், இது மிகவும் குறைவான நிதி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மெக்சிகோவில் தற்போது நிகழ்ந்துள்ள இந்த மிகப்பெரிய சுற்றுச்சூழல் சீர்கேட்டால், பொதுமக்கள், வணிகம் செய்வோர் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய இழப்புகளை ஈடுசெய்யும் வகையில், ரூ.92,000 கோடி அளிக்க பிரிட்டிஷ் பெற்றோலியம் முன்வந்துள்ளது" என்று தெரிவித்தார்.
இந்த முடிவுக்கு அமெரிக்க அரசியல் தலைவர்களும் தலைவர்களும் வரவேற்பளித்துள்ளனர்.
"இது பகுதி அளவு இழப்பீடுதான், சேதங்கள் அதிகமாகும் பட்சத்தில், பாதிக்கப்படும் மக்களுக்கான முழு இழப்பீட்டையும் பிரிட்டிஷ் பெற்றோலிய நிறுவனம் அளிக்க வேண்டியிருக்கும்" என அமெரிக்க நாடாளுமன்ற தலைவர் நான்சி பெலோசி தெரிவித்தார்.
இதற்கிடையே, கசியும் எண்ணெயின் அளவு தினசரி 50,000 பேரல்களுக்கும் அதிகம் என்பதை முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது அமெரிக்கா.
பிடிஎப்பாக சேமிப்பதற்கான வசதி 'Download As PDF